இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


குன்றக் குரவை

Vanchik Kaandam (24. Kunrakk Kuravai) is a segment of the epic Silappathikaram that explores themes of deceit and betrayal, specifically through the lens of mountainous or elevated settings. This part of the narrative involves verses or poetic lines that reflect on the natural beauty and challenges of mountainous regions, while also intertwining these elements with the broader themes of treachery and moral conflict. The poetry captures the contrast between the grandeur of the mountains and the undercurrents of deceit, offering a rich tapestry of both natural and emotional landscapes.


சிலப்பதிகாரம் - வஞ்சிக் காண்டம் (24. குன்றக் குரவை)

அஃதாவது மதுரையினின்றும் வையை யாற்றினது கரைவழியே, இருத்தலும் இலளாய் நிற்றலும் இலளாய்ச் சென்ற கண்ணகி சேர நாட்டின்கண், நெடுவேள் குன்றத்தின்கண் அடிவைத் தேறி, அங்குப் பூத்துநின்ற வேங்கைமரத்தினது நறுநிழலின் கண் ஏங்கி நின்றாளாக, அப்பொழுது மதுரையில் கோவலன் கொலையுண்ட பதினான்காம் நாளாதலின் தேவர்கள் கற்பகமலர் பொழிந்து கோவலன்றன்னொடு வானுலகத்தினின்றும் இழிந்துவந்து கண்ணகிக்குக் கணவனைக் காட்டி அவள் தன் பெரும்புகழைப் பலபடப் பாராட்டி அந் நெடுவேள் குன்றத்து வாழும் குறவர்களும் கண்டுநிற்பவே அவ் வீரபத்தினியைக் கணவனோடு கூட்டி வான்ஊர்தியில் ஏற்றித் தம்முலகுக்குக் கொண்டு போயினார்.

இந்த வியத்தகு நிகழ்ச்சியைக் கண்கூடாகக் கண்டுநின்ற குன்றவாணர் அக் கண்ணகியைத் தங்கள் குலதெய்வமாகக் கொண்டு குரவைக் கூத்தாடி மகிழ்ந்தனர். பின்னர், வஞ்சி நகரத்திருந்து மலைவளம் காணுதற்பொருட்டு அக் காட்டகத்தில் வந்திருந்த சேரன்செங்குட்டுவனைக் கண்டு தொழுதற்குக் கையுறையாக அரும்பொருள் பலவற்றைச் சுமந்துசென்று அம் மன்னவன் மலரடி வணங்கியபின்னர்த் தாம் கண்கூடாகக் கண்ட கண்ணகி வர்னஊர்தியேறி விண்ணுலகம் புக்க செய்தியையும் கொல்லோ? யார் மகள் கொல்லோ? யாங்கள் அறிந்திலேம்; மன்னர் மன்னவ! பன்னூறாயிரத்தாண்டு வாழ்க! என்று வாழ்த்தி நின்றனர்.

குன்றவாணர் கூறிய செய்திகேட்டு வியப்புற்ற சேரன் செங்குட்டுவன் தன் அயலிருந்த சான்றோரை நோக்க அங்கிருந்த தண்டமிழ்ப் புலவர் சாத்தனார் அக் கண்ணகியின் வரலாறு முழுவதையும் அம் மன்னனுக்குக் கூறினர். அம் மன்னவன் கோப்பெருந்தேவியை நோக்கினன். அவன் குறிப்பறிந்த தேவியார், அத் திருமாபத்தினிக்கு யாம் திருக்கோயிலெடுத்து வழிபாடு செய்தல் வேண்டும் எனத் தமது கருத்தை அரசனுக்குக் கூறினர். அதுகேட்ட மன்னர் அப் பத்தினிக்குக் கடவுட்படிவம் அமைத்தற்குக் கல் கொள்ள ஆராய்தலும் அமைச்சர் கூறியபடி இமயமலையில் கல் கொள்ளுதற்கு நாற்பெரும் படையொடு வடதிசை நோக்கிப் புறப்படுதலும் வடவாரிய மன்னரொடு போர்புரிந்து வாகைசூடிப் பத்தினித் தெய்வத்திற்குரிய கல்லை இமயத்தினின்று மெடுத்துக் கனகவிசயர் என்னும் மன்னர்தம் முடித்தலைமே லேற்றிக் கொணர்ந்து கங்கைப் பேரியாற்றில் நீர்ப்படை செய்தலும் அங்கிருந்து வஞ்சி நகரத்திற்குக் கொணர்தலும் கடவுட்படிவம் சமைத்தலும் திருக்கோயிலெடுத்து அப் படிவத்தை நிறுத்துதலும் விழாவெடுத்தலும் கண்ணகி விண்மிசை மின்னல்போன்று தெய்வவுருவில் தோன்றிச் செங்குட்டுவன் முதலியோருக்கு வரம்தருதலும் ஆகிய செய்திகளைக் கூறும் பகுதி என்றவாறு. சேர நாட்டின் தலைநகரமாகிய வஞ்சியின்கண் இருந்து செங்கோன்மை செலுத்திய அரசன் கண்ணகிக்குச் செய்த சிறப்புகளாதலின் இது வஞ்சிக் காண்டம் என்னும் பெயர் பெற்றது.

வஞ்சி- சேரர் தலைநகரம்

24. குன்றக் குரவை (கொச்சகக் கலி)

அஃதாவது-கண்ணகி மதுரையினின்றும் வையையின் ஒரு கரை வழியாகச் சேரநாடு புகுந்து ஆங்கெதிர்ப்பட்ட நெடுவேள் குன்றத்தின்கண் ஏறி ஆங்குப் பூத்துப் பொலிந்து நின்ற ஒரு வேங்கை மரத்தின் நிழலின்கண் நின்றபொழுது, அங்கு வந்த குறமாக்கள் கண்ணகியைக் கண்டு நீவிர் யாவிரோ? என வினவி அவளொடு சொல்லாடி நின்றனராக; அப்பொழுது வானவர் அங்கு வந்து கண்ணகியின் மேல் மலர்மாரி பொழிந்து அவள் கணவனையும் காட்டி வான ஊர்தியில் ஏற்றி அக் குறமாக்கள் கண்டு நிற்பவை விண்மிசைப் போயினர்; அது கண்டு வியப்பெய்திய அக் குன்றவாணர் கண்ணகியைத் தம் குலதெய்வமாகக் கொண்டு வழிபாடு செய்தலும் அம் மகிழ்ச்சி காரணமாகக் குறமகளிர் குரவைக் கூத்தாடுதலும் பிறவும் கூறும் பகுதி என்றவாறு.

குருவி ஓப்பியும் கிளி கடிந்தும் குன்றத்துச் சென்று வைகி,
அருவி ஆடியும் சுனை குடைந்தும் அலவுற்று வருவேம் முன்,
மலை வேங்கை நறு நிழலின், வள்ளி போல்வீர்! மனம் நடுங்க,
முலை இழந்து வந்து நின்றீர்; யாவிரோ? என-முனியாதே,
மண மதுரையோடு அரசு கேடுற வல் வினை வந்து உருத்தகாலை, 5

கணவனை அங்கு இழந்து போந்த கடு வினையேன் யான் என்றாள்.
என்றலும், இறைஞ்சி, அஞ்சி, இணை வளைக் கை எதிர் கூப்பி,
நின்ற எல்லையுள், வானவரும் நெடு மாரி மலர் பொழிந்து,
குன்றவரும் கண்டு நிற்ப, கொழுநனொடு கொண்டு போயினார்;
இவள் போலும் நம் குலக்கு ஓர் இருந் தெய்வம் இல்லை; ஆதலின், 10

சிறுகுடியீரே! சிறுகுடியீரே!
தெய்வம் கொள்ளுமின், சிறுகுடியீரே!
நிறம் கிளர் அருவிப் பறம்பின் தாழ்வரை
நறுஞ் சினை வேங்கை நல் நிழல்கீழ், ஓர்
தெய்வம் கொள்ளுமின், சிறுகுடியீரே! 15

தொண்டகம் தொடுமின்; சிறுபறை தொடுமின்;
கோடு வாய் வைம்மின்; கொடு மணி இயக்குமின்;
குறிஞ்சி பாடுமின்; நறும் புகை எடுமின்;
பூப் பலி செய்ம்மின்; காப்புக்கடை நிறுமின்;
பரவலும் பரவுமின்; விரவு மலர் தூவுமின்- 20

ஒரு முலை இழந்த நங்கைக்கு,
பெரு மலை துஞ்சாது வளம் சுரக்க எனவே. 1

கொளுச் சொல்
ஆங்கு ஒன்று காணாய், அணி இழாய்! ஈங்கு இது காண்:
அஞ்சனப் பூழி, அரி தாரத்து இன் இடியல்,
சிந்துரச் சுண்ணம் செறியத் தூய், தேம் கமழ்ந்து,
இந்திரவில்லின் எழில் கொண்டு,இழும் என்று
வந்து, ஈங்கு, இழியும் மலை அருவி ஆடுதுமே.
ஆடுதுமே, தோழி! ஆடுதுமே, தோழி!
அஞ்சல் ஓம்பு என்று, நலன் உண்டு நல்காதான்
மஞ்சு சூழ் சோலை மலை அருவி ஆடுதுமே. 2

