Digital Library
Home Books
ராமரைப்பற்றி மாரீசன் நீண்ட நேரம் பேசி ராவணனுக்கு புத்தி கூறினான். மாரீசன் பேசியது எதுவும் ராவணனுக்கு பிடிக்கவில்லை. ராவணன் பேச ஆரம்பித்தான். மாரீசா நீ சொல்வது எதுவும் சரியில்லை. நீ சொல்வதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். ராட்சச அரசன் நான். இதனை நீ மனதில் வைத்துக் கொள். உன்னிடம் சீதை தூக்கிச் செல்லலாமா வேண்டாமா என்று உனது கருத்தை கேட்க நான் இங்கு வரவில்லை. நீண்ட யோசனைக்கு பிறகு சீதை தூக்கிச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்துவிட்டே இங்கு வந்திருக்கின்றேன். என் முடிவில் இனி மாற்றம் இல்லை.
ஒரு பெண்ணின் சூழ்ச்சியால் ஏமாற்றப்பட்டு ராஜ்யத்தை இழந்து ஊரில் இருந்து துரத்தப்பட்டவன் அந்த ராமன். ராட்சச அரசனன நான் இந்த சாதாரண மனிதனுடன் சமமாக நின்று யுத்தம் செய்ய மாட்டேன். சீதையை தூக்கி சென்று ராமனை அவமானப்படுத்த வேண்டும் என்று தீர்மானித்து விட்டேன். இதற்கு நான் கேட்கும் உதவியை நீ செய்ய வேண்டும் என்று அரசனாக உனக்கு உத்தரவிடுகின்றேன். நீ என்னுடைய உத்தரவை செயல்படுத்த வேண்டும் இல்லை என்றால் உன்னை நான் இங்கு இப்போதே கொன்று விடுவேன் என்று ராவணன் சொல்லி முடித்தான்.
ராமனின் பகையை சம்பாதித்து விரைவில் நீ யமனிடம் செல்ல ஆசைப்படுகின்றாய். இலங்கை எரிந்து அழிந்து போவது. நீயும் உனது சகோதரர்கள் உட்பட உனது ராட்சச படைகள் அனைத்தும் ராமனால் அழிக்கப்படுவது இப்பொதே என் கண்களுக்கு தெரிகிறது. உன் உத்தரவை செயல் படுத்தாமல் உனது கையால் மரணிப்பதை விட ராமரின் கையால் நான் மரணமடைவது மேல் என்று எண்ணுகின்றேன். தண்டகாருண்யம் காட்டிற்கு செல்லலாம் வா என்று கிளம்பினான் மாரீசன். பழைய மாரீசனை கண்டுவிட்டேன் என்று ராவணன் மாரீசனை கட்டி அணைத்து செய்ய வேண்டிய காரியத்தை சொல்ல ஆரம்பித்தான் ராவணன். ஏற்கனவே சொன்னபடி மான் உருவம் எடுத்து நீ ராமரை தூரமான இடத்திற்கு அழைத்துச் செல். பின்பு லட்சுமணா காப்பாற்று என்று ராமரின் குரலில் கத்து. லட்சுமணன் சீதையை தனியாக விட்டு வருவான் அந்த நேரம் நான் சீதையை தூக்கிச்சென்று விடுவேன் என்று ராவணன் சொல்லி முடித்தான்.
தண்டகாரண்ய காட்டில் ராமனுடைய குடிலுக்கு அருகில் இருவரும் வந்து சேர்ந்தார்கள். குடிலின் தூரத்தில் நின்ற மாரீசனின் கையை பிடித்த ராவணன் அதோ பார் ராமனின் குடில் உள்ளது. என் திட்டப்படி அனைத்தையும் சிறப்பாக செய்து முடி என்று அனுப்பினான் ராவணன். மாரீசன் அழகிய பொன் மான் வேடத்திற்கு உருமாறினான். மானின் உடலில் ஒவ்வொரு அங்கமும் விசித்திர அழகில் வைர வைடூரியங்கள் ரத்ன கற்கள் பதித்த தங்க மான் போல் ஒளி வீசியது. மான் குடிலை சுற்றி சுற்றி வந்தது. மற்ற மான்கள் இதன் அருகில் வந்ததும் தன் இனம் இல்லை என்று சந்தேகத்துடன் விலகி சென்றது.
சீதை குடிலுக்கு அருகே பூக்களை பறித்துக்கொண்டிருந்தாள். மான் சீதைக்கு முன்பாக ஓடி துள்ளிக் குதித்தது. சீதை மானின் அழகை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். இந்த பூக்களுக்கு நடுவில் ஓடிய மான் காட்டிற்கே புது அழகு தந்தது. ராமரும் லட்சுமணனும் இந்த அழகை காண வேண்டும் என்று எண்ணிய சீதை ஓடி வாருங்கள் ஓடி வாருங்கள் இந்த அழகிய மானை பாருங்கள் என்று கத்த ஆரம்பித்தாள்.
ராமரும் லட்சுமணனும் சீதையின் குரலைக் கேட்டு விரைந்து வந்து பொன் மானைப் பார்த்து வியந்தார்கள். லட்சுமணன் மானின் நடவடிக்கைகளை பார்த்து சந்தேகமடைந்தான். மான் வடிவில் வந்திருப்பது ராட்சசன் மாரீசன் என்பதை லட்சுமணன் புரிந்து கொண்டான். ராமரை பார்த்து இந்த அழகிய கற்கள் பதிக்கப்பட்ட பொன் மான் வடிவில் இருப்பது மாரீசன் என்ற ராட்சசன் ஆவான். இயற்கையில் இப்படி ஒரு மிருகம் கிடையாது. நம்மை ஏமாற்ற ஏதோ தந்திரம் செய்து நம்மை தாக்க இங்கே வந்திருக்கிறான் என்று எண்ணுகிறேன் என்றான். லட்சுமணன் சொன்னதை கேட்டதும் மானின் அழகில் மயங்கிய சீதை ராமரிடம் இந்த மான் தங்க நிறத்தில் நவரத்ன கற்களும் ஜொலிக்க அழகாக இருக்கிறது. இதனுடன் நான் விளையாட ஆசைப்படுகின்றேன். நாம் இக்காட்டை விட்டு அரண்மனைக்கு செல்லும் காலம் நெருங்கி விட்டது. இங்கிருந்து செல்லும் போது இந்த மானையும் தூக்கிச்சென்று விடலாம். நமது அரண்மனை தோட்டத்தில் இதனுடன் ஆனந்தமாக பொழுதை கழிக்க ஆசைப்படுகின்றேன். இந்த மானைப் பார்த்தால் பரதன் மிகவும் மகிழ்ச்சி அடைவான். இந்த மானை பரதனுக்கு பரிசாக கொடுக்கலாம். இந்த மானை பிடித்து எனக்கு தாருங்கள். நமது குடிலில் இந்த மானை கட்டி வளர்க்கலாம் என்று விடாமல் ராமரிடம் மானை பிடித்து கொடுக்க சொல்லி பேசிக்கொண்டே இருந்தாள்.
ராமர் லட்சுமணனிடம் பேச ஆரம்பித்தார். சீதையின் பேச்சைப் பார் லட்சுமணா. அவளின் பேச்சில் இருந்து அந்த மான் அவளுக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று நமக்கு தெரிகிறது. அவளுடைய ஆசையை நிறைவேற்றுவது எனது கடமை. அந்த மான் ராட்சசனாக இருந்தால் இக்காட்டில் இருக்கும் முனிவர்களுக்கு நாம் கொடுத்த வாக்கின்படி அதனை அழிப்பது நமது கடமை. வந்திருப்பது ராட்சசனா என்று நமக்கு தெரியாது. ஆகையால் நீ வில் அம்புடன் கவனத்துடன் சீதைக்கு பாதுகாப்பாக இரு. எந்த சமயத்தில் என்ன வேண்டுமானாலும் நிகழலாம். எச்சரைக்கையுடன் இரு. நான் அந்த மானை உயிருடனோ அல்லது ராட்சசனாக இருக்கும் பட்சத்தில் கொன்றோ கொண்டு வருகிறேன் என்று வில் அம்புடன் கிளம்பினார். லட்சுமணன் யுத்தத்திற்கு தயாராக இருப்பது போல் வில் அம்புடன் சீதைக்கு காவலாக இருந்தான்.
