Books / மஹா புராணங்கள்


பாகவத புராணம்

(பகுதி-2)


16. நான்காவது ஸ்கந்தம் : துருவன் கதை

(இது விஷ்ணு புராணத்தில் கூறப்பட்டு உள்ளது)

துருவன் நற்பதம் பெற்றிட உதவிய நாரதர் உத்தானபாதரிடம் சென்று அவன் முகவாட்டத்தின் காரணம் பற்றி வினவ, மன்னன் துருவனை விரட்டியது பற்றி வருந்திட, நாரதர் பகவான் அருள் பெற்ற துருவனைப் பற்றிக் கூறித் தேற்றினார். அப்போது காட்டிலிருந்து திரும்பி வந்த துருவன் தந்தையையும் தாய்மார்கள் இருவரையும் வணங்கினான். உத்தானபாதன் துருவனுக்குப் பட்டாபிஷேகம் செய்வித்து அரசனாக்கி வைராக்கியம் மேற்கொண்டு வனத்திற்குச் சென்றான். துருவனும், அவனது தாயாரும் இறுதியில் திவ்ய பதத்தை அடைந்தனர். துருவனுடைய மகிமையை நாரத முனிவர் பிரசேதர்களுடைய யாகத்திலே புகழ்ந்து பாடினார். உண்மை தத்துவத்தை அறியாத மக்களுக்கு, பகவத் விஷயமான ஞானாம்ருதத்தைப் புகட்டுபவனுக்குத் தேவர்கள் அருள்புரிவார்கள் என்று விதுரருக்கு மைத்ரேயர் கூறினார். அடுத்து மைத்ரேயர் விதுரருக்குப் பிரசேதசர்களைப் பற்றிக் கூறினார்.

17. புரஞ்ஜனன் சரிதம்

ஒருநாள் ஆத்ம தத்துவத்தை அறிந்த நாரத முனிவர் கர்ம மார்க்கத்திலே ஈடுபட்டிருந்த ப்ராசீன பர்ஹிஷதரைப் பார்க்க வந்தார். அவர் அரசனிடம் அழியாத இன்பத்தைப் பெற மோக்ஷ மார்க்கமே சிறந்தது என்றும் கர்மாக்களால் மோக்ஷ சுகம் கிடைப்பது இல்லை என்றும் கூறினார். அதற்கு மன்னன் நாரத முனிவரிடம் தனக்கு மோக்ஷ மார்க்கத்தை உபதேசிக்குமாறு கேட்டுக் கொண்டான். அப்போது மன்னன் புரஞ்ஜனன் கதையைக் கூறினார் : முன்பு புரஞ்ஜனன் என்றொரு மன்னன் இருந்தான். அவன் பெயர் அவிஞ்ஞாதன்.

ஒருநாள் புரஞ்ஜனன் இமயமலைச் சாரலில் சுற்றிக் கொண்டிருக்கும் போது, தெற்குத் தாழ்வரையில் ஒன்பது கோட்டை வாசல்களுடன் கூடிய நகரத்தைக் கண்டான். அதிலே உலாவிக் கொண்டிருக்கும் போது ஓர் அழகிய பெண்மணியைக் கண்டான். அவளுடன் பலப் பெண்மணிகளும், பத்து வேலைக்காரர்களும் இருந்தனர். ஐந்து தலை நாக சர்ப்பம் ஒன்றும் அவளுடன் இருந்து அந்த நகரத்தைக் காத்து வந்தது. அவளைக் கண்டு மயங்கிய மன்னன், அவளுடைய விவரங்களைக் கேட்டான். ஆனால் அவள் அவளைப் படைத்தவரையோ, அந்நகரை அமைத்தவரைப் பற்றியோ அறியாமல் அங்கு வாழ்ந்து வந்தாள். மேலும், அவள் மன்னனிடம் அவன் விரும்பினால் அவளை மணம் புரியலாம் என்றும் கூறினாள்.

அவள் அழகில் மயங்கிய மன்னன், அவளை மணந்து அவள் மோகத்தில் தன் வயது இழந்து, அறிவை இழந்து, அவளுடன் வாழ்ந்து பல மக்களைப் பெற்று, அவர்களுக்கு மணம் செய்வித்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தான். ஆண்டுகள் செல்லச் செல்ல மெல்ல இளமை மறைந்து முதுமையும் வந்தது. அச்சமயத்தில் கால கன்னிகை, ப்ரஜ்வாரன் ஆகிய மிருத்யுவின் சேனா வீரர்கள் அந்நகரை முற்றுகையிட்டுத் தாக்கினர். அதனால் சுகபோகம், செல்வம் அனைத்தையும் இழந்தான் அவன். அப்போது ப்ரஜ்வாரன் என்ற விரோதி அந்நகரத்தை எரிக்க, அதைக் காத்து வந்த சர்ப்பம் ஓடிவிட்டது. நகரமும் அழிந்தது. மரண சமயத்தில் புரஞ்ஜனன் தன் மனைவியின் நினைவிலேயே இருந்ததால் மறுபிறவியில் விதர்ப்ப நாட்டரசனின் மகளாகப் பிறந்தான். அவளை மலயத்வஜ பாண்டியன் வீர கப்பமாகப் பெற்று மணம் செய்து கொள்ள அத்தம்பதியருக்கு ஒரு பெண்ணும், ஏழு புத்திரர்களும் பிறந்தனர். அவர்களே திராவிட நாட்டு மன்னர்களாக இருந்தனர். அந்தப் பெண்ணை அகஸ்தியர் மணந்தார்.

பிறகு மலயத்வஜன் அரசை குமாரர்களிடம் ஒப்படைத்துவிட்டு குலாசலம் என்ற மலைச்சாரலில் சென்று ஸ்ரீ வாசுதேவரை ஆராதித்து வந்தார். அவள் மனைவியும் அவனைப் பின் தொடர்ந்தாள். ஒருநாள் தியானத்தில் மூழ்கியிருந்த மன்னனின் மனைவி அவன் பாதங்களைப் பூசிக்க ஆரம்பித்தாள். மன்னன் மகா சமாதியில் ஆழ்ந்து விட்டான். பாதங்கள் சில்லிட்டன. கணவனுடன் சகமனத்துக்கு முற்பட்டு தீயை வலம் வருகையில் அங்கொரு அந்தண சிரேஷ்டர் தோன்றினார். அவர் முற்பிறவியில் புரஞ்ஜனனின் நண்பனாக இருந்த அவிஞ்ஞாதன். அவன், தாமிருவரும் இணைபிரியாத நண்பர்களாய் அன்னப் பறவைகளாக மானசரோவரத்தில் வசித்ததை நினைவூட்டினான். மேலும் அவர்கள் இருவருமே சுத்த சொரூபிகள் என்றும் அவன் வைதர்ப்பி என்பதும் மாயையே ஆகும் என்றும் கூறினான்.

இவ்வாறு சொல்லப்பட்ட செய்தியைக் கேட்டுப் பெண்ணாகிய முற்பிறவி புரஞ்ஜனன் முன் நினைவு பெற்று தன் உண்மை சொரூப ஞானத்திலே நிலைத்தவனாக ஆனந்தத்தை அடைந்தான். இந்தக் கதையைத் தொடர்ந்து நாரதர், பர்ஹிஷித்ரிடம், ஆத்ம நலனில் ஆசையுள்ள புருஷன் பகவான் வாசுதேவரையே பூசிக்க வேண்டும். அவரது சரித்திரத்தைக் கேட்க வேண்டும். திவ்ய நாமங்களை உச்சரிக்க வேண்டும். அதனால் பக்தி யோகம் நிலைபெற்று ஞானமும், வைராக்கியமும் விருத்தியாகும். அப்படிப்பட்டவர்களுக்குப் பகவான் அனுக்கிரகம் செய்கிறான். ஸ்ரீஹரி சரணங்களையே சரண் அடைந்தவர்களுக்கு சகல நன்மைகளும் கிடைக்கும் என்றார். பிறகு நாரதர் ஜீவாத்மா, பரமாத்மா சொரூபத்தைத் தெளிவாக எடுத்துக் கூறிவிட்டு அவனிடம் விடைபெற்று சித்தலோகம் சென்றார்.

18. பிரியவிரதர் வரலாறு

பிரியவிரதர், மனுவின் மற்றொரு புத்திரர். அவர் ஒரு சமயம் நாரத முனிவரைச் சேவித்து ஆத்ம சொரூப ஞானத்தை சுலபமாக அறிந்து, அதனால் பிரம்ம தியானம் என்ற பிரம்ம ஸத்ரயாகத்தைச் செய்ய விரும்பினார். ஆனால், அவருடைய பிதா ஸ்வயம்புவர் அவரைப் பூமியைப் பரிபாலித்து வரும்படி உத்தரவிட்டார். எனினும், தந்தையின் ஆணையை மறுத்துவிட்டு தவம் செய்யப் புறப்பட்டார். அப்போது அங்கு வந்த பிரம்மதேவர், பிரிய விரத! நீ பத்மநாப சரணாரவிந்தக் கோட்டைக்குள் வசிப்பவன். ஆறு பகைவர்களையும் வெற்றி கண்டவன். ஆகவே, பகவத் கிருபையால் கிடைத்துள்ள சுகபோகங்களை அனுபவித்து இல்லறத்தை நல்லறமாக்கிப் பிறகு ஆசைகளைத் துறந்து, ஆத்ம நிஷ்டையின் ஆனந்தத்தைப் பெறுவாயாக என்று கூறினார். பின்னர், பிரிய விரதர் அவ்விதமாகவே செய்வதாகக் கூறினார். பிரம்மதேவரும் தமது திவ்ய லோகத்துக்குச் சென்றார். மனு மிக்க மகிழ்ச்சியுடன், நாரதர் அனுமதி பெற்று பிரியவிரதருக்குப் பட்டாபிஷேகம் செய்வித்தார். விசுவகர்மாவின் புத்திரி பர்ஹித்மதியை விவாகம் செய்வித்தார். பிரியவிரதருக்கு பத்து புத்திரர்களும், ஊர்ஜஸ்வதி என்ற ஒரு புத்திரியும் பிறந்தனர். அவர்களுள் கவி, மகாவீரன், வைனன் என்ற மூன்று குமாரர்களும் சிறுவயது முதலே ஆத்ம வித்தையில் ஆவலுடையவர்களாகிப் பரமஹம்ஸா சிரமத்தை அடைந்தனர்.

பிரியவிரதர் ஏழு சமுத்திரங்களையும், ஏழு தீவுகளையும் வகுத்து அவற்றில் தனது ஏழு குமாரர்களையும் மன்னர்களாக முடி சூட்டினார். மகள் ஊர்ஜஸ்வதியை அசுரகுரு சுக்கிராச்சாரியருக்கு மணம் செய்து கொடுத்தார். பிரியவிரதருக்கு நாளடைவில் இல்லறத்தில் வெறுப்பு ஏற்பட ஒருநாள் எல்லாவற்றையும் விட்டு விட்டு வைராக்கியத்துடன் ஸ்ரீஹரியின் லீலா வைபவங்களைப் பாடிக்கொண்டு தியானத்தில் ஆழ்ந்து நாரத முனிவரால் உபதேசிக்கப்பட்ட வழியைப் பின்பற்றிச் சென்றார். ஆசிரதரர் பிதாவினால் அளிக்கப்பட்ட ஜம்பூத்வீபத்தை நீதியுடன் ஆண்டு வந்தார். பூர்வசித்தியை மணந்து ஒன்பது புத்திரர்களைப் பெற்று நாட்டை ஒன்பது கண்டங்களாகப் பிரித்து புத்திரர்களிடம் ஒப்படைத்து பூர்வசித்தியுடன் பிரம்மலோகம் சென்றார்.

19. நாபிக்காக மகரிஷிகள் பெற்ற வரம்

அக்ஸிதருடைய மூத்த குமாரன் நாபி என்பவன் மேரு தேவியை மணந்தான். வெகுநாட்கள் புத்திர பாக்கியமின்றி ஸ்ரீமந் நாராயணரை யாகத்தில் ஆராதித்து வழிபட்டு வந்தான். அவன் பக்தி சிரத்தையால் செய்யப்பட்ட பூஜையினால் திருப்தி அடைந்த பகவான், நாபியின் விருப்பத்தை நிறைவேற்ற அவனுக்குத் தரிசனம் தந்தருளினார். அந்த திவ்ய சொரூபத்தைக் கண்ட நாபியும், மற்ற சபையோர்களும் ருத்விக்குகளும் பெருமகிழ்ச்சி அடைந்தனர். ருத்விக்குகள் பகவானைத் துதி செய்தனர். நன்மையைத் தரக்கூடியது எது என்று அறியாத எங்களுக்கு குணநிதியாக விளங்குகின்ற தாங்கள் கருணை கூர்ந்து அனுக்கிரகித்தருள வேண்டும். வரமளிப்பதில் சிறந்தவராகிய தாங்கள், இந்த ராஜரிஷியின் யாகசாலையில் வந்து தரிசனமளித்ததே ஒரு சிறந்த வரம். எனினும், ஒரே ஒரு வரத்தை மட்டும் யாசிக்கிறோம். அனுக்கிரகிக்க வேண்டும்.