எற்று ஒன்றும் காணேம் புலத்தல், அவர் மலைக்
கல் தீண்டி வந்த புதுப் புனல்;
கல் தீண்டி வந்த புதுப் புனல் மற்றையார்
உற்று ஆடின் நோம், தோழி! நெஞ்சு-அன்றே. 3

என் ஒன்றும் காணேம் புலத்தல், அவர் மலைப்
பொன் ஆடி வந்த புதுப் புனல்;
பொன் ஆடி வந்த புதுப் புனல் மற்றையார்
முன் ஆடின் நோம், தோழி! நெஞ்சு-அன்றே. 4

யாது ஒன்றும் காணேம் புலத்தல், அவர் மலைப்
போது ஆடி வந்த புதுப் புனல்;
போது ஆடி வந்த புதுப் புனல் மற்றையார்
மீது ஆடின் நோம், தோழி! நெஞ்சு-அன்றே. 5

பாட்டு மடை

உரை இனி, மாதராய்! உண் கண் சிவப்ப,
புரை தீர் புனல் குடைந்து ஆடின், நோம் ஆயின்,
உரவுநீர் மா கொன்ற வேல்-ஏந்தி ஏத்திக்
குரவை தொடுத்து, ஒன்று பாடுகம் வா தோழி! 6

சீர் கெழு செந்திலும், செங்கோடும், வெண்குன்றும்,
ஏரகமும், நீங்கா இறைவன் கை வேல்-அன்றே-
பார் இரும் பௌவத்தினுள் புக்கு, பண்டு ஒரு நாள்,
சூர் மா தடிந்த சுடர் இலைய வெள் வேலே. 7

அணி முகங்கள் ஓர் ஆறும், ஈர்-ஆறு கையும்,
இணை இன்றித் தான் உடையான் ஏந்திய வேல்-அன்றே-
பிணிமுகம் மேற்கொண்டு, அவுணர் பீடு அழியும்வண்ணம்
மணி விசும்பின் கோன் ஏத்த, மாறு அட்ட வெள் வேலே. 8

சரவணப் பூம் பள்ளியறைத் தாய்மார் அறுவர்
திரு முலைப் பால் உண்டான் திருக் கை வேல்-அன்றே-
வரு திகிரி கோல் அவுணன் மார்பம் பிளந்து,
குருகு பெயர்க் குன்றம் கொன்ற நெடு வேலே. 9

பாட்டு மடை

இறை வளை நல்லாய்! இது நகை ஆகின்றே-
கறி வளர் தண் சிலம்பன் செய்த நோய் தீர்க்க
அறியாள் மற்று அன்னை, அலர் கடம்பன் என்றே,
வெறியாடல் தான் விரும்பி, வேலன், வருக என்றாள்! 10

ஆய் வளை நல்லாய்! இது நகை ஆகின்றே-
மா மலை வெற்பன் நோய் தீர்க்க வரும் வேலன்!
வரும் ஆயின் வேலன் மடவன்; அவனின்
குருகு பெயர்க் குன்றம் கொன்றான் மடவன். 11

செறி வளைக் கை நல்லாய்! இது நகை ஆகின்றே-
வெறி கமழ் வெற்பன் நோய் தீர்க்க வரும் வேலன்!
வேலன் மடவன்; அவனினும் தான் மடவன்;
ஆல் அமர் செல்வன் புதல்வன் வரும் ஆயின். 12

நேர் இழை நல்லாய்! நகை ஆம்-மலை நாடன்
மார்பு தரு வெந் நோய் தீர்க்க வரும் வேலன்!
தீர்க்க வரும் வேலன்-தன்னினும் தான் மடவன்,
கார்க் கடப்பந் தார் எம் கடவுள் வரும் ஆயின். 13

பாட்டு மடை

வேலனார் வந்து வெறியாடும் வெங் களத்து,
நீலப் பறவைமேல் நேர்-இழை-தன்னோடும்
ஆல் அமர் செல்வன் புதல்வன் வரும் வந்தால்,
மால் வரை வெற்பன் மண அணி வேண்டுதுமே! 14

கயிலை நல் மலை இறை மகனை! நின் மதி நுதல்
மயில் இயல் மடவரல் மலையர்-தம் மகளார்,
செயலைய மலர் புரை திருவடி தொழுதேம்-
அயல்-மணம் ஒழி; அருள், அவர் மணம் எனவே. 15

மலைமகள் மகனை! நின் மதி நுதல் மடவரல்
குல மலை உறைதரு குறவர்-தம் மகளார்,
நிலை உயர் கடவுள்! நின் இணை அடி தொழுதேம்-
பலர் அறி மணம் அவர் படுகுவர் எனவே. 16

குறமகள் அவள் எம் குலமகள் அவளொடும்,
அறுமுக ஒருவ! நின் அடி இணை தொழுதேம்-
துறைமிசை நினது இரு திருவடி தொடுநர்
பெறுக நல் மணம்; விடு பிழை மணம் எனவே. 17

பாட்டு மடை

என்று யாம் பாட, மறை நின்று கேட்டருளி,
மன்றல் அம் கண்ணி மலைநாடன் போவான் முன்
சென்றேன்; அவன்-தன் திருவடி கைதொழுது
நின்றேன் உரைத்தது கேள்; வாழி, தோழி! 18

கடம்பு சூடி, உடம்பிடி ஏந்தி,
மடந்தை பொருட்டால் வருவது இவ் ஊர்:
அறுமுகம் இல்லை; அணி மயில் இல்லை;
குறமகள் இல்லை; செறி தோள் இல்லை;
கடம் பூண் தெய்வமாக நேரார்
மடவர் மன்ற, இச் சிறுகுடியோரே. 19

பாட்டு மடை

என்று, ஈங்கு,
அலர் பாடு பெற்றமை யான் உரைப்பக் கேட்டு,
புலர் வாடு நெஞ்சம் புறங்கொடுத்துப் போன
மலர் தலை வெற்பன் வரைவானும் போலும்;
முலையினால் மா மதுரை கோள் இழைத்தாள் காதல்
தலைவனை வானோர் தமராரும் கூடி,
பலர் தொழு பத்தினிக்குக் காட்டிக் கொடுத்த
நிலை ஒன்று பாடுதும் யாம். 20

பாடுகம் வா, வாழி! தோழி! யாம் பாடுகம்;
பாடுகம் வா, வாழி! தோழி! யாம் பாடுகம்;
கோமுறை நீங்கக் கொடி மாடக் கூடலைத்
தீ முறை செய்தாளை ஏத்தி யாம் பாடுகம்;
தீ முறை செய்தாளை ஏத்தி யாம் பாடுங்கால்,
மா மலை வெற்பன் மண அணி வேண்டுதுமே. 21

பாடு உற்று,
பத்தினிப் பெண்டிர் பரவித் தொழுவாள் ஓர்
பைத்தரவு அல்குல் நம் பைம் புனத்து உள்ளாளே;
பைத்தரவு அல்குல் கணவனை வானோர்கள்
உய்த்துக் கொடுத்தும் உரையோ ஒழியாரே. 22

வானக வாழ்க்கை அமரர் தொழுது ஏத்த,
கான நறு வேங்கைக் கீழாள் ஓர் காரிகையே
கான நறு வேங்கைக் கீழாள் கணவனொடும்
வானக வாழ்க்கை மறுதரவோ இல்லாளே. 23

மறுதரவு இல்லாளை ஏத்தி, நாம் பாட,
பெறுகதில் அம்ம இவ் ஊரும் ஓர் பெற்றி!
பெற்றி உடையதே, பெற்றி உடையதே,
பொற்றொடி மாதர் கணவன் மணம் காணப்
பெற்றி உடையது, இவ் ஊர். 24

வாழ்த்து

என்று, யாம்
கொண்டுநிலை பாடி, ஆடும் குரவையைக்
கண்டு, நம் காதலர் கைவந்தார்; ஆனாது
உண்டு மகிழ்ந்து, ஆனா வைகலும் வாழியர்-
வில் எழுதிய இமயத்தொடு
கொல்லி ஆண்ட குடவர் கோவே! 25

உரை

உரைப்பாட்டு மடை

அஃதாவது-உரையாகிய பாட்டை இடையிலே மடுப்பது(மடுப்பது-வைப்பது)

குன்றவாணர் கண்ணகியைக் கண்டு வினவுதலும் கண்ணகியின் விடையும்

1-6: குருவி-யானென்றான்

(இதன் பொருள்) குன்றத்துச் சென்று வைகி குருவி ஓப்பியும் கிளி கடிந்தும் அருவி ஆடியும் சுனை குடைந்தும் அலவற்று வருவேம்-முன்-நெடுவேள் குன்றத்தின்கண் பூத்த வேங்கை நிழலின்கண் நின்ற கண்ணகியை அப்பொழுது அங்கு வந்துற்ற ஆடவரும் பெண்டிருமாகிய குன்றவாணர் வியந்து நோக்கிக் கூறுபவர் யாங்கள் எமது மலையின்கண் உள்ள எம்முடைய தினைப்புனத்தின்கண் சென்றிருந்து ஆங்குத் தினைக்கதிரில் வீழும் குருவிகளை ஆயோவெனக் கூவி ஓட்டியும் கிளிகளைத் தழலும் தட்டையும் குளிரும் பிறவும் ஆகிய கிளி கடி கருடிகளைப் புடைத்து வலிந்தகற்றியும் அருவியின்கண் விளையாடியும் சுழன்று வருகின்ற எமக்கு முன்னர்; மலை வேங்கை நறுநிழலின் முலை இழந்து மனம் நடுங்க வந்து நின்றீர் வள்ளி போல்வீர் யாவிரோ என-இம் மலையில் இந்த வேங்கை மரத்தினது நறிய நிழலின்கண் நுமது கொங்கைகளுள் ஒன்றனை இழந்து வந்தமையால் எம்முடைய உள்ளம் நடுங்கும்படி நிற்கின்றீர். நீயிர் எம்முடைய குலத்திற்றோன்றிய வள்ளியம்மையையும் போல்கின்றீர் நீவிர்தாம் யாரோ? என்று வினவினராக; மண மதுரையோடு அரசு கேடுற வல்வினை வந்து உருத்தகாலை கணவனை அங்கு இழந்து போந்த கடுவினையேன் யான் என்றாள்-அதுகேட்ட கண்ணகிதானும் சிறிதும் அவர் பால் சினங்கொள்ளாமல் மணமிக்க மதுரைமா நகரத்தோடு அதனை யாளுகின்ற அரசனும் அழிவுறும்படி பழைய தீவினை வந்தெய்தி அதன் பயனை ஊட்டியபொழுது என் கணவனையும் அம் மதுரையிலேயே இழந்து இங்கு வருவதற்குக் காரணமான கொடிய தீவினையையுடைய யான் என்று கூறினளாக; என்க.

(விளக்கம்) தினைக்கதிர்களை அழிப்பதில் கிளிகள் முதன்மையுடையன ஏனைய பறவைகள் சிறப்புடையனவல்ல ஆதலின் குருவி ஓப்பியும் கிளி கடிந்தும் எனப் பிரித்தோதினர். ஓப்புதல்-கூவி ஓட்டுதல். கடிதல்-வலிந்தோட்டுதல். அலவுற்று வருதல்-சுற்றித் திரிந்து வருதல். எம்மனம் நடுங்க வந்து நின்றீர் என்றவாறு. கண்ணகியின் சினம் தணிந்துவிட்டமை அறிவித்தற்கு அடிகளார் ஈண்டு முனியாதே என்று விதந்தெடுத்தோதினார், மதுரை இனி அணித்தாக உளது என்பதனைக் கண்ணகி முதன் முதலாக அம் மதுரையின் மணங்களை அவாவி வருகின்ற மதுரைத் தென்றலால் அறிந்தனளாதலின் அத்தகைய மணமதுரைக்கும் வல்வினை கேடு சூழ்ந்ததே என்னும் தன் இரக்கம் தோன்ற மணமதுரை என விதந்தோதினள்; இத்தகைய கேட்டிற்கெல்லாம் தானே காரணமென்பது கருதித் தன்னையே நொந்துகொள்வாள் கடுவினையேன் யான் என்றாள்.

கண்ணகியை விண்ணவர் வானவூர்தியில் அழைத்துப் போதல்

7-9: என்றலும்............போயினார்

(இதன் பொருள்) என்றலும்-என்று இவ்வாறு விடை கூறக்கேட்டு அக் குன்றவாணர்கள்; அஞ்சி இணை விளைக்கை எதிர் கூப்பி இறைஞ்சி நின்ற எல்லையுள்-பெரிதும் அச்சமெய்தித் தம்முடைய இரண்டு வளையல் அணிந்த கைகளையும் கூப்பி அவர் எதிரே வணங்க நின்றபொழுது; வானவரும் நெடுமாரி மலர் பொழிந்து குன்றவரும் கண்டு நிற்பக் கொழுநனொடு கொண்டு போயினார்-யாம் முற்கூறியபடி அமரர் கோமான் தமராகிய தேவர்களும் அப் பீடுகெழு நங்கையின் பெரும் புகழையேத்தி அவள் மிசை வாடா மாமலர் மழை பெய்து கணவனையும் காட்டி வானவூர்தியில் அக் கணவனோடு வைத்து அக்குறவர்களும் கண்டு நிற்கும்பொழுதே தம்முலகத்திற்குக் கொண்டு போயினார் என்றார் என்க.

(விளக்கம்) கண்ணகியின் வரலாற்றில் பெரும்பான்மை மதுரையில் நிகழ்ந்தமையால் அவள் விண்ணகம் புக்க செய்தி சேர நாட்டில் நிகழ்ந்ததாயினும் அக் காண்டத்திலேயே கூறி அவ் வரலாற்றினை முடித்தார். கண்ணகி விண்ணகம் புகுதற்கு இக் குன்றவாணர் அவளைக் கண்டமை காரணம் அன்மையின் அடிகளார் இந் நிகழ்ச்சியை அங்குக் கூறாதொழிந்தார். இனி விண்ணகம் புக்க அக் கண்ணகியின் பொருட்டுச் சேர நாட்டின்கண்ணும் பிறவிடங்களினும் நிகழும் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் இக் குன்றவாணர் கண்ணகியைக் கண்டமையே காரணமாக அமைதலின் அடிகளார் இக் காண்டத்திற்கு அந் நிகழ்ச்சியையே தோற்றுவாயக அமைத்துக்கொள்கின்றார் என்று அறிக.

குன்றவாணர் செயல்

10-15: இவள் போலும்............கொள்ளுமின்

(இதன் பொருள்) சிறுகுடியீரோ சிறுகுடியீரே-குறிஞ்சி நிலத்து ஊராகிய இச் சிறுகுடியின்கண் வாழ்கின்ற குன்றவர்களே குன்றவர்களே; நம் குலக்கு இவள் போலும் இருந்தெய்வம் இல்லை ஆதலின்-தலைசிறந்த குலமாகிய ஒப்பற்ற நமது குறக்குலத்திற்கு இத் திருமா பத்தினி போன்ற மா பெருந் தெய்வம் பிறிதொன்று இல்லை யாதலின் இப் பத்தினித் தெய்வத்தையே; சிறுகுடியீரே தெய்வம் கொள்ளுமின்-குன்றவாணரே! தெய்வமாகக் கொள்ளுங்கோள்; நிறம் கிளர் அருவிப் பறம்பின் தாழ்வரை நறுஞ்சினை வேங்கை நல் நிழல் கீழ் ஓர் தெய்வங் கொள்ளுமின்- நிறமிக்க அருவியை யுடைய நெடுமின் குன்றமாகிய இம் மலையினது தாழ்வரையினிடத்தே மலர்ந்து நறுமணம் கமழுகின்ற இவ் வேங்கை மரத்தினது நல்ல நிழலின்கீழே அப் பத்தினித் தெய்வம் நின்ற இடத்திலேயே அவளைத் தெய்வமாக நிலை நிறுத்திக் கொள்ளுங்கோள் என்றார் என்க.

(விளக்கம்) இவள் என்றது பத்தினித் தெய்வமாகிய இவள் என்பது பட நின்றது. இத் தெய்வம்போன்று இதுகாறும் நம் குலத்திற்கு ஒரு தெய்வம் வாய்த்ததில்லை ஆதலின் இத் தெய்வத்தை நம்குலதெய்வமாகக் கொள்ளுமின் என்று அறிவித்தபடியாம். இக்குற மகளிர் கருத்தோடு

கற்புக் கடம் பூண்ட வித்தெய்வமல்லது
பொற்புடைத் தெய்வம் யாங்கண் டிலமால்

எனவரும் கவுந்தியடிகளார் பொன் மொழியையும் நினைக (15: 143-4) சிறுகுடி-குறிஞ்சி நிலத்தூர் எனவே குன்றவாணராகிய நமரங்காள் என விளித்த படியாம். இனி, அக் கண்ணகியை அவள் நின்ற அந்த வேங்கையின் நிழலிலே அவ்விடத்திலேயே தெய்வமாக நிறுத்திக் கொள்ளுங்கள் என்று இடமும் வரைந் தோதுவார் நிறங்கிளர்............கொள்ளுமின் என்றார். பறம்பு-மலை, அஃதாவது நெடுவேள் குன்றம் என்க.

இதுவுமது

15-22: சிறுகுடியீரே..............கரக்கெனவே

(இதன் பொருள்) சிறுகுடியீரே-குன்றவாணராகிய நமரங்கான்! ஒருமுலை இழந்த நங்கைக்கு-தனது ஒரு முலையினை இழந்து நம் குன்றத்திற்கு எழுந்தருளிய இப் பத்தினித் தெய்வத்திற்கு; காப்புக் கடை நிறுமின்-மதிலாகிய அரண் எடுத்துத் திருவாயிலும் செய்து வையுங்கள்; தொண்டகம் தொடுமின் சிறுபறை தொடுமின் கோடு வாய் வைம்மின் கொடுமணி இயக்குமின்-தொண்டகப் பறையை முழக்குமின் சிறுபறையை அறைமின் கடமாக் கொம்புகளை வாயில் வைத்தூதுமின் கொடிய பணியை அசைத்து ஒலித்திடுமின்; குறிஞ்சி பாடுமின் நறும்புகை எடுமின் பூப்பலி செய்ம்மின் பரவலும் பாவுமின் விரவு மலர் தூவுமின்-குறிஞ்சிப் பண்ணைப் பாடுங்கள் நறுமணப் புகையை யேந்துங்கள் மலர்களைப் பலிப்பொருளாகக் குவித்திடுமின்; இத் தெய்வத்தின் விகழ்பாடி ஏத்துதலும் செய்யுங்கள். பல்வேறு மலர்களையும் கலந்து தூவுங்கள். அஃது எற்றுக்கெனின்; பெரும் மலை துஞ்சாது வளம் சுரக்க எனவே-நமது பெரிய மலைநிலம் ஒழிவின்றித் தன் வளங்களையெல்லாம் சுரந்து தருவதாக என்று வேண்டிக் கொள்ளுதற் பொருட்டேயாம் என்றார் என்க.

