Go Back

05/12/20

தோடுடைய செவியன் - பாடல் 7


தோடுடைய செவியன் - பாடல் 7



சடை முயங்கு புனலன் அனலன் எரி வீசி சதிர்வு எய்த

உடை முயங்கும் அரவோடு உழி தந்து எனது உள்ளம் கவர் கள்வன்

கடல் முயங்கு கழி சூழ் குளிர் கானல் அம் பொன்னம் சிறகு அன்னம்

பெடை முயங்கு பிரமாபுரம் மேவிய பெம்மன் இவன் அன்றே

விளக்கம்:

முயங்கும்=சேரும்; புனல்=கங்கை நதி; சதிர்வு=பெருமை; கானல்=கடற்கரை சோலை; உழிதந்து=திரிந்து; பெடை=பெண்பாலைக் குறிக்கும் சொல், இங்கே பெண் அன்னத்தை குறிக்கின்றது. கழி=உப்பங்கழி;; இந்த பாடலில் நமக்கு அச்சத்தை ஊட்டும் இரண்டு பொருட்கள் பெருமானுடன் இணைந்து இருக்கும் நிலை உணர்த்தப் படுகின்றது. பாம்பு மற்றும் நெருப்பு ஆகிய இவை இரண்டே அந்த பொருட்கள். இந்த இரண்டு பொருட்கள் இருப்பினும், தனது உள்ளத்தை பெருமானிடம் பறிகொடுத்ததாக சம்பந்த நாயகி குறிப்பிடுகின்றாள்.

பொழிப்புரை:

தனது சடையினில் கங்கை நதியைக் கலந்து வைத்திருப்பவனும், தனது கையினில் தீப்பிழம்பை வைத்திருப்பவனும், கையினில் தீச்சுடரினை ஏந்தியவாறு நடனமாடும் பெருமையினை உடையவனும், தனது ஆடையின் மேல் கச்சாக இறுகக் கட்டிய பாம்பினை உடையவனும், உலகெங்கும் திரிபவனும் ஆகிய பெருமான் எனது உள்ளத்தினை கொள்ளை கொண்டு விட்டான்; உப்பங்கழிகளும் குளிர்ந்த சோலைகளும் சார்ந்துள்ள கடற்கரையினில் தன்னுடைய துணைகளுடன் கலந்து திரியும் அழகிய சிறகுகளை உடைய அன்னங்கள் பொருந்திய பிரமாபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரத்தில் உறையும் பெருமானே எனது உள்ளத்தினை கவர்ந்தவன் ஆவான்.

Tag :

#thirugnanasambandhar thevaram thiruppiramapuram
#Thodudaya seviyan
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
தோடுடைய செவியன் - பாடல் 7


Written by: என். வெங்கடேஸ்வரன்
Share this news: