இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


ஐந்தாம் தந்திரம்

The Fifth Anthiram of the Tenth Thirumurai features hymns by Appar (Thirunavukkarasar) that delve into various aspects of his deep devotion to Lord Shiva. This section continues to explore the themes of divine grace, personal devotion, and spiritual fulfillment.


(வாதுளாகமம்)

1. சுத்த சைவம்

(இயற்கைச் செந்நெறி)

(சுத்த சைவமாவது சடங்குகளில் நில்லாது தலைவனையும் தன்னையும் தளையையும் அறிந்து, தளையின் நீங்கித் தலைவன் திருவடிச் சார்பு பெறுதல். சைவம் சுத்தசைவர், அசுத்த சைவம், மார்க்க சைவர், சுடுஞ்சுத்த சைவம் என நால்வகையாம்.)

1419. ஊரும் உலகமும் ஒக்கப் படைக்கின்ற
பேரறி வாளன் பெருமை குறித்திடின்
மேருவும் மூவுல காளி இலங்கெழும்
தாரணி நால்வகைச் சைவமும் ஆமே.

பொருள் : ஊரையும் ஊர் அடங்கிய உலகத்தையும் ஒரு சேரப் படைக்கின்ற பேரறிவாளனாகிய இறைவனது பெருமையை அளவிட்டுக் கூறப்புகின், மேருமலையும், மூவுலகங்களையும் ஆளுகின்ற இறைவனிடமிருந்து தோன்றிய பூமியும் நால்வகைச் சைவமும் ஆகிய இவற்றின் பெருமைக்கு ஒப்பாகும்.

1420. சத்தும் அசத்தும் சதசத்தும் தான்கண்டு
சித்தும் அசித்தும் சேர்வுறா மேநீத்தும்
சுத்தம் அசுத்தமும் தோய்வுறாமே நின்று
நித்தம் பரஞ்சுத்த சைவர்க்கு நேயமே.

பொருள் : அழிவில்லாததும் அழிவுடையதும் இரு தன்மையும் கலந்ததும் ஆகியவை எவை என்பதை அறிந்து, அறிவும் அறியாமையும் சேராமல் விட்டும், சுத்த மாயை, அசுத்தமாயை ஆகிய இரண்டிலும் பொருந்தாமல் நின்று, அழியாப் பொருளான பரமே பார்த்திருப்பது சுத்த சைவர்க்கு ஆகும்.

(சத்து - சிவன், அசத்து - மாயை, உடல்; சதசத்து - ஆன்மா, உயிர், சித்து - ஞானம்; அசித்து - அஞ்ஞானம்.)

1421. கற்பன கற்றுக் கலைமன்னு மெய்யோகம்
முற்பத ஞான முறைமுறை நண்ணியே
சொற்பத மேவித் துரிசற்று மேலான
தற்பரங் கண்டுளோர் சைவசித் தாந்தரே.

பொருள் : கற்கத் தக்கனவற்றைக் கற்று, பதினாறு கலைகளையுடைய சந்திர கலைகளை அறிந்து சிவயோகம் பயின்று, அதில் முன்னாக விளங்கும் அகர உகர மகர விந்து நாதங்களின் அறிவை முறையாக அறிந்து, பிரணவ பதம் உணர்த்தும் சாந்தியதீனத கலையைப் பொருந்தி உயிரின் மாயா சார்பான குற்றத்தை விட்டு, மேலான சிவத்தைக் கண்டு உறைபவர் சைவசித்தாந்தர் ஆவார். (துரிசு - குற்றம்.)

1422. வேதாந்தம் சுத்தம் விளங்கிய சித்தாந்தம்
நாதாந்தம் கண்டோர் நடுக்கற்ற காட்சியர்
பூதாந்த போதாந்த மாதுப் புனஞ்செய்ய
நாதாந்த பூரணர் ஞானநே யத்தரே.

பொருள் : வேதாந்தமாவது சுத்த சைவ சித்தாந்தமாம். இந்நெறி நிற்போரே நாதவடிவமாகிய சிவத்தைத் தரிசித்த சலனம் அற்றவராவர். தத்துவ முடிவை ஞானமயமாகப் பண்படுத்த நாதமுடிவில் நிறைவுற்று விளங்கும் சிவம் அறியப்படு பொருளாவர். விளக்கம்; சுத்த சைவ சித்தாந்தமே வேதங்களின் முடிவு . (பூதாந்தம் - பூதங்களின் முடிவு போதாந்தம் - ஞானமுடிவு . புனம் செய்ய - ஐம்புலக் காட்டினைப் பண்படுத்த.)

2. அசுத்த சைவம் (மீ இயற்கைச் செந்நெறி)

(அசத்த சைவமானது, திருவேந்தரித்துச் சரியை கிரியையாகிய இரு நெறியில் நிற்பார் நிலையைக் கூறுவது.)

1423. இணையார் திருவடி ஏத்தும் சீரங்கத்து
இணையார் இணைக்குழை ஈரணை முத்திரை
குணமார் இணைக்கண்ட மாலையும் குன்றாது
அணைவாம் சரியை கிரியையி னார்க்கே.

பொருள் : தமக்குத் தாமே ஒப்பாகிய நூலுணர்வு, நுகர் உணர்வுகளாகிய இரண் திருவடிகளையும் தொழும் தன்மையர் உடம்பு சிறப்புடம்பாகும். அவர்கட்கு இரண்டு குண்டலங்கள் காதணியாகக் காணப் பெறும் திருநீறும், திரு ஐந்து எழுத்தும் அறிவடையாள அங்கையும், நற்பண்பு வாய்ந்த தலையினும் மார்பினுமாகிய இரண்டு சிவமணி மாலைகளும் குறையாது என்றும் பொருந்துவனவாகும். இத்தகையோர் சீலத்தர் நோன்பினர் என்று அழைக்கல் பெறுவர். (சீர் அங்கம் - சிறப்பு உடம்பு. சரியை - உடம்பினால் இறைவனை வழிபடுவது; கிரியை - உடம்பினாலும் மனத்தினாலும் வழிபடுவது.)

1424. காதுப்பொன் ஆர்ந்த கடுக்கன் இரண்டுசேர்த்து
ஓதும் திருமேனி உட்கட்டு இரண்டுடன்
சோதனை செய்து உபதேச மார்க்கராய்
ஓதி இருப்பார் ஒருசைவர் ஆகுமே.

பொருள் : காதினில் பொன்னால் செய்யப்பட்ட இரண்டு கடுக்கன்களை அணிந்து கொண்டு, சொல்லப்பட்ட சிவ வேடத்தில் இடையில் ஓர் ஆடையும் அதன்மேல் ஓர் ஆடையும் உடையராய் அத்துவா சோதனை செய்து உபதேசம் பெற்றவராய் சைவ ஆகமங்களைப் பாடம் சொல்லிக் கொண்டிருப்பவர் ஒருவகைச் சைவராவர். உட்கட்டு இரண்டுடன் என்பதற்குச் சிவமணிவடமாகிய உட்பட்டு இரண்டு என்று பொருள் கொள்வாரும் உளர். (சோதனை செய்து - அத்துவா சோதனை செய்து - இது நிர்வாண தீக்கையில் செய்யக் கூடியது.)

1425. கண்டங்கள் ஒன்பதும் கண்டவர் கண்டனர்
கண்டங்கள் ஒன்பதும் கண்டாய் அரும்பொருள்
கண்டங்கள் ஒன்பதும் கண்டவர் கண்டமாம்
கண்டங்கள் கண்டோர் கடுஞ்சுத்த சைவரே.

பொருள் : நாவலம் தீவு முதலிய நிலவுலகங்கள் ஒன்பது பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவ் ஒன்பது கண்டங்களையும் இறையுறை திருப்பதிகளாகக் கண்டு வழிபட்டு வலஞ்செய்து வந்தவர் அங்ஙனம் விளங்கும் சிவபெருமானின் அருவம் நான்கு, உருவம் நான்கு, அருவுருவம் ஒன்று ஆகிய ஒன்பது திருமேனிகளையும் கண்டவராவர். இவர்களே வேறுபட்ட பல அண்டங்களையும் அருட்காட்சியால் கண்டவராவர். இவர்கள் கடுஞ்சுத்த சைவர் என அழைக்கப்படுவர். கண்டங்கள் ஒன்பது என்பதற்கு வேறு வகையாகப் பொருள் கொள்வாரும் உளர்.

1426. ஞானி புவியெழு நன்னூல் அனைத்துடன்
மோன திசையும் முழுஎண் எண் சித்தியும்
ஏனை நிலவும் எழுதா மறைஈறும்
கோனொடு தன்னையும் காணும் குணத்தனே.

பொருள் : ஞானியராவார் பூமியில் தோன்றுகின்ற ஞான நூல்களுடன் மௌன நிலையையும் முழுமையாக எண்ணப்பட்ட அட்டமாசித்திகளையும், பிற உலகங்களின் அறிவையும் உபநிடத அறிவையும் சிவத்தையும் தன்னையும் உணர்ந்து நிற்கும் ஆற்றலுடன் விளங்குவர். (எழுதாமறை - வேதங்கள். எண்எண் சித்திகள் என்பதற்கு அறுபத்து நான்கு கலைகள் எனப்பொருள் கொள்வாரும் உளர்.)

3. மார்க்கசைவம் (மெய்யுணர்வுச் செந்நெறி)

(மார்க்க சைவமானது, சைவ மார்க்கத்தில் நின்று வேதாந்த, சித்தாந்த நுண்பொருளை உணர்ந்து, ஆன்ம போதங் கெட்டுச் சிவ போகத்தில் திளைத் திருப்பார் நிலையை விளக்குவது.)

1427. பொன்னாற் சிவசாத னம்பூதி சாதனம்
நன் மார்க்க சாதனம் மாஞான சாதனம்
துன்மார்க்க சாதனம் தோன்றாத சாதனம்
சன்மார்க்க சாதன மாம் சுத்த சைவர்க்கே.

பொருள் : பொன்கட்டிய உருத்திராக்க மாலையும் திருநீற்றுப் பூச்சாகிய சாதனமும் சிறப்புமிக்க ஐந்தெழுத்து ஓதுதலாகிய ஞான சாதனமும், துன்மார்க்கரோடு சேராமல் நல்லடியாரோடு சேர்ந்து இருத்தலாகிய சாதனமும் சுத்த சைவநெறி பற்றியவர்க்குச் சன்மார்க்க ஒழுக்கமாகும்.

1428. கேடறு ஞானி கிளர்ஞான பூபதி
பாடறு வேதாந்த சித்தாந்த பாகத்தின
ஊடுறு ஞானோ தயனுண்மை முத்தியோன்
பாடுறு சுத்தசை வப்பத்தன் நித்தனே.

பொருள் : குற்றம் நீங்கிய ஞானி ஒளிவிடுகின்ற ஞானத்திற்கு அரசாவான். துன்பமில்லா வேதாந்த சித்தாங்களிடையே தோன்றும் ஞானமுடையோன். உண்மையான முத்திப் பேற்றினை உணர்ந்தவன். மேன்மை பொருந்திய சுத்த சைவத்திலே பத்தி யுடையவன். அழிவில்லாதவன். சுத்த சைவன். வேதாந்த சித்தாந்த நுண்பொருளை அபேதமாக உணர்ந்தவன்.

1429. ஆகமம் ஒன்பான் அதிலான நாலேழு
மோகமில் நாலேழு முப்பேத முற்றுடன்
வேகமில் வேதாந்த சித்தாந்த மெய்ம்மையொன்று
ஆக முடிந்த அருஞ்சுத்த சைவமே.

பொருள் : ஆகமங்கள் ஒன்பது, இவ்ஒன்பது ஆகமங்களே விரிந்து இருபத்தெட்டு ஆகமங்கள் ஆயின. அவை சைவம், ரௌத்திரம், ஆரிடம் என்ற மூன்று வகையாக ஆகி, பரபரப்பற்ற வேதாந்த முடிபாம் சித்தாந்த உண்மை சுத்த சைவர்க்கு ஒன்றாக முடிந்ததாம்.

1430. சுத்தம் அசுத்தம் துரியங்கள் ஓரேழும்
சத்தும அசத்தும் தணந்த பராபரை
உய்த்த பராபரை யுள்ளாம் பராபரை
அத்தன் அருட்சத்தி யாய்எங்கும் ஆமே.

பொருள் : அசுத்தமாகிய புலம்பின்கண் நனவு கனவு உறக்கம் என்னும் மூன்றும், சுத்தமாகிய புரிவின்கண் நனவு கனவு என் இரண்டும், பேருறக்கம், உயிர்ப்படங்கல் என்னும் இரண்டும் ஆகிய ஏழும் நிலைப்பதாகிய காரணமாயையும், நிலயாததாகிய காரியமாயையும் நீங்கிய பராபரையாகிய திருவருள் ஆருயிரோடு பொருந்தியும் உயிர்க்கு உயிராகியும் நிற்பவள் ஆவள். அவளே அத்தன் அருளாற்றலாகிய அன்னையாவள். அவளே எங்கும் நிறைந்து நின்று வெற்றையும் இயக்குபவள் ஆவள். (புலம்பு - கேவலம், புரிவு - சுத்தம். ஐந்துநிலைகளாவன ; ஜாக்கிரம் - நனவு, சொப்பனம் - கனவும், சுழுத்தி - உறக்கம், துரியம் - பேருறக்கம், துரியாதீதம் உயிர்ப்படங்கள் என்பனவாம்.)

1431. சத்தும் அசத்தும் தணந்தவர் தானாகிச்
சித்தும் அசித்தும் தெரியாச் சிவலோகமாய்
முத்தியுள் ஆனந்த சத்தியுள் மூழ்கினார்
சித்தியும் அங்கே சிறந்துள தானே.

பொருள் : சத்து அசத்துக்களாகிய காரண காரிய மாயைகளை மலம் அற்றமையால் வேறுபடுத்துணரும் இயல்பு அகன்றவராவர். சிற்றுணர்வும் சட்டுணர்வும் இல்லாச் சிவன் நிறைவில் அடங்கிச் சிவனே தானாகி வீடு பேற்றின்கண் இறவாத இன்ப இறைவியுள் அடங்கினவராவர். அவர்க்குப் பெரும் பேறும் சிறந்து விளங்கும். (சிவோகம் - சிவநிறைவில் உறைவதல். சிவோகம் பாவனையில் உடல் நினைவு இல்லை தான்என்ற அறிவு இல்லை என்க. சத்தியே தானாகவுள்ள ஞானிகள் எல்லாம் வல்ல சித்தராவர் என்பதாம்.)

1432. தன்னைப் பரனைச் சதாசிவன் என்கின்ற
மன்னைப் பதிபசு பாசத்தை மாசற்ற
முன்னைப் பழமல முன்கட்டை வீட்டினை
உன்னத் தகுஞ்சுத்த சைவர் உபாயமே.

பொருள் : உண்மைச் சைவர்கள் உள்ளுற நினைத்து மேற்கொண்டு ஒழுகவேண்டிய வழி வகையான பொருள்கள் எட்டு அவையாவன; ஆருயிர், இயற்கைப் பேரறிவுப் பெரும் பொருள், அருளோனாகிய சதாசிவன், இறை, உயிர், தளை, தொன்மையாகிய ஆணவ மலம், வீடுபேறு என்பன. சுத்த சைவர் இவ் எட்டுப் பொருட்களைப்பற்றிச் சிந்திப் பதைவீடு பேற்றிற்கு உபாயமாகக் கொண்டுள்ளனர். (பதி, பசு, பாசம் - இறை, உயிர், தளை.)

1433. பூரணம் தன்னிலே வைத்தற்ற அப்போதம்
ஆரணம் அந்தம் மதித்து ஆனந் தத்தோடு
நேரென ஈராறு நீதி நெடும் போதும்
காரண மாம்சுத்த சைவர்க்குக் காட்சியே.

பொருள் : ஆருயிர், நிறைவாம் சிவத்துள் அடங்குதலாகிய முற்றுணர்வு எய்துதலும் பண்டைத் தன்முனைப்பாகிய சிற்றுணர்வு அறும். அதுவே மறை முடிவாம். பேரின்பத்துடன் கலந்து, பன்னிரண்டாம் நிலையில் பெறப்படும் சிவநுகர்வு முறையாக எய்தும். இவை யனைத்தும் சுத்த சைவர்க்குக் காட்சியாம். (ஈராறு - பன்னிரண்டு - துவாத சாந்தப் பெருவெளி)

1434. மாறாத ஞான மதிப்பற மாயோதும்
தேறாத சிந்தையைத் தேற்றிச் சிவமாக்கிப்
பேறான பாவனை பேணி நெறிநிற்றல்
கூறாகு ஞானி சரிதை குறிக்கிலே.

பொருள் : மெய் கண்டார் எல்லையற்ற என்றும் ஒருபடித் தாயிருக்கிற திருவடி யுணர்வு கைகூடுதலால் பிறப்புக்கு வித்தாம் பெரிய யோகங்களைப் பொருளாகத் தெரிய ஒட்டாது தம் உள்ளத்தைத் தெளிவித்துச் சிவனிலையமாக்குவர். முழுதுணர்பேறான சீவனையே நாடுதலாகிய பாவனைபேணி அந்நெறியில் உறைத்து நிற்றல் அறிவிற்சீலம் என்ப்படும் ஞானத்திற் சரியையாகும்.

1435. வேதாந்தங் கண்டோர் பிரமலித் தியாதரர்
நாதாந்தங் கண்டோர் நடுக்கற்ற யோகிகள்
வேதாந்தம் அல்லாத சித்தாந்தங் கண்டுளோர்
சாதா ரணமன்ன சைவர் உபாயமே.

பொருள் : வேதாந்தத்தை உணர்ந்தவர் பிரம வித்தையை அறிந்தவர் ஆவர். நாத தரிசனம் செய்தவர் நன்மைகளில் மகிழாமலும் தீமைகளில் சோர்வுறாமலும் நிற்கும் பரமஹம்சயோகிகள் ஆவர். வேதாந்தக் கொள்கைக்கு வேறான சித்தாந்த அனுபவம் உடையோர் இயற்கையை அறிந்து உபாயத்தினால் சிவத்தைச் சேர்வர். விளக்கம்; வைராக்கியத்தால் பிரமத்தை அடையலாம் என்று வேதாந்தம் கூறும். அன்பினால் சிவத்தை அடையலாம் என்று சித்தாந்தம் சிவயோகம்; பாவனையால் சிரசில் நாத தரிசனம் செய்து நாதத்தை அடைவது.

1436. விண்ணினைச் சென்றணு காவியன் மேகங்கள்
கண்ணினைச் சென்றணு காப்பல காட்சிகள்
எண்ணினைச் சென்றணு காமல் எணப்படும்
அண்ணலைச் சென்றணு காபசு பாசமே.