(விளக்கம்) அத் தெய்வத்தின் பெயர் அறியாமையின் தாமே ஒரு முலையிழந்த நங்கை என ஒரு பெயர் வைத்துக்கொண்டார். இப் பெயர் தாமே ஒற்றை முலைச்சி எனப் பிற்காலத்தில் இத் தெய்வத்திற்குப் பல்வேறு இடங்களில் வழங்கி வந்ததாகத் தெரிகின்றது. இப் பெயருடைய தெய்வம் கண்ணகித் தெய்வம் என்றறியப்படாமல் வேறு தெய்வமாகக் கருதி மக்கள் வழிபட்டு வந்தனர். இத் தெய்வம் மழைவளம்! வேண்டி வழிபாடு செய்யப்பட்டமையின் மாரியம்மன் என்னும் பெயரானும் வழங்கப்பட்டு வருவதாயிற்று என எண்ணாதற்கும் இடமுளது.

கொளுச் சொல்

அஃதாவது-அகப்பொருள் கருத்தைத் தன்னுட் கொண்ட சொற்கள் என்றவாறு.

(2) ஆங்கொன்று.........ஆடுதுமே

(இதன் பொருள்) அணி இழாய் ஆங்கு ஒன்று காணாய்-அழகிய அணிகலன்களையுடையோய்! அதோ சேய்மையில் வீழுகின்ற ஒரு அருவியைப் பார்; ஈங்கு இதுகாண்-(அணித்தாகச் சென்று அவ்வருவியைச் சுட்டிக் காட்டி) தோழி! இந்த அருவியின் அழகினைக் காண்பாயாக; அஞ்சனப் பூழி அரிதாரத்து இன்இடியல் சிந்துரச் சுண்ணம் செறியத்தூய்-கரிய நிறமுடைய புழுதியும் அரிதாரத்தினது காட்சிக்கினிய துகளும் சிந்தூரப் பொடியும் செறியும் படி தூவப் பெற்று; தேம் கமழ்ந்து இந்திரவில்வின் எழில் கொண்டு-தேன் மணம் கமழப் பெற்று வானவில்லினது அழகைத் தன்னிடத்தே கொண்டு, இழுமென்று ஈங்கு இழியும் மலை அருவி ஆடுதுமே-கேள்விக்கினிதாக இழுமென்னும் ஓசையுடனே ஓடி வந்து இவ்விடத்திலே வீழ்கின்ற இந்த மலை அருவியின்கண் யாம் இனிது ஆடி மகிழ்வேம் என்றாள் என்க.

(விளக்கம்) இஃது அருவி ஆடுதற்கு விரும்பிய தலைவி தோழிக்குக் கூறியது. சேய்மையில் நின்று ஆங்கொன்று காணாய் என்றவள் அணித்தாகச் சென்றபின் ஈங்கு இதுகாண் என அண்மைச் சுட்டால் சுட்டினாள். அஞ்சனம் அரிதாரம் சிந்துரம் என்பன மலைபடு பொருள்கள், பல்வேறு நிறமுடைய இப் பொருள்களின் துகள்களை வாரிக்கொண்டு வருதலின் அருவி இந்திரவில் போல்கின்றது என்றுவாறு. இந்திரவில்-வானவில். இழுமென்று: ஒலிக்குறிப்பு.

ஆடுதுமே..........ஆடுதுமே

(இதன் பொருள்) ஆடுதுமே தோழி ஆடுதுமே தோழி அஞ்சல் ஓம்பு என்று நலன் உண்டு நல்காதான்(அது கேட்ட தோழி தலைவியை நோக்கிக் கூறுபவள்) தோழி! நீ விரும்பியவாறே யாம் இம்மலை அருவியின்கண் ஆடி மகிழ்வேமாக! ஒரு தலையாக ஆடி மகிழ்வேமாக! யான் பிரிவேன் என்று அஞ்சாதேகொள் எனத் தேற்றுரை கூறி நமது பெண்மை நலத்தை நுகர்ந்து போய் மீண்டும் வந்து நமக்குத் தண்ணளி செய்திலாத வன்கண்ணனுடைய; மஞ்சு சூழ் சோலை மலையருவி ஆடுதுமே-முகில் சூழ்கின்ற சோலையுடைய மலையினின்றும் வருகின்ற இவ்வருவியின்கண் யாம் நீராடி மகிழ்வேம்(என்றாள்) என்க.

(விளக்கம்) இது தோழி தலைவனை இயற்பழித்தபடியாம். நலன்-பெண்மை நலம். வன்கண்ணனுடைய மலையாயிருந்தும் மஞ்சு சூழ்தல் வியத்தற்குரியதாம் எனவும் அவனுடைய மலையருவியில் ஆட நேர்ந்ததே எனவும் இயற்பழித்தபடியாம்.

சிறைப்புறம்

அஃதாவது- தலைவன் வந்து சிறைப்புறத்தே நிற்பானாகவும் அவன் வரவறியாதாள் போலத் தலைவி தோழி கேட்பக் கூறியது என்றவாறு.

3. எற்றொன்றும்.........நெஞ்சன்றே

(இதன் பொருள்) அவர் மலை கல் தீண்டி வந்த புதுப்புனல் எற்று ஒன்றும் காணேம் புலத்தே-தோழி! அவர் நலன் உண்டு நல்காதார் ஆயிடினும் ஆகுக. அவருடைய மலையாகிய கல்லைத் தொட்டு வருகின்ற புதிய இந்த அருவி நீரோடு யாம் ஊடுதற்கு யாதொரு காரணமும் காண்கின்றிலேம் ஆயினும்; தோழி கல் தீண்டி வந்த புதுப்புனல் மற்றையார் உற்று ஆடின் நெஞ்சு நோம் அன்றே தோழி! அவருடைய மலையைத் தொட்டு வந்த இப் புதிய நீரின் கண் ஏனைய மகளிர் பொருந்தி ஆடுவாராயின் நமது நெஞ்சம் அது பெறாமல் வருந்தும் அன்றோ? அங்ஙனம் வருந்தாமல் யாமே இதன்கண் ஆடுவோமாக என்றாள் என்க. இங்ஙனமே ஏனைத் தாழிசைகளுக்கும் கூறிக் கொள்க.

4. என்னொன்றும்.........நெஞ்சன்றே

(இதன் பொருள்) அவர் மலைப் பொன் ஆடி வந்த புதுப்புனல் புலத்தல் என ஒன்றும் காணேம்-அவ் வன்கண்ணருடைய மலையின்கண் பொன் துகளை அளைந்து வந்த புதிய இவ்வருவி நீரோடு யாம் ஊடுதற்குக் காரணம் யாதொன்றும் காண்கிலேம் தோழி பொன் ஆடி வந்த புதுப்புனல் மற்றையோர் முன் ஆடின் நெஞ்சு நோம் அன்றே-அவர் மலையின்கண் பொன் துகள் அளைந்து வந்த புதிய இந்நீரிலே ஏனை மகளிர் முற்பட ஆடினால் நமது நெஞ்சம் நோகும் அல்லவோ என்றாள் என்க.

(விளக்கம்) என்னொன்றும்-யாதொன்றும். பொன்-பொன்துகள்.

5. யாதொன்றுங்.........நெஞ்சன்றே

(இதன் பொருள்) அவர் மலைப்போது ஆடி வந்த புதுப்புனல் புலத்தல் யாது ஒன்றுங் காணேம்-அவருடைய மலையின்கண் மலர்ந்த மலர்களை அளைந்து வந்த இந்தப் புதிய நீரினோடு ஊடுதற்கு யாம் காரணம் யாதொன்றும் காண்கிலேம் ஆயினும் தோழி போது ஆடி வந்த புதுப்புனல் மற்றையார்மீது ஆடின் நெஞ்சு நோம் அன்றே-தோழி! அவர் மலையின் மலர் அளைந்து வந்த இப்புதிய நீரின்கண் ஏனை மகளிர் மிகைபட ஆடின் நமது நெஞ்சம் நோகும் அன்றோ என்றாள் என்க

(விளக்கம்) இத்தாழிசை மூன்றும் ஒரு பொருள்மேல் அடுக்கிக் கந்தருவ மார்க்கத்தால் இடை மடக்கி வந்தன

பாட்டு மடை

அஃதாவது-பாட்டினை இடையில் வைத்தல்

6. உரையினி.....தோழி

(இதன் பொருள்) மாதராய் இனி உரை உண்கண் சிவப்புப்புரை தீர் புனல் குடைந்து ஆடினோம் ஆயின்-நங்காய் இனி நீ உன் கருத்தினைக் கூறுவாயாக யாம் நமது மையுண்ட கண்கள் சிவக்கும்படி குற்றமில்லாத இந் நீரின்கண் துழந்து துழந்து ஆடினோம் அல்லமோ இவ்வாட்டம் முடிந்தாதலால் (என்று தோழி வினவ தலைவி கூறுகின்றாள்) தோழி குரவை தொடுத்து உரவு நீர் மா கொறை வேலேந்தி ஏத்திப் பாடுகம் வா-தோழி! இனி யாம் குரவைக் கூத்திற்குக் கைபிணைந்து கடலின்கண் நின்ற மாமரமாகிய சூரபதுமனைக் கொன்றொழித்த வேலேந்தியாகிய முருகனைப் புகழ்ந்து பாடுவோம் என்னுடன் வருவாயாக என்றான் என்க.