பரிசுத்தமாகிய தங்கள் திவ்ய நாமங்கள் எங்கள் நினைவிலே, நாவிலே, எப்போதும் நிலைத்து நிற்க, மரணத்திலும் கூட உன் அருள் தர வேண்டும். உமது லீலா வைபவங்களைக் கூறுகின்ற அந்த திவ்ய நாமங்கள் தானாகவே எங்கள் வாக்கிலே வரவேண்டும். இதோ இந்த ராஜரிஷியானவர் தங்களுக்கொப்பான புத்திரனைப் பெற விரும்புகிறார். நாங்கள் மிக்க அவிவேவிகள். அல்பமான ஆசையை நிறைவேற்றிக் கொள்ள தங்களை இங்கு வரச்செய்து சிரமம் அளித்துவிட்டோம். மன்னிக்க வேண்டும் என்று பிரார்த்தித்தனர். அப்போது பகவான் அவர்களைப் பார்த்து, எனக்குச் சமமானவன் நானே தான். உங்கள் வாக்கு பொய்யாமல் இருக்க இந்த நாபியினுடைய புத்திரனாக, எனது அம்சாவதாரமாக அவதரிக்கப் போகிறேன் என்று அருள்பாலித்து மறைந்தார்.

நாபிச் சக்கரவர்த்தியினாலும், மகரிஷிகளாலும் நன்கு ஆராதித்துப் பூஜிக்கப்பட்ட பகவான் மேருதேவியிடம் சுத்த சத்வமான சரீரத்துடன் அவதரித்தார். தன் விருப்பப்படியே பெற்ற குழந்தைக்கு ரிஷப தேவர் என்று பெயரிட்டு நாபிச் சக்கரவர்த்தி சீராட்டிப் பாராட்டி வளர்த்து வந்தார். மாயையின் காரணமாக சக்கரவர்த்தி பகவானே குழந்தையாகி வந்ததை மறந்து அதனை அன்புடன் வளர்த்து வந்தார். பகவான் ரிஷபதேவரும், குருகுலவாசம் செய்து குருவுக்குத் தக்ஷணை கொடுத்து, அவர் அனுமதி பெற்று இந்திரனால் அளிக்கப்பட்ட ஜயந்தியை மணந்து கிரகஸ்த தர்மங்களை நன்கு அனுஷ்டித்து வந்தார். அவருக்கு மக்கள் நூறு பேர் பிறந்தனர். அவர்களில் மூத்த மகன் பரதன் நல்லாட்சி செய்த காலத்தில் தான் இந்நாடு பாரத தேசம் எனப்பட்டது.

ஒரு சமயம் பிரம்மாவர்த்தம் என்ற திருத்தலத்தில் பிரம்ம ரிஷிகள் கூடியிருக்க, அங்கு ரிஷபதேவர் புத்திரர்களுடன் சென்றார். அப்போது ரிஷபதேவர் அவர்களுக்கு சில அறிவுரைகளைக் கூறினார். அழிவற்ற ஆத்ம சுகத்தையும், சித்த சுத்தியையும் அளிக்கின்ற தபோ மயமான வாழ்விலே ஈடுபட வேண்டும். சாது சங்கமும், சாதுக்களின் சேவையுமே சாலச் சிறந்தது. ஆத்ம சொரூபத்தை அறிந்தவனுக்குக் கர்மபந்தம் ஏற்படுவதில்லை. அஞ்ஞானமே ஆத்ம சொரூபத்தை மறைக்கின்றது. பகவான் ஸ்ரீ வாசுதேவனிடத்தில் தூய பக்தி உடையவர்க்கு சரீர பந்தம் அற்றுவிடும். மனத்திலே திடமான வைராக்கியம் ஏற்படும்போது அகங்காரம் நீங்கி, சம்சார பந்தத்திலிருந்து விடுபட்டு, பரமனைத் தியானித்து பரமபதத்தை அடைகிறான். யோக சாதனைகளாலும், தவ வாழ்வினாலுமே புருஷன் எங்கும் பகவத் சொரூபத்தைக் காண்கின்றான். ஆத்ம ஞானம் பெறகிறான்.

சம்சார பந்தத்தில் உழன்று, துன்பப்படுகிறவனுக்குப் பக்தி மார்க்கத்தை உபதேசித்து, அவனைப் பிறவிப் பிணியிலிருந்து காத்து ரக்ஷிக்க வேண்டும். அப்படிச் செய்யாதவன் குருவுமல்ல; தந்தையுமல்ல; தாயுமல்ல; பதியுமல்ல, தெய்வமுமல்ல; உற்ற பந்துவுமல்ல. உங்கள் சகோதரன் பரதனை அன்புடன் அனுசரித்துப் பொறாமையின்றி, பிரஜைகளை ரக்ஷியுங்கள். அதுவே எனக்குச் செய்யும் பூஜையாகும் என்று ரிஷபதேவர் கூறினார். கருணையுள்ள அவர் மக்களுக்கு ஆத்ம வித்தையையும், பயமுற்ற நிலையையும் உபதேசித்தார். முடிவில் காட்டில் சஞ்சரித்துக் கொண்டு இருக்கையில் காட்டுத் தீயினால் எரிக்கப்பட்டு தனது பூத உடலை நீத்தார்.

20. ஜடபரதர் சரித்திரம்

(ஜடபரதர் சரித்திரம், ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் காண்க)

அஜாமிளன் சரித்திரம்

கன்யாகுப்ஜம் என்ற நகரில் அஜாமிளன் என்றொரு ஒழுக்கம் கெட்ட பிராமணன் இருந்தான். அவன் தீயவன். அவனுக்குப் பத்து புத்திரர்கள் பிறந்தனர். அவர்களை சீராட்டிப் பாராட்டி மகிழ்ச்சியோடு காலம் கழிய அவன் மிக்க முதுமையை அடைந்தான். அவனுக்குக் கடைசி மகன் நாராயணனிடம் அன்பு, பாசம், நாளுக்கு நாள் அதிகம் ஆக அக்குழந்தையைச் சிறிது நேரம் கூட பிரியாமல் இருந்தான். அவன் மரண படுக்கையில் படுத்தான். அவன் உயிரை எடுக்க மூன்று யமகிங்கரர்கள் வந்தனர். அவர்களைக் கண்டு பயந்து அவன் நாராயணா! நாராயணா! எங்கே இருக்கிறாய்! ஓடிவா எனக் கூவி அழைத்தான். இவ்வாறு மரணகாலத்தில் ஸ்ரீஹரி நாமத்தை உச்சரித்தால் விஷ்ணு பாதர்கள் அங்கே வந்து யமதூதர்களைத் தடுத்தனர். அவ்வாறு தடுத்து அவர்களிடம் எந்தச் செயலைச் செய்தவர்கள் யமதண்டனைக்கு உரியவர்கள் என்று விஷ்ணு பாதர்கள் கேட்டனர்.

சாக்ஷõத் ஸ்ரீஹரியே வேதம். வேதம் கூறுவதே தர்மம். எல்லாமே சரீரம் படைத்த ஜீவன்கள். அவை குணங்களின் சேர்க்கையால் நல்ல (அ) தீய செயல்களைச் செய்கின்றன. பிரகிருதியின் தொடர்பினால் இழிவான நிலை ஏற்படுகிறது. பகவானிடம் பற்றுதல்களால் அவை மறைந்து விடும். இந்தப் பிராமணன் காமவசனாகி தர்மத்திலிருந்து நழுவினான். ஒரு வேசியுடன் கூடி பிள்ளைகளைப் பெற்றான். எல்லோரிடமும் நிந்தனை பெற்ற இவனை யமதர்மராஜனிடம் அழைத்துச் செல்லப் போகிறோம் என்றனர் யமகிங்கரர்கள். நாராயணர் என்ற பகவான் நாமத்தைக் கடைசி காலத்தில் கூறுபவனிடம் உள்ள சகல பாபங்களும் நீங்கிவிடுகின்றன. இவன் மரணகாலத்தில் பகவன் நாமத்தை நன்கு உச்சரித்ததால் சகல பாப பரிகாரங்களும் செய்தவனாகிறான். எனவே, இவனை நீங்கள் கொண்டு போக வேண்டாம் என்றனர் விஷ்ணுபாதர்கள். மேலும் இவன் மந்திரத்தின் மகிமையை அறியாமலே சொன்னாலும் அதன் நற்பயனை அடைகிறான். எனவே இவன் பாபமற்றவன் என்றனர்.

இவ்வாறு அஜாமீளன் யமபாசத்திலிருந்து விடுவிக்கப்பட்டான். அவன் விஷ்ணு தூதர்களை வணங்கி ஏதோ சொல்ல நினைக்க அவர்கள் மறைந்து விட்டனர். பின்னர் அவன் தான் செய்த அதர்மங்களை எண்ணி மிகவும் பச்சாதாபப்பட்டான். ஏதோ சிறிதளவு புண்ணியவசத்தால் தேவசிரேஷ்டர்கள் தரிசனம் கிடைத்தது. இனி பகவானின் நாம ஸங்கீர்த்தனத்தில் உள்ளத்தை தூய்மையாக்கி, இதயத்தைப் பகவானுக்கு அர்ப்பணம் செய்கிறேன் என்று எல்லா ஆசைகளையும் துறந்து, கங்காத் துவாரத்துக்குச் சென்றான். அங்கே இந்திரியங்களை அடக்கி யோகத்தை அனுஷ்டித்து, மனதைப் பரமபுருஷனிடமே செலுத்தினான். ஒருநாள் அஜாமிளனுக்கு விஷ்ணு பார்ஷதர்கள் கண்முன் தோன்ற அவர்களைப் பூஜித்து வணங்கி, தன்னுடலை கங்கையில் அர்ப்பணித்து பார்ஷத சரீரத்தைப் பெற்றான். உடனே விஷ்ணு தூதர்களுடன் அவன் பொன் மயமான விமானத்தில் ஏறி, வைகுண்டத்தை அடைந்தான். அகஸ்திய பகவானிடம் இக்கதையைக் கேட்ட சுகப்பிரம்மம் பரீக்ஷித்துக்குக் கூறினார்.

21. சித்திரகேது சரிதம்

சூரசேன தேசத்தரசன் சித்திரகேது. அவன் ஆட்சியில் எங்கும் சுபிக்ஷம் நிலவியது. அவனுக்குப் பல மனைவியர் இருந்தும் புத்திர பாக்கியம் இல்லை. ஒருநாள் அவன் அரண்மனைக்கு ஆங்கிரச முனிவர் வந்தார். அவரை வரவேற்று, அதிதி பூசை செய்து உபசரித்த மன்னன் தனக்குப் புத்திர பாக்கியம் இல்லாத குறையைக் கூறி, அப்பேறு பெற அருள்புரியுமாறு வேண்டினான். அப்போது ஆங்கீரச முனிவர் ஒரு யாகம் செய்து, அந்த யக்ஞ பிரசாதத்தை அவன் பட்டமகிஷியான கிருதத்யுதிக்கு கொடுக்கச் சொன்னார். சில காலம் கழித்து ஒரு புத்திரன் பிறந்தான். சித்திரகேதுவின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. ஆனால், கொடியவர்களான மற்ற பத்தினிகள் பொறாமையின் காரணமாக அக்குழந்தைக்கு விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டனர். அந்தத் துக்கத்தைத் தாங்கமுடியாமல் அரசனும், கிருதத்யுதியும் அழுது புலம்பினர். அவ்வமயம் அங்கு வந்த நாரதரும், ஆங்கீரஸ முனிவரும் அரசனிடம், காலவெள்ளத்தில் உயிர்கள் ஒன்று சேர்ந்து பின்னர் பிரிந்து விடுகின்றன. சரீரம் நிலையற்றது. ஜீவன் மட்டுமே அழிவற்றது. எனவே அஞ்ஞானம் அகற்றி பரமாத்மாவிடம் மனதைச் செலுத்தி ஆறுதல் கொள்க என்று கூறினர்.

சோகத்தினால் நிறைந்த அவன், அவர்களை யார் என்று வினவ, புத்திரனுக்காக யாகம் செய்துவித்த ஆங்கீரச முனிவரேதான் என்றும், அடுத்தவர் நாரதர் என்றும் அரசனுக்கு ஞானம் புகட்டவே வந்ததாகவும் கூறினார். மேலும் சூரசேனன் அவரது உண்மை நிலையை அறிந்து, அமைதி பெற்று பரம புருஷரான வாசுதேவரையே தியானம் செய்து பெருமை அடையுமாறு உபதேசம் செய்தனர். நாரதர் ஒரு மந்திரத்தை உபதேசம் செய்து, இதைச் சிரத்தையாக ஜபித்தால் ஏழு நாட்களில் பகவான் சங்கர்ஷருடைய தரிசனம் கிட்டும். அவர் அனுக்கிரகத்தினால் சோக, மோகங்கள் நீங்கி சாந்தி அடைந்து, ஆனந்தம் கொள்ளலாம் என்றார். பின்னர் அவர் தனது யோக சக்தியினால் மரணமடைந்த அரசகுமாரனை பிழைக்கச் செய்து ஓ! ஜீவாத்மாவே, உனது பெற்றோர் உனது மரணத்தினால் மிக்கத் துயரத்தில் உள்ளனர். நீ மறுபடியும் இந்த உடலிலேயே பிரவேசித்து அரசைப் பெற்று மகிழ்வாயாக என்றார்.

அதற்கு அந்த ஜீவன், பிறவியைப் பெற்ற ஜீவன் நித்தியமானவன். அகங்காரமற்றவன். பெற்றோரிடம் காணப்படும் வரையில்தான் அவர்களுடன் உறவு, ஜீவன் தனது மாயா குணங்களாலேயே தன்னைப் படைத்துக் கொள்கிறான். அவன் எப்போதும் சுதந்தரன். ஆகவே எனக்கும், உங்களுக்கும் எவ்வித உறவும் இல்லை என்று கூறி மறைந்து விட்டது. பின்னர், விவேகம் பெற்ற அரசனுக்கு நாரதர் மந்திர உபதேசம் செய்தார். (ஓம் நமோ பகவதே மஹாபுருஷாய மஹானுபாவாய மஹாவிபூதி பதயே சகல-சத்ய பரிவ்ருட-நிகர-கரகமல-குட்மலோப லாலித சரணார விந்த யுகள பரம, பரமேஷ்டிந்-நமஸ்தே)

சித்திரகேது மந்திரத்தை ஏழுநாட்கள் தண்ணீர் மட்டும் அருந்தி, மிக்க சிரத்தையுடன் ஜபித்து வந்தான். முடிவில் ஜப மகிமையினால் வித்யாதரர்களுக்கு அரசனாகிச் சில நாட்களில் பகவான் ஆதிசேஷருடைய தரிசனம் பெற்றான். அப்போது பகவான் புத்திசாலியான புருஷன் என்னிடத்திலேயே மனதைச் செலுத்திப் பக்தியோகத்தைச் செய்ய வேண்டும். சகல பிரபஞ்சமும், ஆத்மாவும், பரமாத்மாவும் ஒன்றே என்று அறிய வேண்டும். அதுவே ஜீவனுக்கு ÷க்ஷமத்தையும், பிறவிப் பயனையும் அளிக்கக் கூடியது பகவான் அருளி மறைந்து விட்டார். இவ்வாறு சித்திர கேதுவின் வரலாற்றை சுகமுனிவர் பரீக்ஷித்துக்குக் கூறி முடித்தார்.

22. பிரகலாதன் சரித்திரம்

(விஷ்ணு புராணத்தில் காண்க)

23. கஜேந்திர மோக்ஷம்

நாரதர் யுதிஷ்டிரருக்குக் கூறியதை சுகர் பரீக்ஷித்துக்குக் கூறினார் என்று சூத பவுராணிகர் கூறி முனிவர்களுக்கு கூறினார். தாமஸ (நான்காவது) மந்வந்திரத்திலே பகவான் ஹரிமேதஸ் என்பவருக்குப் புத்திரனாகப் பிறந்து, ஹரி என்ற பெயருடன் விளங்கி முதலையால் பிடிக்கப்பட்ட கஜேந்திரனைக் காத்து அருளினார். கஜேந்திரன் முற்பிறவியில் இந்திரத்யும்னன் என்ற பெயரில் பாண்டிய மன்னனாக இருந்தவன். சிறந்த விஷ்ணு பக்தன். ஒரு சமயம் அவன் பர்வதச் சாரலில் ஆசிரமம் அமைத்து அச்சுதனை ஆராதித்து வந்தான். ஒருநாள் அவ்விடம் வந்த அகஸ்திய முனிவரைக் கண்மூடி மவுனியாக இருந்த மன்னன் வரவேற்றுப் பூசிக்கவில்லை. இதனால் கோபம் கொண்ட முனிவர் அவனை யானையாகச் சாபம் கொடுத்தார். முற்பிறவியில் ஹு, ஹு என்ற கந்தர்வன். தேவரிஷியின் சாபத்தால் முதலைப் பிறவியை அடைந்தான்.

திரிகூட மலையினருகே இருந்த அடர்ந்த காட்டில் கஜேந்திரன், தனது யானைக் கூட்டங்களுடன் வசித்து வருகையில் ஒரு சமயம் தண்ணீருக்காக பல இடங்களில் அலைந்து திரிந்து கடைசியில் மலையடிவாரத்திலுள்ள குளத்தை அடைந்து, நீரில் இறங்கி விளையாடிக் கொண்டிருக்கையில் அந்தக் குளத்திலிருந்து பலசாலியான முதலை யானையின் காலை கவ்விப் பிடித்துக் கொண்டது. பின்னர் கஜேந்திரன் தன்னை விடுவித்துக் கொள்ள முடியாமல் தவித்தது. முதலையைக் கரைக்கு இழுக்க, முதலை யானையை நீரில் இழுக்க இவ்வாறு பல ஆண்டுகள் கடந்தன. தன் பலம் முழுவதும் இழந்து சோர்ந்த நிலையில் கஜேந்திரன், முற்பிறவியின் பயனாக ஸர்வலோக சரண்யனாகிய ஸ்ரீவிஷ்ணுவைத் தியானித்து துதி செய்தது.

பக்தனாகிய கஜேந்திரனின் துயரைக் கண்ட பகவான், கருடாரூபராய் சக்கராயுதத்துடன் தோன்றினார். கஜேந்திரன் தாமரை மலருடன் கூடிய துதிக்கையைத் தூக்கி நாராயணா, ஆதிமூலமே, பகவானே என்று நமஸ்கரித்தார். உடனே பகவான் சக்கராயுதத்தால் முதலையைக் கொன்று கஜேந்திரனைக் காத்தருளினார். முதலையும் திவ்ய சரீரம் பெற்று பகவானை வணங்கித் துதி செய்தது. கஜேந்திரனும் பகவத் சொரூபத்தைப் பெற்று விஷ்ணு பார்ஷதனாயிற்று. அப்போது பகவான், உதய காலத்தில், தூய மனதுடன் கஜேந்திரன் செய்த துதிகளைப் பாடி ஆராதிக்கிறவர்களுக்கு மரண சமயத்தில் நல்லறிவைத் தருகிறேன் எனக்கூறி மறைந்தார்.

24. அம்ருத மதனம், தேவாசுர யுத்தம்

ஐந்தாவது மனு ரைவதரின் மன்வந்தரத்திலே பகவான் வைகுண்டன் என்ற நாமத்தோடு அம்சாவதாரமாகத் தோன்றினார். சாக்ஷúஷர் என்பவர் ஆறாவது மனுவாக இருந்தபோது மகாவிஷ்ணு அஜுதர் என்ற பெயரில் அவதரித்துப் பாற்கடலைக் கடைந்த தேவர்களுக்கு அம்ருதத்தை வழங்கினார்.

கூர்மாவதாரம் : துர்வாசருடைய சாபத்தால் இந்திரன் செயலற்று இருந்தபோது, தேவர்கள் அசுரர்களால் தாக்கப்பட்டுத் தோல்வி அடைந்து உயிரற்றவர்களாக விழுந்தனர். இதனால் மனம் கலங்கிய தேவர்கள் பிரம்மாவுடன் சென்று ஸ்ரீஹரியிடம் சரணடைந்தனர். அப்போது பகவான், உடனே தாமதமின்றி பாற்கடலைக் கடைந்து அம்ருதத்தை அடைய முயற்சி செய்யுங்கள். அந்த அம்ருதத்தைப் பருகியவன் மரணமற்ற அமர நிலையைப் பெறுவான். சகல ஓஷதிகளையும் பாற்கடலில் இட்டு, மந்திர மலையை மத்தாக வைத்து, வாசுகியைக் கயிறாகக் கொண்டு கடையுங்கள் நான் உங்களுக்கு உதவி செய்கிறேன் என்று திருமால் மலர்ந்தருளினார். பின்னர், அசுரராஜனைச் சந்தித்து, நயமாகப் பேசி, சம்மதிக்கச் செய்து, அவன் இஷ்டப்படி ஒப்புக்கொண்டு செயல் புரியுங்கள். மற்றும் அம்ருத மதனத்தின் போது தோன்றும் பொருள்களின் மீது ஆசை கொள்ளாதீர். முதலில் ஆலகால விஷமே தோன்றும் அஞ்சவேண்டாம் என்றார்.

பகவான் கூறியபடியே மகேந்திரன், அசுர அரசன் பலிச்சக்கரவர்த்தியுடன் சிநேகத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டான். பலனில் பங்கு தருவதாகக் கூறி, வாசுகியை நாணாகக் கொண்டு, மந்திர மலையை மத்தாக்கி, பாற்கடலைக் கடைந்தனர். தேவர்களும், ஸ்ரீஹரியும் வால்பக்கமும், அசுரர்கள் முன்பக்கமும் பிடித்துக் கொண்டு கடைந்த போது, மலை கடலில் மூழ்கிவிட அனைவரும் உற்சாகமின்றி இருப்பதைக் கண்ட பகவான் ஓர் ஆமை வடிவில் மந்திரமலையை மேலே தூக்கி நிறுத்தினார். இதுவே கூர்மாவதாரம். கடலிலிருந்து மிகக் கொடிய ஆலகால விஷம் தோன்றிட, அதனை ஜகத்ரக்ஷகராகிய சதாசிவன் உட்கொண்டு அனைவரையும் ரக்ஷித்தார். இதனால் அவர் கழுத்து நீலமாகி நீலகண்டன் என்ற பெயர் பெற்றார். அடுத்து காமதேனு தோன்ற யாகங்களுக்கு உதவியாக இருக்கும் என்று காமதேனுவை ஏற்றுக் கொண்டனர். அடுத்து தோன்றியவை உச்சைசிரவஸ் என்ற வெள்ளைக் குதிரை, ஐராவதம் என்ற யானை, பாரிஜாதம் என்ற கற்பக விருக்ஷம், பின்னர் தோன்றிய சாக்ஷõத் லக்ஷ்மி தேவி, வனமாலையைக் கையிலேந்தி பகவான் முகுந்தரையே தனது பதியாக வரித்தாள். அவளை ஸ்ரீஹரி தனது மார்பிலே ஏற்றுக் கொண்டனர்.

ஸ்ரீதேவியின் அருளைப் பெற்ற தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஸ்ரீலக்ஷ்மியை அலட்சியம் செய்த அசுரர்கள் சக்தி இழந்தனர். முயற்சி குறைந்தனர். அதிக ஆசையால் வெட்கமடைந்தனர். பிறகு வாருணி என்ற கன்னிகை தோன்றினாள். அவளை அசுரர்கள் ஏற்றனர். மேலும் கடையும்போது ஸ்ரீமகாவிஷ்ணுவின் அம்சமான ஓர் அழகன் அம்ருத கலசத்தை ஏந்தி வந்தார். அவர் யஜ்ஞ பாகத்திற்குரியவர். ஆயுர்வேதத்தை நன்கு அறிந்தவர். அவரே தன்வந்திரி எனப்படுபவர். அசுரர்கள் அவரிடமிருந்து அம்ருத கலசத்தையும் அபகரித்துக் கொண்டனர். தேவர்கள் மனமுடைந்து ஸ்ரீஹரியைச் சரணமடைய, அவர் கலக்கம் வேண்டாம். அம்ருதம் உங்களுக்குக் கிடைக்கும் எனக் கூறி மறைந்தார். அப்போது அம்ருதத்திற்காக அசுரர்கள் தமக்குள்ளேயே போட்டிபோட, அங்கே ஓரழகி தோன்றி இங்குமங்கும் சஞ்சரிக்க, அவளைக் கண்டு அசுரர்கள் பிரமித்து நின்றனர்.

அந்த அழகி மகாவிஷ்ணு கொண்ட மோகினி அவதாரம். அவளைக் கண்டு மோகித்த அசுரர்கள் அம்ருதத்தைத் தங்களுக்குப் பங்கிட்டுத் தருமாறு அந்த மோகினியிடம் அமிர்த கலசத்தைக் கொடுத்து விட்டனர். அப்போது அவள் அசுரர்களிடம் தன் செயலுக்குத் தடை செய்யக்கூடாது என்று புன்சிரிப்புடன் கூற, அவர்கள் சம்மதத்தை ஒரே வாக்காகக் கூறினர். பின்னர் மோகினி தன் செயல்களால் அசுரர்களை மயக்கி, ஏமாற்றி அமிர்தம் முழுவதையும் தேவர்களுக்கே பங்கிட்டாள். தேவர்கள் எல்லோர்க்கும் அமிர்தம் கிடைத்தபோது மோகினி திடீரென்று மறைந்துவிட்டாள். இதனால் கோபம் கொண்ட அசுரர்கள் கொதித்தெழுந்திட தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பயங்கரப் போர் நடந்தது. அது தேவாசுர யுத்தம் என்று அழைக்கப்படுகிறது.

அப்போது பிரம்ம தேவர் நாரத முனிவர்களைத் தேவர்களிடம் அனுப்ப, அவர் தேவர்களிடம் அமிருதபானம் செய்த அவர்கள் இனி பெருமையுடன் வாழப் போவதால் யுத்தத்தை நிறுத்துமாறு சொல்ல யுத்தம் நின்றது. அசுரர்களும் நாரதருடைய சொற்கேட்டு தமது அரசனான பலி மகாராஜனை அழைத்துக் கொண்டு, அஸ்தாசலமென்ற மலைக்குச் செல்ல, அங்கு அவர்கள் குரு சுக்கராச்சாரியால் ஸஞ்ஜீவினி என்ற மந்திரத்தினால் பலியையும், அவயங்களை இழந்த அசுரர்களையும் பிழைக்கச் செய்தார். தன்னை சரணடைந்த தேவர்களுக்கு அம்ருதத்தை அளித்தவரும், அசுரர்களை மோகிக்கச் செய்தவரும், துஷ்டர்களால் அடையக் கூடியவருமாகிய ஸ்ரீஹரியை நமஸ்கரிக்கின்றேன் என்று கூறி வசுதேவர் வணங்கினார்.

25. வாமனாவதாரம்

சிரார்த்த தேவன் ஏழாவது மனுவாக இருந்த மந்வந்தரத்தில் ஸ்ரீமகாவிஷ்ணு கச்யபருடைய கடைசி புத்திரராக அவதரித்தார். அனைத்தையும் இழந்த பலிச்சக்கரவர்த்தி குருவினுடைய மந்திர சக்தியினால் உயிர் பிழைத்தான். அவன் தன் குருவையும், பிராமண சிரேஷ்டர்களையும், பக்தி சிரத்தையுடன் சேவித்து வந்தான். அதனால் மகிழ்ச்சி பெற்ற பிருகு குல அந்தணர்கள் பலிக்கு மகாபிஷேகம் செய்து வைத்து விஸ்வஜித் என்ற மஹாயஜ்ஞத்தையும் செய்து வைத்தனர். அந்த யாகத்திலிருந்து ஒரு தங்கமய ரதம், வெண்ணிறக் குதிரை, சிம்மக்கொடி, வில், அக்ஷயதூணீரம். அழகான கலசம் ஆகியவை பலிக்குக் கிடைத்தன. இவ்வாறு பிராமணர்களின் அனுக்கிரகத்தால் கிடைத்த, போருக்கு உபயோகமான பொருள்களைக் கண்டு மகிழ்ச்சியுற்ற பலி, குருவை வணங்கி தேவர்கள் மீது போருக்குப் புறப்பட்டான். இந்திரனின் தலைநகர் அமராவதியை முற்றுகை இட்டான். இதைக் கேட்ட இந்திரன் குருவை வணங்கிட, அவர் கூறிய ஆலோசனைப்படி ஸ்ரீஹரியே இவனை வெல்ல வல்லவர். மேலும் சிலகால மிருந்துப் பின் பலி பிராமணர்களை அவமதித்து, அதன் காரணமாய் நாசமாவான் என்றார்.

தேவர்களின் நிலைக்கு வருந்திய தேவமாதா அதிதி, ஸமாதி கலைந்து தன் ஆசிரமத்துக்கு வந்த காசியபரை வணங்கி தமது புத்திரர்களாகிய தேவர்கள் சுவர்க்க சுகம் பெற்று புகழுடன் வாழ அனுக்கிரகிக்குமாறு வேண்டிக்கொண்டாள். அப்போது காசியபர் அதிதியிடம் தீனரக்ஷகரான பகவான் ஸ்ரீஹரியே உனது ஆசையைப் பூர்த்தி செய்வார். ஆகவே, ஜனார்த்தனரை ஆராதிப்பாயாக. அதற்காக பயோவிரத மென்ற சிறந்த விரதத்தை அனுஷ்டித்து பகவானை ஆராதிப்பாயாக என்று கூறி அதற்கான விதிமுறைகளையும் அறிவித்தார். அதிதி தேவியும் கணவன் உபதேசித்தபடி மிகச் சிரத்தையாக பயோ விரதத்தை அனுஷ்டிக்க, பகவான் அவளுக்குத் தரிசனம் தந்தார். அப்போது அவரை அதிதி அன்புடன் பலவாறு துதி செய்தாள். அப்போது பகவான் தானே அதிதியின் புத்திரனாக அவதரித்துத் தேவர்களைக் காப்பதாக வாக்களித்து மறைந்து, விட்டார். அதன்படி பகவான் ஆவணி மாதம், சுக்ல பக்ஷம், துவாதசித்தி, சிரவண நக்ஷத்திரம் கூடிய சுபதினத்தில், அபிஜித் முகூர்த்தத்தில் அதிதி தேவியின் கிரகத்தில் அவதரித்தார். அந்த நாளை விஜய துவாதசி என்பர். இந்த அவதாரமே வாமன அவதாரம் எனப்படுகின்றது.

அந்தக் குழந்தைக்கு உகந்த வயதில் உபநயன மகோத்சவம் சிறப்பாக நடைபெற்றது. சின்னஞ்சிறு பாலகனான வாமன பிரம்மச்சாரி மிக்க ஒளியுடன் விளங்கினார். அதே சமயத்தில் பலிச்சக்கரவர்த்தி, நர்மதா ஆற்றங்கரையில் பிறகுமுச்சம் என்ற ÷க்ஷத்திரத்தில் பெரியதொரு அசுவமேத யாகத்தைச் செய்து கொண்டிருந்தான். வாமன மூர்த்தியாகிய பகவான் அந்த யாகசாலைக்குச் சென்றார். அவரைக் கண்ட அனைவரும் எழுந்திருந்து, அவரை எதிர்கொண்டு வரவேற்று உபசரித்தனர். மகாபலிச் சக்கரவர்த்தியும் மிகவும் மகிழ்ச்சி அடைந்து, அவருக்கு ஓர் உயர்ந்த ஆசனம் அளித்து, பூசித்து, அன்புடன் நல்வரவு கூறினான். மேலும், அவருக்குத் தான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான். தவமே உருவான அவர் வரவால் பித்ருக்கள் திருப்தி அடைந்தனர் என்றும், அந்த யாகமும், அவர்கள் குலமும் சபலமடைந்தன என்றும் கூறினான் பலி. அவர் எதை வேண்டினும் அதனைக் கொடுக்கத் தயாராக இருப்பதாகக் கூறினான் பலி. அப்போது வாமன மூர்த்தி அவனிடம் வரம் தருவதில் சிறந்த தங்களிடம் எதுவும் அதிகமாகக் கேட்கவில்லை. எனது பாதத்தால் மூன்றடி மண்மையே யாசிக்கிறேன் என்று கூறினார். மேலும் கிடைப்பதைக் கொண்டு திருப்தி அடையும் பிராமணனுக்கு தபோசக்தி பெருகும் என்று சொல்லித் தனக்கு மூன்றடி மண்ணே போதுமானது என்றார்.

வாமனர் விரும்பியவாரே மூன்றடி மண் தர மகாபலி வெகு மகிழ்ச்சியுடன் தானமளிக்க, தீர்த்த பாத்திரத்தைக் கையில் எடுத்துக் கொண்டார். அப்போது குலகுரு சுக்கிராச்சாரியார், வந்திருப்பவர் மகாவிஷ்ணு. தேவர்களுக்கு உதவவே வந்துள்ளார் என்று கூறி பலிக்கு எச்சரிக்கை செய்தார். அதுகேட்ட மகாபலி குருவை வணங்கி, தான் சத்தியம் தவறுவதில்லை என்றும், தானம் தருவதாகக் கூறி பிராம்மணர்களை ஏமாற்றுவதால் வரும் அபகீர்த்திக்கே தான் பயப்படுவதாகவும், சிறந்த தான பாத்திரமாகிய பிரம்மச்சாரியின் இஷ்டத்தைப் பூர்த்தி செய்யப் போவதாகவும் கூறினான். மேலும் மகாவிஷ்ணுவே வாமனராக வந்திருப்பது உண்மையாயின் அது ஒரு நல்ல சந்தர்ப்பம், அதிருஷ்டம் ஆகும் என்றான். இதனால் கோபம் கொண்ட குரு பலியைச் செல்வம் அனைத்தும் இழப்பாய் என்று கூறிச் சாபம் இட்டார். எனினும் மகாபலி, மனைவி விந்தியாவளி, அருகிலே தீர்த்தம் தர பகவானுடைய சரணங்களைக் கழுவி, அந்நீரைத் தலையிலே தெளித்துக் கொண்டான். அவ்வமயம் வாமன மூர்த்தி ஓங்கி உலகளக்கும் உத்தமனாக வளர்ந்தார். பலியினுடைய பூமியை ஓரடியாலும், இரண்டாவது அடியால் மேலுலகையும் அளந்து, மூன்றாவது அடியை வைக்க இடமின்றி பலியிடம் கேட்க பலிச்சக்கரவர்த்தி தனது சிரசிலே வாமனின் மூன்றாவது அடியை வைக்குமாறு கூறிட பகவான் அவ்வாறே செய்து அவனை ரக்ஷித்தார்.

அவ்வமயம் அங்கு வந்த பக்தன் பிரகலாதன் பகவானிடம் பலிக்கு இந்திர பதவியை அளித்த அவரே அதனைப் பறித்துக் கொண்டு, அதுவே அவன் ஆத்மாவை அறியத் தடையாக இருந்ததெனக் கூறி பகவானுடைய உபசாரத்தைப் புகழ்ந்து ஆனந்தக் கண்ணீர் பெருக, பூமியில் விழுந்து வணங்கினார். அப்போது அங்கே வந்த பிரமனும், பலி தூய உள்ளத்துடன் தானம் செய்திருப்பதால் தண்டிக்கத்தக்கவனல்ல என்று கூறினார். அவ்வமயம் பகவான் ஐஸ்வர்யம் பெற்ற ஒருவன் தெய்வத்தை அவமதிக்கிறான். மற்றவர்களையும் அலக்ஷியம் செய்கிறான். எனவே நான் அருள எண்ணும் ஒருவனுடைய செல்வங்களை அபகரித்துக் கொள்கிறேன் என்று கூறினான். செல்வங்கள் இருப்பினும் என்னிடம் பக்தியுள்ளவனுக்கு அவற்றின் மீது மோகம் உண்டாவதில்லை. பலி மாயையைக் கடந்தவன். துன்பம் கண்டு கலங்காதவன். தர்ம நெறியில் நிற்பவன். எனவே எட்டாவது மன்வந்திரத்தில் இந்திரனாக இருக்கப் போகிறவன். அதுவரையில் ஸுதல லோகத்தில் சுகமாக வசிக்கட்டும் என்று கூறிட பலி ஆனந்தமாக பகவானை வணங்கி ஸுதல லோகம் சென்றான்.

இவ்வாறு வாமனர் இந்திரனுக்கு மீண்டும் சுவர்க்கத்தை அளித்து அதிதி தேவியின் ஆசையைப் பூர்த்தி செய்தார். இந்திரன் மகிழ்ச்சியோடு பயமின்றி சுகபோகங்களை அனுபவித்து வந்தான். இந்த வாமனாவதாரக் கதையைச் சிரத்தையுடன் கேட்பவன், படிப்பவன், சொல்கிறவன் உன்னத பதவியை அடைவான் என்று சுகமுனிவர் பரீக்ஷித்திடம் கூறினார்.

மதஸ்யாவதாரம்

சென்ற கல்பத்தின் முடிவில் நைமித்திக பிரளயம் ஏற்பட்டபோது வேதங்கள் பிரம்மாவினிடமிருந்து நழுவிட அதனை ஹயக்ரீவன் என்ற அசுரன் அபகரித்துச் சென்றான். விஷ்ணு பக்தனான ஸத்ய விரதன், விவஸ்புவானுவின் குமாரனாய் சிரார்த்த தேவனாகப் பிறந்து, பகவானால் மனுவாக நியமிக்கப்பட்டு வைவஸ்வத மனு என்ற பெயருடன் விளங்கினார். ஸத்ய விரதன், கிருத மாலா நதியில் நீராடி ஜலதர்ப்பணம் செய்யும்போது அவருடைய அஞ்ஜலியில் காணப்பட்ட சிறு மீனை அரசன் நீரில் விட்டான். அப்போது அது ஜலஜந்துக்களிடம் பயந்து கையில் வந்த தன்னை மறுபடியும் நீரில் விடலாமா என்று கேட்க, அவரும் அம்மீனை தனது கமண்டலத்தில் உள்ள நீரில் போட, அது அந்த இரவில் பெரிதாகி கமண்டலத்தில் இருக்கமுடியாமல் தவிக்க, அதனை ஒரு பெரிய குளத்தில் விட்டார் அரசன். விரைவிலேயே அது வளர்ந்து விட அதனை மடுவிலும் இறுதியில் சமுத்திரத்திலும் விட்டார் அவர். கடலில் மகரம் விழுங்கிவிடுமே என்று சொல்ல, அரசர் வியப்புற்று அதனை நோக்கி, இவ்வாறு வளரும் நீர் ஸ்ரீமந் நாராயணரே என்று கூறி உலகைப் படைத்து, காத்து, அழிப்பவரே நமஸ்காரம். இந்த வடிவம் ஏன்? என்று வினவினார்.

அப்போது பகவான் கூறினார். இன்று முதல் ஏழாவது நாள் முடிந்ததும் பிரளயத்தில் மூவுலகும் மூழ்கி விடும். அச்சமயம் வரும் பெரிய படகில் ஓஷதிகள் அனைத்தையும், எல்லாப் பிராணிகளையும், சப்தரிஷிகளையும் ஏற்றி நீயும் அதில் அமர்ந்து சஞ்சரிப்பாய். அச்சமயம் எனது அனுக்கிரகத்தால் பரப்பிரம்ம சொரூபம் உனது உள்ளத்தில் விளங்கும் என்று கூறி மறைந்துவிட அரசன் அக்காலத்தை எதிர்பார்த்திருந்தான். அதே மாதிரி தக்க சமயத்தில் ஓடம் வருவதைக் கண்ட அரசன் பகவானைத் தியானித்த வண்ணம் அதில் ஏறினான். ஆதி மூர்த்தியாகிய பகவான் லக்ஷம் யோஜனை பரப்புள்ள பொன் மீனாகக் காட்சி அளித்தார். பகவான் மத்ஸ்ய ரூபத்தில் விளையாடிக் கொண்டே கர்ம யோகம், சாங்க்ய யோகம், ஆகியவற்றைக் கூறும் புராணத்தை, ஆத்ம ரகசியத்தை உபதேசம் செய்தார். அதுவே மச்ச புராணம் ஆகும். ஸத்யவிரதன் ஓடத்திலிருந்தவாறே உபதேசத்தைப் பக்தி சிரத்தையுடன் சிரவணம் செய்து பிரம்ம சொரூபத்தை அறிந்தார். பகவான் ஹயக்ரீவனைக் கொன்று வேதங்களை பிரம்மனிடம் ஒப்படைத்தார்.

26. பக்த அம்பரீஷன்

சாஸ்திர ஞானியும், சத்திய சீலருமான நாபாகனின் புத்திரன் அம்பரீஷன். அம்பரீஷன் பூமண்டலாதிபதியாக இருந்த பாக்கியசாலி. அவன் பற்றற்றவனாக வைராக்கிய சீலனாக இருந்து பகவான் ஸ்ரீவாசுதேவரிடமும், அவருடைய பக்தர்களிடமும் அன்பு, பக்தி கொண்டு நீதியொடு நாட்டை ஆண்டு வந்தான். அவர் திரிகரணத் தூய்மையுடன் ஸ்ரீஹரியையே தியானித்து, ஸ்ரீசரண துளசியை முகர்ந்து, ஹ்ருஷிகேசருடைய பாதங்களில் வணங்கி, பகவானுக்கு நைவேத்தியம் செய்த அன்னத்தையே புசித்தார். இவ்வாறு அம்பரீஷனின் பக்தியால் பக்தி அடைந்த பகவான் பக்தர்களைக் காக்கும் சக்கராயுதத்தை அவருக்கு அளித்தார். ஒரு சமயம் அம்பரீஷன் கார்த்திகை துவாதசியன்று மதுவனம் சென்று யமுனையில் நீராடி, மூன்று நாள் உபவாசம் இருந்து, சிரத்தையுடன் ஸ்ரீஹரியைப் பூசித்தார். ஸ்ரீகேசவ பக்தர்களை உபசரித்து வணங்கி, அறுசுவை அன்னமிட்டு பசுக்களைத் தானமாக வழங்கினார்.

பிறகு அவர் பாரணை செய்ய முற்பட்டபோது துர்வாச மகரிஷி அங்கு அதிதியாக வந்தார். அம்பரீஷனும் அவரை வரவேற்று, உபசரித்து போஜனத்திற்கு அழைக்க அவர் நித்யகர்மானுஷ்டானங்களை முடித்துக் கொண்டு வருவதாகக் கூறி யமுனா நதிக்குச் சென்றார். நேரம் கடந்து கொண்டிருக்க அவன் அதிதியை விட்டுப் போஜனம் செய்யக் கூடாதென்றும், பாரணை வேளையை மீறுவதும் சரியல்ல என்பதால் பிரமாணர்களின் ஆலோசனைப்படி சுத்த தீர்த்தத்தை அருந்தி பாரணையை முடித்துக் கொண்டு, முனிவர் வரவை எதிர்நோக்கி இருந்தார். திரும்பி வந்த துர்வாச முனிவர் அம்பரீஷன் செயலை அறிந்து மிக்கக் கோபம் கொண்டு தனது தொடையிலிருந்து ஒரு துர்த்தேவதையை உண்டாக்கி அரசன் மீது ஏவினார். அரசனோ எவ்வித அச்சமின்றி ஹரி பஜனையில் ஆழ்ந்து விட்டார். பக்தர்களைக் காக்கும் சக்கராயுதம் அப்பிசாசைப் பொசுக்கி துர்வாசரையும் துரத்தியது. இதனால் பயந்த முனிவர் பிரம்மா, சிவபெருமான், ஸ்ரீமந்நாராயணன் ஆகியோரிடம் சரண் புகுந்து காத்தருள வேண்டினார். அப்போது விஷ்ணு தான் பக்த பராதீனன் என்றும், பக்தர்களுக்கு அடிமையென்றும் கூறி, முனிவரிடம் பகவத் பக்தனான அம்பரீஷனிடமே சென்று மன்னிப்பு கேட்டு, சாந்தி பெறுமாறு அறிவுரை வழங்கினார்.

பகவானுடைய சொற்களைக் கேட்ட துர்வாச முனிவர் வேறு வழியின்றி அம்பரீஷனிடமே சென்று சரணடைய, மன்னன் முனிவரைக் காப்பாற்றுமாறு சுதர்சனிடம் பிரார்த்தித்தார். சக்கராயுதமும் அம்பரீஷன் பிரார்த்தனையை ஏற்று சாந்தமடைந்தது. முனிவர் வியந்து அம்பரீஷனைப் புகழ்ந்து கொண்டாடினார். பிறகு அரசன் முனிவரை வணங்கி போஜனமளித்து அவர் அனுமதியுடன் பாரணையை முடித்தார். அப்போது முனிவர் தான் திருப்தி அடைந்ததாகவும் மன்னனின் கீர்த்தியைத் தேவர்களும், மனிதர்களும் கானம் செய்வர் என்றும் கூறி ஆசிர்வதித்து பிரம்மலோகம் சென்றார். அம்பரீஷன் தனது அரசரைப் புத்திரர்களிடம் ஒப்புவித்து, சம்சாரச் சுழலிலிருந்து விடுபட்டு, கானகம் சேர்ந்து பகவான் வாசுதேவரிடமே மனதைச் செலுத்தி தியானித்து நற்பேறு பெற்றான்.

27. ஸ்ரீராம சரிதம்

அடுத்து சுகமுனிவர் பரீஷித்துக்கு பகவானின் இராமாவதார வரலாற்றினை உரைக்கலானார். இக்ஷ்வாகு குலத்தில் தோன்றிய தசரதனுக்கு பல மனைவியர்களும், மூன்று பட்ட மகிஷிகளும் இருந்தனர். ஆனால் புத்திரப் பேறில்லை. எனவே தசரதன் கலைக்கோட்டு மாமுனிவரைக் கொண்டு புத்தர காமேஷ்டியாகம் செய்ய, யாக அக்கினியிலிருந்து தோன்றிய புருஷன் ஒரு பாயசக் கலசத்தைக் கொடுக்க தசரதன் அதிலிருந்த பாயசத்தைத் தன் மனைவியர் மூவர்க்கும் கொடுக்க கோசலை ராமனையும், கைகேயி பரதனையும், சுமித்திரை இலட்சுமணன், சத்ருக்னன் என்ற இருவரையும் பெற்றெடுத்தனர். குருகுலத்தில் வித்தைகள் கற்று முடித்தனர் நால்வரும். ஒருநாள் விசுவாமித்திரர் தசரதனிடம் வந்து தன் யாக சம்ரக்ஷணார்த்தம் ராம லக்ஷ்மணர்களை அனுப்புமாறு கேட்க, குலகுரு வசிஷ்டர் அறிவுரையை ஏற்று மக்கள் இருவரையும் அனுப்பி வைத்தார் தசரதன்.

ராம லக்ஷ்மணர் வழியில் கண்ட தாடகி என்னும் அரக்கியைக் கொன்று யாக சாலையில் இடையூறு செய்த சுபாஹு, மாரீசன் இருவர்களின் மீதும் பாணம் தொடுக்க சுபாகு கொல்லப்பட்டான். மாரீசன் ஓடி ஒளிந்து கொண்டான். ராம லக்ஷ்மணர்களுடன் விசுவாமித்திரர் மிதிலைக்குப் பயணமாக வழியில் சாபத்தால் கல்லாகி இருந்த அகலிகைக்கு ராமன் சாபவிமோசனம் அளித்து அவளை அவள் கணவராகிய கவுத முனிவரிடம் ஒப்படைத்து, மிதிலையை அடைந்தனர். அங்கு சிவதனுசை முறித்து ராமன் சீதையை மணம் புரிந்தான். பின்னர் மூன்று தம்பிமார்களுக்கும் திருமணம் நடைபெற அனைவரும் அயோத்திக்குப் பயணமாக வழியில் பரசுராமரின் கர்வத்தை அடக்கி வெற்றி கொண்டார் ஸ்ரீராமர். நாடு திரும்பிய பின் தசரதர் ஸ்ரீராமனுக்கு முடிசூட்ட விழைகையில் கைகேயி முன்பு கணவன் தனக்களித்த வரங்களில் ஒன்றின் மூலம் ராமன் வனவாசம் செய்யவும், இரண்டாவது வரத்தின் மூலம் பரதனுக்கு நாடாளவும் பெற்றாள்.

இராமன் வனவாசம் புறப்படுகையில், லக்ஷ்மணர், சீதை இருவரும் பின் தொடர காடடைந்து, குகனின் தோழமையால் கங்கையைக் கடந்து, பஞ்சவடியில் தங்கியிருந்த போது சூர்ப்பணகையை லக்ஷ்மணன் அங்கபங்கம் செய்தான். அவளுக்கு உதவியாக வந்த கரதூஷணாதியரைப் போரில் வதம் செய்தார் ராமன். ஒரு நாள் தப்பி ஓடிய மாரீசன் பொன் மான் வடிவில் அங்கு வர, அம்மானை வேண்டிய சீதைக்காக அதைப் பிடிக்கச் சென்றான் இராமன். அதைப் பிடிக்க முடியாமல் அதன் மீது பாணம் எய்ய அது ராமா! லக்ஷ்மணா! என்று கத்தி உயிர்விட்டது. இது கேட்டு லக்ஷ்மணனை ராமரிடம் சீதை அனுப்ப அந்நேரத்தில் இராவணன் மாயத்துறவி வேடத்தில் வந்து அவளை இலங்கைக்குத் தூக்கிச் சென்றான். ராம லக்ஷ்மணன் சீதையைக் காணாமல் அவளைத் தேடி வருகையில் ஹனுமார், சுக்கிரீவர் ஆகியோரைக் கண்டு சுக்ரீவனுக்கு மகுடம் சூட்டிட அவன் தோழமையில் சீதையைத் தேட வானரர்கள் நாலா திசைகளிலும் அனுப்பப்பட்டனர்.