பொருள் : வானத்தை இடமாகக் கொண்டு பொழிகின்ற பெரிய மேகங்களும் அவ் வானத்தைப் போய் எட்டாது. கண்ணிணாற் காணப்படும் பல காட்சிப் பொருள்களும் கண்ணினைச் சென்று பொருந்தா. அவை போல நாடுதலாகிய பாவனைக்கு அப்பால் பட்ட தென்னும் சிவபெருமானாகிய அண்ணலை யான் என்னும் சிற்றறிவும் எனதென்னும் சுட்டறிவும் பசு பாசங்கள் சென்றணுகா.

1437. ஒன்றும் இரண்டும் இலதுமாய் ஒன்றாக
நின்று சமய நிராகார நீங்கியே
நின்று பராபரை நேயத்தைப் பாதத்தால்
சென்று சிவமாதல் சித்தாந்த சித்தியே.

பொருள் : பொன்னும் மணியும் போல் பொருள் ஒன்றே என்னும் தன்மையும் இருளும் ஒளியும் போல் வேறு என்னும் தன்மையும் இல்லாமல், உடலுயிர்கண் அருக்கன் அறிவொளிபோல் வேறன்மையாகிய புணர்ப்பாய் நின்று திருவருளால் அன்பு செய்யப்படும் சிவனைச் சித்தி நிபாதமாகிய திருவருள் வீழ்ச்சியால் சென்று சிவமாம் பெருவாழ்வைப் பெற்றுப் பேரின்பம் உறுதல் சித்தாந்தப் பெரும் பேறாகும்.

(ஒன்று - ஏகான்மவாதம் இரண்டு - துவிதம் ஒன்றாக நின்று - சுத்த அத்துவிதம்)

4. கடுஞ் சுத்த சைவம் (மெய்கண்டார் செந்நெறி)

(ஞான நிலையில் ஆடம்பரமின்றித் தான் அவனாய் நிற்கும் நிலையை எடுத்து ஓதுவது இவ் அதிகாரத்திலாம். கடுஞ் சுத்த சைவர் உபாயமான கிரியைகளை விட்டு ஞானமே பெரியதெனக் கருதிச் சாயுச்சியம் பெறுவர்.)

1438. வேடம் கடந்து விகிர்தன்தன் பால்மேவி
ஆடம் பரமின்றி ஆசாபா சம்செற்றுப்
பாடொன்று பாசம் பசுத்துவம் பாழ்படச்
சாடும் சிவபோ தகர்சுத்த சைவரே.

பொருள் : புற வேடங்களில் விருப்பமின்றி இறைவனைச் சார்ந்து, உலகியல் ஆடம்பரம் இல்லாது ஆசையையும் பற்றையும் நீத்து, பிறவித் துன்பத்தைத் தரும் பாசமும் சீவ போதமும் பாழாக, தொலைக்கும் சிவஞானம் பெற்றோரே சுத்த சைவராவர். (வேடம் - விபூதி, உருத்திராக்கம், காதணி முதலிய புறச்சாதனம் விகிர்தன் - சிவன்; ஆசாபாசம் - ஆசை, பாசம்.)

1439. உடலான ஐந்தையும் ஓராறும் ஐந்து
மடலான மாமாயை மற்றுள்ள நீவப்
படலான கேவல பாசந் துடைத்துத்
திடமாத் தனையுறல் சித்தாந்த மார்க்கமே.

பொருள் : ஐம் பூதங்களால் ஆன யாக்கையும், ஆறு கோடி மாயாசத்திகள் என்று சொல்லப்படும் செருக்கு, சினம், சிறுமை, இவறல், மாண் பிறந்த மானம், மாணா வுவகை ஆகிய அறுவகைக் குற்றங்களும், ஐவகைப் புலன்களும் இவற்றிற்கு நிலைக் களமான காரண மாயையும் ஒழிக்க வேண்டுவனவாய புலம்பினைச் செய்த பழமலரும் அருளால் துடைத்து, உறுதியாகத் தன்னை உணர்ந்து, தலைவனையுறுதல் சித்தாந்த சைவச் செந்நெறிச் சீர்மையாகும்.

1440. சுத்தச் சிவனுரை தானத்தில் தோயாமல்
முத்தல் பதப்பொருள் முத்திவித் தாமூலம்
அத்தகைய ஆன்மா அரனை அடைந்தற்றால்
சுத்தச் சிவமாவ ரேசுத்த சைவரே.

பொருள் : பரமேசுவரனால் அருளிச் செய்யப்பட்ட ஆகமங்களில் கூறப்பெறும் பத முத்திரைகளைச் சாராது, முத்தர் கண்ட பிரணவப் பதத்தால் உணர்த்தப் படுவதே மேலான பரமுத்திக்கு மூலம். இதனை உணர்ந்த ஆன்மா பிரணவப் பொருளான இறைவனை அறிந்து உலக பந்தங்களை விட்டால் சுத்த சிவமாம் பேறு பெறுபவரே சுத்த சைவராவர்.

1441. நான் என்றும் தான்என்றும் நாடிநான் சாரவே
தான் என்று நான் என்று இரண்டிலாத் தற்பதம்
தான் என்று நான்என்ற தத்துவம் நல்கலால்
தான்என்றும் நான்என்றும் சாற்றகில் லேனே.

பொருள் : அறிபவனாகிய நான் என்றும், அறியப்படு பொருளாகிய சிவம் என்றும் ஆராய்ந்து சிவத்தை நான் சேரவே, சிவன் சீவன் என்ற இரண்டற்ற தற்சிவம், தானே நான் என்ற உண்மையை உணர்த்தியதால், பின்னர் அறியப்படுபொருள் என்றும் அறிபவன் என்றும் பிரித்தறிய முடியாத பெருநிலையை எய்தினேன்.

1442. சாற்றரி தாகிய தத்துவம் சித்தித்தால்
ஆற்றரி தாகிய ஐந்தும் அடங்கிடும்
மேற்றிகழ் ஞானம் விளக்கொளி யாய்நிற்கும்
பாற்பர சாயுச்சிய மாகும் பதியே.

பொருள் : சொல்ல ஒண்ணாத இறைநிறைவில் அடங்குவதாகிய மெய்ம்மை கைகூடினால் தன்வழி ஈர்க்கும் புலன் ஐந்தும் திருவருளால் ஆருயிரின் வழிச்சென்று அடங்கிடும். அதன்பின் திருவடிப் பேருணர்வாம் விளக்கொளி ஒளிர்ந்து நிற்கும். நிற்கவே தான் ஆதலாகிய பரசாயுச்சியப் பேறு பதியும். (பரசாயுச்சியம் - உயர்வற உயர்ந்த ஒரு பெருநலம்)

5. சரியை (சீலம்)

(நாடும் நகரமும் தேடித் திரிந்து சிவபெருமான் என்று பாடுதலும், ஆலய வழிபாடு செய்தலும் சரியை நெறியாம்.)

1443. நேர்ந்திடு மூல சரியை நெறியிதென்று
ஆய்ந்திடும் காலாங்கி கஞ்ச மலையமான்
ஓர்ந்திடும் கந்துரு கேண்மின்கள் பூதலத்து
ஓர்ந்திடும் சுத்த சைவத்து உயிரதே.

பொருள் : திருவடிப் பேற்றிற்கு நேர்வழியாய் உள்ள நான்கினுள் நேர்திடும் அடிப்படைச் சீலம் என்னும் சரியை நெறி இத்தன்மைத்து என்று ஆய்ந்தவர் கந்துரு காலங்கி முனிவரும், கஞ்ச மலையமான் முனிவரும் என்க. அந்த இருவரையும் நோக்கித் திருமூலர் அருளுகின்றார். இச்சீலம் இந்நிலவுலகத்துத் தனி முதற் சிவ நெறியாகிய சுத்த சைவத்துக்கு ஆராய்ந்து கடைப்பிடிக்கும் உயிராம் என்க. (உயிர் - நானெறித் தொண்டு.)

1444. உயிர்க்குயி ராய்நிற்றல் ஒண்ஞான பூசை
உயிர்க்குஒளி நோக்கல் மகாயோக பூசை
உயிர்ப்பெறும் ஆவா கனம்புறப் பூசை
செயிற்கடை நேசம் சிவபூசை யாமே.

பொருள் : உயிர்க்கு உயிராக இறைவன் கலந்திருத்தலை உணர்தல் சிறந்த ஞான பூசையாகும். உயிருக்கு ஒளி தருகின்ற பொருளாக இறைவனைக் காண்டல் மேன்மையான யோக பூசையாகும். புறத்தே மூர்த்தியினிடத்து பிராணப் பிரதிட்டையாகிய ஆவாகானம் செய்தல் புறப் பூசையாகும். புறத்தே செய்யின் சிவபூசை ஞானத்தை நோக்கக் கடை நேசமாமே.

1445. நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும்
தேடித் திரிந்து சிவபெரு மான் என்று
பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்
கூடிய நெஞ்சத்துக் கோயிலாய்க் கொள்மினே.

பொருள் : நாடு நகரம் நல்ல திருக்கோயில் ஆகியவற்றைத் தேடி அலைந்து அங்கங்கே சிவன் வீற்றிருக்கின்றான் என்று பாடுங்கள். பாடுவதோடு பணியுங்கள். அவ்வாறு பணிந்த பிறகு ஒருமைப்பட்ட நெஞ்சத்தை இறைவன் தனக்குக் கோயிலாகக் கொள்வன். இப்பாட்டில் சரியா பூசையைப் பற்றிக் கூறுகின்றார்.

1446. பத்தர் சரிதை பாடுவோர் கிரியையார்
அத்தகு தொண்டர் அருள்வேடத்து ஆடுவோர்
சுத்த இயமாதி சாதகர் தூயோகர்
சித்தர் சிவஞானம் சென்றெய்து வோர்களே.

பொருள் : பத்தர் ஆலய வழிபாடு முதலிய செய்யும் சரியை வழியில் நிற்போர். விபூதி முதலிய சிவசாதனங்கள் அணிந்து சிவவேடந்தாங்கிய அடியார் கிரியை வழியில் நிற்போர். தூய இயமம் முதலிய அட்டாங்க யோக உறுப்புக்களை உணர்ந்து அவ்வழியில் நிற்போர் சுத்த யோகியர் ஆவர். சித்தர் சிவத்தைத் தன்னில் கண்டு, தான் அதில் ஒன்றி நிற்போராவர்.

(புத்தர் -சரியையாளர்; தொண்டர் - கிரியை யாளர்; சாதகர் யோகிகள்; சித்தர் - சிவஞானிகள்.)

1447. சார்ந்தமெய்ஞ் ஞானத்தோர் தானவர் ஆயினோர்
சேர்ந்தவெண் யோகத்தர் சித்தர் சமாதியோர்
ஆய்ந்த கிரியையோர் அருச்சனை தப்பாதோர்
நேர்ந்த சரியையோர் நீள்நிலத் தோரே.

பொருள் : உண்மையான ஞானம் பெற்றவர் அவனே தானாகியவர்கள்.அட்டாங்க யோக நெறியில் நின்று சமாதியடைந்தோர் யோகிய ராவர். ஆராய்ந்த கிரியையுடையோர் சிவபூசை தவறாமல் செய்பவர். கிரியை நெறியில் நிற்பவர் தலயாத்திரை புரிபவராவர்.

1448. கிரியை யோகங்கள் கிளர்ஞான பூசை
அரிய சிவனுரு அமரும் அரூபத்
தெரியும் பருவத்துத் தேர்ந்திடும் பூசை
உரியன நேயத்து உயர்பூசை யாமே.

பொருள் : கிரியை, யோகம், கிளர்ச்சியைத் தரும் ஞானம் ஆகிய பூசை முறையே அறிதற்கு அருமையான சிவனது உருவத்தையும் அருவத்தையும் பொருந்தும். உபாசகரின் பக்குவத்துக்கு ஏற்பத் தேர்ந்து கொள்ளும் பூசை உரிமையான நேயப் பொருளுக்குச் செய்யும் உயர்ந்த பூசையாம்.

(கிரியையாளரும் யோகிளும் செய்வது உருவபூசையாகும். ஞானபூசை என்பது அருவப் பூசையாகும்.)

1449. சரியாதி நான்கும் தருஞானம் நான்கும்
விரிவான வேதாந்த சித்தாந்தம் ஆறும்
பொருளா னதுநந்தி பொன்னகர் போந்து
மருளாகும் மாந்தர் வணங்கவைத் தானே.

பொருள் : சரியை முதலிய நான்கினாலும் பெறுகின்ற ஞானம் நான்கும் விரிவாகவுள்ள வேதாந்த சித்தாந்தத்தால் அடையப்படுகின்ற ஆறு விதமான முடிவினை உண்மைப் பொருளானதாகிய நந்தி யெம்பெருமான் குரு மண்டலமாகிய பொன்னகர் அடைந்து மயக்க அறிவினைக் கொண்ட மக்கள் வணங்கி அறிவைப் பெற வைத்தனன். ஞானம் நான்கு; சரியை, கிரியை, யோகம், ஞானம் இவைகளால் பெற்ற ஞானம்.

(வேதாந்தம் ஆறு; காபிலம், காணாதம், பாதஞ்சலம், அட்சபாதம், வியாயம், ஜைமினியம் என்பன.)

1450. சமையம் பலசுத்தித் தன்செயல் அற்றிடும்
அமையும் விசேடமும் அரன்மந் திரசுத்தி
சமைய நிருவாணம் கலாசுத்தி யாகும்
அமைமன்று ஞானமார்க் கம்அபி டேகமே.

பொருள் : சமைய தீட்சையால் ஆன்மாவில் பதிந்துள்ள மலக்குற்றங்களை அகற்றி ஆணவ மலத்தின் வலிவைக் குறைத்தல் விசேட தீட்சையால் சிவத்தின் துணைகொண்டு அமையப்பெற்ற மந்திரங்களால் மும்மலத்தின் அறிவைக் குறைத்தல். சமையத்தில் உள்ள நிருவாண தீட்சையால் கலைகளின் மலக்குற்றங்களை அகற்றி, அவ்வக் கலையிலுள்ள ஆன்மாக்களை மேலுள்ள கலைகளுக்குச் செல்லத் தகுதிப்படுத்தலாகும். அபிடேகமாவது திருவருட்சத்தி நிலைபெறப் போதித்து நிலபெறுத்தலேயாகும். இம்மந்திரம் சைவத்திலுள்ள தீக்கைகளை விவரிக்கின்றது சமயம், விசேடம், நிருவாணம், அபிடேகம்.

6. கிரியை (நோன்பு)

(மலரிட்டு வணங்கி இறைவனை அகத்தும் புறத்தும் பூசித்தல் கிரியையாகும்.)

1451. பத்துத் திசையும் பராமொரு தெய்வமுண்டு
எத்திக்கு இலர்இல்லை என்பதின் அமலர்க்கு
ஒத்துத் திருவடி நீழல் சரணெனத்
தத்தும் வினைக்கடல் சாராது காணுமே.

பொருள் : பத்துத் திசைகளிலும் பரசிவம் வியாபித்துள்ளது. எத்திசையிலும் இல்லாதவர் எப்போது இலர் என்பதால் அத்தகைய மலமில்லாதவர்க்குப் பணிந்து, திருவடியை அடைக்கலம் என்று உறுதியாகக் கொள்ள, மேன்மேலும் தாவி வருகின்ற வினையாகிய கடல் இவ்ஆன்மாவைச் சாராது. இவ்வுண்மையை அனுபவத்தில் காண்பாயாக. எங்கும் நிறைந்த பரசிவமே தெய்வம் என்று சரண் அடைந்தால் வினை சாராது என்பதாம்.

1452. கானுறு கோடி கடிகமழ் சந்தனம்
வானுறு மாமலர் இட்டு வணங்கினும்
ஊனினை நீக்கி உண்பவர்க்கு அல்லது
தேனமர் பூங்கமழ் சேரஒண் ணாதே.

பொருள் : காட்டின்கண் எங்கணும் நிறைந்து மணம் கமழும் சந்தனமும், வானளாவ நிறையும் வண்ணம் சிறந்த மலர்களும் சாத்தி வணங்கினாலும், கொல்லாமலும் கொன்றதைத் தின்னாமலும் இருப்பதாகிய செந்நெறியொழுகிச் சிவனை நினைப்பதாகிய திருவுடையார்க்கன்றி திருவருள் வீழ்ச்சியாகிய சத்திநிபாதம் கிட்டாது. (சத்தி - திருவருள், நிபாதம் - நினறாய்ப்பதிதல், வீழ்ச்சி ஊனினை நீக்கி - சரீர அபிமானம் விட்டு அல்லது மாமிச உணவை விட்டு.)

1453. கோனக்கன் தாயே குரைகழல் ஏத்துமின்
ஞானக்கன் றாகிய நடுவே உழிதரும்
வானக்கன் றாகிய வானவர் கைதொழும்
மானக்கன்று ஈசன் அருள்வள்ள மாமே.

பொருள் : மேன்மையான பசுங்கன்றைப்போல ஒலிக்கும் கழலையுடைய திருவடியைப் போற்றுங்கள். அப்போது ஞானத்தை நல்கும் சுழுமுனை நடுவே தோன்றும். தேவர் உலகக்கன்றாகிய வானவர் வந்து உம்மை வணங்குவார்கள். பெருமை பொருந்திய இடப வாகனத்தையுடைய இறைவன் திருவருளைத் தாங்கும் பாத்திர மாகுங்கள்.

1454. இதுபணிந்து எண்டிசை மண்டிலம் எல்லாம்
அதுபணி செய்கின் றவள்ஒரு கூறன்
இதுபணி மானுடர் செய்பணி ஈசன்
பதிபணி செய்வது பத்திமை காணே.

பொருள் : மேல் ஓதிய முறைமைகளை வணங்கி ஏற்றுக் கொண்டு எட்டுத் திசைகளால் சூழப்பெறும் உலக உடல்பொருள் நிறை மண்டிலங்களை யெல்லாம் படைத்து அளித்து அழித்து மறைத்து அருள் செய்யும் ஐந்தொழிலுடைய அம்மையை ஒரு கூற்றிலே உடையவன் சிவன். மாந்தர் செய்யத் தகுந்த இறைபணி சிவப் பணியேயாம். இச்சிவப்பணியே நோன்பாளராகிய கிரியையினம் செய்யும் சிவபத்தித் திருப்பணியாகும்.

1455. பத்தன் கிரியை சரியை பயில்வுற்றுச்
சுத்த அருளால் துரிசற்ற யோகத்தில்
உய்த்த நெறியுற்று உணர்கின்ற ஞானத்தால்
சித்தம் குருவரு ளால்சிவம் ஆகுமே.

