Books / மஹா புராணங்கள்


பாகவத புராணம்

(பகுதி-3)


ஸ்ரீ கிருஷ்ணாவதாரம்

1. தோற்றுவாய்

(இது ஸ்ரீவிஷ்ணு புராணம் ஐந்தாவது அமிசத்திலும், ஸ்ரீமத் பாகவத புராணத்தில் பத்தாவது ஸ்கந்தத்திலும், ஸ்ரீபிரம்ம வைவர்த்த புராணம் ஸ்ரீகிருஷ்ண காண்டத்திலும் விரிவாக கூறப்பட்டுள்ளது. எனவே, பொதுவான ஸ்ரீகிருஷ்ண அவதாரம் பற்றி இப்பகுதியில் கூறப்பட்டுள்ளது.)

(கலி தோஷங்களைப் போக்கக் கூடிய கிருஷ்ண சரிதத்தைச் சுகமுனிவர் பரீக்ஷித்துக்குக் கூறத் தொடங்கினார் என்று சூத முனிவர் சவுனகாதி ரிஷிகளுக்குக் கூறினார்.)

தேவகி, வசுதேவர்

1. வடமதுரையைத் தலைநகராகக் கொண்டு சூரசேனன் ஆட்சி செய்து வந்தான். அந்நகரில் தேவகி வசுதேவர்க்குத் திருமணம் நடந்தது. மணமக்களைத் தேரில் ஏற்றிக் கொண்டு, உக்கிரசேனரின் குமாரன் கம்சன் தானே தேரை ஓட்டிச் செல்கையில் ஓர் அசரீரியின் குரல் விண்ணில் எழுந்தது. அது நீ யாரை அன்புடன் அழைத்துச் செல்கின்றாயோ அந்தத் தேவகியின் எட்டாவது குழந்தை உன்னைக் கொல்லும் என்றது. உடனே கம்சன் கத்தியை உருவி தன் தங்கை தேவகியைக் கொல்ல முற்படுகையில் வசுதேவர் அவனைத் தடுத்து, தேவகிக்குப் பிறக்கும் குழந்தைகளை அவனிடம், ஒப்படைத்து விடுவதாகவும் மணக்கோலத்தில் உள்ள அவளைப் பிணக்கோலமாக்க வேண்டாம் என்றும் உரைத்தார்.

முதல் குழந்தை பிறந்தவுடன் உடனே அதனைக் கம்சனிடம் கொடுக்க, அவன் மனம் மாறி குழந்தையுடன் வசுதேவரைத் திருப்பி அனுப்பி விட்டான். ஆனால் அவன் அவைக்கு வந்த நாரதர், உன்னைக் கொல்ல பகவான் தேவகிக்குக் குழந்தையாய் அவதரிப்பார் என்று கூறிச் சென்றுவிட்டார். அது கேட்ட கம்சன் தேவகியையும் வசுதேவரையும் விலங்கிட்டு சிறையில் அடைத்தான். தேவகியின் ஆறு குழந்தைகளைக் கம்சன் கொன்றுவிட்டான். அவள் ஆதிசேஷனைக் கருவுற்றிருந்தாள். அப்போது ஸ்ரீஹரி யோகமாயையை அழைத்து, தேவகியின் கருவிலுள்ள தேஜஸ்ஸை ஆயர்பாடியிலுள்ள ரோகிணியின் கருவில் சேர்த்துவிடு. பிறகு நான் தேவகியின் மகனாக அவதரிப்பேன். நீ நந்தன் பத்தினி யசோதையின் புத்திரியாக அவதரித்து உலக மக்களைக் காத்திடுவாயாக. உனது சக்தியினால் ஆகர்ஷனம் செய்யப்படும். ரோகிணி குமாரன் சங்கர்ஷணன் என்றும், மக்களை மகிழ்விப்பதால் ராமன் என்றும், பலசாலி ஆனதால் பலராமன் என்றும் அவனை அழைப்பர் என்று கூறினார்.

2. கண்ணன் பிறந்தான்

பிறகு பகவான் தனது பூர்ண கலையுடன் தேவகி உள்ளத்தில் ஆவிர்பவித்து அவளுக்கும், வசுதேவருக்கும் எட்டாவது குழந்தையாக சிறைச்சாலையில் பிறந்தார். வசுதேவர் பகவானின் ஆணைப்படி அக்குழந்தையை எடுத்துச் சென்று கோகுலத்தில் யசோதையிடம் சேர்ப்பித்து, அங்கு பிறந்திருந்த நந்தகோபனின் புத்திரியை எடுத்து வந்தார். பகவான் கிருபையால் விலங்குகள் நீங்கி, கதவுகள் திறந்திட, வழியில் யமுனை வழிவிட கோகுலம் சென்று எவ்வித இடையூறும் இன்றித் திரும்பி வந்தார். சிறைக்கதவுகள் மூடிக் கொண்டன. விலங்குகள் வசுதேவரை அலங்கரித்தன. இவ்வாறு யசோதையின் பெண்குழந்தை தேவகியின் அருகில் படுக்க வைத்தவுடன் அக்குழந்தை அழத் தொடங்கியது. காவலாளிகள் மூலம் செய்தி அறிந்த கம்சன் தேவகியிடமிருந்து அக்குழந்தையைப் பிடுங்கிக் கொண்டு அதன் இருபாதங்களையும் பிடித்துத் தூக்கி ஒரு பாறையின் மீது ஓங்கி அடிக்க குழந்தை கை நழுவி விண்ணில் நின்று தன்னை அவனால் கொல்ல முடியாது என்றும், அவனது சத்துரு வேறிடத்தில் பிறந்து வளர்கிறான் என்றும் கூறி மறைந்தது. கம்சன் தேவகி-வசுதேவர் இருவரையும் விடுதலை செய்தான்.

கோகுலத்தில் நந்தகோபன் யசோதைக்கு ஆண்குழந்தை பிறந்ததை முன்னிட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தான். குழந்தைக்கு புண்யாக வசனம், ஜாதகர்மம் முதலியன செய்து தேவ, பித்ருக்களைப் பக்தியுடன் பூசித்தான். சிலநாட்களுக்குப் பின் நந்தகோபர் கம்சனுக்குக் கப்பம் கட்டுவதற்காக மதுரைக்கு வந்தான். வசுதேவரைச் சந்தித்து மகன் பற்றிக் கூறி மகிழ்ந்திட, வசுதேவர் நந்தகோபரிடம் குழந்தைகளுக்கு ஆபத்து என எச்சரித்து உடனே அனுப்பி வைத்தார்.

3. கிருஷ்ணனது லீலைகள்

கம்சனால் அனுப்பப்பட்ட பூதகி என்னும் அரக்கி, ஓர் அழகிய வடிவில் நந்தகோபர் வீட்டில் சேர்ந்து, அனைவரையும் மயக்கி குழுந்தையை ஆசையுடன் எடுத்து, மார்போடு அணைத்துக் கொண்டு விஷம் நிறைந்த பாலை ஊட்ட, பகவான் கிருஷ்ணன் அவள் மார்பகத்தைப் பற்றிக் கொண்டு பாலைக் குடிப்பது போல் அவள் உயிரையே குடித்துவிட்டார். அவளும் சுயஉருவில் சாய்ந்து இறந்தாள். யசோதையும், ரோகிணியும் ஓடிவந்து குழந்தையை எடுத்து அதற்குத் திருஷ்டி கழித்து பாலூட்டி ஒரு வண்டியின் கீழுள்ள தொட்டிலில் கிடத்தினர். அப்போது குழந்தை அழுதது. கால்களை உதைத்துக் கொள்ள கால்கள் பட்டதும் வண்டி உடைந்து விழ அரக்கன் சகடாசுரன் சுயவடிவில் இறந்தான். அடுத்து காற்று வடிவில் குழந்தையை தூக்கிச் சென்ற அரக்கன் திருணாவர்த்தனையும் கண்ணன் கொன்றுவிட்டான். கர்க்க முனிவர் நந்தகோபன் விருப்பப்படி மங்கல காரியங்களைச் செய்து ரோகிணி புத்திரனுக்குப் பலராமன் என்றும் யசோதை மகனுக்கு கிருஷ்ணன் என்றும் நாமகரணம் செய்து வைத்தார்.