அனுமாருடன் தென்திசை கிளம்பியோரில் அனுமான் மட்டும் கடலைத் தாண்டி, இலங்கையை அடைந்து, சீதையைக் கண்டு இராமர் கொடுத்த கணையாழியைத் தந்து, அவள் தந்த சூடாமணியைப் பெற்று ராமரிடம் திரும்பி வந்து செய்தி அறிவிக்க இராம-இராவணப் போர் நடந்து இறுதியில் இராவணன் கொல்லப்பட்டான்.

(இது இராமாயணச் சுருக்கம்)

28. சுபத்திரை திருமணம்

தீர்த்தயாத்திரை செய்யச் சென்ற அருச்சுனன் துறவி வேடத்தில் ரைவத மலையை அடைந்தான். பலராமன், தங்கை சுபத்திரையை துரியோதனனுக்கு மணம் முடித்து வைக்க எண்ணியிருந்தான். ஆனால், கிருஷ்ணனோ தங்கை சுபத்திரையை அருச்சுனனுக்குத் திருமணம் செய்து வைக்க விழைந்தான். இந்நிலையில் சுபத்திரையை விவாகம் கொள்ள, அருச்சுனன் உபாயம் என்ன என்று சிந்தித்து கிருஷ்ணன் ஆலோசனையின்படி சந்நியாசி வடிவில் வந்தடைந்தான் துவாரகையை. தவ வேடத்தில் இருந்த அருச்சுனனைக் கிருஷ்ணன் சுற்றத்தாருடன் சென்று வணங்கினான். பலராமனும் வணங்கி உபசரித்தான். சில மாத காலம் தங்கி இருந்து தமது உபசாரங்களை ஏற்க வேண்டினர். தன்னை உபசரிக்க வந்தவர்களிலே வந்திருந்த சுபத்திரையை அருச்சுனன் கண்டான். அருச்சுனனைக் கண்ட சுபத்திரையும் காமபாணத்துக்குக் குறியானாள். அருச்சுனனும் அவளைக் கண்டது முதல் காமநோயுற்றான். இவ்வாறிருந்த வேளையில் கிருஷ்ணனின் குறிப்பறிந்து கொண்ட அருச்சுனன் சுபத்திரையைத் தேரில் ஏற்றிக்கொண்டு போனான். அப்போது எதிர்த்து வந்த மல்லர்களை வென்றான் அருச்சுனன். நிகழ்ந்ததையெல்லாம் அறிந்த பலராமன் மிகக் கோபம் கொண்டான். துரியோதனனுக்குத் திருமணம் செய்விக்க இருந்த சுபத்திரையை இவ்வாறு அருச்சுனன் கொண்டு சென்றதால் பலராமன் பெருமளவில் கோபம் கொண்டான்.

அருச்சுனனால் கைப்பற்றப்பட்ட சுபத்திரையை வேறு எவர்க்கு? எப்படி? மணம் செய்து தரமுடியும் என்று அண்ணனாகிய பலராமனிடம் கூறி அவனது கோபத்தை அடக்கி மகிழ்ந்தான் அந்த மாயக்கண்ணன். அடுத்து கிருஷ்ண, பலராமர்கள் சுபத்திரையுடன் அருச்சுனனுக்குச் செய்ய வேண்டிய சீர்களை எல்லாம் செய்து திருமணம் முடித்து வைத்தனர்.

விருகாசுரன்

விருகாசுரன் என்னும் அரக்கன் கொடிய தவம் செய்து சிவபெருமானிடம், யார் தலை மீது கை வைப்பினும் அவர் சாகும்படி வரம் வேண்டிப் பெற்று, உடனே சிவபெருமான் தலை மீதே கை வைக்க முயல, ஈசன் பயந்து ஓட, கிருஷ்ணன் காரணம் கேட்டறிந்து, அரக்கனிடம் ஈசன் சொன்னதன் உண்மையை அரக்கன் தன் தலைமீது வைத்துப் பார்க்கலாம் என்று சொல்ல, அவன் அவ்வாறே தன் தலை மீதே தன் கையை வைக்க அந்த அவுணன் மாண்டான்.

29. பிருகு முனிவர் கண்ட முடிவு

ஒரு சமயம் முனிவர்களும், தேவர்களும் அயன், அரன், அரி என்ற மூவரில் மேலானவர் யார்? என்று பிருகு முனிவரைக் கேட்டனர். திரிமூர்த்திகளில் சத்துவகுணமுடைய பரம்பொருள் யார்? என்றறிய பிருகு முதலில் சத்தியலோகம் சென்று பிரம்மனைக் கண்டார். ஆனால் அவரை வணங்கவில்லை. அது கண்ட பிரம்மன் முனிவர் மீது மகா கோபம் கொண்டார். அப்போது முனிவர் பிரம்மனுக்குக் கோயில் இல்லை என்று சபித்தார். அடுத்து கைலைவாசனைக் காண கைலைமலை சென்றடைந்தார் பிருகு முனிவர். சிவனும், பார்வதியும் ஏகாந்தமாய் இருந்தனர் முனிவர் சென்றபோது. அப்போது அரன் கோபம் கொள்ள பிருகு முனிவர் சிவபார்வதிகளின் இருகுறிகளும் பேர்ந்து விழுமாறு சபித்து விட்டார். அப்போது சிவனும் கோபம் கொண்டு நெற்றிக்கண் விழிக்க முனிவர் கோபம் கொண்டு நெற்றிக்கண் விழிக்க முனிவர் அதை அழித்து, அரனை பிராம்மணிய தெய்வமாதலை ஒழிக என்று சபித்தார். அடுத்து நாராயணனிடம் சென்றார் பிருகு முனிவர். அப்போது திருமால், இலக்குமியின் மடிமீது தலை வைத்துப்படுத்திருந்தார். அப்போது அங்கு சென்ற முனிவர் திருமாலின் மார்பில் உதைத்தார். அப்போது பகவான் பிருகு முனிவர் வந்ததை அறியவில்லை என்றும், தான் இருந்த நிலைக்கு வருந்தி பேசலுற்றார்.

மேலும் திருமால் அஞ்சலித்த கையனாய் நல்ல மனம் படைத்த முனித்தலைவ. பொற்றாமரை போன்ற உமது திருவடி என் மார்பில் பட்டதால், அங்கு திருநிலை பெற்றது என்று கூறி வணங்கினார். பிறகு பிருகு முனிவர் திரும்பி வந்து தேவர்கள், முனிவர்களிடம் நிகழ்ந்தவற்றை எல்லாம் விவரித்துக் கூறினார். இறுதியாக தானறிந்த உண்மையை விளம்பினார். ஒண் திறள் ஆழியானே உயர்நலம் உடையன் என்றார். அதாவது மும்மூர்த்திகளில் சக்கராயுதம் ஏந்திய விஷ்ணுவே சத்துவகுணம் உடையவர் என்று கூறி முடித்தார்.

30. நவயோகியர் ஓதிய நல்லறம்

அடுத்து நாரதர் நிமிச் சக்கரவர்த்திக்கும், ரிஷப தேவருடைய குமாரனுக்கும் நடந்த சம்வாதரூபமான கதையைக் கூறினார். ஸ்வாயம்பு மனுவின் வம்சத்தில் தோன்றிய ரிஷப தேவர் பகவானுடைய அம்சம். அவனுடைய நூறு புத்திரர்களில் ஒன்பது பேர் (கவி முதல் நரபாஜனர் வரை) மட்டும் இந்தப் பிரபஞ்சத்தை பகவத் சொரூபமாகவும், ஆத்ம சொரூபமாகவும் கண்டனர். ஒரு சமயம் அஜநயம் என்ற இடத்தில் நிமி சக்கரவர்த்தி சத்ரயாகம் செய்தார். அப்போது அங்கு தற்செயலாக வந்த மேற்படி ஒன்பது முனிவர்களையும் சக்கரவர்த்தி எதிர்கொண்டழைத்து, உபசரித்து விதிப்படிப் பூசித்துப் பணிவுடன் வணங்கிக் கேட்டார். அப்போது அம்முனிவர்கள், இப்பிரபஞ்சம் முழுவதுமே பகவத் சொரூபம் என்று நினைத்தால் பயம் நீங்கிவிடும். அஞ்ஞானியும் தன்னைச் சுலபமாக அடைய பகவானால் கூறப்பட்ட உபாயங்களே பாகவத தர்மங்கள். மனம், வாக்கு, சரீரம், புத்தி, இந்திரியங்கள், அகங்காரம் இவற்றை அனுசரித்துச் செய்கின்ற எல்லாச் செயல்களையும், பரம புருஷராகிய ஸ்ரீமந் நாராயணர்க்குச் சமர்ப்பணம் செய்வதே பாகவத தர்மம்.

பகவானை அடைய மிகச் சுகமான வழி ஒன்று இருக்கிறது. பகவானின் மங்களகரமான அவதார மகிமைகளைக் கூறும் திவ்ய சரிதங்களைச் சிரவணம் செய்து கொண்டும், நாமங்களை எப்போதும் பாடிக் கொண்டும் பற்றற்றவராய் இவ்வுலகில் சஞ்சரிப்பதே பாகவத தர்மம் கூறும் வழி. பகவானைப் பூஜிப்பவனுக்குப் பக்தியும், வைராக்கியமும், பகவத் சொரூப அனுபவமும் ஒரே சமயத்தில் ஏற்படுகின்றது. இடைவிடாமல் அவனுடைய திவ்ய சரணங்களைத் தியானிப்பவனுக்கு பக்தி, வைராக்கியம், ஈச்வர அனுபவ போதம் இம்மூன்றும் உறுதிப்படுகின்றன. அதன் பிறகு அந்த பாகவதன் பரம சாந்தியை அடைகிறான். நிமிச்சக்கரவர்த்தி பாகவதனுக்கான அடையாளங்கள் யாவை? என்று கேட்க, ஹரி என்பவர் பதில் உரைக்கிறார். எவன் சகல ஜீவராசிகளிடத்தும் பகவானுடைய நித்ய விபூதியைக் காண்கிறானோ, சகல பிராணிகளும் பகவானிடமே உறைகின்றன என்ற பாவனையுடன் இருக்கின்றானோ அவனே பாகவதர்களில் உத்தமன். ஸ்ரீவாசுதேவருடைய சரணங்களைச் சரணமாக அடைந்த அவன் காமம், கர்மம், வாசனாபலம் ஆகியவற்றை வென்று ஸ்ரீஹரியின் நினைவிலேயே ஈடுபட்டு இவ்வுலகத் துன்பங்களைப் போக்கி விடுகிறான். சாதி, குலம், பிறப்பு போன்றவற்றால் ஏற்படும் அகங்காரம் இல்லாதவன் மகாவிஷ்ணுவுக்குப் பிரியமானவன். அவன் அபேத புத்தியுடன், சமசித்தனாக, சபிந்த சீவனாக இருப்பான். அவனே பாகவதர்களில் மிகச் சிறந்தவன்.

பகவான் எவனுடைய இதயத்தாமரையிலே பிரேம பக்தி என்ற கயிற்றினால் கட்டப்பட்டு, அவ்விடத்திலேயே அகலாமல் இருக்கின்றாரோ அவனே உத்தமமான பாகவதன் என்றார். அடுத்து அந்தரிக்ஷர் என்பவர் விஷ்ணு மாயையைப் பற்றி கூறினார். பின்னர், பிரபுத்தர் என்பவர் கர்ம பலன்களில் இச்சை வைத்தவனுக்கு அச்சமே மிஞ்சும். சாந்தி ஏற்படாது. அற்புத செயல்களை உடைய ஹரியின் குணங்களைக் கேட்பது, உச்சரிப்பது, தியானிப்பது, பகவத் சேவை செய்வது, எங்கும் பகவத் சொரூபமாகக் காண்பது, மவுனத்தால் நாவடக்கம், பிராணாயாமத்தில் புலனடக்கம், பயன் கருதாமல் செய்யும் கர்மா, சத்தியம் ஆகியவை பாகவத தர்மங்களாகும். ஸ்ரீஹரியே சரணம் என்று, பாகவத தர்மங்களைப் பழகி வந்தால் மாயையைச் சுலபமாகக் கடந்து விடலாம் என்றார். அதன்பின் பிப்பலாயர் என்பவர் பிரம்ம சொரூபத்தை விளக்கிக் கூறுகிறார். சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் முதலியவற்றிற்குக் காரணம் எவரோ அவர் பரமாத்மா. ஜாக்ரைம், ஸுக்ஷúப்தி, சொப்பனம் ஆகியவற்றிலும், அதற்கப்பாலும் பரந்துள்ளது பரதத்துவம். எவருடைய அருட்சக்தியினால் இந்திரியங்கள், பிராணன், மனம் இயங்குகின்றனவோ அதுவே பரப்பிரம்மம். ஸ்தூல, ஸூக்ஷ்ம பிரபஞ்சம் முழுவதும் ப்ரம்ம ஸ்வரூபம். ஆத்மாவுக்கு பிறப்பு, அழிவு, வளர்ச்சி, தேய்வு எதுவும் கிடையாது. சித்தமான உள்ளத்தில் ஞானஒளி பிரகாசிக்கின்றது.

