Digital Library
Home Books
Perumpan Atrupadai, also known as Perumpāṇ Aṟṟuppaṭai, is a significant work in Tamil literature and is part of the Pattuppāṭṭu (Ten Idylls) anthology, a collection of ten long poems from the Sangam period. This work follows the traditional Atrupadai form, which is a genre of Tamil poetry where the poet guides or directs others to seek the patronage of a generous and noble ruler or chieftain.
500 அடிகளைக் கொண்டு அமைந்தது பெரும்பாணாற்றுப்படை. பேரியாழ் வாசிக்கும் பாணனொருவன் வறுமையால் வாடும் இன்னொரு பாணனைத் தொண்டைமான் இளந்திரையன் என்னும் மன்னனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்தது இந்த ஆற்றுப்படை நூல். இதை ஆக்கியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்னும் புலவர்.
நூலாசிரியர் கடியலூர் உருத்திரங் கண்ணனார் வரலாறு
இற்றைநாட் போந்த முற்றுதமிழ் பரவுள், முருகு முதனிறுத்த அரியன் பத்தும், வரம்பிட லாகாப் பெருஞ்சிறப்பினவே எனச் சான்றோராற் புகழ்ந்தோதப்பட்ட பத்துப் பாட்டினுள் நான்காம் பாட்டாகத் திகழ்கின்ற இப் பெரும் பாணாற்றுப்படை என்னுந் தீந்தமிழ்ப் பனுவல் உருத்திரங் கண்ணனார் என்னும் உயர்மொழிப் புலவரானே ஓதப்பட்டதாம். இப்புலவர் பெருமான் பத்துப் பாட்டின்கண் ஒன்பதாம் பாட்டாக நிற்கும் பட்டினப்பாலையையும் பாடியவராவார்.
இவர் பெயர்முன் கடியலூர் என்னும் அடைமொழி நிற்றலால், இவர் கடியலூர் என்னும் ஊரிற் பிறந்தவர் என்பது உணரப்படும். இக்கடியலூர் எந்நாட்டகத்துள்ளது என்பது இன்னும் அறியப்படவில்லை. உருத்திரங் கண்ணனார் என்பதனை, உருத்திரனுக்குக் கண்போன்று சிறந்த முருகனின் பெயராகக் கொண்டு உருத்திரங் கண்ணனார் என்பது இப் புலவர் பெயரென்பாரும், தந்தையின் பெயரை மகன் பெயர்க்கு அடையாக்கி வழங்கும் முண்மையால் இவர் தந்தையின் பெயர் உருத்திரன் என்பதாம் என்றும், இவர் பெயர் கண்ணனார் என்பதாம் என்றும் கூறுகின்றவரான இருதிறத்தாரும் உள்ளனர்.
இனி தொல்காப்பியத்தில் ஊரும் பெயரும் உடைத்தொழிற் கருவியும் யாரும் சார்த்தி யவையவை பெறுமே (மர- 74) என்னும் நூற்பாவிற்குப் பேராசிரியர் உறையூர் ஏணிச்சேரி முடமேரசி, பெருங்குன்றூர்ப் பெருங்கவுசிகன் கடியலூர் உருத்திரங் கண்ணன் என்பன, அந்தணர்க்குரியன என உரை கூறுதலானே இப்புலவர்பெருமான் அந்தணர் மரபினர் என்பது தெளியப்படும்.
இவர் பெரும்பாணாற்றுப்படையில் இருநிலங் கடந்த திருமறு மார்பின், முந்நீர் வண்ணன், என்றும், கரந்தளஞ் சிலம்பிற் களிறுபடிந் தாங்குப் பாம்பணைப் பள்ளி யமர்ந்தோன் ஆங்கண் என்றும் நீனிற வுருவி னெடியோன் கொப்பூழ் நானமுக வெரருவற் பயந்த பல்லிதழ்த் தாமரைப் பொகுட்டு என்றும், திருமாலையும், அவ்விறைவன் உறையும் திருவெஃகா வணையையும் அவனது திருவுந்தித் தாமரையையுபம் சிறப்பித்தோதுதலான், திருமாலிடத்தே அன்புடையார் என்பாரும் உளர். இவர் இங்ஙனம் கூறுதல், இப்பாட்டுடைத்தலைவனாகிய தொண்டைமான் இளந்திரையன் திருமால் மரபினன் எனப்படுதலானும் அம்மன்னன் திருமாலிடத்தே அன்பு கெழுமிய உள்ள முடையான் ஆதலானும், திருவெஃகாவணை அவன் நகரின் கண்ணதாகலானும், அவன்பாற் செல்லுக என ஆற்றுப்படுத்தும் பொருநன் ஆற்றுப்படுத்தப்படுவோனை அம் மன்னன் அன்புகொண்ட திருமாலை வணங்கிச் செல்க என்பான். திருமாலைப் புகழ்ந்தன னாகக் கூறினாரல்லது திருமாலிடத்து அன்புடைய வைணவர் இவர் எனக் கொள்ளற்பாற்றன்று. இவர் பாடிய பட்டினப்பாலையில் ஓரிடத்தும் திருமால் ஓதப்படாமையுங் காண்க
இனி, உருத்திரங் கண்ணனார் என்னும் பெயர் சைவசமயத்தினரே இட்டு வழங்குதற் குரித்தாம் தன்மையுடையதாதல் பற்றி, இவர் சைவசமயத்தினர் என்பது ஒரோவழிப் பொருந்தினும் பொருந்தும். இனி, இப்புலவர் பெருமான் பாடியருளிய இப்பெரும் பாணாற்றுப்படையானும் பட்டினப்பாலையானும், பண்டைநள் தமிழகத்தின், பண்பாடுகள் வெளியாகின்றன. இவர் பல்வேறு வகுப்பினராக தமிழ்மக்களுடைய ஒழுகலாற்றினையும் நன்கு தெரித்தோதுகின்றார். உமணர், எயிற்றியர், எயினர், ஆயர், ஆயச்சியர், உழவர், வலைஞர், அந்தணர், மகளிர் முதலியோருடைய செயல்களும் அவர்தம் இயல்புகளும் கற்போர்க்குக் கண்கூடாக விளங்கும்படி விரித்தோதுகின்றனர். இப்பெரும்பாணாற்றுப்படையில் நீர்ப்பெயற்று என்னும் ஒரு வங்கத்துறையையும் பட்டினப்பாலையில் காவிரிப்பூம்பட்டினத்து வங்கத்துறையையும், அத்துறைகளிடத்தே பல்வேறு நாட்டுப் பொருள்களும் வங்கங்களிலே கொணரப்படுதலையும், உள்நாட்டுப் பொருள்கள் ஏற்றப்படுதலையும், சுங்கம் வாங்கப் படுதலையும், மாந்தரின் தொழிற்றுறை, உண்டி, உறையுள், ஆடை முதலியவற்றின் இயல்பையும் அழகுற ஓதுகின்றார்.
இவர் வடநாட்டின்கண், கங்கையாற்றின் கரையிலே அவ்வியாற்றைக் கடத்தற்பொருட்டுத் தோணித்துறையிலே மாந்தர் காத்துக் கிடத்தலையும் இமயம் முதலியவற்றின் இயல்பையும். ஓதுதலைக் கூர்ந்து நோக்குவார்க்கு. இப்புலவர் அந்நாடுகளிற் சுற்றி ஆண்டுள்ள இயல்புகளை நன்கு நேரில் அறிந்தே கூறுகின்றனர் என்பது விளங்கும். பாழ்பட்ட நகரங்கள், மன்றங்கள், ஊர்கள் முதலியவற்றின் இயல்பை, இவர் ஓதுவோர் உளமுருகும்படி ஓதுகின்றனர். மேலும் பண்டைக்கால அரசியல், நாட்டின் தன்மை, நகரத்தின் இயல்பு மன்னறம், மாந்தர் ஒழுக்கம், விளைபொருள், வாணிகம், போர், காடுகளின் இயல்பு முதலியவற்றின் நன்கு விளக்கிக் காட்டும் வரலாற்று நூல்களாகவும் இவர் பாடல்கள் திகழ்கின்றன. பண்டைகால இசைக்கலைகளில் குறிப்புகள் பல, இவர் பாட்டிலுள்ளன. இவர், இவ்விரண்டு பால்களுமன்றிக் குறுந்தொகையில் 352 ஆம் செய்யுளையும், அகநானூற்றில் 167 ஆம் செய்யுளையும் இயற்றியவர் ஆவர். இவர் தொண்டைமான் இளந்திரையன் சோழன் கரிகாற் பெருவளத்தான் என்னும் இருபேரரசர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்டவர். இவர் பாடிய பட்டினப்பாலைக்குக் கரிகால் வளவன் பதினாறு நூறாயிரம் பொன் பரிசில் வழங்கினான் என்பர். இதனை
தழுவு செந்தமிழிப் பரிசில் வாணர்பொன்
பத்தோ டாறுநூ றாயிரம் பெறப்
பண்டு பட்டினப் பாலை கொண்டதும்
எனவரும் கலிங்கத்துப் பரணியாற் காணலாம்.