ராமர் மானை பின் தொடருந்து ஓடினார். ராமர் தன்னை பின் தொடர்ந்து வருகின்றாரா என்று மான் திரும்பி திரும்பி பார்த்து காட்டிற்குள் ஓடியது. மானை ராமரால் பிடிக்க முடியவில்லை. ராமரை காட்டில் இருந்து நீண்ட தூரத்திற்கு இழுந்து வந்தது மான். ராமர் தனது வில்லை எடுத்தார். இதனை கண்ட மான் உருவில் இருந்த மாரீசனுக்கு தான் ராமரின் கையால் இறக்கப் போகின்றோம் என்று தெரிந்துவிட்டது. ராமரின் கண்ணில் படாமல் மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டது. ராமர் தனது வில்லில் அம்பை பூட்டி மான் இருக்கும் திசையை நோக்கி செலுத்தினார். அம்பு மானை குத்தியது. மான் உருவத்தில் இருந்த மாரீசன் தனது சுய உருவத்தை அடைந்தான். ராவணன் சொன்னபடி சீதை லட்சுமணா காப்பாற்று என்று ராமரின் குரலில் கத்தியபடி கீழே விழுந்து இறந்தான் மாரீசன்.
ராமர் விட்ட அம்பு மாரீசனை கொன்று விட்டது. மாரீசன் தன் குரலைப்போலவே எழுப்பிய சத்தத்தில் சீதை பயந்துவிடுவாளே என்று எண்ணிய ராமர் லட்சுமணன் அருகில் இருக்கின்றானே என்று தன்னை சமாதானம் செய்து கொண்டு அங்கிருந்து தன் குடிலை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
ராமரின் குரலைக் கேட்ட சீதை ராமருக்கு ஏதோ ஆபத்து நிகழ்ந்து விட்டது. ராமருக்கு உதவி தேவைப்படுகிறது என்று பதைபதைத்தாள். லட்சுமணனிடம் உனது அண்ணனின் அபயக் குரல் கேட்கிறது. உனக்கு கேட்கவில்லையா? நிற்காதே போ போ சீக்கிரம் ஓடிச் சென்று அண்ணனுக்கு உதவி செய் என்று கதற ஆரம்பித்தாள். ராமர் சீதைக்கு துணையாக இங்கேயே இரு. எச்சரிக்கையுடன் சீதையை பார்த்துக்கொள் என்ற அண்ணனின் ஆணையை ஏற்று லட்சுமணன் அசையாமல் நின்றான். சீதை மீண்டும் லட்சுமணனை பார்த்து கத்த ஆரம்பித்தாள். ராட்சசனிடம் உன் அண்ணன் அகப்பட்டு அபயக் குரலில் கதறுகிறார். ஒரே பாய்ச்சலில் சென்று அவரை நீ காப்பாற்ற வேண்டாமா? மரம் போல் அசையாமல் நின்கின்றாயே ஓடு ஓடு என்று விரட்டினாள். அப்போதும் அசையாமல் நின்றான் லட்சுமணன். சீதைக்கு லட்சுமணனின் மேல் கோபம் அதிகரித்தது. ராமரின் மேல் உள்ள அன்பும் ஆபத்தில் இருக்கும் ராமருக்கு உதவி செய்ய செல்லாமல் அசையாமல் நின்ற லட்சுமணனின் மேல் உள்ள கோபமும் என்ன பேசுகின்றோம் என்று தெரியாமல் தன் சுய புத்தியை இழந்த சீதை கோபத்தில் கத்த ஆரம்பித்தாள்.
சுமத்ரையின் மகனே நீ இப்போது ராமருக்கு எதிரியாகி விட்டாய். இவ்வளவு நாளும் நல்லவன் போல் வேடமணிந்து எங்களுடன் இருந்திருக்கிறாய். ராமரின் மரணத்திற்கான இவ்வளவு நாள் காத்திருந்தாயா? அவர் இறந்தால் அதன் பிறகு என்னை அடைந்து விடலாம் என்ற எண்ணத்தில் இருந்தாயா? துஷ்டனே ராமர் அபயக் குரலில் கதறி அழைத்தும் போகாமல் இங்கேயே நிற்கின்றாயே அண்ணனிடம் நீ காட்டிய அன்பெல்லாம் வெறும் நடிப்பா சூழ்ச்சிக்காரனே நயவஞ்சகனே என்று திட்டிக்கொண்டே தன் இரு கைகளாலும் தன்னையே அடித்துக் கொண்டு கதறி அழுதாள். லட்சுமணன் தன் கண்ணில் நீர் தனது வழிய காதுகளை மூடிக்கொண்டான்.
லட்சுமணன் மெதுவாக சீதையிடம் பேச ஆரம்பித்தான். சிறு வயதில் இருந்து அண்ணனுடன் பல யுத்தங்களை பார்த்திருக்கின்றேன். அண்ணனின் பலம் எனக்கு தெரியும். அவரை யாராலும் ஒன்றும் செய்து விட முடியாது. காட்டில் நம்மை எதிர்த்த ஆயிரக்கணக்கான ராட்சசர்களை அண்ணன் தனி ஒருவராக நின்று யுத்தம் செய்து அனைவரையும் அழித்தார். அவரின் பராக்ரமத்தை தாங்களும் பார்த்தீர்கள். தேவர்கள் கந்தர்வர்கள் அசுரர்கள் ராட்சசர்கள் அரசர்கள் மானுடர்கள் மிருகங்கள் என அண்ணனை எவர் எதிர்த்தாலும் அவர்களை அண்ணன் தனி ஒருவராக நின்று அனைவரையும் அழித்து விடுவார். அந்த வல்லமை அவருக்கு உண்டு. இது நிச்சயமான உண்மை பயப்படாதீர்கள். உங்கள் மனைதை சாந்தப்படுத்திக் கொள்ளுங்கள். அந்த மான் உருவில் வந்த ராட்சசனை அழித்து விட்டு தாங்கள் விரும்பிய மான் உடலுடன் அண்ணன் சிறிது நேரத்தில் வந்து விடுவார். அதனை நீங்கள் பார்ப்பீர்கள் என்று உங்களுக்கு நான் உறுதி அளிக்கின்றேன். உங்கள் புத்தியை நிலையாக வைத்துக் கொள்ளுங்கள் என்று சீதையிடம் லட்சுமணன் கூறினான்.
சீதை லட்சுமணனிடம் பேசினாள். அண்ணனின் ஆணை என்று சமாதானம் சொல்லி அண்ணன் கதறினாலும் போக மறுக்கிறாய். அவரும் நானும் உன்னை நம்பி மோசம் போனோம். ராமருக்கு பகைவனாய் வந்த துஷ்டனே இது பரதனின் சூழ்ச்சியா? பரதன் சொல்லிக் கொடுத்து இது போல் செய்கிறாயா? ராமரின் உடன் பிறந்தவர்கள் அனைவரும் சேர்ந்து அவரை அழித்து ராஜ்யத்தை அடைய நினைக்கின்றார்களா? ராஜ்யத்தையும் என்னையும் நீ அடைய நினைத்து இது போல் செய்கிறாய் என்பதை தெரிந்து கொண்டேன். உன் எண்ணம் நிறைவேறாது. உன் அண்ணன் இல்லை என்று தெரிந்த அடுத்த கனம் நானும் இறந்து விடுவேன். இப்பொது நீ சென்று அவருக்கு உதவி செய்து அவரை காப்பாற்றா விட்டால் அதோ பார் உலர்ந்த கட்டைகள் இருக்கின்றன. இப்போது இங்கேயே அதில் தீ மூட்டி குதித்து என் உயிரை விடுவேன். மலையின் உச்சிக்கு சென்று குதித்து விடுவேன். விஷத்தை அருந்தி விடுவேன். இல்லையென்றால் இதோ பார் உன் முன்பே இப்போதே இந்த ஆற்றில் குதித்து உயிர் துறப்பேன் என்று சிங்கம் போல் கர்ஜித்துக்கொண்டே சீதை ஆற்றை நோக்கி செல்ல ஆரம்பித்தாள்.
லட்சுமணன் சீதையை பார்த்து நீங்கள் சொன்ன இந்த வார்த்தைகள் என் காதுகளில் இரும்பை காய்ச்சி ஊற்றுவது போல் இருக்கிறது. உங்களின் சொல்லையும் செயலையும் பார்த்து நான் பயப்படுகிறேன். உங்களுடைய வார்த்தைகளால் உங்களுக்கு வரும் கேட்டிற்கு நீங்களே வழி வகுத்து கொடுத்து விட்டீர்கள். தேவர்களின் சாட்சியாக சொல்கிறேன். நான் உங்களை கண்டு இரக்கப்படுகின்றேன். இன்று உங்களிடம் குணக் குறைவை காண்கிறேன். எனக்கு பாப எண்ணம் இருப்பது போல் பேசிவிட்டீர்கள். இது என்னுடைய கெட்ட காலம் என்று எண்ணுகிறேன். எந்த விதியாக இருந்தாலும் என்னுடைய வில்லால் வென்று விடலாம் என்று கர்வம் கொண்டிருந்தேன். இன்று அந்த கர்வம் அடங்கி விதி என்னை வென்று விட்டது.
நீங்கள் சொல்வது போல் அண்ணனின் ஆணையை மீறி உங்களை தனியாக விட்டு செல்கிறேன். நீங்கள் இங்கிருந்து காணாமல் போகப் போகின்றீர்கள். அதற்குண்டான கெட்ட அபசகுனங்களை இங்கு காண்கிறேன். அண்ணனுடன் சேர்ந்து வந்து உங்களை மீண்டும் சந்திப்பேனா என்று தெரியவில்லை சந்தேகமாக இருக்கிறது. ஆயினும் இதோ தங்களுடைய கடுமையான வார்த்தைக்காக போகிறேன் என்று குடிலை சுற்றி ஒரு கோடு வரைந்தான் லட்சுமணன். தயவு செய்து குடிலை சுற்றி இருக்கும் இந்த கோட்டை தாண்டி மட்டும் வெளியே வந்து விடாதீர்கள். உங்களை இங்கிருக்கும் வன தேவதைகள் காப்பார்களாக என்று சொல்லிவிட்டு திரும்பி திரும்பி பார்த்தபடி ராமர் சென்ற காட்டிற்குள் ஓடினான் லட்சுமணன். சீதை சொன்ன கோரமான வார்த்தைகள் அண்ணனுக்கு தெரிந்தால் மிகவும் வருத்தப்படுவார். கோபம் வராத அண்ணனுக்கு கோபம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதே என்று கோபமும் துயரமும் சேர்ந்து லட்சுமணனை மிகவும் வாட்டியது.
லட்சுமணன் செல்லும் நேரத்திற்காக காத்திருந்த ராவணன் தனது உருவத்தை மாற்றிக்கொண்டு காவி உடை அணிந்து தண்டமும் கமண்டலமும் தரித்து தபஸ்வி போல் சீதை இருக்கும் குடிலை நோக்கி சென்றான். அழுத முகத்துடன் இருந்த சீதையை பார்த்து யாரம்மா நீ? இந்த ராட்சசர்கள் வாழும் காட்டில் தனியாக இருக்கிறாய் எதற்காக அழுது கொண்டிருக்கிறாய்? என்று சீதையிடம் கேட்டான் ராவணன்.
ராமர் லட்சுமணனுடன் வந்து விடுவார் என்று காத்திருந்த சீதை தனது குடிலில் முன் வந்திருக்கும் தபஸ்வி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லலாமா வேண்டாமா என்று குழப்பத்துடன் யோசித்தாள். பதில் ஏதும் சொல்லவில்லை என்றால் கோபத்தில் அவர் சாபம் ஏதும் விட்டு விடுவாரோ என்ற பயத்தில் அழுத முகத்தை துடைத்துக்கொண்டு முறைப்படி வரவேற்று உபசாரம் செய்தாள். ராவணன் கேட்ட கேள்விகளுக்கு நடந்தவற்றை பதிலாக சொல்லிக்கொண்டே ராமர் வந்து விட்டாரா என்று வாசலை பார்த்துக் கொண்டே இருந்தாள். ராவணன் ராட்சச குலத்தின் பெருமைகளை சொல்லியும் ராமனை இகழ்ந்தும் பேசினான். இலங்கையின் பெருமைகளை சொல்லியும் தனது அரண்மனையின் பெருமைகளையும் சொன்னான். நான் ஆகாயத்தில் நின்று இந்த மண்ணுலகை இரு கைகளாலும் தூக்குவேன். யமனுடன் யுத்தம் செய்து யமனையும் கொல்வேன். கூரிய அம்புகளை விட்டு சூரியனின் கதிர்கள் இங்கு வருவதையும் தடுப்பேன். விருப்பப்படி எனது உருவத்தை என்னால் மாற்றிக்கொள்ளும் சக்தி படைத்தவன் நான். காட்டில் சுற்றி திரியும் ராமனை விட்டு என்னுடன் வந்து விடு. உன்னை என்னுடைய அரண்மனைக்கு பட்டத்து அரசியாக்கி விடுகிறேன். தேவலோகத்தில் உள்ள தேவர்களும் தேவதைகளும் உனக்கு அடிமையாக இருப்பார்கள். ஈரேழு பதினான்கு உலகத்திற்கும் நீ அரசியாக இருப்பாய் என்று ஆசை காட்டினான் ராவணன்.
சீதை கோபத்தில் கத்த ஆரம்பித்தாள். மாமலையைப் போல அசைக்க முடியாதவர் என் கணவர். அனைவராலும் விரும்பப்படும் சத்தியம் தவறாதவர். ஐந்து புலன்களையும் வென்ற கருணை உள்ளம் கொண்டவர். ஆண் சிங்கம் போன்ற அவரிடம் பெண் சிங்கம் போன்று இருக்கும் என்னை அடைய முயலும் குள்ள நரியே சூரியனின் கதிர்களை எவராலும் தொட முடியாது. அது போல் உன்னால் என்னை தொட கூட முடியாது. உனது ஆயுளை சீக்கிரமாக முடித்துக்கொள்ள முடிவெடுத்து விட்டாய் என்று நினைக்கிறேன். எனது கணவர் இங்கு வருவதற்குள் ஓடிவிடு. இல்லையேல் அவரின் அம்புக்கு நீ இரையாவாய். இந்த குடிலை விட்டு வெளியே போ என்று கத்தினாள்.
சீதையின் பேச்சைக் கேட்ட ராவணன் தனது ராட்சச உருவத்தை அடைந்தான். எனது பெருமைகளையும் வீரப்பிராதபங்களை கூறினேன். அனைத்தையும் கேட்ட நீ நான் சொல்வதற்கு உடன் படவில்லை என்றால் நீ மிகவும் கர்வம் கொண்டவள் என்று நினைக்கிறேன். உன்னை நான் இங்கிருந்து தூக்கிச் செல்கிறேன். உன் ராமன் உன்னை எப்படி வந்து காப்பாற்றுகிறான் என்று நான் பார்க்கிறேன் என்றான். சீதை இருக்கும் குடிலை சுற்றி லட்சுமணன் வரைந்த கோடு மீறி சீதை வெளியே வந்தால் தான் அவளை தூக்கிசெல்ல முடியும். விருப்பமில்லாத பெண்ணை தொட்டால் தன் தலை வெடித்து விடும் என்ற தன் முன்வினையால் பெற்ற சாபத்தினால் சீதையை தொடாமல் தூக்க வேண்டும் என்பதால் அந்த குடில் இருக்கும் பூமியை அப்படியே தன் மந்திர சக்தியால் தூக்கி தனது ரதத்தில் வைத்து ரதத்தை செலுத்த கட்டளையிட்டான் ராவணன்.
சீதை கதற ஆரம்பித்தாள். ராமா எங்கு சென்றீர்கள்? என்னை காப்பாற்ற வாருங்கள். லட்சுமணா அண்ணனின் தலை சிறந்த பக்தனே உன்னை தகாத வார்த்தைகளின் திட்டி உன் பேச்சை கேட்காமல் உன்னை துரத்தினேனே. மரங்களே செடிகளே என்னை இந்த ராட்சசன் தூக்கிச் செல்வதை ராமர் வந்ததும் சொல்லுங்கள் என்று சத்தமாக கதறிக்கொண்டே இருந்தாள்.
சீதையின் குரலைக் கேட்ட கழுகு அரசனான ஜடாயு சீதையை யாரோ தூக்கிச் செல்கின்றார்கள் என்று உணர்ந்து கொண்டான். வேகமாக பறந்து சென்று ரதத்தின் முன்பாக நின்று ராவணனை தடுத்தான் ஜாடாயு. இதனை கண்ட சீதை ஜடாயுவை பார்த்து இவன் ராட்சசர்களுக்கு தலைவன் இலங்கை அரசன் ராவணன் ஆயுதங்கள் பல வைத்திருக்கின்றான். நீங்கள் எதிர்த்தால் உங்களை கொன்று விடுவான். உங்களால் என்னை மீட்க முடியாது. ராமர் இங்கு வந்ததும் அவரிடம் இந்த செய்தியை சொல்லி விடுங்கள் என்று கதறியபடியே கூறினாள். ராவணன் ஜடாயுவை பார்த்து யார் நீ சிறிய பறவையான நீ என்னை தடுக்கின்றாய் தூரமாக விலகிப்போ என்று விரட்டினான்.
