Go Back
22/03/21
மடையில் வாளைபாய - பாடல் 9
மடையில் வாளைபாய - பாடல் 9
நாற்றம் மலர் மேல் அயனும் நாகத்தில்
ஆற்றல் அணை மேலவனும் காண்கிலாக்
கூற்றம் உதைத்த குழகன் கோலக்கா
ஏற்றான் பாதம் ஏத்தி வாழ்மினே
விளக்கம்:
நாற்றம்=நறுமணம்;
பொழிப்புரை:
நறுமணம் மிகுந்த தாமரை மேல் உறையும் பிரமனும், ஆற்றல் மிகுந்த ஆதிசேஷனை படுக்கையாகக் கொண்டு கிடக்கும் திருமாலும் காண இயலாமல் நின்றவனும், காலனை உதைத்து வீழ்த்தியவனும், அழகும் இளமையும் ஒருசேர பொருந்தி திகழ்பவனும் ஆகிய இறைவன் திருக்கோலக்கா தலத்தில் உறைகின்றான்; எருதினை வாகனமாகக் கொண்டுள்ள அந்த இறைவனின் திருவடிகளைப் போற்றி வாழ்வீர்களாக.
Tag :
#thirugnanasambandhar thevaram
#Madaiyil Vaalai
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
#thevaram
Written by:
என். வெங்கடேஸ்வரன்