பாலகிருஷ்ணன், ராமன் சேஷ்டைகள், லீலைகள்

இருவரும், தம் தோழர்களுடன் கோபியர்களின் இல்லங்களுக்குச் சென்று தயிர், பால், வெண்ணெய் திருடி உண்டனர். இவர்கள் குறும்புத் தனங்களைத் தடுக்க முடியாமல் யசோதை கண்ணனை உரலுடன் கட்டிப் போட்டு, வீட்டு வேலைகளைக் கவனிக்கச் சென்றாள். கண்ணன் அவ்வுரலுடன் அங்கிருந்த இரண்டு மருத மரங்களுக்கு இடையே செல்ல, அவை முறிந்து விழுந்தன. அவை நாரதர் சாபத்தினால் மரங்களான குபேர குமாரர்கள் நளகூபரனும், மணிக்கிரீவனும் ஆவர். அவர்கள் பகவானை வலம் வந்து வணங்கி தம் இடம் சென்றனர். ஒருநாள் பலராமன் யசோதையிடம் வந்து கண்ணன் மண்ணைத் தின்றான் என்று கூற, அவன் கண்ணனைச் சினந்து மண்ணைத் தின்றாயா? வாயைத் திறந்து காட்டு என, கண்ணன் வாயைத் திறந்தான். அப்போது யசோதை அண்ட சராசரங்களையும், கடல், நதி, மலை, தீவு, சூரிய, சந்திரன் என்று அனைத்தையும் கண்டு திகைப்புற்றாள். பின்னர் அவன் வாயை மூட அவள் கொஞ்சினாள்.

ஒரு சமயம் கண்ணன் கை நிறைய தானியங்களை ஒரு பழக்காரியிடம் கொடுத்து பழங்கள் கேட்க, அவள் அவன் கை நிறைய பழங்கள் தர, அவள் பழக்கூடையில் நவரத்தினங்கள் நிறைந்தன. ஒருநாள் வயதில் முதிர்ந்த உபநந்தர் என்பவர் கோகுலத்தில் ஆபத்துக்கள் தோன்றுகின்றன. எனவே, வேறிடம் செல்லலாம் என்று கூற எல்லோரும் பசுக்களுக்கும், ஆயர்குல மக்களுக்கும் வசிக்கத் தகுதியான இடமான பிருந்தாவனம் சேர்ந்தனர். சிலநாட்கள் செல்ல கண்ணன் தோழர்களுடன் கன்றுகளை மேய்த்து வரலானான். ஒருநாள் கம்சனால் ஏவப்பட்ட வத்சாசுரன் என்னும் அரக்கன் மாயக்கன்றாகி கன்றுகளுடன் திரிந்தான். இதை அறிந்த கிருஷ்ணன் அக்கன்றின் பின்கால்களைப் பற்றி தூக்கி அருகிருந்த விளாமரத்தின் மீது மோதிட அசுரன் உயிரிழந்தான். மற்றொரு சமயம் பகாசுரன் என்னும் அரக்கன் கொக்கு வடிவில் வந்து கண்ணனை விழுங்க முயல அவன் அதன் அலகுகளைப் பற்றிச் சிறு புல்லைக் கிழிப்பது போல் கிழித்துக் கொன்றான்.

4. மலரவன் செய்த மாயம்

மற்றொரு நாள் அகாசுரன் என்ற அசுரன் ஒரு பெரிய மலைப் பாம்பின் வடிவில் சிறுவர்கள் வரும் வழியில் வாயை மிகவும் பெரியதாகத் திறந்து கொண்டு படுத்திருந்தான். தோழர்கள் இதை அறியாமல் அதன் வாயில் நுழைந்து சென்றனர். உடனே கண்ணனும் அவர்கள்பின் சென்று தனது சரீரத்தை மிகப் பெரிதாய் ஆக்கிட, அசுரன் மூச்சுத் திணறி கண்விழி பிதுங்கி உயிர்நீத்தான். கண்ண பகவான் தனது அருட்பார்வையால் அனைவரையும், கன்றுகளையும் உயிர்பிழைக்கச் செய்தார்.
மற்றொரு சமயம் கண்ணன் தோழர்களுடன் வனபோஜனம் செய்து கொண்டிருந்தபோது சிறுவர்கள் பார்த்துக் கொண்டிருந்தபோதே கன்றுகள் காணாமல் போயின. அது பிரம்மதேவனின் செயலென அறிந்த பகவான் தானே கன்றுகளாகவும், சிறுவர்களாகவும் கோகுலத்தில் நுழைந்தார். ஆனால் இது பற்றி பலராமன் ஞானக்கண் கொண்டு அறிந்து கொண்டார்.

பிரம்ம தேவர் இது எவ்வாறு சாத்தியம் என்று பார்க்க கிருஷ்ணன் குழலூதிக் கொண்டு சிறுவர்களாகவும், கன்றுகளாகவும் காட்சி அளிக்க பிரம்மதேவன் கிருஷ்ணனின் சரண கமலங்களில் தலைவணங்கி, பலவகையாகத் துதி செய்து கிருஷ்ணனை வலம் வந்து தன் இருப்பிடம் சென்றார். புனிதமான பிருந்தாவனத்தில் கிருஷ்ணன் தோழர்களுடன் விளையாடிக் கொண்டே அருகில் உள்ள பனங்காட்டுக்குச் சென்றார். அங்கிருந்த தேனுகன் என்ற அசுரன் கழுதை வடிவில் ஓடிவர, பலராமன் அதன் கால்களைச் சேர்த்துப் பிடித்துத் தூக்கிச் சுழற்றிப் பனைமரத்தில் மோதிட அசுரன் உயிரிழந்து கீழே விழுந்தான். சிறுவர்கள் உதிர்ந்த பனம் பழங்களை உண்டனர்.

அரவின் மேல் ஆடிய கிருஷ்ணன்

ஒருநாள் கிருஷ்ணன், பலராமன் இன்றித் தோழர்களுடன் யமுனைக்குச் சென்றார். அன்று வெய்யில் கடுமையாக இருந்ததால் சிறுவர்கள் அந்நதி நீரைப் பருக உயிரை இழந்தனர். அந்நதியில் ஒரு மடுவில் வசித்து வரும் காளீயன் என்னும் சர்ப்பத்தின் கொடிய விஷத்தால் நீர் விஷமாகி இருந்தது. இவ்வாறு உயிர்கொலைக்குக் காரணமான காளீயனை அடக்க கிருஷ்ணன் அருகிருந்த கதம்ப மரத்தின் மீதேறி நீரில் குதித்தார். காளீயன் கோபம் கொண்டு சீறி எழுந்து கண்ணனைக் கடித்தது. அதுகண்டு அனைவரும் மயங்கி விழுந்தனர். செய்தி அறிந்த நந்தகோபர், யசோதை, ரோகிணி ஆகியோரும் ஓடி வந்தனர். கிருஷ்ணன் தன் உடலைப் பெரிதாக்கி, காளீயன் தலைமீது ஏறி நடனமாடி, அதனை அடக்கிட, காளீயன் ரத்தம் கக்கி, தனது பத்தினிகளுடன் கைகூப்பி நின்று கிருஷ்ணனைத் துதி செய்தான். உடனே கிருஷ்ணன் கீழே குதித்து சர்ப்பராஜனாகிய காளியனுக்கு கீழ்க்கண்டவாறு ஆணையிட்டார்.

காளீயனே, உனது குடும்பத்தினருடன் இனி சமுத்திரத்திற்குச் சென்றுவிட வேண்டும். என்னை இரண்டு சந்தியா காலங்களிலும் நினைப்பவனுக்குச் சர்ப்ப பயம் உண்டாகாது. இம்மடுவில் நீராடி என்னைப் பூஜிப்பவனது பாவங்களெல்லாம் நீங்கிவிடும் என்று கூறினார்.