பாட்டுடைத் தலைவன் வரலாறு
தொண்டைமான் இளந்திரையன்
கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் நல்லிசைப் புலவராற் பாடப்பட்ட இப் பெரும்பாணாற்றுப் படையென்னும் செந்தமிழ்மாலை புனைந்து கொண்டவன் தொண்டைமான் இளந்திரையன் என்னும் மன்னன் ஆவன். காஞ்சிபுரத்தைத் தலை நகராகக்கொண்ட தொண்டைநாட்டை ஆண்ட மன்னர்கள் தொண்டைமான் என்று சொல்லப்படுவர். தொண்டையர் என்னும் மரபினர் ஆண்டமையாலே அந்நாடு தொண்டை நாடெனப் பட்டது. தொண்டை என்பது ஒரு மன்னர் குடியின் பெயர் என்பாரும் உளர். இத் தொண்டையரைப் பல்லவ மன்னராகக் கருதுவாரும் உளர். தொல்காப்பிய மரபியலில் 83 ஆம் நூற்பாவின் உரையிற் பேராசிரியர் மன்பெறு மரபின் ஏனோர் எனப் படுவார் அரசு பெறுமரபிற் குறுநில மன்னர் எனக் கொள்க; அவை பெரும்பாணாற்றுள்ளும், பிறவற்றுள்ளும் காணப்படும் என எழுதியுள்ளமையால் தொண்டையோரை நம் பண்டையோர் குறுநிலமன்னர் எனக் கொண்ட கொள்கை புலனாம். ஆய்குடி வேளிர்குடி, எவ்விகுடி, அதியர்குடி என்று பற்பல மன்னர் குடிகளிருந்தாற் போன்று தொண்டையர் குடி என, ஒரு மன்னர் குடி இருந்ததென்று நினைதல் தவறன்று.
இத் தொண்டையர் குடிப்பிறந்த மன்னர்கள் உரவு வாட்டடக்கைக் கொண்டி யுண்டித் தொண்டையோர் என்றும் பொருவார் மண்ணெடுத் துண்ணும் அண்ணல் யானை வண்டேர்த் தொண்டையர் என்றும் வினைநவில்யானை விறற்போர்க் கொண்டையர் என்றும், நல்லிசைப் புலவர்களால் கூறப்படுகின்றனர் இம் மன்னர்கள், தமிழகத்தின் வடவெல்லையாகத் திகழும் திருவேங்கடத்தைச் சார்ந்த பகுதிகளை உடையர் என்பதனை
இனமழை தவழும் ஏற்றரு நெடுங்கோட்டு
ஓங்குவெள் ளருவி வேங்கடத் தும்பர் (அக நா- 213)
எனவரும் அகப்பாட்டானும்
கின்னர முரலும் அணங்குடைச் சாரல்
மஞ்ஞை யாலும் மரம்பயில் இறும்பிற்
கலைபாய்ந் துதிர்த்த மலர்வீழ் புறவின்
மந்தி சீக்கு மாதுஞ்சு முன்றிற்
செந்தீப் பேணிய முனிவர் வெண்கோட்டுக்
களிறுதரு விறகின் வேட்கும்
ஒளிறிலங் கருவிய மலைகிழ வோனே (494-500)
எனவரும் பெரும்பாணாற்றுப் படையானும் உணரலாம். இனி, ஆசிரியர் நச்சினார்க்கினியர் அந்நீர்த் திரைதரு மரபின் உரவோ னும்பல் என்னும் அடிக்கு விளக்கங் கூறுவார். நாகப்பட்டினத்துச் சோழன் பிலத்துவாரத்தால் நரகலோகத்தே சென்று நாககன்னியைப் புணர்ந்த காலத்து அவள் யான்பெற்ற புதல்வனை என்செய்வேன் என்ற பொழுது தொண்டையை அடையாளமாகக் கட்டிக் கடலிலே விட, அவன் வந்து கரையேறின். அவற்கு யான் அரசுரிமையை எய்துவித்து நரடாட்சி கொடுப்பலென்று அவன் கூற, அவளும் அவள் புதல்வனை அங்ஙனம் வரவிடத் திரை தருதலின். திரையன் என்று பெயர்பெற்ற கதை கூறினார் என்று குறித்துள்ளார் எனவே, இவ்வரலாற்றானே, திரையர், தொண்டையர் என்னும் பெயர்களானே வழங்கப்படும் அரசர்கள் சோழனாகிய தந்தைக்கும் நாககன்னி யொருத்திக்கும் பிறந்து, கடல் வழியாக வந்து அச்சோழன்பாற் சோழநாட்டின் ஒரு பகுதியாகிய நாட்டைப் பெற்று ஆண்டுவந்த குறுநில மன்னன் மரபினர் ஆவர் என்று கோடல் பொருந்துவதாம்.
இனி, மணிமேகலையில் நெடுமுடிக்கிள்ளி என்பான் ஒரு சோழமன்னன், இளவேனிற் காலத்தே இறும்பூது சான்ற பூநாறு சோலைக்கண் இருந்துழி, அவ்விடத்தே அழகிய பெண்ணொருத்தி காணப்பப்பட்டாள் என்றும், அவளுடைய அழகானே மயங்கி அம்மன்னன் அவளை நயந்து புணர்ந்தான் என்றும் அவள் அம்மன்னனோடே சில பகலிருந்தும், தன்னை யார் என உணர்த்தாமலே அவனறியாவண்ணம் மறைந்து போயினள் என்றும், அவளைக் காணாமையாலே வருந்திய மன்னனை ஒரு சாரணன் கண்டு, அவள் நாகநாட்டரசன் மகள் என்றும், அவள் பெயர் பீலிவளை என்றும் அவள் பிறந்த நாளிலே சோழ மன்னனை மணப்பாள் என ஒரு கணி கூறியிருந்தனன் என்றும் அவள் இனி உன்பால் வரமாட்டாள், உன் மகன் உன்பால் சேர்ப்பிக்கப்படுவன் என்றும், கூறித் தேற்றினானாகக் கூறப் பட்டுள்ள வரலாறு, இத்தொண்டையர் வரலாறே எனக் கோடற் கிழுக்கில்லை.
ஆசிரியர் நச்சினார்க்கினியர் திரைதரு மரபின் உரவோன் உம்பல் என்னும் அடிக்குத் திரைதரு மரபென்றற்கும் தொண்டையோர் என, அம்மரபினர் வழங்கப்படுதற்கும் காரணங் காட்டுதற்கே இக்கதை கூறினர். இஃது இளந்திரையன் முன்னோரில் எந்த மன்னன் திரையன் என்னும் தொண்டைமான் என்றும் பெயர் பெற்றானோ அவன் வரலாறாகவே கூறியிருப்பவும் ரா. இராகவையங்கார் அவர்கள் ஈண்டு நச்சினார்க்கினியர் கூறுவது இப் பாட்டுடைத் தலைவனையே சுட்டுவதாக மயங்கி, இது முரணுடைத்தென்று கூறுகின்றனர். மேலும் தொண்டையோர் குடிக்குரிய வடநாட்டின்கண் வாழ்ந்த துரோணமரபினர் என்று காட்டுதற்கு அவர் பெரிதும் முயல்கின்றார். தண்டமிழ் நாட்டிற்றண்டமிழ்க்குடியாய்ப் பண்டைநாள் தொட்டுக் கண்டிருந்த இத்தொண்டையோர் குடியைத் தமிழ்க்குடியல்லா அயற்குடியினராக்க இம்மறையோர் பெரிதும் முயல்வதை அவர் ஆராய்ச்சி நூல் கண்டு தெளிக.