(விளக்கம்) மாதராய் என்றது தலைவியை. தலைவனே குற்றமுடையான் என்பது குறிப்புப் பொருளாமாறு அவன் மலை அருவிநீர் குற்றமுடைத்தன்று என்பாள் புரை தீர் புனல் என்றான். உரவு நீர் கடல். மா-சூரபதுமன். வேலேந்தி-முருகன்; பெயர். குரவைக் கூத்திற்குரிய கற்கடகக் கைதொடுத்து என்றவாறு.

தெய்வம் பராஅயது

அஃதாவது-குறிஞ்சித் திணைத் தெய்வமாகிய முருகனை வாழ்த்தியது என்றவாறு.

7. சீர்கெழு..........வேலே

(இதன் பொருள்) பார் இரும் பவுவத்தின் உள் புக்குப் பண்டு ஒரு நாள் சூர்மா தடிந்த சுடர் இலைய வெள்வேல்-பாறைக் கற்களையுடைய பெரிய கடலின்னுள்ளே புகுந்து பண்டொரு காலத்தே சூரனாகிய மாமரத்தை அழித்த ஒளிபடைத்த இலையையுடைய வெள்ளிய வேல்தான் யாருடைய வேல் என்னின். சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும் ஏரகமும் நீங்கா இறைவன் கைவேல் அன்றே-சிறப்புப் பொருந்தி திருச்செந்தூரும் திருச்செங்கோடும் திருவெண்குன்றும் திருவேரகமும் ஆகிய இத் திருப்பதிகளினின்றும் ஒருபொழுதும் நீங்காமல் எழுந்தருளியிருக்கின்ற முருகக் கடவுளினுடைய கையில் அமைந்த வேலே யாகும் என்பர்.

(விளக்கம்) பார்-பாதை. பவுவம்-கடல். சூர்மா-சூரனாகிய மாமரம். சீர்-அழகுமாம். ஏரகம்-சுவாமிமலை என்பாரும் உளர் நச்சினார்க்கினியர் ஏரகம் மலை, நாட்டகத்ததொரு திருப்பதி என்றார் அரும்பதவுரையாசிரியர் வெண்குன்றம் என்பதனைச் சுவாமிமலை என்பர்.

8. அணி.........வேலே

(இதன் பொருள்) பிணிமுக மேல்கொண்டு அவுணர் பீடு அழியும் வண்ணம்-மயிலூர்தியின் மேல் ஏறிச் சென்று அசுரர் கூட்டம் பெருமை அழிந்தொழியும்படி; மணி விசும்பின் கோன் ஏத்த மாறு அட்ட வெள் வேல்-அழகிய விண்ணுலகத்து அரசனாகிய இந்திரன் கைதொழுது ஏத்துதலாலே அவன் பகையைக் கொன்ற வெள்ளிய வேல் யாருடைய வேலோ எனின்; அணி முகங்கள் ஓர் ஆறும் ஈர் ஆறு கையும் இணையின்றித் தான் உடையான் ஏந்திய வேல் அன்றே-அழகிய ஆறுமுகங்களும் பன்னிரண்டு கைகளும் தனக்குவமை பிறர் இல்லாதபடி தானே உடையவனாகிய முருகப் பெருமான் திருக்கையில் ஏந்திய வேலேயாகும் என்ப; என்க.

(விளக்கம்) ஆறுமுகங்களும் என மாறுக. இணை. உவமை. பிணி முகம்-மயில்; யானை என்பாரும் உளர். மணி-அழகு. மாறு-பகை

9. சரவண...............வேலே

(இதன் பொருள்) வருதிகிரி கோல் அவுணன் மார்பம் பிளந்து-வளர்ந்து வருகின்ற மலையைச் சுற்றி வருகின்ற அரசனுடைய மார்பைப் பிளத்தற் பொருட்டு; குருகு பெயர்க் குன்றம் கொன்ற நெடுவேல் -கிரவுஞ்சம் என்னும் பெயரையுடைய மலையைப் பிளந்து வீழ்த்திய நீண்ட வேல் யாருடைய வேலோ எனின்; சரவணப் பூம் பள்ளியறைத் தாய்மார் அறுவர் திருமுலைப்பால் உண்டான் திருக்கை வேல் அன்றே-சரவணப் பொய்கையின்கண் மலர்ந்துள்ள தாமரைப் பூக்களாகிய பள்ளி அறையினிடத்துத் தன்னைக் கருவுற்று ஈன்ற தாய்மார்களாகிய கார்த்திகை மகளிர் அறுவருடைய அழகிய முலைப்பாலை யுண்டருளிய முருகப்பெருமானுடைய அழகிய கையில் ஏந்திய வேல் என்று கூறுவர்; என்க

(விளக்கம்) சரவணப் பூம் பள்ளி-இமயமலையின்கண் உள்ள ஒரு நீர் நிலை. அந் நீர் நிலையின்கண் கார்த்திகை மகளிர் அறுவரும் தாமரைப்பூக்களிலே முருகனை ஆறு குழந்தைகளாக ஈன்றனர் எனவும் அக் குழந்தைகள் ஒன்றுபட்டு ஆறுமுகமும் பன்னிரண்டு கைகளும் உடைய ஒரு கடவுளாயின எனவும் கூறுவர். இதனை ஐந்தாம் பரிபாடலிற் காண்க. வருதிகிரி கோலவுணன் என்பன வினைத்தொகைகள். திகிரி மலை. குருகு-கிரவுஞ்சம் என்னும் ஒரு பறவை. இவை தலைவன் வரைவொடு வருதற்பொருட்டு மகளிர் முருகனை வாழ்த்தியபடியாம்.

பாட்டு மடை

10. இறை..........என்றாள்

(இதன் பொருள்) இறை வளை நல்லாய் கறி வளர் தண் சிலம்பண் செய்த நோய் அறியாள்-தோழீ! மிளகு வளருகின்ற குளிர்ந்த மலையினையுடைய நம் பெருமான் நமக்குச் செய்த நோய் இஃதென்று அறிந்துகொள்ள மாட்டாத; அன்னை அலர் கடம்பன் என்றே-மடவோளாகிய நம்மன்னை இந்நோய் மலருகின்ற கடம்பினையுடைய முருகனால் வந்தது என்று கருதி; தீர்க்க. இந் நோயைத் தீர்க்கும் பொருட்டு; வெறி ஆடல் தான் விரும்பி முருகனுக்கு. வெறியாட்டெடுத்தலைத் தான் மிகவும் விரும்பி; வேலன் வருக என்றாள்-வேல்மகனை அழைத்து வருக என்று கூறினள்; இது நகை ஆகின்று-அன்னையின் இச் செயலை நினைக்குந்தோறும் எனக்கு நகைப்புண்டாகின்றது காண்; என்க.

(விளக்கம்) இது முதல் நான்கு பாடல்கள் தலைவி தோழிக்கு அறத்தொடு நின்றது. கறி-மிளகு. சிலம்பன்-குறிஞ்சித் தலைவன் நோய்-காமநோய். கடம்பன்-முருகன்; முருகனால் வந்ததென்று கருதி அது தீர்க்க வேலன் வருகென்றாள் என இயையும்

11. ஆய்வளை............மடவன்

(இதன் பொருள்) ஆய்வளை நல்லாய்-அழகிய வளையலை அணிந்த தோழியே கேள்; மாமலை வெற்பன் நோய் தீர்க்க வேலன் வரும்-பெரிய மலைநாடனாகிய நம் பெருமான் நமக்குச் செய்த இந்த நோயைத் தீர்ப்பதற்கு வேலன் வந்தாலும் வருவான்; வேலன் வருமாயின் மடவன்-வேல் மகன் வருவானானால் அவன் அறிவிலியே ஆவான்; குருகு பெயர்க்குன்றம் கொன்றான் வருமாயின் அவனின் மடவன்-அவ் வேலன் அழைக்கும்பொழுது கிரவுஞ்ச மலையை அழித்தவனாகிய முருகக் கடவுள் வருமாயின் அவனினும் காட்டில் தேற்றமாக அக் கடவுளும் அறிவிலியே காண்!; இது நகையாகின்று-இது நகைப்பைத் தருகின்றது என்க.