5. பிரலம்பாசுரன் வதம்

ஒரு சமயம் ராம கிருஷ்ணர்கள் பிருந்தாவனத்தில் சஞ்சரித்தபோது பிரலம்பன் என்ற அசுரன் கோபன் வேஷத்தில் அவர்களுடன் இருந்தான். கிருஷ்ணன் சிறுவர்களிடம் எல்லோரும் இரு கட்சியாகி ஒரு கட்சித் தன் தலைமையிலும், மற்றொன்று பலராமனைத் தலைவனாகக் கொண்டும் ஆடவேண்டும் என்று கூற அவ்வாறே விளையாடத் தொடங்கினர். விளையாட்டில் தோற்றவர், வென்றவரைத் தோளில் தூக்கிக் கொண்டு ஓட வேண்டும் என்றபடி தோல்வி அடைந்த பிரலம்பன் பலராமனைச் சுமந்து செல்ல நேர்ந்தது. உண்மையை அறிந்த பலராமன் அசுரன் தலையில் தனது முஷ்டியால் குத்த அந்த அடியைத் தாங்க முடியாமல் அவன் ரத்தம் கக்கி கீழே விழுந்து உயிரை விட்டான்.

காட்டுத் தீ

மற்றொரு நாள் பசுக்கள் புல்லை மேய்ந்து கொண்டிருக்க, சிறுவர்கள் விளையாட்டில் கவனமாக இருந்தனர். அப்போது திடீரென்று காட்டில் தீ ஏற்பட்டு எங்கும் பரவிட, செய்தி அறிந்த கண்ணன், அவர்கள் துயர் துடைக்க எல்லோரையும் கண்ணை மூடிக் கொள்ளும்படி கூறினார். பகவான் அத்தீயைத் தானே விழுங்கி விட்டார்.

கோபிகா ஸ்த்ரீகள்

பிருந்தாவன சஞ்சாரியான கிருஷ்ண பரமாத்மாவைக் கோபிகா ஸ்த்ரீகள், மனதால் தியானித்து அவனது திவ்யலீலா வைபவங்களை வர்ணித்து, அவனுடைய இணையில்லா வடிவழகை அகக்கண்களால் கண்டு ஆனந்தக்கடலில் மூழ்கித் திளைத்தனர். கிருஷ்ணன் மீது கொண்ட பிரேமபக்தியில் திளைத்துக் கிடந்த அந்த ஆயர்குலப் பெண்டிர் பகவானின் வேணுகான அனுபவத்திலே ஆழ்ந்து கிருஷ்ணமயமாகினர். அதாவது தன் மயமாகவே ஆகிவிட்டனர்.

6. ரிஷி பத்தினிகள் அளித்த போஜனம்

ஒருநாள் கண்ணன், தன் தோழர்களுடன் இயற்கை எழில் கொஞ்சும் காட்டில் வெகுதூரம் பசுக்களுடன் சென்றான். அங்கே நீர் நிலையில் பசுக்களுக்கு நீர் காட்டிவிட்டு எல்லோரும் அமர்ந்தனர். அப்பொழுது நண்பர்கள் பசியினால் வருந்த கண்ணன் அவர்களிடம் அதோ அந்தணர்கள் சொர்க்கம் வேண்டுமென ஆங்கிரஸ யாகம் செய்கின்றனர். அங்கு சென்று கேளுங்கள்? அன்னம் கொடுப்பார்கள். தவறாமல் என் பெயரையும் என் அண்ணா பெயரையும் சொல்லிக் கொள்ளுங்கள் என்றார். ஆனால் பெருத்த ஏமாற்றம். அவர்கள் பரப்பிரம்மமாகிய கண்ணனைச் சாதாரண மானிடனாகவே எண்ணி அந்தச் சிறுவர்களை மதிக்கவேயில்லை. இல்லை, உண்டு என்றுகூட கூறவில்லை. சிறுவர்கள் வெறுப்புடன் திரும்பி வந்து நிகழ்ந்ததை கூற பகவான் சிரித்துக் கொண்டே நீங்கள் யாகசாலைக்குச் செல்லாமல் ரிஷி பத்தினிகளிடம் சென்று கூறுங்கள். அவர்கள் நிறைய அன்னம் அளிப்பர் என்றார்.

கிருஷ்ண தியானமாகவே இருக்கும் அந்த ரிஷிபத்தினிகள் சகல விதமான போஜன பதார்த்தங்களையும் தனித்தனியே பாத்திரங்களில் எடுத்துக் கொண்டு சிறுவர்களுடன் உலாவும் கிருஷ்ணனையும், பலராமனையும் கண்டு மயங்கி நின்றனர். அவர்களைக் கணவர்கள் தடுத்தும் பயனில்லை. கிருஷ்ணன் அந்தப் பெண்மணிகளை வரவேற்று இனிமையாகப் பேசினான். மனைவி, மக்கள், உறவினர், சரீரம், பிராணன், மனம், புத்தி எல்லாம் பிரியமுள்ளதாக இருப்பதற்குக் காரணம் ஆத்ம சம்பந்தமாகும். ஸர்வம் ஆத்மாவாக விளங்குகிறது. என்னை விட பிரியமான வஸ்து வேறென்ன உள்ளது. நீங்கள் என்னை நாடி வந்தது மிக்க சிறப்புடைய செயலாகும். இனி சென்று யாக காரியங்களைக் கவனியுங்கள் என்றார்.

உற்ற வஸ்துக்களை விட்டு விட்டுத் தங்களையே சரணடைந்த சரணதாசிகளான எங்களை அங்கீகரித்து வேதவாக்கியங்களை உண்மையாக்குங்கள் என்று வேண்டினர் அந்த ஸ்திரீகள். அதற்குக் கிருஷ்ணன், இடைவிடாமல் என்னை நினைப்பவர்கள் என்னையே வந்தடைவர். நீங்கள் வீட்டிற்குச் செல்லுங்கள். என்னையே தியானித்து பஜனம் செய்யுங்கள் என்று அறிவுரை கூறி அனுப்பினார். பகவானும், சிறுவர்களும் போஜனம் செய்து மகிழ்ந்தனர். நடந்ததை அறிந்து மகரிஷிகள் கர்ம வழியில் ஈடுபட்டு மயக்கமடைந்த தங்களை மன்னிக்கும்படி பகவானை மனதால் தியானித்து வணங்கினர்.

7. கோவர்த்தனகிரி பூஜை

ஒரு சமயம் நந்தகோபர் இந்திர யாகம் செய்ய ஏற்பாடு செய்தார். அப்போது அது பற்றிய விவரம் கேட்ட கண்ணனை நந்தகோபர் அன்புடன் அணைத்துக் கொண்டு, மழையினால் பயிர்கள் செழிக்கின்றன. மழைக்கு அதிபதியாகிய இந்திரனை பூஜிப்பது பரம்பரை வழக்கம். எனவே இப்போது பலவித தானியங்களாலும் இந்திரனைப் பூஜிக்கிறோம். இதுவே இந்திர யாகம் என்றார். அப்போது கிருஷ்ணன், இயற்கையின் நியதிப்படி உலகம் எல்லாம் நடைபெறுகின்றன. ரஜோகுண சம்பந்தத்தாலேயே மேகம் மழையைப் பொழிய பயிர்கள் செழிக்கின்றன. எனவே காடு, மலை, பசுக்களை நாம் பூஜிக்க வேண்டும். யாகப் பொருள்களைக் கொண்டு வேதியர்களை பூஜிப்போம். பசுக்களுக்கு புல்லை அளித்து, ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம். இயற்கையைப் பூஜிப்பதே தக்கது என்று கூறினார். நந்தகோபரும் அதை ஏற்றிட, பகவான் எண்ணியபடி யாவும் நடந்தன. கிரிவலம் வந்தனர். எல்லோரும் குறிப்பாக கோபியர்கள் ஸ்ரீகிருஷ்ண மகிமைகளை ஆனந்தமாகப் பாடிக் கொண்டே பின் தொடர்ந்தனர். அப்போது கண்ணன் அழகிய பேருருவுடன் தோன்றி தானே மலையின் முக்கிய தேவதை என்றிட, கிருஷ்ணனும் அப்பாவி போல் நின்று அத்தேவதையை பணிவுடன் வணங்கினார். கோகுலவாசிகளும் நந்தகோபரும் பக்தியுடன் வணங்கிப் பூசித்து மகிழ்ந்தனர்.