இனி, பெரும்பாணாற்றுப்படைக்குத் தலைவனாகிய இத்தொண்டைமானிளந்திரையன், மன்னன், வள்ளல் என்னும் சிறப்புக்கள் மட்டுமன்றி, தெள்ளிய நல்லிசைப் புலவனாகவும் திகழந்தான் என்பதனை அவன் பாடிய நற்றிணையில் மூன்றும் புறத்தில் ஒன்றுமாயமைந்த இன்னோசைத் தீம்பாடல்கள் நமக்குத் தெரியக்காட்டுகின்றன. அம் மன்னாகிய நல்லிசைப் புலவன் தன்னனைய பிறமன்னர்க்கு அரசியல் நுணுக்கமொன்றனைச் செவியறிவுறுக்கப் புகுந்து யாத்த புறப்பாட்டைக் கேண்மின்
கால்பார் கோத்து ஞாலத் தியக்கும்
காவற் சாகா டுகைப்போன் மாணின்
ஊறின் றாகி யாறினிது படுமே
உய்த்தல் தேற்றா னாயின் வைகலும்
பகைக்கூ ழள்ளற் பட்டு
மிகப்பஃ றீநோய் தலைத்தலைத் தருமே (புறம் 185)
என்பதாம் இப்பாட்டு எத்துணை அழகிது! எத்துணை இனிது! எத்துணைத் தெளிவுடைத்து! எத்துணை ஆழ்ந்தது! இத்தகைய தீம்பாடலைத் தமிழனத்தே பிறந்து தமிழ்நாட்டிலே வளர்ந்து, தமிழாலே பண்பட்ட தமிழ்மக்களை யல்லால் வடநாட்டிலிருந்து குடியேறிய ஆரிய வகுப்பினர். அவர் எத்தனை தலைமுறை ஈண்டு வாழ்ந்தவரேனும் பாடவல்லுநர் ஆவாரோ உரைமின்!
இம்மன்னன் சோழர் குலத்தினன் ஆதலான் அன்றே அச்சோழர் குலத்துப் பிறமன்னரினும் ஏனைய இரண்டு தமிழ் மன்னரினும் இவன் சிறந்தோன் என்பார்.
மலர்தலை யுலகத்து மன்னுயிர் காக்கும்
முரசுமுழங்கு தானை மூவ ருள்ளும்
இலங்குநீர்ப் பரப்பின் வளைமீக் கூறும்
வலம்புரி யன்ன வசைநீங்கு சிறப்பின்
அல்லது கடிந்த அறம்புரி செங்கோல்
பல்வேற் றிரையன்
எனப் புலவர் உருத்திரங்கண்ணனார் தமிழ்வேந்தர் முக்குடியுள் தோன்றியோருள்ளும் இவன் பெருமை சான்றோன் எனப் புகழ்வாராயினர். இனி, இப்பெரும்பாணாற்றுப்படையில் தமிழ் மூவேந்தருள்ளும் இவன் சிறந்தவன் என்றும், அறம்புரி செங்கோலின் தொண்டையோர் மருகன் என்றும், பகைப்புலத்துக் கொண்டியுண்டியை உடையோர் குலத்தினன் என்றும், காஞ்சியிலிருப்போன் என்றும், கைவண்தோன்றல் என்றும், திருவேங்கடம் உடையான் என்றும். இவனை நயந்தோர் நாடு பொன் பூத்தன என்றும், பகைத்தோர் மன்றம் பாழ்பட்டன என்றும், நயந்தோரும் துப்புக்கொள்ள வேண்டினோரும் அவன் திருமுற்றத்தே செவ்விபெறாதே காத்துக்கிடப்பர் என்றும், இவன் பரிசிலரைக் கண்டவுடன் பரிந்து உடை நல்கி, உண்டி நல்கி, உறையுள் நல்கி, பொற்றாமரை முதலியன சூட்டிப் போற்றி, யானை, தேர், புரவி, அணிகலன் முதலிய சிறந்த பரிசில் நல்குவன் என்றும் நன்கு போற்றப்பட்டுள்ளன. இவனது வேங்கடத்தைப் புலவர் புகழும் முறை மிகவும் இனியதாகும்.
உரைப்பாயிரம்
பண்டைநாள் தமிழ் இலக்கியங்களிலே தலைசிறந்து விளங்குவது பத்துப் பாட்டாகும். இப் பத்துப் பாட்டினுள் நான்காம் பாட்டாக விளங்குவது பெரும்பாணாற்றுப்படை. இதனைப் பாடியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் நல்லிசைப் புலவராவார். இப்பாட்டிற்குத் தலைவனாவான் தொண்டைமான் இளந்திரையன் என்னும் வேந்தன். இவ்வேந்தன், சிறந்த நல்லிசைப் புலவனுமாவன். எனவே இப்பனுவல் ஒரு நல்லிசைப் புலவன். மற்றொரு நல்லிசைப் புலவனுக்கு உவந்து சூட்டிய செய்யுண் மணிமாலையாகின்றது.
முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி- மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து
என்னும் பழைய வெண்பாவால் பத்துப்பாட்டுக்கள் இவை என்பதும், அவையிற்றின் எண்ணுமுறையும் உணரலாம். இப்பத்தும் பாட்டினுள் முருகு, பொருநூறு, பாணிரண்டு, கடாம், என்னும் ஐந்து பாடல்களும் ஆற்றுப்படை என்னும் புறத்திணைத் துறைப்பற்றி எழுந்தவை. அவை அக்காலத்தே வாழ்ந்திருந்த பாவலக்களைப் புகழ்ந்து கூறுவன. அப்புரவலரைப் புகழுமாற்றானே அவர் காலத்து நட்டினியல்பு, மாந்தரியல்பு முதலிய பிறவற்றையும் நன்கு விளக்குபவை செந்தமிழ்ப்பாவின் சிறப்பிற்கு எடுத்துக்காட்டாக இவை இலங்குகின்றன.
அன்பே சிவம். இவ்வன்பு நிறையப் பெற்ற உள்ளமுடையோரே வள்ளல்கள்; தாய்மை உள்ளம் படைத்த இவர் வறுமை முதலியவற்றால் பிறர் வருந்துவதைக் காணப் பெற்றார்! கண்ட வழித் தம்பால் உள்ள பொருளை உள்ளி உள்ளி, அள்ளி அள்ளி வழங்குவர். இப் பண்பு இவர்க்கு இயல்பு. இனி அறிவே கடவுள். இவ்வறிவு நிறைந்த உள்ளமுடையோரே நல்லிசைப் புலவர். இப் புலவர்கள் ஏனையோர்க்கு அறிவுப் பொருளை வழங்குவதனையே தங்கடனாகக் கொள்வர். இவருடைய செயலுண்மையாலே தான் மக்கள் உலகம் மாண்புறுகின்றது. புலவர் இல்லை எனில் இவ்வுலகம் விலங்ககுள் நிறைந்த காடாகவே மாண்பின்றக் கிடக்கும். அறிவு நாட்டமுடையோர் பொருளீட்டுதலில் மனம் பொருந்தி முயலுதலிலர். ஆதலின் புலவர்கள் பெரும் பாலும் நல்கூர்தல் இயல்பாயிற்று. நல்குரவாளரைப் போற்றும் பண்புடைய புரவலர்கள், நல்குரவுடைய புலவரைப் போற்றுவதிற் சிறந்த ஆர்வமுடையராவர். இப்புரவலராற் புலவர்கள் நன்கு போற்றப்படுவர். தம்மைப் போற்றிய புரவலர் தம் புகழுடலைச் செய்ந்நன்றி மறவாத புலவர்கள் தம்முடைய அழியாத இலக்கிய உலகத்தே அழியாத புகழுடலில் நிலைபெற்று வாழும்படி செய்வர். புரவலர்களுக்குப் புகழுடல் படைத்தளிக்கும் துறையே ஆற்றுப்படை என்று கூறப்படும். இத்துறைக்கு ஆசிரியர் தொல்காப்பியனார் தம் தொல்காப்பியப் பெருநூலின் கண் புறப்பொருட் பாடாண்திணை உட்பகுதியில், தாவினல்லிசை என்று தொடங்கும் நூற்பாவில்,
கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச்
சென்றுபயன் எதிரச் சொன்ன பக்கமும்
என இலக்கணம் வகுத்தோதினர். கூத்தராதல், பாணராதல், பொருநராதல், விறலியாதல், ஒரு வள்ளல்பாற் பரிசில் பெற்று வருவாராக, அவர் வருகின்ற வழியில், தம்போற் பரிசிலர் பரிசில் நாடி வருவாரை எதிர்ப்பட்டு இன்ன வள்ளல்பால் யாம் சென்று இத்தகைய சிறந்த பரிசில்பெற்று வருகின்றேம். அவன் இத்தகைய வண்மையுடையோன்; இன்ன ஊரினன்; அவன் இன்னின்ன சிறப்புடையன். அவன்பால் நீயிரும் சென்மின்! சென்று யாம் பெற்ற பேறு பெறுமின்! என்ன, எதிர்வந்தோரை ஆற்றுப் படுத்துவதாகப் பனுவல் இயற்றுதலே ஆற்றுப்படை எனப்படும்.