ஜடாயு ராவணனிடம் எனது பெயர் ஜடாயு கழுகு ராஜன். நீண்ட நாள் உன்னைப் போல் ஒரு நாட்டின் அரசனாக வாழ்ந்தவன். பெண்களை காப்பது அரசனுடைய கடமை. அதற்கு மாறாக அரசனாகிய நீ இத்தகைய கீழ்தரமான காரியங்களை செய்யக்கூடாது. சீதை யார் உன்று உனக்கு தெரியுமா? ஒரு ராஜ குமாரியை அவளது துணைவன் இல்லாத போது இப்படி தூக்கிச் செல்லக்கூடாது. உடனே அவளை விட்டுவிட்டுப் போ இல்லை என்றால் அழிந்து போவாய். ராமர் மீது உனக்கு பகை இருந்தால் அவருடன் யுத்தம் செய். அதை விட்டு ராமர் இல்லாத சமயத்தில் வந்து சீதையை தூக்கிச் செல்கிறாய். இது தான் உன்னுடைய வீரமா? ராமருடன் யுத்தம் செய்ய உனக்கு தைரியம் இல்லை என்று எனக்கு தெரிந்து விட்டது. ராமருடன் நீ யுத்தம் செய்தால் ஏற்கனவே ராமரின் கைகளால் அழிந்த உனது சேனைப் படைகளாக இருந்த ராட்சசர்களுக்கு நிகழ்ந்த கொடுரமான மரணம் தான் உனக்கு நிகழும். யமனுடைய பாசக்கயிறு உன் கழுத்தின் மேல் விழுந்து உன்னை இழுத்துச் செல்ல தயாராக இருப்பதை நீ அறியாமல் இருக்கிறாய். நான் மிகவும் வயதான முதியவன். ஆயுதம் எதும் இன்றி இருக்கிறேன். நீயோ சிறுவன் கவசம் பூண்டு வில் அம்பு ஆயுதங்களுடன் இருக்கிறாய். சீதையுடன் நீ இங்கிருந்து செல்ல நான் உன்னை விட மாட்டேன். என்னை மீறி சீதையை தூக்கிச் செல்ல உன்னால் முடியாது. கோழையே இதோ உன் முன் நிற்கின்றேன். தைரியம் இருந்தால் என்னுடன் யுத்தம் செய். நான் உயிரோடு இருக்கும் வரையில் உன்னால் சீதையை தூக்கிச்செல்ல முடியாது. எனக்கு பயந்து ஓடாதே நில் என்று கர்ஜித்தான் ஜடாயு.
ஜடாயுவின் பேச்சைக் கேட்ட ராவணன் கோபத்தில் ஜடாயுவை தாக்க ஆரம்பித்தான். கூரிய அஸ்திரங்களை ஜடாயு மீது விடுத்தான் ராவணன். சிறகால் செய்யப்பட்ட மலை போல் நின்ற ஜடாயு தனது கூரிய நகங்களால் அனைத்தையும் தடுத்து ராவணனின் வில்லை உடைத்து ராவணனை தாக்க ஆரம்பித்தான். மிகவும் முதியவனான ஜடாயு ராவணனின் எதிர் தாக்குதலை சமாளிக்க முடியாமல் விரைவில் சோர்ந்து போனான். அழுத முகத்துடன் இருந்த சீதையை கண்டதும் மீண்டும் புத்துயிர் பெற்றது போல் எழுந்த ஜடாயு மீண்டும் ராவணனை ஆக்ரோசமாக தாக்க ஆரம்பித்தான். ராவணனின் கைகளை ஒவ்வொன்றாக தனது அழகால் கொத்தி துண்டாக்கி வீசி எறிந்தான் ஜடாயு. ராவணனுக்கு புதிது புதிதாக கைகள் முளைத்துக் கொண்டே இருந்தது. வெகு நேரம் நடந்த யுத்தத்தில் ராவணனின் கை ஓங்கியது. மிகவும் சோர்வடைந்திருந்த ஜடாயுவின் இறகுகளையும் கால்களையும் வெட்டி எறிந்தான் ராவணன். இறகுகளும் கால்களும் இழந்த ஜடாயு ராவணனை எதிர்க்க இயலாமல் கீழே விழுந்தான். ஜடாயுவை கண்ட சீதை என் கணவருக்கு இன்னோரு தந்தையாக வந்தீர்களே. தசரதர் மீண்டும் உயிர் பெற்று வந்ததை போல் யுத்தம் செய்து இப்போது எனக்காக உயிரை விடப் போகின்றீர்களே ராமா எங்கிருக்கின்றார்கள். லட்சுமணா எங்கிருக்கிறாய் காப்பாற்றுங்கள் என்று கதறியபடியே இருந்தாள். ஜடாயு பறவை நிற்க கூட முடியாமல் விழுந்து கிடப்பதை கண்டு திருப்தி அடைந்த ராவணன் சீதையுடன் ஆகாய மார்க்கமாக சென்றான்.
சீதை ஆகாயத்தில் சென்று கொண்டிருக்கும் போது தைரியமாக ராவணனிடம் பேச ஆரம்பித்தாள். உன் குலத்தின் பெருமைகளையும் உன்னுடைய வீரப்பரதாபங்களையும் கம்பீரமாக என்னிடம் சொல்லி பெரிய சூரனைப் போல் நடந்து கொண்டாய். ஆனால் ராமருடன் யுத்தம் செய்ய தைரியம் இல்லாமல் ஒரு கோழையைப் போல் தன் துணைவன் இல்லாத நேரத்தில் ஒரு பெண்ணை மாறுவேடம் தரித்து ஏமாற்றி தூக்கிச் செல்கிறாய். இது தான் உனது வீரமா? உனக்கு வெட்கமாக இல்லையா? என்னை காப்பாற்ற வந்த வயதான ஒரு பறவையை கொன்ற கோழை நீ. உன்னுடைய இந்த கீழ்தரமான செயலினால் உன் குலத்திற்கே நீ அவமானத்தை தேடிக் கொடுத்திருக்கிறாய். என்னை தூக்கிச் சென்று உன்னால் நிம்மதியாக இருக்க முடியும் என்று எண்ணுகிறாயா? உன்னுடைய பதினான்காயிரம் ராட்சசர் படைகளையும் என் ராமர் ஒருவராக நின்று அனைவரையும் அழித்திருக்கிறார் ஞாபகம் வைத்துக்கொள். என் ராமரின் கண்ணில் பட்ட அடுத்த கனம் அவருடைய வில்லில் இருந்து வரும் அம்புகள் உன்னை கொன்று விடும். தந்திரங்கள் மூலமாகவும் மாயா ஜாலங்கள் மூலமாகவும் தப்பிப் பிழைப்போம் என்று கனவு காணாதே. நிச்சயமாக நீ அழிந்து போவாய் என்று ராவணனை திட்டிக்கொண்டே இருந்தாள்.
சீதை பேசிய எதையும் ராவணன் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. சீதையை அடைந்து விட்டோம் என்று தன் நினைத்து வந்த செயலை நிறைவெற்றி விட்ட மகிழ்ச்சியில் இருந்தான் ராவணன். ரதம் வில்லில் இருந்து சென்ற அம்பு போல் இலங்கையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. செல்லும் வழியில் கீழே மலை மீது வேடர்கள் சிலரையும் வானரங்கள் சிலரைக் கண்டாள் சீதை. ராமர் தன்னை தேடி வந்தால் அவருக்கு வழி தெரிய வேண்டும் என்று தன்னுடைய ஆபரம் ஒன்றை எடுத்து வானரங்கள் இருக்கும் மலையை நோக்கி வீசினாள் சீதை. வானத்தில் ராட்சசன் பிடியில் இருக்கும் பெண் தங்களை நோக்கி எதோ ஒன்றை தூக்கி எறிவதை வானரங்கள் பார்த்து அதனை எடுக்க ஓடினார்கள்.
ரதம் பல காடுகளையும் மலைகளையும் கடலையும் தாண்டி இலங்கையை சென்றடைந்தது. துயரத்தில் இருந்த சீதையுடன் தன் அந்தப்புரத்தை அடைந்தான் ராவணன். அங்கிருக்கும் ராட்சச பணிப்பெண்களை அழைத்தான். இவளிடம் மிகவும் மரியாதையாகவும் பணிவுடனும் நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். இவளை மிகவும் ஜாக்கிரதையாகவும் ஆண்கள் யாரும் இவளிடம் பேசாமலும் இவள் அருகில் நெருங்காமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். இவள் கேட்கும் வைர வைடூரியங்கள் முத்து என்று எது கேட்டாலும் கொடுத்து அவளை சந்தோசமாக வைத்திருக்க வேண்டும். இவள் வருத்தப்படும்படி யாரேனும் நீங்கள் நடந்து கொண்டால் உங்கள் அனைவரையும் கொன்று விடுவேன். நீங்கள் எனக்கு கொடுக்கும் அனைத்து மரியாதைகளும் இவளுக்கும் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு சீதை கிடைத்து விட்ட பெருமிதத்தில் அங்கிருந்து கிளம்பினான். அரண்மனைக்கு வந்த ராவணன் சாமர்த்தியமான இரண்டு ஒற்றர்களை அழைத்தான். நீங்கள் இருவரும் ராமர் வாழும் காட்டிற்கு செல்லுங்கள். ராமர் எனக்கு எதிரி எப்படியாவது அவன் அழிய வேண்டும். ராமன் இருக்கும் வரையில் எனக்கு நிம்மதியான தூக்கம் இல்லை. ராமன் என்ன செய்கிறான் என்று மறைந்திருந்து பார்த்து தினந்தோறும் தகவல் தெரிவிக்கவேண்டும். உங்களுக்கு எந்த பாதிப்பும் வராது தைரியமாக செல்லுங்கள் என்று உத்திரவிட்டான்.
ராமருடன் வாழ்ந்த காட்டில் இருந்து வெகு தூரத்தில் கடலால் சூழப்பட்ட நாட்டில் பெரிய அரண்மணையில் தாம் இருப்பது சீதைக்கு தெரியவில்லை. ராமருடைய வீரத்தையும் சாமர்த்தியத்தையும் அறிந்த சீதை ராமர் விரைவில் வந்து ராவணனை கொன்று விட்டு தன்னை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையுடன் இருந்தாள். ராட்சசனான ராவணன் தன்னிடம் மிருகத்தனமாக ஏதும் நடந்து கொள்ளவில்லை என்று ஆறுதலுடன் இருந்தாள்.
சீதை தனது அரண்மனையை சுற்றிப் பார்த்தால் அங்கிருக்கும் ராஜபோகங்களை கண்டு தனக்கு அடிபணிவாள் என்று எண்ணிய ராவணன் சீதையை பார்த்துக் கொள்ளும் ராட்சஷிகளை அழைத்து அரண்மனையை சுற்றிக் காட்டுமாறு உத்தரவிட்டான். உலகத்தில் எந்த அரசனிடமும் இல்லாத செல்வங்களுடன் ராஜபோகத்துக்கு உரிய பொருட்களுடன் ராவணனின் செல்வம் நிறம்பிய அரண்மனையை சுற்றிக் காண்பித்தார்கள். எங்கு பார்த்தாலும் நவரத்தினங்களும் பொன்னும் மணியும் பட்டும் குவிந்திருந்தன. கண்ணைக் கவரும் படியான விசித்திர வேலைப்பாடுகள் நிறைந்த மண்டபங்கள் மேடைகள் என ராஜ்ய அதிகாரத்தினால் பெற்ற அத்தனை செல்வங்களையும் அந்த அரண்மனையில் சீதை கண்டாள். அவளுடைய மனதில் ராமர் எப்பொது வருவார்? எப்படி வருவார்? எப்போது காண்போம்? என்ற எண்ணத்தை தவிர சீதையின் மனதில் வேறு ஒன்றும் ஓடவில்லை.
சீதையை மீண்டும் காண அவள் இருக்கும் அந்தப்புரத்திற்கு வந்தான் ராவணன். ராட்சஷிகள் சரியாக காவல் இருக்கின்றார்களா என்பதை சரி பார்த்துக் கொண்டான். சீதை சோகத்தில் கண்ணீர் நிறைந்த கண்களோடு இருப்பதைக் கண்டான். எப்படியாவது சீதையை அடைந்து விட வேண்டும் என்று எண்ணி ஏற்கனவே பேசியதை போலவே சீதையிடம் தன் வீரப்பிராதபங்களை பற்றி சொல்ல ஆரம்பித்தான் ராவணன். நீங்கள் வாழ்ந்த காட்டில் இருந்து 100 யோசனை தூரத்தில் இருக்கும் கடல் சூழ்ந்த எனது லங்காபுரி நாட்டில் நீ இப்போது இருக்கிறாய். இந்த நாட்டை சுற்றி இரவு பகலாக பல மகா ராட்சசர்கள் காவல் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். என் அனுமதி இல்லாமல் யாரும் உள்ளே நுழைந்து விட முடியாது. நாட்டில் இருந்த விரட்டப்பட்ட ஒரு மனிதனை எண்ணி கவலையோடு இருக்கிறாய்.
ராமனால் இங்கு வர முடியாது. உன் ஆயுட்காலம் முழுக்க நிச்சயம் நீ ராமனை பார்க்க முடியாது. என் பதவியையும் மறந்து உன்னிடம் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். அனைவரது தலையும் என் காலடியில் இருக்க என் தலையை உன் பதங்களில் வைத்து கேட்டுக் கொள்கிறேன். நான் உன் அடிமையாக இருப்பேன். எனக்கு அடிமையாக இருக்கும் அனைத்து தேவர்களும் உனக்கும் அடிமைகள் ஆவார்கள். என் வாழ்நாளில் இவ்வாறு நான் யாரையும் கெஞ்சியது இல்லை. நான் சொல்வதை கேள். வேறு யோசனை செய்யாதே. குபேரனை வெற்றி பெற்ற லங்கேசன் மனைவியாகி விடு. நீ இதற்கு ஒப்புக்கொள்வதில் பாவம் ஒன்றும் இல்லை. இந்த ராஜ்யம் முழுவதும் உன்னுடையதாக எண்ணிக்கொள். இந்த ஆயுட்காலம் முழுவதும் நாம் சந்தோசமாக வாழலாம். உன்னுடைய அழகிய முகத்தில் துக்கம் இருக்கக்கூடாது மகிழ்ச்சியுடன் இரு என்று சீதையிடம் சொல்லி முடித்தான் ராவணன்.
சீதை எந்த பயமும் இல்லாமல் ராவணனிடம் தைரியமாக பேச ஆரம்பித்தாள். ராட்சசர்கள் இருக்கும் தண்டகாருண்ய காட்டில் ராமருடன் தனியாக வசித்தேன். எங்களை எதிர்த்து வந்த உன்னுடைய ராட்சச படைகளை ஒற்றை ஆளாய் கன நேரத்தில் அழித்தவர் என் கணவர். தேவ அசுரர்களால் கொல்லப்பட கூடாது என்று நீ வரம் வாங்கியதினால் யாராலும் உன்னை ஒன்றும் செய்ய முடியாது என்ற கர்வத்தில் என்னை தந்திரமாக தூக்கி வந்து விட்டாய். இதனால் ராமரின் பகையை பெற்றுவிட்டாய். நீ எத்ததை பெரிய சக்தி வாய்ந்த அஸ்திரங்கள் ஆயுதங்கள் வைத்திருந்தாலும் நீ பெற்ற உன்னுடைய வரம் இனி உன்னை காப்பாற்றாது. எத்தனை யோசனை தூரத்தில் நீ என்னை கடல் தாண்டி தூக்கி வந்தாலும் கடலை வற்றச் செய்து என்னை தேடி வருவார் என் ராமர். நீ செய்த தீ வினையால் நீயும் அழிந்து உன் குலமும் அழிந்து உன் லங்காபுரி நகரமே அழிந்து போகப்போகிறது. என் உயிரையும் உடலையும் காப்பாற்றிக்கொள்ள உன் வசமாவேன் என்று எண்ணாதே. உலகத்தாரால் இகழப்பட்டு உயிரை வைத்துக் கொண்டிருக்க நான் விரும்பவில்லை என்று ராவணனிடம் கர்ஜனையுடன் சீதை பேசி முடித்தாள்.
சீதை பேசிய அனைத்தையும் கேட்ட ராவணன் உனக்கு பன்னிரண்டு மாதம் அவகாசம் தருகிறேன். அதற்குள் என் சொல்படி நடந்துகொள். இல்லையென்றால் அவகாச காலம் முடிந்ததும் உன்னை என் சமையல்காரர்கள் எனது காலை உணவிற்கு உன்னை சமைத்து விடுவார்கள் எச்சரிக்கிறேன் என்று சொல்லி விட்டு காவல் காக்கும் ராட்சசிகளை தனியாக அழைத்தான். இவளை அசோக வனத்திற்கு அழைத்துச் சென்று விடுங்கள். அங்கு இவளுடைய பிடிவாதத்தையும் கர்வத்தையும் எப்படியாவது நீங்கள் அழிக்க வேண்டும். பயத்தாலும் நயத்தாலும் தந்திரமாகவும் பேசி இவளை என் சொல்படி நடந்து கொள்ள வையுங்கள் என்று கோபத்துடன் உத்தரவிட்டு தன் அரண்மனைக்கு சென்றான். ராட்சசிகள் சீதையை அசோகவனம் கொண்டு சென்றார்கள். ரம்யமாக வடிவமைக்கப்பட்ட பூந்தோட்டத்தில் அகோரமான ராட்சசிகளுக்கு மத்தியில் சீதை துயரத்துடன் இருந்தாள். ராவணன் நம்மை தூக்கி வந்த செய்தியை ராமரும் லட்சுமணனும் எப்படியாவது தெரிந்து நாம் இருக்கும் இடத்தை வந்தடைந்து ராட்சசர்களை கொன்று நம்மை காப்பாற்றுவார். அதுவரை இந்த ராட்சசிகளுக்கு பயப்படாமல் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தாள்.