ஆவிர்ஹோதிரர் என்பவர் அரசனிடம், வேத விதிப்படி கர்மாக்களைச் செய்து, அதன் பலனில் ஆசை வைக்காமல் எல்லாவற்றையும் பகவானுக்குச் சமர்ப்பணம் செய்து விட வேண்டும். நிஷ்காம்ய கர்மத்தினாலேயே ஞானம் சித்திக்கின்றது. பகவானை முறைப்படி பூசித்து உபாசனை செய்து வந்தால் ஆத்ம ஞானம் ஏற்பட்டு மோக்ஷ சுகம் கிட்டும். குருவின் அருளைப் பெற்று, பூஜா விதிகளை அவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு தன் மனதிற்குகந்த இஷ்ட தெய்வத்தின் வடிவத்தில் பரமபுருஷனை ஆராதிக்க வேண்டும். இவ்வாறு சிரத்தையாக ஆத்ம சொரூபமாகிய ஈச்வரனைப் பூஜிப்பவன் விரைவில் முக்தி அடைவான் என்றார். பிறகு திரமீளர் பகவான் பல அவதாரங்களை எடுத்து, நிகழ்த்திய அற்புதச் செயல்கள் குறித்து விரிவாகக் கூறினார். சமரசர் என்பவர் பக்தியற்றவர்களின் பரிதாப நிலையை விளக்கி, அவர்களுக்குச் சாதுக்களே தயைபுரிந்து நல்வழிகாட்ட வேண்டும் என்றார். அதன்பின் காமாஜனர் என்பவர் நான்கு யுகங்களிலும் பகவான் எந்த உருவில் இருந்தார்? எவ்வாறு பூஜிக்கப்பட்டார் என்று கூறினார்.

கிருதயுகத்தில் வெண்மை நிறத்துடன், சதுர்புஜ மூர்த்தியாக, ஜடா மகுடத்துடன், மரவுரி தரித்து தண்டம், கமண்டலம், அக்ஷமாலைகளுடன் விளக்குகிறார். மக்கள் தவம், மனஅடக்கம், புலனடக்கத்துடன் சமபாவத்துடன் பகவானைப் பூசித்தனர். திரேதாயுகத்தில் சிவப்பு வண்ணமொடு தங்கநிற கேசம், சதுர்ப்புஜம் கொண்டு வேத சொரூபியாக விளங்குகின்றார். மக்கள் தேவதேவனான ஸ்ரீஹரியை வேதத்தில் கூறியுள்ள கர்மானுஷ்டானங்களால் பூசிக்கின்றனர். துவாபர யுகத்தில் பகவான் சியாமள நிறமேனியுடன், பீதாம்பரம் தரித்து ஸ்ரீவத்ச மறு, சங்கு சக்கர, கதாயுதங்களுடன் விளங்குகின்றார். மக்கள் பரமாத்வை அறியும் ஆவலுடன், வேதத்தில் கூறப்பட்டுள்ள ஆகம விதிமுறைப்படி பூசிக்கின்றனர். கலியுகத்தில் ஒளிவீசும் கருநிறத் திருமேனியுடன் அங்க, உபாயங்களுடன், அஸ்த்ரங்களுடன் பார்ஷதர்கள் புடைசூழ விளங்குகின்றார். மக்கள் நாம சங்கீர்த்தனம் செய்து கிருஷ்ணனைப் பூஜித்து ஆராதனை செய்கிறார்கள். பகவானுடைய திவ்ய நாமங்களை உச்சரிப்பதனாலேயே சகல விதமான புருஷார்த்தங்களும் கிடைப்பதால் இதுவே மேலானதென்பர்.

இவ்வாறு நவயோகிகளால் உபதேசிக்கப்பட்ட பாகவத தர்மங்களைக் கேட்ட நிமி சக்கரவர்த்தி எல்லையில்லா ஆனந்தம் கொண்டார். பின்னர் ஆசாரியர்களை முன்னிட்டுக் கொண்டு நவயோகிகளை முறைப்படி பூசை செய்து பலவித உபசாரங்களையும் செய்தார். அந்த சித்த புருஷர்கள் எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தபோதே மறைந்து விட்டனர். நிமி சக்கரவர்த்தி இந்த பாகவத தர்மங்களை அனுஷ்டித்து உத்தம கதியை அடைந்தார். வசுதேவரே, நீரும் இந்த தருமங்களை ஆசரித்து உத்தமமான பரமபதத்தை அடைவீராக என்று நாரதர் கூறியதைக் கேட்டு தேவகி, வசுதேவர் மோகம் நீங்கி ஞானம் பெற்றனர். நவயோகிகள் பற்றிச் சிந்திப்பவன் மோகம் நீங்கி பிரம்ம சொரூபத்தை அடையும் தகுதி பெறுவான் என்று சுகமுனிவர் பரீக்ஷித்துக்குக் கூறினார். தேவர்கள், ரிஷிகள், அயன், அரன் ஆகியோர் புனித கீர்த்தியை உடைய ஸ்ரீகிருஷ்ணனின் மனோகர வடிவைக் காண ஆவலுடன் வந்தனர். அவர்கள் அனைவரும் ஸ்ரீகிருஷ்ணனைத் தேவலோக மலர்களால் அர்ச்சித்து மணமுள்ள மலர் மாலைகளை அணிவித்துப் பணிவுடன் வணங்கித் துதித்தனர். அப்போது பிரம்மதேவர், எங்கள் பிரார்த்தனைக்கிணங்கி இந்த பூபாரத்தைக் குறைப்பதற்காக யது குலத்தில் அவதரித்து, உலக நலனுக்காகவே அற்புதமான லீலைகளைச் செய்தீர். தேவ காரியங்கள் முடிந்து விட்டன. பிராம்மண சாபத்தால் யதுவம்சம் பெரிதளவு அழிந்து விட்டது. தங்களுக்கு விருப்பமிருந்தால் உத்தமமான உமது ஸ்தானத்திற்கு எழுந்தருளி லோக பாலகர்களான இந்த சேவர்களை ரக்ஷித்தருள வேண்டுகின்றோம் என்றார்.

அப்போது கிருஷ்ணன், நீர் கூறியது உண்மையே. யாதவ குலம் மிக்க கர்வம் கொண்டு இவ்வுலகையே அழிக்கும் சக்தி வாய்ந்தது. அவர்களை அழித்த பிறகே நான் வைகுண்டம் வரமுடியும் என்று கூற, பிரம்மாதி தேவர்கள் பகவானை வணங்கி தமதிருப்பிடம் சென்றனர். சில நாட்களில் துவாரகாபுரியில் பல அபசகுனங்கள் தோன்றின. அப்போது பகவான் யாதவகுலப் பெரியோர்களைப் பார்த்து, பிராம்மண சாபத்திலிருந்து இனி தப்ப முடியாது. எனவே யாவரும் உடனே புறப்பட்டுப் புண்ணியத் தலமான பிரபாசத் தீர்த்தத்துக்குப் புறப்படுவோம் என்றார். புறப்படும்போது உத்தவர் பகவானைத் தனியாகச் சந்தித்து வணங்கிப் பிரார்த்தித்தார். யோகேச்வரா, பிராம்மண சாபத்தைத் தாங்கள் தடுக்கப் போவதில்லை. தாங்கள் தங்கள் திவ்ய பதத்திற்கு எழுந்தருளப் போகிறீர். தங்கள் சரண சேவையின்றி அரைகணமும் என்னால் இருக்கமுடியாது. எனவே என்னையும் தங்களுடன் அழைத்துச் செல்லுங்கள். அப்போது பகவான் உத்தவரிடம், பிரம்மாதி தேவர்கள் அனைவரும் என் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். பிராம்மண சாபத்தால் யாதவ குலம் எரிக்கப்பட்டு பரஸ்பர விரோதத்தால் நாசமடையும். துவாரகையும் நீரில் மூழ்கி மறைந்து விடும். நான் மறைந்ததும் உலகில் மங்களங்கள் குறையும். கலிபுருஷன் வந்திட மக்கள் அதர்மத்தை விரும்புவர்.

எனவே நீ எல்லாவற்றையும் துறந்து, என்னையே ஸ்மரித்து, மனோமயம் மாயாமயம் என அறிந்து, சஞ்சரிப்பாய். மேலும் இந்திரிய ஐயத்துடன், இப்பிரபஞ்சத்தைத் தனது ஆத்மாவாகவும், பிரம்ம சொரூபமாகவும் சர்வாத்ம சொரூபியாகிய என்னைத் தவிர அவை வேறானவை அல்ல என்று உணர்ந்து கொள்வாயாக. அவ்வாறு எல்லாம் என் வடிவெனக் காண்பவர்க்கு மறுபிறவி கிடையாது.

31. யது மகாராஜன், அவதூதர் சம்பாஷணை

அப்போது உத்தவர் கேட்டார், மகாயோகியே! எனது நன்மையின் பொருட்டு சந்நியாசி லக்ஷணமாகிய தியானத்தை உபதேசித்தருளினீர், நான், எனது (மமகாரம்) என்ற அபிமானத்தை ஒழிப்பது எப்படி? என்று கேட்டார். அதற்குப் பகவான், உலக தத்துவ பரிசீலனை செய்கின்றவர்கள் தாமே, தமது ஆத்மா (அ) மனதைப் பற்றற்ற தாக்கிக் கொள்கின்றனர். அவரவர்க்கு அவரவர் ஆத்மாவே குருவாகிறது. மனிதப் பிறவியில் ஞானம் (சிரவண மனனம்), யோகம் (நித்தியாசனம்) ஆகிய திறமையுள்ள விவேகர்கள் என்னைச் சர்வ சக்தியுள்ளவன் என்று அறிந்து கொள்கின்றனர். இனி இவ்விஷயமாக யது மகாராஜனுக்கும், அவதூதருக்கும் நடந்த சம்பாஷணையைப் பற்றிக் கூறுகிறேன் கேளும். முன்பொரு சமயம் யது மகாராஜன் எங்கும் அச்சமின்றித் திரியும் ஓர் அவதூத பிராம்மணரிடம், உலக சுகபோகங்களில் ஈடுபாடு இல்லாத உமக்கு உள்ளத்தில் பரிபூர்ண மகிழ்ச்சி நிரம்பி இருக்கிறதே எதனால்? என்று கேட்டார். அதற்கு அவதூதன் கூறலானான், நான் பலரை எனது குருவாகக் கொண்டு அவர்களிடமிருந்து பல செய்திகளை அறிந்து கொண்டேன். தான் இருபத்து நான்கு ஆச்சாரியர்களை ஆச்ரயித்து தெரிந்து கொண்டவை பல.