இவ்வகை யாற்றுப்படையுள், இது பாணன் எதிர்வந்த பாணனை ஆற்றுப்படுத்துவதாக அமைந்திருத்தலின் பாணாற்றுப்படை எனப்பட்டது. இப் பத்துப்பாட்டுள், பாணாற்றுப் படை இரண்டுண்மையால், அவையிற்றை, இடைதெரிந்துணரும் பொருட்டுச் சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை எனச் சிறுமை, பெருமை என்னும் அடைமொழிகளானே வேறுபடுத்து வழங்கினர் நம் சான்றோர். இனி இச் சிறுமை பெருமைகட்கு ஏது பாணர்களிற் சிறுபாணர், பெரும்பாணர் என்னும் வேற்றுமையுடையராதல் என்க. சிறுபாணாற்றுப்படையில் சிறுபாணரும் பெரும்பாணாற்றுப்படையில் பெரும்பாணரும் ஆற்றுப்படுத்தப் படுகின்றனர். சிறுபாணர் என்போர் சிறிய யாழையுடைய பாணர்; பெருபாணர் பேரியாழ் உடையராவார்; இதனை,
இன்குரற் சீறியாழ் இடவயிற் றழீஇ
எனச் சிறுபாணாற்றுப்படையினும்,
இடனுடைப் பேரியாழ் முறையுளிக் கழிப்பி
எனப் பெரும்பாணாற்றுப்படையினும் வருதலாலுணரலாம்.
இனி, சிறுபாணாற்றுப்படை இருநூற்றறுபத் தொன்பது அடிகள் உடைத்தாதலும் பெரும்பாணாற்றுப்படை ஐந்நூறடிகள் உடைத்தாதலும் கண்டுமன்றே! இவ்வடிச் சிறுமை பெருமை ஏதுவாக இவை இங்ஙனம் வழங்கப்பட்டன எனக் கோடலும் பொருந்து மென்க. இப் பெரும்பாணாற்றுப் படையில், யாழின் இயல்பும், இளந்திரையன் செங்கோற் சிறப்பும், உமணர் இயல்பும், எயிற்றியர் இயல்பும், கானவர் தொழிலும், எயினக் குறும்பன் இயல்பும், மறக்குடி மகளர் மாண்பும், ஆயர் ஊரின் இயல்பும், ஆய்மகள் தொழிலும், ஆயர் செயலும், உழுவோர் செயலும், மருதநில மாண்பும், வஞைரிருக்கையும், அந்தணர் சேரியின் இயல்பும், இம் மாந்தர்களின் உணவியல்பும், நீர்ப் பெயர் றென்னும் துறைமுகப்பட்டினத்தின் தன்மையும், கலங்கரை விளக்கச் சிறப்பும், திருமாலின் பெருமையும், திருவெஃகாவின் இயல்பும், காஞ்சியின் மாண்பும், இளந்திரையனின் பெருமையும், அவன் தரும் பரிசிற் சிறப்பும். திருவேங்கடமலையின் கடவுட் பண்பும், பிறவும் கற்போர்க்குக் கண்கூடாகப் பொருள் தோன்றுமாறு அழகாக விரித்து ஓதப்பட்டுள்ளன.
முது வேனிற் பருவம்
அகல் இரு விசும்பில் பாய் இருள் பருகி,
பகல் கான்று, எழுதரு பல் கதிர்ப் பருதி
காய் சினம் திருகிய கடுந் திறல் வேனில்,
யாழ்
பாசிலை ஒழித்த பராஅரைப் பாதிரி
வள் இதழ் மா மலர் வயிற்றிடை வகுத்ததன் 5
உள்ளகம் புரையும் ஊட்டுறு பச்சை;
பரியரைக் கமுகின் பாளை அம் பசும் பூக்
கரு இருந்தன்ன, கண் கூடு செறி துளை;
உருக்கியன்ன, பொருத்துறு போர்வை;
சுனை வறந்தன்ன, இருள் தூங்கு வறு வாய்; 10
பிறை பிறந்தன்ன, பின்ஏந்து கவைக் கடை;
நெடும் பணைத் திரள் தோள் மடந்தை முன்கைக்
குறுந்தொடி ஏய்க்கும், மெலிந்து வீங்கு திவவின்;
மணி வார்ந்தன்ன, மா இரு மருப்பின்;
பொன் வார்ந்தன்ன புரி அடங்க நரம்பின் 15
தொடை அமை கேள்வி இட வயின் தழீஇ,
பாணனது வறுமை
வெந் தெறல் கனலியொடு மதி வலம் திரிதரும்
தண் கடல் வரைப்பில், தாங்குநர்ப் பெறாது,
பொழி மழை துறந்த புகை வேய் குன்றத்துப்
பழுமரம் தேரும் பறவை போல, 20
கல்லென் சுற்றமொடு கால் கிளர்ந்து திரிதரும்
புல்லென் யாக்கைப் புலவு வாய்ப் பாண!
பரிசு பெற்றோன் தன் செல்வ நிலையை எடுத்து உரைத்தல்
பெரு வறம் கூர்நத கானம் கல்லெனக்
கருவி வானம் துளி சொரிந்தாங்கு,
பழம் பசி கூர்ந்த எம் இரும் பேர் ஒக்கலொடு 25
வழங்கத் தவாஅப் பெரு வளன் எய்தி,
வால் உளைப் புரவியொடு வயக் களிறு முகந்துகொண்டு,
யாம் அவணின்றும் வருதும்-
இளந்திரையனின் மாண்பு
நீயிரும்,
இரு நிலம் கடந்த திரு மறு மார்பின்
முந்நீர் வண்ணன் பிறங்கடை, அந் நீர்த் 30
திரை தரு மரபின், உரவோன் உம்பல்,
மலர் தலை உலகத்து மன் உயிர் காக்கும்
முரசு முழங்கு தானை மூவருள்ளும்,
இலங்கு நீர்ப் பரப்பின் வளை மீக்கூறும்
வலம்புரி அன்ன, வசை நீங்கு சிறப்பின், 35
அல்லது கடிந்த அறம் புரி செங்கோல்,
பல் வேல் திரையற் படர்குவிர் ஆயின்;
கேள், அவன் நிலையே; கெடுக நின் அவலம்!
நாட்டின் அறப் பண்பாடு
அத்தம் செல்வோர் அலறத் தாக்கி,
கைப் பொருள் வெளவும் களவு ஏர் வாழ்க்கைக் 40
கொடியோர் இன்று, அவன் கடியுடை வியன் புலம்;
உருமும் உரறாது; அரவும் தப்பா;
காட்டு மாவும் உறுகண் செய்யா; வேட்டு, ஆங்கு,
அசைவுழி அசைஇ, நசைவுழித் தங்கி,
சென்மோ, இரவல! சிறக்க நின் உள்ளம்! 45
உமணர் சகடம்
கொழுஞ் சூட்டு அருந்திய, திருந்து நிலை ஆரத்து,
முழவின் அன்ன முழுமர உருளி,
எழூஉப் புணர்ந்தன்ன பரூஉக் கை நோன் பார்,
மாரிக் குன்றம் மழை சுமந்தன்ன,
ஆரை வேய்ந்த அறை வாய்ச் சகடம் 50
உமண மகளிர் வண்டி ஓட்டுதல்
வேழம் காவலர் குரம்பை ஏய்ப்பக்
கோழி சேக்கும் கூடுடைப் புதவின்,
முளை எயிற்று இரும் பிடி முழந்தாள் ஏய்க்கும்
துளை அரைச் சீறுரல் தூங்கத் தூக்கி,
நாடக மகளிர் ஆடு களத்து எடுத்த 55
விசி வீங்கு இன் இயம் கடுப்பக் கயிறு பிணித்து,
காடி வைத்த கலனுடை மூக்கின்
மகவுடை மகடூஉப் பகடு புறம் துரப்ப
உமணரும் உப்புச் சகடமும்
கோட்டுஇணர் வேம்பின் ஏட்டுஇலை மிடைந்த
படலைக் கண்ணிப் பரு ஏர் எறுழ்த் திணி தோள், 60
முடலை யாக்கை, முழு வலி மாக்கள்
சிறு துளைக் கொடு நுகம் நெறிபட நிரைத்த
பெருங் கயிற்று ஒழுகை மருங்கில் காப்ப,
சில் பத உணவின் கொள்ளை சாற்றி,