(விளக்கம்) ஆய்வளை-நுண்ணிய தொழிலையுடைய வளையலுமாம். வருமாயின் என்பதனைப் பின்னும் கூட்டுக.

12. தெறிவளை.....வருமாயின்

(இதன் பொருள்) செறிவளைக்கை நல்லாய்-செறிந்த வளையலணிந்த தோழியே கேள்; வெறிகமழ் வெற்பன் நோய் தீர்க்க வேலன் வரும்-மணம் கமழ்கின்ற மலையினையுடைய நம் பெருமானால் உண்டான இந்த நோயைத் தீர்க்க வேல்மகன் தேற்றமாக வருவான். ஏன் எனின் வேலன் மடவன்-அவ் வேல் மகன் அறியாமையுடையன் ஆதலான்; அல் அமர் செல்வன் புதல்வன் தான் வருமாயின்-வடவாலின்கீழ் அமர்ந்த இறைவனுடைய மகனாகிய அம் முருகன் தானும் அவ் வேலன் அழைக்க வருவானாயின்; அவனினும் மடவன்-அவ் வேல் மகனினும் காட்டில் அறியாமையுடையவனே காண்; இது நகையாகின்று-இது நகைப்பைத் தருகின்றது.

(விளக்கம்) வெறி-மணம். வெற்பன்-தலைவன். தான் : அசைச் சொல். ஆலமர் செல்வன்-தக்கிணாமூர்த்தி

13: நேரிழை.........வருமாயின்

(இதன் பொருள்) நேர் இழை நல்லாய்-நுண்ணிய தொழிலமைந்த அணிகலன்களையுடைய தோழியே கேள்: மலைநாடன் மார்பு தருவெம்நோய் தீர்க்க வேலன் வரும் மலைநாட்டையுடைய நம் பெருமானுடைய மார்பினால் வந்த இந்த வெவ்விய இக் காமநோயைத் தீர்ப்பதற்கு வேலன் தேற்றமாக வருவான்; தீர்க்க வரும் வேலன் தன்னினும்-இந் நோயைத் தீர்க்க வருகின்ற வேலனினும் காட்டின்; கார்க்கடப்பந் தார் எம் கடவுள் தான் வருமாயின் மடவன்-கார்ப்பருவத்திலே மலருகின்ற கடப்ப மலர் மாலையை அணிந்த எம்முடைய திணைத் தெய்வமாகிய முருகன் தானும் அவ்வேலன் வேண்ட வருவானாயின் அறியாமையுடையவனே காண்; நகை ஆம்-ஆகவே அன்னையின் இச் செயல் எனக்கு நகைப்பையே தருகின்றது; என்க.

(விளக்கம்) நேர் இழை என்புழி நேர்மை நுண்மை மேற்று; அழகுமாம். கடப்பந்தார்-முருகனுக்குரிய மாலை. குறிஞ்சிக் கடவுளாதலின் எம் கடவுள் என்றாள். இவை நான்கும் தலைவி தோழிக்கு அறத்தொடு நின்றது. இனி, தலைவன் சிறைப்புறத்தானாகத் தலைவி அவன் கேட்ப வெறியாடல் கூறி வரைவு கடாஅயது எனினுமாம்.

பாட்டு மடை

14: வேலனார்........வேண்டுதுமே

(இதன் பொருள்) வேலனார் வந்து வெறியாடும் வெங்களத்து-அன்னையின் வேண்டுகோளுக் கிணங்கி அவ் வேலனார் வந்து வெறியாடல் நிகழ்த்துகின்ற வெவ்விய அக்களத்தின்கண்; நீலப் பறவை மேல் நேரிழை தன்னோடும் ஆல் அமர் செல்வன் புதல்வன் வரும்-நீல நிறமான மயிலின்மேல் ஏறி அழகிய அணிகலன்களையுடைய வள்ளி நாச்சியாரோடும் இறைவன் மகனாகிய முருகப்பெருமான் எழுந்தருளுவான்; வந்தால் மால்வரை வெற்பன் மண வணி வேண்டுதுமே-முருகப்பெருமான் வருவானாயின் யாம் பெரிய மூங்கிலையுடைய மலைநாட்டுத் தலைவனாகிய நம் பெருமானுடைய திருமணத்தின்கண் மங்கல அணி பெறுமாறு வேண்டிக்கொள்வேம் காண்; என்க

(விளக்கம்) வேலனார்: இகழ்ச்சி. நீலப்பறவை-மயில். நேரிழை என்றது வள்ளியை. அவள் தம் குலப்பெண்ணாதலின் அவளை மட்டும் கூறினாள். வெறியாடலினும் நமக்கும் ஒரு பயன் உளது, என்றவாறு இஃது ஏனைத் தாழிசைகளுக்கும் ஒக்கும்

15: கயிலை................எனவே

(இதன் பொருள்) கயிலை நம்மலை இறை மகன்ஐ-கயிலாயம் என்னும் அழகிய மலையின்கண் எழுந்தருளியிருக்கின்ற இறைவனுடைய மகனாகிய முருகப் பெருமானே; அயல் மணம் ஒழி அவர் மணம் அருள் என-எதிலார் மணம் பேசி வருவதனை ஒழித்தருளுக, எம் பெருமானுடைய திருமணம் நிகழுமாறு அருள் செய்திடுக என்று நின்னை வேண்டிக்கொண்டு; நின் மதிநுதல் மயில் இயல் மடவரல் மலையர்தம் மகளார் செயலை மலர்புரை திருவடி தொழுதேம்-நின்னுடையவும் பிறை போன்ற நுதலையும் மயில் போன்ற சாயலையும் மடப்பத்தையுமுடைய குறவருடைய மகளாராகிய வள்ளி நாச்சியாருடையவும் ஆகிய அசோகினது மலரையொத்த அழகிய திருவடிகளைத் தொழுகின்றோம் என்க.

(விளக்கம்) கயிலைமலை இறை-சிவபெருமான் மகனை என்புழி ஐகாரம் சாரியை. மடவரால்-மடப்பம் வருதலையுடையவள். மலையர் குன்றவர். செயலை-அசோகம். நின்னுடையவும் மகளாருடையவும் ஆகிய திருவடி எனக் கூட்டுக. அயன் மணம் எனக் கொண்டு பிரசா பத்தியம் என்பர் அரும்பத உரையாசியர். இவ்வுரை சிறப்பின்று! அயல் மணம் எனக் கொண்டு இதனைப் பிறர் மண வரவு கூறி வரைவு கடாஅதலுக்கு ஏதுவாக்குதலே சிறப்பாம். அவர் மணம் என்றது தலைவன் மணத்தை.

16: மலைமகள்...........எனவே

(இதன் பொருள்) மலைமகள் மகனை நின் மதிநுதல் மடவரல்-இமயமலையின் அரசனுடைய மகளாகிய உமை அம்மையின் மகனாகிய முருகப்பெருமானே நின்னுடைய பிறை போன்ற நெற்றியையுடைய மனைவியாகிய மடந்தை தானும்; குலமலை உறைதரு குறவர் தம் மகளார்-சிறந்த மலைகளிலே வாழ்கின்ற குறவர் குடியிற் பிறந்த மகளாரேயல்லரோ; நிலை உயர் கடவுள் நின் இணையடி தொழுதேம்-இவ்வாறு பிறந்த குலத்தாலும் பெண் கொண்ட குலத்தானும் சிறப்புற்றுப் பிறகடவுளார் நிலையினும் உயர்ந்திருக்கின்ற கடவுளாகிய உனது இரண்டு திருவடிகளையும் அப் பிறப்புரிமை பற்றி அக் குலத்தே மாகிய யாங்கள் கை கூப்பித் தொழுகின்றேம் அஃதெற்றுக் கெனின்; அவர் பலர் அறி மணம் படுகுவர் என-எம் தலைவர் நின் அருளால் இக்களவு மணத்தைக் கைவிட்டுச் சுற்றத்தார் பலரும் அறிதற்குரிய நல்ல திருமணத்தைச் செய்துகொள்க என்னும் பொருட்டே யாம்; என்க.

(விளக்கம்) மலைமகள்-பார்வதி. குறவர் தம் மகள்-வள்ளி எனவே நீயும் குறத்திமகன் நின் மனைவியும் குறத்தி; இவ்வாற்றால் நின் நிலை ஏனைக் கடவுளினும் உயர்ந்தது என்று பாராட்டியபடியாம். யாங்களும் குறமகளிராதலின் அவ்வுரிமைபற்றி நின் அடி தொழுதேம் என்றவாறு. பலர் அறிமணம்-கிழவன் கிழத்தியைக் கொடைக்குரி மரபினோர் உறவினர் அறியக் கொடுப்பக் கொள்வது(தொல் கற்பீ-1)

17: குறமகள்.......எனவே

(இதன் பொருள்) குறமகள் அவள் எம் குலமகள் அவளொடும் அறுமுக ஒருவன்-குறமகளாகிய அவ் வள்ளி தானும் எம்முடைய குலத்தில் பிறந்தவள் ஆதலால் அவள் திருவடிகளோடு ஆறுமுகங்களையுடைய ஒப்பற்ற இறைவனாகிய; நின் அடியிணை தொழுதேம்-நின்னுடைய திருவடியிணையையும் ஒரு சேரக் கைகுவித்துத் தொழுகின்றேம், அஃதெற்றுக்கெனின்; துறைமிசை நினது இருதிருவடிதொடுநர்-நீர்த் துறையின்கண் நின்னுடைய இரண்டு அழகிய அடிகளையும் தொட்டு எமக்குச் சூள் மொழிந்த எங்காதலர்; நன்மணம் பெறுக பிழை மணம் விடு என-நின் அருளால் பலரறியும் நல்ல திருமணத்தைச் செய்துகொள்வாராகவும் பிழையான இக் களவு மணத்தைக் கைவிடுவாராகவும் என்னும் பொருட்டேயாம்; என்க

(விளக்கம்) வள்ளி எம் குலமகளாதலின் தொழுதேம் எனவே வானோர் மகளாகிய தெய்வயானையின் அடிகளைத் தொழமாட்டேம் என்றாருமாயிற்று. பிழை மணம்-களவு மணம் விடுக என்பதன் ஈறு தொக்கது; செய்யுள் விகாரம்.