ராமர் தான் வாழ்ந்து வந்த குடிலில் இருந்து மிகவும் தூரத்தில் இருந்தார். குடிலில் சீதை என்ன மனநிலையில் இருப்பாள் என்று கற்பனை செய்த வண்ணம் குடிலுக்கு விரைந்து வந்து கொண்டிருந்தார். இந்நேரம் லட்சுமணனை காட்டிற்குள் செல்ல வற்புறுத்தி இருப்பாள். லட்சுமணன் என் உத்தரவை மீறி நடக்க மாட்டான். அதனால் சீதை கோபமடைந்து சொல்லக்கூடாத வார்த்தைகளை சொல்லியிருப்பாள். வட்சுமணன் என்ன முடிவெடுப்பான் என்று தெரியவில்லை. லட்சுமணன் குடிலில் சீதையை தனியாக விட்டு கிளம்புவதற்குள் எப்படியாவது குடிலுக்கு விரைந்து சென்றுவிட வேண்டும் என்று எண்ணிய ராமர் விரைவாக நடக்க ஆரம்பித்தார். எதிரே லட்சுமணன் வருவதை கண்டு அதிர்ந்தார். தாம் நினைத்த படியே நடந்து விட்டதே என்று லட்சுமணா என்று கத்தினார். காட்டின் நடுவே சீதையை தனியாக விட்டுவிட்டு வந்துவிட்டாய். அவளை ராட்சசர்கள் கொன்று தின்று விடுவார்களே ராட்சசர்களிடம் அவள் தப்ப முடியாதே தவறான காரியத்தை செய்துவிட்டாயே என்று லட்சுமணனிடம் பேசியவாறு குடிலுக்கு மிகவும் விரைவாக நடக்க ஆரம்பித்தார் ராமர்.
ராமர் லட்சுமணனிடம் பேசிக்கொண்டே நடந்தார். மாரீசன் போட்ட சத்தத்தை என்னுடைய சத்தம் என்று நம்பி விட்டீர்களே. நான் இப்போது என்ன செய்வேன். உன்னை நம்பி சீதையை ஒப்படைத்து விட்டு வந்தேன். நீ ஏன் அவளை தனியாக விட்டு வந்தாய். ராட்சசர்கள் நம் மீது வைத்திருந்த பகையை சீதை மீது காண்பித்து அவளை கொன்றிருப்பார்கள். சீதை குடிலில் இல்லையென்றால் லட்சுமணா என் உடலில் உயிர் இருக்காது. லட்சுமணா நீ அயோத்திக்கு சென்று செய்தியை சொல்லிவிடு. இந்த துக்கத்தை கௌசலையால் பொறுக்க முடியாது. கைகையி தான் விரும்பியதை அடைவாள். நான் என்ன செய்வேன் என்று சொல்லிக் கொண்டே குடிலுக்கு ஓடு லட்சுமணா ஓடு என்று ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தார்.
லட்சுமணன் கண்ணீர் மல்க ராமரிடம் பேச ஆரம்பித்தான். அண்ணா நான் என்ன செய்வேன். உங்கள் குரலைப் போன்ற சத்தம் வந்ததும் சீதைக்கு பெரும் பயம் வந்து விட்டது. நடுங்கிப் போனார். ஓடு லட்சுமணா ஓடு போ போ என்று என்னை துரத்தினாள். வந்தது உங்கள் குரல் அல்ல அது ராட்சசனின் ஏமாற்று வேலை உங்களை எந்த ராட்சசனும் எதிர்த்து வெற்றி பெற முடியாது என்று எவ்வளவு சொல்லியும் சீதை கேட்கவில்லை. மனம் வருந்தும் படியான வார்த்தைகளை சொல்லி நீ செல்லவில்லை என்றால் இப்போதே இறந்து விடுவேன் என்று சொல்லி ஆற்றில் விழுந்து போவதற்கும் துணிந்து விட்டார்கள். பேசக்கூடாத வார்த்தைகளை சொல்லி என்னை மிகவும் துன்புறுத்தி துரத்தினார்கள். நான் வேறு வழி இல்லாமல் வந்தேன் என்று லட்சுமணன் சொல்லி முடித்தான். ராமர் பேச ஆரம்பித்தார். நீ சொல்லும் சமாதானத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. பெண்ணாய் பிறந்தவள் பயத்தால் சில நேரம் ஏதேதோ பேசுவாள். அது போல் பெண்ணான சீதையும் பயத்தால் வந்த அஞ்ஞானத்தால் பேசியிருக்கிறாள். அதனை நீ பொறுத்திருக்க வேண்டும். அவளை தனியாக விட்டு நீ எப்படி வரலாம். நீ செய்தது தவறு. சீதையை இனி நான் காணப்போவதில்லை என்று லட்சுமனணிடம் கோபத்தில் பேசிக்கொண்டே ஓடினார். வரும் வழி எங்கும் அபசகுனங்கள் தென்பட்டன. குடிலுக்கு இருவரும் வந்து விட்டார்கள்.
சீதை இல்லாத குடில் சூன்யமாக தென்பட்டது. சீதையை காணாமல் ராமரின் இதயம் உடைந்து அங்கேயே விழுந்தார். மான் தோலும் தர்ப்பையும் சிதறிக்கிடந்தது. தண்ணீர் எடுக்க ஆற்றுக்கு போயிருப்பாளோ என்று ஆற்றுக்கு அருகில் ஓடினார். தோட்டம் செடி கொடிகள் என்று குடிலை சுற்றி சீதையை தேடி ஓடினார். சீதை எங்கும் காணவில்லை. சீதையை எங்கு கொண்டு போனார்களோ? என்ன செய்தார்களோ? எவ்வளவு பயந்து போயிருப்பாள். என்று கண்ணில் நீர் வழிய தன் சுய சிந்தனையை இழந்து சீதை சீதை என்று காட்டில் அங்கும் இங்கும் தேடி பிதற்றிக்கொண்டே ஓடினார் ராமர். எங்கும் சீதையை காணவில்லை. லட்சுமணா சீதையை ராட்சசர்கள் கொன்று தின்றிருப்பார்கள். இனி என் உடலில் உயிர் இருக்காது. தந்தை ஜனகர் இருக்குமிடம் நான் சென்று விடுவேன். நான் இட்ட ஆணையை நிறைவேற்றாமல் இங்கு வந்துவிட்டாயே என்று தந்தை என்னிடம் கோபம் கொள்வார் என்று அழ ஆரம்பித்தார் ராமர். அண்ணா தங்களின் மேன்மைக்கு நீங்கள் இப்படி அழுவது தகாது. இருவரும் காடு முழுவதும் தேடிப்பார்ப்போம். குகைகளிலும் காட்டிற்குள் செல்வதும் ஆற்றில் குளிப்பதும் விளையாடுவதும் தோட்டத்தில் பூக்களுடன் இருப்பதும் சீதைக்கு பிடித்தமான செயல். எங்காவது அருகில் விளையாடிக் கொண்டிருப்பார். நம்மை சோதிக்க இப்படி விளையாடுகிறாள் என்று எண்ணுகிறேன். வாருங்கள் இருவரும் சென்று தேடுவோம் என்றான். இருவரும் காடு மலை ஆறு என்று காடு முழுவதும் தேடினார்கள். சீதை எங்கும் காணவில்லை.
ராமர் சிறிது நேரம் செயல்பட முடியாமல் தவித்தார். லட்சுமணா சீதையை ராட்சசர்கள் கொன்று தின்றிருப்பார்கள். சீதையை இழந்து விட்டேன். என்னை நம்பி வந்தவளை பாதுகாக்காமல் விட்டுவிட்டேன். என்னை போல் ஒரு பாவி உலகத்தில் இல்லை. இனி என் உயிர் எனக்கு வேண்டியதில்லை. வனத்திற்கு சீதையுடன் சென்றவன் ராட்சசர்களுக்கு சீதையை உணவாக கொடுத்து விட்டு தனியாக வந்திருக்கின்றான் என்று மக்கள் பேசுவார்கள். அவர்களுக்கு சமாதானம் சொல்ல என்னால் முடியாது. இனி அயோத்திக்கு தான் போக முடியாது. நீ அயோத்திக்கு சென்று நமது தாயார்களை பார்த்துக்கொள். பரதனிடம் அயோத்திக்கு இனி நீயே அரசன் என்று நான் உத்தரவிட்டதாக சொல்லிவிடு என்று அழது கொண்டே கூறினார்.