பல் எருத்து உமணர் பதி போகு நெடு நெறி 65
வம்பலர்
எல்லிடைக் கழியுநர்க்கு ஏமம் ஆக
மலையவும் கடலவும் மாண் பயம் தரூஉம்
அரும் பொருள் அருத்தும், திருந்து தொடை நோன் தாள்
அடி புதை அரணம் எய்தி, படம் புக்கு
பொரு கணை தொலைச்சிய புண் தீர் மார்பின், 70
விரவு வரிக் கச்சின், வெண் கை ஒள் வாள்,
வரை ஊர் பாம்பின், பூண்டு புடை தூங்க,
சுரிகை நுழைந்த சுற்று வீங்கு செறிவு உடை,
கரு வில் ஓச்சிய கண் அகன் எறுழ்த் தோள்,
கடம்பு அமர் நெடு வேள் அன்ன, மீளி, 75
உடம்பிடித் தடக் கை ஓடா வம்பலர்,
கழுதைச் சாத்து
தடவு நிலைப் பலவின் முழுமுதல் கொண்ட
சிறு சுளைப் பெரும் பழம் கடுப்ப, மிரியல்
புணர்ப் பொறை தாங்கிய வடு ஆழ் நோன் புறத்து
அணர்ச் செவிக் கழுதைச் சாத்தொடு, வழங்கும் 80
உல்குடைப் பெரு வழிக் கவலை காக்கும்
வில்லுடை வைப்பின் வியன் காட்டு இயவின்
எயினர் குரம்பையின் தன்மை
நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த
பூளை அம் பசுங் காய் புடை விரிந்தன்ன
வரிப் புற அணிலொடு, கருப்பை ஆடாது, 85
யாற்று அறல் புரையும் வெரிநுடைக், கொழு மடல்,
வேல் தலை அன்ன வைந் நுதி, நெடுந் தகர்,
ஈத்து இலை வேய்ந்த எய்ப் புறக் குரம்பை
எயிற்றியர் செயல்
மான் தோல் பள்ளி மகவொடு முடங்கி,
ஈன் பிணவு ஒழியப் போகி, நோன் காழ் 90
இரும்பு தலை யாத்த திருந்து கணை விழுக் கோல்
உளி வாய்ச் சுரையின் மிளிர மிண்டி,
இரு நிலக் கரம்பைப் படு நீறு ஆடி,
நுண் புல் அடக்கிய வெண் பல் எயிற்றியர்
பார்வை யாத்த பறை தாள் விளவின் 95
நீழல் முன்றில், நில உரல் பெய்து,
எயிற்றியரின் விருந்தோம்பற் சிறப்பு
குறுங் காழ் உலக்கை ஓச்சி, நெடுங் கிணற்று
வல் ஊற்று உவரி தோண்டி, தொல்லை
முரவு வாய்க் குழிசி முரி அடுப்பு ஏற்றி,
வாராது அட்ட, வாடு ஊன், புழுக்கல் 100
வாடாத் தும்பை வயவர் பெருமகன்,
ஓடாத் தானை, ஒண் தொழில் கழல் கால்,
செவ் வரை நாடன், சென்னியம் எனினே
தெய்வ மடையில் தேக்கிலைக் குவைஇ, நும்
பை தீர் கடும்பொடு பதம் மிகப் பெறுகுவிர். 105
பன்றி வேட்டை
மான் அடி பொறித்த மயங்கு அதர் மருங்கின்,
வான் மடி பொழுதில், நீர் நசைஇக் குழித்த
அகழ் சூழ் பயம்பின் அகத்து ஒளித்து ஒடுங்கி,
புகழா வாகைப் பூவின் அன்ன
வளை மருப்பு ஏனம் வரவு பார்த்திருக்கும் 110
அரை நாள் வேட்டம் அழுங்கின், பகல் நாள்,
குறுமுயல் வேட்டை
பகுவாய் ஞமலியொடு பைம் புதல் எருக்கி,
தொகு வாய் வேலித் தொடர் வலை மாட்டி,
முள் அரைத் தாமரைப் புல் இதழ் புரையும்
நெடுஞ் செவிக் குறு முயல் போக்கு அற வளைஇ, 115
கடுங்கண் கானவர் கடறு கூட்டுண்ணும்
அருஞ் சுரம் இறந்த அம்பர்
கொடுவில் எயினர் குறும்பு
பருந்து பட,
ஒன்னாத் தெவ்வர் நடுங்க, ஓச்சி,
வைந் நுதி மழுங்கிய புலவு வாய் எஃகம்
வடி மணிப் பலகையொடு நிரைஇ, முடி நாண் 120
சாபம் சார்த்திய கணை துஞ்சு வியல் நகர்;
ஊகம் வேய்ந்த உயர் நிலை வரைப்பின்,
வரைத் தேன் புரையும் கவைக் கடைப் புதையொடு
கடுந் துடி தூங்கும் கணைக் கால் பந்தர்,
தொடர் நாய் யாத்த துன் அருங் கடி நகர்; 125
வாழ் முள் வேலிச் சூழ் மிளைப் படப்பை,
கொடு நுகம் தழீஇய புதவின், செந் நிலை
நெடு நுதி வயக் கழு நிரைத்த வாயில்,
கொடு வில் எயினக் குறும்பில் சேப்பின்,
களர் வளர் ஈந்தின் காழ் கண்டன்ன, 130
சுவல் விளை நெல்லின் செவ் அவிழ்ச் சொன்றி,
ஞமலி தந்த மனவுச் சூல் உடும்பின்
வறை கால் யாத்தது, வயின்தொறும் பெறுகுவிர்.
மறவனின் மாண்பு
யானை தாக்கினும், அரவு மேல் செலினும்,
நீல் நிற விசும்பின் வல் ஏறு சிலைப்பினும், 135
சூல் மகள் மாறா மறம் பூண் வாழ்க்கை,
வலிக் கூட்டு உணவின் வாள்குடிப் பிறந்த,
புலிப் போத்து அன்ன, புல் அணல் காளை,
மறவர் செயல்
செல் நாய் அன்ன கரு வில் சுற்றமொடு,
கேளா மன்னர் கடி புலம் புக்கு, 140
நாள் ஆ தந்து, நறவு நொடை தொலைச்சி,
இல அடு கள் இன் தோப்பி பருகி,
மல்லல் மன்றத்து மத விடை கெண்டி,
மடி வாய்த் தண்ணுமை நடுவண் சிலைப்பச்,
சிலை நவில் எறுழ்த் தோள் ஓச்சி, வலன் வளையூஉ, 145
பகல் மகிழ் தூங்கும் தூங்கா இருக்கை
முரண் தலை கழிந்த பின்றை
கோவலர் குடியிருப்பு
மறிய
குளகு அரை யாத்த குறுங் கால், குரம்பை,
செற்றை வாயில், செறி கழிக் கதவின்,
கற்றை வேய்ந்த கழித் தலைச் சாம்பின், 150
அதளோன் துஞ்சும் காப்பின் உதள,
நெடுந் தாம்பு தொடுத்த குறுந் தறி முன்றில்,
கொடு முகத் துருவையொடு வெள்ளை சேக்கும்
இடு முள் வேலி எருப் படு வரைப்பின்,
கோவலர் மகளிரின் செயல்
நள் இருள் விடியல் புள் எழப் போகி 155
புலிக் குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி,
ஆம்பி வால் முகை அன்ன கூம்பு முகிழ்
உறை அமை தீம் தயிர் கலக்கி, நுரை தெரிந்து,
புகர் வாய்க் குழிசி பூஞ் சுமட்டு இரீஇ
நாள் மோர் மாறும் நல் மா மேனி, 160
சிறு குழை துயல்வரும் காதின், பணைத் தோள்,
குறு நெறிக் கொண்ட கூந்தல், ஆய் மகள்
அளை விலை உணவின் கிளை உடன் அருத்தி,
நெய் விலைக் கடடிப் பசும் பொன் கொள்ளாள்,
எருமை, நல் ஆன், கரு நாகு பெறூஉம் 165
மடி வாய்க் கோவலர் குடிவயின் சேப்பின்,
இருங் கிளை ஞெண்டின் சிறு பார்ப்பு அன்ன
பசுந் தினை மூரல் பாலொடும் பெறுகுவிர்.