பாட்டு மடை

18: என்றியாம்......தோழி

(இதன் பொருள்) என்று யாம் பாட-என்று யாம் இவ்வாறு பாடா நிற்ப; மன்றல் அம் கண்ணி மலை நாடன்-மணங்கமழும் அழகிய மலர் மாலையைத் தலையில் அணிந்திருந்த இம் மலைநாட்டுத் தலைவனாகிய நம் பெருமான்; மறை நின்று கேட்டருளிப் போவான் முன் சென்றேன்-நம் பாடல்களை மறைந்து நின்று எஞ்சாமல் கேட்டுப் பின்னர்த் தன்னூர் நோக்கிப் போகின்றவன் முன்னர் யான் தமியளாய்ச் சென்றேன்; அவன் தன் திரு அடி கைதொழுது நின்றேன்-அவனுடைய அழகிய அடிகளை நோக்கிக் கைக்கூப்பித் தொழுது நின்று; உரைத்தது கேள் தோழி வாழி-யான் அவனுக்குக் கூறியதனை உனக்குக் கூறுவேன் கேட்பாயாக தோழீ நீ நீடுழி வாழ்க; என்றாள் என்க.

(விளக்கம்) மறை நின்று-கரந்து சிறைப்புறமாக நின்று. சென்று நின்ற யான் உரைத்தது கேள்; என்க. வாழி: அசைச் சொல்லுமாம்

19: கடம்பு.........சிறுகுடியோரே

(இதன் பொருள்) கடம்பு சூடி உடம்பிடி ஏந்தி மடந்தை பொருட்டால் இவ்வூர் வருவது-ஐயனே நீ கடப்பமாலையை அணிந்துகொண்டு வேலைக் கையிலேந்தித் தலைவியின் பொருட்டு இந்த வூருக்கு இவ்வாறு வருவது நின்னை முருகன் என்று கருதி ஒதுங்கிப் போவாரல்லது ஐயுறுவார் இலர் ஆகும் பொருட்டன்றே, நின் கருத்து நிறைவேறு மாறில்லை, எற்றாலெனின் உனக்கு; அறுமுகம் இல்லை அணி மயில் இல்லை குறமகள் இல்லை செறிதோள் இல்லை-நின்பால் கடம்பும் உடம்பிடியும் உளவேனும் முருகனுக்குரிய ஆறுமுகங்கள் இல்லை அழகிய மயிலூர்தியும் இல்லை அவன் மருங்கில் உறையும் வள்ளிநாச்சியாரும் இல்லை மேலும் நெருங்கிய தோள்கள் பன்னிரண்டும் இல்லையே! இங்ஙனம் ஆதலின்: கடம்பூண் தெய்வமாக நேரார்-நின்னைக் காண்பவர் உன்னைப் பராவுக் கடன் பூணுகின்ற தங்கள் தெய்வமாகிய முருகனே இவனென்று உடன்படமாட்டார் காண்; இச் சிறுகுடியோர் மன்ற மடவர்-இவ்வூரில் வாழ்கின்ற குறவர் தேற்றமாக அறியாமை யுடையவராதலான் என்று இங்ஙனம் கூறிவிட்டேன் என்றாள்; என்க.

(விளக்கம்) கடம்பு-கடப்ப மாலை. உடம்பிடி-வேல் மடந்தை. தலைவி. முருகன் இறைவனாதலான் கடம்புசூடி உடம்பிடியேந்தி ஒரு முகத்தோடும் இங்ஙனம் தோன்றுதல் கூடும் என்னும் மெய்யறிவு மடவோராகிய இச் சிறு குடியோர்க்கு இல்லை என்று அவரை இகழ்வாள் போல, இச் சிறுகுடியோர் நின்வரவை அறிந்து யாண்டும் பழி தூற்றித்திரிகின்றார். அதற்குக்காரணம் நல்லறிவின்மையே என அலர் மிகுதி அறிவித்தாளும் ஆதல் உணர்க.

பாட்டு மடை

20: என்றீங்கு.....பாடுதும்யாம்

(இதன் பொருள்) என்று ஈங்கு அலர் பாடு பெற்றமை யான் உரைப்பக் கேட்டு-தோழி! இவ்வாறு சொல்லி இவ்வூரின்கண் அலர் மிக்கதனை யான் தலைவனுக்கு எடுத்துக் கூற அதனைக் கேட்டு; புலர்வாடு நெஞ்சம் புறங்கொடுத்துப் போன-புலர்ந்து வாடுகின்ற தனது நெஞ்சத்தை நம் பக்கலிலே விட்டுப்போன; மலர் தலை வெற்பன வரைவானும் போலும்-விரிந்த இடத்தையுடைய இம் மலைநாட்டுத் தலைவனாகிய நம் பெருமான் வரைவொடு வந்து திருமணமும் செய்துகொள்வான் போலும் இனி யாமும் அத் திருமணம் இனிது நிகழ்தற்பொருட்டு; முலையினால் மாமதுரை கோள் இழைத்தாள் காதல் தலைவனை-தனதொரு முலையினாலே பெரிய மதுரை நகரத்தை தீயுண்ணும்படி செய்தவளுடைய காதலுக்குரிய கணவனை; வானோர் தமராருங் கூடி பலர்தொழு பத்தினிக்குக் காட்டிக் கொடுத்த நிலை ஒன்று பாடுவதும் யாம்-தேவர்களாகிய இந்திரனுடைய சுற்றத்தார்கள் எல்லோரும் கூடி வந்து அத் தேவர் முதலிய எல்லோரும் கைகூப்பித் தொழுதற்கியன்ற நம் பத்தினித் தெய்வத்திற்குக் கண்கூடாகக் காட்டி வழங்கிய சிறப்புத் தன்மையினைச் சுட்டி யாம் இனி ஒரு பாட்டுப் பாடுவேமாக என்றாள் என்க.

(விளக்கம்) பாடு பெறுதல்-பெருகுதல். புலர்ந்து வாடும் நெஞ்சம் என்க. கோள் இழைத்தல்-கொள்ளுதலைச் செய்தல், என்றது தீ பற்றிக் கொள்ளுதலைச் செய்தால் என்றவாறு. இனி, தீயோரைக் கொன்றழித்தவள் எனினுமாம். வானோராகிய இந்திரன் தருமர் ஆருங் கூடி என்க. தமரார்; ஒரு சொல் எனினுமாம். பெயரறியாமையின் கண்ணகி கூற்றையே வேறு வாய்பாட்டால் கூறி மாமதுரை கோளிழைத்தாள் எனவும், தம் கருத்தால் பலர்தொழு பத்தினி எனவும் பெயர் வழங்கினார்; பின், இவர் கூறும் பெயர்களுக்கும் இவ் விளக்கம் பொருந்தும். இவர் யாண்டும் கண்ணகி என அவள் பெயர் கூறாமையும் கருத்திற் கொள்ளற் பாலது

21: பாடுகம்.....வேண்டுதுமே

(இதன் பொருள்) பாடுகம் வா வாழி தோழி யாம் பாடுகம்-தோழி! இனி யாம் அவ்வாறு பாடுவோம் வருவாயாக; கோமுறை நீங்கக் கொடிமாடக் கூடலைத் தீ முறை செய்தாளை ஏத்தி யாம் பாடுகம்-அரசன் தனது செங்கோன் முறைமையின் நீங்கியதனாலே உண்டான குற்றத்திற்கு அவனது கொடி உயர்த்தப்பட்ட மாட மாளிகைகளையுடைய கூடல் மாநகரத்தைத் தீக்கிரை யாக்கு மாற்றால் முறை செய்தவளாகிய நம் பத்தினித் தெய்வத்தைப் புகழ்ந்து யாம் பாடுவேமாக; தீ முறை செய்தாளை ஏத்தி யாம் பாடுங்கால் மாமலை வெற்பன் மணவணி வேண்டுதுமே-அவ்வாறு தீயால் முறை செய்த பத்தினியைப் புகழ்ந்து பாடும் பொழுதும் யாம் நமது பெரிய மலைநாட்டையுடைய தலைவனுடைய திருமண அணியை அருள வேண்டுமென்று அத் தெய்வத்தின்பால் வரம் வேண்டுவேமாக என்றாள் என்க.