ராமருக்கு லட்சுமணன் தொடர்ந்து தைரியம் சொல்லிக் கொண்டே இருந்தான். மனநிலை தெளிவில்லாமல் தைரியம் இழந்தவர்கள் ஒரு செயலையும் செய்ய முடியாது. துக்கத்தை அடக்கிக் கொண்டு மனதை ஒரு நிலைப்படுத்திக் கொள்ளுங்கள். நாம் இந்த காடு மலை குகைகள் என்று அனைத்து திசைகளிலும் தேடுவோம். மகாவிஷ்ணு பலிச்சக்கரவர்த்தியை அடக்கி மூவுலகையும் அடைந்தது போல் நீங்களும் சீதையை நிச்சயம் அடைவீர்கள் என்று சொல்லிக் கொண்டே இருந்தான். இருவரும் சீதையை தேடிக்கொண்டே இருந்தார்கள். அப்போது மான் கூட்டம் ஒன்றின் சகுனங்களை பார்த்த லட்சுமணன் தெற்கு திசை நோக்கி சென்று தேடலாம் வாருங்கள் என்று ராமரை அழைத்துச் சென்றான். வழியில் ஓரிடத்தில் பூக்கள் சிதறிக் கிடந்தது. பூக்களை கண்ட ராமர் இதோ நான் சீதைக்கு கொடுத்த பூக்கள் இங்கே சிதறிக்கிடக்கிறது என்று அழுதுகொண்டே சீதையை தேடி ஓட ஆரம்பித்தார். பூக்கள் இருக்கும் காட்டை சுற்றி தேடிப்பார்த்தார்கள். அங்கு ராட்சசனின் காலடித் தடங்களும் சீதையின் காலடித் தடங்களும் இருந்தன அருகில் சீதை அணிந்திருந்த மணிகள் சிதறிக் கிடந்தது. இதனை கண்ட ராமர் பார்த்தாயா லட்சுமணா சீதையை மிகவும் துன்புறுத்தி இருக்கிறான் ராட்சசன் என்று புலம்ப ஆரம்பித்தார்.
ராமரும் லட்சுமணனும் அந்த இடத்தை சுற்றி ஏதேனும் தடயங்கள் கிடைக்கின்றதா என்று பார்த்தார்கள். அருகில் தேரின் உடைந்த பாகங்களும் தேர் ஓட்டும் ராட்சச சாரதி ஒருவன் இறந்து கிடந்ததையும் கண்டார்கள். இரண்டு ராட்சசர்கள் சீதையை திண்பதற்காக சண்டையிட்டுக் கொண்டிருப்பார்கள் பெரிய சண்டை ஒன்று இங்கு நடந்திருக்கின்றது. இந்த நேரத்தில் ஒரு தெய்வம் கூட சீதையை காப்பாற்ற வரவில்லை. இந்த கொடுமையான உலகத்தை என்னுடைய அஸ்திரங்களால் அழித்து விடுவதே சரியாக இருக்கும் நான் கற்ற அஸ்திரங்கள் பயன்படாமல் போகுமா பார்க்கலாம் என்று ராமர் லட்சுமணனிடம் புலம்பிக்கொண்டே கூறினார். லட்சுமணன் ராமரிடம் பேச ஆரம்பித்தான். உங்களுடைய பெரும் துயரத்தினால் உங்களுடைய இயற்கையான குணங்களை விட்டு விடாதீர்கள். ஒருவன் செய்த துஷ்ட செயலால் உலகத்தை வெறுக்கவோ கோபிக்கவோ தேவையில்லை. நம்முடைய எதிரி யார் என்று முதலில் தெரிந்து கொள்வோம். பிறகு செய்ய வேண்டியதை பற்றி யோசித்து செயல்படுவோம் என்று தைரியம் சொல்லிக்கொண்டே வந்தான். சிறிது தூரத்தில் பறவை ஒன்று சிறகு வெட்டப்பட்ட நிலையில் இரத்ததுடன் துடித்துக்கொண்டிருப்பதை கண்டார்கள்.
குறிப்பு:
ராமாயணம் புராணத்தில் ஆரண்ய காண்டம் பகுதியில் சீதையை இழந்த ராமர் புலம்பி அழுவதை படிக்கும் பலர் விஷ்ணுவின் அவதாரமாக இருக்கும் ராமர் ஏன் அழ வேண்டும். இறைவன் ஏன் துன்பப்படுகின்றார் என்று சந்தேகங்கள் கேட்பதுண்டு. அதற்கான பதில்
சீதை ராமரிடம் சரணடைந்திருப்பதை போல் இறைவனை சரணடைந்திருக்கும் பக்தன் சிறு தவறு செய்து இறைவனை சென்றடையும் பாதையை விட்டு வழி தவறிப் போனால் இறைவனின் திருவுள்ளம் துன்பப்படுகின்றது என்ற கருத்து இந்த இடத்தில் சித்தரிக்கப் பட்டிருக்கின்றது.
ராமர் தூரத்தில் இருந்த ஜடாயுவை பார்த்ததும் அதோ ராட்சசன் சீதையை தின்று விட்டு நம்மை ஏமாற்ற படுத்திருக்கிறான் என்று ராமர் வில் அம்பை எடுத்தார். அப்போது ஜடாயு ராமனே நீ என்னை கொல்ல வேண்டாம் நானே சிறிது நேரத்தில் இறந்து விடுவேன். நீ தேடிக் கொண்டிருக்கும் சீதையை பலவந்தமாக ராவணன் தன்னுடைய மாய ரதத்தில் தூக்கிச் சென்றான். அப்போது ராவணனுடன் சண்டையிட்டு அவனை தடுத்து சீதையை மீட்க முயற்சித்தேன். அவனது தேரோட்டியை கொன்றேன். அவனது தேரையும் உடைத்தேன். அதன் பாகங்களும் இறந்த தேரோட்டியும் அருகில் இருப்பதை பார். சண்டையிட்டு கொண்டிருந்த நான் சிறிது களைப்பாக இருக்கும் போது என் சிறகை ராவணன் வெட்டி விட்டான். எதிர்க்க யாரும் இல்லாமல் சீதையை ஆகாய மார்க்கமாக கொண்டு சென்று விட்டான். சிறகு உடைந்த என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. உன்னிடம் செய்தியை சொல்வதற்காக உயிரை பிடித்துக் கொண்டிருக்கின்றேன் என்று சொல்லி முடித்தான் ஜடாயு.
ராமரின் கண்களில் இருந்து கண்ணீர் ஆறு போல் சுரந்தது. வில்லை வீசி எறிந்தார். ஜடாயுவை கையில் தூக்கி கட்டி அணைத்தார். ராமர் லட்சுமணன் இருவருக்கும் துக்கம் எல்லை கடந்து போயிற்று. ராமர் பேச ஆரம்பித்தார். என்னை போன்ற துர்பாக்கியசாலி யாருமில்லை. தாய் சகோதரன் உறவினர்களை பிரிந்து காட்டிற்கு வந்தேன். இப்போது மனைவியை பிரிந்து துக்கத்தில் இருக்கிறேன். இப்போது தந்தை போல் இருந்த ஜடாயுவையும் இழந்து விட்டேன். தங்களை இழப்பது சீதையை இழந்த துக்கத்தை விட பெரிய துக்கமாக இருக்கிறது. நான் நெருப்பில் விழுந்தாலும் என் துர்பாக்கியமெல்லாம் சேர்ந்து நெருப்பையும் அணைத்து விடும். கடலில் விழ்ந்தால் என் துர்பாக்கியமெல்லாம் சேர்ந்து கடல் நீரும் வற்றிப் போகும். நான் பெரும் பாவி. லட்சுமணா உன்னையும் இழந்து விடுவேனோ என்று பயப்படுகிறேன் என்று சொல்லி ஜடாயுவை கட்டி அணைத்து நீங்கள் சீதையை கண்டீர்களா? அவள் எப்படி இருந்தாள். அந்த ராட்சசன் அவளை மிகவும் கொடுமை படுத்தினானா? சீதை மிகவும் துடித்தாளா என்று கேட்டார். ஜடாயு மரணத்தின் இறுதியில் பேச சக்தியின்றி பேச ஆரம்பித்தான். பயப்படாதை ராமா சீதைக்கு ஒரு பாதிப்பும் வராது. நீ மீண்டும் சீதையை அடைந்து பெரு மகிழ்ச்சியை அடைவாய் என்று சொல்லி உயிர் நீத்தான் ஜடாயு. ராமர் லட்சுமணனிடம் உலர்ந்த கட்டைகளை கொண்டு வா நமது தந்தைக்கு நம்மால் செய்ய முடியாமல் போன கிரியைகளை ஜடாயுவுக்கு செய்வோம் என்றார். இருவரும் ஜடாயுவுக்கு செய்ய வேண்டிய இறுதி கடமைகளை செய்து முடித்தனர். எதிர்பாராத சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்ததினால் ராம லட்சுமணர்கள் இருவரும் இயற்கையான தைரியத்தை இழந்து ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் சொல்லிக் கொண்டு ராவணனை சென்றடைந்து சீதையை எவ்வாறு மீட்கலாம் என்று பேசிக்கொண்டே காட்டுப் பாதையில் சென்று கொண்டிருந்தார்கள்.