1. பூமியிலுள்ள அனைத்தும் எப்படிப் பிறருக்குப் பயன்படுகிறதோ அவ்வாறு சாதுக்கள் தான் பிறருக்கு உரியவன் என்று உணர வேண்டும்.
2. காற்று போல யோகியானவன் குண தோஷங்களால் கறைபடாதவனாக அதாவது பற்றற்றவனாக இருக்க வேண்டும்.
3. ஆகாயம் போல் ஆத்மா பிரபஞ்சமெல்லாம் பரவி இருந்தாலும் எதிலும் ஒட்டாமல், தாமரை இலை நீர் போல இருக்க வேண்டும்.
4. நீரைப் போல் யோகி தூயவனாய், குணமுற்றவனாய், மிருதுவான இதயம், மக்களிடம் இனிமையாகப் பழகுதல் வேண்டும். பார்ப்பது, பேசுவது, தொடுப்பது ஆகியவற்றால் அண்டினவர்களைத் தூய்மைப்படுத்த வேண்டும்.
5. அக்கினியைப் போல் அழுக்கற்றவனாய் ஒளியுடன் விளங்க வேண்டும்.
6. சந்திரனில் தேய்தல், வளர்ச்சி இருப்பினும் சந்திர மண்டலத்திற்கு மாறுதல் இல்லாததுபோல் ஆத்மாவிற்கு ஜனனம், மரணம் கிடையாது.
7. சூரியன், கடல் நீரைக் கிரகித்து மழையாகப் பொழிவதைப் போல் யோகி இந்திரியங்களால் விஷயங்களைக் கிரகித்து அதைத் தகுதி உள்ளவன் கிடைக்கும் போது அவனிடம் கொடுத்து, கொடுத்ததை மறந்துவிட வேண்டும்.
8. மாடப்புறா பாசத்தின் காரணமாக குடும்பத்துடன் மாண்டது போல் குடும்பப் பற்றுள்ளவன் ஆபத்தில் அகப்பட்டுக் கொள்ளுவான்.
9. மலைப்பாம்பு போல் தன் முயற்சி இன்றி கிடைத்ததைப் புசித்து உதாசீனனாய் இருக்க வேண்டும்.
10. கடலைப் போல், பகவானிடம் மனதைச் செலுத்தி ஆசைகள் நிறைவேறும்போது மகிழ்ச்சியும், இல்லாத போது துயரமில்லாமலும் இருத்தல் நல்லது.
11. விட்டில் போல் அழியாமல் இந்திரியங்களை வென்றிருக்க வேண்டும்.
12. தேனீயைப் போல் முனிவன் கிரகஸ்தர்களைச் சிரமப்படுத்தாமல் தேவையான அளவே பெற்று உண்ண வேண்டும். அடுத்த வேளைக்கு என்று சேர்த்து வைத்தால்  கூட்டில் தேன் போல் அழிவு ஏற்படும். மேலும் சாஸ்திரங்களுடன் சாரத்தை மட்டும் அறிந்து வாழ வேண்டும்.
13. பிடியின் (பெண் யானை) காரணமாக ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் ஆண் யானை போல் ஸ்திரீ பந்தத்தில் சிக்கிக் கொள்ளக்கூடாது.
14. இனிய கானம் கேட்டு மயங்கிய மான் வேடனால் பிடிபட்டு அவதியுறுவதுபோல் பகவத் குணங்களை மட்டுமே கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவதியுற்று அழிய நேரக்கூடும்.
15. தூண்டில் மீன் உணவை விரும்பி முள்ளில் சிக்கிக் கொள்வதுபோல் நாவடக்கம் (சுவையின் மீது ஆசை) இல்லாதவன் புலனடக்கம் இல்லாதவனே.
16. பிங்களை என்ற வேசி தன் தொழிலில் வெறுப்புற்று அன்புடன் ஆராதிப்பவருக்குத் தனது ஆத்மாவையே அளிக்கும் அச்சுதனை நாடி அடையாமல், அந்திய புருஷனைத் தேடி ஓடுகிறேனே? என்று ஞானம் பெற்றவளாய் பகவானையே சரணமாக அடைந்து மேன்மை அடைந்தாள். எனவே ஆசையே துன்பம்; நிராசையே பரமசுகம் என்று அறிதல் வேண்டும்.
17. மாமிசத்தைக் கொத்திச் சென்ற மீன்குத்தி மற்ற பறவைகளால் துன்புறுத்தப்படும். அது மாமிசத்தைக் கீழே போட்டவுடன் அப்பறவை நலம் பெற்று விடும்.
18. தனக்குத் தானே விளையாடிக் கொண்டு மகிழ்ச்சி அடையும் குழந்தை போல் தன்னில் தானாகவே ஆத்மாவில் ரமித்து ஆனந்தமாக சஞ்சரிக்கின்றேன்.
19. ஒரே ஒரு வளையலைக் கையில் கொண்ட பெண்ணைப் போல், துறவி ஆனவன் தனிமையாகவே இருக்க வேண்டும்.
20. அம்பு தொடுக்கும் வில்லாளி இலக்கின் மீது கவனமாக இருப்பது போல், ஆத்ம சொரூபத்திலே ஒன்றி விட்டவன், வெளியிலே தன்னைச் சுற்றிலும் நடப்பவற்றையும், உள்ளே நடப்பவற்றையும் கூட அறிய மாட்டான். ஆகவே யோகியானவன் சுகாசனத்தில் அமர்ந்து சுவாசத்தை அடக்கி, வைராக்கியத்தாலும் பகவத் தியானத்தாலும் வெற்றி பெறுவான்.

பரீக்ஷித்துக்கு மரணபயம் நீங்கியது

சுகப்பிரம்ம பகவான் தன் சோதிக்கு எழுந்தருளிய பிறகு பூவுலக நிலை, கலிபுருஷன், கலி தோஷங்கள் என்பன பற்றி எல்லாம் பரீக்ஷித்துக்கு உரைக்கலானார். பின்னர் கலி தோஷங்களை நிவர்த்தி செய்ய என்ன உபாயம் என்று அரசன் கேட்க முனிவர் கூறலானார். அப்போது முனிவர் கலிதோஷங்கள் அதிகமாகும்போது தர்மத்தையும் சாதுக்களையும் ரக்ஷிக்க, பகவான் ஸத்வ குணத்துடன் சம்பன கிராமத்தில், விஷ்ணு யசஸ் என்ற அந்தணருடைய வீட்டில் கல்கி என்ற பெயருடன் தோன்றுவார். துரிதமாகச் செல்லும் குதிரை மீதேறி பூமண்டலம் முழுவதும் சஞ்சரித்து அரச வேஷதாரிகளான, துஷ்டர்களை வதம் செய்வார். (மேல் விவரம்-கல்கி (அ) பவிஷ்யத் புராணம் காண்க)

கல்கி அவதரித்த உடனே மக்களின் மனம் தெளிவுபடும். அவர்களுக்கு ஞானத்திலும் தவத்திலும் விருப்பம் உண்டாகும். கலிதோஷங்களைப் போக்கக்கூடியது புரு÷ஷாத்தமருடைய தியானம், சிரவணம், மனனம், சங்கீர்த்தனம், தியானம், பூஜை இவற்றினால் பகவான், ஸ்ரீஹரி மக்களின் இதயத்தில் நிலையாகத் தங்கி, அவர்களின் பல பிறவிகளில் ஏற்பட்ட தீமைகளையெல்லாம் நீக்கி அருள்புரிவார். பகவத் தியானத்தால் சித்தம் தூய்மைப்படும். கிருத யுகத்தில் தியானத்தினாலும், திரேதா யுகத்தில் கர்மானுஷ்டானங்களாலும் (யாகம் முதலியன) துவாபர யுகத்தில் பகவத் சேவையினாலும் உண்டாகும் பலனைக் கலியுகத்தில் ஹரிநாம சங்கீர்த்தனத்தால் அடையலாம்.

அரசே மரணமடையப் போகிறேன் என்ற எண்ணம் வேண்டாம். நீர் பிறக்கவுமில்லை, அழியவுமில்லை. ஆத்மாவுக்கு அழிவு கிடையாது. ஆத்மாவை அறிந்து கொண்டால் தக்ஷகன் உம்மை எரிக்க மாட்டான். நானே பிரம்மம் என்பதை அறிந்து நிஷ்கள பிரம்ம சொரூபத்தில் ஒன்றிவிட்டபோது தக்ஷகனையோ, அவனுடைய கடியையோ அறியமாட்டீர் என்றார் முனிவர். அப்போது பரீக்ஷித்து சுகரிடம், ஸ்ரீஹரியின் குண வைபவங்களைக் கூறி, என்னைக் கிருதார்த்தனாக்கி; அனுக்கிரகித்த தங்களுக்கு நமஸ்காரம். பகவானுடைய திவ்ய சரிதங்களை விவரிக்கின்ற இந்தப் புராணத்தைக் கேட்டது என் பாக்கியமாகும். எனக்கு தக்ஷனிடமும் அச்சமில்லை. மரண பயமும் இல்லை. நான் பிரம்ம நிர்வாணத்தில் ஒன்றிவிட்டேன் எனக்கு அனுமதி அளியுங்கள் என்று கூறி நன்றியுடன் வணங்கினார்.

32. ஜனமேஜயன், சர்ப்ப யாகம்

பரீக்ஷித்தின் மரணம்:  பரீக்ஷித் மூச்சை அடக்கி, மனதை ஆத்மாவில் லயிக்கச் செய்து, அசைவற்றிருந்து பரமாத்ம அசொரூபத்தையே தியானிக்கலானார். அதே சயம் தக்ஷகன், அந்தண வடிவத்துடன் அரசனை அணுகி தனது விஷப்பற்களால் கடித்தான். மறுகணம் பிரம்ம நிலையைப் பெற்ற மன்னன் உடல் விஷாக்கினியால் எரிந்து சாம்பலாகியது.

சர்ப்ப யாகம்

தக்ஷகனால் பரீக்ஷித்துக் கொல்லப்பட்டதைக் கண்ட அவரது மகன் ஜனமே ஜயன் மிக்க கோபம் கொண்டு, பிராம்மணர்களைக் கொண்டு சர்ப்பயாகம் செய்தான். அப்போது எல்லாச் சர்ப்பங்களும்-தக்ஷகனைத் தவிர-ஈர்க்கப்பட்டு அக்னியில் விழுந்து பொசுக்கப்பட்டன. தக்ஷகன் இந்திரனைச் சரணமடைந்தான். உடனே மேலும் கோபம் கொண்ட ஜனமேஜயன் இந்திரனையும் சேர்த்து தக்ஷகனை அக்கினியில் தள்ளுமாறு கூறிட தக்ஷகனுடன் இந்திரனும் யாக அக்னிக்கு ஈர்க்கப்பட்டான். அப்போது பிரகஸ்பதி ஜனமேஜயனிடம் தக்ஷகன் அம்ருதபானம் செய்தவன். எனவே அவனைக் கொல்ல முடியாது. ஒருவன் மரணம் ஜீவனின் பிரார்த்த கர்ம பலனைச் சார்ந்தது. சாந்தம் அடைந்து அபிசார யாகத்தை நிறுத்துங்கள். இது யாவும் முன் வினைப்பயன் என்று அறிவுரை கூறி யாகத்தை நிறுத்தச் செய்தார். ஜனமே ஜயன் யாகத்தை நிறுத்தி பிரகஸ்பதியைப் பணிவுடன் வணங்கினான்.

முடிவு

சவுனகரிடம் சூதர், ஆசையற்றவர்களாக, ஆத்மசுகத்தில் ஈடுபட்டு ஒருமையுடன் இருப்பவர்களே மாயையைக் கடந்ததான விஷ்ணு பாதத்தை அடைந்து ஆனந்தம் பெறுகிறார்கள். ஆபத்துக்காலத்தில் தன் வசமின்றியே ஹரயே நம என்று கூறுபவன் சகல பாதகங்களில் இருந்தும் விடுபடுகிறான் என்றார். பகவத் குணங்களை வர்ணிக்கின்ற கதையே சத்யமானது, புண்யமானது; நதிகளில் கங்கையும், தேவதைகளில் அச்சுதரும், விஷ்ணு பக்தர்களில் பரமசிவனும் எப்படிச் சிறப்பானவர்களோ, அவ்விதமே புராணங்களில் ஸ்ரீ பாகவத புராணம் மிகவும் சிறந்தது.

ஸ்ரீ கிருஷ்ண சரணம் நம:

ஸ்ரீ கிருஷ்ண பகவான் யதுகுலத்தில் அவதரித்து, நிகழ்த்திய அற்புத லீலைகளையும் அவரது தெய்வ குணங்களையும், சிரவணம் செய்பவர்களுக்கு கர்ம பந்தங்கள் விலகி விடுகின்றன. ஸ்ரீகிருஷ்ண கானாம்ருதத்தைச் செவிகளால் பானம் செய்கின்றவன் சம்சாரக் கடலைச் சுலபமாகக் கடந்து விஷ்ணு பதத்தை அடைகிறான். முகுந்தருடைய திவ்ய சரிதத்தைக் கேட்க வேண்டும். அவரது அற்புத லீலைகளைப் பாடவேண்டும் என்ற ஆர்வத்துடன் ஒவ்வொரு வினாடியும் எவன் சிந்திக்கின்றானோ அவன் உன்னதமான பரமபதத்தை அடைகின்றான் என்று சுகமுனிவர் பரீக்ஷித்துக்குக் கூறினரை சூத மாமுனிவர் சவுனகர் முதலான மகரிஷிகளுக்குக் கூறினார். ஸ்ரீகோவிந்தா, ஹே கிருஷ்ணா உமது வஸ்து உமக்கே சமர்ப்பணம் செய்யப்படுகின்றது. உமது திவ்ய சரண கமலங்களில் நீங்காத, இடையறாத பக்தியை எனக்கு அளிப்பாயாக.

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து!


© Om Namasivaya. All Rights Reserved.