Go Back
22/03/21
மடையில் வாளைபாய - பாடல் 7
மடையில் வாளைபாய - பாடல் 7
நிழலார் சோலை நீல வண்டினம்
குழலார் பண் செய் கோலக்கா உளான்
கழலால் மொய்த்த பாதம் கைகளால்
தொழுவார் பக்கல் துயரம் இல்லையே
விளக்கம்:
மொய்த்த=சேர்ந்த; தொழுவார் பக்கல் என்ற தொடருக்கு இறைவனைத் தொழும் அடியார்களைச் சார்ந்து இருக்கும் மனிதர்கள் என்று பொருள் கொண்டு, அவர்களுக்கும் துயரங்கள் இருக்காது என்று சம்பந்தர் கூறுவதாக விளக்கம் அளிக்கப்படுகின்றது.
பொழிப்புரை:
நெருக்கமாக செழித்து வளர்வதால் நிழல் பொருந்தி விளங்கும் சோலைகளில் நீலநிறம் உடைய வண்டுகள், புல்லாங்குழலில் வரும் இசை போன்று ரீங்காரம் செய்யும் கோலக்கா தலத்தில் உள்ள இறைவனது, வீரக்கழல்கள் பொருந்திய திருப்பாதங்களைத் தங்கள் கைகளால் தொழும் அடியார்களின் பக்கம் துன்பங்களும் துயரங்களும் வாரா.
Tag :
#thirugnanasambandhar thevaram
#Madaiyil Vaalai
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
#thevaram
Written by:
என். வெங்கடேஸ்வரன்