ராமருக்கு முன்பாக கபந்தன் என்ற ராட்சசன் கோர உருவத்துடன் வந்தான். அவனுக்கு தலையும் இல்லை கால்களும் இல்லை. மார்பில் ஒரு கண்ணும் பெரிய வயிறும் அதில் வாயும் மிக நீண்ட இரு கைகளுடன் அகோர உருவத்துடன் ராட்சசன் இருந்தான். இரண்டு கைகளையும் நீட்டி கையில் கிடைக்கும் காட்டு விலங்குகளை தின்று உயிர் வாழ்ந்து கொண்டிருந்தான் அந்த ராட்சசன். ராமர் லட்சுமணன் இருவரையும் இரண்டு கைகளால் பிடித்துக் கொண்டான் ராட்சசன். ராமர் லட்சுமணனிடம் நீ ஒரு கையை துண்டு துண்டாக வெட்டிவிடு. நான் ஒரு கையை வெட்டி விடுகிறேன் என்று வெட்ட ஆரம்பித்தார். இருவரும் ராட்சசனின் இரண்டு கைகளையும் வெட்டி விட்டனர். கைகள் வெட்டப்பட்ட ராட்சசன் ஒன்றும் செய்ய முடியாமல் பேச ஆரம்பித்தான்.
ராமரிடம் ராட்சசன் பேச ஆரம்பித்தான். எனது பெயர் கபந்தன். பிரம்மாவை குறிந்து கடுமையான தவம் இருந்து நீண்ட ஆயுளைப் பெற்றேன். நீண்ட ஆயுள் கிடைத்து விட்டது இனி யாராலும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது என்ற கர்வத்தில் இந்திரனை போருக்கு அழைத்தேன். இந்திரனின் ஆயுதத்தால் எனது தலையும் காலும் உடலுக்குள் சென்று விட்டது. நீண்ட ஆயுள் பெற்ற நான் வாய் இல்லாமல் சாப்பிடாமல் எப்படி வாழ்வேன் என்று புலம்பினேன். கால்கள் இல்லாததினால் நீண்ட கைகளையும் வயிற்றுப்பகுதியில் வாயும் கொடுத்து இதே உடலுடன் இருப்பாயாக என்று இந்திரன் என்னை சபித்து விட்டுவிட்டான். இந்திரனிடம் சாப விமோசனம் கேட்டு முறையிட்டேன். ஒரு நாள் ராமர் லட்சுமணன் இருவரும் வந்து உனக்கு விமோசனம் கொடுப்பார்கள் என்று சாப விமோசனமாக கூறினார். தற்போது எனது கையை நீங்கள் வெட்டியதும் எனக்கு பழைய நினைவுகள் வந்துவிட்டது. நீங்கள் தான் ராம லட்சுமணன் என்று எண்ணுகிறேன். எனது உடலை நீங்கள் எரிந்து விடுங்கள். நான் எனது பழைய உடலெடுத்து தேவலோகம் சென்று விடுவேன் என்று கேட்டுக்கொண்டான். ராம லட்சுமணன் இருவரும் காட்டில் விறகுகளை குவித்து அந்த ராட்சச உடலை எரித்துவிட்டனர். அந்த நெருப்பில் இருந்து மங்கள ரூபத்துடன் கபந்தன் வெளியே வந்து ராமரை வணங்கினான். நீங்கள் சீதை தேடிக் கொண்டிருக்கின்றீர்கள். முதலில் பம்பா சரஸ் நதிக்கரைக்கு அருகில் இருக்கும் ரிச்யமுக மலையில் வசித்து வரும் சுக்ரிவன் என்ற வன ராஜாவை சந்தியுங்கள். அவர் தனது அண்ணன் வாலியால் ராஜ்யத்தில் இருந்து துரத்தப்பட்டு காட்டில் வாழ்ந்து வருகிறார். அவரை சந்தித்து அவருடைய நட்பை பெற்றுக் கொள்ளுங்கள். ராட்சசனிடம் இருந்து சீதையை மீட்க அவர் உங்களுக்கு உதவி செய்வார். நீங்கள் நிச்சயமாக சீதையை அடைவீர்கள் என்று சொல்லி தேவலோகம் நோக்கி புறப்பட்டான் கபந்தன்.
ராமரும் லட்சுமணனும் பம்பா சரஸ் நோக்கி சென்றார்கள். பம்பா சரஸ் நதிக்கரைக்கு அருகில் ஆசிரமம் ஒன்று இருப்பதை கண்டு அதன் அருகில் சென்றார்கள். ஆசிரமத்தில் இருந்த வயதான பெண்மணி வந்திருப்பது இறைவனின் அவதாரம் என்பதை தனது ஞான திருஷ்டியில் அறிந்து கொண்டாள். அவர்களை வணங்கி வரவேற்று உணவளித்து உபசாரங்கள் செய்தாள். உபசாரங்களை ஏற்றுக்கொண்ட ராமர் தாங்கள் யார்? இந்த ஆசிரமத்தில் இருந்த ரிஷிகள் எங்கே என்று கேட்டார். அதற்கு அந்த வயதான பெண்மணி எனது பெயர் சபரி. இந்த இடம் மதங்க மகரிஷியின் ஆசிரமம். இங்கிருந்த ரிஷிகள் அனைவரும் தங்களது ஆத்ம சாதனம் முற்றுப்பெற்று சொர்க்கம் சென்று விட்டார்கள். எனது ஆத்ம சாதனம் முற்றுப்பெறும் தருவாயில் எனது குருவானவர் தான் சொர்க்கம் செல்வதற்கு முன்பாக எனக்கு ஓர் உத்தரவிட்டுச் சென்றார். இந்த ஆசிரமத்திற்கு தசரதரின் புதல்வர்கள் ராம லட்சுமணர்கள் வருவார்கள். அவர்களுக்கு உணவு உபசரனைகள் செய்ய வேண்டும் என்று எனக்கு கட்டளை இட்டு சொர்க்கம் சென்றார். தங்களின் வரவிற்காக இத்தனை காலம் காத்திருந்தேன். தங்களை தரிசித்ததில் நான் மேன்மை அடைந்து விட்டேன் என்று சொல்லி ராமருக்கு பரவச நிலையில் வந்தனைகளும் வழிபாடுகளும் செய்தாள். சபரியின் வழிபாடுகளை ராமர் ஏற்றுக்கொண்டார். தனது குருவின் உத்தரவை செயல் படுத்திய சபரி ராமரை தரிசித்த மகிழ்ச்சியில் தனது உடலை விட்டு சொர்க்கம் சென்றாள்.
ராமரும் லட்சுமணனும் பம்பா சரஸ் நதியில் குளித்த பின் புத்தணர்ச்சி பெற்று மனம் தெளிந்திருப்பதை உணர்ந்தார்கள். ராமர் லட்சுணனிடம் நாம் சீதையை மீட்டெடுப்போம் என்ற நம்பிக்கை எனது மனதில் தோன்ற ஆரம்பித்திருக்கிறது. நாம் நிச்சயம் வெற்றி அடைவோம். நாம் அடுத்து ரிச்யமுக மலைக்கு சென்று வன ராஜா சுக்ரீவனை பார்க்கும் முயற்சியில் அடுத்து ஈடு படவேண்டும் விரைவாக சொல்வோம் வா என்று அங்கிருந்து இருவரும் கிளம்பினார்கள்.
ஆரண்ய காண்டம் முற்றியது.
Was this helpful? |
புராணங்கள் |
மகாபாரதம் |
ராமாயணம் |
பகவத் கீதை |
இலக்கியம் |
பன்னிரு திருமுறைகள் |
நாலாயிர திவ்ய பிரபந்தம் |
நாயன்மார்கள் |
ஆழ்வார்கள் |
ரிஷிகள் |
மகான்கள் |
சித்தர்கள் |
தமிழில் சமஸ்கிருத சுலோகங்கள் |
தித்திக்கும் தேவாரம் |
Join Membership |
Book Store |
Astrology |
Radio |