பொருள் : பத்தியுடையோன் தூய மந்திரம் முதலியவற்றை நினைந்து அவ்வாறு நடந்து பழகி , சுத்தமாயை என்ற அருள் சத்தியால் குற்றமற்ற மெய்போகத்தில் அமைத்த நெறியில் பொருந்தி தன்னையும் தலைவனையும் உணர்கின்ற ஞானத்தினால் சித்தம் குருமண்டலப் பிரவேசத்தால் சிவமாக அமையும்.

1456. அன்பின் உருகுவன் நாளும் பணிசெய்வன்
செம்பொன் செய்மேனி கமலத் திருவடி
முன்புநின் றாங்கே மொழிவது எனக்கருள்
என்பினுள் சோதி இலக்குகின் றானே.

பொருள் : சித்தம் சிவமாய சிவபக்தன் எல்லையிலாத் தலைவன்பால் உருகுவன். அவன் எந்நாளும் அடிமைப்பணி செய்து ஒழுகுவான். பொன்போலும் திருமேனியும் செந்தாமரை அனையதிருவடியும் உடையவன் சிவன். அவன் அடியேன் முன்நின்று அருமறை யருளத் திருவடி யுணர்வு கைவந்த ஒரு மெய்யடியாரை ஊர்ந்து செறிந்த அறிவொளியால் விளங்கியருள்வன்.

7. யோகம் (செறிவு)

(யோகமாவது, மூலாதாரத்திலுள்ள குண்டலினியோடு கூடிய பிராணனைத் துவாத சாந்தத்தில் விளங்கும் சிவத்தோடு சேர்த்துப் பொருந்தி யிருத்தல். இவ்வாறு சேர்த்துத் தியானம் செய்தால் ஒளி விளங்கும். )

1457. நெறிவழி யேசென்று நேர்மையுள் ஒன்றித்
தறியிருந் தாற்போல் தம்மை யிருத்திச்
சொறியினும் தாக்கினும் துண்ணென் றுணராக்
குறியறி வாளர்க்குக் கூடலும் ஆமே.

பொருள் : ஆசான் அருளிய அருமறைவழியே ஒழுகி அகத்தலமாகிய யோகத்தில் பொருந்தி ஆ முதலியவற்றைக் கட்டுத்தறி (தூண்) மாறுதல் இன்றி இருந்தாற்போல் தம் உடம்பை இருத்தித் தினவு முதலியன உடம்பில் தோன்றினும் சொறியாமலும், காற்று மழை மின்னல் இடி முதலியன உடம்பில் மோதினும் அசையாமலும் இருந்து கருதிய குறியாம் சிவத்தை அறிவார்க்கு அருளால் அச்சிவத்துடன் கூடலுமாகும்.

1458. ஊழிதோ றூழி உணர்ந்தவர்க்கு அல்லால்
ஊழிதோ றூழி உணரவும் தானொட்டான்
ஆழி அமரும் அரிஅயன் என்றுளார்
ஊழி முயன்றும்ஓர் உச்சியு ளானே.

பொருள் : ஊழிதோறூழி பலவரினும், என்றும் ஒருபடித்தாய் நின்று நிலவும் முழு முதற்சிவனை அவன் அருட்கண்ணால் உணர்ந்தவர்க்கு அல்லாமல் பலவூழி கண்டாலும் தம் அறிவால் அச்சிவனைக் காணமுடியாது. சக்கரப் படையைத் தாங்கும் அரியும் அயனும் பலவூழி முயன்றும் காண ஒண்ணாமல் நீங்கி மறைந்து நின்றனன். (ஓருச்சி ஒருவி என்பதன் திரியு ஒருவி - நீங்கி.)

1459. பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோல்
சீவனுக்கு உள்ளே சிவமணம் பூத்தது
ஓவியம் போல உணர்ந்தறி வாளர்க்கு
நாவி யணைந்த நடுதறி யாமே.

பொருள் : மலரின் கண் மணம் பொருந்தி யமைவது போல் ஆருயிரின் கண்ணும் அன்னை அத்தனாம் சிவமணம் பூத்தமைந்தது. அவ் அமைவினையுடையார் புனைந்த சித்திரம் போல் அச்சிவனையே உணர்ந்தறிவர். அப்படி அறிகின்றவர் புனுகு பூனை அணைந்த நடுத்தறி போன்று அசையாதிருப்பவர். (நாவி - புனுகுப்பூனை)

1460. உய்ந்தனம் என்பீர் உறுபொருள காண்கிலீர்
கந்த மலரில் கலக்கின்ற நந்தியைச்
சிந்தை யுறவே தெளிந்தருள் நீங்கினால்
முந்தைப் பிறவிக்கு மூலவித் தாமே.

பொருள் : உயர்ந்தோம் என்று சொல்வீர்; ஆனால் யோகத்தால் உள்ளே உறுகின்ற பொருளைக் காணமாட்டீர். மணங்கமழும் நல்லார் தம் நெஞ்சத்தாமரையில் கலக்கின்ற நந்தியை உங்கள் உள்ளம் பொருந்தத் தெளியுங்கள். தெளிந்தால் இருள் நீங்கும். இருள் நீங்கினால் நுண்ணுடலாகிய கருவுறாது தோன்றும் முதற்பிறவியை ஒழிப்பதற்கு அத்தெளிவு அழியாக் காரணமாகும். வித்து காரணம்.

1461. எழுத்தொடு பாடலும் எண்ணெண் கலையும்
பழித்தலைப் பாசப் பிறவியும் நீங்கா
வழித்தலைச் சோமனோடு அங்கி அருக்கன்
வழித்தலைச் செய்யும் வகையுணர்ந் தேனே.

பொருள் : இலக்கண இலக்கியங்களும் இவற்றின் விரிவான அறுபத்து நான்கு கலைகளும், பழித்தற்கு இடமாகிய சுட்டுணர்வாகும். அச்சுட்டுணர்வாகிய பாசத்தினால் தொடரும் பிறவியும் நீங்காத முறைமை வாய்ந்த இடப்பால் நரம்பாகிய திங்களும் வலப்பால் நரம்பாகிய ஞாயிறும் நடுப்பால் நரம்பாகிய தீயும் அருளான் அமையும் நிலைகளையுணர்வர். அவ்வுணர்வால் முதன்மையான செந்நெறிச் செல்லும் மேன்மை எய்தும்.

1462. விரும்பிநின் றேசெய்யில் மேய்த்தவ ராகும்
விரும்பிநின் றேசெய்யின் மெய்யுரை யாகும்
விரும்பிநின் றேசெய்யின் மெய்த்தவ மாகும்
விரும்பிநின் றேசெய்யில் விண்ணவன் ஆகுமே.

பொருள் : சிவத்தை விரும்பி நின்று செயல் செய்யும் நல்லோர் உண்மைத் தவத்தவராவர். அவ்வாறு ஒழுகின் குருவருள் அருமறை கைகூடும். அதுபோல் செய்யின் அஃது இறப்பில் தவமாகிய உண்மைத் தவமாகும். மேலும் கைக் கோலின் தூய விண்ணுலக நேராட்சியுடைய சிவனென மதிக்கப்படுவன். (அருமறை - குருமொழி)

1463. பேணிற் பிறவா உலகருள் செய்திடும்
காணில் தனது கலவியு ளேநிற்கும்
நாணில் நரக நெறிக்கே வழிசெயும்
ஊனில் சுடும் அங்கி உத்தமன் தானே.

பொருள் : அகத்தவமாகிய யோக நெறியைப் பேணி ஒழுகுவார் மீண்டும் பிறப்பதற்கு வாயில் இல்லாத தூய சிவவுலகை எய்துவர். இவ்வுலகே பிறவா உலகெனப்படும். அருட் கண்ணாற் காண்பார் சிவபெருமான் வேறு அறக்கலந்து நிற்கும் கலவியுள் நிற்பர். இத்தவ ஒழுக்கிற் செல்ல நாணமுறுவார் இருள் உலகு எய்தி இன்னல் உறுவர். சிவன் உடம்பினுள் அவ்வுடம்பு நிலைத்து நிற்பதற்கு வேண்டும் சூட்டினை அருள்வன். அத்தகைய சிவபெருமானே சார்ந்தாரைக் காக்கும் தலைவன் ஆவான்.

1464. ஒத்தசெங் கோலார் உலப்பிலி மாதவர்
எத்தனை ஆயிரம் வீழ்ந்தனர் எண்ணிலி
சித்தர்கள் தேவர்கள் மூவர் பெருமையாய்
அத்தன் இவன்என்றே அன்புறு வார்களே.

பொருள் : நேர்மையான செங்கோல் அரசர்கள், உண்மையான வேதநெறி விளக்கிய முனிவர்கள் எத்தனை ஆயிரம் பேர்கள் இவ்வுண்மை உணராது அழிந்து ஒழிந்தார்கள். இவ் யோகத்தை அறிந்த எண்ணற்ற சித்தர்களும் தேவர்களும், பிரமன், திருமால், உருத்திரன் ஆகிய மூவரும் பெருமையாகப் பரசிவத்தைத் தவிர உயிருக்கு நன்மை செய்பவர் வேறு இல்லை என்று அடி பணிந்தார்கள்.

1465. யோகிக்கு யோகாதி மூன்றுள கொண்டுற்றோர்
ஆகத் தருகிரி யாதி சரியையாம்
தாகத்தை விட்ட சரியையொன் றாம்ஒன்றுள்
ஆதித்தன் பத்தியுள் அன்புவைத் தேனே.

பொருள் : யோகம், கிரியை, சரியை ஆகிய மூன்று நெறிகளையும் கொண்டு மேன்மையுறுவர் யோகிவர் ஆவர். அவ்வாறாகத் தருவன கிரியையில் கிரியை, கிரியையில் சரியை ஆகியவாம். ஆசையை விட்ட சரியை ஒன்றாகும். அவ்வாறு விளங்கும் ஒளிமண்டல சிவாதித்தன் பத்தியில் சிறந்துஅன்பு கொண்டேன். (ஆதித்தன் - சிவசூரியன்.)

1466. யோகச் சமயமே யோகம் பலவுன்னல்
யோக விசேடமே அட்டாங்க யோகமாம்
யோகநிர் வாணமே உற்ற பரோதயம்
யோகஅபி டேகமே ஒண்சித்தி யுற்றலே.

பொருள் : செறிவு நிலையாகிய யோகத்தில் சமயம், விசேடம், நிருவாணம், அபிடேகம் என் நான்கு நிலைகள் உள்ளன. அவை முறையே சிவநுழைவு, சிவநோன்மை, சிவ நுண்மை, சிவ நுகர்மை என அழைக்கப் பெறும், யோகத்தில் சமயம், பல வகையான யோக முறைகளை நினைத்தல், யோகத்தில் விசேடம் எட்டு உறுப்புடன் கூடிய யோகம், யோகத்தில் நிருவாணம் முழுமுதற் சிவம் தோன்றல் (யோகத்தில் அபிடேகம் - சித்திபெறுதல். உறுதல் - உறல்; உற்றல் என மிகுந்தது.)

8. ஞானம் (மெய்யுணர்வு)

(ஞானம் என்பது பதி அறிவு, ஞானம், நேயர், ஞாதுரு என்ற மூன்றும் கெட்டு ஒன்றான நிலையே ஞானம் எனப்பெறும் ஆதலால் ஞானமே வீடு பேற்றுக்கு வாயிலாகும்.)

1467. ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை
ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்று
ஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்காவா
ஞானத்தின் மிக்கார் நரரின்மிக் காரே.

பொருள் : ஞானத்தில் சிறந்த அறநெறி நாட்டில் இல்லை. ஞானத்தைக் கொடுக்காத சமயநெறியும் நல்லது அன்று. ஞானத்துக்குப் புறம்பானவை நல்ல வீடு பேற்றை அளிக்காது. ஞானத்தில் சிறந்து விளங்குபவரே மக்களில் மேலோர் ஆவர். ஞானமே வீடு பேற்றிற்கு வாயிலாதலின் சிறந்தது என்பதாம். (நாட்டில்லை - நாட்டில் இல்லை)

1468. சத்தமும் சத்த மனனும் தகுமனம்
உய்த்த உணர்வும் உணர்த்தும் அகந்தையும்
சித்தம் என்று இம்மூன்றும் சிந்திக்கும் செய்கையும்
சத்தங் கடந்தவர் பெற்றசன் மார்க்கமே.

பொருள் : நாதமும் நாதவடிவான மனமும் தக்க அம்மனம் தந்த புத்தியும் புத்தியை உணர்த்தும் அகங்காரமும் ஆகிய சித்தம் என்ற இம்மூன்றும், அது சிந்திக்கின்ற செயலும் அவற்றால் விளையும் நாதமும் கடந்த ஞானியர் பெற்ற நெறியே சன்மார்க்கம் ஆகும்.

1469. தன்பால் உலகும் தனக்குஅரு காவதும்
அன்பால் எனக்குஅரு ளாவது மாவன
என்பார்கள் ஞானமும் எய்தும் சிவோகமும்
பின்பாலின் நேயமும் பெற்றிடுந் தானே.

பொருள் : சீவனது சித்தத்தில் அமைத்துள்ள சங்கற்ப உலகமும் தனது சூழ்நிலையில் புறத்தே அமைந்துள்ள உலகமும் அன்பினால் எனக்கு அருளாக அமைந்தன என்பர் ஞானிகள். இவ்வகையான ஞானமும் அதனால் அமையும் சிவபாவனையும், பின்னர் அறியப்படுபொருள் ஆகிய சிவத்தையும் பெற்றிடுவர். (சிவோகம் - அவனே தானே ஆகிய நெறி. பின்பால் - சிவோகம் பாவனை கைவந்த பின். நேயர் - சிவம்.)

1470. இருக்கும் சேம இடம்பிரம மாகும்
வருக்கம் சராசர மாகும் உலகம்
தருக்கிய ஆசாரம் எல்லாம் தருமே
திருக்கமில் ஞானத்தைத் தேர்ந்துணர்ந் தோர்க்கே.

பொருள் : மாறுபாடு இல்லாத சிவஞானத்தை திருவருளால் தெளிந்து உணர்ந்தோர் சிவஞானியர் ஆவர். அவர் ஒடுக்கமாகிய நிட்டைகூடியிருக்கும் இடம் சிவன் எழுந்தருளியிருக்கும் இடமாகும். இயங்குதினை நிலைதிணையாகிய கூட்டம் அனைத்தும் அவர்களுக்கு உலக உறவாகும். மேம்பாடு மிக்க ஒழுக்கம் அனைத்தும் தாமே வந்து எய்தும்.

(செருமி இருக்கும் - மறைந்திருக்கும், ஆசாரம் - ஒழுக்கம், திருக்கிலா - மாறுபாடு இல்லாத)

1471. அறிவும் அடக்கமும் அன்பும் உடனே
பிறியா நகர்மன்னும் பேரரு ளாளன்
குறியும் குணமும் குரைகழல் நீங்கா
நெறியறி வார்க்கிது நீர்த்தொனி யாமே.

பொருள் : சிவத்தை அறியும் அறிவும், சிவத்தில் அடங்கும் அடக்கமும், சிவத்தைப் பற்றும் தலையன்பும் உள்ளவர் கேடில்லாத சிவவுலகத்தில் வாழ்வோராவர். அவர்கள் தம் புற அடையாளச் சிவப்பண்பும் ஒலிக்கும் கழல் அணிந்துள்ள சிவபெருமான் திருவடிகளை நீங்கா நிலையைக் றிப்பனவாகும். அவர்கள் பால் அடங்கியிருக்கும் திருவடி யுணர்வு காற்று முதலியவற்றின் துணையால் நீரில் உண்டாகும் ஒலிபோல் செந்நெறிச் செல்லும் துணையால் வெளிப்படும்.

1472. ஞானம் விளைந்தெழு கின்றதோர் சிந்தையுள்
ஏனம் விளைந்தெதி ரேகாண் வழிதொறும்
கூனல் மதிமண் டலத்தெதிர் நீர்கண்டு
ஊனம் அறுத்துநின்று ஒண்சுடர் ஆகமே.

பொருள் : ஞானம் முதிர்ந்து எழுகின்ற எண்ண நிலையில் கருவி யாகிய நாதம் தோன்றி முகத்தின் முன் எங்கும் இளம்பிறை மண்டலத்தின் ஒலியைத் தரிசித்து உடலின் இழிதகைமையை உணர்ந்து உடலைக் கடந்து ஒளி மிக்க சோதியாகும். ஞானியர் உடலின் இழிதகைமையை உணர்ந்து ஒளியேதாம் என்று அறிவர். (ஒண்சுடர் - சிவம்.)

1473. ஞானிக்கு உடன்குணம் ஞானத்தில் நான்குமாம்
மோனிக்கு இவை ஒன்றும் கூடாமுன் மோகித்து
மேனிற்ற லாம்சத்தி வித்தை விளைத்திடும்
தானிக் குலத்தோர் சரியை கிரியையே.

பொருள் : ஞானிக்கு உடனாய தன்மையாக ஞானத்தில் ஞானம், ஞானத்தில் யோகம், ஞானத்தில் கிரியை, ஞானத்தில் யோகம், ஞானத்தில் கிரியை, ஞானத்தில் சரியை ஆகிய நான்கும் ஆகும். அனுபவம் முதிர்ந்து பிரணவ சத்தியான மௌனிக்கு இலைஒன்றும் தேவையில்லை. முன்னே பரவசமடைந்து மேல் சந்திர மண்டல ஒளியில் விளங்கும். சத்தி ஞானத்தை அளித்துவிடும். அவ்வாறன்றி ஆதாரங்களில் பொருந்தி யோகம் புரிவோர்க்குச் சரியையும் கிரியையுமேயாகும்.

1474. ஞானத்தின் ஞானாதி நான்குமாம் ஞானிக்கு
ஞானத்தின் ஞானமே நான்எனது என்னாமல்
ஞானத்தில் யோகமே நாதாந்த நல்லொளி
ஞானக் கிரியையே நன்முத்தி நாடலே.

பொருள் : சிவஞானிக்கு ஒதப்பட்ட அறிவில் அறிவு முதலிய நான்கும் உள்ளன. அறிவில் அறிவாகிய ஞானத்தின் ஞானமே யான், எனது என்னும் செருக்கு அறல். ஞானத்தில் யோகம் முப்பத்தாறு மெய்யுங்கடந்த அருள் வெளியில் காணும் சிவஒளி ஞானத்தில் கிரியையே திருவடிப் பேற்றினை நாடுதல். மெய் - தத்துவம். ஞானத்தில் சரியை என்பது திருவடிப் பேற்றினைத் திருமுறைச் செல்வர் நவில நன்கினிது கேட்டல்.

1475. நண்ணிய ஞானத்தின் ஞானாதி நண்ணுவோன்
புண்ணிய பாவம் கடந்த பிணக்கற்றோன்
கண்ணிய நேயர் கரைஞானம் கண்டுளோன்
திண்ணிய சுத்தன் சிவமுத்தன் சித்தனே.

பொருள் : பெற்ற ஞானத்தில் ஞானாதி நான்கும் கைவரப் பெற்றவன் புண்ணியத்தால் அடையும் நற் பயனையும், பாவத்தாலவரும் தீய பயனையும் கடந்து நிற்பவன் ஆவான். பெருமையான நேயப் பொருளின் ஞான வரம்பைக் கண்டவன், திண்மையான மலக் குற்றங்கள் அற்றவனும் சிவ முத்தனும் சித்தனுமாவான். (சிவமுத்தன் - சிவப்பேற்றை அடைந்தவன். சித்தன் - அறிவின் எல்லையைக் கண்டவன், ஞானி - ஞானத்தின் எல்லையைக் கண்ட சிவ முத்தனும் சித்தனும் ஆவான்)

1476. ஞானச் சமயமே நாடும் தனைக் காண்டல்
ஞான விடேசமே நாடு பரோதயம்
ஞானநிர் வாணமே நன்றறி வான்அருள்
ஞானஅபி டேகமே நற்குரு பாதமே.

பொருள் : சிவ ஞானத்திலும் நிகழும் நால்வகைத் தீக்கையும் வருமாறு; சிவ நுழைவு என்பது சிவனைக் காணும் முறையால் தன்னைக் காண்பது சிவநோன்மை என்பது மேலாம் சிவத்தோற்றம் காண்பது. சிவ நுண்மை என்பது வாலறிவனாகிய சிவபெருமானின் திருவருள் வீழ்ச்சி. சிவ நுகர்மை என்பது திருவருள் ஆசான் திருவடியினை மறவாமை. (நுழைவு - சமயம்; நோன்மை - விசேடம்; நுண்மை - திருவாணம்; நுகர்மை - அபிடேகம்; திருவருள் வீழ்ச்சி - சத்திநிபாதம், நிபாதம் - நன்றாய் பதிதல், பரோதயம் பரம்+உதயம், சிவம் தோன்றல். நன்றறிவான் அருள் - சிவனருள், நற்குரு -சிவகுரு.)

9. சன்மார்க்கம் (காதன்மை நெறி)

(சன்மார்க்க மாவது, நன்னெறி அல்லது ஒளிநெறி, சன்மார்க்கத்தில் தான் அவனாம் தன்மை எய்தலாம்.)

1477. சாற்றும் சன் மார்க்கமாம் தற்சிவத் தத்துவத்
தோற்றங்க ளான சுருதிச் சுடர்கண்டு
சீற்றம் ஒழிந்து சிவயோக சித்தராய்க்
கூற்றத்தை வென்றார் குறிப்பறிந் தார்களே.

பொருள் : சொல்லப்பெறும் சன்மார்க்கமாவது தற்பதம் பொருளான சிவத்தின் உண்மை வடிவங்களான நாதவிந்துக்களில் விளங்கும் சுடரைக்கண்டு, சினத்தை விட்டுச் சிவயோகத்தில் நிலைத்த சித்த முடையவராய்க் காலனை வென்ற இறைவனது திருவுள்ளக் குறிப்பை உணர்ந்தவர் பற்றும் நெறியாம்.

1478. சைவப் பெருமைத் தனிநா யகன்நந்தி
உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு
தெய்வச் சிவநெறி நன்மார்க்கம் சேர்ந்துய்ய
வையத்துள் ளார்க்கு வகுத்துவைத் தானே.

பொருள் : சைவத்துக்குப் பெருமையைத் தரும் ஒப்பற்ற தலைவனாகிய சிவன் ஆன்மாக்கள் உய்தி பெறும் வண்ணம் அமைத்த ஒளிநெறி ஒன்றுண்டு. அதுதான் தெய்வச் சிவநெறியாகிய சன்மார்க்கம். அதனைச் சேர்ந்து உய்தி பெறுமாறு இவ்வுலகில் உள்ளார்க்கு அமைத்துக் கொடுத்தான்.

1479. தெரிசிக்கப் பூசிக்கச் சிந்தனை செய்யப்
பரிசிக்கக் கீர்த்திக்கப் பாதுகஞ் சூடக்
குருபத்தி செய்யும் குவலயத் தோர்க்குத்
தருமுத்திச் சார்பூட்டும் சன்மார்க்கம் தானே.

பொருள் : தெரிசிக்கவும் பூசிக்கவும் தியானிக்கவும் தீண்டவும் புகழவும் திருவடிநிலையைச் சிரமேல் சூடவும் குருபத்தி செய்யும் மெய்யன்பர்களுக்குச் சன்மார்க்கம் முத்தியை அடையத் துணைபுரியும்.

1480. தெளிவறி யாதார் சிவனை அறியார்
தெளிவறி யாதார் சீவனும் ஆகார்
தெளிவறி யாதார் சிவமாக மாட்டார்
தெளிவறி யாதவர் தீரார் பிறப்பே.

பொருள் : சன்மார்க்க நெறியின்கண் ஒழுகித் திருமுறைவழியாக முப்பொருளின் மெய்ம்மை தெளியாதவர் சிவனை உணரார். சிவனை உணராமையினால் உயிர்ப்பயன் எய்தார். பயன்எய்தார் ஆகவே அறிவுடைப் பொருளும் ஆகார். மெய்ம்மை தெளியாதவர் சிவன் திருவடிகளைக் கூடிச் சிவமாம் பெருவாழ்வு எய்தார். மெய்ம்மை தெளியாதார் பிறப்பு அறார்; சிறப்பும் உறார்.

1481. தான்அவ னாகித் தான்ஐந்தூம் மலம்செற்று
மோனம தாம்மொழிப் பால்முத்த ராவதும்
ஈனமில் ஞானானு பூதியில் இன்பமும்
தான்அவ னாய்அற்ற லானசன் மார்க்கமே.

பொருள் : சுத்த ஆன்மாவாகிய தான் சிவமே யாகித் தன்பால் பொருந் திய ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி ஆகிய ஐம்மலங்களையும் நீக்கி, மோனம் என்ற பெயரினையுடைய ஒரு மொழியான பிரணவத்தை அடைந்து முத்தான்மா ஆவதும், குற்றமில்லாமல் ஞான அனுபவத்தில் இன்பம் அடைவதும். தான் சிவமாகத் தன்னிலை கெடல் சன் மார்க்கமாம். தான் அவனாதல் சன்மார்க்கத்தால் அடையலாம். (அனுபூதி - அனுபவம்)

1482. சன்மார்க்கத் தார்க்கு முகத்தொடு பீடமும்
சன்மார்க்கத் தார்க்கும் இடத்தொடு தெய்வமும்
சன்மார்க்கத் தார்க்கு வருக்கம் தரிசனம்
எம்மார்க்கத் தார்க்கும் இயம்புவன் கேண்மினோ.

பொருள் : சன்மார்க்கத்தர்களது முகமே சிவன் உறையும் பீடம் என்பதும், அவர்களது இடமே கோயில் என்பதும், அவர்களது கூட்டத்தைக் காண்பதே சிவதரிசனம் என்பதும் எம்மார்க்கத்தில் உள்ளோர்க்கும் கூறுகின்றேன்; கேட்பீர்களாக.

1483. சன்மார்க்க சாதனம் தான்ஞான ஞேயமாம்
பின்மார்க்க சாதனம் பேதையர்க் காய்நிற்கும
துன்மார்க்கம் விட்ட துரியத் துரிசற்றார்
சன்மார்க்கம் தான்அவ னாகும்சன் மார்க்கமே.

பொருள் : சன்மார்க்க சாதனமாவது சிவத்தை அறியும் ஞானமாகும். சன்மார்க்கம் ஒழிந்த ஏனைய சாதனம் அறிவில்லாதவர்க்கு ஆகும். தீமை தரும் மார்க்கத்தை விட்டுத் துரியத்தில் பொருந்திக் குற்றம் நீங்கினவர், சன்மார்க்கந்தான் அவனாகும் நன்னெறியை உணர்ந்தவராவர்.

1484. சன்மார்க்கம் எய்த வரும்அருஞ் சீடர்க்குப்
பின்மார்க்கம் மூன்றும் பெறஇயல் பாம்என்றால்
நன்மார்க்கம் தானே சிவனொடு நாடவே.
சொன்மார்க்கம் என்னச் சுருதிகைக் கொள்ளுமே.

பொருள் : சன்மார்க்கத்தை அடைய வருகின்ற அருமையான சாதகர்க்கு ஏனைய மூன்று மார்க்கங்களும் பெறுவது இயல்பாதலின் சிவனொடு பொருந்தும் நன்மார்க்கமே வேண்டுவது ஆகும். இதுவே பிரணவ மார்க்கம் என வேதம் கூறியது என்று கடைப்பிடிக்கவும். ஏனைய மூன்று; சகமார்க்கம், சற்புத்திரமார்க்கம், தாசமார்க்கம்.

1485. அன்னிய பாசமும் ஆகும் கருமமும்
முன்னும் அவத்தையும் மூலப் பகுதியும்
பின்னிய ஞானமும் பேதாதி பேதமும்
தன்னொடும் கண்டவர் சன்மார்க்கத் தோரே.

பொருள் : தனக்கு வேறாய்ப் பாசம் உண்டு என்றும், பாசத்தால் இன்பம் உண்டு என்றும், அக்கன்மம் காரணமாகப் பிறப்பு இறப்புக்களாகிய அவத்தைகள் உண்டு என்றும், அவத்தைக்கு ஏதுவான மூலப்பிர கருதி உண்டு என்றும் இவைகளை அறியும் அறிவு உண்டு என்றும், இவைகளின் பேதங்களையும் ஆன்மாவையும் கண்டு ஆராய்பவர் சன்மார்க்க நெறியில் நிற்பவரேயாவர்.

1486. பசுபாசம் நீக்கிப் பதியுடன் கூட்டிப்
கசியாத நெஞ்சம் கசியக் கசிவித்து
ஒசியாத உண்மைச் சொரூபஉ தயத்துற்று
அசைவானது இல்லாமை யானசன் மார்க்கமே.

பொருள் : ஆன்மாவைப் பாசத்தினின்றும் பிரித்து, பதியோடு சேர்த்து, கனியாத மனத்தை நன்றாகக் கனிய வைத்து, கெடாத மெய்ப்பொருள் தோற்றத்துள் பொருந்தி அசையாதபடி சமாதி கூடியிருத்தலே சன்மார்க்கமாம். (சொரூப உதயம் - ஆன்மாவின் இயற்கை உருவம்.)

1487. மார்க்கம்சன் மார்க்கிகள் கிட்ட வகுப்பது
மார்க்கம்சன் மார்க்கமே யன்றிமற்று ஒன்றில்லை
மார்க்கம்சன் மார்க்க மெனும்நெறி வைகாதோர்
மார்க்கம்சன் மார்க்க மாம்சித்த யோகமே.

பொருள் : சன்மார்க்கத்தில் உள்ளோர் அடைய வகுக்கும் மார்க்கம் சன்மார்க்கமாகிய மார்க்கமின்றிப் பறிதொன்றில்லை. மார்க்கமாகிய சன்மார்க்க நெறியே மார்க்கம் யோகசித்திகளைத் தரும் நன்னெறியாம். சன்மார்க்கமே ஞானத்தைத் தரும் மார்க்கமாம். இதனைச் சிவயோகம் எனவும் கூறுவர்.

10. சக மார்க்கம் (தோழமை நெறி)

(சகமார்க்கமாவது தோழமை நெறியாம். சகமார்க்கத்தில் நிற்போர் சிவ ரூபத்தைப் பெறுவர்.)

1488. சன்மார்க்கம் தானே சகமார்க்க மானது
மனமார்க்க மாமுத்தி சித்திக்குள் வைப்பதாம்
பின்மார்க்க மானது போராப் பிறந்துஇறந்து
உன்மார்க்க ஞானத்து உறுதியும் ஆமே.

பொருள் : ஞான நெறியானது தோழமை நெறியாகவே அடையப்படுவது. இராஜ மார்க்கமாகிய இது பின் வீடு பேற்றையும் சித்தியையும் தருவதாம். இவையல்லாத பிற்பட்ட நெறிகள் நீங்காப் பிறப்பையும் இறப்பையும் தந்து ஞானத்தை நினைத்து நினைத்து வருந்தச் செய்பவை. ஆருயிர்களைத் தோழமை நெறியில் இருத்துதற்கு இருந்து காட்டியவர்நம்பி ஆரூரர். பின்மார்க்கம் - மேலே கூறிய நான்கு மார்க்கங்கள் அல்லாதது. (உன் - அலைகிற)

1489. மருவும் துவாதச மார்க்கம்இல் லாதார்
குருவும் சிவனும் சமயமும் கூடார்
வெருவும் திருமகள் வீட்டில்லை யாகும்
உருவும் கிளையும் ஒருங்குஇழப் பாரே.

பொருள் : சிரசின் பன்னிரண்டு அங்குலத்தில் பொருந்துகின்ற மார்க்கத்தை அறியாதவர், துவாத சாந்தத்திலுள்ள குரு மண்டலமாகிய ஒளி மண்டலத்தையும், அங்கு விளங்கும் சிவத்தையும் இவற்றை உணர்த்தும் சமயத்தையும் அறியாதவர் ஆவர். இவரது இல்லத்தில் இலக்குமி தங்காமல் அகன்றுவிடும். தனது உருவத்தையும் சுற்றத்தையும் விட்டு இறந்துபடுவர்.

1490. யோகச் சமாதியின் உள்ளே அலிடம்
யோகச் சமாதியின் உள்ளே உளரொளி
யோகச் சமாதியின் உள்ளே உளசத்தி
யோகச் சமாதி யுகந்தவர் சித்தரே.

பொருள் : தோழமை நெறியாகிய சகமார்க்கத்தில் சமாதியாகிய நிஷ்டையில் இரப்போர்க்கு, அவர் உள்ளத்தின்கண் திருவருட்கண்ணால் பரந்த உலகங்கள் காணப்படும். அதுபோல் உள்ளொளியாகிய பேரொளி தோன்றும். அவ்வுள்ளத்தின்கண் திருவருள் அம்மை காட்சியருள்வள். இச்சமாதியில் உயர்ந்தோர். அனைத்துச் சித்தியும் அடைவர். அவர்களே சித்தர் என்பபடுவோர். (யோகசமாதி - சகமார்க்கம்)

1491. யோகமும் போகமும் யோகியர்க்கு ஆகுமால்
யோகம் சிவரூபம் உற்றிடும் உள்ளத்தோர்
போகம் புவியில் புருடார்த்த சித்தியது
ஆகும் இரண்டும் அழியாத யோகிக்கே.

பொருள் : யோகமும் போகமும் யோகியர்க்கு ஆகும். யோகத்தால் சிவ சாரூபம் பெற்று விளங்குவார். அதனால் அவர் பூவுலகில் அடையப்பெறும் அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய நான்கு புருஷார்த்தங்களையும் அடைந்தவராவர். அழியாத யோகிக்கு யோகமும் போகமும் பொருந்துவனவாம்.

1492. ஆதார சோதனை யால்நாடி சுத்திகள்
மேதாதி ஈரெண் கலாந்தத்து விண்ணொளி
போதா லயத்துப் புலன்கர ணம்புந்தி
சாதா ரணங்கெடல் ஆம்சக மார்க்கமே.

பொருள் : ஆதார சோதனையால் நாடிசுத்தி அமைந்து, மேதை முதலான பதினாறு கலைகளில் விளங்கும் ஆகாயமும் அவற்றால் விளங்கும் ஒளியும் புலனாகும். அறிவின் ஆலயம் என்ற ஆன்மாவில் புலன்களும் பொறிகளும் புத்தியும் தம்முடைய இயல்பான கீழ் இழுக்குந் தன்மையை விட்டு நிற்பதே சகமார்க்கமாகம்.

1493. பிணங்கிநிற் கின்றவை ஐந்தையும் பின்னை
அணங்கி எறிவன் அயிர்மன வாளால்
கணம்பதி னெட்டும் கருதும் ஒருவன்
வணங்கவல் லான்சிந்தை வந்துநின் றானே.

பொருள் : ஆன்மாவைக் கீழ்நோக்கில் அழைத்துச் செல்லுகின்ற ஞானேந்திரியங்கள் ஐந்தையும் பின்னர் மனம் என்னும் கூரிய வானால் வருத்தித் துன்புறுத்துவேன். அப்போது பதினெண் கணங்களும் கருதுகின்ற ஒருவனும் வணங்கத் தக்கவனும் ஆகிய இறைவன் சிந்தையில் பொருந்தி நின்றான்.

(ஐந்து இந்திரியங்களையும் அடக்கும் யோகியின் சிந்தையில் இறைவன் பொருந்தி நிற்பான்.)

கணம் பதினெட்டு : அமரர், சித்தர், அசுரர், சைத்தியர், கருடர், கின்னரர், நிருதர், கிம்புருடர், காந்தருவர், இயக்கர், விஞ்சையர், பூதர், பசாசர், அந்தரர், முனிவர், உரகம் ஆகாய வாசியர், போக பூமியர் எனப் பாகு பட்டன பதினெண் கணமே.

1494. வளங்கனி யொக்கும் வளநிறத் தார்க்கும்
வளங்கனி யொப்பதோர் வாய்மையன் ஆகும்
உளங்கணிந்து உள்ளம் உகந்திருப் பார்க்குப்
பழங்கனிந்து உள்ளே பகுந்துநின் றானே.

பொருள் : வளமான கனியைப் போன்ற கனிவையுடைய செம்மையாளர்க்கு நல்ல கனியைப்போன்று இன்பந்தரும் உண்மைப் பொருளாகும். மனங்கனிந்து உள்ளே மகிழ்ந்திருப்பவர்க்கு பழங்கனிந்துள்ளேயிருக்கும் காற்றினை நீக்கி எடுப்பது போல இவரைத் தத்துவங்களினின்றும் நீக்கித்தானும் உடனிருந்தான். சகமார்க்கத்தில் நிற்போரைத் தத்துவங்களினின்றும் நீக்கி உடனிருந்தருளுவான் இறைவன்.

(திருவடிப் பேரின்பம் பழங்கனிய அம் மெய்யடியார்க்கு அதனைப் பகிர்ந்து கொடுத்து உடன் நின்றருள்வன் அச்சிவன் எனினுமாம்.)

11. சற்புத்திர மார்க்கம் (மகன்மை நெறி)

(சற்புத்திர மார்க்கமாவது கிரியை நெறியாகும். பூசித்தல் முதலியன இந்நெறிக்குரிய அங்கங்களாம்.)

1495. மேவிய சற்புத்திர மார்க்க மெய்த்தொழில்
தாவிப்ப தாம்சக மார்க்கம் சகத்தொழில்
ஆவ திரண்டும் அகன்று சகமார்க்கத்
தேவியோடு ஒன்றல் சன்மார்க்கத் தெளிவதே.

பொருள் : தோழமை நெறியாகிய சகமார்க்கத்தை நிலை நிறுத்துவது மகன்மை நெறியாகிய சற்புத்திர மார்க்கமாகும். சகமார்க்கமாகிய அகத்தவமும் மனைத்தவமும் ஆகிய இரண்டும் காதன்மை நெறியாகிய சன்மார்க்க அடிப்படையாகும். (அகத்தவம் - யோகம், மனைத்தவம் - சகத்தொழில். இம்மந்திரம் சற்புத்திர மார்க்கம், சகமார்க்கம், சன்மார்க்கம் ஒன்றுக்கொன்று அடிப்படை என்று கூறுகிறது.)

1496. பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல்
ஆசற்ற நற்றவம் வாய்மை அழுக்கின்மை
நேசித்திட்டு அன்னமும் நீசுத்தி செய்தல்மற்று
ஆசற்ற சற்புத் திரமார்க்கம் ஆகுமே.

பொருள் : பூசனை செய்தல், பாராயணம் செய்தல், இறைவனது புகழைச் சொல்லி வணங்குதல், குறிப்பிட்ட மந்திரங்களைக் கூறிச்சிந்தித்தல், குற்றமற்ற தவ ஒழுக்கங்களை மேற்கொள்ளல், உண்மை பேசுதல், காமாதி அறுபகை நீங்குதல், அன்போடு அன்னபாவனை செய்தல் ஆகிய இவ்எட்டும் குற்றமற்ற சற்புத்திர மார்க்கத்திற்குரிய உறுப்புக்களாம்.

1497. அறுகால் பறவை அலர்தேர்ந்து உழலும்
மறுகா நரையன்னம் தாமரை நீலம்
குறுகா நறுமலர் கொய்வன கண்டும்
சிறுகால் அறநெறி சேர்கி லாரே.

பொருள் : ஆறுகால் பறவையான வண்டானது தேன் சேகரிக்கப் பலமலர்களை நாடி அலையும். அலையினும் வெள்ளை அன்னமானது தாமரையை விட்டுக் கவர்ச்சியான நீலோற்பல மலரை அடையாது. அதுபோலக் கிரியையாளர் மணமிகு மலர்களைப் பறித்துச்சிவனை வழிபடுவது கண்டும், ஏனையோர் சிறுபொழுதேனும் வழிபடாது பிறவழிச் சென்றுகெடுகின்றவர்களே.

1498. அருங்கரை யாவது அவ்வடி நீழல்
பெருங்கரை யாவது பிஞ்ஞகன் ஆணை
கருங்கரை ஏகின்ற மன்னுயிர்க்கு எல்லாம்
ஒருங்குஅரை யாய்உல கேழின்ஒத் தானே.

பொருள் : பிறவிப் பெருங்கடலுக்கு அருமையான கரையாவது திருவடி நீழலே, பெரிய கரையாவது அரன் ஆணையின் வண்ணம் அமைதலே திருவடியாகின்ற கரைக்குச் செல்லுகின்ற நிலைபெற்ற உயிர்கட்கு எல்லாம் ஒரே அரசாய் ஏழு உலகினும் ஒத்து விளங்கியவன் இறைவன் ஆவான். (அருங்கரை - சம்சாரக் கடலுக்குக்கரை. வரும் கரை - எழும் பிறப்புக்கள். அரையாய் - இறைவனாய்.)

1499. உயர்ந்தும் பணிந்தும் முகந்தும் தழுவி
வியந்தும் அரனடிக் கேமுறை செய்மின்
பயந்தும் பிறவிப் பயனது வாகும்
பயந்து பிரிக்கில்அப் பான்மையன் ஆமே.

பொருள் : திருவேடப் பொலிவால் உயர்ந்தும், சிவனடியார் திருவடிகளைப் பணிந்தும், அதனால் உள்ளம் உவந்தும், திருஐந்தெழுத்தினை அகம்தழுவியும், அதனால் வியப்புற்றும் சிவபெருமான் திருவடிக்கே திருத்தொண்டு செய்வோம் என்பாரே மகன்மை நெறியினராவர். அப்பணியினை அன்புடன் செய்யுங்கள். பிறவிக்கு அஞ்சிப் பெருமான் அடிகளைச்சேரும் பெரும் பேறு அதுவாகும். அன்பும் அச்சமுங்கொண்டு அவன் திருவடியினை நெஞ்சத்து அமைத்துத் தொழுதால் சிவபெருமானும் அவ் ஆருயிரினை முன்னின்று தாங்குபவன் ஆவான்.

1500. நின்று தொழுவன் கிடந்தெம் பிரான்தன்னை
என்றுந் தொழுவன் எழிற்பரஞ் சோதியைத்
துன்று மலர்தூவித் தொழுமின் தொழுந்தோறும்
சென்று வெளிப்படும் தேவர் பிரானே.

பொருள் : நான்நின்று தொழுவேன். அழகிய பிரானைக் கிடந்து என்றும் தொழுவேன். ஆதலால் நீங்களும் அழகிய பரஞ்சோதியாகிய இறைவனைப் பொருந்திய மலர்கொண்டு தொழுது வழிபடுங்கள். அவ்வாறு தொழும் போது தேவதேவனாகிய சிவபெருமான் தொழுவார்தம் சிந்தனையில் வெளிப்பட் டருள்வான்.

1501. திருமன்னும் சற்புத்திர மார்க்கச் சரியை
உருமன்னி வாழும் உலகத்தீர் கேண்மின்
கருமன்னு பாசம் கைகூம்பத் தொழுது
இருமன்னு நாடோறும் இன்புற்று இருந்தே.

பொருள் : கிடைத்தற்கரிய மக்கள் யாக்கை பெற்ற உலகவரே ! கேளுங்கள், மகன்மை நெறிக்கண் ஒழுகுவார்க்கு வீடுபேறு எளிதின் எய்தும். பிறவிக்கு வித்தாகிய ஆணவ மல பாசம் இம்மகன்மை நெறியினரைக் கண்டு செயலற்று ஒடுங்கும். அதனால் நாள்தோறும் திரு ஐந்தெழுத்து ஓதித் தொழுது இன்புற்றிருங்கள். (மகன்மை நெறி - சற்புத்திர மார்க்கம், கைகூம்ப - செயலற்று ஒடுங்கி. கை - செயல்)

12. தாச மார்க்கம் (அடிமை நெறி)

(தாசமார்க்கமாவது திருக்கோயிலில் சென்று தொண்டு செய்வது.)

1502. எளியனல் தீபம் இடல்மலர் கொய்தல்
அளிதின் மெழுகல் அதுதூர்த்தல் வாழ்த்தல்
பளிமணி பற்றல் பன்மஞ் சனமாதி
தளிதொழில் செய்வது தான்தாச மார்க்கமே.

பொருள் : அடியார்க்கு எளியனாய் ஒழுகுதல், திருக்கோவில்களில் நல்ல விளக்கிடுதல், திருநந்தவனத்தில் மலர் கொய்தல், அன்புடன் மெழுகல், திருஅலகிடுதல், திருமுறைத் திருப்பதிகம் பாடியபடி பொருள்சேர் புகழை ஓதி வாழ்த்தல், திருக்கோவிற்கண் உள்ள அசையாமணி போன்ற விளக்க மிக்க பெரிய மணிகளை அடித்தல், திருமுழுக்குக்கு வேண்டிய திருத்தநீர் முதலியன கொணர்தல் இன்னும் திருக்கோவில் திருத்தொண்டு பலவும் புரிதல் அடிமை நெறி என்ப. (பளி - பள்ளி என்பதன் இடைக்குறை தளி - திருக்கோயில். பள்ளி - திருக்கோயில்)

1503. அதுஇது ஆதிப் பரம்என்று அகல்வர்
இது வழி என்றங்கு இறைஞ்சினர் இல்லை
விதிவழி யேசென்று வேந்தனை நாடும்
அதுஇது நெஞ்சில் தணிக்கின்ற வாறே.

பொருள் : ஆதிப்பரம் அது இது என்று ஐயுற்றுத் தெளியாது நீங்குவர். வாய்மைச் செந்நெறி இது என்று தெளிந்து வேந்தனாம் சிவபெருமானை வழிபட்டுத் தெளிந்தார் இல்லை. தமிழ்த் திருமாமறை, திருமுறை வழியே உண்மை கண்டு ஓர்ந்து செந்நெறிச் சென்று சிவபெருமானை நாடுங்கள். அதுவே உள்ளத்தில் தோன்றும் ஐயுறவை அகற்றித் திருமுறை - தமிழ் ஆகமம், விதிவழி - தமிழ் வேதம்.

1504. அந்திப்பன் திங்கள் அதன்பின்பு ஞாயிறு
சிந்திப்பன் என்றும் ஒருவன் செறிகழல்
வந்திப்பன் வானவர் தேவனை நாடோறும்
வந்திப்பது எல்லாம் வகையின் முடிந்ததே.

பொருள் : திருவருள் துணையால் திங்களாகிய இடகலையையும் ஞாயிறாகிய பிங்கலையையும் அடக்குவன். அடக்கி எந்நாளும் ஒப்பில்லாத சிவபெருமானின் திருவடிகளை நாடுவன். தேவர் முதல்வனாகிய அச்சிவபெருமானையே நாள்தோறும் வணங்குவேன். அவ்வாறு வணங்கும் திறங்கள் எல்லாம் நால்வகை மார்க்கத்தில் அடங்கும்.

1505. அண்ணலை வானவர் ஆயிரம் பேர்சொல்லி
உன்னுவர் உள்மகிழ்ந்து உள்நின்று அடிதொழக்
கண்ணவன் என்று கருதும் அவர்கட்குப்
பண்ணவன் பேரன்பு பற்றிநின் றானே.

பொருள் : தேவர்கள் பரசிவத்தை ஆயிரம் நாமங்கள் கூறி அருச்சித்துத் தியானிப்பர். ஆனால் அவர்களை விடுத்து உள்ளம் மகிழ்ந்து திருவடியை மனத்தில் எண்ணித் தொழுது, கண் போன்றவன் என்று கருதி நிற்கும் அடியார்கட்கு நாதமயமான இறைவன் அவரது பேரன்புக்கு வெளிப்பட்டு அருளுவான்.

1506. வாசித்தும் பூசித்தும் மாமலர் கொய்திட்டும்
பாசிக் குளத்தில்வீழ் கல்லாம் மனம்பார்க்கின்
மாசற்ற சோதி மணிமிடத்து அண்ணலை
நேசத் திருத்த நினைவுஅறி யாரே.

பொருள் : வாசித்தாலும் பூசித்தாலும் சிறந்த மலர்களைக் கொய்து கொணர்ந்தாலும் சொன்னால் கல்வீழ்ந்த பாசிக்குளம் போன்று தெளிவில்லாதது மனம். ஆதலின் இவர்கள் குற்றமற்ற சோதியாகிய நீலகண்டப் பெருமானை அன்பினால் இடைவிடாது மனத்தில் இருந்த நினைவு அறியாதவரேயாவர். குளத்தில் கல்வீழ்ந்தபோது பாசி அகலும்; பின்னர் பாசிமூடும், அதுபோல மனம் பூசை முதலியன செய்தகாலத்துத் தெளியும், பின்னர் மூடத்தைப் பெறும்.

13. சாலோகம்

(சிவனுலகம்)

1507. சாலோகம் ஆதி சரியாதி யிற்பெறும்
சாலோகம் சாமீபம் தங்கும் சரியையால்
மாலோகம் சேரில் வழியாகும் சாரூபம்
பாலோகம் இல்லாப் பரன்உரு வாமே.

பொருள் : சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் ஆகிய நால்வகை முத்திகளும் சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நெறிகளால் அமையும். அவற்றுள் சரியை நெறிபற்றி நிற்போர் இறைவன் வாழும் உலகத்தை அடைந்து அவனுடைய சமீபத்தில் அமைவர். அத்தகைய உலகில் சாமீபத்தை அடைந்தவர் அவனது உருவத்தைப் பெறுவர். இவர் இறைவனைப் போன்ற ஒளி உருவைப் பெற்று இப்பரந்த உலகில் இல்லாமல் எங்கும் நிலைபெறும் பரம் உருவாமே.

(சரியையால் சாலோகம் பெறலாம் என்றது இம்மந்திரம்.)

1508. சமயம் கிரியையில் தன்மனம் கோயில்
சமய மனுமுறை தானே விசேடம்
சமயத்து மூலம் தனைத்தேறல் மூன்றாம்
சமயாபி டேகம் தானாம் சமாதியே.

பொருள் : சமயத்தைப் பற்றி நிற்போர் செய்யத்தகும் முதல் கிரியை தன்னுள்ளத்தில் வழிபடு கடவுளை வைத்தல், சமயத்தில் விசேடம் என்பது அவ்வழிபடு கடவுளுக்குரிய மந்திரத்தை உன்னுதல். சமயத்திலுள்ள மூலமந்திரத்தின் தத்துவம் தெளிதல் மூன்றாவதாகிய நிர்வாண தீட்சையாகும். வழிபடு கடவுளை நினைந்து சமாதி கூடல் சமயத்துக்குரிய அபிடேகமாம்.

14. சாமீபம் (சிவன் அண்மை)

(சாமீபம் - இறைவன் சமீபத்தில் உறைதல்.)

1509. பாசம் பசுவான தாகும்இச் சாலோகம்
பாசம் அருளான தாகும் இசை சாமீபம்
பாசம் சிரமான தாகும் இச் சாரூபம்
பாசம் கரைபதி சாயுச் சியமே.

பொருள் : சாலோக முத்தியில் பாசத் தன்மை கெடாமல் நின்று பிறவியைத் தரும். சாமீபத்தில் பாசம் பந்தப் படுத்தாமல் அருளாய் நிற்கும். சாரூபத்தில் பாசமானது மேலும் மேன்மையைத் தரும் சாயுச்சியத்தில் பாசமானது முழுதும் கரைந்து பதியை அடைவிக்கும்.

(விளக்கம் : சாலோகம் - இறைவனது உலகத்தில் இருத்தல், சாமீபம் - சமீபத்தில் உறைதல், சாரூபம் - உருவம்பெறதல், சாயுச்சியம் - இரண்டறக்கலத்தல்.)

(சாலோகம் முதலிய மூன்றும் பத முத்திரைகள், சாயுச்சியம் - பர முத்தி.)

15. சாரூபம் (சிவனுரு வாதல்)

(சாரூபம் - இறைவன் உருவம் பெறுதல்)

1510. தங்கிய சாரூபம் தானெட்டாம் யோகமாம்
தங்கும் சன்மார்க்கம் தனில்அன்றிக் கைகூடா
அங்கத் துடல்சித்தி சாதனர் ஆகுவர்
இங்கிவ ராக விழிவற்ற யோகமே.

பொருள் : நிலைபெற்ற சாரூபம் என்பது யோகத்தின் எட்டாவது உறுப்பான சமாதியில் அமைவது தங்கிய ஞானநெறி பற்றி நின்றார்க்கன்றிக் கைகூடாதாகும். இந்நெறியால் உறுப்போது கூடிய சரீரசித்தி கைவரப் பெறுவர். இங்கு இவரது உடல் குற்றமற்ற யோகத்தால் திருத்தி அமைக்கப்படும். யோக மார்க்கத்தால் சாமீபம் இட்டும் என்றது இம்மந்திரம்.

1511. சயிலலோ கத்தினைச் சார்ந்த பொழுதே
சயிலம தாகும் சராசரம் போலப்
பயிலும் குருவின் பதிபுக்க போதே
கயிலை இறைவன் கதிர்வடி வாமே.

பொருள் : உலகத்தில் ஒப்பில் ஒருமலை என்று சொல்லப்படும். பொன்மலையினைச் சார்ந்த இயங்குதிணையும் நிலைத் திணையுமாகிய பொருள்கள் எல்லாம் அப்பொன்வண்ணம் ஆதல்போல், சிவகுரு வீற்றிருக்கும் திருவூர் புகுந்தபோதே கயிலைமலையில் வீற்றிருக்கும் சிவபெருமானின் இயற்கை அறிவொளி வடிவம் ஆவன், மெய்கண்டானாகிய மாணவன். (சயிலம் - கயில மலை.)

16. சாயுச்சியம் (சிவனாதல்)

(சாயுச்சியம் - இறைவனோடு இரண்டறக் கலத்தல்)

1512. சைவம் சிவனுடன் சம்பந்த மாவது
சைவம் தனையறிந் தேசிவம் சாருதல்
சைவம் சிவம்தன்னைச் சாராமல் நீவுதல்
சைவம் சிவானந்தம் சாயுச் சியமே.

பொருள் : சிவனாம் நிலையில் முதல்நிலை சைவம் சிவனுடன் தொடர்புற்று நிற்றல். இரண்டாம் நிலை அந்நெறியின் உண்மை உணர்ந்து சிவன் அண்மையில் சார்ந்து நிற்றல். மூன்றாம் நிலை சார்ந்து நிற்றலைக் கடந்து முழுநீறு பூசிய முனிவர் போன்று வேறன்மையாக விரவி நிற்றல். இந்நிலையே சைவத்தின் கண் ஓதப்படும். சிவனார் திருவடிப் பேரின்பம் என்னும் சாயுச்சியமாகும்.

1513. சாயுச் சியம்சாக் கிராதீதம் சாருதல்
சாயுச் சியம்உப சாந்தத்துத் தங்குதல்
சாயுச் சியம்சிவ மாதல் முடிவிலாச்
சாயுச் சியமனத்து ஆனந்த சத்தியே.

பொருள் : விழிப்பின்கண் தன்னை மறந்திருத்தல் சாயுச்சியம் அடைதல், விருப்பு வெறுப்பு அற்ற உபசாந்த நிலையில் உள்ளவரும் சாயுச்சியம் பெற்றவரே. சிவத்துடன் இலயமாதல் எல்லையற்ற ஆனந்தத்தில் திளைத்திருப்பதாகிய சாயுச்சியமே. (சாக்கிராதீதம் - விழிப்பில் தன்னை மறந்திருத்தல் உப சாந்தம் - விருப்பு வெறுப்பு அற்ற நிலை)

17. சத்தி நிபாதம் (திருவருள் நன்கு பதிதல்)

மந்தம்

(சத்தி நிபாதம் - சத்தி நன்கு பதிதல். ஆன்மாவை விளக்கம் உறாது பந்தித்திருந்த மலசத்திகள் வீழ்தொழிந்து அருளைப் பெருக்கும் சத்திகள் பதித்தல். அருள் பதிவுக்கு ஏற்ப அறிவு பிரகாசிக்கும் என்ப. இதில் நான்கு நிலைகள் உள்ளன. 1) மந்தம் - அற்ப அறிவினைப் பெற்றவன், 2) மந்ததரம் - மந்தமாக இருந்து மந்திரங்களை உபாசிப்பவன், 3) தீவிரம் - யோகப் பயிற்சி செய்வோன் 4) தீவரதரம் - ஞான மார்க்கத்தை அனுசரிப்பவன்.)

1514. இருட்டறை மூலை யிருந்த குமரி
குருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக்
குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி
மருட்டி யவனை மணம்புரிந் தாளே.

பொருள் : அறியாமையாகிய இருள் சூழ்ந்த இவ்வுடலகத்து அறியாமையை நீக்கி அறிவை விளங்கும் திருவருட் குமரி மூலையில் இருப்பார் போன்று மறைந்து உறைந்தனள். அறிவுக்கண் விளங்காமல் குருடாக இருந்த ஆருயிர்க் கிழவனைக் கூடுதல் கருதி, அவனுக்கு ஏற்பட்ட குருடாகிய அறியாமையை அகற்றிச் சிவபெருமானின் எண்கணங்களையும் வண்ணமுறக் காட்டித் தன்மாட்டே பேரன்பு கொள்ளுமாறு மயக்கி, அவன்பால் சிவமணம் கமழும் படிதான் கூடியிருந்தனள். (இருட்டறை - அஞ்ஞான இருள்படர்ந்த சரீரம். குமரி திருவருட்சத்தி குருட்டுக்கிழவன் - ஞானக்கண் இல்லாத ஆன்மா மணம்புரிந்தாள் - தங்கினாள்.)

1515. தீம்புல னான திசையது சிந்திக்கில்
ஆம்புல் னாயறி வார்க்குஅமு தாய்நிற்கும்
தேம்புல னான தெளிவறி வார்கட்குக்
கோம்புல னாடிய கொல்லையு மாமே.

பொருள் : சிவனடியின்பம் எய்துவதற்குரிய நிலையினை எண்ணில் அந்நிலை திருவடி யுணர்வாய் அவ்வுணர்வினை உணர்வார்க்கு இறவா இன்பநுகர்வாம் சிவ அமிழ்தாய் நிற்கும். இத்தகைய இனிய உணர்வாகித் தெளி அறியுடையவர் கட்குக் கோப்புலனாகிய சிவஞானம் எண்ணியவாறே ஐம்புலன் நுகர்வு இன்பம் தரும் புறத்துப் பூங்காஒத்து அகத்துதிகழும், (கோம்புலன் - கோப்புலன் உயர்ந்த ஞானம் கொல்லை - பூங்கா.)

1516. இருள்நீக்கி எண்ணில் பிறவி கடத்தி
அருள்நீங்கா வண்ணமே ஆதி அருளும்
மருள்நீங்கா வானவர் கோனொடுங் கூடிப்
பொருள்நீங்கா இன்பம் புலம்பயில் தானே.

பொருள் : பழ மலமாம் இருளைப் பிறைமதிபோல் நீக்கி, அதன் பொருட்டு அவ்வுயிர்க்கு நேர்ந்த பல பிறவிகளையும் கொடுத்துக் கடத்தி, ஆதியாகிய நடப்பாற்றல் திருவருள் நீங்காவண்ணம் உடன்நின்றருளும். அருளவே அவ்வுயிர் உன்மத்தம் அகலாத வானவர் கோனாகிய சிவபெருமானுடன் கூடி என்றும் நிலத்திருப்பதாகிய பேரின்பம் நுகரும். உயிர் நிலைக் களமாம் உடம்பாகவும் அவ்வருள் திகழும்.

1517. இருள்சூழ் அறையில் இருந்தது நாடில்
பொருள்சூழ் விளக்கது புக்கெரிந்த தாற்போல்
மருள்சூழ் மயக்கத்து மாமலர் நந்தி
அருள்சூழ் இறைவனும் அம்மையும் ஆமே.

பொருள் : இருட்டறையில் விளக்கொளியால் பொருளைக் காண்பது போல அஞ்ஞான இருள் படர்ந்த சரீரத்தில் திருவருட் சத்தியின் ஒளியால் சிவமாகிய பொருளைக் காணலாம் என்றது இம்மந்திரம்.

மந்தரம்

1518. மருட்டிப் புணர்ந்து மயக்கமும் நீக்கி
வெருட்டி வினையறுத்து இன்பம் விளைத்து
குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி
அருள்திகழ் ஞானம் அதுபுரிந் தாளே.

பொருள் : திருவருள் அம்மை ஆருயிர்கள் தன்மாட்டு விருப்பம் கொள்ளும்படி அவ்வுயிர்களை மயக்கிக் கூடினள். அவளே அவ்வுயிர்கள் பழமலப் பிணிப்பால் மாயையின்கண் மயங்கிக் கிடந்த மயக்கினை நீங்கி யருளினள். அச்சுறுத்தி வினைகளை அறுத்துத் திருவடி யின்பத்தினை விளைவித்தவளும் அவளே. அவளே ஞானக்கண் பெறாது அகக்கண்குருடாயிருந்த குருட்டினை நீக்கியருளினன். எய்தற்கரிய நன்மைகள் பலவற்றையும் காட்டித் திருவருள் வண்ணமாகிய சிவஞானத்தினைப் பதித்தருளியவளும் அவளே. அங்ஙனம் செய்தருளியவள் வனப்பாற்றலாகிய திருவருள் அம்மை.

1519. கன்னித் துறைபடித்து ஆடிய ஆடவர்
கன்னித் துறைபடித்து ஆடுங் கருத்திலர்
கன்னித் துறைபடிந்து ஆடுங் கருத்துண்டேல்
பின்னைப் பிறவி பிறிதில்லை தானே.

பொருள் : புறத்தே செந்தமிழ் நாட்டுத் தென்கோடி முனையாகிய கன்னியாகுமரி என்னும் கன்னித்துறைதிருத்தநீர் படிந்து ஆடியவர் அத்துடன் அமைந்து விடுகின்றனர். அஃது அகத்தே விளங்கும் திருவருள் நெறியாகிய கன்னித்துறை படிந்தாடுதற்கு வழியென்று நினைத்து ஆண்டுச் சென்று பயிலும் கருத்துடையர் அல்லர். அத்திருவருள் நெறிச் செல்லும் கருத்துண்டாகுமானால் அவர் பிறவாப்பெருநெறிப்பற்றிப் பிறப்பற்றுச் சிறப்புற்று வாழ்வர். (கன்னித் துறை - சத்தி பொருந்துதலுக்கு உரிய வழி).

1520. செய்யன் கரியன் வெளியன்நற் பச்சையன்
எய்த உணர்ந்தவர் எய்வர் இறைவனை
மைவென்று அகன்ற பகடுரி போர்த்தவெங்
கையன் சிவனென்று காதல்செய் வீரே.

பொருள் : படைத்தல் காத்தல் துடைத்தல் மறைத்தல் ஆகிய உலகியல் தொழில் நான்கிற்கும் கொள்ளும் திருமேனியின் நிறம் முறையே செம்மை, கருமை, வெண்மை, பசுமை என்ப. இறைவன் இந்நிறங்களை மேற் கொள்ளுகின்றனன் என்னும் உண்மையைப் பொருந்த உணர்ந்தவர் அவன் திருவடியினை அடைவர். எய்வர் - எய்துவர் (இடைக் குறை) அவனே அறியாமைச் சார்பாகத் தோன்றிய தன் முனைப்பாகிய யானையை நகத்தால் உரித்துப் போர்த்தனன். மழுவாகிய தீயினைக் கையில் தாங்கியவனும் அவனே. அதனால் அவன்பால் பேரன்பு கொள்ளுங்கள். (செய்யன் - அயன்; கரியன் - அரி; வெளியன் - அரன்; பச்சையன் - ஈசன்.)

1521. எய்திய காலங்கள் எத்தனை யாயினும்
தையலும் தானும் தனிநா யாகம்என்பர்
வைகலும் தன்னை வணங்கும் அவர்கட்குக்
கையிற் கருமம்செய் காட்டது வாமே.

பொருள் : உலகினுக்கு எத்தனை ஊழிகள் செல்லினும் சிவையும் சிவனும் ஒப்பில்லாத முழுதன்மையர் ஆவர். நாள்தோறும் தம்மை வணங்கும் மெய்யடியார்கட்கு உண்மை அறிவு இன்ப அடையாளத் திருக்கையால் காட்டிருள்வர். அடையாளக் காட்டு அதுவுமாகும். இதுவே சின்முத்திரை; பொறி. (கருமம்செய் காட்டு - யோகம் செய் என்று கூறுவது போலும்.)

1522. கண்டுகொண் டோம்இரண் டும்தொடர்ந்து ஆங்கொளி
பண்டுபண்டு ஓயும் பரமன் பரஞ்சுடர்
வண்டுகொண் டாடும் மலர்வார் சடையண்ணல்
நின்றுகண் டார்க்கிருள் நீங்கிநின் றானே.

பொருள் : ஞாயிறும் திங்களும் ஆகிய ஒளியிரண்டும் பழமையாக ஒன்றை ஒன்று தொடர்ந்து வரினும் அவை இளைப்புறும். ஆனால் பரனாகிய பரஞ்சுடர் என்றும் ஒன்று போல் இருப்பன். வண்டு மொய்க்கும் கொன்றை மலர்மாலையணிந்து நீண்ட திருச்சடையுடைய சிவபெருமான் திருவடிகளை நன்னெறிக்கண் நின்று வழிபடுவோர்க்கு அவன் எழுந்தருளி இருள்நீக்கி ஆண்டு அருள்வன்.

தீவிரம்

1523. அண்ணிக்கும் பெண்பிள்ளை அப்பனார் தோட்டத்தில்
எண்ணிக்கும் ஏழேழ் பிறவி யுணர்விக்கும்
உள்நிற்ப தெல்லாம் ஒழிய முதல்வனைக்
கண்ணுற்று நின்ற கனியது வாகுமே.

பொருள் : சிவபெருமான் உடைமையாகிய தோட்டம் ஒன்றுள்ளது. அத்தோட்டம் ஆருயர்களின் உடம்பாகும். அதன்கண் பொருந்தியிருக்கின்ற பெண்பிள்ளை திருவருள் ஆற்றல் ஆவள். அளவில்லாத எழுவகையாகத் தோன்றும் பிறப்பு உயிர்க்கு அத் திருவருள் உணர்வினை விளக்கும். உடம்பு அகத்துள்ள கருவிக் கூட்டங்களும் கருமக் கூட்டங்களும் ஆகிய அனைத்தினையும் அத்திருவருள் அகற்றி யருள்வள். அகற்றவே முழுமுதலாகிய விழுமிய சிவக்கனி கண்ணுறப் பொருந்தி நிற்கும் (எண்ணிக்கும் - எண்ணைக் கடக்கும் அளவிறக்கும்.)

1524. பிறப்பை அறுக்கும் பெருந்தவம் நல்கும்
மறப்பை யறுக்கும் வழிபடø வைக்கும்
குறப்பெண் குவிமுலை கோமள வல்லி
சிறப்பொடு பூசனை செய்யநின் றார்க்கே.

பொருள் : குறப்பெண்ணாகிய வெள்ளிமலை மலையாள் - திருவருள் அம்மை செந்தமிழ்த் திருமுறை வழியே சிறப்புடன் பூசனை புரியும் மெய்யடியார்க்கு அவர்களுடைய பிறப்பை அறுப்பாள். நானெறிப் பெருந்தவத்தை நல்குவாள். அறியாமையான நிகழும் சிவனை மறக்கும் மறப்பை அறுப்பாள். சிவயநம என்னும் திரு ஐந்தெழுத்தைக் கணித்து இடையறாது வழிபட வைப்பாள். (குறப்பெண் - குறிஞ்சி நிலப்பெற் - பார்வதி.)

1525. தாங்குமின் எட்டுத் திசைக்கும் தலைமகன்
பூங்கமழ் கோதைப் புரிகுழ லாளொடும்
ஆங்கது சேரும் அறிவுடை யார்கட்குத்
தூங்கொளி நீலம் தொடர்தலும் ஆமே.

பொருள் : எட்டுத் திசைக்கும் தலைவனோடு கூடி விளங்கும் திருவருள் அம்மையை உள்ளத் தாமரையினிடத்து இடையறாது உன்னுங்கள். மணங் கமழ்கின்ற மலர் சூடிய கூந்தலை யுடைய திருவருள் அம்மையின் திருவடிகளை வழிபடும் மெய்யன்பர்களுக்கு நீங்கா ஒளி நீலமாகிய திருவருள் பதிந்து தொடர்ந்து அருள் புரியும் (திருவருள் வீழ்ச்சி - சத்திநிபாதம். நீலம் - திருவருள் தாங்குமின் - நினையுங்கள்)

1526. நணுகினும் ஞானக் கொழுந்தொன்று நல்கும்
பணிகிலும் பன்மலர் தூவிப் பணிவன்
அணுகியது ஒன்றறி யாத ஒருவன்
அணுகும் உலகெங்கும் ஆவியும் ஆமே.

பொருள் : மேலே கண்ட வகையில் சத்தியின் அருளி பெற்றவனை அடைந்த பிறர்க்கு ஞானம் அமையும். அவனை வணங்கின் அவனும் பல மலர்களைத் தூவி வழிபடுவன். அத்தகைய மேலோன் தன்னைப் பணிவாரைக் கண்டு செருக்குக் கொள்ளாமல் சமத்தவ நிலையில் நிற்பன். அவன் உலகெங்கும் சென்று வரும் ஆற்றலைப் பெறுவான். சத்தி நிபாதத்தில் தீவிரத்தில் உள்ளோர் இயல்பு. தீவிர பக்குவிகள் எங்கும் சென்று ஞானம் நல்குவர்.

தீவிரதரம்

1527. இருவினை நேரொப்பில் இன்னருள் சத்தி
குருவென வந்த குணம்பல நீக்கித்
தருமெனும் ஞானத்தால் தன்செய லற்றால்
திரிமலத் தீர்ந்து சிவனவன் ஆமே.

பொருள் : நல்வினை தீவினையாகிய இரண்டும் சமமாக ஒத்தகாலத்தில் இனிமையான அருள் சத்தி குரு மண்டலத்தில் விளங்கி, ஆன்மப் பிரகாசம் அடைவதற்கு இடையூறான குணங்களைப் போக்கியருள்வாள் என்னும் அறிவால் தன்முனைப்பால் செய்யும் செயலற்றிருப்பின் மும்மலங்களும் கெட்டுச் சிவமாய் விளங்குவான். இருவினை ஒப்பாவது நன்மையில் உவப்பும் தீமையில் வெறுபபும் இன்றியிருத்தல். தன் செயல் அறுதலாவது, எல்லாம் சிவன் செயல் என்றிருத்தல். தீவரதர பக்குவிகள் தமக்கென ஒரு செயலுமின்றி யிருப்பர்.

1528. இரவும் பகலும் இலாத இடத்தே
குரவம் செய்கின்ற குழலியை உன்னி
அரவம்செய் யாமல் அவளுடன் சேரப்
பரிவொன்றி லாளும் பராபரை தானே.

பொருள் : நினைப்பும் மறப்பும் இல்லாமற் செய்யும் திருவடியுணர்வு இடத்து அருள் விளையாட்டு நிகழ்த்தும் ஆருயிர்க்குழலியை ஆராயின் அவ்வுயிர் ஐந்தெழுத்து உணர்வேயாக நிற்கும். வேறு எவ்வகை ஓசையும் எழாது, அருளுடனே தங்கிநிற்கும் அவ்வுயிர் என்றும் இளமை நீங்காது ஒரு படித்தாக இருக்கும் பராபரையாகிய அவளும் அன்போடு இவனைப் பொருந்தி வாழ்வாள்.

1529. மாலை விளக்கும் மதியமும் ஞாயிறும்
சால விளக்கும் தனிச்சுடர் அண்ணலுள்
ஞானம் விளக்கிய நாதன்என் உள்புகுந்து
ஊனை விளக்கி உடனிருந் தானே.

பொருள் : மாலைக் காலத்தில் இருட்டைப் போக்கி ஒளியை நல்கும் திருவிளக்கும், அது போன்ற மதியமும், பகலில் அது போன்று ஒளியை நல்கும் ஞாயிறும் விளக்கம் தருமாறு அவற்றுக்கு விளக்கம் அருளும் தனிச்சுடர் அண்ணலாகிய சிவபெருமான் ஆருயிர்களுக்கு உயிர்க்குயிராய் உள்நின்று தானே முழுமுதல் தலைவன் என அருளி என் உள்ளே புகுந்து நின்றவனும் அவனே. அதனோடு உடனாய் நின்றவனும் அவ÷. (ஊனை - சரீரத்தை)

18. புறச்சமய தூஷணம் (பிறநெறிப் பீழை)

(புறச்சமய தூஷணம் - புறச்சமய நிந்தனை. புறத்தே இறைவனைக் காணவேண்டும் என்று கூறும் சமயம் புறச் சமயமாகும். புறச்சமயம் பிறவி நீங்கும் வழியினை தெரிவிக்க மாட்டாது.)

1530. ஆயத்துள் நின்ற அறுசம யங்களும்
காயத்துள் நின்ற கடவுளைக் காண்கிலா
மாயக் குழியில் விழுவர் மனைமக்கள்
பாசத்தில் உற்றுப் பதைக்கின்ற வாறே.

பொருள் : கூட்டமாக உள்ள ஆறு சமயங்களும், உடம்பினுள் விளங்கும் இறைவனைக் காண உதவி செய்யா. அதனால் அச்சமயங்களைப் பற்றி நிற்போர் மயக்கத்தைத்தரும் குழியில் விழுவர். மேலும் அவர் மனைவி மக்களாகிய தளையில் கட்டுண்டு தவிப்பவராவர்.

1531. உள்ளத்து ளேதான் கரந்தெங்கும் நின்றவன்
வள்ளல் தலைவன் மலர்உறை மாதவன்
பொள்ளற் குரம்பைப் புகுந்து புறப்படும்
கள்ளத் தலைவன் கருத்தறி யார்களே.

பொருள் : ஆருயிரின் நெஞ்சினுள்ளே மறைந்து எங்கும் நீக்கமற நிறைந்து நின்றவன், வள்ளலாகிய முதல்வன். அவன் உச்சிக்கு அப்பால் அருள் வெளியில் காணப்படும் ஆயிர இதழ்த் தாமரையில் வீற்றிருந்தருளும் அம்மையோடு கூடிய அப்பன், அவன் ஒன்பது ஓட்டைகளை யுடைய நிலையில்லாத இவ்வுடலில் புகுந்து நின்றனன். இங்கிருந்து ஆருயிர்களின் செல்வி நோக்கி வெளிப்படுவன். கள்ளத்தலைவனாகிய மறையோன், அவனது மெய்ம்மைக் கருத்தினை எவரும் எளிதாக அறிய மாட்டார்கள் என்க.

1532. உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் என்பவர்க்கு
உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் எம்மிறை
உள்ளத்தும் இல்லை புறத்தில்லை என்பவர்க்கு
உள்ளத்தும் இல்லை புறத்தில்லை தானே.

பொருள் : உயிரின் இடமாக இருந்து அறிவு செம்மையுற்ற ஞானகட்கு அவரின் உயிரின் இடமாக இருந்து அருள்புரிவன்; உயிருக்கு அந்நியமாய் இருந்து உயிர்களை நடத்துகிறான் என்ற பேதஞானமுடைய பக்தனுக்கு வேறாக வெளியில் நின்று அருள் வழங்குவான் எமது இறைவன். உள்ளும் புறமும் இல்லையென்ற நாத்திகர்களுக்கு இரண்டிடத்தும் இல்லாதவனாகிறான்.

1533. ஆறு சமயமும் கண்டவர் கண்டிலர்
ஆறு சமயப் பொருளும் அவனலன்
தேறுமின் தேறித் தெளிமின் தெளிந்தபின்
மாறுதல் இன்றி மனைபுக லாமே.

பொருள் : முக்கூற்று புறச்சமயத்துள் குறிப்பாக ஆறுவகைச் சமயம் வருமாறு. பைரவம், சமணம், பாஞ்சராத்திரம், பாட்டாசாரியம், உலகாயதம், சூனியவதாம் என்பன. இச்சமயங்களில் நின்றவர் சமயங்கடந்த சிவத்தைக் காண்கிலர். இச்சமயத்தாரால் கூறப்படும் பொருளும் அவன் அல்லன். இவ் வுண்மையினை ஆராய்தற் பொருட்டு நல்லாருடன் ஆராயுங்கள். ஆராய்ந்து தெளியுங்கள். தெளிந்த பின் நுமக்குத் திருவடியாகிய நிலைத்த பேரின்பம் எய்துதல் ஆகும். (நல்லார் - சித்தாந்த சைவர்.)

1534. சிவமல்லது இல்லை அறையே சிவமாம்
தவமல்லது இல்லை தலைப்படு வார்க்கிங்கு
அவமல்லது இல்லை அறுசம யங்கள்
தவம்வல்ல நந்திதாள் சார்ந்துய்யும் நீரே.

பொருள் : இவ்வுலகத்தில் சிவத்தைக் காட்டிலும் எங்கும் நிறைந்த மேலான பொருள் இல்லை என்று செப்புவாயாக, ஆன்மாவில் மறைந்துள்ள சிவத்தை அறிந்து அனுபவத்தைப் பெற்றுச் சிறப்படைதலே தவமே தவிர பிற இல்லை. இவ்வுண்மையை அறியாமல் சமயத் துறையில் புகுந்து சிறக்க விரும்புவார்க்கு ஆறு சமயங்களும் வீணானவையாகும். தவத்தின் பயனை அளிக்கவல்ல உங்கள் குரு மண்டலத்தில் விளங்கும் சிவத்தைச் சார்ந்துய்யுங்கள். தவமானது, தன்னுள் மறைந்த பொருளைக் காணச் செய்யும் முயற்சி.

1535. அண்ணலை நாடிய ஆறு சமயமும்
விண்ணவ ராக மிகவும் விரும்பும்
உள்நின்று அழியும் முயன்றிலர் ஆதலான்
மண்ணின்று ஒழியும் வகையறி யார்களே.

பொருள் : இறைவனைத் தேடி ஆறு உள் சமய நெறி நின்றோரும் விண்ணவர் ஆவதற்கு மிகவும் விரும்பி மயக்கத்துள் பட்டு அழிவர். ஆவர் தேவ தேவனாகிய இறைவனை அடைய முயற்சி செய்யாதவர் ஆதலின் பிறவி நீங்கும் உபாயம் அறியாதவர் ஆவார். விண்ணவர் பதம் மீண்டும் பிறவியைத் தரும். (ஏம் - மயக்கம்.)

1536. சிவகதி யேகதி மற்றுள்ள எல்லாம்
பவகதி பாசப் பிறவியொன் றுண்டு
தவகதி தன்னொடு நேரொன்று தோன்றில்
அவகதி மூவரும் அவ்வகை யாமே.

பொருள் : சிவநெறியே மேலான நெறி, ஏனையவை பிறவியைத் தரும் நெறிகள். அவற்றைச் சாரின் மலத்தால் உளதாம் பிறவியாகிய ஒன்று உண்டு. தன் அகத்தே சிவ ஒளி தோன்றில் தவநெறியாம். பிரமன் விஷ்ணு உருத்திரர் ஆகிய மூவரும் பிறவியை நல்கும் அவநெறியினரேயாம்.

1537. நூறு சமயம் உளவா நுவலுங்கால்
ஆறு சமயம்அவ் ஆறுள் படுவன
கூறு சமயங்கள் கொண்ட நெறிநில்லா
ஈறு பரநெறி இல்லாம் நெறியன்றே.

பொருள் : சொல்லப் போனால் பல நூற்றுக் கணக்கான சமயங்கள் உளவாம். ஆறு சமயங்களும் அவ்வகையுள் அடங்கிவிடும். கூறப்பெறும் சமயங்கள் மேற் கொண்ட நெறிகளைக் கடந்த முடிவையுடையது சிவநெறி. இதுவே வீடு பேற்றை அளிக்கும் நெறியாகும்.

1538. கத்தும் கழுதைகள் போலும் கலதிகள்
சுத்த சிவன்எங்கும் தோய்வற்று நிற்கின்றான்
குற்றம் தெளியாதார் குணங்கொண்டு கோதாட்டார்
பித்தேறி நாளும் பிறந்திருப் பாரே.

பொருள் : பொருள் அறியாமல் கத்துகின்ற கழுதைகள் போன்றவர்கள் வீணர்கள் தூய்மையான சிவன் எங்கும் நீக்கம் அறநிறைந்து நிற்கின்றான். எனினும் தம்மிடம் குற்றம் நீங்காதார் அவனிடமுள்ள பெருமைக் குணங்களைப் பாராட்ட மாட்டார். உண்மை உணராது மயக்கம் அடைந்து பிறந்து இறந்து உழல்வார். (கோதாட்டுதல் - பாராட்டுதல்)

1539. மயங்குகின் றாரும் மதிதெளிந் தாரும்
முயங்கி இருவினை முழைமுகல் பாச்சி
இயங்கிப் பெறுவரேல் ஈறது காட்டில்
பயங்கெட்டு அவர்க்கோர் பரநெறி யாமே.

பொருள் : ஞான சாஸ்திரங்களை ஓதித் தெளிந்தாரும், ஓதாது பத்திமார்க்கத்தில் நின்றாகும், இருவினை நுகர்ந்து சுழுமுனை நாடியின் வழியே சென்று முடிவான பிரமரந்திரத்தில் ஓடி அருளைப் பெறுவரேல் அச்சந்தவிர்ந்து நிற்போர்க்கு ஒருமேலான நெறியாகும்.

1540. சேயன் அணியன் பிணியிலன் பேர்நந்தி
தூயன் துளக்கற நோக்கவல் லார்கட்கு
மாயன் மயக்கிய மானுட ராம்அவர்
காயம் விளைக்கும் கருத்தறி யார்களே.

பொருள் : முழுமுதற் சிவம், மாற்றம் மனம் கழிய நின்ற மறையோன் ஆதலின் தொலைவில் உள்ளோன். அவன் அருள் கண்ணால் காணும் தவமுடையார்க்கு உயிர்க்கு உயிராய் வெளிப்படுதலின் நெருக்கமாக உள்ளவனும் ஆவான். இயல்பாகவே பாசங்களினின்று நீங்கியவன் ஆதலின் பிணியிலன். அவன் திருப்பெயர் நந்தி, இயல் பாகவே தூய்மையாகிய வாலறிவினன். அவனை ஒருமனப் பட்ட நெஞ்சினராய் அசையாது நின்று இடையறாது நோக்கவல்லார்க்குப் பிறப்பறும்; சிறப்புறும் திருவடிப் பேரின்பம் எய்தும், பிறப்பு இறப்புக் உட்பட்டு உடம் பால் விளையும் துன்ப நிலையை அறியாது அதுவே இன்ப மென மயங்குவோர் மாயவன் மயக்கிற்பட்ட மருண்ட மாந்தராவர்.

1541. வழியிரண் டுக்கும்ஓர் வித்தது வான
பழியது பார்மிசை வாழ்தல் உறுதல்
சுழியறி வாளன்தன் சொல்வழி முன்னின்று
அழிவழி வார்நெறி நாடகில் லாரே.

பொருள் : நற்கதியாகிய முறையை அறிந்து வாழ்பவர்க்கும், அறியாது வாழ்பவருக்கும் வினைப் போகமாகிய உடம்வு வித்தாம். பூமியின்கண் வாழ்ந்து மீண்டும் பிறப்பையும் இறப்பையும் பெறுதல் பழியாகும். பிராணனைப் பிரமப்புழைக்குச் செலுத்தும் உபாயத்தைக் கற்பிக்கும் குரு வழிநின்று, தம்மை அகண்டா காரத்தில் ஒன்றுபடுத்திக் கொள்ளும் நெறியை விரும்பவில்லையே.

1542. மாதவர் எல்லாம் மாதேவன் பிரான்என்பர்
நாதம தாக அறிவயப் படுநந்தி
பேதஞ்செய் யாதே பிரான்என்று கைதொழில்
ஆதியும் அந்நெறி யாகிநின் றானே.

பொருள் : பெரிய தவமுடையார் அனைவரும் மகாதேவனாகிய பரசிவனைத் தம்மைச் செலுத்துபவன் என்று வணங்குவர். அவன் குரு மண்டலத்தில் நாதவடிவாக வெளிப்படுவதனால் அறியப்படத் தக்கவன். அந்த சப்த உணர்வே அவன் என்று வணங்குவாயாகில் அம் முதல்வனும் அந் நெறிக்கண் வெளிப் பட்டு அருள்வன்.

1543. அரநெறி அப்பனை ஆதிப் பிரானை
உரநெறி யாகி உளம்புகுந் தானைப்
பரநெறி தேடிய பத்தர்கள் சித்தம்
பரனறி யாவிடில் பல்வகைத் தூரமே.

பொருள் : எல்லாச் சமயங்கட்கும் தலைவனை, யாவற்றுக்கும் முன்னோனை, பக்தியினால் விரும்புவோரின் மன மண்டலத்தில் விளங்குவோனை, மேலான மார்க்கத்தை நாடிய பக்தர்களின் சித்தம் விரும்பித் தேடியபோது அவன் அறிந்து வெளிப்படாவிடில் சமய உண்மை அறிவதற்கு அருமையாகும்.

1544. பரிசறி வானவன் பண்பன் பகலோன்
பெரிசறி வானவர் பேற்றில் திகழும்
துரிசற நீநினை தூய்மணி வண்ணன்
அரிதவன் வைத்த அறநெறி தானே.

பொருள் : சீவர்களுக்கு அளிக்க வேண்டிய பரிசை அறிந்தவன், விரும்பின வரை ஆதரிக்கும் பண்பை உடையவன், ஒளிமயமானவன். வானவர் பெற்றுள்ள பேறுகளுக் கெல்லாம் அவனே பெரிய தலைமையாக வுள்ளவன். உன்னுடைய சந்தேக புத்தியை விட்டு நினைப்பாயாக, தூய்மையான ஒளிக்கல் போன்ற சோதியை உடையவன். அவன் வைத்த தர்ம மார்க்கமாவது அருமையானதாகும்.

1545. ஆன சமயம் அதுஇது நன்றெனும்
மாய மனிதர் மயக்க மதுஒழி
கானங் கடந்த கடவுளை நாடுமின்
ஊனங் கடந்த உருவது வாமே.

பொருள் : சமயங்களில் அது நல்லது என்று கூறும் மயக்கத்தையுடைய மனிதரது மயக்கச் சூழலை விட்டு அகல்வாயாக, நாதாந்தத்தில் விளங்கும் சிவத்தை நாடுங்கள். மலமாயாகன்மங்களுடன் கலந்துள்ள ஊனுடலைக் கடந்துள்ள பிரணவ தேகத்தைப் பெறுவீர்கள்.

1546. அந்நெறி நாடி அமரரும் முனிவரும்
செந்நெறி கண்டார் சிவனெனப் பெற்றார்பின்
முன்னெறி நாடி முதல்வன் அருளிலார்
சென்னெறி செல்லார் திகைக்கின்ற வாறே.

பொருள் : மேலே சொன்ன நாத மார்க்கத்தை அறிந்து அடைந்த தேவர்களும் முனிவர்களும், செம்மையாகிய நெறி இதுவே என்று கண்டு சிவமாம் பேறு பெற்றார்கள். அப்படியிருக்க மக்கள் வகுத்த வேறு நெறிகளை நாடி முதல்வனது அருளைப் பெறாதார் செல்லுகின்ற நெறியில் சொல்லாமல் திகைக்கின்றவாறு என்னே !

1547. உறுமாறு அறிவதும் உள்நின்ற சோதி
பெறுமாறு அறியின் பிணக்கொன்றும் இல்லை
அறுமாறு அதுவான அங்கியுள் ஆங்கே
இறுமாறு அறிகிலர் ஏழைகள் தாமே.

பொருள் : நாம் அடையத்தக்க நெறியாக அடைவதும், உயிர்க்கு உயிராக நிற்கின்ற சோதியைப் பெறுதற்குரிய நெறியில் நின்று அறியில் யாதொரு மாறுபடும் உண்டாகாது. நம்முடைய மலகன்மங்கள் நீங்குவதற்குரிய வழியாக உள்ள செந்தீயுள் நின்று தற்போதும் கழிவதை மக்கள் அறிகின்றலர். இவர் அறிவில்லாதவர் தாமே.

1548. வழிநடக் கும்பரிசு ஒன்றுண்டு வையம்
கழிநடக் குண்டலர் கற்பனை கேட்பர்
சுழிநடக் கும்துய ரம்அது நீக்கிப்
பழிநடப் பார்க்குப் பரவலும் ஆமே.

பொருள் : இறைவனை அடைய வகுத்த வழி மேலே சொன்ன வழி ஒன்றேயாகும். உலக இன்பத்தில் மிகவும் நாட்டங் கொண்டு நடப்பவர் பிறர் கூறும் கற்பனைகளைக் கேட்பர். பிறவிச் சுழியில் அகப்பட்டு நடக்கும் துன்பத்தை நீக்கி, உலக இன்பத்தைப் பழித்த நடப்பவர்க்குப் பிறரல் புகழவும் ஆகும்.

1549. வழிசென்ற மாதவம் வைகின்ற போது
பழி செல்லும் வல்வினைப் பற்றறுத்து ஆங்கே
வழிசெல்லும் வல்வினை யார்திறம் விட்டிட்டு
உழிசெல்லில் உம்பர் தலைவன்முன் ஆமே.

பொருள் : மேலே உணர்த்திய சிவநெறி பற்ற அத்தவம் நிலை பெற்ற போது, பழிபாவங்களில் செலுத்தும் வலிமையான வினைத் தளைகளை அறுத்து, அவ்வினை வழியே செல்லும் தீவினை யாளரையும் புறக்கணித்து நீங்கி, பிரமரந்திரத் தொளைவழி செல்லின் தேவ தேவனாகிய சிவன் வெளிப்படுவான்.

19. நிராகாரம்

(நிராகாரம் - வடிவின்மை, அருவம். இங்கு அருவமான உயிர் உணர்வில் அருவமான இறைவன் உணர்வாய்க் கலந்திருக்கும் தன்மையைக் கூறுவது)

(நிராசாரம் என்று தலைப்பிட்டு அல் ஒழுக்கம் என்று பொருள் கொள்வர் ஒரு சாரார்.)

1550. இமையங்க ளாய்நின்ற தேவர்கள் ஆறு
சமையங்கள் பெற்றவர் சாத்திரம் ஓதி
அமையறிந் தோம்என்பர் ஆதிப் பிரானும்
கமையறிந் தாருள் கலந்துநின் றானே.

பொருள் : இமயமலை போன்ற அசைவற நின்ற தேவர்கள் அவர்கள் நிலைமைக்கு ஏற்றவாறு ஆறு சமயங்கள் பெற்றனர். அவற்றிற்குரிய சாத்திரங்களாகிய பொருள் நூல்களை ஓதினர். அடைதற்காய் அமைந்த நிலையினை அறிந்தோம். என்பர். ஆதிப் பிரானாகிய சிவபெருமானும் பிழைபொறுக்கும் தன்மையராய்ப் பொறுமையுடன் ஒழுகுவாருடன் கலந்து நின்றருள்வான்.

1551. பாங்கமர் கொன்றைப் படர்சடை யானடி
தாங்கு மனிதர் தரணியில் நேரொப்பர்
நீங்கிய வண்ணம் நினைவுசெய் யாதவர்
ஏங்கி உலகில் இருந்தழு வாரே.

பொருள் : தாரும் கண்ணியும் ஆக முறையே மார்பினிடத்தும் தலையினிடத்தும் கொன்றைப் பூவால் அமைந்தவற்றைச் சூடி விளங்கும் திருச் சடையினையுடைய சிவபெருமான் திருவடிகளை மறவாது உளங்கொண்டு தாங்கும் மெய்யடியார்கள் இவ்வுலகில் தமக்குத் தாமே ஒப்பாக விளங்குவர். சிவபெருமானை நினையாமல் செந்நெறியை நீங்கித்தாம் புன்னெறியிற் செல்லும் புரையாகிய குற்றத்தினை எண்ணாதவர் செய்வது இன்னதென்று அறியாமல் இவ்வுலகில் ஏங்கி இருந்து அழுவர்.

1552. இருந்தழு வாரும் இயல்புகெட் டாரும்
அருந்தவம் மேற்கொண்டங்கு அண்ணலை எண்ணில்
வருந்தா வகைசெய்து வானவர் கோனும்
பெருந்தன்மை நல்கும் பிறப்பிலி தானே.

பொருள் : உலகில் இருந்து சூழ்நிலை காரணமாக வருந்தி அழுகின்ற வரும் நல்ல நிலையிலிருந்த அதனை இழந்து வருந்துவோரும் அண்ணலாகிய சிவத்தை நினைத்து அருந்தவம் மேற்கொண்டால் அவரவர்க்குரிய இன்னல்களைப் போக்கி வருந்தாமல் செய்து தேவதேவனும் பிறப்பில்லாதவனுமாகிய சிவன் பெரிய தகுதியை அளித்தருளுவான்.

1553. தூரறி வாளர் துணைவர் நினைப்பிலர்
பாரறி வாளர் படுபயன் தான்உண்பர்
காரறி வாளர் கலந்து பிறப்பர்கள்
நீரறி வார்நெ மாமுகி லாமே.

பொருள் : குற்றமாகிய தூர்வையைக் குணமென அறிந்து தம்மனம் போல ஒழுகுபவர் யாண்டும் உள்ளுறு துணையாக நிற்கும் அம்மை யப்பரின் நினைப்பில்லாதவராவர். நிலையாத உலகமே பெரிதென மயங்கி அவ்வழி ஒழுகுவார் உலகப் பயனை நுகர்ந்து பிறப்பர். அறியாமை வயப்பட்டுத் தம் முனைப்புடன் ஒழுகுவார் மீண்டும் மீண்டும் இறந்து பிறந்து இன்னல் உறுவர். திருவடி உணர்வாகிய அருள்நீர் அறிவார் அத்திருவடி உணர்வாக நின்று திருவருள் வண்ணமாவர்.

1554. அறிவுடன் கூடி அழைத்தோர் தோணி
பறியுடன் பாரம் பழம்பதி சிந்தும்
குறியது கண்டும் கொடுவினை யாளர்
செறிய நினைக்கிலர் சேவடி தானே.

பொருள் : அறிவோடு கூடி அறிந்து அனுபவிப்பதோர் தோணியாகிய சிவம், வினைகளுக்குச் சேமிப்பான இடமாகிய காரண சரீரத்தை அழிக்கும் தூணாகாரமான சோதியின் இயல்லை அறிந்திருந்தும், கொடிய வினைக் கூட்டத்தை உடையார் சிவபெருமானது திருவடியைப் பொருந்த நினைக்கவில்லையே. (பறி - மீன்பிடிக்கும் கருவி, குறி - தூண் போன்ற சோதி. தோணி - சிவத்தின் திருவடி.)

1555. மன்னும் ஒருவன் மருவு மனோமயன்
என்னின் மனிதர் இகழ்வர்இவ் ஏழைகள்
துன்னி மனமே தொழுமின் துணையிலி
தன்னையும் அங்கே தலைப்பட லாமே.

பொருள் : நிலைபெற்ற ஒப்பில்லாத சிவபெருமான் அன்பால் நினைவாரது உள்ளக் கமலத்தின் கண் அவர் நினைந்த வடிவோடு பொருந்தி விளங்கும் மனோமயன் ஆவன். இவ் உண்மையினை மெய்யடியார்கள் கூறக்கேட்கும் மக்கள் அதனைப் பொருட்படுத்துகின்றார் இல்லை. பொருட்படுத்தாது இகழ்வார் தாழ்ந்த அறிவினை உடையவர் ஆவர். அவ்வழிச் செல்லாமல் சிவபெருமானை மனங்கொண்டு நெருங்கித் தொழுங்கள். தொழுதால் ஒப்பில்லாத அவன் அப்பொழுதே வெளிப்பட்டருள்வன். அருளவே அவன் திருவடியயைக் கூடி இன்புறலாம்.

1556. ஓங்காரத்து உள்ளொளி உள்ளே உதயமுற்று
ஆங்காரம் அற்ற அனுபவம் கைகூடார்
சாங்காலம் உன்னார் பிறவாமை சார்வுறார்
நீங்காச் சமயத்துள் நின்றொழித் தார்களே.

பொருள் : ஓங்காரத்தின் உள்ளொளி வண்ணமாக இருப்பவன் சிவன். அவன் அருளின் தோற்றம் அங்கே உண்டாக ஆங்காரம் அறும். அறவே சிவனடி இன்ப நுகர்வு கைகூடும். இந்நிலைமை கைகூடாதவர் தங்கட்கு இறப்பு உண்டென எண்ணார். எனவே பிறவாமையைச் சார்வுறார். இத்தகையோர் பிறப்பு இறப்பினைத் தரும் புறச்சமய நெறியில் உழல்வர்.

20. உட்சமயம்

(உட்சமயமாவது சீவனுள் விளங்கும் சிவச் சோதியை அறியச் செய்தல். இதனை ஒளிநெறி அல்லது சன்மார்க்கம் என்பர்.)

1557. இமையவர் தம்மையும் எம்மையும் முன்னம்
அமைய வகுத்தவன் ஆதி புராணன்
சமயங்கள் ஆறும்தன் தாளிணை நாட
அமைஅங்கு உழல்கின்ற ஆதிப் பிரானே.

பொருள் : தேவர்களையும் சீவர்களாகிய எம்மையும் பழமையாகவே தனுகரணங்களைத் தந்து உலகில் பொருந்தி அனுபவிக்கும்படி வைத்தவன் மிகப் பழமையானவன். அகச் சமயங்கள் ஆறும் தனது திருவடியை நாட அமைய அவற்றில் கலந்து நின்று வியாபித்திருப்பவனே முதல்வனாவான்.

இவ் வுண்மையறியாது சிலர் அச்சமயங்களில் நின்று மேல்நோக்காது உழல்கின்றனர் எனினுமாம். (இமையவர் - இமயமலைவாசிகள். அறு உட்சமயங்களாவன. சைவம், வைணவம், சாக்தம், சௌரம், காணாபத்தியம், கௌமாரம் என்பன.)

1558. ஒன்றது பேரூர் வழியாறு அதற்குள
என்றது போல இருமுச் சமயமும்
நன்றிது தீதிது என்றுரை யாளர்கள்
குன்று குரைத்தெழு நாயைஒத் தார்களே

பொருள் : ஒரே ஊருக்குச் செல்ல ஆறுவழிகள் உள்ளன. அது போல ஆறு சமயங்களும் ஒரே பொருளை அடைய வுள்ளன. இது நன்று அது தீது என்று சொல்பவர்கள் மலையைப் பார்த்துக் குரைத்த நாயைப்போல ஒரு பயனையும் எய்தார்.

1559. சைவப் பெருமைத் தனிநா யகன்தன்னை
உய்ய உயிர்க்கின்ற ஒண்சுடர் நந்தியை
மெய்ய பெருமையர்க்கு அன்பனை இன்பம்செய்
வையத் தலைவனை வந்தடைந்து உய்மினே.

பொருள் : பெருமை வாய்ந்த சைவ சமயத்துக்கு ஒப்பற்ற தலைவனை, சீவர்கள் உய்யும் வண்ணம் உயிர்க்கு உயிராய் இருக்கின்ற ஒளிவடிவான குருநாதனை, உண்மை உணர்வு பெற்றார்க்கு அன்பனை, இன்பம் தருகின்ற உலக முதல்வனை வந்து அடைந்து உய்தி பெறுவீர்களாக.

1560. சிவனவன் வைத்ததோர் தெய்வ நெறியில்
பவனவன் வைத்த பழிவழி நாடி
இவனவன் என்பது அறியவல் லார்கட்கு
அவனவன் அங்குள தாம்கடன் ஆமே.

பொருள் : சிவபெருமான் சீவர்கள் உய்திபெறுமாறு அமைத்த நெறியில் கடவுளாகிய அவன் வைத்த பழமையான வழியே சென்று இச்சீவனே சிவன் என்று உணரவல்லார்க்கு அவ்வச் சமயத்திலும் உள்ள அப்பெருமான் அங்குத் தோன்றுவது அதன் கடமையாம்.

1561. ஆமாறு உரைக்கும் அறுசம யாதிக்குப்
போமாறு தானில்லை புண்ணியம் அல்லதங்கு
ஆமாம் வழியாக்கும் அவ்வே றுயிர்கட்கும்
போமாறுஅவ் ஆதாரப் பூங்கொடி யாளே.

பொருள் : அங்ஙனம் சீவர்கள் உய்தி பெறும் வண்ணம் அமைக்கப் பட்ட ஆறுசமய உச்சிக்குச் சீவர்கள் தாமாகப் போகும் வழிதான் இல்லை. அவர் செய்த புண்ணியமே அங்கு அவ்வழியை அமைப்பதாகும். அங்ஙனம் சீவர்கள் மேலேறிச் செல்லத் தாங்கி நிற்பது திருவருளின் ஆற்றலாகும்.

1562. அரன்நெறி யாவது அறிந்தேனும் நானும்
சிவநெறி தேடித் திரிந்தஅந் நாளும்
உரநெறி யுள்ளக் கடல்கடந்து ஏறும்
தரநெறி நின்ற தனிச்சுடர் தானே.

பொருள் : அரனை அடைவதற்குரிய வழியாவதை அறிந்தேன். ஆகிய நானும் வேறு சில நெறிகளைத் தேடித் திரிந்த அக்காலத்து வன்மை மிக்க நெறியில் எண்ணமாகிய கடலைக் கடந்து ஏறுவதற்கு மேன்மையான நெறியாக நின்றது ஒப்பற்ற சுடரேயாம்.

1563. தேர்ந்த அரனை அடைந்த சிவநெறி
பேர்ந்தவர் உன்னிப் பெயர்ந்த பெருவழி
ஆர்ந்தவர் அண்டத்துப் புக்க அருள்நெறி
பேந்து புனைந்து புணர்நெறி யாமே.

பொருள் : ஆராய்ச்சியாலும் அனுபவத்தாலும் சிவனே பரம்பொருள் எனத் தெளிந்தடைந்த சிவநெறி புறச்சமய நெறி நின்றவர் ஆராய்ந்து மீண்டும் வந்தடைந்த பெருநெறியாம். அகச் சமயத்துள் பொருந்தியவரும் அவரவர் பக்குவத்துக்கேற்ப அனுபவம் பெற அந்தந்த அண்டங்களுக்குச் செல்ல அருளும் நெறி அந்தந்த முத்திகளில் நின்று மீண்டும் வந்த பொருந்தி உய்திபெறும் நெறியாம். திருநாவுக்கரசர் இதற்குத்தக்க சான்றாவார்.

1564. ஈரு மனத்தை இரண்டற வீசுமின்
ஊரும் சகாரத்தை ஓதுமின் ஓதியே
வாரும் அரன்நெறி மன்னியே முன்னியத்
தூரும் சுடரொளி தோன்றலும் ஆமே.

பொருள் : புறப்பொருளில் செல்லும் மனத்தை அகப்பொருளாகிய சிவத்தைப் பொருந்துமாறு நிறுத்துங்கள். பஞ்சாட்சரத்தை ஓதுங்கள். அரனுடைய நெறியைப் பொருந்தி இச்சாதனையைச் செய்து வாருங்கள். நெற்றிக்கு முன்னே செந்நிறம் பொருந்திய ஒளி தோன்றலும் ஆகும்.

1565. மினற்குறி யாளனை வேதியர் வேதத்து
அனற்குரி யாளனை ஆதிப் பிரான்தன்னை
நினைக்குறி யாளனை ஞானக் கொழுந்தின்
நயக்குறி காணில் அரன்நெறி யாமே.

பொருள் : யோகக் காட்சியினர்க்கு மின்னல்போன்ற ஒளியில் வெளிப்படுபவனை, அந்தணர் ஓம்பும் வேள்வித் தீயில் வெளிப்படுபவனை, முழுமுதற் கடவுளை, எவ்வுருவில் நினைத்தாலும் அவ்வுருவில் வெளிப்படுபவனை பரஞானத்தில் ஒளிமயமாகக் காணில் அதுவே அரன் நெறியாகிய சைவ நெறியாம்.

1566. ஆய்ந்துண ரார்களின் ஆன்மாச் சதுர்பல
வாய்ந்துண ராவகை வகைநின்ற அரன்நெறி
பாயந்துணர் வார்அரன் சேவடி கைதொழுது
ஏய்ந்துணர் செய்வதோர் இன்பமும் ஆமே.

பொருள் : ஆராய்ந்து ஒளி நெறியே சிறந்தது எனத் தெளியாத ஆன்மாவின் ஆற்றல் பலவாகும். அவர் சேர்ந்து அறியாவண்ணம் நின்ற அரன்நெறி, புகுந்து உணர்வார் அரனது திருவடியைப் பற்றி நின்று, பொருந்தி உணர்வது ஒப்பற்ற இன்பமாகும்.

1567. சைவ சமயத் தனிநா யகன்நந்தி
உய்ய வகுதத குருநெறி ஒன்றுண்டு
செய்வச் சிவநெறி சன்மார்க்கம் சேர்ந்துய்ய
வையத் துளார்க்கு வகுத்துவைத் தானே.

பொருள் : கொலையும் புலையும் விடுத்த செந்நெறியாகிய சைவத்தின் பெருமைமிக்க ஒப்பில்லாத முதல்வன் நந்தியெம் பெருமான். அவன் ஆருயிர்கள் அனைத்தும் திருவடி பெற்று உய்யுமாறு வகுத்தருளிய குருநெறி ஒன்றுண்டு. அதுவே தெய்வச் சிவனெறி. அந்நெறியாகிய சன்மார்க்கத்தைச் சேர்ந்து ஒழுகி உய்யும்படி நிலவுலகத்து உள்ளார்க்குச் செந்தமிழால் வகுத்தருளினன். தெய்வச் சிவனெறி எனினும் சன்மார்க்கமெனினும் ஒன்றே.

1568. இத்தவம் அத்தவம் என்றிரு பேரிடும்
பித்தரைக் காணின் நகும் எங்கள் பேர்நந்தி
எத்தவம் ஆகிலென் எங்குப் பிறக்கிலென்
ஒத்துணர் வார்க்ஒல்லை ஊர்புக லாமே.

பொருள் : இத்தவம் நல்லது அத்தவம் நல்லது என்று பேதஞானம் படைத்த அறிவிலிகளைக் கண்டால் எங்கள் சிவபெருமான் நகை செய்யும் எந்தத்தவமாக இருந்தால் என்ன ? அல்லது எங்கே பிறந்தால் என்ன ? அபேதமாக நின்று உணர்வார்க்கு முத்தியாகிய ஊரை அடைதல் கூடும்.

1569. ஆமே பிரான்முகம் ஐந்தொடும் ஆருயிர்
ஆமே பிரானுக்கு அதோமுகம் ஆறுள
தானே பிரானுக்கும் தன்சிர மாலைக்கும்
நாமே பிரானுக்கு நரரியல் பாமே.

பொருள் : சதாசிவம் முகங்கள் ஐந்தொடும் எல்லா உயிர்களிடமும் பொருந்தி விளங்கும், அப்பிரானுக்கு இந்த ஐந்து முகங்களோடு கீழே அதோமுகம் என்ற ஒன்றும் சேர்ந்து ஆறுமுகங்கள் உள்ளன. சிவத்தை அறிந்து வழிபடுவார்க்குச் சதாசிவம் போல் ஆறு முகங்களும் ஒன்றாய் விடும். சிவத்தை அறிந்து வழிபடாத போது அதோமுகம் கீழ்நோக்கியே செலுத்தும்.

1570. ஆதிப் பிரான்உலகு ஏழும் அளந்தவன்
ஓதக் கடலும் உயிர்களு மாய்நிற்கும்
பேதிப்பு இலாமையின் நின்ற பராசக்தி
ஆதிக்கண் தெய்வமும் அந்தமும் ஆமே.

பொருள் : அம்மையோடு கூடிய அப்பனாகிய சிவபெருமான் உலகை அளந்த மாலாகவும், அம்மாலின் நிறம் போலும் ஒலியுடைய கடலாகவும், அக்கடல் சூழ் உலகில் வாழும் பல்÷ வறு உயிர்களாகவும், கலப்பால் ஒன்றாய் நிற்பன், அவன் வனப்பாற்றலாகிய திருவருள் அம்மையுடன் பிரிப்பின்றி மரமும் காழ்ப்பும் போல ஒருவனே இரு நிலையுமாய் நிற்பன். அவ்அம்மையே நடப்பாற்றலாகிய ஆதியும் நிற்பன். அவ்அம்மையே நடப்பாற்றலாகிய ஆதியும் ஆவள். அவளே ஒடுக்கத்தைச் செய்யும் ஆண்டவனும் ஆவள். அவளே ஒடுக்கத்தைச் செய்யும் ஆண்டவனும் ஆவள். ஆதி - நடப்பாற்றல். ஆதிக் கண் - சிருஷ்டி ஆரம்பத்திலும் அந்தமும் ஒடுங்கும் காலத்திலும்.

1571. ஆய்ந்தறி வார்கள் அமரர்வித் தியாதரர்
ஆய்ந்தறி யாவண்ணம் நின்ற அரனெறி
ஆய்ந்தறிந் தேன்அவன் சேவடி கைதொழ
ஆய்ந்தறிந் தேன்இம்மை அம்மைகண் டேனே.

பொருள் : தற்போத முனைப்பால் ஆராய்ந்து அறிவார்கள் அமரர் தந்தருவர் முதலியோர். ஆராய்ச்சியால் அறிய முடியாவகை நின்ற அரனெறியான சைவத்தை, அவன் திருவடியை வழிபடும் பேறு பெற்றமையால் ஆராய்ந்து உணர்ந்தேன். அதனால் இப்பிறப்பிலேயே மறுமை இன்பத்தினைப் பெற்றேன். அன்போடு சிவனைப் பரவினால் பிறவி நீங்கும்.

1572. அறியஒண் ணாதுஅவ் வுடம்பின் பயனை
அறியஒண் ணாத அறுவகை யாக்கி
அறியஒண் ணாத அறுவகைக் கோசத்து
அறியஒண் ணாததோர் அண்டம் பதிந்ததே.

பொருள் : உடம்பைப் பெற்றபயன் இறைவனை அறிவதே என்பதை அக்கள் அறியவில்லை. அறியமுடியாமல் ஏகாமாயுள்ள ஆகாயத்தை ஆறு ஆதாரங்களில் இயங்கும்படி வைத்து அறியமுடியாத வகையாக ஆறு கோசங்களில் அனுபவம் பெறச்செய்து ஆகாய மயமான சிவம் அறியவொண்ணாமல் அண்டமாய் உள்ளது.

ஐந்தாம் தந்திரம் முற்றிற்று.


Tenth Thirumurai - Fifth Anthiram

Content:

The Fifth Anthiram includes a series of hymns that further elaborate on Appar’s devotion and spiritual experiences.

It continues to highlight the poet’s personal connection with Shiva and the transformative impact of his divine grace.

Themes:

Divine Grace and Mercy: The hymns celebrate Shiva’s boundless mercy and the ways in which his grace transforms the devotee’s life.

Devotional Intensity: Appar’s intense love and devotion to Shiva are expressed in these hymns, reflecting the depth of his spiritual commitment.

Spiritual Joy: The hymns emphasize the profound joy and spiritual enlightenment that come from devotion to Shiva.

Structure:

The hymns are crafted with lyrical beauty and rhythmic precision, making them suitable for devotional recitation and singing.

Repetitive and melodic elements enhance their devotional impact and ease of memorization.

Significance:

The Fifth Anthiram continues to develop the themes of divine grace and devotion, providing further insight into Appar’s spiritual experiences.

It contributes to the overall devotional and philosophical narrative of the Tenth Thirumurai, enriching the understanding of Shiva’s divine presence and Appar’s devotion.

The Fifth Anthiram of the Tenth Thirumurai provides a deeper exploration of Appar’s spiritual journey, continuing to highlight his profound devotion and the transformative effects of Shiva’s grace.



Share



Was this helpful?