இடையன் இயல்பு
தொடுதோல் மரீஇய வடு ஆழ் நோன் அடி,
விழுத் தண்டு ஊன்றிய மழுத் தின் வன் கை, 170
உறிக் கா ஊர்ந்த மறுப் படு மயிர்ச் சுவல்,
மேம் பால் உரைத்த ஓரி, ஓங்கு மிசைக்
கோட்டவும் கொடியவும் விரைஇ, காட்ட
பல் பூ மிடைந்த படலைக் கண்ணி,
ஒன்று அமர் உடுக்கை, கூழ் ஆர் இடையன் 175
இடை மகனின் அக அழகு
கன்று அமர் நிரையொடு கானத்து அல்கி,
அம் நுண் அவிர் புகை கமழ, கைம் முயன்று
ஞெலிகோல் கொண்ட பெரு விரல் ஞெகிழிச்
செந் தீத் தோட்ட கருந் துளைக் குழலின்
இன் தீம் பாலை முனையின், குமிழின் 180
புழற் கோட்டுத் தொடுத்த மரல் புரி நரம்பின்
வில் யாழ் இசைக்கும், விரல் எறி, குறிஞ்சி,
பல்கால் பறவை கிளை செத்து, ஓர்க்கும்
புல் ஆர் வியன் புலம் போகி
முல்லை நில சீறூர் மாண்பு
முள் உடுத்து
எழு காடு ஓங்கிய தொழுவுடை வரைப்பில் 185
பிடிக்கணத்து அன்ன குதிருடை முன்றில்,
களிற்றுத் தாள் புரையும் திரி மரப் பந்தர்,
குறுஞ் சாட்டு உருளையொடு கலப்பை சார்த்தி
நெடுஞ் சுவர் பறைந்த புகை சூழ் கொட்டில்,
பருவ வானத்துப் பா மழை கடுப்பக் 190
கரு வை வேய்ந்த, கவின் குடிச் சீறூர்
நெடுங் குரல் பூளைப் பூவின் அன்ன,
குறுந் தாள் வரகின் குறள் அவிழ்ச் சொன்றி,
புகர் இணர் வேங்கை வீ கண்டன்ன,
அவரை வான் புழுக்கு அட்டி, பயில்வுற்று, 195
இன் சுவை மூரல் பெறுகுவிர்
மருத நிலத்தைச் சேர்ந்த முல்லைநிலம்
ஞாங்கர்க்
குடி நிறை வல்சிச் செஞ் சால் உழவர்
நடை நவில் பெரும் பகடு புதவில் பூட்டி,
பிடி வாய் அன்ன மடி வாய் நாஞ்சில்
உடுப்பு முக முழுக் கொழு மூழ்க ஊன்றி, 200
தொடுப்பு எறிந்து உழுத துளர் படு துடவை
அரி புகு பொழுதின், இரியல் போகி,
வண்ணக் கடம்பின் நறு மலர் அன்ன
வளர் இளம் பிள்ளை தழீஇ, குறுங் கால்
கறை அணல் குறும்பூழ், கட்சிச் சேக்கும் 205
வன் புலம் இறந்த பின்றை
மருத நிலக் கழனிகளில் காணும் காட்சிகள்
நாற்று நடுதல்
மென் தோல்
மிதி உலைக் கொல்லன் முறி கொடிற்றன்ன
கவைத் தாள் அலவன் அளற்று அளை சிதைய,
பைஞ் சாய் கொன்ற மண் படு மருப்பில்
கார் ஏறு பொருத கண் அகன் செறுவின், 210
உழாஅ நுண் தொளி நிரவிய வினைஞர்
முடி நாறு அழுத்திய நெடு நீர்ச் செறுவில்,
நெல் விளைதற் சிறப்பு
களைஞர் தந்த கணைக் கால் நெய்தல்
கள் கமழ் புதுப் பூ முனையின், முள் சினை
முகை சூழ் தகட்ட பிறழ் வாய் முள்ளிக் 215
கொடுங் கால் மா மலர் கொய்து கொண்டு, அவண
பஞ்சாய்க் கோரை பல்லின் சவட்டி,
புணர் நார்ப் பெய்த புனைவு இன் கண்ணி
ஈருடை இருந் தலை ஆரச் சூடி,
பொன் காண் கட்டளை கடுப்ப, கண்பின் 220
புன் காய்ச் சுண்ணம் புடைத்த மார்பின்,
இரும்பு வடித்தன்ன மடியா மென் தோல்,
கருங் கை வினைஞர் காதல் அம் சிறாஅர்
பழஞ் சோற்று அமலை முனைஇ, வரம்பில்
புது வை வேய்ந்த கவி குடில் முன்றில் 225
அவல் எறி உலக்கைப் பாடு விறந்து, அயல
கொடு வாய்க் கிள்ளை படு பகை வெரூஉம்,
நீங்கா யாணர், வாங்கு கதிர்க் கழனி
நெல் அரிந்து கடா விடுதல்
கடுப்புடைப் பறவைச் சாதி அன்ன,
பைது அற விளைந்த பெருஞ் செந்நெல்லின் 230
தூம்புடைத் திரள் தாள் துமித்த வினைஞர்
பாம்பு உறை மருதின் ஓங்கு சினை நீழல்,
பலி பெறு வியன் களம் மலிய ஏற்றி,
கணம் கொள் சுற்றமொடு கை புணர்ந்து ஆடும்
துணங்கை அம் பூதம் துகில் உடுத்தவை போல், 235
சிலம்பி வால் நூல் வலந்த மருங்கின்
குழுமு நிலைப் போரின் முழு முதல் தொலைச்சி,
பகடு ஊர்பு இழிந்த பின்றை, துகள் தப,
வையும் துரும்பும் நீக்கி, பைது அற,
குட காற்று எறிந்த குப்பை, வட பால் 240
செம்பொன் மலையின், சிறப்பத் தோன்றும்
தண் பணை தழீஇய தளரா இருக்கை
உழவரின் இல்லச் சிறப்பு
பகட்டு ஆ ஈன்ற கொடு நடைக் குழவிக்
கவைத் தாம்பு தொடுத்த காழ் ஊன்று அல்குல்,
ஏணி எய்தா நீள் நெடு மார்பின், 245
முகடு துமித்து அடுக்கிய பழம் பல் உணவின்,
குமரி மூத்த கூடு ஓங்கு நல் இல்,
உழவரின் மக்கட் சிறப்பு
தச்சச் சிறாஅர் நச்சப் புனைந்த
ஊரா நல் தேர் உருட்டிய புதல்வர்
தளர் நடை வருத்தம் வீட, அலர் முலைச் 250
செவிலி அம் பெண்டிர்த் தழீஇ, பால் ஆர்ந்து,
அமளித் துஞ்சும் அழகுடை நல் இல்;
உழவர் விருந்தோம்பல் சிறப்பு
தொல் பசி அறியாத் துளங்கா இருக்கை
மல்லல் பேர் ஊர் மடியின், மடியா
வினைஞர் தந்த வெண்ணெல் வல்சி 255
மனை வாழ் அளகின் வாட்டொடும் பெறுகுவிர்.
ஆலைகளில் கருப்பஞ் சாறும் கட்டியும் அருந்துதல்
மழை விளையாடும் கழை வளர் அடுக்கத்து
அணங்குடை யாளி தாக்கலின், பல உடன்
கணம் சால் வேழம் கதழ்வுற்றாஅங்கு,
எந்திரம் சிலைக்கும் துஞ்சாக் கம்பலை 260
விசயம் அடூஉம் புகை சூழ் ஆலைதொறும்,
கரும்பின் தீம் சாறு விரும்பினிர் மிசைமின்,
கொடுமுடி வலைஞர் குடிச்சிறப்பு
வேழம் நிரைத்து, வெண் கோடு விரைஇ,
தாழை முடித்து, தருப்பை வேய்ந்த
குறியிறைக் குரம்பை, பறியுடை முன்றில், 265
கொடுங் கால் புன்னைக் கோடு துமித்து இயற்றிய
பைங் காய் தூங்கும் பாய் மணல் பந்தர்,
இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி,
புலவு நுனைப் பகழியும் சிலையும் மான,
செவ் வரிக் கயலொடு பச்சிறாப் பிறழும் 270
மை இருங் குட்டத்து மகவொடு வழங்கி,
கோடை நீடினும் குறைபடல் அறியாத்
தோள் தாழ் குளத்த கோடு காத்திருக்கும்
கொடு முடி வலைஞர் குடி வயின் சேப்பின்
வலைஞர் குடியில் பெறும் உணவு
அவையா அரிசி அம் களித் துழவை 275
மலர் வாய்ப் பிழாவில் புலர ஆற்றி,
பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும்
பூம் புற நல் அடை அளைஇ, தேம் பட
எல்லையும் இரவும் இரு முறை கழிப்பி,
வல் வாய்ச் சாடியின் வழைச்சு அற விளைந்த, 280
வெந் நீர் அரியல் விரல் அலை, நறும் பிழி,
தண் மீன் சூட்டொடு, தளர்தலும் பெறுகுவிர்.
காலையில் நீர்ப்பூக்களைச் சூடிப் போதல்
பச்சூன் பெய்த சுவல் பிணி பைந் தோல்,
கோள் வல், பாண்மகன் தலை வலித்து யாத்த
நெடுங் கழைத் தூண்டில் நடுங்க நாண் கொளீஇ, 285
கொடு வாய் இரும்பின் மடி தலை புலம்ப,
பொதி இரை கதுவிய போழ் வாய் வாளை
நீர் நணிப் பிரம்பின் நடுங்கு நிழல் வெரூஉம்
நீத்துடை நெடுங் கயம் தீப் பட மலர்ந்த
கடவுள் ஒண் பூ அடைதல் ஓம்பி, 290
சூடத் தகும் பூ
உறை கால் மாறிய ஓங்கு உயர் நனந் தலை
அகல் இரு வானத்துக் குறை வில் ஏய்ப்ப,
அரக்கு இதழ்க் குவளையொடு நீலம் நீடி,
முரண் பூ மலிந்த முது நீர்ப் பொய்கை,
குறுநர் இட்ட கூம்பு விடு பன் மலர் 295
பெரு நாள் அமையத்துப் பிணையினிர் கழிமின்,
அந்தணர் இல்லத்தின் அமைதி
செழுங் கன்று யாத்த சிறு தாள் பந்தர்,
பைஞ் சேறு மெழுகிய படிவ நல் நகர்,
மனை உறை கோழியொடு ஞமலி துன்னாது,
வளை வாய்க் கிள்ளை மறை விளி பயிற்றும் 300
மறை காப்பாளர் உறை பதிச் சேப்பின்
அந்தணர் விருந்தோம்பும் சிறப்பு
பெரு நல் வானத்து வடவயின் விளங்கும்
சிறு மீன் புரையும் கற்பின், நறு நுதல்,
வளைக் கை மகடூஉ வயின் அறிந்து அட்ட,
சுடர்க்கடை, பறவைப் பெயர்ப் படு வத்தம், 305
சேதா நறு மோர் வெண்ணெயின் மாதுளத்து
உருப்புறு பசுங் காய்ப் போழொடு கறி கலந்து,
கஞ்சக நறு முறி அளைஇ, பைந் துணர்
நெடு மரக் கொக்கின் நறு வடி விதிர்த்த
தகை மாண் காடியின், வகைபடப் பெறுகுவிர். 310
நீர்ப்பெயற்று என்னும் துறைமுகப்பட்டினம்
வண்டல் ஆயமொடு உண்துறைத் தலைஇ,
புனல் ஆடு மகளிர் இட்ட பொலங் குழை
இரை தேர் மணிச் சிரல் இரை செத்து எறிந்தென,
புள் ஆர் பெண்ணைப் புலம்பு மடல் செல்லாது,
கேள்வி அந்தணர் அருங் கடன் இறுத்த 315
வேள்வித் தூணத்து அசைஇ, யவனர்
ஓதிம விளக்கின், உயர்மிசைக் கொண்ட,
வைகுறு மீனின், பைபயத் தோன்றும்
நீர்ப்பெயற்று எல்லைப் போகி
திமிலர் முதலியோர் உறையும் பட்டினம்
பால்கேழ்
வால் உளைப் புரவியொடு வட வளம் தரூஉம் 320
நாவாய் சூழ்ந்த நளி நீர்ப் படப்பை,
மாடம் ஓங்கிய மணல் மலி மறுகின்,
பரதர் மலிந்த பல் வேறு தெருவின்,
சிலதர் காக்கும் சேண் உயர் வரைப்பின்,
நெல் உழு பகட்டொடு கறவை துன்னா, 325
ஏழகத் தகரோடு எகினம் கொட்கும்
கூழ் உடை நல் இல் கொடும் பூண் மகளிர்,
மகளிர் இயல்பு
கொன்றை மென் சினைப் பனி தவழ்பவை போல்,
பைங் காழ் அல்குல் நுண் துகில் நுடங்க,
மால் வரைச் சிலம்பில் மகிழ் சிறந்து ஆலும் 330
பீலி மஞ்ஞையின் இயலி, கால
தமனியப் பொற்சிலம்பு ஒலிப்ப, உயர் நிலை
வான் தோய் மாடத்து, வரிப் பந்து அசைஇ,
கை புனை குறுந் தொடி தத்த, பைபய,
முத்த வார் மணல் பொற்கழங்கு ஆடும் 335
பட்டின மருங்கின் அசையின்
பட்டினத்து மக்களின் உபசரிப்பு
முட்டு இல்,
பைங் கொடி நுடங்கும் பலர் புகு வாயில்
செம் பூத் தூஉய செதுக்குடை முன்றில்,
கள் அடு மகளிர் வள்ளம் நுடக்கிய
வார்ந்து உகு சில் நீர் வழிந்த குழம்பின் 340
ஈர்ஞ் சேறு ஆடிய இரும் பல் குட்டிப்
பல் மயிர்ப் பிணவொடு பாயம் போகாது,
நெல் மா வல்சி தீற்றி, பல் நாள்
குழி நிறுத்து, ஓம்பிய குறுந் தாள் ஏற்றைக்
கொழு நிணத் தடியொடு கூர் நறாப் பெறுகுவிர். 345
ஓடும் கலங்களை அழைக்கும் கடற்கரைத் துறை
வானம் ஊன்றிய மதலை போல,
ஏணி சாத்திய ஏற்று அருஞ் சென்னி,
விண் பொர நிவந்த, வேயா மாடத்து
இரவில் மாட்டிய இலங்கு சுடர் ஞெகிழி
உரவு நீர் அழுவத்து ஓடு கலம் கரையும் 350
துறை பிறக்கு ஒழியப் போகி
தண்டலை உழவர் தனிமனைச் சிறப்பு
கறை அடிக்
குன்று உறழ் யானை மருங்குல் ஏய்க்கும்,
வண் தோட்டுத் தெங்கின் வாடு மடல் வேய்ந்த,
மஞ்சள் முன்றில், மணம் நாறு படப்பை,
தண்டலை உழவர் தனி மனைச் சேப்பின் 355
தண்டலை உழவர் விருந்தோம்பற் சிறப்பு
தாழ் கோள் பலவின் சூழ் சுளைப் பெரும் பழம்,
வீழ் இல் தாழைக் குழவித் தீம் நீர்,
கவை முலை இரும் பிடிக் கவுள் மருப்பு ஏய்க்கும்
குலை முதிர் வாழைக் கூனி வெண் பழம்,
திரள் அரைப் பெண்ணை நுங்கொடு, பிறவும், 360
தீம் பல் தாரம் முனையின், சேம்பின்
முளைப் புற முதிர் கிழங்கு ஆர்குவிர் பகற் பெயல்
ஆற்றினது இயல்பு
மழை வீழ்ந்தன்ன மாத் தாள் கமுகின்
புடை சூழ் தெங்கின் முப் புடைத் திரள் காய்,
ஆறு செல் வம்பலர் காய் பசி தீரச் 365
சோறு அடு குழிசி இளக, விழூஉம்
வீயா யாணர் வளம் கெழு பாக்கத்து,
பல் மரம் நீள் இடைப் போகி, நல் நகர்,
விண் தோய் மாடத்து விளங்கு சுவர் உடுத்த,
வாடா வள்ளியின் வளம் பல தரூஉம் 370
நாடு பல கழிந்த பின்றை
திருவெஃகாவின் சிறப்பும் திருமால் வழிபாடும்
நீடு குலைக்
காந்தள் அம் சிலம்பில் களிறு படிந்தாங்கு,
பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன் ஆங்கண்,
வெயில் நுழைபு அறியா, குயில் நுழை பொதும்பர்,
குறுங் கால் காஞ்சி சுற்றிய நெடுங் கொடிப் 375
பாசிலைக் குருகின் புன் புற வரிப் பூ,
கார் அகல் கூவியர் பாகொடு பிடித்த
இழை சூழ் வட்டம் பால் கலந்தவை போல்,
நிழல் தாழ் வார் மணல் நீர் முகத்து உறைப்ப,
புனல் கால் கழீஇய பொழில்தொறும், திரள்கால் 380
சோலைக் கமுகின் சூல் வயிற்றன்ன
நீலப் பைங் குடம் தொலைச்சி, நாளும்
பெரு மகிழ் இருக்கை மரீஇ; சிறு கோட்டுக்
குழவித் திங்கள் கோள் நேர்ந்தாங்கு,
சுறவு வாய் அமைத்த சுரும்பு சூழ் சுடர் நுதல், 385
நறவு பெயர்த்து அமைத்த நல் எழில் மழைக் கண்,
மடவரல் மகளிரொடு பகல் விளையாடி;
பூமலி பெருந்துறை
பெறற்கு அருந் தொல் சீர்த் துறக்கம் ஏய்க்கும்
பொய்யா மரபின் பூ மலி பெருந் துறை,
செவ்வி கொள்பவரோடு அசைஇ; அவ் வயின் 390
அருந் திறல் கடவுள் வாழ்த்தி, சிறிது நும்
கருங் கோட்டு இன் இயம் இயக்கினிர் கழிமின்
கோபுர வாயிற் சிறப்பு
காழோர் இகழ் பதம் நோக்கி, கீழ,
நெடுங் கை யானை நெய்ம் மிதி கவளம்
கடுஞ்சூல் மந்தி கவரும் காவில், 395
களிறு கதன் அடக்கிய வெளிறு இல் கந்தின்,
திண் தேர் குழித்த குண்டு நெடுந் தெருவில்,
படை தொலைபு அறியா மைந்து மலி பெரும் புகழ்,
கடை கால்யாத்த பல் குடி கெழீஇக்
கொடையும் கோளும், வழங்குநர்த் தடுத்த 400
அடையா வாயில், மிளை சூழ் படப்பை,
காஞ்சி மாநகர் மாண்பு
நீல் நிற உருவின் நெடியோன் கொப்பூழ்
நான்முக ஒருவற் பயந்த பல் இதழ்த்
தாமரைப் பொகுட்டின் காண்வரத் தோன்றி,
சுடுமண் ஓங்கிய நெடு நகர் வரைப்பின், 405
இழுமென் புள்ளின் ஈண்டு கிளைத் தொழுதிக்
கொழு மென் சினைய கோளியுள்ளும்
பழம் மீக் கூறும் பலாஅப் போல,
புலவக் கடல் உடுத்த வானம் சூடிய
மலர் தலை உலகத் துள்ளும் பலர் தொழ, 410
விழவு மேம்பட்ட பழ விறல் மூதூர்
இளந்திரையனின் போர் வெற்றி
அவ் வாய் வளர் பிறை சூடிச் செவ் வாய்
அந்தி வானத்து ஆடு மழை கடுப்ப,
வெண் கோட்டு இரும் பிணம் குருதி ஈர்ப்ப,
ஈர் ஐம்பதின்மரும், பொருது, களத்து அவிய, 415
பேர் அமர்க் கடந்த கொடுஞ்சி நெடுந் தேர்
ஆராச் செருவின் ஐவர் போல,
அடங்காத் தானையோடு உடன்று மேல்வந்த
ஒன்னாத் தெவ்வர் உலைவிடத்து ஆர்த்து,
கச்சியோனே, கை வண் தோன்றல், 420
அரசனது முற்றச் சிறப்பு
நச்சிக் சென்றோர்க்கு ஏமம் ஆகிய
அளியும் தெறலும் எளியஆகலின்,
மலைந்தோர் தேஎம் மன்றம் பாழ் பட,
நயந்தோர் தேஎம் நன் பொன் பூப்ப,
நட்புக் கொளல் வேண்டி, நயந்திசினோரும், 425
துப்புக் கொளல் வேண்டிய துணையிலோரும்,
கல் வீழ் அருவி கடல் படர்ந்தாங்கு,
பல் வேறு வகையின் பணிந்த மன்னர்
இமையவர் உறையும் சிமையச் செவ் வரை,
வெண் திரை கிழித்த, விளங்கு சுடர் நெடுங் கோட்டுப் 430
பொன் கொழித்து இழிதரும், போக்கு அருங் கங்கைப்
பெரு நீர் போகும் இரியல் மாக்கள்
ஒரு மரப் பாணியில் தூங்கியாங்கு
தொய்யா வெறுக்கையொடு துவன்றுபு குழீஇ,
செவ்வி பார்க்கும் செழு நகர் முற்றத்து, 435
அரண்மனைச் சிறப்பு
பெருங் கை யானைக் கொடுந் தொடி படுக்கும்
கருங் கைக் கொல்லன் இரும்பு விசைத்து எறிந்த
கூடத் திண் இசை வெரீஇ, மாடத்து
இறை உறை புறவின் செங் கால் சேவல்,
இன் துயில் இரியும் பொன் துஞ்சு வியல் நகர் 440
இளந்திரையன் அரசிருக்கைச் சிறப்பு
குண கடல் வரைப்பின் முந்நீர் நாப்பண்
பகல் செய் மண்டிலம் பாரித்தாங்கு,
முறை வேண்டுநர்க்கும், குறை வேண்டுநர்க்கும்,
வேண்டுப வேண்டுப வேண்டினர்க்கு அருளி,
இடைத் தெரிந்து உணரும் இருள் தீர் காட்சி, 445
கொடைக் கடன் இறுத்த கூம்பா உள்ளத்து,
உரும்பு இல் சுற்றமோடு இருந்தோற் குறுகி,
பாணன் அரசனைப் போற்றிய வகை
பொறி வரிப் புகர்முகம் தாக்கிய வய மான்
கொடு வரிக் குருளை கொள வேட்டாங்கு,
புலவர் பூண் கடன் ஆற்றி, பகைவர் 450
கடி மதில் எறிந்து குடுமி கொள்ளும்
வென்றி அல்லது, வினை உடம்படினும்,
ஒன்றல் செல்லா உரவு வாள் தடக் கை,
கொண்டி உண்டி, தொண்டையோர் மருக!
மள்ளர் மள்ள! மறவர் மறவ! 455
செல்வர் செல்வ! செரு மேம் படுந!
வெண் திரைப் பரப்பின் கடுஞ் சூர் கொன்ற
பைம் பூண் சேஎய் பயந்த மா மோட்டு,
துணங்கை அம் செல்விக்கு அணங்கு நொடித்தாங்கு,
தண்டா ஈகை நின் பெரும் பெயர் ஏத்தி, 460
வந்தேன், பெரும! வாழிய நெடிது! என,
இடனுடைப் பேர் யாழ் முறையுளிக் கழிப்பி,
கடன் அறி மரபின் கைதொழூஉப் பழிச்சி,
நின் நிலை தெரியா அளவை அந் நிலை
பாணர்க்கு விருப்புடன் உணவளித்தல்
நாவல் அம் தண் பொழில் வீவு இன்று விளங்க, 465
நில்லா உலகத்து நிலைமை தூக்கி,
அந் நிலை அணுகல் வேண்டி, நின் அரைப்
பாசி அன்ன சிதர்வை நீக்கி,
ஆவி அன்ன அவிர் நூல் கலிங்கம்
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் உடீஇ, 470
இரவலரை ஊட்டுதற் சிறப்பு
கொடு வாள் கதுவிய வடு ஆழ் நோன் கை
வல்லோன் அட்ட பல் ஊன் கொழுங் குறை,
அரி செத்து உணங்கிய பெருஞ் செந்நெல்லின்
தெரி கொள் அரிசித் திரள் நெடும் புழுக்கல்,
அருங் கடித் தீம் சுவை அழுதொடு, பிறவும், 475
விருப்புடை மரபில் கரப்புடை அடிசில்,
மீன் பூத்தன்ன வான் கலம் பரப்பி,
மகமுறை, மகமுறை நோக்கி, முகன் அமர்ந்து,
ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி,
பரிசிற் சிறப்பு
மங்குல் வானத்துத் திங்கள் ஏய்க்கும் 480
ஆடு வண்டு இமிரா அழல் அவிர் தாமரை
நீடு இரும் பித்தை பொலியச் சூட்டி;
உரவுக் கடல் முகந்த பருவ வானத்துப்
பகற் பெயல் துளியின் மின்னு நிமிர்ந்தாங்கு,
புனை இருங் கதுப்பகம் பொலிய, பொன்னின் 485
தொடை அமை மாலை விறலியர் மலைய;
பரிசில் தரும் தேர்ச் சிறப்பு
நூலோர் புகழ்ந்த மாட்சிய, மால் கடல்
வளை கண்டன்ன வால் உளைப் புரவி,
துணை புணர் தொழில், நால்கு உடன் பூட்டி,
அரித் தேர் நல்கியும் அமையான், செருத் தொலைத்து 490
பரிசில் நீட்டியாப் பண்புடைமை
ஒன்னாத் தெவ்வர் உலைவிடத்து ஒழித்த
விசும்பு செல் இவுளியொடு பசும் படை தரீஇ,
அன்றே விடுக்கும் அவன் பரிசில், இன் சீர்க்
கின்னரம் முரலும் அணங்குடைச் சாரல்,
தொண்டைமான் இளந்திரையன்
மஞ்ஞை ஆலும் மரம் பயில் இறும்பின், 495
கலை பாய்ந்து உதிர்த்த மலர் வீழ் புறவின்,
மந்தி சீக்கும் மா துஞ்சு முன்றில்,
செந் தீப் பேணிய முனிவர், வெண் கோட்டுக்
களிறு தரு விறகின் வேட்கும்,
ஒளிறு இலங்கு அருவிய மலைகிழவோனே. 500
தனிப் பாடல்
கங்குலும் நண் பகலும் துஞ்சா இயல்பிற்றாய்,
மங்குல் சூல் மாக் கடல் ஆர்ப்பதூஉம் - வெஞ் சினவேல்
கான் பயந்த கண்ணிக் கடு மான் திரையனை
யான் பயந்தேன் என்னும் செருக்கு.
Was this helpful? |
புராணங்கள் |
மகாபாரதம் |
ராமாயணம் |
பகவத் கீதை |
இலக்கியம் |
பன்னிரு திருமுறைகள் |
நாலாயிர திவ்ய பிரபந்தம் |
நாயன்மார்கள் |
ஆழ்வார்கள் |
ரிஷிகள் |
மகான்கள் |
சித்தர்கள் |
தமிழில் சமஸ்கிருத சுலோகங்கள் |
தித்திக்கும் தேவாரம் |
Join Membership |
Book Store |
Astrology |
Radio |