இஃதறிந்த இந்திரன் மிக்க கோபம் கொண்டு கருமேகங்களை ஏவி பெருமழைப் பெய்யச் செய்தான். செய்வதறியாத ஆயர்குல மக்கள் கிருஷ்ணனைச் சரணடைய, அவர் சரணமடைந்தவரைக் காப்பது தன் கடமை என்று கோவர்த்தனகிரியையே தூக்கிக் குடையாகப் பிடித்து எல்லோரையும் அதனடியில் வந்து சுகமாகத் தங்கி இருக்குமாறு கூறினார். இவ்வாறு ஏழு நாட்கள் கழிய இந்திரன் பகவானின் யோக மகிமையை உணர்ந்தான். அவன் கர்வம் அடங்கியது. மழை நின்றது. இத்தகைய கண்ணனின் அதிமானுஷ்யச் செயலை தேவலோகத்திலிருந்து கண்ட காமதேனுவும், இந்திரனும் பூலோகம் வந்து ரகசியமாக பகவானைத் தரிசித்து வணங்கினர். அப்போது இந்திரனிடம் பகவான், நீ ஆடம்பரத்தையும், கர்வத்தையும் விட்டு பதவியில் கவனமாய் இரு. என் உத்தரவுபடி நட. ÷க்ஷமம் உண்டாகும். உன் இருப்பிடம் செல்க என்று விடை கொடுத்து அனுப்பினார். காமதேனுவும் தனது பாலைப் பொழிந்து பகவானுக்கு அபிஷேகம் செய்தது. தேவர்களும், தூப, தீப, நைவேத்தியங்களுடன் பகவானுக்கு கோவிந்தன் என்று பெயரிட்டுப் பட்டாபிஷேகம் செய்வித்தனர்.

8. குழலிசை மயக்கம்-ராஜஸ் கிரீடை

ஒரு சமயம் பூர்ணசந்திரன் பால் நிலவில் கண்ணன் யோகமாயா தேவியின் உதவியுடன் ஓர் அதிசய விளையாட்டை நிகழ்த்தினான். பகவான் ஓர் இனிய குழலூதி எல்லோரையும் தன் வயப்படுத்தினான். அவன் இனிய கீதத்தில் மயங்கி கோபியர்கள் அனைவரும் தன் இருப்பிடம் விட்டு கண்ணனிடம், வந்து சேர்ந்தனர். கிருஷ்ண பிரேமையில் ஆழ்ந்த அவர்களும், வரமுடியாமல் வீட்டிலே தங்கியவர்களும் கூட கண்ணன் தியானத்தில் ஒன்றிய உள்ளம் கொண்டவர்களாய் மெய்மறந்து சொக்கி நின்றனர். அந்த மங்கையர்களைக் கண்ட கண்ணன் வசீகரப் புன்னகையுடன் இனிமையாகப் பேசினார், என்னிடம் அன்பு கொண்டு வந்தது சரியே. எனினும்  அவரவர்க்குரிய தர்மங்களைச் செய்யாமல் வரலாமா. திரும்பி செல்லுங்கள். என் அருகில் இருப்பதைவிட என்னை உள் அன்புடன் தியானிப்பது, என் சரிதம் கேட்பது, என் நாமகீர்த்தனம் ஆகியவற்றால் என் மீது பக்தி அதிகமாகிறது என்று கூற, அப்பெண்மணிகள், சரணமே கதி என்று வந்த எங்களைக் கைவிடாமல் ரக்ஷித்தருள வேண்டும் என்று பிரார்த்தித்தனர்.

மேலும் எங்களைச் சரண தாசிகளாக ஏற்றுக் கொண்டு அனுக்கிரகம் செய்யுங்கள். தங்கள் கர கமலங்களை எங்கள் சிரசின் மீது வைத்து அருள்புரியுங்கள் என்று வேண்டினர். அப்போது கண்ணன் தனது இனிய புன்னகையால் அவர்களை மகிழ்வித்தார். அந்தக் கபடமற்றப் பெண்களுடன் பிருந்தாவனத்தில் ஆனந்தமாக ஆடிப் பாடினார். கோபியர்களும் ஆனந்தமாக கண்ணன் புகழைப் பாடிக் கொண்டே உல்லாசமாக சஞ்சரித்தனர். இவ்வாறு யமுனை ஆற்றங்கரையில் பிருந்தாவனத்தில் கோபியருடன் கண்ணன் ஆனந்தமாக இருக்கையில் அவர்கள் ஒவ்வொருவரும் கண்ணன் தன்னை மட்டுமே நேசிக்கிறான் என்ற எண்ணத்துடன் பெருமிதம் கொண்டனர். இஃதறிந்த கண்ணன் மெல்லச் சிரித்துக் கொண்டே திடீரென்று மறைந்து விட்டான். கோபியர்கள் தங்கள் உள்ளத்தையே கண்ணனிடம் ஒப்படைத்து, கிருஷ்ண தியானமாகவே இருந்தனர். எல்லோரும் சேர்ந்து கானம் பாடினர். அதுவே கோபிகா கீதம்.

9. அரிஷ்டாசுரன், வியோமாசுரன் ஆகியோர் வதம்

ஒருநாள் அரிஷ்டன் என்ற அசுரன் மலை போன்ற ரிஷப வடிவில் உறுமிக் கொண்டு கோகுலத்தில் நுழைந்தான். அவன் இடைச்சேரியில் அட்டகாசம் செய்து கொண்டு அச்சுறுத்தி வந்தான். கூர்மையான கொம்புகள் கொண்ட அது தன் குளம்புகளால் பூமியைப் பிளப்பது போல் இடித்தது. பசுக்கள் நடுங்க பாய்ந்து வந்தது. அக்கொடிய காளையைக் கண்ட மக்கள் கிருஷ்ணா, கிருஷ்ணா என்று கூறிக்கொண்டே கிருஷ்ணனிடம் சரண் புகுந்தனர். உடனே அவன் காளையின் கொம்புகளைப் பற்றி, கீழே தள்ளி மிதித்து அதன் உடலை முறுக்கிப் பிழிந்து கொன்று வீழ்த்தினார். மற்றொரு நாள் வியோமாசுரன் என்பவன் கோபியர் குமாரர்களை மலைக்குகையில் அடைத்து வைக்க, கிருஷ்ணன் அவ்வசுரனைக் கொன்று கோபியர் குமாரர்களை விடுவித்தார்.

ஒருசமயம் கண்ணன் சுதரிசனன் என்ற பாம்பைக் காலினால் மிதித்துக் கொன்றான். மற்றொரு சமயம் பிரகஸ்பதி முனிவரைச் சுதரிசனம் என்ற வித்தியாதரன் இகழ்ந்ததால், அவர் அவனைப் பாம்பாகும் படிச் சபித்தார். சாப விமோசனத்தை அந்தப் பாம்பு இவ்வாறு கண்ணனால் பெற்றது.

10. கோபியர் துகில் உரிந்தான்

சில கோபியர் கண்ணனே தனக்குக் கணவனாக வேண்டுமென பாவை நோன்பு நோற்றனர். அவர்கள் பனிவரைக் கன்னியைத் தொழுதனர். துர்க்கை உருவை வரைந்து நோன்பு நோற்றனர். இதனையே கார்த்தியாயினி விரதம் என்றும் கூறுவர். விரதம் அனுஷ்டிக்க முற்பட்ட பெண்டிர் நீராடச் சென்றனர். சென்ற இடத்தில் தங்களுடைய உடைகளையும், நகைகளையும் கரையிலேயே வைத்து விட்டு நீரில் மூழ்கி நீராடினர். அப்படி அவர்கள் நீராடிக் கொண்டிருக்கையில் அவர்களுக்குக் கண்ணனின் புல்லாங்குழல் ஓசை கேட்டது. உடனே அவர்கள் வெளிவர எண்ணிக் கரையில் தமது துணிகளைக் காண அங்கே அவை காணப்படவில்லை. ஸ்ரீகிருஷ்ணனே புடவைகளைக் குறும்புத்தனமாக மறைத்திருப்பான் என்று நினைத்து, வேணுகானம் வந்த திசையை நோக்கித் தேடினர். அங்கேயே கரையில் இருந்த ஒரு மரத்தின் கிளைகளிலே அவர்களுடைய உடைகளையும், அவற்றை அபகரித்த கள்ளன் கண்ணனையும் கண்டனர். அவர்கள் தங்கள் கைகளால் மார்பை மூடிக் கொண்டு நீருக்குள் சென்று கழுத்தளவு நீரில் நின்று கண்ணனிடம் வேண்டினர்.

கிருஷ்ணா, உன்னையே நம்பி உள்ளவர்கள் நாங்கள். உங்களைத் தவிர வேறு யாரையும் எண்ணிக்கூட பார்ப்பது இல்லை. உங்களையே சரணமடைந்த எங்களை இப்படி நடத்தலாமா? தயவு செய்து எங்கள் சேலைகளைப் போடு என்று வேண்டினர். கார்த்தியாயினி விரதம் அனுஷ்டிக்க எண்ணிய நீங்கள் ஆடை ஏதுமின்றி நீரில் இறங்கி நீராடலாமா? நீங்கள் என்னையே நம்பி இருப்பதாகவும், நானே உங்கள் நாதன் என்று உரைத்தீர்கள். அது உண்மையானால் நீங்கள் என்னிடம் அப்படியே நேரில் வந்து உங்கள் சேலைகளைப் பெற்றுக் கொள்ளலாமே என்றான் கண்ணன். ஆடையின்றி எப்படி வருவது? எங்களுக்கு வெட்கமில்லையா? என்று கோபிகைகள் கூற கண்ணன், என்னை விட உங்களுக்கு உங்கள் உடல் வெட்கமே முக்கியம் போலும். இத்தகைய தேகாபிமானம் அதாவது உடல் மீது பற்றுள்ள உங்களுக்குக் கார்தியாயினி எப்படி கருணை காட்டுவாள்? உங்களுடைய பற்று உங்களுக்கு மோக்ஷம் கிடைக்காமலிருக்கத் தடையாகும் என உபதேசித்தான் மாயக்கண்ணன்.

அப்போது அவர்கள் பகவானின் அறிவுரை கேட்டு மனத் தெளிவு பெற்றனர். கிருஷ்ண பிரேமையில் மூழ்கி அவனையே கணவனாக அடைய விரும்பிய அவர்கள் வெட்கத்தையும், தேகாபிமானத்தையும் பற்றையும் விட்டு இருகைகளையும் தலைக்கு மேல் தூக்கி வணங்கி மெய்மறந்து துதி செய்தனர். அப்போது மாயக்கண்ணன் அவர்களுடைய சேலைகளை அவர்களுக்கு அளித்து மறைந்துவிட்டான். கோபியர்க்குப் பற்றற்ற நிலையை உணர்த்தவும், தன்னையே சரணடைந்தாரைக் காக்கும் தன் இயல்பையும், தனது பக்தர்களுக்கு எந்நிலையிலும் இழுக்கு நேராவண்ணம் உதவவும் வாத்சல்ய குணத்தையும் உணர்த்தவே இந்த கோபிகா வஸ்திராபரணம் நடத்தினான் மாயக்கண்ணன் என்று முடித்தார் சுகப்பிரம்மம்.

11. கேசி வதம்

கம்சனால் ஏவப்பட்ட கேசி என்னும் அசுரன் ஸ்ரீகிருஷ்ணனைக் கொல்லும் எண்ணத்துடன் குதிரை வடிவத்தில் வந்து குளம்புகளால் பூமியை இடித்தும் பிடரி மயிர்களால் மேகங்களைக் குத்தியும், குதித்தோடும் வேகத்தால் சந்திர, சூரிய வழிகளில் தாவிக்கொண்டும் பெரும் கனைப்புடன் அங்கிருந்த ஆயர்களைத் துரத்தினான். இது கண்டு அச்சமுற்ற ஆயர்களும், ஆய்ச்சியரும் ஸ்ரீகிருஷ்ணனைச் சரணடைந்து காத்தருள வேண்டும் என்று பிரார்த்தித்தனர். அப்போது கண்ணன் புன்சிரிப்புடன் அவர்களைப் பயப்பட வேண்டாம் என்றும், அற்ப பலம் கொண்டது அது என்றும் கூறினான். மேலும் அவன் பலமற்றவன் சும்மா குதித்து ஆட்டம் காட்டுகிறான் என்றும் கூறி அவர்களை அமைதியாக இருக்கப் பணித்தான்.

கேசியை நோக்கி வா என அழைத்து அதன் பற்களை உதிர்த்து விடுவதாகக் கூறினான் கண்ணன். அப்போது அக்குதிரை வாயைத் திறந்து கொண்டு கண்ணன் மீது பாய்ந்தது. உடனே கண்ணன் தன் கையை அதன் வாயிலே புகுத்தி, மிகப்பெரிதாக்கினார் கையை. அவன் பற்கள் யாவும் உடைபட்டன. வாய் இரண்டாகக் கிழக்கப்பட்டது. இதைக் கண்ட ஆயர்கள் மட்டுமின்றி, தேவர்களும் மகிழ்ச்சி உற்றனர். கேசியின் வதத்தை விண்ணிலிருந்து மறைந்து பார்த்த நாரதர் வெளிப்பட்டுக் கண்ணனைத் துதி செய்தார். பகவானுக்கு இதன் காரணமாக கேசவன் என்ற திருப்பெயர் விளங்கட்டும் என்றும் அடுத்து நடத்த இருக்கும் கம்ச யுத்தத்திற்கு வருவதாகவும் கூறிச் சென்றார் முனிவர்.

12. அக்ரூரர் கோகுலம் செல்லுதல்

கிருஷ்ண பலராமர்கள் அரக்கர்களைக் கொன்றது, கோவர்த்தன மலையைத் தூக்கியது, தேவகியின் மகனாகப் பிறந்து யசோதையினிடம் வளர்தல் போன்ற செய்திகள் அனைத்தையும் நாரதர் கம்சனுக்குக் கூறிட, அவன் வெகுண்டெழுந்தான். பின்பு சாணூரன், முஷ்டிகன் என்ற மல்லர்களுடன் ஆலோசித்து கிருஷ்ணனையும், பலராமனையும் கொல்லுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தான். பிறகு, விருஷ்ணிகுல நண்பர் அக்ரூரரிடம் கோகுலம் சென்று, மதுரா நகரில் நடத்த உள்ள தனுர் யாகத்திற்கு, ராமகிருஷ்ணர்களையும், நந்தகோபரையும் அழைத்து வரும்படியும், அவர்களை உடனே கொல்ல வேண்டும் என அறிவித்து தேரையும் கொடுத்து அவரை அனுப்பினான்.

அக்ரூரர் ஸ்ரீகிருஷ்ண சரணங்களைக் கண்டு வணங்கிச் செல்வதற்கான வாய்ப்பாகக் கருதி உடனே புறப்பட்டார். கம்சன் தன்னைக் காத்துக் கொள்ள செய்வதனைத்தையும் அறிந்த அக்ரூரர் இம்முயற்சியில் கம்சன் தோல்வி அடையப் போவதையும் அறிந்திருந்தார். அக்ரூரன் வழிநெடுக கிருஷ்ண தியானமாகவே இருந்து கோகுலத்தை அடைந்து ராமகிருஷ்ணர்களிருக்கும் இடத்திற்குச் சென்றார். சென்றவர் அவர்களின் திருவடிகளில் விழுந்து வணங்கி தான் வந்த காரணத்தையும், கம்சன் ஏற்பாடுகளையும் விளக்கினார்.

கோகுலத்தில் அக்ரூரர்

செய்தி அறிந்த நந்தகோபர் தனுர் யாகம் காண மதுரை செல்ல ஆயத்தமானார். ஆனால், கண்ணன் பிரிந்து செல்வதை ஏற்காத கோபியர்கள் அவரைத் தடுத்து நிறுத்த முயன்றனர். தேர் கிளம்பியது கண்டு அதனைப் பின் தொடர்ந்து சென்றனர். அப்போது கண்ணன் தான் வெகுவிரைவில் திரும்பி வருவதாக அன்புடன் கூறி அவர்களைச் சமாதானப்படுத்தினார்.

யமுனையில் அதிசயம் காணல்

பகவானுடைய தேர் யமுனைக் கரையில் சிறிது நேரம் நின்றது. அக்ரூரர் யமுனையில் இறங்கி நீராடச் சென்றார். அவர் நீரில் மூழ்கிய போது எதிரில் தேரில் அமர்ந்திருக்கும் இராமலக்ஷ்மணர்களைக் கண்டு வியந்தார். மறுபடியும் மூழ்கிட அப்போது அங்கு ஆதிசேஷ பகவானையும், சங்கு சக்கரதாரியையும் கண்டு பரமானந்தம் கொண்டு துதி செய்தவண்ணம் மெய்மறந்து நின்றார். அவருக்குத் தோற்றமளித்த பகவான் மறைந்துவிட அக்ரூரர் அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு ரதத்தின் அருகில் வந்து சேர்ந்தார். அப்போது கிருஷ்ணன் சிரித்துக் கொண்டே அக்ரூரரை நோக்கி என்ன அதிசயம் கண்டவர் போல் இருக்கிறீரே, என்ன விஷயம்? என்று கேட்டார். அதற்கு அக்ரூரர் ஜகத் சொரூபியாகிய அவரையே பார்க்கின்ற தனக்கு வேறென்ன அதிசயம் வேண்டும் என்று கூறிக்கொண்டே தேரேறி குதிரைகளை ஓட்டினார். அந்தி சாயும் நேரம் மதுரையை அடைந்தனர். கிருஷ்ண பலராமர்கள், நந்தகோபர் மற்ற ஆயர்பாடி மக்களுடன் தங்கியிருக்கும் உபவனத்திலேயே தங்கிவிட்டு காலையில் நகரத்துக்கு வருவதாகக் கூறி அக்ரூரருக்கு விடை கொடுத்து அனுப்பினர்.

13. மதுரையில் ராம கிருஷ்ணர்கள்

மறுநாள் நகரைச் சுற்றிப் பார்த்து வருகையில் வழியில் சுதர்மதன் என்ற வண்ணான் எதிர்ப்பட அவனிடமிருந்த வஸ்திரங்களைத் தருமாறு கேட்க, அவன் மறுக்க அவனை வதம் செய்து வஸ்திரங்களைக் கோபர்களுக்குக் கொடுத்தார். பின்னர் ஒரு வியாபாரி அவரைப் பணிந்து ஆடை, அணிகளால் அவரை அலங்கரித்து மகிழ, அவனுக்கு சகல சவுபாக்கியங்களையும் அருளினார் பகவான். பிறகு சுதர்மர் என்ற பூக்காரர் வீட்டுக்குச் சென்று அவனுக்கு அனுக்கிரகம் செய்தார். வழியில் சந்தன கிண்ணத்துடன் ஒரு வக்கிரமான பெண்ணைக் கண்டவர் அவளைப் பற்றி விசாரித்து சந்தனத்தைத் தனக்குத் தருமாறு கேட்டார். அவள் தன் பெயர் திரிவக்கிரா என்றும், கம்சனின் வேலைக்காரி என்றும், சந்தனத்தைக் கம்சனுக்கு எடுத்துச் செல்வதாகக் கூறிய அவள் அதைப் பூசிகொள்ளும் தகுதியுள்ளவர் கிருஷ்ணனே என்று கூறி அவரிடம் கொடுத்துவிட்டாள். இதனால் மகிழ்ச்சி அடைந்த பகவான் அவளைச் சுந்தர சொரூபியாக்கி விட்டார்.

தனுர் யாகம்

பின்னர் தனுர் யாகம் நடக்கும் இடத்தை அடைய, அங்கு இருந்த பெரிய தனுசைக் கையிலெடுத்து நாணேற்றி ஒடித்திட அனைவரும் கிருஷ்ணனின் அழகையும், வீரச்செயலையும் கண்டு பிரமித்து நின்றனர். இவ்வாறு கிருஷ்ணன் அங்கே சேர்ந்து வில்லை ஒடித்த செய்தி அறிந்த கம்சன் மல்யுத்த ஏற்பாடுகளைச் செய்ய உத்தரவிட்டான். மக்கள் கூடினர். வாத்தியங்கள் முழங்கின. கம்சன் மந்திரி, பிரதானிகளுடன் நண்பர்கள் புடைசூழ சிம்மாசனத்தில் வீற்றிருந்தான். நந்தகோபரும், கோபாலர்களும் கம்சனுக்குக் காணிக்கை செலுத்திவிட்டு அருகில் அமர்ந்தனர். மல்யுத்த வீரர்கள் சாணூரன், முஷ்டிகன், சலன் ஆகியோர் மேடையை அடைந்தனர்.

குவலயா பீடம்

ராமகிருஷ்ணர்கள் நீராடி, அலங்கரித்துக் கொண்டு சபைக்கு வந்தனர். வாயிலில் நின்ற காவல்காரன் கம்சனின் ஆணைப்படி குவலயாபீடம் என்ற யானையை அவர்கள் மீது ஏவிட, அது ராமகிருஷ்ணர்களைக் கொல்ல ஆயத்தமாக, பகவான் அதன் தந்தங்களை ஒடித்து அவற்றாலேயே யானையையும், யானைப் பாகனையும் கொன்று வீழ்த்தினார். பின்னர் அந்தத் தந்தங்களையே ஆயுதங்களாகக் கொண்டு மல்யுத்த அரங்கில் நுழைந்தனர். மற்போர் வீரர்கள் ராமகிருஷ்ணர்களைப் போருக்கு அறைகூவி அழைத்தனர். அப்போரில் பகவான் சாணூரனையும், பலராமன் முஷ்டிகளையும் வெற்றி கொண்டு வதம் செய்தனர். மக்கள் ஆனந்தக் கூச்சலிட்டுக் கண்ணனைக் கொண்டாடினார்கள். மல்லர்களை வீழ்த்திய மாதவனையும், அவன் சோதரனையும் கண்டு கொதித்து எழுந்தான் மதுரை மன்னன் கம்சன். அவன் அவர்களையும், அவர்களைச் சார்ந்தவர்களையும் உக்கிரசேனன், நந்தகோபர் ஆகியோரையும் உடனே கொல்லுமாறு உத்தரவிட்டான்.

அதைக் கேட்ட பகவான் கிருஷ்ணன் கடுங்கோபம் கொண்டு கம்சனை எதிர்த்துப் போரிட்டு கடைசியில் அவன் மீது பாய்ந்து அவனைக் கீழே தள்ளி அவன் மார்பின் மீது அமர பாரம் தாங்காமல் கம்சன் உயிர் நீத்தான். ஆனால், அவன் தன் மரண பயத்தினால் சதாசர்வ காலமும் கிருஷ்ண உருவத்தையே கண்டு நடுங்கிய படியால் அவனுக்கு பகவானின் சாரூப்யம் கிடைத்தது. கம்சனுடைய மனைவிகளைச் சமாதானம் செய்து கம்சனுக்கு உத்திரக்கிரியைகளை முறைப்படிச் செய்வித்தார். பிறகு, ராமகிருஷ்ணர்கள் பெற்றோர்களையும், பாட்டனார் உக்கிரசேனனையும் சிறை மீட்டு வணங்கினர். பெற்றோர்களும் மக்களை அன்புடன் கட்டித் தழுவி முத்தமிட்டு உச்சி முகர்ந்து ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். பகவான் உக்கிரசேனரை யாதவர்களுக்கு அரசனாக்கினார். பிறகு நந்தகோபரிடம் சில காலம் மதுரையிலேயே தங்கிவிட்டு வருவதாகக் கூறி பல காணிக்கைகளை அளித்து அவரையும், அவரைச் சார்ந்தவர்களையும் கோகுலம் அனுப்பி வைத்தனர்.

குருகுலவாசம்

வசுதேவர், தேவகி குழந்தைகளுக்கு உபநயனம் செய்து வைத்து, சாந்தீபனி முனிவரிடம் வித்தை கற்க சேர்த்திட ராமகிருஷ்ணர்கள் நன்கு குருகுலவாசம் செய்து சகல வித்தைகளையும் கற்று, இறுதியில் குருவுக்கு அவர் விரும்பும் தக்ஷிணை அளிக்க வேண்டி நின்றனர். பிறகு குரு வேண்டியபடியே பிரபாச ÷க்ஷத்திரத்தில் மூழ்கி இறந்து போன குரு புத்திரனை உயிருடன் கொண்டு வந்து குருவினிடம் ஒப்புவித்து குருதக்ஷிணையாக அளித்து வணங்கினார் பகவான் கிருஷ்ணன். குருகுலத்திலிருந்து திரும்பி வந்த ராமகிருஷ்ணர்களை மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். பகவான் சில காலம் அங்கேயே தங்கி இருந்தார்.

14. உத்தவன் தூது

பின்னர் கிருஷ்ணன் விருஷ்ணிகுல சிரேஷ்டரான உத்தவ ஸ்வாமியை அணுகி, அவரைக் கோகுலம் சென்று வர வேண்டினான். அவர், கோபியர்கள் அவர்களது உள்ளம், உயிர் எனக்கே அர்ப்பணம் செய்து இகலோக, பரலோக சுகங்களையும் விட்டு என்னையே சரணம் அடைந்துள்ளனர்; அவர்களிடம் நான் விரைவில் வந்து சந்திப்பதாகக் கூறுமாறு பணித்தார். மாலையில் கோகுலம் வந்தடைந்த உத்தவரை நந்தகோபர் வரவேற்று, உபசரித்து, ÷க்ஷமலாபங்கள் பற்றி விசாரித்தார். மேலும், கண்ணன் தனக்குப் பிரியமான பிருந்தாவனத்தையும், கோகுலத்தையும் கோவர்த்தனகிரியையும் நினைத்துக் கொள்ளுகிறாரோ என்று கேட்டார். மற்றும் கிருஷ்ணனின் லீலைகளை நினைந்து நினைந்து பரவசத்தில் திளைத்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார். அருகிலிருந்த யசோதையும் அவ்வாறே மெய்மறந்து நின்றாள். அவர்களின் இணையற்ற பிரேம பக்தியைக் கண்ட உத்தவர் வியப்பினால் திகைத்து நின்றார். நந்தகோபரைப் பார்த்து, ஸ்ரீஹரியிடம் பிரேம பக்தி உடைய நீங்கள் பிறவிப் பயனை அடைந்து விட்டீர்கள். சீக்கிரத்திலேயே கிருஷ்ண தரிசனம் கிடைக்கும் என்று இயம்பி, அதனைத் தெரிவிக்கவே பகவான் தன்னை அனுப்பியதாகவும் கூறினார்.

மறுநாள் சூர்யோதயத்தில் நந்தகோபர் வீட்டின் முன் ரதத்தைக் கண்டு கோபியர்கள் பிரமித்தார்கள். அப்போது நித்திய கர்மானுஷ்டானங்களை முடித்துக் கொண்டு உத்தவர் அங்கு வந்தார். அவரை கோபியர் தனியாக அழைத்துச் சென்று, வணங்கி உபசரித்து கண்ணனைப் பற்றிக் கேட்டனர். கிருஷ்ண தரிசனத்துக்காக ஆவலுடன் துடிக்கும் அவர்களின் பிரேமாதி சயத்தைக் கண்ட உத்தவர் திகைப்புற்றார். அவர்களின் ஈடில்லா அன்பைக் கண்டு வியந்தார். பிறகு கிருஷ்ணன் சொன்ன செய்திகளை அவர்களுக்குத் தெரிவித்தார். செய்தி கேட்டு கோபியர்கள் மிகவும் மயங்கினர். அந்தக் கிருஷ்ணனிடம் கொண்ட ஆசையை மறக்க முடியவில்லை. அவனது நடையழகு, அற்புத லீலைகள், கருணா கடாட்சத்தை எங்களால் மறக்க முடியவில்லை. துன்பங்களைத் துடைக்கும் அந்த கோவிந்தன் எங்களைத் துயரக் கடலிலிருந்து மீட்டுக் காப்பாற்ற வேண்டும் என்று முறையிட்டனர். அந்த ஆயர்குல மங்கையரின் ஈடுஇணையற்ற கிருஷ்ண பக்தியை கண்ட உத்தவர் கிருஷ்ணன் மீது அன்பை, பிரேமையைக் கொண்ட கோபியர் வணங்கத் தக்கவர்கள். அவர்கள் சகல தர்மங்களையும், உற்றார் உறவினர்களையும் துறந்து சுருதிகளும் தேடுகின்ற பகவத் சரணங்களை நாடி ஓடி வந்துள்ளனர்.

இவ்வாறு கோகுலத்தில் சில நாட்கள் செலவழித்த பின்னர் உத்தவர் நந்தகோபர், கோபியர் மற்றும் கோகுலவாசிகளிடம் விடைபெற்று, மதுராபுரிக்குச் செல்ல புறப்படுகையில் நந்தகோபர் அவரை அன்புடன் தழுவிக் கொண்டு எங்கள் மனம் ஸ்ரீகிருஷ்ண சரணாரவிந்தங்களிலே நிலைத்து இருக்கட்டும். எங்கள் வாக்கில் அவன் நாமமே நிற்கட்டும். எங்கள் உள்ளத்தில் கிருஷ்ண பக்தி பெருகி வளரட்டும் என்று கூறி காணிக்கைகள் அளித்து விடை அளித்தார். உத்தவர் மதுரையை அடைந்து ராமகிருஷ்ணர்களை அடைந்து வணங்கி கோகுலவாசிகளின் அன்பை எடுத்துக் கூறி, நந்தகோபர் அளித்த காணிக்கைகளை உக்கிரசேனர், பலராம, வசுதேவர்களிடம் அளித்து வணங்கினார். பின்னர், பகவான் தனக்குச் சந்தனம் கொடுத்து வீட்டிற்கு வரவேண்டுமென்று அன்புடன் அழைத்த திரிவிக்ரன் வீட்டுக்குச் சென்று அவருக்கு அனுக்கிரகம் செய்தார்.

15. அஸ்தினாபுரத்தில் அக்ரூரர்

அடுத்து வாக்களித்தபடி அக்ரூரர் வீட்டுக்குச் சென்றார். பலராமர், உத்தவர்களுடன் தன் இல்லம் வந்த கிருஷ்ணனை அக்ரூரர் மனமுவந்து வரவேற்று உபசரித்தார். பகவானுடைய அருள்வேண்டி அக்ரூரர் பிரார்த்தித்தார். அப்போது கிருஷ்ணன் அக்ரூரரிடம் அவர் தமக்கெல்லாம் குரு, உற்ற பந்து என்றும் அவருடைய பாதுகாப்பில் தாங்கள் வாழ்ந்து வருவதாகவும் கூறினார். மேலும் தங்களைப் போன்ற சுயநலமற்ற சாதுக்கள் பூசிக்கத் தக்கவர்கள்; சாதுக்கள் தரிசனம் உடனே பயன் தருவது என்று கூறினார் கிருஷ்ணன். அடுத்து அக்ரூரரிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். தந்தையை இழந்த பாண்டவர்கள் திருதராட்டிரனிடம் இருக்கின்றார். அவர்கள் கஷ்டப்படுவதாகத் தெரிகிறது. துஷ்ட புத்தியுள்ள துரோனாதியர் தந்தை திருதராட்டிரன் அவர்களை அன்பாகக் கவனிக்கமாட்டான். உடனே அஸ்தினாபுரம் சென்று பாண்டவர்கள் நலம் அறிந்து வரவேண்டும் எனப் பணிந்து பலராமருடன் தன் இருப்பிடம் அடைந்தார்.

கிருஷ்ணன் சொல்லியபடி அஸ்தினாபுரம் சென்ற அக்ரூரர் பீஷ்மர், துரோணர், விதுரர் ஆகிய பெரியோர்களையும், திருதராட்டிரர், பாண்டவர், துரியோதனன் ஆகியோரையம், உற்ற பந்துக்களையும் சந்தித்து ÷க்ஷமலாபங்களை விசாரித்தார். மேலும் சில நாட்கள் அங்கே தங்கினார். குந்திதேவி அக்ரூரரைக் கண்டவுடன் வருத்தமுற்றாள். பிறகு எல்லோருடைய நலன்கள் பற்றி விசாரித்தாள். பக்தவத்சலனாகிய கண்ணன் பாண்டவர்களைப் பற்றியும், தன்னைப் பற்றியும் நினைக்கின்றானா? அன்பிலாரிடையே வாழ்ந்து வரும் தனக்கும், தன் குழந்தைகளுக்கும் ஆறுதல் அளிக்க வருவானா? என்றெல்லாம் கேட்டாள்; அழுதாள். அப்போது அக்ரூரனும், விதுரனும் அவளுக்கு ஆறுதல் கூறினர். பின்னர் ஒருநாள் அக்ரூரர் திருதராஷ்டிரனிடம் தர்மநீதியுடன் ஆட்சி புரியும் பந்துக்களிடம் சமபாவத்துடன் இருந்து புகழ் பெற்று ÷க்ஷமமடையுமாறு கூறினார். அதற்கு திருதராஷ்டிரன் புத்திர வாஞ்சையுள்ள மனம் சஞ்சலிக்கிறது. உமது நல்லுபதேசங்கள் நிலைக்காது. சர்வேசுவரன் கட்டளையை யாரும் மீறமுடியாது என்றார். அக்ரூரர் மதுராபுரி அடைந்து கிருஷ்ணனிடம் செய்திகளைக் கூறினார்.

16. ஜராசந்தனை வென்றது

கம்சனுடைய மரணத்துக்குப் பின் அவனது மனைவியர் அஸ்தி, பிராஸ்தி என்போர் தமது பிதா ஜராசந்தன் வீட்டை அடைந்தனர். மகத நாட்டு மன்னனாகிய ஜராசந்தன் ஐம்பத்து மூன்று அசெக்ஷளஹிணி சேனைகளுடன் மதுராபுரியை முற்றுகையிட்டான். அப்போது ராமகிருஷ்ணர்கள் தமது ஆயுதங்களை அடைய திருவுள்ளம் கொள்ள விண்ணிலிருந்து சார்ங்கம் என்ற வில்லும், அக்ஷய துணீரங்களும், கவுமோதகி என்ற கதையும் கிருஷ்ணனை அடைந்தன. பலராமருக்குக் கலப்பையும், ஓர் உலக்கைத் தடியும் வந்தன. இரண்டு தேர்களும் சாரதியுடன் வந்து சேர்ந்தன. ஜராசந்தனுக்கும், ராமகிருஷ்ணர்களுக்கும் இடையே நடந்த போரில் ஜராசந்தன் தோற்கடிக்கப்பட்டான். அவனை உயிருடன் திரும்பிச் செல்ல விட்டனர். எனவே அவன்தான் வெற்றி பெற்றதாக எண்ணினான். இவ்வாறு பதினெட்டு முறை ராமகிருஷ்ணர்களுடன் போர் புரிந்த ஜராசந்தன் கிருஷ்ணனால் தோல்வி அடைந்து ஓடிப் போனான்.

பதினெட்டாவது முறை ஜராசந்தன் போருக்கு வந்தபோது காலயவன் என்ற அசுரனும் மதுரையைத் தாக்கினான். இருவரையும் எதிர்கொள்ள வேண்டி இருந்ததால் பகவான் சமுத்திரத்தின் நடுவில் பன்னிரண்டு யோசனை பரப்புள்ள ஒரு நகரத்தை நிர்மாணிக்குமாறு விச்வகர்மாவுக்கு ஆணையிட அவனும் ஓர் அழகிய நகரத்தை உருவாக்கினான். அதில் இந்திரனால் அனுப்பப்பட்ட சுதர்மா என்ற சபையும், தேவலோக பாரிசாதமும், குபேரன் அனுப்பி வைத்த அஷ்டநிதிகளும் அங்கே இருந்தன. அந்நகரில் மதுராபுரி மக்களையும், உறவினர்களையும் குடியேற்றி பலராமரையும் அவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கச் செய்து நிராயுதபாணியாக வெளியே சென்றார் பகவான் கிருஷ்ணன்.

காலயவனன் அழிதல்

ஒளி பொருந்திய கிருஷ்ணனைக் கண்ட காலயவனன் அவரைப் பின் தொடர அவர் அவனை வெகுதூரம் அலைக்கழித்து இறுதியில் ஒரு குகையில் நுழைந்து மறைந்துவிட்டார். காலயவனன் அக்குகையில் நுழைந்த கிருஷ்ணனைக் காணாமல் அங்கு தூங்கிக் கொண்டிருந்த ஒருவனைக் கோபத்துடன் உதைக்க அவன் காலயவனனை விழித்துப் பார்க்க, காலயவனன் எரிந்து சாம்பலாகி விட்டான்.

17. முசுகுந்தனுக்கு அருளியது

இக்ஷவாகு குலத்தோன்றல் மாந்தாதாவின் மகன் முசுகுந்தன். அவன் ஒரு சமயம் தேவசேனாதிபதியாக இருந்து போர் செய்து தேவலோகத்தைக் காத்து வந்தான். பின்னர் குகப்பெருமான் தேவசேனாதிபதி ஆனவுடன் பூலோகம் திரும்பி வந்த அவன் அம்மலைக்குகையில் படுத்துறங்கி விட்டான். அவன் நித்திரைக்குப் பங்கமளிப்போர் எரிந்து சாம்பலாவர் என்று அவனுக்குத் தேவர்கள் வரமளித்து இருந்தனர். அதனால் முசுகுந்தனை எழுப்பிய காலயவனன் எரிந்து போனான். அவன் எரிந்தவுடனே முசுகுந்தனுக்குப் பகவான் சங்கு சக்கரதாரியாய் சதுர்புஜங்களுடன் காட்சி அளித்தார். அதைக் கண்டு பிரமித்து அவரை யார் என்று முசுகுந்தன் கேட்டான். கிருஷ்ணன் தன்னைப் பற்றிக் கூறினார். மேலும் முசுகுந்தன் முற்பிறவியில் மிகவும் பக்தியுடன் தன்னை ஆராதித்ததால் அவனுக்கு அருள்புரிய வந்திருப்பதாகத் தெரிவித்தார். அப்போது முசுகுந்தன் அவர் சர்வ சொரூபியாகிய பகவான் என்று அறிந்தான்.

அப்போது அவன் பகவானைப் பார்த்து இவ்வாறு வேண்டினான், நான் தன்யனானேன். உமது அருள் கிடைத்தவர்க்கு சாது சங்கம் ஏற்படுகிறது. அது பக்தியை உண்டாக்குகிறது. உமது சரண சேவையே எனக்கு வேண்டும். உமது சரணார விந்தங்களிலேயே சரணமளித்து ரக்ஷிக்க வேண்டும் என்று பிரார்த்தித்து வணங்கிய முசுகுந்தனுக்குப் பகவான் அருள்புரிந்தார். மேலும், முசுகுந்தனிடம் அவன் க்ஷத்திரியனாக இருந்து பல பாவங்களைச் செய்தபடியால் அப்பாவ நிவாரணம் பெற கிருஷ்ணரைத் தியானிக்க வேண்டும் என்றும், மறுபிறவியில் அந்தணராகப் பிறந்து உயிர்களிடம் அன்பு செலுத்தி முடிவில் தன்னை வந்தடையுமாறும் அவரது பக்தி குன்றாமலிருக்கும் என்றும் கூறி அனுக்கிரகித்தார். முசுகுந்தன் பகவானை வலம் வந்து வணங்கி பதரிகாசிரமம் அடைந்து தவத்தில் ஈடுபட்டு ஸ்ரீகிருஷ்ணரை ஆராதனை செய்து வந்தான். பின்னர், கிருஷ்ணன் மதுரை அடைந்து, யவனர்களை வென்று அவர்களுடைய ஐஸ்வர்யங்களைத் துவாரகைக்கு எடுத்து வரச் செல்ல, ஜராசந்தன் அவர்களைத் துரத்த அவர்கள் மலைமீது ஏறி மறைய, அவன் மலையைச் சுற்றி தீ மூட்டிவிட, ராமகிருஷ்ணர்கள் விண்ணில் கிளம்பி பூமியில் குதித்துக் கடலால் சூழப்பட்ட துவாரகை அடைந்தனர்.

ஆனால், ஜராசந்தன் அவர்கள் தீயால் எரிக்கப்பட்டு இறந்து விட்டதாக எண்ணி சேனைகளுடன் தன் மகத நாட்டிற்குத் திரும்பிச் சென்றான்.


© Om Namasivaya. All Rights Reserved.