(விளக்கம்) பாடுகம்: தன்மைப் பன்மை வினைமுற்று. இவை இடை மடக்கி வந்தன. தீ முறை செய்தாள்: பெயர். வெற்பன்-தலைவன் என்னும் துணையாய் நின்றது

22: பாடுற்று............ஒழியாரே

(இதன் பொருள்) பாடு உற்றுப் பத்தினிப் பெண்டிர் பரவித் தொழுவாள் ஓர் பைத்து அரவு அல்குல் நம் பைம் புனத்து உள்ளாள்-தீ முறை செய்தமையால் பெருமையுற்று உலகத்திலுள்ள பத்தினிப் பெண்டிர்கள் எல்லாரும் புகழ்ந்து தொழப் படுகின்ற அரவின் படம் போன்ற அல்குலையுடையா ளொருத்தி பசிய இப் புனத்தின்கண் நமக்குத் தெய்வமாக இருக்கின்றாள்; பைத்தர வல்குல் கணவனை வானோர்கள் உய்த்துக் கொடுத்தும் உரை ஒழியார்-அத் தெய்வத்திற்கு அவள் கணவனைத் தேவர்கள் கொணர்ந்து கொடுத்த பின்னரும் அவளைப் புகழ்தல் ஒழிந்திலர் என்றாள்; என்க.

(விளக்கம்) பாடு-பெருமை: அஃதாவது பத்தினிப் பெண்டிர்க் கெல்லாம் எடுத்துக்காட்டாகத் திகழ்தல். இக்காரணத்தால் பத்தினிப் பெண்டிரும் பரவித் தொழுவாராயினர், என்க. பைத்தர வல்குல்: அன் மொழித் தொகை. உய்த்துக் கொடுத்தல்-வலியக் கொணர்ந்து கொடுத்தல். உரை-புகழ்

23: வானக.........இல்லாளே

(இதன் பொருள்) வானக வாழ்க்கை அமரர் தொழுது ஏத்தக் கான நூறு வேங்கைக் கீழாள் ஓர் காரிகையே-வானுலகின்கண் வாழுகின்ற சிறந்த வாழ்க்கையையுடைய தேவர்கள் தாமும் கைதொழுது ஏத்தும்படி நமது குறிஞ்சிக் காட்டின்கண்ணுள்ள நறிய இவ் வேங்கை மரத்தின் கீழே தெய்வமாக ஒரு காரிகை எப்பொழுதும் இருப்பாளாயினள்; கான நறு வேங்கைக் கீழாள் கணவனொடும் வானக வாழ்க்கை மறுதரவோ இல்லாளே-இங்ஙனம் அவள் தானும் வேங்கைக் கீழ் இருப்பாளேனும் தான் தன் கணவனோடும் வானுலகத்தின்கண் இன்புற்றமர்ந்து வாழும் வாழ்க்கையினின்றும் மீளுதல் ஒரு காலத்தும் இல்லாதவளும் ஆவாள்.

(விளக்கம்) மறுதரவு-மீட்சி. அவள் தெய்வமாதலின் இங்கு அங்கு எனாதபடி எங்குமிருப்பாள் என்றவாறு

24. மறுதரவு.......இவ்வூர்

(இதன் பொருள்) மறுதரவு இல்லாளை ஏத்தி நாம் பாட இவ்வூரும் ஓர் பெற்றி பெறுகதில் அம்ம-தனது தெய்வ வாழ்க்கையினின்றும் ஒருபொழுதும் மீள்கிலாத அப் பத்தினித் தெய்வத்தைப் புகழ்ந்து யாம் பாடுதலாலே இந்தக் குன்றவர் ஊரும் ஒரு சிறப்பினைப் பெறுவதாக; இவ்வூர் பெற்றியுடையதே பொற்றொடி மாதர் கணவன் மணங்காணப் பெற்றி உடையது-இந்த ஊர் ஒருதலையாகப் பெருமையுடையதே பெருமையுடையதே அப் பெருமை தான் யாதோ எனின் பொன் வளையலணிந்த எம் பெருமாட்டிக்கும் அவள் கணவனுக்கும் நிகழவிருக்கின்ற திருமணங் காணலாகின்ற புதியதொரு சிறப்பையுடையதாகலாம்; என்றாள்; என்க

(விளக்கம்) தில்: அசைச் சொல். அம்ம: கேட்பித்தற்கண் வந்தது. பெற்றி-தன்மை; அது சிறப்பின் மேனின்றது. அடுக்கு தேற்றம் பற்றி வந்தது. மாதர் என்றது தலைவியை முன்னிலைப் புறமொழி

25: என்றியாம்.............கோவே

(இதன் பொருள்) என்று யாம் கொண்டு நிலை பாடி ஆடும் குரவையைக் கண்டு நம் காதலர் கை வந்தார்-தோழி! இவ்வாறு கூறி யாமெல்லாம் கொண்டு நிலை என்னும் பாட்டினைப் பாடிக் கொண்டு ஆடா நின்ற குரவைக் கூத்தினை மறைய நின்று கண்டு நம் பெருமான் நம் வழிப்பட்டு வரைவொடு வந்தார் காண் இனி நீ வருந்தாதே கொள்! வில் எழுதிய இமயத்தொடு கொல்லி ஆண்ட குறவர்கோ-தனது பொறியாகிய வில்லினை எழுதிய இமய மலையினோடு கொல்லிமலையினையும் ஒருசேர ஆட்சி செலுத்திய குடநாட்டார் மன்னனாகிய செங்குட்டுவன்; ஆனாவைகலும் ஆனாது உண்டு மகிழ்ந்து வாழியர்-இடையறாது பிறக்கின்ற நாள்கள்தோறும் பூ நறுந்தேறல் பருகி உள்ளம் ஒழிவின்றி மகிழுமாறு நீடுவாழ்வானாக.

(விளக்கம்) கொண்டு நிலை-பொருளைக் கொண்டு நிற்கும் நிலை என்பர் அரும்பதவுரையாசிரியர். மறைய நின்று கண்டு என்க. கைவந்தார்-நம் வழிப்பட்டு வந்தார். அஃதாவது வரைவொடு வந்தார் என்றவாறு. முன்னர்(22) தீ முறை செய்தாளை யேத்தி யாம் மண அணி வேண்டுதும் என்றமையின் யாம் இப்பத்தினித் தெய்வத்தை ஏத்திப் பாடியதனால் நம் காதலர் கை வந்தார் என்றாளாயிற்று, குரவைக் கூத்தாடுவார் கூத்தின் முடிவில் தம் அரசனை வாழ்த்துதல் மரபு-இதனை ஆய்ச்சியர் குரவை இறுதியினும் ஆய்ச்சியர் பாண்டியனை வாழ்த்தி முடித்தலானும் உணர்க.

பா-கொச்சகக்கலி

குன்றக் குரவை முற்றிற்று.


"வஞ்சிக் காண்டம்" ("Vañciṟ Kāṇṭam") is a significant part of the Tamil epic "Cilappatikaram" (also spelled "Silappatikaram"), which is one of the Five Great Epics of Tamil literature. It is also referred to as the "Garland of Deception" or "The Book of Deception."

Overview of "வஞ்சிக் காண்டம்" (Vañciṟ Kāṇṭam)

1. Context in "Cilappatikaram":

- "Cilappatikaram": This epic is composed by Ilango Adigal and is divided into several books or "Kāṇṭams" (sections), each focusing on different aspects of the story. "Vañciṟ Kāṇṭam" is the 24th book in this epic.

2. Content and Structure:

- Theme of Deception: The term "Vañciṟ" translates to "deception" or "betrayal." This section of the epic deals with themes of betrayal and deceit, focusing on the consequences of treachery and falsehood.

- "Kūṉṟak Kuravai": The specific part "Kūṉṟak Kuravai" refers to the type of narrative or poetic composition within this section. "Kūṉṟak" can be associated with a particular type of verse or style, and "Kuravai" refers to a song or poetic form.

3. Themes and Significance:

- Narrative Focus: The "Vañciṟ Kāṇṭam" explores the consequences of deception and falsehood within the broader narrative of "Cilappatikaram." It often includes detailed accounts of how deception affects the characters and the storyline.

- Moral Lessons: This section reflects on the moral and ethical implications of deceit, offering lessons on integrity and the consequences of betrayal.

4. Literary and Cultural Impact:

- Character Development: The themes of deception and betrayal play a significant role in character development and plot progression within the epic.

- Cultural Reflection: The narrative offers insights into ancient Tamil attitudes towards honesty, betrayal, and justice, reflecting societal values and norms.

"Kūṉṟak Kuravai" in "Vañciṟ Kāṇṭam":

- Kūṉṟak Kuravai: This term indicates a specific type of poetic or narrative composition within the "Vañciṟ Kāṇṭam." It is part of the larger thematic exploration of deception and its impacts.

In summary, "Vañciṟ Kāṇṭam" (24th book of "Cilappatikaram") delves into themes of deception and betrayal, exploring the moral and ethical implications of these themes. The "Kūṉṟak Kuravai" refers to a particular narrative or poetic form within this section, contributing to the rich tapestry of Tamil classical literature.



Share



Was this helpful?