Go Back

05/12/20

தோடுடைய செவியன் - பாடல் 11


தோடுடைய செவியன் - பாடல் 11


அரு நெறிய மறை வல்ல முனி அகன் பொய்கை அலர் மேய

பெரு நெறிய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் தன்னை

ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன் உரை செய்த

திரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே


விளக்கம்:

அலர்=மலர், இங்கே தாமரை மலரைக் குறிக்கும்; அருநெறி=அருமையான நெறி. மேற்கூறிய பாடல்களில் பெருமானின் பல பெருமைகளை எடுத்துரைத்த சம்பந்தர், இந்த பாடலில் மனம் ஒன்றி பெருமானை வழிபட வேண்டுமென்று உணர்த்துகின்றார். இந்த பாடலில் சம்பந்தர், பதிகத்தைப் பாடுவதால் விளையும் பலன்களை எடுத்துக் கூறுகின்றார். இவ்வாறு அனைத்துப் பதிகங்களிலும், அந்த பதிகங்களைப் பாடுவதால் விளையும் பலன்களை குறிப்பிடுவதால், சம்பந்தர் அருளிய பதிகங்கள் திருக்கடைக்காப்பு என்று அழைக்கப் படுகின்றன. பல வடமொழி தோத்திரங்களில் பலஸ்ருதி என்று அந்த தோத்திரங்களைச் சொல்வதால் விளையும் பலன்கள் உணர்த்தப் பட்டுள்ளதை நாம் அறிவோம். காரைக்கால் அம்மையாரும் தனது பதிகங்களில் கடைப் பாடலில், அந்த பதிகங்களைப் பாடுவதால் ஏற்படும் பயனை குறிப்பிடுகின்றார்.

தேவாரப் பதிகங்களுக்கு காலத்தால் முந்தையது காரைக்கால் அம்மையார் அருளிய பாடல்கள். அம்மையார் அருளிய கொங்கை திரங்கி என்று தொடங்கும் ஆலங்காடு பதிகம் நட்டபாடை பண்ணிலும் எட்டியிலவம் என்று தொடங்கும் ஆலங்காடு பதிகம் இந்தளம் பண்ணிலும் அமைக்கப் பட்டுள்ளன. அம்மையாரை பின்பற்றி பதிகங்கள் பாடிய திருஞான சம்பந்தரும் சுந்தரரும், அவர் அருளிய நட்டபாடை மற்றும் இந்தளம் பண்களில் தத்தமது முதல் பாடல்களை அமைத்துள்ளது அம்மையாருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

பொழிப்புரை:

நல்ல விதமான வாழ்க்கைக்கு இன்றியமையாத அருமையான கருத்துக்களை உணர்த்தும் வேதங்களில் வல்லவனாகிய பிரமனால் இறைவனை வழிபடும் பொருட்டு படைக்கப் பட்டதும், அகன்ற நீர்நிலைகளில் தாமரை மலர்களை உடையதும், பெருமைக்கு உரிய முக்தி நெறியினை அளிக்க வல்லதும் ஆகிய பிரமாபுரம் என்று அழிக்கப்படும் சீர்காழி நகரினில் உறையும் பெருமானை, ஒருமைப்பாடு உடைய மனத்துடன் அவனை உணர்ந்து தியானித்து ஞானாசம்பந்தர் உரைத்த சிறந்த தமிழ் வேதமாகிய பாடல்களை சொல்லும் வல்லமை பெற்றவர்களின் பழவினைகள் எளிதினில் தீர்ந்துவிடும்.

Tag :

#thirugnanasambandhar thevaram thiruppiramapuram
#Thodudaya seviyan
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
தோடுடைய செவியன் - பாடல் 11


Written by: என். வெங்கடேஸ்வரன்
Share this news: