இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


பிறையணி படர்சடை

பிறையணி படர்சடை

பதிக எண்: 1.19. கழுமலம் நட்டபாடை

பின்னணி:

பிறையணி படர்சடை (1.019) பின்னணி மற்றும் பாடல் 1 (திதே 0325)

அப்பர் பிரான் திருஞான சம்பந்தரிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு பல சோழ நாட்டுத் தலங்களை தரிசிப்பதற்கு சென்ற பின்னர், திருஞான சம்பந்தர் பல நாட்கள் சீர்காழி தலத்தில் தங்கியிருந்து பல வித்தியாசமான பதிகங்கள் பாடினார் என்பதை நாம் பெரிய புராணத்திலிருந்து உணர்கின்றோம். மொழிமாற்று, மாலைமாற்று, திருவெழுகூற்றிருக்கை. ஏகபாதம், ஈரடி மேல் வைப்பு, நாலடிமேல் வைப்பு, திருவிருக்குக்குறள், ஈரடி, வழிமொழி விராகம் ஆகிய வகைகளில் பல பதிகங்கள் இயற்றினார். இந்த பதிகங்களில் பல பதிகங்களை நாம் இதுவரை சிந்தித்தோம். அத்தகைய பதிகங்களில் ஒரு வகை தான் முடுகும் இராகம் எனப்படும் வகையில் உள்ள பதிகம். இந்த வகைப் பாடல்களை திருஞான சம்பந்தர் பாடினார் என்று குறிப்பிடும் பெரிய புராணப் பாடலையும் நான் இங்கே காண்போம். சுரருலகு நரர்கள் என்று தொடங்கும் பிரமாபுரத்து பதிகம், வழிமொழி இராகம் என்று குறிப்பிடப் படுகின்றது.

விண்ணவர் தொழுதெழு என்று தொடங்கும் பதிகம் முக்கால் என்று குறிப்பிடப் படுகின்றது. முடுகு இராகம் என்று சேக்கிழார் குறிப்பிட்டதன் பின்னணியை முதலில் காண்போம். முடுகுதல் என்றால் வேகம் என்று பொருள். வேகமான நடை கொண்ட பண்ணில் பாடப்பட்டுள்ள பதிகம் இந்த பதிகம். நடை=ஓசை; முடுகும்=விரைவு; நெடில் எழுத்துகள் நீண்ட ஓசையினை அளிக்கும் என்பதை நாம் அறிவோம். அதிகமான நெடில் எழுத்துகளை கலக்காது, குறில் எழுத்துகளை அதிகமாக பயன்படுத்தி, அடுத்தடுத்த சீர்களுக்கு இடையே இடைவெளி இன்றி, பாடப்படும் பாடல்கள், நடையின் முடுகும் இராகம் என்று குறிப்பிடப் படுகின்றது என்று தருமபுரம் ஆதீனக் குறிப்பு உணர்த்துகின்றது. முன்னிய கலைப் பொருளும் (2.29) சங்கமரு முன்கை (3.81) பெண்ணியல் உருவினர் (3.84) எந்தமது சிந்தை (3.75) பிறையணி படர்சடை (1.19) என்று தொடங்கும் சீர்காழி தலத்தின் மீது அருளப்பட்ட திருப்பதிகங்கள் முடுகும் இராக வகையைச் சார்ந்தவை என்று கருதப் படுகின்றன. முன்னிய கலைப் பொருளும் என்று தொடங்கும் பதிகத்தினையும் (2.29) பெண்ணியல் உருவினர் என்று தொடங்கும் பதிகத்தினையும் (3.84) எந்தமது சிந்தை பிரியாத என்று தொடங்கும் பதிகத்தையும் (3.75) சங்கமரு முன்கை (3.81) என்று தொடங்கும் பதிகத்தையும் நாம் ஏற்கனவே சிந்தித்தோம். முடுகு இராகம் என்று குறிப்பிடும் சேக்கிழாரின் பெரிய புராணப் பாடலை நாம் இங்கே காண்போம்.

நாலடி மேல் வைப்பு மேன்மை நடையின் முடுகும் இராகம்

சால்பினில் சக்கரம் ஆதி விகற்பங்கள் சாற்றும் பதிக

மூல இலக்கியமாக எல்லாப் பொருட்களும் உற்ற

ஞாலத்து உயர் காழியாரைப் பாடினர் ஞானசம்பந்தர்

இதே வரிசையில் வருகின்ற மற்றொரு பதிகம் தான் பிறையணி படர் சடை என்று தொடங்கும் பதிகம் (1.019) தான். நாம் இப்போது சிந்திக்கவிருக்கும் இந்த பதிகம். இந்த பதிகம் வேறொரு சிறப்பினையும் உடையது. இந்த பதிகத்தின் நான்காவது அடியில் உள்ள கடைச் சொல்லின் கடை எழுத்தினைத் தவிர வேறெங்கும் நெடிலெழுத்தே வருவதில்லை. மற்ற அனைத்து எழுத்துக்களும் குறில் எழுத்துக்கள் உள்ளன. இவ்வாறு நான்கு பதிகங்கள் உள்ளன. தடநிலவிய மலை என்று தொடங்கும் வீழிமிழலைப் பதிகம் (1.20), புவம்வளிகனல் என்று தொடங்கும் சிவபுரம் பதிகம் (1.21) மற்றும் சிலைதனை நிறுவி என்று தொடங்கும் திருமறைக்காடு பதிகம் (1.22) ஆகியவை மற்ற மூன்று பதிகங்கள்.

இந்த நான்கு பதிகங்களிலும் ஐ என்ற உயிரெழுத்துடன் இணைந்த பல உயிர்மெய் எழுத்துக்கள் வருவதை நாம் காணலாம். ஐ என்ற உயிரெழுத்து நெடிலாக கருதப் பட்டாலும் தனியாக வரும்போது மட்டுமே இரண்டு மாத்திரை அளவுடன் உச்சரிக்கப் படுகின்றது. ஐ என்ற இழுத்து தனியாக வரும் போது மட்டுமே இரண்டு மாத்திரைகள் கொண்டது என்றும், ஐகாரம் ஒரு சொல்லின் முதலில் வந்தால் ஒன்றரை மாத்திரை உடையது என்றும் சொல்லின் இடையிலோ அல்லது கடையிலோ வந்தால் ஒரு மாத்திரை அளவுடன் உச்சரிக்கப்பட வேண்டும் என்றும் தொல்காப்பியம் மற்றும் நன்னூல் இலக்கண நூல்கள் குறிப்பிடுகின்றன. ஐந்து என்ற சொல்லின் முதலில் வரும் ஐகாரம் ஒன்றரை மாத்திரை அளவு கொண்டது. வளையல் என்ற சொல்லில் இடையே வரும் ஐகாரமும் மலை என்ற சொல்லின் கடையில் வரும் ஐகாரமும் ஒரு மாத்திரை அளவு கொண்டவை என்று இலக்கண நூல்கள் கூறுகின்றன. இவ்வாறு மாத்திரை குறைந்து ஒலிப்பது ஐகாரக் குறுக்கம் என்று அழைக்கின்றனர். இத்தகைய நுட்பமான விவரங்களையும் கருத்தில் கொண்டு பதிகங்கள் இயற்றிய திருஞானசம்பந்தரின் புலமை நம்மை வியக்க வைக்கின்றது. அகத்தியருக்கு தமிழ் இலக்கணம் கற்றுக் கொடுத்த பெருமானின் அருளால் பதிகங்கள் பாடத் தொடங்கிய திருஞானசம்பந்தர், சிறந்த புலமை வாய்ந்த புலவராக இருந்ததில் வியப்பு ஏதும் இல்லை. தற்சுட்டு அளபொழி ஐம்மூ வழியும் நையும் ஔவும் முதல் அற்றாகும் என்பதே ஐகார குறுக்கத்தை விளக்கும் நன்னூல் சூத்திரம்.

பாடல் 1:

பிறையணி படர்சடை (1.019) பாடல் 1 (திதே 0325)

பிறை அணி படர் சடை முடி இடை பெருகிய புனல் உடையவன் இறை

இறை அணி வளை இணை முலையவள் இணைவனது எழில் உடை இடவகை

கறை அணி பொழில் நிறை வயல் அணி கழுமலம் அமர் கனல் உருவினன்

நறை அணி மலர் நறு விரை புல்கு நலம் மலி கழல் தொழல் மருவுமே

விளக்கம்:

பெருகிய புனல்=வெள்ளமாக பெருகி கீழே இறங்கி வந்த கங்கை நதி; இறை=முன்கை; கறை=இருள்; மரங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து நெருக்கமாக காணப்படுவதால், சூரியன் மற்றும் சந்திரனின் கதிர்கள் உள்ளே புக முடியாத வண்ணம் நெருங்கி காணப்படுவதால், சோலைகள் இருள் நிறைந்து காணப்படுவதாக திருஞான சம்பந்தர் கூறுகின்றார். நெருக்கமாக வளத்துடன் மரங்கள் இருப்பது சோலைகளுக்கு அழகு சேர்ப்பதால் இங்கே இருளினை சோலைக்கு அணிகலனாக திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். நறை=தேன்; நறுவிரை= நறுமணம்; நல்கு=கலந்து பொருந்திய; இணை முலை=தேவியின் இணையான இரண்டு மார்பகங்கள்; ஞானமே வடிவமாக தேவி இருப்பதாக கருதப்படுவதால், தேவியின் இரண்டு மார்பகங்களும் பரஞானத்தையும் அபர ஞானத்தையும் குறிப்பிடுவதாக கூறுவார்கள். விரை=நறுமணம்; இணைவன்=இணைபவன்; இணை முலைகள் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். பிராட்டியின் மார்பகங்களின் அழகுக்கு வேறு எதனையும் ஒப்பாக சொல்ல முடியாது என்பது உணர்த்தும் வண்ணம், பிராட்டியின் ஒரு மார்பகமே மற்றொரு மார்பகத்திற்கு இணையாக இருக்க முடியும் என்று அழகாக திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.பிராட்டியின் மார்பகங்களுக்கு இணையாக வேறெதுவும் இல்லாததால், பிராட்டியின் முலைகளை துணைமுலை என்றும் இணைமுலை என்றும் பல திருமுறைப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம்.

திருவிடைமருதூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.110.2) திருஞானசம்பந்தர் பிராட்டியை இணைமுலையாள் என்று குறிப்பிடுகின்றார்; தோற்றவன்=தோற்றுவிப்பவன்; கேடவன்=அழியும் வண்ணம் கெடுப்பவன்; உயிர்களின் பிறப்புக்கும் இறப்புக்கும் காரணமாக இருப்பவன் பெருமான் என்று இதே பதிகத்தின் முதல் பாடலில் குறிப்பிட்ட திருஞான சம்பந்தர், உலகில் உள்ள பொருட்கள் தோன்றுவதற்கும் ஒடுங்கி அழிவதற்கும் காரணமாக உள்ளவன் பெருமான் என்று இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். தோற்றவன் கேடவன் என்ற தொடருக்கு, உயிர்களின் தோற்றத்திற்கும் அழிவிற்கும் காரணமானவன் இறைவன் என்றும் பலர் பொருள் கொள்கின்றனர். இந்த தன்மை பதிகத்தின் முதல் பாடலில், பிறவினொடு இறவும் ஆனான் என்ற தொடர் மூலம் உணர்த்தப் பட்டுள்ளது என்று குறிப்பிடுகின்றார். உலகப் பொருட்களின் தோற்றத்திற்கும் அழிவினுக்கும் காரணமாக இருப்பவனும், ஒன்றுக்கொன்று இணையான மார்பகங்களை உடைய உமை அன்னையைத் தனது உடலின் ஒரு கூறாக ஏற்றுக் கொண்டவனும், தாருக வனத்து முனிவர்களால் தன் மீது ஏவப்பட்ட கொல்லும் தன்மை வாய்ந்த கொடுமையான புலியினைக் கொன்று அதன் தோலைத் தனது இடுப்பினில் அணிந்து கொண்டவனும், தனது உடல் முழுவதும் திருநீறு பூசியவனும், நிறைந்து பெருகிய வெள்ளத்துடன் கீழே இறங்கி வந்த கங்கை நதியினைத் தனது நீண்ட சடையின் மீது ஏற்றுக் கொண்டு தேக்கியவனும் ஆகிய பெருமான் எழுந்தருளி வீற்றிருப்பது வளமையான நகரமாகிய இடைமருது என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

தோற்றவன் கேடவன் துணை முலையாள்

கூற்றவன் கொல்புலித் தோல் அசைத்த

நீற்றவன் நிறை புனல் நீள் சடை மேல்

ஏற்றவன் வளநகர் இடைமருதே

திருநள்ளாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.87.9) திருஞானசம்பந்தர், இணை முலையாளைத் தனது துணையாகக் கொண்டவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். மயிலியல்=மயிலை போன்ற சாயலை உடைய; கதிர்விடு=ஒளி வீசும்; கனமிகு= பருத்த; பான் முக=பால் சுரக்கும்; இந்த பதிகம்,மதுரை நகரினில் பாண்டிய மன்னனின் அவையில், சமணர்களுடன் அனல் வாதத்தில் ஈடுபட்டபோது, அருளிய பதிகமாகும். இந்த பதிகத்தின் பாடல்களில், நள்ளாறாரின் திருநாமம் அடங்கிய பதிக ஏடு, மேல் நோக்கி எரிகின்ற நெருப்பினில் இட்டாலும், பழுது ஏதுமின்றி அழியாமல் இருக்கும் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். இவ்வாறு பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் பெருமானின் திருநாமத்தை உள்ளடக்கிய பதிக ஏடு நெருப்பினில் இடப்பட்டாலும் அழியாமல் இருக்கும் என்று குறிப்பிட்ட திருஞானசம்பந்தருக்கு அந்த சமயத்தில் அந்நாள் வரையில் பெருமான் தனக்கு அருள் புரிந்த கருணைச் செயல்களும், மிகவும் முக்கியமாக, மூன்று வயதுக் குழந்தையாக இருந்த போது, பிராட்டி ஞானப்பால் ஊட்டியதும் அதன் விளைவாக தான் தேவாரப் பதிகங்கள் பாடத் தொடங்கியதும் நினைவுக்கு வந்தது போலும். பல. பாடல்களில் பிராட்டியின் முலைகளை பொதுவாக குறிப்பிடும் திருஞானசம்பந்தர்,இந்த பாடலில், பால்தரு முலைகள் என்று குறிப்பிடுவதை நாம் உணரலாம். பயிறலின்=நெருங்குவதால்; பெருமானை, உமை அன்னையை தழுவும் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். கான்முகம்=காட்டிலுள்ள: பணை=பருத்த:

கான்முக மயிலியன் மலைமகள் கதிர்விடு கனமிகு

பான்முகம் இயல்பணை இணைமுலை துணையொடு பயிறலின்

நான்முகன் அரி அறிவரிய நள்ளாறர் தம் நாமமே

மேன்முக எரியினில் இடில் இவை பழுதிலை மெய்ம்மையே

திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.92.18) அப்பர் பிரான், பிராட்டியை துணைமுலைப் பாவை என்று அழைக்கின்றார். சுணங்கு=தேமல், பசலை: சுரும்பு=ஒரு வகை வண்டு; அணங்குதல்=அழகு செய்தல்; அரவிந்தம்=செந்தாமரை மலர். போது=புதிதாக மலர்ந்த மலர்; அப்பர் பெருமான் இந்த பாடலில், உமையம்மை சிவபிரானின் கால்களை வருடும் காட்சியைத் தனது மனக் கண்ணால் காண்கின்றார். அந்த காட்சியின் அழகை, உவமானத்துடன் நமக்கு எடுத்துக் கூறி அதன் அழகினை விளக்குகின்றார். காந்தள் மலர் கருநீல நிறம் கொண்டது. நீளமாக காணப்படும் காந்தள் மலரை பெண்களின் அழகிய விரல்களுக்கு உவமையாக கூறுவது இலக்கிய மரபு. உமையம்மையின் காந்தள் போன்று அழகிய விரல்கள் சிவபெருமானின் காலினை வருடுவது, தாமரை மலர் மேல் கருநீல காந்தள் மலர் இணைந்து இருப்பது போன்று தோன்றுகின்றது என்று இங்கே கூறுகின்றார். தேமல் படர்ந்த முன்பகுதியைக் கொண்ட இணையான முலைகளை உடைய அழகிய சிலைபோன்ற பார்வதி தேவி, சுரும்புகளும் வண்டுகளும் அழகு செய்யும் கூந்தலை உடையவளாய், வளையல்கள் அணிந்த தனது கரங்களைக் கூப்பி, பெருமானின் தாமரை போன்று அழகான திருவடிகளை வணங்கி பின்னர் அந்த திருவடிகளை வருடுகின்றாள். இவ்வாறு அழகிய தோற்றத்துடன் காணப்படும் சிவபிரானின் திருவடிகளைத் தொட்டு வணங்கிய பின்னர் அந்த திருப்பாதங்களை உமையம்மை வருடும் போது, கருநீல நிறம் கொண்ட காந்தள் மலர்களால் அழகு செய்யப்பட்ட தாமரை மலர்களை ஒத்து, சிவபிரானின் திருவடிகள் காணப்படுகின்றன.

சுணங்கு முகத்துப் துணை முலைப் பாவை சுரும்பொடு வண்டு

அணங்கும் குழலி அணியார் வளைக் கரம் கூப்பி நின்று

வணங்கும் பொழுதும் வருடும் பொழுதும் வண் காந்தள் ஒண்போது

அணங்கும் அரவிந்தம் ஒக்கும் ஐயாறன் அடித்தலமே

சிவபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.87.2) அப்பர் பிரான், பிராட்டியின் முலைகளை துணைமுலை என்று குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் அப்பர் பிரான் சொக்கன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். சொக்கன் என்பது மதுரை ஆலவாய் திருக்கோயிலில் உள்ள இறைவனின் திருநாமங்களில் ஒன்று. சுந்தரேச்வரன் என்று இறைவனின் வடமொழி திருநாமமாக விளங்குகின்றது. சுந்தரன் என்றால் அழகு வாய்ந்தவன் என்று பொருள். சொக்க வைக்கும் அழகுடைய பெருமானை, சொக்கன் என்று திருஞானசம்பந்தரும் அப்பர் பிரானும் அழைத்து மகிழ்கின்றார்கள். சொக்கன்=கண்டார் மயங்கி விழும்படியான பேரழகு உடையவன்.

பொக்கணம்=திருநீறு வைக்கப்படும் சம்படம், ஒரு வகை பாத்திரம்; திக்கு=புகலிடம்; திக்கன்=புகலிடமாக உள்ளவன்; நக்கன்=குறைந்த ஆடைகளை உடையவன், கோவணம் மட்டுமே ஆடையாக கொண்டவன்; நக்க அரவம்=ஒளியை உடைய பாம்பு, பாம்பின் கழுத்தில் மாணிக்க கல் இருப்பதாக பண்டைய நாட்களில் கருதப்பட்டது.; பொக்கன்=பொலிவு உடையவன் சிறந்த அழகு படைத்த உமையம்மைக்கு தகுந்த மணவாளனும் கண்கவர் அழகனாக தானே இருப்பது தானே பொருத்தம். அவ்வாறு காண்போர் சொக்கும் அழகு வாய்ந்தவன் இறைவன் என்பதை இதே பாடலின் இரண்டாம் அடியில் உணர்த்திய அப்பர் பிரான், உமை அம்மையின் அழகிய மார்பகத்தைச் சேர்வதற்கு பொருத்தமான பொலிவினை உடைய பெருமான் என்று மூன்றாவது அடியினில் உணர்த்துகின்றார். குறைந்த ஆடைகளை அணிந்தவனாக விளங்குபவனும், ஒளிவீசும் மாணிக்க கல்லினை உடைய பாம்பினைத் தனது இடையில் இறுக்கமாக கட்டியவனும், அனைவர்க்கும் தலைவனாக விளங்குபவனும், பூத கணங்களுடன் இணைந்து ஆடும் திறமை உடையவனும், காண்போரை சொக்க வைக்கும் அழகினை உடையவனும், கொக்கின் வடிவம் எடுத்து பலரையும் துன்புறுத்தி வந்த குரண்டாசுரன் என்ற அரக்கனை கொன்று கொக்கின் இறகினை தலையில் அணிந்தவனும், துடி எனப்படும் இசைக்கருவி போன்று சிறுத்த இடையினை உடைய உமை அம்மையின் மார்பினைச் சேரும் மணவாளனாக இருக்கும் வண்ணம் பொலிந்து திகழ்பவனும், சம்படத்தில் வைக்கப்பட்ட வெண்மை நிறம் வாய்ந்த திருநீற்றினை அணிந்தவனும், பாதாளம் நிலவுலகம் மற்றும் மேலுலகம் ஆகிய மூன்றினுக்கும் ஆதாரமான பொருளாக இருப்பவனும், அனைத்து உயிர்களுக்கும் புகலிடமாக உள்ளவனும், செம்மை நிறத்து மேனியை உடையவனும் ஆகிய சிவபெருமான். சிவபுரம் என்று அழைக்கப்படும் தலத்தின் செல்வனாக விளங்குகின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

நக்கன் காண் நக்கரவம் அரையில் ஆர்த்த நாதன் காண் பூதகணம் நடமாட ஆடும்

சொக்கன் காண் கொக்கிறகு சூடினான் காண் துடியிடையாள் துணைமுலைக்குச் சேர்வதாகவும்

பொக்கன் காண் பொக்கணத்த வெண்ணீற்றான் காண் புவனங்கள் மூன்றினுக்கும் பொருளாய் நின்ற

திக்கன் காண் செக்கரது திகழு மேனிச் சிவனவன் காண் சிவபுரத்து எம் செல்வன் தானே

திருவாசகம் அருட்பத்து பதிகத்தின் பாடலில் (8.29.5) மணிவாசக அடிகளார் பிராட்டியை துணைமுலை மடந்தை என்று குறிப்பிடுகின்றார். துடிகொள் நேரிடை=உடுக்கை போன்று நுண்ணிய இடையினைக் கொண்ட பிராட்டி; பெருமானின் நீறு பூத்த பெருநெருப்பு போன்ற மார்பினில், இரண்டு புள்ளிகள் போன்று பிராட்டியின் முலைக்கண்கள் படிந்த சுவடு காணப்படுகின்றது என்று கூறுகின்றார். ஆதரித்து=அன்புடன்; தான் அன்புடன் பெருமானை அழைக்கையில், பெருமான், உனது கவலைக்கு காரணம் யாது என்று வினவி அந்த துயரத்தைத் தீர்க்கவேண்டும் என்ற கருத்தினில், இந்த பதிகத்தின் பாடல்களில் அதெந்துவே என்று அருளாயே என்று அடிகளார் விண்ணப்பிக்கின்றார்.

துடிகொள் நேரிடையாள் சுரிகுழல் மடந்தை துணைமுலைக் கண்கள் தோய்சுவடு

பொடி கொள்வான் தழலில் புள்ளி போல் இரண்டு பொங்கொளி தங்கு மார்பினனே

செடிகொள்வான் பொழில்சூழ் திருப்பெருந்துறையில் செழுமலர்க் குருந்தம்மேவிய சீர்

அடிகளே அடியேன் ஆதரித்தழைத்தால் அதெந்துவே என்று அருளாயே

பொழிப்புரை:

அழியும் தன்மையில் ஒற்றைப் பிறையுடன் தன்னிடம் சரணடைந்த சந்திரனின் ஒற்றைப் பிறையினை, தனது படர்ந்த சடையில் ஏற்றுக் கொண்டுள்ள பெருமான், அந்த சடையின் இடையே மிகுந்த வெள்ளப் பெருக்குடன் கீழே இறங்கி வந்த கங்கை நதியினை தேக்கியவர் ஆவார்; தனது முன் கையில் வளையல்களை அணிந்தவளும், அழகில் ஒன்றுக்கொன்று இணையான மார்பகங்களை உடையவளும் ஆகிய பிராட்டியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் இணைத்துக் கொண்டவனும் ஆகிய சிவபெருமான் இருக்கும் அழகிய இடங்களில் ஒரு இடமாவது, நெருங்கி இருக்கும் தன்மையால் இருளினை ஒரு அணிகலனாகக் கொண்டுள்ள சோலைகள் நிறைந்த கழுமலம் நகரமாகும். இவ்வாறு அழகிய சோலைகளும் வளம் வாய்ந்த வயல்களும் கொண்டுள்ள கழுமலம் நகரத்தில் அமர்ந்துள்ள இறைவன், கொழுந்து விட்டெரியும் தீப்பிழம்பின் நிறத்தில் திருமேனி உடையவன் ஆவான். தேன் உடையதும் நறுமணம் வீசுவதும் ஆகிய மலர்கள் இந்த பெருமானின் திருவடிகளில் கலந்து பொருந்தி உள்ளன. தன்னை வணங்கித் தொழும் அடியார்களுக்கு பலவிதமான நன்மைகள் விளைவிக்கும் அந்த திருவடிகளைச் சார்ந்து தொழுது வணங்கி நலன்கள் பெறுவீர்களாக.

பாடல் 2:

பிறையணி படர்சடை (1.019) பாடல் 2 (திதே 0326)

பிறையணி படர்சடை (1.019) பாடல்கள் 2 தொடர்ச்சி (திதே 0327)

பிறையணி படர்சடை (1.019) பாடல்கள்2 தொடர்ச்சி (திதே 0328)

பிறையணி படர்சடை (1.019) பாடல்கள் 2 தொடர்ச்சி (திதே 0329)

பிறையணி படர்சடை (1.019) பாடல்கள் 2 தொடர்ச்சி (திதே 0330)

பிறையணி படர்சடை (1.019) பாடல்கள் 2 தொடர்ச்சி (திதே 0331)

பிறையணி படர்சடை (1.019) பாடல்கள் 2 தொடர்ச்சி (திதே 0332)

பிறையணி படர்சடை (1.019) பாடல்கள் 2 தொடர்ச்சி (திதே 0333)

பிறையணி படர்சடை (1.019) பாடல்கள் 2 தொடர்ச்சி (திதே 0334)

பிறையணி படர்சடை (1.019) பாடல்கள் 2 தொடர்ச்சி (திதே 0335)

பிறையணி படர்சடை (1.019) பாடல்கள் 2 தொடர்ச்சி (திதே 0336)

பிறையணி படர்சடை (1.019) பாடல்கள் 2 தொடர்ச்சி (திதே 0337)

பிறையணி படர்சடை (1.019) பாடல்கள் 2 தொடர்ச்சி, 3, 4, 5, 6, 7 (திதே 0338)

பிணி படு கடல் பிறவிகள் அறல் எளிது உளது அது பெருகிய திரை

அணி படு கழுமலம் இனிது அமர் அனல் உருவினன் அவிர் சடை மிசை

தணி படு கதிர் வளர் இள மதி புனைவனை உமை தலைவனை நிற

மணி படு கறை மிடறனை நலம் மலி கழல் இணை தொழல் மருவமே

விளக்கம்:

இந்த பதிகத்தின் முதல் பாடலில் நன்மைகள் விளைவிக்கும் திருவடிகள் பெருமானின் திருவடிகள் என்று குறிப்பிடும் திருஞானசம்பந்தர், இந்த பாடலில் அந்த நன்மை யாது என்பதை உணர்த்துகின்றார். கடலால் சூழப்பட்டுள்ள சீர்காழி நகரத்தின் தன்மை, பிறவிக் கடலில் மூழ்கி தத்தளிக்கும் உயிரின் நிலையை திருஞானசம்பந்தருக்கு நினைவூட்டியது போலும். பிறப்பெடுக்கும் தன்மைக்கு கடலினை உதாரணமாக சொல்வது வழக்கம். பிறவிக்கடல் என்றே சான்றோர்கள் குறிப்பிடுகின்றனர், அலைகள் ஒன்றன் பின் ஒன்று தொடர்ச்சியாக வருவது போன்று, வாழ்க்கையில் வினைகளின் விளைவால் இன்பமும் துன்பமும் மாறிமாறி வந்து உயிர்களை அலைக்கழிக்கின்றன. இந்த இன்பங்களையும் துன்பங்களையும் நுகரும் உயிர்கள் மேலும் வினைகளை சேர்த்துக் கொண்டு, தங்களது வினைகளை முற்றிலும் கழித்துக் கொள்ள முடியாமல் தவிக்கின்றன. எனவே தான் பல வகையான பிணிகளுடன் (துன்பங்களுடன்) தொடர்பு கொண்டுள்ள பிறவிக்கு, தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக வரும் அலைகள் கொண்டுள்ள கடலினை உவமையாக குறிப்பிடுவார்கள். விரிந்து பரந்துள்ள கடலினைப் போன்று நமது உயிரும் எண்ணற்ற பிறவிகளுடன் தொடர்பு கொண்டுள்ளது. தன்னிடம் அகப்பட்டுக் கொண்ட பொருட்களை விடாமல் பற்றிக் கொண்டு அந்த பொருட்கள் வெளியே செல்லாத வண்ணம் தடுக்கும் அலைகள் போன்று வினைகளும் தன்னிடம் பிடிபட்டுள்ள உயிர்களை விடாமல் வருத்துவதோடன்றி, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து வெளியே செல்லாத வண்ணம் தடுக்கின்றன. பிணி என்று பிறவிகளுடன் இணைந்துள்ள வினைகளை குறிப்பிடுகின்றார். எனவே தான் இந்த பிறவிகளை பிணிபடு பிறவிகள் என்று திருஞானசம்பந்தர் அழைக்கின்றார். இந்த பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு வெளியே வருவது மிகவும் கடினமாக தோன்றினாலும், அவ்வாறு வெளியே விடுபட்டு வருவது மிகவும் எளிதான செயல் என்று திருஞானசம்பந்தர் நமக்கு சொல்லிக் கொடுக்கும் பாடல் இது. அவிர்சடை=விரிந்த சடை; ஒற்றைப் பிறையுடன் சந்திரன் சரண் அடைந்ததை இளமதி என்றும், பெருமானிடம் சரண் அடைந்த பின்னர் தக்கனது சாபத்தால் ஏற்பட்ட அழிவினின்று மீண்டு வளரத் தொடங்கிய நிலையினை வளர்மதி என்றும் இங்கே குறிப்பிடுகின்றார். தண்படு கதிர்=குளிர்ச்சி பொருந்திய கதிர்கள்; மலி=மலிந்த, மிகுதியாக உடைய; நலமலி=நன்மைகள் புரியும் குணத்தினை மிகுதியாக உடைய; நலம்=வீடுபேறு. தக்கனது சாபத்தால் அழியும் நிலையிலிருந்து மீட்டு சந்திரனுக்கு அருளியது போன்று வினைக் கடலில் அகப்பட்டு தவிக்கும் உயிர்களை மீட்கும் வல்லமை வாய்ந்தவன் இறைவன் என்பது இங்கே குறிப்பாக உணர்த்தப் படுகின்றது.

திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.11.10) சமணர்கள் மற்றும் புத்தர்களின் பேச்சுகளில் மயங்காமல், தன்னைத் தொடர்ந்து வணங்கி வழிபடும் அடியார்களை பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து பெருமான் விடுவிப்பார் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். மசங்கல்=மயக்க உணர்வு;இசங்கும்=பொருந்தும் அடியார்கள், இருந்தேன்=பெரிய கரு வண்டுகள்; மண்டை=பனை ஓலையால் செய்யப்பட்ட பாத்திரம், புத்தர்கள் உணவு ஏற்பதற்காக எடுத்துச் செல்வது;

மசங்கல் சமண் மண்டைக் கையர் குண்டக் குணமிலிகள்

இசங்கும் பிறப்பு அறுத்தானிடம் இருந்தேன் களித்து இரைத்து

பசும்பொற் கிளி களி மஞ்ஞைகள் ஒளி கொண்டெழு பகலோன்

விசும்பைப் பொலிவிக்கும் பொழில் வீழிம்மிழலையே

தூங்கானை மாடம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.59.1) பிறவிப் பிணியினை உடைய வாழ்க்கையை போக்கிக் கொள்ளவேண்டும் என்று விரும்பும் அடியார்கள் செய்ய வேண்டியது யாது என்பதை திருஞானசம்பந்தர் விளக்குகின்றார். பிணி=வினைகளும் வினைகளால் வரும் துன்பங்களும்; முந்தைய பிறவிகளில் நாம் தேடி சேர்த்துக் கொண்ட வினைகளின் தன்மைக்கு ஏற்ப, இந்த பிறவியில் நமக்கு உடல் அமைகின்றது. உடலுடன் சேர்ந்த உயிரும் சிறிது சிறிதாக வினைகளின் பயனை, இன்பத்தையும் துன்பத்தையும் அனுபவித்து கழிப்பதை நாம் அறிவோம். பிறவி எடுத்த நாளிலிருந்து இந்த பிறவியினில் நாம் அனுபவித்து கழிக்க வேண்டிய வினைகள் என்று இறைவனால் நிர்ணயிக்கப் பட்ட வினைகள் இந்த உயிருடன் பிணைந்து இருக்கின்றன. ஆனால் இந்த வினைகள் அனைத்தும் ஒரே நாளில் அவற்றின் பலனை தருவதில்லை. ஒடுங்கி இருக்கும் வினைகள், அந்த வினைகளால் நாம் அனுபவிக்க ஏற்ற காலம் வரும் வரை வெளிப் படுவதில்லை. தக்க காலம் வரும் வரை காத்திருக்கும் வினைகள், உரிய காலம் வந்ததன் பின் வெளிப்பட்டு நமக்கு இன்பமும் துன்பமும் அளிக்கின்றன. இவ்வாறு உள்ள தன்மையை ஒடுங்கும் பிணி என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். கிடங்கு=அகழி; சுலாவி= சுற்றி; கேடு=கெட்டுப் போவது; பிறவியுடன் இணைத்து சொல்லப் பட்டுள்ளமையால் பிறவிக்கு கெடுதியை உண்டாக்கும் இறப்பு. இந்த சொல் இறப்பினை மட்டும் குறிப்பிடாமல் நாம் இறப்பதற்கு முன்னர் அனுபவிக்க வேண்டிய பல துன்பங்களையும் குறிப்பிடுகின்றது என்று பெரியோர்கள் விளக்கம் அளிக்கின்றனர். தவம் அடங்குதல்=தவத்தில் அடங்கி நிற்றல்; தவமாகிய சாதனத்தில் அழுந்தியிருத்தல்; இந்த பாடலில் தூங்கானை மாடத்து பெருமானின் திருவடி நிழலின் கீழே ஆளாகி நிற்க வேண்டும் என்று நமக்கு அறிவுரை கூறுகின்றார். கடந்தை=வீரம் நிறைந்த மக்கள்; பண்டைய நாளில் வீரர்கள் வசித்த இடமாக பெண்ணாகடம் இருந்தது போலும். கடந்தை என்ற அடைமொழியுடன் சம்பந்தர் இந்த பாடலில் இந்த தலத்தினை குறிப்பிடுகின்றார்.

ஒடுங்கும் பிணி பிறவி கேடு என்று இவை உடைத்தாய வாழ்க்கை ஒழியத் தவம்

அடங்கும் இடம் கருதி நின்றீர் எல்லாம் அடிகள் அடி நிழற்கீழ் ஆளாம் வண்ணம்

கிடங்கும் மதிலும் சுலாவி எங்கும் கெழுமனைகள் தோறும் மறையின் ஒலி

தொடங்கும் கடந்தை தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே

பிணியாக கருதப்படுவதும் உயிருடன் ஓடுங்கி இருந்து தக்க சமயத்தில் வெளிப்பட்டு துன்பங்களை விளைவிக்கும் வினைகளும், இவ்வாறு வினைகளை அனுபவிப்பதற்கு காரணமான பிறவியும், இறப்பு மற்றும் இறப்பினுக்கு முன்னே அனுபவிக்க வேண்டிய பல துன்பங்களையும் ஒழித்து விட்டு, பிறப்பிறப்பு இல்லாத பேரின்பம் அடைய வேண்டும் என்ற விருப்பத்துடன் தவம் செய்வதற்கு உரிய இடத்தினைத் தேடி நிற்கும் மனிதர்களே, நீங்கள் அனைவரும் பெருமானின் திருவடி நிழலில் தங்கும் வாய்ப்பினைப் பெற்று அவனது கருணைக்கு ஆளாக விரும்பினால், நீங்கள் செல்ல வேண்டிய ஒரு இடத்தினை நான் உங்களுக்கு உணர்த்துகின்றேன், கேட்பீர்களாக. நான்கு புறங்களிலும் அகழிகளாலும் மதில்களாலும் சூழப்பட்டிருப்பதும் இல்லங்கள் தோறும் வேதங்களின் ஒலி ஒலிப்பதும், ஆகிய கடந்தை என்று அழைக்கப்படும் நகரத்தில் உள்ள அகன்ற தூங்கானைமாடம் திருக்கோயிலுக்கு சென்று இறைவனை வழிபட்டு நீங்கள் விரும்பிய தன்மையை பெறுவீர்களாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

குடந்தைக் காரோணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.72.11) திருஞான சம்பந்தர், தேவாரப் பாடல்களை முறையாக பாடுவோர், மீண்டும் ஒரு கருவினில் புகுந்து அல்லற்படும் பிறவி எடுக்க மாட்டார்கள் என்று கூறுகின்றார். கருவார்=அடர்ந்து கருமை நிறத்தில் காணப்படும்; அடுத்தடுத்து உள்ள மரங்களின் கிளைகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து கொண்டு இருப்பதால், சூரியன் மற்றும் சந்திரனின் ஒளிக் கதிர்கள் உள்ளே புகமுடியாமல் இருப்பதால், இருண்டு காணப்படும் சோலைகள்; தான் மூன்று வயதுச் சிறுவனாக இருந்த போது, அம்பிகை அளித்த ஞானப்பாலினை தான் உட்கொள்ளும் வண்ணம் கருணை புரிந்து, அந்த பாலுடன் சிவஞானமும் கலந்து ஊட்டப்பட்ட செய்தியை இங்கே திருஞானசம்பந்தர் கூறுகின்றார். கருவார் இடும்பை=கருவினில் புகுந்து இடர்ப்படும் தன்மை; அடுத்தடுத்து உள்ள மரங்களின் கிளைகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து கொண்டு இருப்பதால், சூரியன் மற்றும் சந்திரனின் ஒளிக் கதிர்கள் உள்ளே புகமுடியாமல் இருப்பதால், இருண்டும் செழிப்புடன் வளர்ந்தும் காணப்படும் சோலைகள் சூழ்ந்து அழகாக விளங்கும் குடந்தை நகரத்தில் உள்ள குடந்தைக் காரோணம் திருக்கோயில் உறையும் செல்வராகிய காரோணத்தாரை, இறைவனின் கருணையால் விளைந்த சிவஞானம் ஆகிய கல்விச் செல்வத்தை பெற்றவனும் சண்பை என்று அழைக்கப்படும் சீர்காழி நகரத்தினைச் சார்ந்தவனும் ஆகிய ஞானசம்பந்தன் உருவாக்கிய செம்மையான தமிழ்ச் சொற்கள் அடங்கிய மாலையாகிய இந்த பத்து பாடல்களையும் முறையாக ஓதும் அடியார்கள், மீண்டும் கருவினில் புகந்து இடர்ப்படும் தன்மையை எய்தாது தங்களது கவலைகள் நீங்கப் பெறுவார்கள். அதாவது பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு முக்திநிலை அடைந்து, இறைவனுடன் இணைந்து என்றும் அழியாத பேரின்பத்தில் ஆழ்ந்து இருப்பார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை

கருவார் பொழில் சூழ்ந்து அழகார் செல்வக் காரோணத்தாரை

திருவார் செல்வம் மல்கு சண்பைத் திகழும் சம்பந்தன்

உருவார் செஞ்சொல் மாலை இவை பத்தும் உரைப்பார் உலகத்துக்

கருவார் இடும்பைப் பிறப்பு அறுத்துக் கவலை கழிவாரே

ஆப்பனூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.88.4) திருஞானசம்பந்தர், பெருமானை பிணியும் பிறப்பறுப்பான் என்று குறிப்பிடுகின்றார். துணியின் உடை=பெரிய துணியிலிருந்து துண்டிக்கப்பட்ட கோவண ஆடை; இம்மையில் உடலுடன் பொருந்தும் நோய்களையும் மறுமையில் உயிருடன் பொருந்தும் நோயாகிய பிறப்பினையும் அறுக்கும் வல்லமை வாய்ந்தவன் பெருமான் என்று இந்த பாடலில் கூறுகின்றார். உயிர் தன்னுடன் பிணிந்துள்ள வினைகளை அறுத்துக் கொள்வது முதற்படி; இவ்வாறு வினைகளை அறுத்துக் கொள்வதால், மலங்களிலிருந்து விடுதலை பெறுகின்ற உயிர்கள் பக்குவமடைந்த உயிர்களாக கருதப்பட்டு, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுகின்றன. இந்த தன்மை தான் இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது.

பிணியும் பிறப்பறுப்பான் பெருமான் பெருங்காட்டில்

துணியின் உடை தாழச் சுடரேந்தி ஆடுவான்

அணியும் புனலானை அணி ஆப்பனூரானைப்

பரவும் மனமுடையார் வினை பற்று அறுப்பாரே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.91.2) பிறவி அறுக்க வேண்டும் என்று விரும்பும் அடியார்கள் செய்ய வேண்டியது யாது என்பதை திருஞானசம்பந்தர் கூறுகின்றார். அறவன்=அறங்களுக்கு இருப்பிடமானவர்; திருவள்ளுவர் அறவாழி அந்தணன் என்று கூறுவது நமது நினைவுக்கு வருகின்றது. துறவி=பாசம் துறத்தல்; இறைவனைத் தொழுதால் முக்திநிலை அடையலாம் என்று இந்த பதிகத்தின் முதல் பாடலில் உணர்த்திய திருஞானசம்பந்தர், முக்தியுலகம் செல்லும் வழியில் எவ்வாறு ஈடுபடுவது என்பதை இந்த பாடலில் சொல்லிக் கொடுக்கின்றார். தமது பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட, முக்தி நிலை அடையவேண்டும் என்று உயிர்கள் விரும்புகின்றன. அதற்கு முதற்படியாக நாம் துறவு நிலை அடையவேண்டும். அதாவது உலகப் பொருட்கள் மற்றும் உலகத்து உயிர்கள் மீது நாம் கொண்டுள்ள பாசத்தை அறவே துறக்க வேண்டும். பாசங்களிலிருந்து விடுபடுவது என்பது எளிதில் நிறைவேறுவதில்லை. இறைவனின் அருளால் தான் நிகழ்கின்றது என்பதால், புண்ணியமே வடிவமான ஆரூர்ப் பெருமானை மறவாமல் வழிபட்டு, பாசத்திலிருந்து விடுதலை பெறுவீர் என்ற அறிவுரையை திருஞானசம்பந்தர் இந்த பாடலில் வழங்குகின்றார். நாம் உலகப் பொருட்கள் மீது கொண்டுள்ள பாசத்தின் காரணமாகவே, பல தவறுகளைச் செய்து மேலும் வினைகளை சேர்த்துக் கொள்கின்றோம். எனவே வினைகளை சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டுமெனில் பாசத்தை அறுக்க வேண்டும்; மேலும் நாம் எதிர்கொள்கின்ற இன்ப துன்பங்களை சரிசமமாக பாவிக்கும் மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அத்தகைய பக்குவம் அடைவதற்கும் இறையருள் தேவைப் படுகின்றது. பற்றினை அறுத்துக் கொண்டு துறவி நிலையினை அடைவதற்கு உதவும் வழி, பெருமானை நினைத்து வழிபடுவது தான் என்பதை மிகவும் அழகாக திருவள்ளுவர் விளக்கும் குறள் நமது நினைவுக்கு வருகின்றது. பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை பற்றுக பற்று விடற்கு என்பதே அந்த திருக்குறள்; புண்ணியமே வடிவமாக விளங்கும் ஆரூர் பெருமானை மறவாது புகழ்ந்து வணங்கி, அவனது உதவியுடன், உலகப் பொருட்கள் மற்றும் உலகத்து உயிர்கள் மீது கொண்டுள்ள ஆசையினை துறந்து விடுவீர்களாக. இவ்வாறு பாசத்தைத் துறந்தும், எதிர்கொள்கின்ற இன்ப துன்பங்களை ஒன்றாக கருதி அவற்றால் சலனம் அடையாமல் இருப்பதன் மூலம், பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெற்று, முக்தி உலகம் சென்றடையும் தகுதி பெறுவீர்களாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை;

பிறவி அறுப்பீர்காள்

அறவன் ஆரூரை

மறவாது ஏத்துமின்

துறவி யாகுமே

சிவபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.125.4) திருஞானசம்பந்தர், சிவபுரத்து பெருமானைத் தொழும் அடியார்கள் மீண்டும் பிறப்பெடுக்கும் தன்மையை வீசியெறிந்து பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறும் ஆற்றல் உடையவர்களாக இருப்பார்கள் என்று கூறுகின்றார். இந்த பதிகத்தின் முதல் மூன்று பாடல்களில் சிவபுரம் தலத்தினை தியானிக்கும் அடியார்கள் இம்மையில் இடர்கள் நீங்கி மறுமையில் உயர்கதி பெறுவார்கள் என்றும், சிவபுரம் சென்றடைந்து தொழும் அடியார்கள் உயர்கதி அடைவார்கள் என்றும் சிவபுர நகரத்தின் புகழினை எடுத்துரைக்கும் அடியார்கள் உயர்கதி அடைவார்கள் என்றும் குறிப்பிட்ட திருஞானசம்பந்தர் இந்த பாடலில், இந்த தலத்து இறைவனைத் தொழுகின்ற அடியார்கள் அடையவிருக்கும் நன்மையை கூறுகின்றார். அடுதல் என்றால் கொல்லுதல் என்று பொருள். அடுபிணி=ஆட்கொல்லி நோய்கள்; தணிவு=அடக்கம்; அடக்கம் உடைய மக்கள் வாழும் சிவபுரம் நகரினில் பொருந்தியவனும் கருநிறம் உடைய மாணிக்கம் பதித்தது போன்ற கழுத்தினை உடையவனும் ஆகிய சிவபெருமானின் இணையான திருவடிகளைத் தொடர்ந்து தொழும் அடியார்கள், தாங்கள் எடுத்த காரியத்தினை நிறைவாக முடிக்கும் துணிவு உடையவர்களாகவும், திருநீறு பூசும் அடியார்களாகவும், உடலை மிகுதியாக வருத்தும் ஆட்கொல்லி நோய்கள் ஏதும் சென்றடையாத தன்மை உடையவர்களாகவும், மீண்டும்மீண்டும் பிறப்பெடுக்கும் தன்மையை வீசியெறிந்து பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெரும் ஆற்றல் உடையவர்களாகவும் இருப்பார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை

துணி உடையவர் சுடுபொடியினர் உடலடு

பிணி அடைவிலர் பிறவியும் அற விசிறுவர்

தணிவு உடையவர் பயில் சிவபுரம் மருவிய

மணி மிடறனது அடியிணை தொழும் அவரே

நல்வினைகளையும் தீவினைகளையும் நுகர்ந்து கழிக்க வேண்டிய நிலையில் அனைத்து உயிர்களும் உள்ளன. நல்வினைகளால் இன்பங்களும் தீவினைகளால் துன்பங்களும் துயரங்களும் உயிர்களுக்கு உண்டாகின்றன. இந்த பிறப்பினில் நமது தீவினைகளால் ஏற்படும் துயரங்களைத் தீர்த்துக் கொண்டு, மறுமையில் பிறப்பையே அடியோடு நாம் தவிர்க்க வேண்டும் என்று விரும்பினால், அதற்கு மருந்தாக பயன்படுபவன் பெருமான் ஒருவன் தான் என்று புள்ளிருக்குவேளூர் தலத்து பதிகத்தின் கடைப் பாடலில் (2.43.11) திருஞானசம்பந்தர் கூறுகின்றார். செடியாய=குணம் இல்லாத; கடி=நறுமணம்; கடியார்ந்த=நறுமணம் கமழும் பூக்கள் நிறைந்த; சோம்பியிராமல் தேவாரப் பாடல்களை சொல்லும் வல்லமை உடைய அடியார்களுக்கு மறுபிறவி இல்லாத வண்ணம் பெருமான் அருள் புரிவான் என்பது இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. பொடியாடி=திருநீற்றினை உடல் முழுதும் பூசிக் கொண்டவன், திருநீற்றில் நீராடியது போன்று உடல் முழுதும் திருநீற்றின் வண்ணமும் துகள்களும் உடைய பெருமானின் திருக்கோலம் இங்கே உணர்த்தப் படுகின்றது.

செடியாய உடல் தீர்ப்பான் தீவினைக்கொர் மருந்தாவான்

பொடியாடிக்கு அடிமை செய்த புள்ளிருக்கு வேளூரைக்

கடியார்ந்த பொழில் காழி கவுணியன் சம்பந்தன் சொல்

மடியாது சொல்ல வல்லார்க்கு இல்லையாம் மறுபிறப்பே

துருத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.98.10) பெருமானைத் தொழும் அடியார்கள், அதற்கு பரிசாக தங்களது பிறவிப்பிணி தீர்க்கப் பெறுவார்கள் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். இந்த பாடலில் துத்தம் முதலிய இசைக் குறிப்புகள் (சுருதி) இணைந்த பண்கள் பாடும் வண்டுகள் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். தத்துவம்=உயர்ந்த கொள்கைகள்; உயர்ந்த கொள்கைகள் ஏதுமற்ற சமண மதம் என்று இங்கே கூறுகின்றார். மறுபிறப்பு, பிறப்பிறப்புச் சுழற்சி, முக்தி நிலை ஆகிய கொள்கைகளில் நம்பிக்கை அற்ற சமண மதம் என்பதால், தத்துவங்கள் இலாத சமண மதம் என்று கூறுகின்றார். பெற்றி=தன்மை; பித்தர் பித்தனாகிய பெருமானைத் தொழுகின்ற அடியார்கள் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுகின்ற தன்மை உடையவர்களாக இருப்பார்கள் என்று கூறுகின்றார். பித்தர் என்று பெருமான் பால் எல்லையற்ற அன்பு உடையவர்களாக, தங்களது வாழ்க்கையில் வேறு எந்த விதமான பற்றும் கொள்ளாமல், பெருமானையே எப்போதும் நினைத்து வாழும் அடியார்களை குறிப்பிடுகின்றார். பித்தர் பித்தன் என்ற தொடர் மூலம்,அத்தகைய அடியார்கள் பால், பெருமானும் எல்லையற்ற அன்பு கொண்டவனாக, பித்தன் போன்று நடந்து கொள்வான் என்று உணர்த்துகின்றார்.

புத்தர் தத்துவம் இலாச் சமண் உரைத்த பொய் தனை

உத்தமம் எனக் கொளாது உகந்து எழுந்து வண்டினம்

துத்த நின்று பண் செயும் சூழ் பொழில் துருத்தி எம்

பித்தர் பித்தனைத் தொழப் பிறப்பறுத்தல் பெற்றியே

பெருமான் நமது பிறவிப் பிணியைத் தீர்க்கும் மருந்தாகவும் மந்திரமாகவும் செயல்படுகின்றார் என்று திருவலஞ்சுழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.106.3) திருஞானசம்பந்தர் கூறுகின்றார். திருந்தலார்=தங்களது தவறான வழியிலிருந்து திருந்தாத திரிபுரத்து அரக்கர்கள்; திரிபுரத்து அரக்கர்கள் தொடர்ந்து தவறுகள் செய்து அனைவரையும் வருத்திய காரணத்தால் தான் பெருமான் அவர்களுடன் போரிடச் சென்றார். விறல்=பெருமை; மத்தம்=மயக்கம்; மத்தமாம் பிணிநோய் என்ற தொடருக்கு, உன்மத்தம் முதலான உடலுடன் தொடர்பு கொண்டுள்ள நோய்கள் என்றும் பொருள் கொள்கின்றனர். எனினும் மத்தமாம் பிணி நோய் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுவதால் மனதினை அறியாமையில் ஆழ்த்தி, இறைவனை நாம் சிந்தியாது இருக்கும் வகையினில் நம்மை மயக்கும் மலங்களின் தொடர்பால் ஏற்படும் நோய் என்று பொருள் கொள்வது சிறப்பாக உள்ளது.. மத்தமாம் பிணி நோய் தானே நம்மை பிறப்புச் சுழற்சியிலிருந்து வெளியே வாராத வண்ணம் தடுக்கின்றது.

திருந்தலார் புரம் தீயெழச் செறுவன விறலின் கண் அடியாரைப்

பரிந்து காப்பன பத்தியில் வருவன மத்தமாம் பிணி நோய்க்கு

மருந்தும் ஆவன மந்திரம் ஆவன வலஞ்சுழி இடமாக

இருந்த நாயகன் இமையவர் ஏத்திய இணையடித் தலம் தானே

ஊனமுடைய பிறவியை அறுக்க வேண்டும் என்று விரும்பும் அடியார்கள், கருக்குடி தலத்து இறைவனின் திருப்பாதங்களை வாழ்த்தி வணங்க வேண்டும் என்று திருஞான சம்பந்தர் உணர்த்தும் பாடல் (3.21.4) இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. ஊனுடைப் பிறவி=உடலுடன் கூடிய பிறவி; மீண்டும்மீண்டும் பிறப்பிறப்புச் சுழற்சியில் சிக்கிக் கொண்டு எண்ணற்ற பிறவிகள் எடுக்கும் தன்மை; கான்=காடு; வைகல்=தினமும்; பிறவியின் இழிந்த தன்மை இந்த பாடலில் சொல்லப் படுகின்றது. ஆதியாகவும் அந்தமாகவும் இருக்கும் பெருமான் என்பதால், அவரே பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விலகியவர் என்பதையும் நாம் புரிந்து கொள்கின்றோம். பிரமன் இந்திரன் திருமால் உட்பட அனைத்துத் தேவர்களும் இறந்தும் மீண்டும் பிறப்பு எடுப்பதாகவும் இருப்பதால், அவர்களால் எவ்வாறு மற்றவரின் பிறப்பிறப்புச் சங்கிலியை அறுக்க முடியும். எனவே தான் ஊனுடைப் பிறவியை அறுக்க விரும்பும் உயிர்கள் நாட வேண்டியது சிவபெருமானின் அருளை என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். மீண்டும்மீண்டும் ஏதோ ஒரு உடலுடன் கூடி பிறப்பெடுத்து தவிக்கும் மாந்தர்களே, நீங்கள் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட வேண்டும் என்று எண்ணினால், சுடுகாட்டில் தொடர்ந்து நடமாடுபவனும் கருக்குடித் தலத்தில் உறைபவனும் ஆகிய பெருமான் உறைகின்ற திருக்கோயிலை வணங்கியும், தினமும் வானவர்களால் தொழப்படும் பெருமானது திருப்பாதங்களையும் வாழ்த்துவீர்களாக. அவ்வாறு வாழ்த்துவதன் மூலம், இம்மையில் சிறப்பாக வாழ்ந்து மறுமையில் முக்தி நிலை அடைந்து, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அடையலாம்என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

ஊனுடைப் பிறவியை அறுக்க உன்னுவீர்

கானிடை ஆடலான் பயில் கருக்குடிக்

கோனுயர் கோயிலை வணங்கி வைகலும்

வானவர் தொழு கழல் வாழ்த்தி வாழ்மினே

பெருமானின் திருவேடங்கள் மருந்தாகவும் மந்திரமாகவும் செயல்படும் தன்மையை திருஞானசம்பந்தர் திருந்துதேவன்குடி தலத்தின் மீது அருளியபதிகத்தின் பாடலில் (3.25.1) குறிப்பிடுகின்றார். திருந்துதேவன்குடி தலத்து பெருமானது அடையாளங்களாகிய திருநீறு உருத்திராக்கம் மற்றும் சடைமுடிஆகியவற்றை கண்ணால் கண்டாலும் அல்லது மனதினால் நினைத்தாலும் ஏற்படும் பயன் யாதென்பதை இங்கே கூறுகின்றேன்; உலகத்தவரேகேட்பீர்களாக, பெருமானின் இந்த அடையாளங்கள், தங்களது நோய்களை தீர்த்துக் கொள்ள விரும்பும் அடியார்களுக்கு மருந்தாகவும், ஐந்தெழுத்துமந்திரம், வேத மந்திரங்கள் மற்றும் திருமுறை பாடல்கள் ஆகியவற்றை சொல்ல விரும்பும் அடியார்களுக்கு அத்தகைய மந்திரங்களாகவும், சிவபுண்ணியங்கள் செய்ய விரும்பும் அடியார்களுக்கு, அத்தகைய புண்ணியங்கள் அளிக்கும் பயன்களாகவும் விளங்குகின்றன, இத்தகைய வேடங்களை தனதுஅடையாளமாகக் கொண்டுள்ள இறைவன், தேவதேவன் என்ற திருநாமத்துடன் வீற்றிருக்கும் தலம் திருந்துதேவன்குடி என்பதாகும். இந்த பெருமானின்திருவேடங்களை, அரிய தவம் புரியும் முனிவர்கள் தியானித்து தொழுகின்றனர், என்பதே பாடலின் பொழிப்புரை.

மருந்து வேண்டில் இவை மந்திரங்கள் இவை

புரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள் இவை

திருந்துதேவன்குடித் தேவர் தேவு எய்திய

அருந் தவத்தோர் தொழும் அடிகள் வேடங்களே

இதே பதிகத்தின் பத்தாவது பாடலில், திருஞானசம்பந்தர், பெருமானின் திருவேடங்கள் பிறவிப் பிணியைத் தீர்க்கும் அருமருந்தாக விளங்குகின்றன என்று கூறுகின்றார். செரு=நெருங்கி வளர்ந்த, மரு=மருத மரம்; மருத மரத்து இலைகள் துவர் நிற சாயத்தை தயாரிக்க பயன்படுவதை திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். தேர்=தேரர் என்ற சொல்லின் சுருக்கம், புத்தர்கள் என்று பொருள்; மருவுதல்=நெருங்குதல்; திரு=அழகு; திரு என்ற சொல்லுக்கு திருமகள் என்று பொருள் கொண்டு திருமகள் வீற்றிருக்கும் தாமரை மலர்கள் நிறைந்த பொய்கை என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. மற்றவர் அருகே வந்து நெருங்குவதற்கு தயங்கும் வண்ணம் சமணர்களின் உடல் நாற்றம் வீசும் வண்ணம் இருந்தது என்று இங்கே திருஞானசம்பந்தர் நமக்கு உணர்த்துகின்றார். அந்நாளைய சமணர்கள், காலையில் எழுந்தவுடன் பற்களை துலக்கி சுத்தம் செய்வதை தவிர்த்தனர்; நீராடுவதையும் தவிர்த்து அவர்கள் வாழ்ந்து வந்தார்கள் என்று கூறுவார்கள். எனவே உடலும் வாயும் துர்நாற்றத்துடன் விளங்கும் அவர்களை நெருங்க ஏனையோர் தயங்கியது இயற்கை தானே. தொழும்பர்=அடிமைகள், இழிந்தவர்கள்; இங்கே இழிந்தவர்கள் என்ற பொருள் மிகவும் பொருத்தமானது. இந்த தலத்தில் உள்ள திருக்கோயில் மூன்று புறமும் குளத்தால் சூழப்பட்டுள்ள தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. அருமருந்து=கிடைத்தற்கு அரிய மருந்து; பெருமானின் கருணை மற்றும் அவனது சின்னங்களே பிறவிப் பிணியை தீர்க்கும் வல்லமை வாய்ந்தது என்பதால் அரிய மருந்து என்று குறிப்பிடுகின்றார். இங்கே உள்ள அம்பிகையின் திருநாமம், அருமருந்து நாயகி என்பதையும் குறிப்பால் திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார் என்றும் பொருள் கொள்ளலாம்.

செருமரு தண்டுவர்த் தேர் அமண் ஆதர்கள்

உரு மருவப்படாத் தொழும்பர் தம் உரை கொளேல்

திருமருவும் பொய்கை சூழ்ந்த தேவன் குடி

அருமருந்து ஆவன அடிகள் வேடங்களே

உசாத்தானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.33.9) திருஞானசம்பந்தர், பெருமானை பிறப்பறுப்பான் என்று குறிப்பிடுகின்றார். தம்மை எப்போதும் நினைத்து வழிபடும் அடியார்களின் மனதினில் நிறைந்துள்ள பெருமான், அத்தகைய அடியார்களின் உடற்பிணியை தீர்ப்பதுடன், பிறவிப் பிணியையும் நீக்குகின்றார் என்று திருஞான சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். பிறப்பு என்ற சொல்லுடன் இணைந்ததாக பிணி என்ற சொல்லினைக் கருதி, பிணி என்ற சொல்லுக்கு ஆணவம் கன்மம் மாயை ஆகிய மலங்கள் என்று பொருள் கொண்டு, அத்தகைய மலங்களை நீக்கி, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அளிப்பவன் பெருமான் என்று பொருள் கொள்வது மிகவும் சிறப்பு. மலங்கள் நீங்கப் பெற்ற உயிர்கள் தானே முக்தி உலகினுக்கு அழைத்துச் செல்லப்படும் தகுதி வாய்ந்ததாக இருக்க முடியும்.

ஆணலார் பெண்ணலார் அயனொடு மாலுக்கும்

காணொணா வண்ணத்தான் கருதுவார் மனத்துளான்

பேணுவார் பிணியொடும் பிறப்பு அறுப்பான் இடம்

சேணுலா மாளிகை திருவுசாத்தானமே

கண்டியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.38.10) பெருமானின் அருளால் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெற்ற அடியார்களை, திருஞானசம்பந்தர், எழு பிறப்பு அறுக்கும் மாந்தர்காள் என்று அழைக்கின்றார். இந்த பதிகம் வினாவுரைப் பதிகம் என்று அழைக்கப் படுகின்றது. பெருமானின் பல செய்கைகளுக்கு தகுந்த காரணம் சொல்லுமாறு இந்த தலத்து அடியார்களை திருஞானசம்பந்தர் வினவுவது போன்ற பாடல்கள் கொண்ட பதிகம். நமர்=சார்ந்தவர்கள்; எழு பிறப்பு=இனி உயிர்கள் எடுக்க இருக்கும் ஏழு வகையான பிறப்புகள்; எந்த உயிருக்கும் இதுவரை தான் எத்தனை பிறவிகள் எடுத்து வாழ்ந்தோம் என்றும் இனிமேல் எத்தனை பிறவிகள் தமக்காக காத்திருக்கின்றன என்பதையும் அறிய முடியாது. அதனால் தான் எழு பிறப்பு என்று பொதுவாக கூறுகின்றார். ஏழு வகையான பிறப்புகள் என்று கூறுவார்கள்; தாவரம், நீரில் வாழ்வன, ஊர்வன, பறப்பன, நடப்பன, மனிதர் தேவர்கள் என்பனவே இந்த ஏழு வகை பிறப்புகள். இந்த ஏழு வகை பிறப்புகளில் எந்த வகையான பிறப்பு நமக்கு அடுத்து வாய்க்கும் என்பதையும் நாம் அறிய முடியாது. அதனால் தான் வரும் பிறப்பு என்று பொதுவாக கூறப்படுகின்றது. பெருமானின் தொண்டர்கள் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபடுவார்கள் என்று பல திருமுறைப் பாடல்கள் உணர்த்துகின்றன. அத்தகைய தொண்டர்களைச் சார்ந்து வாழும் மனிதர்களும் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுவார்கள் என்று இந்த பாடலில் கூறப்படுகின்றது. கமர்=நிலத்தில் காணப்படும் வெடிப்பு; தமர் அழிந்தெழு சாக்கியர்=இம்மை மறுமை ஆகிய இரண்டிலும் இன்பத்தை இழந்துள்ள புத்தர் மற்றும் சமணர்கள்; கடுமையான விரதங்கள் அனுசரிப்பதால் இம்மையில், ஏனையோர் பெறுகின்ற இன்பங்களை இழந்துள்ள சமணர்களும் புத்தர்களும், பெருமானை நோக்கி முறையான தவம் செய்யாமல் இருப்பதால் மறுமையில் இன்பம் பெறுவதற்கு தகுதியற்றவர்களாக விளங்கும் நிலை இங்கே குறிப்பிடப் படுகின்றது. தன்னைச் சார்ந்தவர்கள் இனிமேல் எடுக்கவிருக்கும் ஏழு வகையான பிறப்புகளையும் அறுக்கும் தன்மை உடைய அடியவர்களே, நான் உங்களைக் கேட்கும் வினாக்களுக்கு விடை அளிப்பீர்களாக; நிலத்தில் காணப்படும் வெடிப்புகள் அழியும் வண்ணம் நீர்வளம் மிகுந்து குளிர்ந்த வயல்களால் சூழப்பட்ட கண்டியூர் தலத்தினில் உறையும் வீரட்டன், இம்மை மற்றும் மறுமையில் இன்பங்கள் பெறுவதை தவிர்த்து மூடர்களாக விளங்கும் சமணர்கள் மற்றும் புத்தர்கள் சொல்லுகின்ற உரைகளை ஏற்றுக் கொள்ளாத நிலையில் இருப்பதையும், வானவர்கள் புகழும் வண்ணம் அந்தகாசுரனை அடக்கி அவனது உடலினை சூலத்தில் ஏந்தி வந்த செய்கையின் காரணத்தையும் விளக்கமாக கூறுவீர்களாக என்று அடியார்களை நோக்கி திருஞானசம்பந்தர் வினவுவதாக அமைந்த பாடல்.

நமர் எழு பிறப்பு அறுக்கும் மாந்தர்காள் நவிலுமின் உமைக் கேட்கின்றேன்

கமர் அழி வயல் சூழும் தண்புனல் கண்டியூர் உறை வீரட்டன்

தமர் அழிந்து எழு சாக்கியச் சமண் ஆதர் ஓதும் அது கொளாது

அமரரானவர் ஏத்த அந்தகன் தன்னைச் சூலத்தில் ஆய்ந்ததே

இம்மையில் நோய் தீர்க்கும் மந்திரமாகவும் மருந்தாகவும் செயல்படும் பெருமானின் திருநாமம், மறுமையில் நமது உயிர் நன்னெறி அடைவதற்கும் உதவும் என்று திருநெல்வேலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் திருஞானசம்பந்தர் (3.92.1) கூறுகின்றார். மேலும் மழபாடி மேய மருந்து என்றும் வலஞ்சுழி மருந்து என்றும், மாத்தூர் மேய மருந்து என்றும், தேவர்கள் தேடும் மருந்து என்றும், மணஞ்சேரி மருந்து என்றும், பல பாடல்களில் தேவார ஆசிரியர்கள் பெருமானின் பிணி தீர்க்கும் தன்மையை குறிப்பிடுகின்றனர். புறவு= தோட்டம்;

மருந்தவை மந்திரம் மறுமை நன்னெறி அவை மற்றுமெல்லாம்

அருந்துயர் கெடும் அவர் நாமமே சிந்தை செய் நன்னெஞ்சமே

பொருந்து தண் புறவினில் கொன்றை பொன் சொரிதரத் துன்று பைம்பூம்

செருந்தி செம்பொன் மலர் திருநெல்வேலி உறை செல்வர் தாமே

சிவபெருமானின் புகழினை உணர்த்தும் தேவார, திருவாசகப் பாடல்களை, இனிய இசையுடன் பாடி தொழுகின்ற அடியார்கள், மீண்டும் பிறந்து வருந்தும் அவலத்தைத் தவிர்ப்பார்கள் என்று பரிதிநியமம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.104.11) திருஞானசம்பந்தர் கூறுகின்றார். பையரவம்=படமெடுத்து ஆடும் பாம்பு; விரிந்த காந்தள் மலர்களின் கொத்து படமெடுத்து ஆடும் பாம்பினை ஒத்து இருப்பதாக இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். பாம்பின் படம் விரிந்த மலரையும், மலரைத் தாங்கி இருக்கும் தண்டு பாம்பின் உடலையும் ஒக்கும். விம்மு=தழைத்த;பொய்யிலி=பெருமானின் திருநாமங்களில் ஒன்று. பூந்துருத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல்கள் அனைத்திலும் அப்பர் பிரான் இந்த திருநாமத்தை குறிப்பிடுகின்றார். அனைத்து உயிர்களும் ஏதோ ஒரு நாள், அந்நாள் வரையில் தாங்கள் தங்கியிருந்த உடலை விட்டு பிரிந்தாலும் அதற்கு மாறாக இறைவன் இருக்கும் நிலை காரணமாக, என்றும் உண்மையாக, என்றுமுள்ள பொருளாக இறைவன் இருக்கின்றான் என்பதை உணர்த்தும் வண்ணம் இந்த திருநாமம் அமைந்துள்ளது. பொய்யிலி மாலை=பொய்யிலியாக இருக்கும் சிவபெருமானைப் போற்றும் பாடல்கள் கொண்ட பதிகம்; பொய்யிலி என்ற சொல்லினை மாலைக்கு கொடுக்கப்பட்ட அடைமொழியாகக் கொண்டு, என்றும் பொருந்தும் வகையில் இயற்றப் பட்ட பதிகம் என்று பொருள் கொள்வதும் சிறப்பே.

பையரவம் விரி காந்தள் விம்மு பரிதிந் நியமத்துத்

தையலார் பாகம் அமர்ந்தவனைத் தமிழ் ஞான சம்பந்தன்

பொய்யிலி மாலை புனைந்த பத்தும் பரவிப் புகழ்ந்து ஏத்த

ஐயுறவில்லை பிறப்பறுத்தல் அவலம் அடையாவே

திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.33.10) அப்பர் பிரான், நாம் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்று விரும்பினால், நாம் உழவாரத் திருப்பணியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார். யாக்கை=உடல்; பிணி=துன்பம்; துன்பத்திற்கு இருப்பிடமாக உள்ள உடல் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். தோகை=தோகை உடைய மயிலினைப் போன்று அழகிய உமையன்னை. பண்ணின் நேர் மொழியாள் என்று பாடிய பதிகத்தின் கடைப் பாடலில் (5.10.11) இரக்கம் இல்லாதவர் என்று பெருமானை குறிப்பிட்ட அப்பர் பிரான், இந்த பாடலிலும், இறைவன் இரக்கத்துடன் இராவணனுக்கு அருள் புரிந்ததை குறிப்பிடவில்லை. பலவகையான துன்பங்களுக்கு இருப்பிடமாக உள்ள உடலினைத் துறந்து பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட வேண்டும் என்ற விருப்பம் உங்களுக்கு இருந்தால், மற்ற பொருட்களின் மீது உயிர்களின் மீது வைத்துள்ள பற்றினை அறவே நீக்கி, பெருமானையே ஒரே பற்றுக்கோடாக கருதி, அவனுக்கு அடிமையாக உழவாரத் திருத்தொண்டுகள் புரிவீர்களாக. தான் செல்லும் வழியில் குறுக்கிட்டது என்று கருதி, கயிலை மலையினை பேர்த்தெடுக்கத் துணிந்த அரக்கன் இராவணன், தேரிலிருந்து கீழே குதித்து வேகமாக ஓடி, மலையினை பேர்க்க முயற்சி செய்தான். அவ்வாறு அவன் செய்த முயற்சியில் மலை சற்று அசையவே, மலையின் மீது அமர்ந்திருந்த பெண்மயில் போன்று அழகிய உமையன்னை அஞ்சியதைக் கண்ட பெருமான், அரக்கனின் மணிமுடிகள் பத்தும் மலையின் கீழே நசுங்குமாறு கயிலை மலையினைத் தனது கால் பெருவிரலால் அழுத்தினார். இத்தகைய பண்புகளை உடைய பெருமான், சிறப்பு வாய்ந்த மறைக்காடு தலத்தில் உறையும் இறைவனார் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பிணியுடை யாக்கை தன்னைப் பிறப்பு அறுத்து உய்ய வேண்டில்

பணியுடைத் தொழில்கள் பூண்டு பத்தர்கள் பற்றினாலே

துணிவுடை அரக்கன் ஓடி எடுத்தலும் தோகை அஞ்ச

மணிமுடிப் பத்து இறுத்தார் மாமறைக் காடனாரே

மறுபடியும் பிறவி எடுத்து இந்த உலகத்திற்கு வருவதை தவிர்த்து, இங்கிருந்து இடம் பெயர்ந்து வீடுபேறு நிலையினை அடைவதை பேர்த்து என்று அப்பர் பிரான் குறிப்பிட்டு, பெருமானின் திருநாமங்களைப் பிதற்றி பலனடைய வேண்டும் என்று அறிவுரை சோற்றுத்துறை பதிகத்தின் பாடலில் (4.41.4) கூறுகின்றார். பிதற்றுதல்=தனது நிலையை மறந்து பேசுதல். நமது நிலையை மறந்து நாம் பேசுகின்றோம் என்று மற்றவர்கள் கருதும் வண்ணம், நாம் பெருமானது நாமங்களை விடாமல் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் என்று இங்கே கூறுகின்றார்

பேர்த்து இனிப் பிறவா வண்ணம் பிதற்றுமின் பேதை பங்கன்

பார்த்தனுக்கு அருள்கள் செய்த பாசுபதன் தன் திறமே

ஆர்த்து வந்து இழிவது ஒத்த அலை புனல் கங்கை ஏற்றுத்

தீர்த்தமாய்ப் போத விட்டார் திருச்சோற்றுத்துறையனாரே

பிறவிப் பிணியினை நீக்கிக் கொள்ள நமது முன்னோர்கள் நமக்கு சொல்லிக் கொடுத்த உபாயம், பெருமானின் திருநாமங்களை பிதற்றுதல் தான் என்று சோற்றுத்துறை பதிகத்தின் பாடலில் (4.41.10) அப்பர் பிரான் கூறுகின்றார்.

மற்று நீர் மனம் வையாதே மறுமையைக் கழிக்க வேண்டில்

பெற்றதோர் உபாயம் தன்னால் பிரானையே பிதற்றுமின்கள்

கற்று வந்த அரக்கனோடிக் கயிலாய மலை எடுக்கச்

செற்று உகந்து அருளிச் செய்தார் திருச்சோற்றுத்துறையனாரே

பெருவேளூர் தலத்தின் மீது அருளிய பதிக்த்தின் பாடலில் (4.60.3) அப்பர் பிரான் பிறவியை மாற்றுவான் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். முருகப் பெருமான் சிவபெருமானை வணங்கிய தலங்களில் இந்த தலமும் ஒன்று. வேள் என்று அழைக்கப்படும் முருகன் வணங்கியதால் வேளூர் என்று அழைக்கப்பட்ட தலத்தின் பெயர், அருகில் உள்ள கீழ்வேளூர் தலத்திலிருந்து வேறுபடுத்தி காட்டும் வண்ணம் பெருவேளூர் என்று மாறியதாக கூறுவார்கள். முருகப் பெருமான் இந்த தலத்தில் இறைவனை வணங்கியதை நமக்கு நினைவூட்டும் வகையில் முருகப் பெருமானை அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றாரோ என்று தோன்றுகின்றது. ஆண்டான் அடிமை என்பதே இறைவனுக்கும் அப்பர் பிரானுக்கும் இடையே இருந்த உறவு. பெருமானின் திறத்தினை அறிந்து கொள்வதற்கு அவனது அருள் தேவை. இறைவனுக்கு அடிமையாக மாறி, அந்த உறவினால் கிடைத்த பெருமானது அருள் காரணமாக, தான் இறைவனை உணர முடிந்தது என்று அப்பர் பிரான் கூறுகின்றார். இறைவனைப் பற்றி ஏதும் தெரியாமல் ஏழை அறிவிலியாக இருந்த தான், பெருமானின் அருளினால் அவனது திறத்தினை மற்றவர்க்கு உணர்த்தும் வல்லமை பெற்றவனாக மாறினேன் என்று கூறுகின்றார். குறத்திப் பெண் வள்ளியம்மையின் தோள்களை மணந்த செல்வனாகிய குமரனின் தந்தையும், என்றும் நறுமணம் வீசுவதும் மென்மையானதும் ஆகிய கூவிளம் பூக்களைத் தனது கூந்தலில் சூடிய உமையம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றவனும், பிறவிப் பிணியினை நீக்கி இனிமேல் பிறவாத தன்மை அளிக்க வல்லவனும், பெருவேளூர் தலத்தினை மிகவும் விரும்பி உறைபவனும் ஆகிய பெருமானை, அடியேன் அவனுடன் கொண்டுள்ள உறவின் அடிப்படையில் மற்றவருக்கு உணர்த்தும் வல்லமை பெற்றதால், நான் உணர்ந்த வண்ணம் உங்களுக்கு உணர்த்துவேன் என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்த பாடல்.

குறவி தோள் மணந்த செல்வக் குமரவேள் தாதை என்றும்

நறவு இள மென்கூந்தல் நங்கையோர் பாகத்தானைப்

பிறவியை மாற்றுவானைப் பெருவேளூர் பேணினானை

உறவினால் வல்லனாகி உணருமாறு உணர்த்துவேனே

திருவாலங்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.68.7) அப்பர் பிரான், பெருமானை கோளுடைப் பிறவி தீர்ப்பார் என்று குறிப்பிடுகின்றார். தாள்=தண்டு; தாளுடை செங்கமலம்=தண்டுகளுடைய செந்தாமரை; தடம்=பெருமை; ஒவ்வொரு உயிரும் பிறக்கும் போதே அதன் வாழ்நாளும் நிச்சயிக்கப்படும் என்பது இந்து மதக் கோட்பாடுகளில் ஒன்று. இது பொதுவாக மாறுவதில்லை. சிறுவன் மார்க்கண்டேயன் பிறந்த போதே அவனது வாழ்நாள் பதினாறு வருடம் என்பதும் நிர்ணயிக்கப் பட்டது. ஆனால் சிறுவன் மார்க்கண்டேயன் சிரஞ்சீவியாக வாழும் வண்ணம் அவனது விதியை சிவபெருமான் மாற்றினார். அவனது விதி மட்டுமா அப்போது மாறியது. அவனது உயிரினைக் கவர வந்த இயமனின் வாழ்நாள் முடிவடைய பல வருடங்கள் இருந்த போதிலும், இயமன் பெருமானின் காலால் உதைக்கப்பட்டு கீழே விழுந்தான். பின்னர் பூமாதேவியின் வேண்டுகோளுக்கு இணங்கி பெருமான் அவனுக்கு வாழ்வினை அளித்தார் என்பது புராணம் கூறும் செய்தி. இவ்வாறு தனக்கு வாழ்நாள் இருந்த போதிலும், இயமன் இறந்த செய்தியை நாளுடை காலன் என்ற தொடரினால் அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். விதியினை மாற்றி, இறக்கவிருந்த சிறுவன் மார்க்கண்டேயன் நீண்ட நாள் வாழுமாறு செய்வதும், வாழ்நாள் இன்னும் இருக்கும் நிலையில் இயமனை உதைத்து வீழ்த்தியதும் இறைவன் ஒருவனே செய்யக் கூடிய செயல் என்பதை நாம் உணரும் வண்ணம் நாளுடைக் காலன் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். கோள்=பாசக்கட்டு; உலகத்தில் உள்ள பொருட்கள் மற்றும் உலகத்தில் உள்ள உயிர்கள் மீது நாம் கொண்டுள்ள பாசமே, பல வினைகளுக்கும் காரணமாக உள்ள நிலையும், அதனால் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து உயிர்கள் மீள முடியாத நிலையில் இருப்பதும் இங்கே குறிப்பிடப் படுகின்றது. தண்டினை உடைய செந்தாமரை மலர் போன்று அழகாக உள்ளதும், பெருமையினை உடையதும் ஆகிய திருவடிகளை உடையவரும், இன்னும் வாழ்நாள் உடையவனாக இருந்த இயமனை, சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரினைக் கவர முயற்சித்த குற்றத்திற்காக உதைத்து வீழ்த்தியவரும், நம்மால் விரும்பப்படும் தலைவராக இருப்பவரும், வினையின் பயனாக பல பிறவிகளை கொள்ளும் தன்மையினை உடைய உயிரினை வருத்தும் பிறவிப் பிணியினை தீர்ப்பவரும், குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த பழையனூர் தலத்தில் பொருந்தி உறைபவரும், நம்மை அடிமையாக ஏற்றுக்கொண்டு பாதுகாக்கும் தலைவராக இருப்பவரும் ஆகிய பெருமான் திருவாலங்காடு தலத்தில் உறையும் அடிகளார் ஆவார்என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

தாளுடைச் செங்கமலத் தடம் கொள் சேவடியர் போலும்

நாளுடைக் காலன் வீழ உதை செய்த நம்பர் போலும்

கோளுடைப் பிறவி தீர்ப்பார் குளிர் பொழில் பழனை மேய

ஆளுடை அண்ணல் போலும் ஆலங்காட்டு அடிகளாரே

ஆலவாய் தலத்தின் மீது அருளிய ஒரு பதிகத்தின் பாடலில் (4.62.3) பாடலின் நான்கு அடிகளிலும் மருந்தாக பெருமான் செயல்படும் தன்மையை அப்பர் பிரான் விளக்குகின்றார். ஒரு மருந்து=ஒப்பற்ற தனி மருந்து; மருந்தாக செயல்படுவதில் ஒப்பற்றவன் பெருமான் என்று பாடலை அப்பர் பிரான் துவக்குகின்றார். பெருமருந்து=ஏனைய மருந்துகளுக்கு தலையான மருந்து; கருமருந்து=மீண்டும் உயிர்கள் கருவினில் புகாமல் காக்கும் மருந்து, பிறவிப் பிணியைத் தீர்க்கும் மருந்து; அருமருந்து=கிடைத்தற்கு அரிய மருந்து; ஒப்பற்ற தனி மருந்தாக உள்ளவனே, தேவர்கள் மற்றும் உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் அவர்களது பிறவிப் பிணியைத் தீர்க்கும் தலையான மருந்தாக உள்ளவனே, அமுதமும் கொடுக்க முடியாத பிறப்பு இறப்பு இல்லாத நிலையினைத் தருவதால், அமுதினை விடவும் இனிமையாக உள்ளவனே, எங்களை ஆட்கொண்டு எங்களது வினைகளைத் தீர்க்கும் அரிய மருந்தாக உள்ளவனே, ஆலவாய் தலத்தில் உறைகின்ற அப்பனே, அடியேன் இனிப் பிறவாத வண்ணம் எனக்கு நீர் தான் வரம் அருள வேண்டும் என்று அப்பர் பிரான் வேண்டும் பாடல்.

ஒரு மருந்தாகி உள்ளாய் உம்பரோடு உலகுக்கு எல்லாம்

பெரு மருந்தாகி நின்றாய் பேரமுதின் சுவையாய்

கரு மருந்தாகி உள்ளாய் ஆளும் வல்வினைகள் தீர்க்கும்

அருமருந்து ஆலவாயில் அப்பனே அருள் செயாயே

திருச்சேறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.73.2) அப்பர் பிரான், தனது பிறவியையும் பிணிகளையும் நீக்கி அருள் புரிந்தவர் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். ஓர்த்து=ஆராய்ந்து: உளவாறு=உள்ளவாறு; குண்டர்=சமணர்கள்; வான் பிணிகள்=பெரிய பிணிப்புகள்; இந்த பதிகத்தின் முதல் பாடலில் உமா தேவிக்கு அருள் செய்ததைக் குறிப்பிட்ட அப்பர் பிரான், அடுத்து அடியார்கள் பலருக்கு அருள் செய்தவற்றைக் குறிப்பிடும் முன்னர், தனக்கு அருள் செய்த தன்மையை இரண்டாவது பாடலில் குறிப்பிடுகின்றார். ஆராய்ந்து, உண்மை நெறியாகிய சைவ சமயக் கொள்கைகளை உள்ளவாறு உணர்ந்து, உண்மை அல்லாதவற்றை ஒதுக்கி, உண்மைகளை உணரவேண்டும். அவ்வாறு செய்யாத சமணர்களின் வார்த்தையை உண்மை என்று நம்பி அவர்களது மொழிகள் தந்த மயக்கத்தில் இத்தனை காலம் ஆழ்ந்து இருந்தேன்; இவ்வாறு பொய்யான நெறியில் ஆழ்ந்து கிடந்த என்னை, சூலை நோய் தந்து, அந்த இடத்திலிருந்து பெயர வைத்து, என்னை ஆட்கொண்டவர் சிவபெருமான். சேறைப் பதியில் உள்ள செந்நெறி எனப்படும் கோயிலில் வாழ்கின்ற எம்பெருமான், எனது பிறவிப் பிணியையும், பிறப்பினால் ஏற்படும் பாசப் பிணைப்புகளையும் நீக்கி எனக்கு அருள் புரிந்தார் என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்த பாடல்.

ஓர்த்து உளவாறு நோக்கி உண்மையை உணராக் குண்டர்

வார்த்தையை மெய் என்று எண்ணி மயக்கில் வீழ்ந்து அழுந்துவேனைப்

பேர்த்து எனை ஆளாக் கொண்டு பிறவி வான் பிணிகள் எல்லாம்

தீர்த்து அருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே

ஒரு பொதுப் பதிகத்தின் பாடலில் (4.75.2) அப்பர் பிரான், பெருமானை, பிறப்பு அறுத்து அருள் செய்பவன் என்று குறிப்பிடுகின்றார். பயலை=இளமை: எறிக்கும்=ஒளிவீசும்: சென்னி=தலை: பின்னிலேன்=அந்தம் இல்லாதவன்: முன்னிலேன்=ஆதி இல்லாதவன். உயிரினை ஆதி அந்தம் இல்லாதது என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். இறைவனைப் போன்று, உயிர்களும், உலகப் பொருட்களும் என்றும் நிலைத்து நிற்பவை என்பது சைவ சித்தாந்தக் கொள்கை. ஊழிக் காலத்தில், இறைவனிடத்தில் அனைத்து உயிர்களும் உலகப் பொருட்களும் ஒடுங்கும்: ஊழிக் காலம் முடிந்த பின்னர், ஒடுங்கிய உயிர்களும் பொருட்களும், இறைவனின் விருப்பப்படி வெளிப்படும். பதி (இறைவன்), பசு (உயிர்கள்), பாசம் (உலகப் பொருட்கள்) ஆகிய மூன்றும் அநாதி (ஆதி அந்தம் அற்றவை) என்று கூறும் திருமந்திரப் பாடலை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. இறைவனை பாசம் எனப்படும் மலங்கள் சென்று அணுகாது. பாசங்கள், உயிரினைச் சென்று பற்றும்; ஆனால் உயிர் இறைவனை அணுகினால், பாசங்கள் உயிரினை விட்டு நீங்கிவிடும் என்றும் திருமூலர் இந்த பாடலில் கூறுகின்றார். முதலும் முடிவும் இல்லாதவன் என்று தன்னைக் குறிப்பிட்டுக் கொள்ளும் அப்பர் பிரான் அதன் மூலம் தனது உயிர் பிறப்பு-இறப்புச் சுழற்சியில் அகப்பட்டு இருந்ததை உணர்த்துகின்றார். பின்னிலேன் முன்னிலேன் என்பதற்கு, மறுமைக்குத் தேவையான நற்செயல்களும், இம்மைக்குத் தேவையான நல்வினைகளும் இல்லாதவன் என்று தன்னைச் சொல்வதாகவும் விளக்கம் கூறுவார்கள். திருநீறு பூசிய அகலமான மார்பினை உடைய இறைவனே, சிவபுரத்தில் இருப்பவனே, அமரர்கள் தலைவனே, இளமையான, ஒளிவீசும் சந்திரனை தலையில் அணிந்தவனே, முதலும் முடிவும் இல்லாமல் எப்போதும் பிறவிப் பிணியால் வருந்தும் எனது பிறப்பு இறப்புச் சுழற்சியை அறுத்து அருள் செய்யும் வல்லமை பெற்றவனே, நான் எந்த ஒரு பொருளும் இல்லாதவனாக உள்ளேன், நீ அல்லாமல் எனக்கு வேறு ஒரு பற்றுக்கோடு இல்லை என்று தனது பரிதாபமான நிலையினை அப்பர் பிரான், பெருமானுக்கு உணர்த்தும் பாடல்.

பின்னிலேன் முன்னிலேன் நான் பிறப்பு அறுத்து அருள் செய்வானே

என்னிலேன் ஆயினேன் நான் இளங்கதிர்ப் பயலைத் திங்கள்

சின்னிலா எறிக்கும் சென்னிச் சிவபுரத்து அமரர் ஏறே

நின் அலால் களைகண் ஆரே நீறு சேர் அகலத்தானே

ஆருயிர் திருவிருத்தம் என்று அழைக்கப்படும் பொதுத் திருப்பதிகத்தின் பாடலில் (4.84.3) அப்பர் பிரான், பெருமானை, பெரியார் பிறப்பு அறுப்பான் என்று குறிப்பிடுகின்றார். பெரியார் என்ற சொல் பக்குவமைடைந்து மலங்களின் கட்டுகளிலிருந்து நீங்கிய பெரியோர்களை குறிப்பிடுகின்றது. பிறவாத தன்மை உடையவன் என்பதால், பிறப்பு என்றால் என்ன என்பதை அறியாதவன் சிவபெருமான் என்று நயமாக அப்பர் பிரான் கூறுகின்றார். தக்கன், தன்னை யாகத்திற்கு அழைக்காததையும், அவிர்பாகம் கொடுக்க மறுத்ததையும், இழிவாகப் பேசியதையும் சிவபிரான் முதலில் பொருட்படுத்தாமல் தான் இருந்தார். யாகத்திற்கு சென்ற தாக்ஷாயிணியை, தக்கன் இழிவாகப் பேசியதன் விளைவாக அவள் அவமானம் தாங்க முடியாமல் யாககுண்டத்தில் உயிரினை விட்ட பின்னர், சிவபெருமான் தனது கோபத்தை தடுக்க முடியாமல், வீரபத்திரரை, தக்கனின் யாகத்தை அழிக்க அனுப்புகின்றார். தக்கன் செய்த பல தவறுகளையும் பொறுத்த சிவபெருமான், தக்கனது தவறுகள் எல்லை மீறியவுடன், வீரபத்திரரை அனுப்பி அவனது யாகத்தினைத் தகர்த்தார். நெருப்பின் தன்மை பொருந்தி விளங்கும் சூலத்தினை உடையவர் சிவபெருமான்: இமையாத மூன்று கண்களை உடையவனும், மேன்மை வாய்ந்த அடியார்களின் பிறவிப் பிணியினைத் தீர்ப்பவனும் ஆகிய சிவபெருமான் பிறப்பு இறப்பிற்கு அப்பாற்பட்டவன். பிறப்பு என்றால் என்னதென்று அறியாத, அவனது திருவடி நிழலின் கீழே எனது ஆருயிர் நிலை பெற்று நிற்கின்றது என்று தனது உயிர் பொருந்தியிருக்கும் இடத்தை அப்பர் பிரான் குறிப்பிடும் பாடல்.

தரியா வெகுளியனாய்த் தக்கன் வேள்வி தகர்த்து உகந்த

எரியார் இலங்கிய சூலத்தினான் இமையாத முக்கண்

பெரியான் பெரியார் பிறப்பு அறுப்பான் என்றும் தன் பிறப்பை

அரியான் அடிநிழல் கீழது அன்றோ எனது ஆருயிரே

தன்னை பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுவித்து ஆட்கொள்ளும் வல்லமை வாய்ந்தவன் பெருமான் என்று அப்பர் பிரான் குறிப்பிடும் பாடல், திருவொற்றியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (4.86.11) பாடலாகும். தருக்கின=தனது வலிமையில் மிகுந்த செருக்கு கொண்டு, பருக்கின=பருகச் செய்த;. சிவபிரான் நஞ்சு உண்டதை நினைத்து தனது மனம் வருத்தம் அடைந்ததாக அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். வினைகள் அணுக முடியாதவன் சிவபெருமான். தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, அவர்களை கொடிய விடத்திலிருந்து காப்பாற்ற வேண்டி, அவர்கள் பால் கொண்ட கருணையால், கடலிலிருந்து எழுந்த நஞ்சினை உண்டவன் சிவபெருமான். இதனை நன்கு உணர்ந்தவர் தான் அப்பர் பிரான். பல பாடல்களில் இந்த கருணைச் செயல் வியந்து பாடியுள்ளார். இருந்தாலும், சிவபிரான் பால் அவர் வைத்திருந்த அன்பு, சிவபிரான் நஞ்சு பருகுமாறு நேர்ந்தது வினையின் செயல் என்று கூறி, அதற்கு தான் என்ன செய்வேன் என்று அங்கலாய்ப்பதை நாம் இங்கே காணலாம். தனது வலிமையில் மிகுந்த செருக்கு கொண்டு அரக்கன் இராவணன், கயிலாய மலையினை பேர்த்தெடுக்க முயற்சி செய்தபோது, அவனது பத்து தலைகளும், ஒரே சமயத்தில் அழியுமாறு, தனது கால் விரலால் நெருக்கிய சிவபெருமான், எனது பிறவிப் பிணியினையும், அடியோடு நீக்கி என்னை அடிமையாக ஆட்கொள்ள வல்லவன். எண்ணிறந்த தேவர்களும் அரக்கர்களும் ஒன்று கூடி, அமுதம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்த போது, அந்த கடலிலிருந்த எழுந்த நஞ்சினை, சிவபெருமான் பருகுமாறு தேவர்கள் செய்தார்கள். இவ்வாறு சிவபெருமான் விடத்தை உட்கொள்ளுமாறு நேர்ந்ததை நினைத்தால் என் மனம் பதறுகின்றது. ஒற்றியூர் தலத்தில் உறையும் இறைவனே, முன்னம் பண்டரங்கக் கூத்து ஆடியவனே, என்னால் ஏதும் செய்ய முடியாமல் நான் வருந்துகின்றேன் என்று தனது நிலையை அப்பர் பிரான் குறிப்பிட்டு இறைவனின் கருணையை வேண்டும் பாடல்.

தருக்கின வாளரக்கன் முடி பத்து இறப் பாதம் தன்னால்

ஒருக்கினவாறு அடியேனைப் பிறப்பு அறுத்து ஆளவல்லான்

நெருக்கின வானவர் தானவர் கூடிக் கடைந்த நஞ்சை

பருக்கினவாறு என் செய்கேன் ஒற்றியூர் உறை பண்டங்கனே

நாளும் மறவாது பெருமானை வணங்கும் அடியார்களின் பிறவியை அறுப்பவன் பெருமான் என்று வேதிகுடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.90.4) அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பக்தன் என்று சொல்லும் போது, இறைவனிடத்தில் பக்தி உடையவன் என்று பொருளை மட்டும் குறிப்பிடுகின்றது. பத்தர் என்று சொல்லும் போது பத்து குணங்களை உடையவர்கள் என்பதையும் குறிக்கும் நேர்த்தியை நாம் உணரலாம். பத்து என்ற சொல்லினை பற்று என்ற சொல்லின் திரிபாகக் கொண்டு, பெருமானின் திருவடிப் பற்று கொண்ட அடியார்கள் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. அடியார்களுக்கு இருக்க வேண்டிய குணங்களை பத்து புற குணங்கள் என்றும் பத்து அக குணங்கள் என்றும் சான்றோர்கள் வரைப்படுத்தி உள்ளார்கள். பத்து புற குணங்கள், திருநீறும் உருத்திராக்கமும் பக்தியுடன் தரித்தல், சிவபெருமானை புகழ்ந்து பாடுதல், சிவபிரானின் திருநாமங்களை ஓதுதல், சிவபூசனை புரிதல், சிவபுண்ணியங்கள் செய்தல், சிவபுராணங்களையும் சிவச்சரிதைகளையும் கேட்டல், சிவாலய வழிபாடு செய்தல், சிவனடியார்களை வணங்குதல், சிவனடியார்களுக்கு வேண்டுவன கொடுத்தல், சிவனடியார்கள் இல்லங்களில் அன்றி வேறிடத்தில் அன்னம் உட்கொள்ளாது இருத்தல் ஆகும். பத்து அக குணங்கள், சிவபிரானின் புகழைக் கேட்கும் போது கண்டம் விம்முதல், நாக்கு தழுதழுத்தல், உதடுகள் துடித்தல், உடம்பு குலுங்குதல், மயிர்ப்புளகம் கொள்ளுதல், உடல் வியர்த்தல், சொல் எழாமல் இருத்தல், கசிந்துருகி கண்ணீர் பெருக்குதல், வாய் விட்டு அழுதல், மெய்ம்மறத்தல் ஆகும். இறைவனுக்கு செய்யும் பணிவிடைகளும், வழிபாடுகளும் தினமும் தவறாமல் இருக்க வேண்டும் என்பது இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. தன்னை நாள்தோறும் மறக்காமல் நினைக்கும் அடியார்களின் பிறவிப் பிணியினை வேரோடு அறுப்பவன் சிவபெருமான். பாசத்தை அறவே நீத்து ஜீவன் முக்தர்களாக விளங்கும் அடியார்கள், தங்களை இறைப்பணியில் ஈடுபடுத்திக் கொண்டு தங்களது நிலையை மேலும் உயர்த்திக் கொள்வதற்கு வழி வகுத்தவன் இறைவன். கொத்து கொத்தாக பூக்கும் கொன்றை மலர்களின் நறுமணம் பரவியிருக்கும் வேதிகுடி தலத்தில் உறையும் பெருமானை, நமது தலைவனை நாம் சென்று அடைந்து பணிந்து அவனது அருள் வெள்ளத்தில் மூழ்கி நீராடுவோம் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பத்தர்கள் நாளும் மறவார் பிறவியை ஒன்று அறுப்பான்

முத்தர் கண் முன்னம் பணி செய்து பாரிடம் முன் உயர்ந்தான்

கொத்தன கொன்றை மணம் கமழும் திருவேதிகுடி

அத்தனை ஆரா அமுதினை நாம் அடைந்து ஆடுதுமே

திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.92.19) அப்பர் பிரான், எளிதில் நீக்கிக் கொள்ள முடியாத பிறப்பிறப்புச் சங்கிலியை உடைத்து எறியும் ஆற்றல் படைத்தவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். சுழலார் துயர் வெயில்=கடுமையான வெய்யில் போன்று சுட்டிடும் பிறவிச்சுழலாகிய நோய்:கழலா வினைகள்=எளிதில் கழிக்க முடியாத வினைகள்: காலவனம்=இருள், பிறவிப் பிணிக்கு வெய்யிலை உவமையாக கூறியதால், பிறவிப் பிணியினை நீக்கும் இறைவனின் திருவடிகளை நிழல் என்று கூறும் நேர்த்தியை நாம் உணரலாம். துன்னுதல்=நெருங்கி இருத்தல், பொருந்துதல், காலவனம் என்பதற்கு காலம் என்றும் காடு என்று பொருள் கொண்டு, காலத்தையும் கடந்த இறைவனின் திருவடிகள், காலம் எனும் காட்டினை எரித்து பொசுக்கி விடும் ஒளியாக விளங்கும் என்றும் பொருள் கூறலாம். ஐயாறனின் திருவடிகள் கடும் கோடையில் வெய்யிலில் வருந்துவோருக்கு நிழல் அளிக்கும் சுகம் போன்று, தன்னைத் தொழும் அடியார்களுக்கு, அவர்களைப் பிணைத்து, வெளியேற முடியாமல் அவர்களை வருத்தும் கொடிய பிறப்பு இறப்புச் சுழலிலிருந்து விடுதலை அளிக்கும்: எளிதில் நீக்க முடியாத பிறவிப் பிணியினைத் தீர்த்து, இனிப் பிறவாத தன்மையை அளிக்கும்: நீக்க முடியாமல் பிறவிகள் தோறும் தொடர்ந்து வரும் வினைகளை அறவே நீக்கிவிடும். இவ்வாறு அடித் தொண்டர்க்கு அருள் புரியும் திருவடிகள், ஊழிக் காலத்து இருளையும் தாண்டி நிறைந்த ஒளியாக ஒளிரும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

சுழலார் துயர் வெயில் சுட்டிடும் போது அடித் தொண்டர் துன்னும்

நிழல் ஆவன என்றும் நீங்காப் பிறவி நிலை கெடுத்துக்

கழலா வினைகள் கழற்றுவ கால வனம் கடந்த

அழலார் ஒளியன காண்க ஐயாறன் அடித்தலமே

துயர் வெய்யில் சுட்டிடும் போது அடித்தொண்டர் துன்னும் நிழலாக அருள் புரிவது சிவபிரானின் திருவடிகள் என்று அப்பர் பிரான் பாடியது, இன்றும் பொய்க்காமல் இருக்கின்றது என்பதை உணர்த்தும் நிகழ்ச்சி ஒன்றினை, சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணியம் தனது திருத்தொண்டர் புராண விளக்கத்தில் கூறுகின்றார். ஒரு முறை கடுங்கோடையாகிய வைகாசி மாதத்தில், நல்லூர் பெருமணத்தில் (இன்றைய பெயர் ஆச்சாள்புரம், சீர்காழிக்கு அருகில் உள்ளது) நடைபெற்ற ஞானசம்பந்தர் விழாவிற்குச் சென்ற அவர், வீதி உலா வந்த திருஞான சம்பந்தப் பெருமானைப் பின் தொடர்ந்து செல்ல முடியாமல் வெய்யிலின் தாக்கத்தால், தொண்டர்கள் தவித்ததைக் கண்டதாகவும். அடிக்கடி சாலை ஓரத்தில் இருந்த வீடுகளின் கூரை நிழலில் தங்கிய பின்னரே அவர்கள் தொடர்ந்து சென்றதாகவும் கூறுகின்றார். அப்போது அவர்களுடன் வலம் வந்த ஓதுவார், மேற்கண்ட பாடலை உருக்கமுடன் பாடினார். அவர் அந்த பாடலைப் பாடிய ஐந்து நிமிடங்களில் வானில் மேகம் சூழ்ந்து சூரியனை மறைத்தது என்றும் அதன் பின்னர் திருவீதி உலா முடியும் வரையிலும், மேகங்களால் சூரியன் மறைக்கப்பட்டு இருந்தமையால் அடியார்கள், இன்பத்துடன் வீதி வலத்தில் பங்கேற்றனர். என்றும், தனது புத்தகத்தில் கூறியுள்ளார். இதே போன்ற நிகழ்ச்சி, அவினாசியிலும் ஒரு முறை நிகழ்ந்தாக அன்பர்கள் சிவக்கவிமணிக்கு தெரிவித்துள்ளனர். எனவே நம்பிக்கை வைத்து தேவாரப் பாடல்கள் ஓதினால் உடனே அடியார்கள் பயன் அடையலாம் என்பது இப்போதும் கைகண்ட உண்மையாகத் திகழ்வதை நாம் உணரலாம்.

சத்திமுற்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.96.2) அடியார்கள், பல பிறவிகளில் சேர்த்துக் கொண்ட வினைத் தொகைகளை ஒரு சேர அழித்து அருள் புரிபவன் பெருமான் என்று கூறுகின்றார். அனங்கன்=மன்மதன். அங்கம் ஏதும் இல்லாதவன். வடமொழிச் சொல். காய்தல்=எரித்தல்; செக=பிரிய; ஆய்ந்தாய்ந்து அறுத்தல்=அடியார்கள் பல்வேறு பிறவிகளிலும் ஈட்டிய வினைகள் அனைத்தையும் ஒருசேர அழித்து பிறவிப் பிணியினை அடியோடு நீக்குதல். தவத்தில் ஆழ்ந்திருந்த உனது தவத்தினைக் கலைக்க முயன்ற மன்மதனின் உடலினை உனது நெற்றிக் கண்ணினால் விழித்து அவனது உடல் பொடியாகச் செய்தவனே, சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரினைப் பறிக்க வந்த காலனின் உயிரினைப் பாய்ந்து காலால் உதைத்து நீக்கியவனே, உனது பாதங்களைப் பணியும் அடியார்களின் வினைத் தொகுப்புகளை ஆராய்ந்து அடியோடு அறுத்து அவர்களின் பிறவிப் பிணியினைத் தீர்ப்பவனே, அன்பர்களின் உள்ளத்தை இருப்பிடமாகக் கொண்டவனே, திருச்சத்திமுற்றத்தில் உறையும் சிவக்கொழுந்தே, அடியேனாகிய எனக்கு அருளாய்என்று அப்பர் பிரான் வேண்டும் பாடல்.

காய்ந்தாய் அனங்கன் உடலம் பொடிபடக் காலனை முன்

பாய்ந்தாய் உயிர் செகப் பாதம் பணிவார் தம் பல் பிறவி

ஆய்ந்தாய்ந்து அறுப்பாய் அடியேற்கு அருளாய் உன் அன்பர் சிந்தை

சேர்ந்தாய் திருச்சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே

திருப்புகலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.105.1) அப்பர் பிரான் தனக்கு எவ்வாறெல்லாம் பெருமான் அருள் புரிந்தான் என்று குறிப்பிடுகையில், தனது பிறப்பினை அறுத்தவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். அவனது திருப்பாதமே சிறந்த பற்றுக்கோடு என்ற எண்ணத்துடன் தான் அவனது திருப்பாதங்களை சரணடைந்ததாகவும், அவ்வாறு சரண் அடைந்த தனக்கு பெருமான் அருள் யாது செய்தார் என்பதை சொல்கின்றேன் கேட்பீர்களாக என்று தொடங்கும் அப்பர் பிரான், தன்னுடன் பிணைந்திருந்த வினைக் கட்டுகளை பெருமான் அறுத்தான் என்றும், தன்னைப் பிணைத்திருந்த பிறப்பிறப்புச் சுழற்சியை அறுத்தெரிந்தான் என்றும் தன்னை ஏழு வகையான நரகத்தில் வீழாத வண்ணம் காப்பாற்றினான் என்றும் தன்னைச் சிவலோகத்திற்கு அழைத்துச் சென்றான் என்றும் குறிப்பிடுகின்றார்.

தன்னைச் சரணென்று தாளடைந்தேன் தன்னடி அடையப்

புன்னைப் பொழில் புகலூர் அண்ணல் செய்வன கேண்மின்களோ

என்னைப் பிறப்பறுத்து என்வினை கட்டறுத்து ஏழ் நரகத்து

என்னைக் கிடக்கல் ஒட்டான் சிவலோகத்து இருத்திடுமே

திருவிடைமருதூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.14.4) திருஞானசம்பந்தர், பெருமானை பிறவித் துயர் தீர்ப்பவர் என்று குறிப்பிடுகின்றார். இம்மை=இந்த பிறவி, அம்மை=அடுத்த பிறவி; இறைவனைத் தொழும் அடியார்களின் வினைகள் நாசமாகும் என்று முந்திய பாடலில் கூறிய அப்பர் பிரான், இவ்வாறு வினைகள் நாசமாவதால் ஏற்படும் விளைவினை இந்த பாடலில் கூறுகின்றார். வினைகள் தாமே நாம் மறுபடியும் மறுபடியும் பிறப்பதற்கு காரணமாக உள்ளன. அந்த வினைகள் நீங்கப் பெற்றால், நமக்கு இனிமேல் பிறவி ஏது. ஐந்து பொறிகளின், ஆளுமையில் உள்ள இந்த உயிர், தான் உறைந்துள்ள இந்த உடலைப் பற்றிய கவலை கொள்வதும் மிகவும் இயற்கை. அதனை உணர்ந்த அப்பர் பிரான், இம்மைக்கும் நன்மை பயக்கும் வழிபாடு என்று இந்த பாடலை தொடங்குகின்றார். இடைமருது இறைவனைத் தொழும் அடியார்கள், இந்த பிறவியில் செல்வ வளமும் உடல் வளமும் பெற்று, அந்த வளங்களின் உதவியால், வானவர் தங்களது வாழ்க்கையை இனிமையாக கழிப்பது போன்று, தங்களது வாழ்க்கையில் அனைத்து நலன்களும் பெற்று வாழ்வார்கள். எம்மை ஆள்பவனாகிய இடைமருது இறைவனின் திருப்பாதங்களைத் சிறந்த முறையில் தொழும் அடியார்கள், தங்களது வினைகள் முற்றிலும் நீங்கப் பெற்று, வினைகளால் பிணைக்கப் பட்டுள்ள பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அடைந்து, அடுத்த பிறப்பு என்பது அற்ற நிலையினை அடைவார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

இம்மை வானவர் செல்வம் விளைத்திடும்

அம்மையேல் பிறவித் துயர் தீர்த்திடும்

எம்மை ஆளும் இடைமருதன் கழல்

செம்மையே தொழுவார் வினை சிந்துமே

கடவூர் மயானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (5.38.4) அப்பர் பிரான், அடியார் தங்கள் பிறவி தீர்ப்பார் பெருமான் அடிகள் என்று குறிப்பிடுகின்றார். அறவனார்=அறமே வடிவமாக உள்ளவர்; பைங்கழல்=பசும் பொன்னால் செய்யப்பட்ட கழல்; தேவர்கள் பெருமானது திருவடிகளில் வணங்குவதை, பெருமானின் கழலை வணங்குவதாக அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். பைங்கழல் என்பது பைங்கழல் அணிந்த திருவடிகளை குறிக்கும். கடவூர் மயானத்தில் உறையும் பெருமான் அடிகளின் திருவடிகளை, பசும்பொன்னால் செய்யப்பட்ட கழல்களை அணிந்த திருவடிகளை தேவர்கள் வணங்குகின்றார்கள். அவர் அறமே தனது உருவமாக உடையவர், தனது அடியார்களின் பிறவிப் பிணி நோயினை தீர்ப்பவரும் அவரே என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

இறைவனார் இமையோர் தொழு பைங்கழல்

மறவனார் கடவூரின் மயானத்தார்

அறவனார் அடியார் அடியார் தங்கள்

பிறவி தீர்ப்பார் பெருமான் அடிகளே

குடமூக்கு (தற்காலத்தில் கும்பகோணம் என்று அழைக்கப் படும் தலம்) தலத்தின் மீது அருளீய பதிகத்தின் பாடலில் அப்பர் பிரான், பிறவியை நீக்கிக்கொள்ள விரும்பும் தொண்டர்களே, நீங்கள் பெருமானின் திருநாமங்களை பித்தர்கள் போன்று, இடைவிடாது பிதற்றி, உங்களது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளுங்கள் என்று கூறுகின்றார். இதே பதிகத்தின் முந்தைய பாடலில் தான் உணர்த்திய வண்ணம் நாள்தோறும் இறைவனை வணங்கத் தொடங்கும் அடியார்கள், படிப்படியாக உயர்ந்து அவனது திருநாமங்களை, தாங்கள் அறியாமல் பிதற்றும் நிலைக்கு பக்தியில் மேம்பட வேண்டும் என்ற அப்பர் பிரானின் ஆசை இந்த பாடலில் வெளிப்படுகின்றது. துறவி=உலகப் பற்றுக்களை துறந்தவர்கள்; மறவன்=வீரன்; குறவன்=கிராத வேடம் தாங்கி நின்றவன்; உலகப் பற்றுகளை முற்றிலும் அறுத்துக் கொள்வது மட்டும் நமது பிறவிப் பிணியினை தீர்த்துக் கொள்வதற்கு உதவாது. இறைவனை தியானித்து அவனது அருளினைப் பெற்றால் தான், நாம் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெற முடியும். எனவே தான் இறைவனது திருநாமங்களை மீண்டும்மீண்டும் சொல்லிய வண்ணம் இருக்க வேண்டும். இந்த செய்தியைத் தான் பித்தராய் பிதற்றுமின் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார்.

துறவி நெஞ்சினராகிய தொண்டர்காள்

பிறவி நீங்கப் பிதற்றுமின் பித்தராய்

மறவனாய்ப் பார்த்தன் மேல் கணை தொட்ட எம்

குறவனார் உறையும் குடமூக்கிலே

தனது அடியார்களை பீடித்துள்ள வலிமையான வினைகளையும் தீர்க்கும் மருந்தாக செயல்படும் வல்லமை உடைய பெருமான், பற்கள் இல்லாமலும் உலர்ந்தும் காணப்படும் பிரமனின் கபாலத்தைக் கையில் ஏந்தியவாறு எங்கும் திரிகின்றார் என்றும், பலருக்கும் நன்மை பயப்பவராக விளங்கும் பெருமான், விடத்தை உடையதாக இருந்தாலும் பெருமானுடன் இணைந்த பின்னர் நல்ல குணம் உடையதாக மாறிய பாம்பினைத் தனது இடையில் பூண்டுள்ள பெருமான், தனது விருப்பம் போல் அந்த பாம்பினை ஆட்டுகின்றார் என்றும், பிச்சை ஏற்றாலும் உண்மையில் முக்திச் செல்வம் எனப்படும் சிறந்த செல்வத்தை உடையவராக இருக்கும் பெருமான், நாகேச்சரம் எனப்படும் தலத்தின் இறைவர் ஆவார் என்றும் அப்பர் பிரான் உணர்த்தும் பாடல் நாகேச்சரத்து தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பதிகத்தின் (5.52.1) முதல் பாடலாகும். விடம் கொண்டுள்ள தன்மையால் அனைவரையும் அச்சுறுத்தும் பாம்பு நல்ல குணமுடைய நாகம் என்று இந்த பாடலில் கூறப்படுகின்றது. இறைவனின் சன்னதியில் நல்லன அல்லாத பொருட்களுக்கு இடம் ஏது. எனவே தான், கொலை வெறியுடன் தாக்க வந்த மான்கன்று, தனது கொலை வெறியை விடுத்து, துள்ளி விளையாடும் மான்குட்டியாக பெருமானின் கைகளில் திகழ்வது போல் பாம்பும் தனது கொடிய குணத்தை விட்டுவிட்டு நல்ல குணமுடைய பாம்பாக அடங்கி பெருமானின் சடையிலும் அவரது திருமேனியில் பல இடங்களிலும் தங்கி விடுகின்றது. சந்திரனிடம் தான் கொண்டுள்ள பகையையும் மறந்து, சந்திரனுடன் பெருமானின் சடையில் தங்கும் பாம்பு என்று பல தேவாரப் பதிகங்களில் குறிப்பிடப் படுகின்றது. நல்லான் ஆகிய பெருமானுடன் இணைந்த பாம்பு, தனது கொடிய குணத்தினை விட்டுவிட்டு நல்ல குணத்துடன் திகழ்கின்றது என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.

நல்லர் நல்லதோர் நாகம் கொண்டு ஆட்டுவர்

வல்லர் வல்வினை தீர்க்கும் மருந்துகள்

பல் இல் ஓடு கை ஏந்திப் பலிதிரி

செல்வர் போல் திரு நாகேச்சரவரே

கருவிலி கொட்டிட்டை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.69.8) அப்பர் பிரான், உயிர்களுடன் பிணைந்துள்ள பிறவிப்பிணியை தீர்த்துக் கொள்ளும் வழி, பெருமான் உறைகின்ற தலங்கள் சென்றடைந்து பெருமானைப் பணிந்து வணங்குவதே ஆகும் என்று கூறுகின்றார். பை=படம்: அரையான்=இடுப்பிலே கட்டியவன்; கொய்கொள்=கொய்யத்தக்க; உலகத்தவர்களே நீங்கள் உய்வதற்கான வழியினை நான் சொல்கின்றேன் கேட்பீர்களாக; படம் எடுத்து ஆடும் பாம்பினைத் தனது இடுப்பினில் கச்சையாக கட்டியவனும், மழுப் படையைத் தனது கையில் ஏந்தியவனும் ஆகிய பெருமான், நாம் பறிப்பதற்கு விருப்பம் கொள்ளும் வண்ணம் அழகாக பூத்திருக்கும் பூக்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த கருவிலிக் கொட்டிட்டை தலத்தில் உறைகின்றான். நீங்கள் அந்த தலம் சென்றடைந்து பெருமானை வழிபட்டு வாழ்வினில் உய்வினை அடைவீர்களாக என்று நமக்கு அப்பர் பிரான் அறிவுரை கூறும் பாடல்.

உய்யுமாறு இது கேண்மின் உலகத்தீர்

பை கொள் பாம்பரையான் படையார் மழுக்

கையினான் உறைகின்ற கருவிலிக்

கொய்கொள் பூம்பொழில் கொட்டிட்டை சேர்மினே

திருப்பூவணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.18.10) அப்பர் பிரான், தனக்கு திருப்பணி புரியும் அடியார்களின் பிறவிகளை அறுப்பவன் பெருமான் என்று கூறுகின்றார். அலர்=மலர், இங்கே கொன்றை மாலை; கூவிளம்=வில்வம்; மத்தம்=ஊமத்தை; பூங்கணை வேள்=பூக்களைக் கணையாகக் கொண்ட மன்மதன்; குழல் என்ற சொல் ஆடவர்களின் தலைமுடிக்கும் பொருந்தும். தான் தனது தலையில் சூடியிருந்த கொன்றை மாலையினை சண்டீசருக்கு பெருமான் அருளிய செய்கை இங்கே குறிப்பிடப் பட்டுள்ளது. சண்டீசருக்கு முக்தி அளித்தது போல் பல அடியார்களுக்கும் முக்தி அளிக்கும் தன்மை படைத்தவர் என்று சொல்லி, நாம் எல்லாம் சிவபிரானை வழிபடும் வண்ணம் அப்பர் பிரான் இந்த பாடல் மூலம் தூண்டுகின்றார். அன்போடு அணுகும் அடியார்க்கு முக்தி அளிக்கும் சிவபெருமான், அவரது செயல்களுக்கு இடையூறு செய்ய நினைத்தால், நாம் அழிந்து போவோம் என்ற எச்சரிக்கையும் இங்கே மன்மதன் அழிந்த வரலாறு குறிப்பிடப்பட்டு நமக்கு உணர்த்தப் படுகின்றது. சோலைகள் சூழ்ந்த திருப்பூவணத்துப் புனிதரின் திருவுருவத்தில், முன்னர் தம்மைச் சரணாக அடைந்த சண்டீசருக்கு அருள் புரிந்து, தனது தலையில் இருந்த கொன்றை மாலையைச் சூட்டிய காட்சி தோன்றுகின்றது; தனக்குத் தொண்டு செய்யும் அடியார்களின் பிறவிப் பிணியைத் தீர்த்து அருள் புரியும் தன்மை தோன்றுகின்றது; கோங்கு, வில்வம், ஊமத்தை ஆகியவற்றை அணிந்து அழகுடன் விளங்கும் சடை தோன்றுகின்றது; பூக்களை அம்பாகக் கொண்ட மன்மதனின் உருவத்தை அழித்த வீரச் செயல் தோன்றுகின்றது என்று அப்பர் பிரான் தான் திருப்பூவணம் தலத்தில் கண்ட காட்சியை வடிக்கின்ற பாடல் தான் இந்த பாடல்.

ஆங்கணைந்த சண்டிக்கும் அருளி அன்று தன்முடிமேல் அலர்மாலை அளித்தல் தோன்றும்

பாங்கணைந்து பணி செய்வார்க்கு அருளி அன்று பல பிறவி அறுத்து அருளும் பரிசும் தோன்றும்

கோங்கணைந்த கூவிளமும் மதமத்தமும் குழற்கு அணிந்த கொள்கையோடு கோலம் தோன்றும்

பூங்கணை வேளுருவு அழித்த பொற்புத் தோன்றும் பொழில் திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே

இயல்பாகவே பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்ட ஒருவன் தானே, அடுத்தவருக்கும் அத்தகைய நிலையை அருளமுடியும். தானே தோன்றிய பெருமான், எண்ணற்ற ஊழிக் காலங்களையும் தாண்டி நிலையாக இருக்கின்றார். இவ்வாறு பிறப்பும் இறப்பும் அற்ற பெருமான் பிறப்பிலி என்று பல தேவாரப் பாடல்களில் அழைக்கப் படுகின்றார். அத்தகைய பாடல் ஒன்றினை நாம் இங்கே காண்பது பொருத்தமாக இருக்கும். திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.24.6) அப்பர் பிரான் பெருமானை பிறப்பிலி என்று அழைக்கின்றார். குறுங்கண்ணி=குறுகிய மாலை; பிறை என்ற சொல்லினை குறுங்கண்ணி என்ற சொல்லுடன் சேர்த்து பொருள் கொள்ளவேண்டும். தனது கலைகள் ஒவ்வொன்றாக தேய்ந்து மிகவும் குறுகிய நிலையில் ஒற்றைப் பிறையுடன் தன்னிடம் சரணடைந்த சந்திரனைத் தனது சடையில் சூடிக் கொண்டு அபயம் அளித்த நிகழ்ச்சி இங்கே அப்பர் பிரானால் குறிப்பிடப் படுகின்றது. இறை=முன்கை; செம்மையான்=சரி பாதியாக உடையவன்; இயற்கையாகவே நறுமணம் வாய்ந்த கூந்தலை உடைய அம்பிகையின் கூந்தலை வண்டுகள் மொய்ப்பதாக அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார், பல தலங்களில் வீற்றிருக்கும் அம்பிகையின் திருநாமம் வண்டார் குழலி என்பது நாம் இங்கே நினைவு கூறத் தக்கது.

பிறை அரவக் குறுங்கண்ணிச் சடையினான் காண் பிறப்பிலி காண் பெண்ணோடு ஆண் ஆயினான்காண்

கறை உருவ மணி மிடற்று வெண்ணீற்றான் காண் கழல் தொழுவார் பிறப்பு அறுக்கும் காபாலி காண்

இறையுருவக் கனவளையாள் இடப்பாகன் காண் இருநிலன்காண் இருநிலத்துக்கு இயல்பானான் காண்

சிறை உருவக் களி வண்டார் செம்மையான் காண் திருவாரூரன் காண் அவன் என் சிந்தையானே

இந்த பாடலில் இருநிலத்தின் இயல்பு ஆனான் என்று இறைவனை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். இந்த குறிப்பு நமக்கு மணிவாசகர் அருளிய திருவண்டப்பகுதி பாடல் வரிகளை நினைவூட்டுகின்றது. அட்ட மூர்த்தியாக விளங்கும் பெருமான் எவ்வாறு ஒவ்வொரு பொருளிலும் கலந்து நிற்கின்றான் என்று இந்த வரிகளில் விளக்கப் படுகின்றது. தினந்தோறும் தோன்றும் சூரியனில் ஒளியாகவும், சந்திரனில் குளிர்ச்சித் தன்மையாகவும், வலிமை பொருந்திய அக்னியில் வெப்பமாகவும், ஆகாயத்தை பஞ்ச பூதங்களில் ஒன்றாக கருதாத, அயல் மதத்தவர்களின் பொய்யுரையை மறுக்கும் வண்ணம் மற்ற நான்கு பூதங்களும் தன்னுடன் கலக்கும் தன்மையாக ஆகாயத்திலும் சிறப்பான காற்றினில் இயக்கத்தையும், நிலத்தினில் திண்மையையும் (உறுதித் தன்மையையும்) வைத்தவன் என்று மணிவாசகர் இந்த பாடலில் கூறுகின்றார். இந்த திண்மை தன்மையையே அப்பர் பிரான், இருநிலத்தின் இயல்பு என்று இங்கே உணர்த்துகின்றார். பிறப்பறுக்கும் காபாலி என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். காபாலியாக ஊரெங்கும் பலியேற்கத் திரிவது, அடியார்களின் பிறப்பிறப்புச் சுழற்சியினை அறுப்பதற்காக என்னும் செய்தி இங்கே உணர்த்தப் படுகின்றது. தான் கையில் கொண்டு செல்லும் பாத்திரத்தில், தங்களது மலங்களை (ஆணவம், கன்மம் மாயை எனப்படும் மும்மலங்களை) இடும் அடியார்களுக்கு முக்தி அளித்து அவர்களை பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுவிப்பதே, இறைவன் பலியேற்பதன் நோக்கமாகும். தக்கனின் சாபத்தால் கலைகள் ஒவ்வொன்றாக தேய்ந்து ஒற்றைப் பிறையுடன் அழியும் நிலையில் தன்னிடம் வந்து சரணடைந்த சந்திரனுக்கு அபயமளித்து மாலையாக, பாம்புடன் தனது சடையில் சூட்டிக் கொண்டவனும். பிறப்பேதும் இல்லாதவனும், பார்வதி தேவியைத் தனது உடலில் ஏற்றுக் கொண்டதால் பெண் உருவத்துடன் ஆண் உருவத்தையும் இணைந்த உருவத்தை உடையவனும், கரிய மாணிக்கக்கல் போன்று கருமை நிறத்து கறையுடன் விளங்கும் கழுத்தினை உடையவனும், திருமேனியில் வெண்ணீறு பூசியவனும், தனது பாதங்களைப் பற்றிக் கொள்ளும் அடியார்களை பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுவிப்பவனும், கபாலம் ஏந்தி ஊர் ஊராக பலியேற்கச் செல்பவனும், தனது முன்கைகளில் பெரிய வளையல்கள் அணிந்துள்ள உமையன்னையைத் தனது உடலின் இடது பாகத்தில் ஏற்றவனும், பெரிய நிலப் பரப்பினை உடைய பூமியாகவும், அந்த பூமியின் தனித் தன்மையாகிய திண்மை குணமாக இருப்பவனும், சிறகுகள் உடைய அழகிய வண்டுகள் மொய்க்கும் கூந்தலை உடைய அம்பிகையைத் தனது உடலின் சரி பாதியில் வைத்திருப்பவனும் ஆகிய திருவாரூர் பெருமான் எனது சிந்தனையில் நிறைந்து உள்ளான் என்பதே மேற்கண்ட பாடலின் பொழிப்புரை ஆகும்.

மழபாடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.40.7) அப்பர் பிரான் பிறவி வழி துக்கத்தை நீக்குபவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். சுழி=நீர்ச்சுழி; தோன்றிய ஒரு சில நொடிகளில் அழிந்து மறைந்து விடுவது நீர்ச்சுழி. அது போன்று நிலையற்ற வாழ்க்கை என்று உணர்த்துகின்றார். மேலும் நீரில் தோன்றும் சுழி உடைந்து நீருடன் கலந்து மறுபடியும் தோன்றி மறுபடியும் அழிந்து, என்றும் நீருடன் கலந்தே இருக்கின்றது, அதே போன்று உடலும் பிறப்பிறப்புச் சுழலில் தோன்றி அழிந்து மறுபடியும் மறுபடியும் பிறப்பிறப்புச் சுழலில் சிக்குகின்றது. இந்த நிலை உயிரினுக்கு வருத்தத்தை தருகின்றது. இந்த நிலையிலிருந்து நீங்கும் வழியினை அருள்பவன் இறைவன் ஒருவனே என்று அப்பர் பிரான் இந்த பாடலில் உணர்த்துகின்றார். இழித்தல்=போக்குதல்; பரிதி=ஒளிப் பிழம்பு; தன்னில் தோன்றும் நீர்ச்சுழியினை தன்னிடத்தே அழுத்தி, மறுபடியும் தோன்றச் செய்து மறுபடியும் அழிக்கும் நீரினைத் போன்று, பிறப்பிறப்புச் சுழல் தன்னிடத்தே தோன்றும் உடல்களை அழித்து மீண்டும்மீண்டும் அந்த உடல்கள் தோன்றி அழியும் நிலைக்கு ஆளாக்குகின்றது. இந்த நிலை உயிரினுக்கு தீராத வருத்தத்தை தருகின்றது. சுருண்ட சடையினை உடைய பெருமான் ஒருவனே உயிரின் இந்த வருத்தத்தை போக்கும் வழியினை அருளும் வல்லமை படைத்தவன். அத்தகைய வல்லமை பொருந்திய பெருமானே, தூய நீரான கங்கை நதியினைத் தனது சடையினில் ஏற்ற பெருமானே, நீக்குதற்கு மிகவும் அரியதான பாசத்தை, உலகப் பொருட்களின் மீது உயிர் கொண்டுள்ள பாசத்தை அறவே நீக்கி, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து எனக்கு விடுதலை தரும் பெருமானே, பல குறைகள் நீங்கிய திருமாலும் பிரமனும் காணமுடியாத வண்ணம் நீண்ட நெடும் பிழம்பாய் தோன்றிய ஒளியே, வேதத்தின் முடிவாகத் தோன்றும் முடிவுகளுக்கு அணிகலனாக விளங்குபவனே, உயிர் உன்னை வந்து அடைவதற்கு வழித்துணையாக இருப்பவனே, மலை போன்று உறுதியானதும் ஆகிய வயிரத்தூணாக மழபாடி தலத்தில் உறையும் இறைவனே என்று எனது வாயினால் உன்னை அழைத்து அரற்றி அடியேன் உள்ளம் நைகின்றேன் என்று அப்பர் பிரான் கூறுவதாக அமைந்த பாடல்.

சுழித்துணையாம் பிறவி வழித் துக்கம் நீக்கும் சுருள்சடை எம் பெருமானே தூய தெண்ணீர்

இழிப்பரிய பசுபாசப் பிறப்பை நீக்கும் என் துணையே என்னுடைய பெம்மான் தம்மான்

பழிப்பரிய திருமாலும் அயனும் காணாப் பரிதியே சுருதி முடிக்கு அணியாய் வாய்த்த

வழித்துணையாம் மழபாடி வயிரத் தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே

நெய்த்தானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.41.10) அப்பர் பிரான், பெருமான் உலகம் மற்றும் உலகப் பொருட்களின் மீது கொண்டுள்ள பாசத்தை வெறுத்து நீக்கி பற்றேதும் அற்றவர்களாக வாழும் உயிர்களை பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுவிக்கின்றார் என்று குறிப்பிடுகின்றார். மறித்தான்=நிறுத்தியவன்; வான் கயிலை=சிறப்புகள் வாய்ந்த கயிலாய மலை; தனது வழியில் கயிலாய மலை குறுக்கிட்டது என்று கருதி, தான் சென்று கொண்டிருந்த தேரினை நிறுத்திய அரக்கன் இராவணன் அந்த கயிலாய மலையினை பேர்த்து எடுக்கும் எண்ணத்துடன், தான் சென்று கொண்டிருந்த தேரில் இருந்து கீழே இறங்கினான். இவ்வாறு அரக்கன் இராவணன் கயிலை மலையைப் பேர்த்து எடுக்க முயற்சி செய்தபோது, அவனது வலிமையை அழித்து அவனது முயற்சியை வீணாக்கியவன் பெருமான்; அவன் பல சிறப்புகள் வாய்ந்த கயிலாய மலையில் பொருந்தி உறைகின்றான். உலகப் பற்றினை முற்றிலும் வெறுத்த அடியார்களை பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுவிப்பவனும், வீழிமிழலை தலத்தினில் உறைபவனும், அறத்தின் வடிவமாக இருப்பவனும், எவராலும் தாங்கமுடியாத விடத்தினை உண்டு அதன் பின்னர் வந்த அமுதத்தினை தேவர்கள் உண்பதற்கு வழிவகுத்தவனும், ஐந்து புலன்களையும் அடக்கி ஆட்கொண்டவனும் ஆகிய பெருமானாகிய நீ, நெய்த்தானம் தலத்தில் நிற்கின்றாய். நீ எனது நெஞ்சினில் நிறைந்து நிற்கின்றாய் என்று அப்பர் பிரான் கூறுவதாக அமைந்த பாடல்.

மறித்தான் வலி செற்றாய் நீயே என்றும் வான்கயிலை மேவினாய் நீயே என்றும்

வெறுத்தார் பிறப்பு அறுப்பாய் நீயே என்றும் வீழிமிழலையாய் நீயே என்றும்

அறத்தாய் அமுது ஈந்தாய் நீயே என்றும் யாவர்க்கும் தாங்கொணா நஞ்சமுண்டு

பொறுத்தாய் புலன் ஐந்தும் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சுளாயே

நீக்குதற்கு மிகவும் அரியதாக இருக்கும் பிறவியையும் நாம் பெருமானைப் பணிந்து நீக்கிக் கொள்ளலாம் என்று அப்பர் பிரான் நமக்கு அறிவுரை வழங்கும் பாடல் சோற்றுத்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலாகும் (6.42.2). ஈண்ட என்ற சொல் ஈண்டா என்று எதுகை கருதி திரிந்தது; ஈண்ட=நீக்குதற்கு; இரும்=அரிய, கடுமையான, விதி=வழிமுறை; இதே பதிகத்தின் முந்திய பாடலில் உய்வு என்று கூறியது யாது என்பதை இந்த பாடலில் அப்பர் பிரான் உணர்த்துகின்றார். அம்மான்=தாய் போன்றவன்; துறை=இடம்; வினைப் பயன்களால் தொடர்ந்து பிறவி ஏற்படுவதும், வினைகளை முற்றிலும் நுகர்ந்து கழிக்க முடியாத நிலையில் உயிர் இருப்பதையும் கருத்தினில் கொண்டு, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபடுதல் இயலாத காரியம் என்ற எண்ணத்தில் இருக்க வேண்டாம் என்று அறிவுரை கூறும் பாடல். உலகத்தவர்களே, நீக்குவதற்கு மிகவும் அரிதாக உள்ள இந்த பிறவியையும், பிறவியினால் ஏற்பட்ட உடலினையும் துறந்து விடுவதற்கு வழி உள்ளது என்பதை யான் கூறாமலே நீங்கள் அறிவீர்கள் என்று நினைக்கின்றேன்; எனினும் அந்த வழி யாது என்பதை அடியேன் விளக்குகின்றேன்; நான் சொல்வதை நீங்கள் கேட்பீர்களாக; வானுலகத்தவர்களுக்கு தலைவனும், நிலவுலகத்தில் பிறந்த அடியேனை ஆட்கொண்டவனும், சிறப்பு வாய்ந்த மேரு மலையினை வில்லாக வளைத்து வானில் திரிந்து கொண்டிருந்த மூன்று பறக்கும் கோட்டைகளையும் அம்பு எய்தி எரித்தவனும், நமக்கு தாய் போன்றவனும், திருமாலும் பிரமனும் காண முடியாத வண்ணம் நீண்ட தழலாக நிமிர்ந்தவனும் ஆகிய பெருமான் உறைகின்ற நெய்த்தானம் நகரத்தில் அமைந்துள்ள திருக்கோயிலை, மனதில் நினைத்து வணங்கினால் நீர், வாழ்வினில் உய்வினை அடையலாம் என்று அப்பர் பிரான் நமக்கு அறிவுரை கூறும் பாடல்.

ஈண்டா இரும் பிறவி துறவா ஆக்கை இது நீங்கலாம் விதி உண்டென்று சொல்ல

வேண்டாவே நெஞ்சமே விளம்பக்கேள் நீ விண்ணவர் தம் பெருமானார் மண்ணில் என்னை

ஆண்டான் அன்று அருவரையால் புரம் மூன்று எய்த அம்மானை அரி அயனும் காணா வண்ணம்

நீண்டான் உறை துறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்தக்கால் உய்யலாமே

திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.53.4) அப்பர் பிரான், தன்னை என்றும் மறவாது அன்புடன் வழிபடும் அடியார்களின் பிறப்பினை அறுக்கும் வல்லமை வாய்ந்த பெருமான் என்று குறிப்பிடுகின்றார். விகிர்தர்=மற்ற தெய்வங்களிலிருந்து மாறுபட்டவர்; இந்த பாடலில் அப்பர் பிரான் இறைவனை விகிர்தர் என்று அழைப்பதை நாம் காணலாம். தேவர்களுக்கு அமுதம் அளிப்பதற்காக தான் நஞ்சினை உண்ட சிவபெருமானின் செய்கை, அப்பர் பிரான் அவரை விகிர்தர் என்று அழைப்பதற்கு காரணமாக இருந்தது போலும். வீரி=காளி; திருமாலால் அறிய முடியாதவரும், அடியார்கள் கேட்கும் வரங்களை அளிக்க கூடிய வள்ளலும், தன்னை மறவாமல் துதிக்கும் அடியார்களுக்கு பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அளிக்க வல்லவரும், நான்கு மறைகளுக்கும் தலைவராக இருப்பவரும், அஞ்செழுத்தினைத் தனது திருநாமமாக உடையவரும், நம்மால் விரும்பப் படுபவரும், வேல் மற்றும் சூலம் ஆகிய ஆயுதங்களைத் தனது கையில் ஏந்திய காளி தேவியை படைத்தவரும் ஆகிய இறைவன் அகன்று பரந்த திருவீழிமிழலை தலத்தில் அமைந்துள்ள திருக்கோயிலில் உறைகின்றார். தேவர்கள் அமுதம் உட்கொள்ளும் பொருட்டு, அதன் முன்னர் பொங்கி எழுந்த ஆலால விடத்தினைத் தான் உண்டு தனது கழுத்தினில் அடக்கி, தான் ஏனைய தெய்வங்களிலிருந்து மாறுபட்டவர் என்பதை உணர்த்திய விகிர்தரும் ஆகிய இறைவன் அடியேனை ஆட்கொண்டவராவார் என்று அப்பர் பிரான் நமக்கு அறிவிக்கும் பாடல் இந்த பாடல்.

மாலாலும் அறிவரிய வரதர் போலும் மறவாதார் பிறப்பு அறுக்க வல்லார் போலும்

நாலாய மறைக்கு இறைவர் ஆனார் போலும் நாம எழுத்து அஞ்சாய நம்பர் போலும்

வேலார்கை வீரியை முன் படைத்தார்போலும் வியன்வீழிமிழலை விகிர்தர் போலும்

ஆலாலம் மிடற்றடக்கி அளித்தார்போலும் அடியேனை ஆளுடைய அடிகள் தாமே

மேலும் புள்ளிருக்குவேளூர் என்று அழைக்கப்படும் தலத்தில் (தற்போதைய பெயர் வைத்தீசுவரன் கோயில்) இறைவன் மருத்துவனாக காயங்களுக்கு சிகிச்சை (முருகப் பெருமானின் படைவீரர்களுக்கு) செய்த நிலை இந்த திருக்கோயிலின் தலபுராணத்தில் கூறப்படுகின்றது. தாரகாசுரனுடன் நடந்த போரில் காயம் அடைந்த தனது படை வீரர்களுக்கு மருத்துவ உதவி செய்யுமாறு இறைவனை முருகக் கடவுள் வேண்டுகின்றார். இறைவனுடன் இறைவியும், எண்ணெய் கிண்ணத்துடன், சிவபிரான் கொடுக்கும் மருந்துகளை குழைத்து காயங்களில் தடவுவதற்கு வசதியாக வருகின்றார். இதனால் அம்மைக்கு தைல நாயகி என்ற பெயர் வந்தது. தைல நாயகி நாளடைவில் தையல்நாயகி என்று மருவிவிட்டது. இறைவனுக்கு வைத்தியநாதன் என்ற பெயர் வந்த காரணம் இது தான். இந்த தலத்தில் உள்ள வேப்பமரத்தின் நிழலில் அமர்ந்து தான் சிவபிரான் வைத்தியம் பார்த்ததாக நம்பப் படுகின்றது. வைத்தியநாதனாக சிவபிரான் அருள் புரிந்தமை குறித்து அப்பர் பிரான் இந்த தலத்தின் மீது இயற்றிய தனது தேவாரப் பதிகத்தில் (ஆண்டானை அடியேனை ஆளாக கொண்டு எனத் தொடங்கும் பதிகம்–6,54) எட்டாவது பாடலில் பாடியுள்ளார். வாராத செல்வம் என்று குறிப்பிடுவதை எளிதில் கிடைக்காத வீடு பேறு செல்வம் என்றும், மறுபடியும் இந்த உலகில் வந்து பிறவாத நிலையை உடைய செல்வம் என்றும் கொள்ளலாம். எப்போதும் இறைவனை பிரியாது வழிபடும் அடியவர்க்கு இந்த நிலை அருளப்படும் என்பதும் இந்தப் பாடலில் உணர்த்தப் படுகின்றது. மந்திரமும் தந்திரமும் மருந்துமாகி என்ற தொடர் மூலம், இறைவன் உடல் நோயினையும் உயிர் நோயாகிய பிறவிப் பிணியினையும் தீர்ப்பவனாக செயல்படும் தன்மை உணர்த்தப் படுகின்றது.

பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானைப் பிறிவிலா அடியார்க்கு என்றும்

வாராத செல்வம் வருவிப்பானை மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகி

தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னைத் திரிபுரங்கள் தீயெழ திண்சிலை கைக் கொண்ட

போரானை புள்ளிருக்கு வேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே

கயிலாயம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.55.2) அப்பர் பிரான், பெருமானை, பிறவி அறுக்கும் பிரானே என்று அழைக்கின்றார். மருவி=விரும்பி; பொய்ச்சார்=பொய்த்தார் என்ற சொல்லின் திரிபு என்றும் உரைப்பார்கள். திரிபுரத்து அரக்கர்களை பொய் கூறும் பழக்கம் உடையவர்கள் என்றும் விளக்கம் கூறுதல் உண்டு. பேய்களோடு நடனம் ஆடுவதை உகந்தவனே, பிறப்பு இறப்புச் சுழற்சியிலிருந்து உயிர்களுக்கு விடுதலை அளிக்கும் வல்லமை படைத்தவனே, உயிர்களை அவற்றின் வினைத் தொகுதிகளுக்கு ஏற்ப பல வகையான உடல்களில் வைத்து, அந்த உயிர்கள் வினைகளைத் தீர்த்துக் கொள்வதைக் கண்டு மகிழ்பவனே, விருப்பமுடன் எனது சிந்தையில் புகுந்தவனே, மெய்ப்பொருளான உன்னை விடுத்து பொய்யான பொருளைச் சார்ந்து இருந்த முப்புரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும் எரித்தவனே, எனது சிந்தையினில் புகுந்த பின்னர் அங்கிருந்து நீங்காது இருப்பவனே, இடுப்பினில் கச்சு போன்று நாகத்தை அணிந்தவனே, கயிலை மலையில் உறையும் இறையவனே, உன்னை போற்றி, போற்றி என்று பலமுறை போற்றி வணங்குகின்றேன் என்று குறிப்பிட்டு அப்பர் பிரான், தனது வணக்கத்தை தெரிவிக்கும் பாடல்.

பிச்சாடல் பேயோடு உகந்தாய் போற்றி பிறவி அறுக்கும் பிரானே போற்றி

வைச்சாடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி மருவி என் சிந்தை புகுந்தாய் போற்றி

பொய்ச் சார் புரம் மூன்றும் எய்தாய் போற்றி போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி

கச்சாக நாகம் அசைத்தாய் போற்றி கயிலை மலையானே போற்றிபோற்றி

கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.64.4) அப்பர் பிரான், பிறவி நோயினைத் தீர்ப்பவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். ஏயவன்=பொருந்தி இருப்பவன்; வாயவன்=வாயின் கண் இருப்பவன்; வாயிலிருந்து வரும் சொல்லாக இருப்பவன் என்று உணர்த்துகின்றார். பெருமானின் திருவடிகளை நினைத்து வாழும் அடியார்களின் வாயில் இருப்பவன் இறைவன் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். அனைத்து உயிர்களுக்கும் தாயாக இருந்து அரவணைத்து காப்பவனும், தனக்கு ஒப்பாக எவரும் இல்லாததால் மேம்பட்ட பொருளாக இருப்பவனும், பார்வதி தேவியைத் தனது உடலில் ஏற்றவனே என்று அன்புடன் அழைக்கும் அடியார்களின் வாய்மொழியாக இருப்பவனும், தனது அடியார்களுக்கு இனிமேல் வரக்கூடிய பிறவிகளை தவிர்க்கும் வல்லமை உடையவனும், தன்னை நினைக்காத வானவர்கள் தானவர்கள் மற்றும் உலகத்தவர்களுக்கு மிகவும் தொலைவில் உள்ளவனும், தங்களது சித்தத்தில் நிறைவாக பெருமானின் திருவடிகளை தியானித்து எழும் அடியார்களின் மனதினில் பொருந்தி இருப்பவனும் ஆகிய பெருமான் அழகு வாய்ந்த சோலைகள் சூழ்ந்த கச்சி மாநகரத்தில் உறைகின்ற ஏகம்பன் ஆவான். அவனே எனது எண்ணத்தில் நிறைந்து நிற்கின்றான் என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்த பாடல் .

தாயவன் காண் உலகிற்குத் தன்னொப்பில்லாத் தத்துவன் காண் மலை மங்கை பங்கா என்பார்

வாயவன் காண் வரும் பிறவி நோய் தீர்ப்பான் காண் வானவர்க்கும் தானவர்க்கும் மண்ணுளோர்க்கும்

சேயவன் காண் நினைவார்க்குச் சித்தமாரத் திருவடியே உள்கி நினைத்தெழுவார் உள்ளம்

ஏயவன் காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே

திருநாகேச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.66.7) அப்பர் பிரான், தனது பிறவித் துயரினைத் தீர்த்தவர் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். மால் விடை=சிறந்த காளை வாகனம் என்றும், திருமாலை வாகனமாக ஏற்றவன் என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்வதும் பொருத்தமே. வேதங்கள் உணர்த்தும் உட்பொருளாக இருப்பவனும், சிறப்பு வாய்ந்த இடபத்தை வாகனமாக உடையவனும், பெரிய கடலில் தோன்றிய நஞ்சினை உண்டவனும், வானவர்களின் தலைவனாக இருப்பவனும், அடியேனின் பிறவித் துயரினைத் தீர்ப்பவனும், பல ஊழிகளையும் கடந்து நிலையாக நிற்கும் சிறப்பினைப் பெற்ற கச்சி ஏகம்பத்தில் உறையும் இனிய அமுதமாக இருப்பவனும், ஏனையோர் அறியாத வண்ணம் எனது உள்ளத்தில் ஒளித்து வைக்கப் பட்டு சிறைபட்டு இருப்பவனும், நாகேச்சரத்து நகரினில் உறைபவனும் ஆகிய இறைவனைச் சேராதார்கள், நல்ல நெறியில் செல்லாதவர்கள் ஆவார்கள் என்று அப்பர் பிரான் கூறுவதாக அமைந்த பாடல்.

மறையானை மால்விடை ஒன்று ஊர்தியானை மால்கடல் நஞ்சு உண்டானை வானோர் தங்கள்

இறையானை என் பிறவித் துயர் தீர்ப்பானை இன்னமுதை மன்னிய சீர் ஏகம்பத்தில்

உறைவானை ஒருவரும் ஈங்கு அறியா வண்ணம் என்னுள்ளத்துள்ளே ஒளித்து வைத்த

சிறையானைத் திருநாகேச்சரத்து உளானை சேராதார் நன்னெறிக்கண் சேராதாரே

குடந்தைக் கீழ்க்கோட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.75.10) பிறவிக் கடலில் மூழ்கி தத்தளித்த தன்னை, கைகொடுத்து கரையேற்றியவர் பெருமான் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். கோவி=கிருஷ்ணா நதி; குடமூக்கு தலத்தின் மீது (குடந்தை மங்களேசேர் திருக்கோயில்) அருளிய பதிகத்தின் (5.22) பல பாடல்களில், குடந்தை மகாமக குளத்தில் மகாமக தினத்தன்று தோன்றும் பல புண்ணிய நதிகளை குறிப்பிட்ட அப்பர் பிரான் இந்த பாடலிலும் அத்தகைய புண்ணிய தீர்த்தங்களை குறிப்பிடுகின்றார். முந்தைய பாடலில் சண்டீசருக்கு அருள் புரிந்ததை குறிப்பிட்ட அப்பர் பிரானுக்கு, தனக்கு பெருமான் அருள் புரிந்ததையும் இந்த பதிகத்தில் குறிப்பிட வேண்டும் என்ற ஆவல் பிறந்தது போலும். ஏவி=ஏவப்பட்டு, தான் துன்பம் அடைந்ததும் தனது வினைகளை கழித்துக் கொள்ளும் முகமாக இறைவன் செய்த ஏற்பாடு என்று அப்பர் பிரான் கூறுகின்றார். அந்தந்த உயிர்கள் முந்திய பிறவிகளில் ஈட்டிய வினைகளின் தொகுதிக்கு ஏற்ப, இந்த பிறவியில் நமது உடலும் நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்களும் அமைகின்றன. இந்த செய்தி தான் இங்கே உணர்த்தப் படுகின்றது. குறி இல் குணம்=மாயையின் தன்மை ஏதும் இல்லாத குணங்கள், இறைவனின் குணங்களே மாயையின் தன்மையில் இல்லாத குணங்கள் ஆகும். தான் சாயுஜ்ய பதவி அடைந்து இறைவனுடன் ஒன்றி, இறைவனது குணங்கள் வாய்க்கப் பெறுவதை இந்த பாடலில் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். அடியேனது வினைகளுக்கு ஏற்ப, இறைவனால் இந்த உடலினை இந்த பிறவியில் பெற்றுள்ள நான், எனது பழைய வினைகளின் தன்மையால் துன்பங்களில் ஆழ்ந்து இடருற்றேன். நான் படும் துன்பங்களை அறிந்து கொண்ட இறைவன், எனது பிறவிப் பிணியினை நீக்கினார்; இந்த நிலவுலகத்திலிருந்து முக்தி உலகத்திற்கு வருமாறு என்னை கூவி அழைத்தார்; இவ்வாறு, இந்த மானிடப் பிறவியை அறுத்து, அடியேன் விண்ணவர் உலகங்கள் அனைத்தையும் தாண்டித் தனது உலகமான சிவலோகத்தில் சென்று சேரும்படி செய்யும் பெருமான், மாயை கலவாத வண்ணம் உள்ள தனது ஆறு குணங்களில் என்னை ஆட்படுத்தி உள்ளார். தாவி வரும் காவிரி நதி தொடங்கி, நல்ல யமுனை, கங்கை, சரசுவதி, மதுரை பொற்றாமரைக் குளம், புஷ்கரணி என்று கருதப்படும் பல புண்ணிய தீர்த்தங்கள், கிருஷ்ணா நதி, குமரி நதியை தன்னுள் அடக்கிக் கொண்ட கடல் ஆகியவை பொங்கி வரும் மகாமக குளத்தினை உடைய குடந்தை நகரின் கீழ்க்கோட்டம் திருக்கோயிலில் கூத்தனாக உறைகின்றார் என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்த பாடல்.

ஏவி இடர்க் கடல் பட்டு இளைக்கின்றேனை இப்பிறவி அறுத்து ஏற வாங்கி ஆங்கே

கூவி அமர் உலகு அனைத்தும் உருவிப் போகக் குறி இல் அறு குணத்து ஆண்டு கொண்டார் போலும்

தாவி முதல் காவிரி நல் யமுனை கங்கை சரசுவதி பொற்றாமரை புட்கரணி தெண்ணீர்க்

கோவியொடு குமரி வரு தீர்த்தம் சூழ்ந்த குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே

திருமுதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.68.7) அப்பர் பிரான், பெருமானை வலிமை வாய்ந்த வினைகளை வேருடன் அறுத்தெறியும் மருந்து என்று குறிப்பிடுகின்றார். ஐம்புலனும் காத்தான்=ஐந்து புலன்களும் சேட்டைகள் செய்து அடியார்களின் சிந்தனையை திசை திருப்பாத வண்ணம் காப்பவன்; பொங்க=செழிக்க, சிறந்து விளங்க; மாத்து=பெருமை; மகத் என்ற வடமொழி சொல்லின் திரிபு; மாத்தாடி=பெருமை உடைய நடனம்; தாருகவனத்து முனிவர்கள் தன் மீது ஏவிய மதம் கொண்ட யானையின் தோலை உரித்த தருணத்தில் தனது திருமேனி, பார்ப்பவர்களின் கண்களை கூசும் வண்ணம் ஒளி மிகுந்து விளங்க, அந்த கோலத்தைக் கண்ட தேவர்களின் கண்களை பாதுகாக்கும் பொருட்டு யானையின் தோலைத் தனது உடலின் மீது போர்த்தவனும், கொல்ல வந்த புலியின் தோலினை உரித்துத் தனது ஆடையாக அணிந்து எங்கும் திரிபவனும், அடியார்களின் இறைச் சிந்தனையை ஐந்து பொறிகளும் திசை திருப்பாத வண்ணம் பாதுகாப்பவனும், பறக்கும் மூன்று கோட்டைகளையும் வெகுண்டு எரித்தவனும், கழல் அணிந்த தனது காலினால் இயமனை கோபித்து உதைத்தவனும், பெருமை மிகுந்த நடனத்தை ஆடுபவனும், பக்தி கொண்டு தன்னை வணங்கும் அடியார்களின் வலிமையான வினைகளை வேருடன் களைபவனும், அடியார்களை வருத்தும் பிறவிப் பிணிக்கு மருந்தாகத் திகழ்ந்து அதனை போக்குவனும் ஆகிய பெருமானை, மிகவும் பழமையான முதுகுன்றம் தலத்தில் உறையும் பெருமானை, நான் அறியாமல் திகைத்திருக்கும் நிலையில் என்னை ஆழ்த்திய எனது தீவினைகள் மிகவும் கொடியன அல்லவா என்று அப்பர் பிரான் தனது நிலையை எண்ணி. தனது வருத்தத்தை தெரிவிக்கும் பாடல்.

போர்த்து ஆனையின் உரிதோல் பொங்கப்பொங்கப் புலியதளே உடையாகத் திரிவான் தன்னை

காத்தானை ஐம்புலனும் புரங்கள் மூன்றும் காலனையும் குரை கழலால் காய்ந்தான் தன்னை

மாத்தாடி பத்தராய் வணங்கும் தொண்டர் வல்வினை வேரறும் வண்ணம் மருந்துமாகித்

தீர்த்தானைத் திருமுதுகுன்று உடையான் தன்னைத் தீவினையேன் அறியாதே திகைத்தவாறே

மாமுனிவர் தம்முடைய மருந்து என்று பெருமானை அப்பர் பிரான் வலஞ்சுழி மற்றும் கொட்டையூர் தலங்களை இணைத்து பாடிய பதிகத்தின் பாடலில் (6.73.6) குறிப்பிடுகின்றார். நமது பிறவிப் பிணிக்கு இறைவன் சிறந்த மருந்து என்பதை நாம் அறிந்தாலும், நமது பிறவிப் பிணியினை தீர்த்துக் கொள்வதற்கு நாம் முயற்சிகள் ஏதும் எடுப்பதில்லை. அவ்வப்போது உடல் அனுபவிக்கும் சிற்றின்பங்களில் மனம் மகிழும் நாம், அத்தகைய சிற்றின்பங்களின் விளைவால் பின்னர் உடல் அனுபவிக்கும் பல துன்பங்களை பொருட் படுத்துவதும் இல்லை. இந்த உடலும் உடல் பெறுகின்ற சிற்றின்பங்களும் நிலையானவை என்ற மாயையில் ஆழ்ந்து, அத்தகைய சிற்றின்பங்கள் பெறுவதற்கு துடிக்கின்றோம். எனவே பிறவியை உயிர் அடைந்துள்ள பிணியாகவே கருதுவதில்லை. பிறவியை ஒரு பிணியாக கருதினால் தானே, உயிரைப் பீடித்துள்ள பிணிக்கு மருந்து தேடுவதற்கு முயற்சி செய்வோம். ஆனால் இந்த பிறவிப் பிணியால் உயிர் அடைகின்ற துயரங்களை உணர்ந்துள்ள முனிவர்கள், உலகப் பொருட்கள் மீதும் உலகத்து உயிர்கள் மீது தாங்கள் கொண்டிருந்த பாசத்தினை நீக்கி, துறவறம் மேற்கொண்டு இறைவனை தியானம் செய்து அதன் பயனாக தங்களது பிறவிப் பிணியினை அறுத்துக் கொள்வதை உணர்த்தும் பொருட்டு, மாமுனிவர் தம்முடைய மருந்து என்று இங்கே அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். சண்டன்=சண்டீசன்; தேவர்களும் தொழும் நிலைக்கு சண்டீசனை உயர்த்திய செய்தி இந்த பாடலில் கூறப்பட்டுள்ளது.

சண்டனை நல்லண்டர் தொழச் செய்தான் கண்டாய் சதாசிவன் கண்டாய் சங்கரன் தான் கண்டாய்

தொண்டர் பலர் தொழுது ஏத்தும் கழலான் கண்டாய் சுடரொளியாய்த் தொடர்வு அரிதாய் நின்றான் கண்டாய்

மண்டு புனல் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மாமுனிவர் தம்முடைய மருந்து கண்டாய்

கொண்டல் தவழ் கொடிமாடக் கொட்டையூரில் கோடீச்சரத்து உறையும் கோமான் தானே

திருநாரையூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.74.5) அப்பர் பிரான், பெருமான் வருபிணி தீர்க்கும் மருந்தாக செயல்படுவதாக குறிப்பிடுகின்றார். உமையம்மை தன்னை நோக்கித் தவம் செய்ததால் மகிழ்ந்த சிவபெருமான் அவரை திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தி இந்த பாடலில் நமக்கு சொல்லப்படுகின்றது. எனவே சிவபெருமானின் தவத்தைக் கலைப்பதற்கு மன்மதன் செய்த முயற்சிக்கும் உமையன்னையின் திருமணத்திற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்பது புலனாகின்றது. புரை=துளை: துதிக்கையில் உள்ள துளையினை இங்கே அப்பர் பிரான் உணர்த்துகின்றார். மனித வாழ்க்கையில் நேரும் இன்பங்களும் துன்பங்களும், இருவினைத் தொடர்பால் உண்டாகின்றன. மனிதர்கள் அனுபவிக்கும் இன்பங்களும் துன்பங்களும் வினைகளை மேலும் பெருக்குவதால், அவ்வாறு பெருக்கப்படும் வினைகளைத் தீர்ப்பதற்காக மறுபடியும் மறுபடியும், உயிர் மேலும் பல பிறவிகள் எடுக்க நேரிடுகின்றது. இவ்வாறு பிறவி எடுக்கும் தன்மையை நோய் என்று அப்பர் பிரான் கருதுவதால், வருபிணி நோய் என்று இனிமேல் எடுக்கவிருக்கும் பிறவிகளை இங்கே குறிப்பிடுகின்றார்.

புரை உடைய கரியுரிவைப் போர்வையானைப் புரிசடை மேல் புனலடைத்த புனிதன் தன்னை

விரை உடைய வெள்ளெருக்கம் கண்ணியானை வெண்ணீறு செம்மேனி விரவினானை

வரையுடைய மகள் தவஞ்செய் மணாளன் தன்னை வருபிணி நோய் பிரிவிக்கும் மருந்து தன்னை

நரைவிடை நற்கொடி உடைய நாதன் தன்னை நாரையூர் நன்னகரில் கண்டேன் நானே

திருவாய்மூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல்களில், அப்பர் பிரான், தானும் திருஞான சம்பந்தரும் கண்ட பெருமானின் நடனக் காட்சியை விவரிக்கின்றார். இந்த பதிகத்தின் எட்டாவது பாடலில் (6,77.8), பெருமான் அடியார்களின் பிறவிப் பிணிக்கு மருந்தாக செயல்படுவதைத் தான் கண்டதாக அப்பர் பிரான் கூறுகின்றார். ஏனைய தேவர்களுக்கும் உலகத்தவர்க்கும் பொருந்தாத செயல்கள் செய்பவர் என்று பெருமானை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். மற்றவரிடமிருந்து மாறுபட்டு இருப்பது தானே பெருமானின் தனிச் சிறப்பு. இந்த தன்மை விகிர்தன் என்று பல தேவாரப் பாடல்களில் கூறப்பட்டு, அதற்கான காரணமும் விளக்கப் பட்டுள்ளது. அமுதம் உண்பதற்காக மற்றவர் காத்திருக்கையில், பொங்கி எழுந்த நஞ்சினை உண்டது; செல்வம் பலவிருந்தும் தான் உண்பதற்காக வீடுகள் தோறும் சென்று பலியேற்பது, பட்டாடை முதலியன தவிர்த்து கீளும் கோவணமும் அணிந்து காட்சி தருவது; தேர் குதிரை யானை முதலியவற்றை வாகனமாக கொள்ளாமல் எருதினை வாகனமாக ஏற்றது, சுடுகாட்டினை தனது இருப்பிடமாகக் கொண்டது, பெண்ணினை தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றது, பூதகணங்கள் சூழ இருப்பது; பூதங்களுடன் நடனம் ஆடுவது, இரவில் நடனம் ஆடுவது, எலும்பு மாலை, சங்கு மாலை, பன்றிக் கொம்பு, கொக்கின் இறகு ஆகியவற்றை அணிகலனாக ஏற்றுக் கொள்வது, உயிரற்ற உடலைத் தோள் மீது சுமப்பது, முதலிய பல செயல்கள் பொருந்தாத செய்கையாக இங்கே குறிப்பிடப் படுகின்றன. விருந்து=புதியதாக வந்தது;

பொருந்தாத செய்கை பொலியக் கண்டேன் போற்றி இசைத்து விண்ணோர் புகழக் கண்டேன்

பரிந்தார்க்கு அருளும் பரிசும் கண்டேன் பாராய்ப் புலனாகி நிற்கை கண்டேன்

விருந்தாய் பரந்த தொகுதி கண்டேன் மெல்லியலும் விநாயகனும் தோன்றக் கண்டேன்

மருந்தாய் பிணி தீர்க்கும் ஆறு கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்டவாறே

கோடிகா தலத்தின் மீது அப்பர் பெருமான் அருளிய திருப்பதிகத்தின் முதல் பாடலில் (6.81.1) மீண்டும்மீண்டும் பிறப்புக்கு வழிவகுக்கும் மயக்க நிலைக்கு மருந்தாக இருப்பவன் சிவபெருமான் என்று கூறுகின்றார். கண்டலம்=கண் தனது இருப்பிடமாகக் கொண்டுள்ள: மண்டலம்=பல வகை உலகங்கள்; விண்டலம்=தேவர் உலகம்; கொண்டலம்=கொண்டல்+ அம்=அழகிய மேகம், அழகிய மேகம் கொண்டுள்ள கருமை நிறம்; படி மலிந்த=உலகினில் நிறைந்த;இதே பதிகத்தின் ஆறாவது பாடலில் படி மலிந்த பல் பிறவி அறுப்பான் என்று பெருமானை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.

கண்டலம் சேர் நெற்றி இளங்காளை கண்டாய் கல்மதில் சூழ் கந்தமாதனத்தான் கண்டாய்

மண்டலம் சேர் மயக்கு அறுக்கும் மருந்து கண்டாய் மதில் கச்சி ஏகம்பம் மேயான் கண்டாய்

விண்டலம் சேர் விளக்கொளியாய் நின்றான் கண்டாய் மீயச்சூர் பிரியாத விகிர்தன் கண்டாய்

கொண்டலம் சேர் கண்டத்து எம் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்துறையும் குழகன் தானே

ஓமாம்புலியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.88.6) அப்பர் பிரான், தனது பிறவிப் பிணிக்கு மருந்தாக விளங்குபவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். ஆராத= தெவிட்டாத: அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விடம் என்பது பழமொழி. ஆனால் இறைவனைப் பற்றி எத்தனை முறை சிந்தித்தாலும், எத்தனை முறை அவனது புகழினைப் பாடினாலும். எத்தனை முறை கேட்டாலும், அடியார்களுக்கு அலுப்பு என்பது ஏற்படுவதில்லை. இவ்வாறு ஆரா அமுதமாக விளங்கும் பெருமானை ஆராத இன்னமுது என்று அப்பர் பிரான் அழைக்கின்றார். அரிய தவத்தினைச் செய்யும் முனிவர்கள் தொழுது வணங்கும் பெருமானாக உள்ளவனும், தெவிட்டாத இனிய அமுதமாக உள்ளவனும், அடியார்கள் அடையவிருக்கும் துன்பங்களைத் தவிர்த்து அவர்களை இன்பமுறச் செய்பவனும், உமையாள் நங்கையின் மணாளனாகத் திகழ்பவனும், எனது பிறவிப் பிணிக்கு மருந்தாகத் திகழ்பவனுமாக விளங்குபவன் சிவபெருமான். பயிர் வளர்ச்சிக்கு பொருத்தமான காற்றினால் தழுவப்படும் வயல்கள் நிறைந்ததும், உயரத்திலிருந்து ஒளிவீசும் நிலவின் ஒளியினால் மிகவும் அழகாக காட்சி தரும் நகரமும் ஆகிய ஓமாம்புலியூர் தலத்தில் நாள்தோறும் சிறப்புடன் வழிபாடு நடைபெறும் வடதளி என்று அழைக்கப்படும் திருக்கோயிலில், எந்நாளும் அனைவர்க்கும் நன்மை பயப்பதால் இனிதாக அமைந்துள்ள வடதளி என்று அழைக்கப்படும் திருக்கோயிலில் உறையும் செல்வனாகிய சிவபெருமானை, அடையாது குறைந்த அறிவினை உடையவனாக இருந்த அடியேன் திகைத்து மயங்கி, எனது வாழ்நாளை வீணாக கழித்தேன் என்று அப்பர் பிரான் உணர்த்தும் பாடல்.

அருந்தவத்தோர் தொழுதேத்தும் அம்மான் தன்னை ஆராத இன்னமுதை அடியார் தம்மேல்

வரும் துயரம் தவிர்ப்பானை உமையாள் நங்கை மணவாள நம்பியை என் மருந்து தன்னைப்

பொருந்து புனல் தழுவு வயல் நிலவு துங்கப் பொழில் கெழுவு தரும் ஓமாம்புலியூர் நாளும்

திருந்து திரு வடதளி எம் செல்வன் தன்னைச் சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே

நின்ற திருத்தாண்டகத்தின் ஏழாவது பாடலில் (6.94.7) அப்பர் பிரான், பெருமானை, புனைவார் பிறப்பறுப்பவன் என்று குறிப்பிடுகின்றார். யாதானும் நினைந்தார்=எந்த நிலையில் இருந்தாலும் தன்னை நினைத்தவர்கள்; பாடலின் இரண்டாவது அடியில் மலர்கள் கொண்டு இறைவனைப் போற்றி வழிபடும் பக்தர்கள் என்று குறிப்பிட்ட அப்பர் பிரான், அந்த நிலையினையும் கடந்து, தனக்கு என்ன நேர்ந்தாலும் கவலைப் படாமல், இறைவன் பால் முழு நம்பிக்கை வைத்து, இறைவனையே நினைக்கும் அடியார்களுக்கு மிகவும் எளியவனாக பெருமான் இருப்பான் என்று கூறுகின்றார். இதற்கு அவரது வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளே எடுத்துக்காட்டு. கடலில் கட்டி விடப்பட்ட போது, எப்பரிசு ஆயினும் ஏத்துவன் இறைவனை, என்று நமச்சிவாயப் பதிகம் அருளி இறைவனையே நினைத்திருந்த அப்பர் பிரான், கடலில் மூழ்காமல் காப்பாற்றப் பட்டது இறைவனால் தானே. உலகத்தில் உள்ள உயிர்களுக்கெல்லாம் தாயாகவும் தந்தையாகவும் விளங்கும் சிவபிரான் அவர்களது மக்களாகவும் விளங்குகின்றான்; அவனே இடைவிடாது ஒலிக்கும் அலைகள் நிறைந்த கடல்களாகவும், மயக்கம் அளிக்கும் அளவு விரிந்த பரப்புடைய ஆகாயமாகவும், கோதாவிரி, குமரி முதலிய தீர்த்தங்களாகவும், கொலைத் தன்மை உடைய புலியினது தோலை ஆடையாக உடைய அழகனாகவும் உள்ளான். அத்தகைய இறைவன், மலர்ந்த பூக்களைக் கொண்டு வழிபடும் அடியார்களுக்கு, அவரது பிறவிப்பிணியை நீக்கும் புனிதனாகவும், தனது வாழ்வில் எத்தகைய இடர்ப்பாடுகள் நேரிடினும், மனம் கலங்காமல், தன்னையே நினைக்கும் அடியார்களுக்கு மிகவும் எளியவனாகவும் விளங்குகின்றான், நெருப்பினைப் போல நிறம் உடைய அவனது திறமை மிகவும் வியக்கத்தக்கது என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மாதா பிதாவாகி மக்களாகி மறிகடலும் மால்விசும்பும் தானேயாகி

கோதாவிரியாய்க் குமரியாகிக் கொல்புலித் தோலாடைக் குழகனாகிப்

போதே மலர் கொண்டு போற்றி நின்று புனைவார் பிறப்பறுக்கும் புனிதனாகி

யாதானும் என நினைந்தார்க்கு எளிதேயாகி அழல் வண்ண வண்ணர் தாம் நின்றவாறே

அப்பன் நீ அம்மை நீ என்று தொடங்கும் பதிகத்தின் பாடலில் முறையாக சிவபெருமானைத் தொழாத உயிர்கள் பிறப்பெடுப்பதே, இந்த பிறவியில் இறந்த பின்னர் மீண்டும் பிறப்பெடுத்து அல்லற்படுவதற்கே என்று (6.95.6) அப்பர் பிரான் கூறுகின்றார். அளி=அன்பு, இங்கே சிவபிரானிடத்தில் அன்பு என்று பொருள் கொள்ளவேண்டும். பெருநோய் என்று மீண்டும்மீண்டும் பிறப்பெடுக்கும் தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. சிவபிரானைத் தொழுது வழிபட்டாலன்றி, பிறவிநோய் தீராது என்று அப்பர் பிரான் இங்கே உரைக்கின்றார். கோயில்கள் இல்லாத ஊரினைச் சாடிய அப்பர் பிரான், கோயில் இருந்தும் அந்த கோயில் சென்று வழிபடாத மனிதர்களை இந்த பாடலில் சாடுகின்றார். தீவண்ணர் திறம் ஒரு கால் பேசாராகில் என்று அப்பர் பிரான் குறிப்பிடுவது, பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே என்று வலியுறுத்தும் தில்லைப் பதிகத்தை (6.01) நமக்கு நினைவூட்டுகின்றது. பிறவிப் பிணிக்கு மருந்தாகத் திகழ்வது திருநீறு தான் என்ற கருத்தினை, திருநீற்றுப் பதிகத்தில் (2.66.9) திருஞானசம்பந்தர் கூறுகின்றார். உண்பதன் முன் மலர் பறித்திட்டு உண்ணார் என்று இங்கே கூறுவது, வண்டுகள் மலரினைத் சுவைப்பதற்கு முன்னர் பறித்து என்றும் பொருள் கூறுவார்கள். சிவபெருமானின் திருநாமமாகிய அஞ்செழுத்தினைத் சொல்லாமல் இருப்பவர்களும், செந்தீ வண்ணத்தவராக உள்ள சிவபெருமானின் திறமையை ஒரு முறையேனும் பேசாமல் இருப்பவர்களும்; ஒரு முறையேனும் திருக்கோயில் வலம் வராதவர்களும், தாங்கள் உண்பதன் முன்னர் மலர் பறித்து சிவபெருமானின் திருமேனியில் மலர் தூவி வணங்கி பின்னர் உணவு உட்கொள்ளும் பழக்கம் இல்லாதவர்களும்; பிறவிப் பிணியினைத் தீர்க்கும் திருநீற்றினை தங்களின் உடல்கள் மீது பூசாதவர்களும்: சிவபெருமான் மேல் சிறிதும் அன்பு இல்லாதவர்கள். அவர்கள் வாழும் வாழ்க்கையை நான் என்னென்று சொல்லுவேன். பிறவிப் பிணி என்ற பெருநோயால் பாதிக்கப்பட்டு இறந்த பின்னரும் மீண்டும்மீண்டும் பிறப்பதையே தங்கள் செயலாகக் கொண்டு அவர்கள் இறக்கின்றார்கள். அவர்களால் பிறப்பு இறப்பு சுழற்சியிலிருந்து, தப்பி வெளியே வரவே முடியாது என்பதே இந்த பாடலின் பொழிப்புரை

திருநாமம் அஞ்செழுத்தும் செப்பாராகில் தீவண்ணர் திறம் ஒருகால் பேசாராகில்

ஒரு காலும் திருக்கோயில் சூழாராகில் உண்பதன் முன் மலர் பறித்திட்டு உண்ணாராகில்

அருநோய்கள் கெட வெண்ணீறு அணியாராகில் அளியற்றார் பிறந்தவாறு ஏதோஎன்னில்

பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்தும் செத்தும் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே

திருக்கற்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.27.3) சுந்தரர் பெருமானை மலைமேல் மாமருந்தே என்று அழைக்கின்றார். பிறவிப்பிணியை நினைத்து தான் அடைகின்ற அச்சத்தை பெருமான் தீர்க்க வேண்டும் என்று சுந்தரர் இந்த பாடல் மூலம் இறைஞ்சுகின்றார். கலை=மான் கன்று; மடமாது=இளமை வாய்ந்த பார்வதி தேவி; மலை மேல் உள்ள மருந்து கிடைத்தற்கு அரியது என்பது போன்று பெருமானும் உயிர்களுக்கு கிடைத்தற்கு அரியவன் என்பதை உணர்த்துகின்றார்.

சிலையால் முப்புரங்கள் பொடியாக சிதைத்தவனே

மலைமேல் மாமருந்தே மடமாது இடம் கொண்டவனே

கலை சேர் கையினனே திருக்கற்குடி மன்னி நின்ற

அலை சேர் செஞ்சடையாய் அடியேனையும் அஞ்சல் என்னே

தான் எவ்வாறு பிறவாத தன்மையை எய்தினேன் என்று சுந்தரர் உணர்த்தும் பாடல் அவர் அருளிய நமச்சிவாயப் பதிகத்தின் முதல் பாடலாகும் (7.48.1). வேறு எந்தப் பற்றும் இல்லாமல், தனது மனதினில் சிவபிரானின் நாமங்களையே நினைத்தேன் என்று கூறும் சுந்தரர், தான் திரும்பத் திரும்ப சிவபிரானின் நாமங்களைக் கூறி வந்ததால், தனது நாக்கு தானாகவே சிவபிரானின் நாமங்களைச் சொல்ல பழக்கப்பட்டு விட்டது என்று கூறுகின்றார். இவ்வாறு கூறியதால் பிறவாத தன்மை தன்னை வந்து எய்தது என்று சொல்லி, பிறவாத தன்மை வேண்டுமென்றால் நாமும் வேறு எந்த பொருளின் மீதும் பற்று வைக்காமல் இறைவனது திருப்பாதங்களே நமக்கு பற்றுக்கோடாக உணர்ந்து, நமச்சிவாய நாமம் சொல்ல வேண்டும் என்பதை நமக்கு உணர்த்துகின்றார்.

மற்று பற்று எனக்கின்றி நின் திருப்பாதமே மனம் பாவித்தேன்

பெற்றலும் பிறந்தேன் இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன்

கற்றவர் தொழுது ஏத்தும் சீர்க்கறையூரில் பாண்டிக் கொடுமுடி

நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.51.4) சுந்தரர், பெருமானை தன்னை பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து மீட்டு ஆட்கொண்ட அருமருந்து என்று குறிப்பிடுகின்றார். இந்த பதிகம், திருவொற்றியூரில் இருந்த வண்ணம், திருவாரூர்ப் பெருமானை நினைத்துக் கொண்டு, திருவாரூர் பங்குனி உத்திரப் பெருவிழாவில் பங்கேற்க முடியாத நிலைக்கு வருத்தம் தெரிவித்து பாடிய பதிகம்.

இங்ஙனம் வந்து இடர்ப் பிறவி பிறந்து அயர்வேன் அயராமே

அங்ஙனம் வந்து எனையாண்ட அருமருந்து என் ஆரமுதை

வெங்கனல் மாமேனியனை மான் மருவும் கையானை

எங்ஙனம் நான் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே

கழுமலம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.58.6) சுந்தரர், பெருமானை பிறவி வேர் அறுக்கும் கரும்பு என்று குறிப்பிடுகின்றார். தன்னுடன் பிணைந்துள்ள எண்ணற்றதும் வலிமையானதும் ஆகிய வினைகளை தீர்த்துக் கொள்ளும் வகை தெரியாமல் மிகவும் திகைத்த தான், பெருமானை என்றும் மறவாத மனம் பெற்றதால், அந்த வினைகளைத் தான் தீர்த்துக் கொண்டதாக சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார். மேலும் பெருமானை, குளிர்ந்த மனத்துடன் முறையாக, அரும்பு, மலர், அமுதம், தேன் மற்றும் கரும்பு போன்று இன்பம் தருபவனும், அனைவர்க்கும் தலைவனும்,புண்ணியமே வடிவமாக இருப்பவனும், எனது பிறவியை வேரொடு களைபவனும் ஆகிய பெருமானை அடையாளம் கண்டு கொண்டு வணங்கிய தனக்கு கழுமல வளநகரில் பெருமான் காட்சி கொடுத்ததாக சுந்தரர் கூறுகின்றார்.

வரும் பெரு வல்வினை என்று இருந்தெண்ணி வருந்தல் உற்றேன் மறவா மனம் பெற்றேன்

விரும்பிய மனத்திடை மெய் குளிர்ப்பெய்தி வேண்டி நின்றே தொழுதேன் விதியாலே

அரும்பினை அலரினை அமுதினைத் தேனை ஐயனை அறவன் என் பிறவிவேர் அறுக்கும்

கரும்பினைப் பெருஞ் செந்நெல் நெருங்கிய கழனிக் கழுமல வளநகர்க் கண்டு கொண்டேனே

வலிவலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.67.7) சுந்தரர், பெருமானை, பிறவிக் கடல் பரப்பு தவிர்ப்பவன் என்று குறிப்பிடுகின்றார். படுகடல்=ஒலிக்கும் கடல்; மிகுந்த ஆரவாரத்துடன் வினைகள் செயல்பட்டு உயிரினை பிறவிக்கடலில் இருந்து வெளியே செல்லாத வண்ணம் தடுக்கும் தன்மை; பக்குவப்பட்ட உயிர்கள், பெருமானின் உண்மையான தன்மையை புரிந்து கொண்டு, பெருமான் ஒருவனே பிறவிக் கடலிலிருந்து தங்களை கரையேற்ற வல்லவன் என்பதை அறிந்தவர்களாக, பெருமானின் உள்ளம் குளிரும் வண்ணம் பல விதமான திருப்பணிகளிலில் ஈடுபட்டு பயன் அடையும் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது.

பந்தித்த வல்வினைப் பற்று அற பிறவிப் படு கடற்பரப்புத் தவிர்ப்பானைச்

சந்தித்த திறலால் பணி பூட்டித் தவத்தை ஈட்டிய தன்னடியார்க்குச்

சிந்தித்தற்கு எளிதாய்த் திருப்பாதம் சிவலோகம் திறந்து ஏற்ற வல்லானை

வந்திப்பார் தம் மனத்துள்ளானை வலிவலம் தன்னில் வந்து கண்டேனே

திருவாவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.70.9) சுந்தரர், பெருமானை வழித்துணை மருந்தே என்று அழைக்கின்றார். மாசிலாமணி என்பது இந்த தலத்து இறைவனின் திருநாமம். உயிர்கள் செல்ல விரும்பும் முக்தி நிலைக்கு, பக்குவமடைந்த உயிர்களின் பிறவிப் பிணியை நீக்கி, உயிர்களுடன் துணையாக உடனிருந்து அழைத்துச் செல்லும் இயல்பினன் என்பதை உணர்த்த, வழித்துணை மருந்தே என்று அழைக்கின்றார். எயிறு=பல்; இங்கே வராக அவதாரம் எடுத்த பன்றியின் கொம்பினை உணர்த்துகின்றது. ஈடு=இடப்பட்ட; வானம் என்பது உயர்ந்த உலகமாகிய முக்தி உலகத்தினை குறிப்பிடுகின்றது. பெருமானைத் தவிர்த்து, தனக்கு அஞ்சேல் என்று சொல்லித் தேற்றும் தன்மையர் வேறொருவரும் இல்லை என்று கூறுகின்றார். நாமும் அத்தகைய பாவனையுடன், பெருமான் ஒருவனே நமக்கு பற்றுக்கோடு என்று கருதி அவனை வேண்ட வேண்டும் என்பதை சுந்தரர் இங்கே நமக்கு சொல்லிக் கொடுக்கின்றார்.

வான நாடனே வழித்துணை மருந்தே மாசிலாமணியே மறைப்பொருளே

ஏனமா எயிறு ஆமையும் எலும்பும் ஈடு தாங்கிய மார்புடையானே

தேனெய் பால் தயிர் ஆட்டுகந்தானே தேவனே திருவாவடுதுறையுள்

ஆனையே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே

திருவானைக்கா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.75.10) சுந்தரர், தேவாரப் பாடல்களை பாடும் அடியார்கள் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அடைவார்கள் என்று கூறுகின்றார். ஆழி=சக்கரம்: ஆழியார்=சக்கரப்படை ஏந்திய திருமால்: பெருமானின் திருவடிகளே உயிர்கள் உய்வினை அடைவதற்கு வழி வகுக்கும் சிறந்த பற்றுகோடு என்பதை உணர்ந்தவனாக, தான் வாழ்ந்ததாக சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார். சிவனடியார்கள் அனைவருக்கும் தான் அடியவன் என்ற கொள்கையுடன் வாழ்ந்தவர் சுந்தரர் என்பதை நாம் அறிவோம். அந்த கருத்தினைத் தான் இந்த பாடலில், எம்மையும் ஆளுடையாரே என்ற தொடர் மூலம் குறிப்பிடுகின்றார். இந்த பிறவி முடிந்த பின்னர், நாம் அடுத்து எடுக்கப் போகும் பிறவி யாது என்பதை நாம் எவரும் அறியமாட்டோம். பிறவிகள் ஏழு வகையாக பிரிக்கப் படுகின்றன. தாவரம், நீரில் வாழ்வன, நிலத்தில் ஊர்வன, பறவைகள், நாற்கால் விலங்குகள், மனிதர்கள் மற்றும் தேவர்கள் என்பனவே இந்த ஏழு வகையான பிறவிகள். இந்த ஏழு வகையில், எந்த பிறவி நாம் அடுத்து எடுப்போம் என்று அறிய முடியாத காரணத்தால், ஏழுமா பிறப்பு என்று கூறுகின்றார். இந்த ஏழு வகையான பிறவிகளில் ஏதும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லாமல், தேவாரப் பாடல்களைப் பாடும் அடியார்கள் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அடைவார்கள் என்று சுந்தரர் கூறுகின்றார்.

ஆழியாற்கருள் ஆனைக்காவுடை ஆதி பொன்னடியின்

நீழலே சரணாக நின்றருள் கூர நினைந்து

வாழவல்ல வன்றொண்டன் வண்டமிழ் மாலை வல்லார் போய்

ஏழு மா பிறப்பற்று எம்மையும் ஆளுடையாரே

நனிபள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.97.8) நமது பிணியினைக் களையும் அருமா மருந்து என்று சுந்தரர், இறைவனை குறிப்பிடுகின்றார். பிணி என்று இங்கே பிறவிப் பிணியே உணர்த்தப் படுகின்றது. குறுந்தெரியல்=சிறிய பிறைச் சந்திரன்; கண்ணி=தலையில் சூட்டிக் கொண்டுள்ள மாலை; சடையினில் பிறைச் சந்திரனை உடைய பெருமானை, திங்கட் கண்ணியன் என்று சொல்வது வழக்கம். சிவபெருமானால் மட்டுமே, பிறவிப் பிணியைத் தீர்க்க முடியும் என்பதால், பெருமானை அரியதும் சிறப்பு வாய்ந்ததும் ஆகிய பெரிய மருந்து என்று கூறுகின்றார். ஏழ் பிறப்பு=ஏழு வகையான பிறப்புகள்; அடுத்த பிறப்பின் தன்மையை எவரும் அறிந்தாரில்லை. என்பதால் தான் ஏழு வகையான பிறப்புகளில் ஒன்றாகிய பிறப்பு என்று இங்கே சொல்லப் படுகின்றது. தாவரம், நீரில் வாழ்வன, நிலத்தில் ஊர்வன, பறப்பன, நடப்பன, மனிதர்கள், தேவர்கள் என்பனவே ஏழு வகையான பிறப்புகள்;

திங்கள் குறும் தெரியல் திகழ் கண்ணியன் நுண்ணியனாய்

நங்கள் பிணி களைவான் அருமாமருந்தே ஏழ் பிறப்பும்

மங்கத் திருவிரலால் அடர்த்தான் வல் அரக்கனையும்

நங்கட்கு அருளும் பிரான் நண்ணும் ஊர் நனிபள்ளியதே

உயிர்களின் விருப்பம் பிறவிப் பிணியினை தீர்த்துக் கொள்வதாக இருக்க வேண்டும் என்று மிகவும் அதிகமாக திருவாசகப் பாடல்களில் குறிப்பிடப் படுகின்றது. திருச்சதகம் பாடல் ஒன்றினில் (8.5.16) மணிவாசக அடிகளார், பாழான நிலைக்கு நம்மைத் தள்ளும் பிறப்பிறப்பு தன்மையை அறுத்துக் கொள்வதற்காக தான் பெருமானைப் புகழ்ந்து பாடி வணங்குவதாக குறிப்பிடுகின்றார். மதுகரம்=வண்டினங்கள்; தார்=மாலை தாரோய்=மாலை அணிந்தவன்; பாழ்த்த=பயன் ஏதும் இல்லாத; தேவர்களைப் போன்று, தாங்கள் உயரவேண்டும் என்றும் மற்றவர்கள் தம்மைத் தொழவேண்டும் என்ற நோக்கத்துடன் பெருமானைத் தொழாமல், நாம் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுவதற்காக இறைவனை வணங்க வேண்டும் என்று மணிவாசகர் இங்கே கூறுகின்றார்.

வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான் மனம் நின் பால்

தாழ்த்துவதும் தாம் உயர்ந்து தம்மை எல்லை தொழ வேண்டி

சூழ்த்து மதுகரம் முரலும் தாரோயை நாய் அடியேன்

பாழ்த்த பிறப்பு அறுத்திடுவான் யானும் உன்னை பரவுவனே

திருவாசகம் திருச்சதகம் பதிகத்தின் பாடலில் (8.5.51) மணிவாசக அடிகளார் பெருமானை பிறவி நாசன் என்று குறிப்பிடுகின்றார். நன்றி பாராட்டுதல் நாயின் சிறந்த குணமாக கருதப் படுகின்றது. அந்த குணமும் இல்லாதவன் தான் என்பதை உணர்த்தும் வண்ணம் பொல்லா நாயேன் என்று குறிப்பிடுகின்றார். யாதும் ஒன்று அல்லா=எந்தவிதமான நல்ல குணமும் இல்லாத; நீசன்=இழிந்தவன்; பெருமான் தன்னை ஆண்டுகொண்டதை மனதில் நிறுத்தி, அவரை நினைக்காமல் தான் இருந்ததாக அடிகளார் இங்கே குறிப்பிடுகின்றார்.

ஈசனே என் எம்மானே எந்தை பெருமான் என் பிறவி

நாசனே நான் யாதும் ஒன்று அல்லாப் பொல்லா நாயான

நீசனேனை ஆண்டாய்க்கு நினைக்க மாட்டேன் கண்டாயே

தேசனே அம்பலவனே செய்வது ஒன்றும் அறியேனே

தன்னுடன் பிணைந்திருந்த வலிமை வாய்ந்த வினைகளை சுட்டெரித்த பெருமான் என்று நீத்தல் விண்ணப்பம் பதிகத்தின் ஒரு பாடலில் குறிப்பிடும் மணிவாசக அடிகளார், பெரிய மரமாக வளர்ந்துள்ள தனது பிறப்பிறப்புச் சுழற்சியை வேரோடும் களைந்து பெருமான் அருள் புரிய வேண்டும் என்று வேண்டுகின்றார்.

மடங்க என் வல்வினைக் காட்டை நின் மன்னருள் தீக்கொளுவும்

விடங்க என்றன்னை விடுதி கண்டாய் என் பிறவியை வே

ரொடும் களைந்து ஆண்டுகொள் உத்தரகோச மங்கைக்கு அரசே

கொடுங்கரிக் குன்று உரித்து அஞ்சுவித்தாய் வஞ்சிக் கொம்பினையே

பிறவிப் பிணியில் முடங்கி வருந்தும் மனிதர்களுக்கு மருந்தாக செயல்படுவது இறைவனே என்று நீத்தல் விண்ணப்பத்தில் மணிவாசகர் குறிப்பிடுகின்றார். தன்னை அடிமையாக ஆட்கொண்ட சிவபெருமானுக்குத் தன்னை விற்பதற்கும், அடமானம் வைப்பதற்கும் உரிமை உள்ளது என்று அடிகளார் கூறுவதை இந்த பாடலில் உணரலாம். ஒற்றி=அடமானம். விருந்தினன் என்றால் புதிதாக வந்தவர் என்று பொருள். சமீபமாக, அதாவது சில நாட்களுக்கு முன்னர் தான், சிவபிரானுக்கு அடிமையாக வந்தவர் தான் என்பதை உணர்த்தும் பொருட்டு, பழைய அடியார்களிலிருந்து தான் மாறுபட்டவன் என்பதை உணர்த்தும் பொருட்டு, விருந்தினன் என்று மணிவாசகர் தன்னை குறிப்பிடுகின்றார். தான் சிவபெருமானுக்கு அடிமையாக இருப்பதற்கு உடன்படுவதாகவும், தனது தகுதியை ஆராய்ந்து, சிவபெருமான் தன்னை ஆட்கொள்ள வேண்டும் என்றும், தான் அத்தகைய பக்குவம் இன்னும் அடையவில்லை என்றால் சிறிது காலம் கழித்து ஆட்கொள்ளக் கருதி எவரிடமேனும் அடமானம் வைக்கலாம் என்றும், சிறிதும் தகுதி இல்லை என்றால் விற்றுவிடலாம் என்றும் பெருமானுக்கு அனுமதி வழங்குவது போன்று அமைந்த பாடல். விற்றுவிடலாம் என்றும் கூறினாலும், நஞ்சையே அமுதமாக மாற்றும் ஆற்றல் படைத்த பெருமானுக்கு, தனது தகுதியையும் மாற்றும் ஆற்றல் உடையது என்பதால் தன்னை விட்டு விடக் கூடாது என்று இறைஞ்சுவதையும் நாம் இந்த பாடலில் காணலாம்.

இருந்து என்னை ஆண்டுகொள் விற்றுக்கொள் ஒற்றி வை என்னின் அல்லால்

விருந்தினனேனை விடுதி கண்டாய் மிக்க நஞ்சு அமுதா

அருந்தினனே மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே

மருந்தினனே பிறவிப் பிணிப்பட்டு மடங்கினர்க்கே

திருவாசகம் திருவெம்பாவை பதிகத்தின் பாடலில் (8.7.12) மணிவாசக அடிகளார் பெருமானை, ஆர்த்த பிறவித் துயர் கெட நாம் ஆர்த்தாடும் தீர்த்தன் என்று குறிப்பிடுகின்றார். ஆர்த்த= கட்டிய; நாம் தப்பிக்க முடியாத வண்ணம் நம்மைப் பிணைத்துள்ள பிறவிகள் என்று அடிகளார் இங்கே பிறவிகளின் தன்மையை குறிப்பிடுகின்றார். மேலும் பிறவிகள் நம்மை மேன்மேலும் துயரத்தில் தான் ஆழ்த்துகின்றன என்பதையும் உணர்த்துகின்றார். புண்ணிய நதிகளில் குளிக்கும் மனிதர்களின் பாவங்கள் களையப் படுவது போன்று, நம்முடன் பிணைந்துள்ள பிறவிகளும், பெருமானின் நினைவு என்ற தீர்த்தத்தில் நாம் முங்கி நீராடும் போது களையப் படுகின்றன என்று இந்த பாடலில் அடிகளார் கூறுகின்றார். ஐந்து தொழில்களையும் மிகவும் விளையாட்டாக செய்யும் பெருமானின் திறமையைப் புகழ்ந்து பேசியவாறு நாம் நீராடுவோம் என்று நீராடச் சென்ற பெண்கள் சொல்லுவதாக அமைந்த பாடல்.

ஆர்த்த பிறவித் துயர் கெட நாம் ஆர்த்தாடும்

தீர்த்தன் நற்றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்

கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும்

காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி

வார்த்தையும் பேசி வளை சிலம்ப வார்கலைகள்

ஆர்ப்பரவம் செய்ய அணிகுழல் மேல் வண்டார்ப்பப்

பூத்திகழும் பொய்கை குடைந்து உடையான் பொற்பாதம்

ஏத்தி இருஞ்சுனை நீர் ஆடேலோர் எம்பாவாய்

திருவாசகம் திருவம்மானை பதிகத்தின் பாடலில் (8.8.1) மணிவாசக அடிகளார், பெருமானை, எங்கள் பிறப்பறுத்திட்டு எந்தரமும் ஆட்கொள்ளும் கருணையன் என்று அழைக்கின்றார். இடந்தும்=கீழே தோண்டிக் கொண்டு வெகு தூரம் சென்ற பின்னரும்; பொங்கு=ஒளி வீசும்; எந்தரமும்=எந்த விதமான தகுதியும் இல்லாத மனிதர்களையும்; பாண்டிய நாடு அமைச்சர் என்ற முறையில் குதிரை வாங்குவதற்காக தொண்டித் துறைமுகம் நோக்கிச் சென்று கொண்டிருந்த தன்னை, காந்தம் இரும்பினை இழுப்பது போன்று, திருப்பெருந்துறைக்கு மணிவாசக அடிகளாரை வரவழைத்த பெருமானின் கருணைச் செயல் இங்கே குறிப்பிடப் படுகின்றது. பெருமானின் அழைப்பு, அடிகளாரின் மனதில் கேட்டமையால் தான், அவர் தொண்டித் துறைமுகம் செல்லாமல், திருப்பெருந்துறை செல்கின்றார். இவ்வாறு தான் இறைவனின் அழைப்பினை உணர்ந்த தன்மையை, இறைவன் அறை கூவியதாக குறிப்பிடுகின்றார் மேலும் தன்னை உய்வித்த தன்மையை குறிப்பிடும் அடிகளார், பெருமானின் இந்த கருணைச் செயல் தனக்கு வீடுபேறு அருளுவது உறுதி என்பதையும் புரிந்து கொண்டமையால், வீடருளும் என்று குறிப்பிடுகின்றார். வீடு என்ற சொல்லுக்கு விடுபடும் தன்மை என்று பொருள் கொண்டு, பந்த பாசங்களிலிருந்து விடுபடும் தன்மையை இறைவன் அருளால் தான் பெற்றதை அடிகளார் குறிப்பிடுகின்றார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. இதே பதிகத்தின் பன்னிரண்டாவது பாடலில், பெருமான், தன் இன்னருளால் இப்பிறவி ஆட்கொண்டு இனிப் பிறவாமே காத்ததாக அம்மானை ஆடும் பெண்கள் குறிப்பிட்டு மகிழ்வதாக மணிவாசக அடிகளார் கூறுகின்றார்.

செங்கண் நெடுமாலும் சென்றிடந்தும் காண்பரிய

பொங்கு மலர்ப்பாதம் பூதலத்தே போந்தருளி

எங்கள் பிறப்பறுத்திட்டு எந்தரமும் ஆட்கொண்ட

தெங்கு திரள் சோலை தென்னன் பெருந்துறையான்

அங்கணன் அந்தணனாய் அறை கூவி வீடருளும்

அங்கருணை வார்கழலே பாடுதும் காண் அம்மானாய்

திருவாசகம் பொற்சுண்ணம் பதிகத்தின் பாடலில் (8.9.15) மணிவாசக அடிகளார் பெருமானை, பிறப்பறுத்து ஆண்டு கொண்ட கூத்தன் என்று குறிப்பிடுகின்றார். பானல்=கருங்குவளை மலர்கள்; பெண்களின் அகன்ற கண்களுக்கு, கருங்குவளை மலர்களை உவமையாக அடிகளார் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். சிவம் என்றாலே மங்கலம், நலம் என்று பொருள். அடிப்படையில் அனைத்து உயிர்களும் சிவபெருமானை நாடி, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு நலம் அடையவே விரும்புகின்றன. எனினும் முறையாக நாடும் வழியை அறியாத காரணத்தால், பெரும்பாலான உயிர்கள் அவனைச் சென்று அடைய முடிவதில்லை. அதனால் தான் நாடற்கரிய நலம் என்று இறைவனை குறிப்பிடுகின்றார். நாள்பட்ட தேன் தனது இனிய சுவையினை இழந்து கசப்பும் துவர்ப்பும் கலந்த நிலையில் இருப்பதை நந்துதல் என்று கூறுவார்கள்; ஆனால் பெருமான் குறித்த இனிய நினைவுகள் எத்தனை நாட்கள் ஆனாலும், இனியவையாகவே இருக்கும் தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. கோன்=தலைவன், அரசன்; நமது நாவினில் வடு ஏற்படும் வண்ணம் தொடர்ந்து அவனது புகழினை குறிப்பிட்டு அவனை வாழ்த்திக் கொண்டே இருக்க வேண்டும் என்று கூறுகின்றார்.

ஞானக் கரும்பின் தெளிவைப் பாகை நாடற்கரிய நலத்தை நந்தாத்

தேனைப் பழச்சுவை ஆயினானைச் சித்தம் புகுந்து தித்திக்க வல்ல

கோனைப் பிறப்பறுத்து ஆண்டுகொண்ட கூத்தனை நாத்தழும்பு ஏற வாழ்த்திப்

பானற் தடங்கண் மடந்தை நல்லீர் பாடிப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே

தம்மை பிறப்பறுத்து ஆண்டுகொண்ட பெருமான் என்று பெருமானைப் புகழ்ந்து பாடி பொற்சுண்ணம் இடிக்கும் பெண்கள், இதே பதிகத்தின் மற்றொரு பாடலில் (8.9.10), பொற்சுண்ணம் இடிக்கும் பெண்களின் வாய்மொழியாக, பெருமானைப் பணியாத மனிதர்களுடன் பிறவிகள் இணைந்து கொண்டு ஆட்டம் போடுகின்றன என்று கூறுகின்றார். பெருமானுக்காக பொற்சுண்ணம் இடிக்கும் திருப்பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள், தங்களது முத்தணிகள் அணிந்த கொங்கைகள் ஆடுவதாகவும், அவர்கள் கூந்தலில் சூட்டிக் கொண்டுள்ள மலர் மாலைகள் ஆடுவதால் நறுமணம் மிகுந்த அந்த மாலைகளின் ஆட்டத்திற்கு ஏற்ப அந்த மலர்களை மொய்க்கும் வண்டுகள் ஆடுவதாகவும், அவர்களது எண்ணங்கள் பெருமானைச் சுற்றியே இருப்பதாகவும், பெருமானைப் பற்றி பேசுவதால் கேட்பதால் அவனது திருப்பணியில் ஈடுபடுவதால் அவர்களது கண்களில் ஆனந்த கண்ணீர் துளிர்த்து ஆடுவதாகவும் குறிப்பிடும் பெண்கள்,பெருமானின் கருணையும் அவர்கள் அனைவரின் பால் பொழிவதால், பெருமானின் கருணையும் அவர்களுடன் சேர்ந்து ஆடுகின்றது என்று கூறுகின்றனர். பொற்சுண்ணம் என்பது பெருமானை நீராட்ட பயன்படும் வாசனைப் பொடி; இந்த பொடியினை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடும் பெண்கள் பாடுவதாக அமைந்த பாடல். இந்த பொடியினை இடிக்கும் செய்கையில் அந்த பெண்மணிகளின் உடல்கள் அடையும் மாற்றத்தை குறிப்பிடும் பாடல் இந்த பாடல்.

முத்தணி கொங்கைகள் ஆடஆட மொய்குழல் வண்டினம் ஆட ஆடச்

சித்தம் சிவனொடும் ஆட ஆடச் செங்கயற் கண்பனி ஆட ஆடப்

பித்தெம் பிரானொடும் ஆட ஆடப் பிறவி பிறரொடும் ஆடஆட

அத்தன் கருணையொடு ஆடஆட ஆடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே

திருவாசகம் தெள்ளேணம் பதிகத்தின் பாடலில் (8.11.16) மணிவாசக அடிகளார் பெருமானை, பிறப்பறுத்த அத்தன் என்று குறிப்பிடுகின்றார். திரிபுரத்து அரக்கர்கள் முதலில் சிவத்தை வழிபடுபவர்களாக வாழ்ந்து வந்தனர். அவர்களின் மனதினை மயக்கி, நாத்திகர்களாக அவர்கள் மாறும் வண்ணம், திருமாலும் நாரதரும் திரிபுரங்கள் சென்றனர் என்றும், அவர்களது உபதேசத்தால் திரிபுரத்து அரக்கர்கள் நாத்திகர்களாக மாறினார்கள் என்றும் புராணம் குறிப்பிடுகின்றது. இந்த தகவல் கள்ள வேடத்தைக் கொண்டுபோய் என்று தொடங்கும் பாசுரத்தில் நம்மாழ்வாரால் சொல்லப் படுகின்றது. இவ்வாறு திருமால் சென்றதை புத்தனாக சென்றான் என்று குறிப்பிடுவார்கள். இவ்வாறு திரிபுரத்து அரக்கர்களுடன் சிவபெருமானை பழித்த பாவத்தைத் தீர்த்துக் கொள்ளும் முகமாக திருமால் பெருமானை பணிந்து வணங்கினார் என்றும் புராணம் குறிப்பிடுகின்றது. இந்த செய்தி தான், புத்தன் போற்றிச் செய்யும் பித்தன் என்ற தொடர் மூலம் இங்கே உணர்த்தப் படுகின்றது. புரந்தராதியர்=இந்திரன் முதலான பல தேவர்கள்; அயன்=பிரமன்; தெள்ளேணம் என்பதற்கு சிறுபறை என்ற இசைக்கருவி என்று பொருள். பண்டைய நாட்களில் தமது வெற்றியை அறிவிப்பதற்கு இந்த இசைக்கருவி பயன்படுத்தப் பட்டது என்பதை சங்க இலக்கியங்களிலிருந்து அறிகின்றோம். தன்னை ஒரு பெண்ணாக கருதி பெண்களின் கூட்டத்துடன் பெருமானின் சிறப்பினை ஆடியும் பாடியும் கொண்டாடும் அடிகளார், பெருமானின் அருள் பெற்றமையை வெற்றியாக கருதி பெருமானின் திருவடிகள் தங்களது மனதினில் பதிந்தமையை தெள்ளேணம் கொட்டி கொண்டாடுவோம் என்று கூறுகின்றார்.

புத்தன் புரந்தராதியர் அயன் மால் போற்றிச் செயும்

பித்தன் பெருந்துறை மேய பிரான் பிறப்பறுத்த

அத்தன் அணி தில்லை அம்பலவன் அருட்கழல்கள்

சித்தம் புகுந்தவா தெள்ளேணம் கொட்டாமோ

இதே பதிகத்தின் இரண்டாவது பாடலில் (8.11.2) மணிவாசக அடிகளார், மீண்டும்மீண்டும் பிறப்பு எடுக்கும் தன்மைக்கு மூல காரணமாகிய வேராக விளங்கும் வினைகளை பெருமான் அறுத்து அருள் புரிந்த பின்னர், தான் வேறு எந்த தெய்வத்தையும் நினைத்ததில்லை, கண்டதில்லை என்று கூறுகின்றார். மருவும்=உறைகின்ற;

திருவார் பெருந்துறை மேய பிரான் என் பிறவிக்

கருவேர் அறுத்த பின் யாவரையும் கண்டதில்லை

அருவாய் உருவமும் ஆய பிரான் அவன் மருவும்

திருவாரூர் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ

திருவாசகம் திருப்பூவல்லி பதிகத்தின் பாடலில் மணிவாசக அடிகளார் (8.13.3) பெருமானை, மாயப் பிறப்பு அறுத்து ஆண்டான் என்று குறிப்பிடுகின்றார். தயா=தயவு, கருணை; பொடி=மண்; அட்டி=சொரிந்து; தோற்றவர்களின் வாயில் மண் திணிப்பது பண்டைய நாளில் பழக்கமாக இருந்தது போலும்; தனது அடியார்களுடன் பிணைந்திருந்த வினைகளை அறுத்தெரியும் பெருமான், அந்த வினைகளை, உயிர்களை ஆட்கொண்டு தமது வழியில் உயிரினை இழுத்துச் செல்லும் முயற்சியில் தோல்வியடையச் செய்ததை, வினைகளின் வாயில் பொடி அட்டினான் என்று மணிவாசக அடிகளார் கூறுகின்றார். உலக மாயையில் ஆழ்த்தும் பிறவியை மாயப்பிறவி என்று கூறுகின்றார்.

நாயிற் கடைப்பட்ட நம்மையும் ஓர் பொருட்படுத்து

தாயிற் பெரிதும் தயாவுடைய தம் பெருமான்

மாயப் பிறப்பு அறுத்து ஆண்டான் என் வல்வினையின்

வாயிற் பொடியட்டி பூவல்லிக் கொய்யாமோ

திருவாசகம் திருவுந்தியார் பதிகத்தின் பாடலிலும் (8.14.10) மணிவாசக அடிகளார், நெடுங் காலமாக நம்மைத் தொடர்ந்து வரும் பிறப்பினை விட்டொழித்து முக்தி நிலை அடைய வேண்டும் என்றால், நாம் செய்ய வேண்டியது பெருமானின் புகழினை பாட வேண்டியது தான் என்று உணர்த்துகின்றார். வியாத்திரன் என்பதற்கு யாகத் தலைவன் என்றும் மாற்று வழியில் செல்பவன் என்று இரண்டு விளக்கங்கள் அளிக்கப் படுகின்றன. தக்கன் முயற்சி செய்த வேள்வியை வெஞ்சின வேள்வி என்று மணிவாசக அடிகளார் இங்கே கூறுகின்றார். பெருமான் தன்னை அவமதித்ததாக கருதிய தக்கன், பெருமானை தனது எதிரியாக பாவித்து, பெருமானுக்கு அவிர்ப்பாகம் கொடுக்காமல் வேள்வி செய்து உலகினுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று இந்த வேள்வியை தொடங்கினான். இவ்வாறு பெருமான் மீது அவன் கொண்டிருந்த கோபமே இந்த வேள்வியை செய்வதற்கு காரணமாக இருந்தமையால் வெஞ்சின வேள்வி என்று அடிகளார் இங்கே குறிப்பிடுகின்றார். ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு பயணம் செய்வோர், பலரும் சென்ற பாதையினையே தேர்ந்தெடுப்பார்கள்;வேள்விகள் செய்த பலரும் வேதங்களில் சொல்லிய வண்ணம், சிவபெருமானுக்கு அழைப்பு விடுத்து வேள்விகள் செய்வார்கள்; ஆனால் சிவபெருமான் மீது தான் கொண்டிருந்த கோபத்தின் காரணமாக, அவரை அவமதிக்கும் நோக்கத்துடன் அவரை அழையாமல், தக்கன் வேள்வி செய்யத் துணிந்த செயல் வியாத்திரன் என்ற சொல் மூலம் உணர்த்தப் படுகின்றது. யாத்திரன் என்றால் பலரும் சென்ற வழியில் செல்பவன்; வியாத்திரன் என்றால் பலரும் சென்ற வழியை புறக்கணித்து, புதிய வழியில் செல்பவன் என்று பொருள். அந்நாள் வரையில் எவரும் செய்யாத முறையில், பெருமானை புறக்கணித்து, வேள்வி செய்வதற்கு முடிவு செய்த தக்கனை, மிகவும் பொருத்தமாக வியாத்திரன் என்று கூறுகின்றார் என்று பொருள் கொள்வது மிகவும் சிறப்பு.

வெஞ்சின வேள்வி வியாத்திரனார் தலை

துஞ்சினவா பாடி உந்தீபற

தொடர்ந்த பிறப்பற உந்தீபற

திருவாசகம் தோணோக்கம் பதிகத்தின் பாடலில் (8.15.13) மணிவாசக அடிகளார், தன்னுடன் வலிமையாக பிணைந்திருந்த பிறவியின் பூட்டினை உடைத்தவர் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். தாழ்=தாழ்ப்பாள்; தொழும்பனேன்=தொண்டன்: ஏழை=அறிவில் ஏழை; பண்படாத பாழ் நிலத்திற்கு எவ்வளவு நீர் இறைத்தாலும், அதனால் பயன் ஏதும் இல்லாமல் இருப்பது போன்று, தான் செய்து வந்த செயல்கள் அனைத்தும் பாழும் செயல்கள் என்பதால்,தனது பிறவியை அறுத்துக் கொள்வதற்கு எந்த வகையிலும் உதவவில்லை என்று குறிப்பிடும் அடிகளார், இறைவன் தனது பெருங் கருணையால், தன்னை வலிமையாக பிணைத்திருந்த பிறவிப் பூட்டினை உடைத்தெறிந்து அருள் புரிந்தான் என்று கூறுகின்றார். அனைத்து ஊழிகளையும் கடந்து, அழியாமல் நின்ற அவனது தன்மை, பிறப்பிறப்புச் சுழற்சியை கடந்தவன் பெருமான் என்பதை உணர்த்துகின்றது என்றும் கூறுகின்றார்.

ஏழைத் தொழும்பனேன் எத்தனையோ காலமெல்லாம்

பாழுக்கு இறைத்தேன் பரம்பரனைப் பணியாதே

ஊழி முதல் சிந்தாத நன்மணி வந்தென் பிறவித்

தாழைப் பறித்தவா தோணோக்கம் ஆடாமோ

பொன்னூசல் பதிகத்தின் பாடலில் (8.16.4) பிறப்பறுப்பான் என்று பெருமானை மணிவாசக அடிகளார் குறிப்பிடுகின்றார். நஞ்சினை பெருமான் தனது கழுத்தினில் அடக்கியுள்ள தன்மை, அனைவரும் வெறுக்கும் பொருட்களையும் தீமைகளையும் ஏற்றுக் கொண்டு அடக்கி ஆளும் ஆற்றல் உடையவன் பெருமான் என்பதை உணர்த்துகின்றது. தேவர்கள் எந்த நஞ்சினைக் கண்டு திசைக்கொரு பக்கம் ஓடினார்களோ அந்த நஞ்சின் திறத்தின் தன்மையை வெற்றி கொண்ட பெருமான் என்பதை உணர்த்தும் வண்ணம் அண்டத்தவர் நாதன் என்று அடிகளார் கூறுகின்றார். அஞ்சொலாள்=அழகிய சொற்களை பேசும் பிராட்டி; தூய புகழ்=ஒருவரின் முகத்திற்கு எதிரே அவரை புகழ்வதற்காக சொல்லப் படும் சொற்கள் போன்று அல்லாமல், உண்மையாகவே பெருமானின் தகுதிக்கு ஏற்ப சொல்லப் படும் புகழ்ச் சொற்கள்; துஞ்சல்= இறத்தல்; பிறப்பு என்பது எப்போதும் இறப்புடன் தொடர்பு உடையது என்பதால் துஞ்சல் பிறப்பு என்று கூறினார் போலும். புஞ்சமார்=திரண்ட;

நஞ்சமர் கண்டத்தன் அண்டத்தவர் நாதன்

மஞ்சு தோய் மாட மணி உத்தர கோசமங்கை

அஞ்சொலாள் தன்னோடும் கூடி அடியவர்கள்

நெஞ்சுளே நின்றமுதம் ஊறிக் கருணை பெய்து

துஞ்சல் பிறப்பறுப்பான் தூய புகழ் பாடி

புஞ்சமார் வெள்வளையீர் பொன்னூசல் ஆடாமோ

இதே பதிகத்தின் ஆறாவது பாடலிலும் மணிவாசக அடிகளார், பெருமானை, பிறப்பு அறுப்பான் என்று குறிப்பிடுகின்றார். எண்ணற்ற பழைய பிறவிகளில் ஈட்டிய வினைகளால் தான் நாம் அனைவரும் பிறப்பிறப்புச் சுழற்சியில் சிக்கிக் கொண்டுள்ளோம். இவ்வாறு எண்ணற்ற பழைய பிறவிகளில் நாம் ஈட்டிய வினைகளை, தொல் பிறவித் தீது என்று அடிகளார் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். இத்தகைய வினைகள் தாம் நம்மை எண்ணற்ற பிறவிகளுக்கு வழி வகுத்து, இழுத்துச் செல்லும் தன்மையை, தீதோடும் என்று குறிப்பிடுகின்றார். அடுப்பினில் கொதிக்கின்ற நீர், கீழே உள்ள விறகு பற்றி எரிவதால் தொடர்ந்து கொதித்துக் கொண்டே இருக்கின்றது. கீழே எரியும் கொள்ளிக் கட்டையை இழுத்து விட்டால், நீர் கொதிப்பது நின்று விடுகின்றது. அது போன்று, பிறவிகளுக்கு காரணமாகிய வினைகளை அந்த உயிரிடமிருந்து நீக்கி விட்டால், உயிர்கள் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அடைகின்றன. இந்த செய்தியைத் தான் தீதோடா வண்ணம் உயிர்கள் திகழும் வண்ணம், வினைகளை நீக்கும் பெருமான் என்று குறிப்பிடும் அடிகளார் இவ்வாறு வினைகள் நீக்கப்படுவதால் வினைகளால் ஏற்படுகின்ற எண்ணற்ற பிறவிகளையும் பெருமான் தவிர்க்கின்றான் என்று கூறுகின்றார். போதாடு=அழகாக கொடிகளில், செடிகளில், அசைந்து ஆடும் அரும்புகள் போன்று குவிந்த முலைகள்; இறைவன் பால் காதல் கொண்டு கசிந்த உள்ளத்துடன் அவனது புகழினைப் பாட வேண்டும் என்பதை, கசிந்தன்பால் பாடி என்ற தொடர் மூலம் உணர்த்துகின்றார். தாதாடு கொன்றை=மகரந்தத் தூள்கள் நிறைந்த கொன்றை மலர்கள்; தனது அடியார்களின் குற்றங்களை நீக்கி, அவர்களை பக்குவமடையச் செய்யும் இறைவனின் கருணைச் செயலும் இங்கே சொல்லப் படுகின்றது; கோது=குற்றம்; கோதாட்டி=குற்றங்களை நீக்கி; உயிர்களின் குற்றங்களாக கருதப் படுவன, உயிர்களுடன் பிணைந்துள்ள வினைத் தொகுதிகளே;

மாதாடு பாகத்தன் உத்தர கோசமங்கை

தாதாடு கொன்றைச் சடையான் அடியாருள்

கோதாட்டி நாயேனை ஆட்கொண்டென் தொல்பிறவி

தீதோடா வண்ணம் திகழப் பிறப்பறுப்பான்

காதாடு குண்டலங்கள் பாடிக் கசிந்து அன்பால்

போதாடு பூண் முலையீர் பொன்னூசல் ஆடாமோ

பொன்னூசல் பதிகத்தின் கடைப் பாடலிலும் (8.16.9) மணிவாசக அடிகளார் பெருமானை, எங்கள் பிறப்பு அறுத்திட்டு எந்தரமும் ஆட்கொள்பவன் என்று குறிப்பிடுகின்றார். கொங்கு= தேன், நறுமணம்; எந்தரமும்=எந்த தன்மையில் இருந்தாலும்; ஆன்மாக்கள் அனைத்தும் ஒரே பக்குவத்தில் இருப்பதில்லை; எனினும் பெருமான், அந்தந்த ஆன்மாக்களின் பக்குவ நிலைக்கு ஏற்ப தனது அணுகு முறையினை மாற்றிக் கொண்டு அந்த உயிர்களை ஆட்கொள்ளும் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. கோதை=அழகிய கூந்தலை உடைய பார்வதி தேவி; பணி கொண்ட=தன்னை அடிமையாக ஏற்றுக் கொண்டு தான் செய்யும் பணிகளை மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளும் தன்மை; பங்குலவு=தனது உடலின் ஒரு பாகத்தில் விளங்கும்; திருப்பெருந்துறை தலத்தினில் அந்தணனாக எழுந்தருளி அடிகளாரை ஆட்கொண்ட தன்மை, வேறு எவருக்கும் கிடைக்காத தன்மை என்பதால் தனி உருவம் என்று கூறினார் போலும். பொங்குதல்=கிளர்ந்து எழுதல்; உலவு=அசையும்; பொங்குதல் முலைகளின் தன்மையையும் உலவுதல் அந்த முலைகளின் மீது அணிந்துள்ள நகைகள் அசைந்தாடும் தன்மையையும் குறிப்பிடுகின்றது.

தெங்குலவு சோலை திருவுத்தர கோசமங்கை

தங்குலவு சோதித் தனியுருவம் வந்தருளி

எங்கள் பிறப்பறுத்திட்டு எந்தரமும் ஆட்கொள்வான்

பங்குலவு கோதையும் தானும் பணி கொண்ட

கொங்குலவு கொன்றைச் சடையான் குணம் பரவிப்

பொங்குலவு பூண் முலையீர் பொன்னூசல் ஆடாமோ

திருவாசகம் திருப்பள்ளியெழுச்சி பதிகத்தின் பாடலில் (8.20.6), மணிவாசக அடிகளார், தனது பிறப்பினை அறுத்து பெருமான் அருள் புரிய வேண்டும் என்று வேண்டுகின்றார். பப்பு=பரபரப்பு; பரபரப்பு ஏதும் இன்றி அமைதியுடன் இறைவனைப் பணிந்து வணங்கும் அடியார்கள் என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார். பரபரப்பு நிறைந்து ஆரவாரத்துடன் காணப்படும் இந்த உலகினில் காணப்படும் எண்ணற்ற பொருட்கள் அளிக்கும் சிற்றின்பத்தை உயிர்கள் நாடுவது இயற்கையே. இந்த தன்மையால் தான் உயிர்கள் மனம் ஒன்றி இறைவனை நாடுவதற்கு நேரம் இன்றி தவிக்கின்றது. உயிர்களின் இந்த வேகத்தைத் தவிர்க்கும் ஆற்றல் கொண்டவர் சிவபெருமான் ஒருவர் தான் என்பதை சிவபுராணம் பதிகத்தில், வேகம் களைந்தாண்ட வேந்தன் என்று மணிவாசக அடிகளார் குறிப்பிடுகின்றார். உலகம் மற்றும் உலகத்தில் உள்ள பல பொருட்கள், உயிர்கள் ஆகியவற்றின் மீது தாம் வைத்திருந்த பற்றினை அறுக்கும் அடியார்கள், மனதினில் அமைதி நிலவ இறைவனை வணங்குகின்றனர். இறைவனை வழிபட்டு வாழ்வினில் உய்வினை அடைவதற்கு நாம் தேவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை உணர்த்தும் முகமாக, பாசத்தை அறுத்தெறிந்த பெரியோர்களும் பெண்களும், மனிதர்களாக இருக்கும் இயல்பினில் பெருமானை வணங்குகின்றனர் என்று அடிகளார் கூறுகின்றார். எனவே மனிதப் பிறிவியிலிருந்தே வாழ்வினில் உய்வினை அடையலாம் என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது.

பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார் பந்தனை வந்து அறுத்தார் அவர் பலரும்

மைப்புறு கண்ணியர் மானுடத்தியல்பின் வணங்குகின்றார் அணங்கின் மணவாளா

செப்புறு கமலங்கள் மலரும் தண்வயல் சூழ் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே

இப்பிறப்பு அறுத்தெமை ஆண்டருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

கோயில் திருப்பதிகத்து பாடல் ஒன்றினில் பிறப்பறுக்கும் எம் மருந்தே என்று மணிவாசகர் இறைவனை அழைக்கின்றார். ஒழிந்தார்=தேவர்கள் முனிவர்கள் தவிர்த்த ஏனையோர்; சாத்வீகம் இராஜசம் தாமசம் ஆகிய மூன்று குணங்களையும் கடந்து, அந்த மூன்று குணங்களால் விளையும் அழியும் தன்மை வாய்ந்த இன்பங்களன்றி, என்றும் அழியாத பேரின்பம் உடையவன் இறைவன் என்று குறிப்பிடும் அடிகளார், அந்த குணங்களற்ற இன்பத்தைத் சாரும் தானும், அதே தன்மையை அடைவதால், தனக்கு குறையேதும் இல்லை என்று உணர்த்துகின்றார். இணங்கிலி=நிகர் அற்றவன்; திணிந்ததோர் இருள்=அறியாமையாகிய அடர்ந்த இருள்; அறியாமை எனப்படும் இருளில் மூழ்கிக் கிடக்கும் உயிர்களின் இடையே தெளிந்த தூய ஒளியாக உள்ள இறைவனின் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது.

உணர்ந்த மாமுனிவர் உம்பரோடு ஒழிந்தார் உணர்வுக்கும் தெரிவரும் பொருளே

இணங்கிலி எல்லா உயிர்கட்கும் உயிரே எனைப் பிறப்பறுக்கும் எம் மருந்தே

திணிந்ததோர் இருளில் தெளிந்த தூவெளியே திருப்பெருந்துறை உறை சிவனே

குணங்கள் தாம் இல்லா இன்பமே உன்னைக் குறுகினேற்கு இனி என்ன குறையே

திருவாசகம் செத்திலாப்பத்து பதிகத்தின் பாடலில் (8.23.8) மணிவாசக அடிகளார், இறைவனை மருந்தே என்று அழைக்கின்றார். குரை கழல்=ஒலிக்கும் வீரக்கழல் அணிந்த திருப்பாதம்; கோது மாட்டுதல்=குற்றம் களைந்து ஆட்கொள்ளுதல்; கோது என்ற சொல்லுக்கு கொத்து என்று பொருள் கொண்டு, பாசக்கொத்துகள் என்று பொருள் கொள்வாரும் உள்ளனர். அவ்வாறாயின் பாசப் பிணைப்பினை ஆட்டி அசைத்து முற்றிலும் நீக்கி என்று பொருள் கொள்ளலாம். இரண்டுமே இங்கு பொருத்தமாக உள்ளன. புரந்தராதிகள்=இந்திரன் முதலான தேவர்கள்; போது=மலர், இங்கே தாமரை மலர்; அயன்=பிரமன்; பெருமானின் அருளுக்கு தான் காத்து நிற்பது போன்று, பிரமன் இந்திரன் முதலான பல தேவர்கள் காத்து நிற்பதாக கூறும் அடிகளார், அவர்களை எல்லாம் ஒதுக்கி விட்டு, தனக்கு முன்னுரிமை அளித்து அருள் புரிய வேண்டும் என்று உரிமையுடன் பெருமானிடம் வேண்டுகின்றார் அவர் வேண்டுவது தான் யாது. பெருமான், தனது (மணிவாசகரின்) குற்றங்களை ஒழித்து, வீரக்கழல் ஒலிக்கும் திருப்பாதத்தை காட்டி, அந்த திருப்பாதத்தை பற்றிக் கொள்வாய் என்று பணித்தும், அடியார்களுடன் கூட்டியும் அருள் புரிய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார். இந்திரன் முதலான தேவர்கள், இதுவரையில் தாங்கள் செய்த நற்செயல்களின் பயனாக போக வாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். எனவே அவர்கள் இன்பம் மட்டுமே துய்ப்பவர்களாக உள்ளனர். ஆனால் நிலவுலகில் வாழும் மணிவாசகரோ, உலகியல் வாழ்வினில் ஈடுபட்டு, இன்ப துன்பங்களில் உழன்று கொண்டிருப்பவர். எனவே உலக வாழ்வினில் உழல்வோருக்குத் தானே முன்னுரிமை அளிக்க வேண்டும். அந்த உரிமையைத் தான் மணிவாசக அடிகளார் வேண்டுகின்றார் போலும். தான் படும் துன்பத்தை, யாது செய்வது என்று திகைத்துத் தான் இருந்ததாகவும், பெருமானால் குருந்த மரத்தினடியில் ஆட்கொள்ளப்பட்ட தான் இடரினில் உழல்வது அழகோ என்றும் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். உலகினில் நாம் காணும் மருந்துகள் அனைத்தும், உடலின் நோயினைத் தவிர்க்கவும், கட்டுப்படுத்தவும் உதவும் தன்மை உடையன. ஆனால் அடிகளார் கொண்டுள்ளதோ மனநோய், மனதின் அகப் பகைகளாகிய காமம் குரோதம், மோகம், உலோபம், மதம், மாற்சரியம் விளைவிக்கும் நோய்; இந்த ஆறு உட்பகைகளையும் வெல்வதற்கு வேண்டிய ஆற்றலை, உயிர்க்கு அருளும் வல்லமை பெற்றவன் பெருமான் ஒருவன் தான் என்பதால், தனது மனநோய்க்கு மருந்தாக திகழ்பவன் இறைவன் என்பதை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.

போது சேர் அயன் பொருகடற் புரந்தராதிகள் நிற்க மற்றென்னைக்

கோது மாட்டி நின் குரை கழல் காட்டிக் குறிக்கொள்கென்று நின் தொண்டரில் கூட்டாய்

யாது செய்வது என்று இருந்தனன் மருந்தே அடியனேன் இடர்ப்படுவதும் இனிதோ

சீதவார் புனல் நிலவிய வயல்சூழ் திருப்பெருந்துறை மேவிய சிவனே

திருவாசகம் அடைக்கலப்பத்து பதிகத்தின் பாடலில் (8.24.2) மணிவாசக அடிகளார், பெருமானை என் பிறவியை வேர் அறுப்பவனே என்று அழைக்கின்றார். பாம்பைக் கண்டு அனைவரும் அஞ்சுவதால் அனைவரும் பாம்பினை வெறுப்பார்கள்; ஆனால் இறைவனோ, அந்த பாம்பினையும் வெறுக்காமல், தனது உடலின் பல இடங்களில் ஆபரணமாக அணிந்து கொண்டுள்ள தன்மை, அவன் விருப்பு வெறுப்புகளை கடந்தவன் என்பதை உணர்த்துகின்றது. உலகினுக்கு தீங்கு இழைத்து, உலகினையே பாதாளத்திற்கு இழுத்துச் செல்லும் நோக்கத்துடன் மிகுந்த வேகமாக கீழே இறங்கிய கங்கை நதியினைத் தடுத்து நிறுத்திய பெருமை உடையவன் பெருமான் என்பதும் இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. பாம்பினை வெறுக்காமல் தனது உடலில் ஏற்றுக் கொண்டது போன்று,தனது சிறுமையை கருத்தில் கொள்ளாது ஏற்றுக் கொண்டவன் பெருமான் என்று அடிகளார் உணர்த்துகின்றார். அதே போல் குற்றம் உடைய கங்கை நதியை மன்னித்து பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டது போன்று, தன்னையும் ஏற்றுக் கொண்டு அருள் புரிந்தவன் பெருமான் என்றும் அடிகளார் குறிப்பிடுகின்றார். இத்தகைய பண்பினை உடைய பெருமானே தனக்கு அடைக்கலம் அளித்து காக்கும் ஆற்றல் வாய்ந்தவன் என்பதால் அவனைத் தான் சரணடைந்ததாக குறிப்பிடுகின்றார். இதே பதிகத்தின் மூன்றாவது பாடலில், தனது பிறவியை வேரறுத்துப் பெரும் பிச்சு தரும் பெருமான் என்று மணிவாசக அடிகளார் குறிப்பிடுகின்றார்.

வெறுப்பனவே செய்யும் என் சிறுமையை நின் பெருமையினால்

பொறுப்பவனே அராப் பூண்பவனே பொங்கு கங்கை சடைச்

செறுப்பவனே நின் திருவருளால் என் பிறவியை வேர்

அறுப்பவனே உடையாய் அடியேன் உன் அடைக்கலமே

திருவாசகம் புணர்ச்சிப் பத்து பதிகத்தின் பாடலில் (8.27.9) மாணிக்கவாசகர், பெருமானை பிறவிப் பிணிக்கோர் மருந்தே என்று அழைக்கின்றார். பாதப்போது=மலர்கள் போன்று மென்மையான திருப்பாதங்கள்; பேதாய்=ஏதும் அறியாதவன்; நாயினும் கடையனான தன்னை பெருமான் ஆட்கொண்ட கருணைச் செயலை இங்கே அடிகளார் குறிப்பிடுகின்றார். தன்னால் இறைவன் ஏதும் பயனடையாத நிலையில், தன்னை இறைவன் ஆட்கொண்டது பேதையின் செயல் என்று அடிகளார் பழிப்பது போன்று தோன்றினாலும், உண்மையில் இறைவனை பழிப்பது போன்று அடிகளார் இங்கே புகழ்கின்றார். எதற்கும் பயன்படாமல், நாயினும் கடையனாக தான் இருந்த போதிலும், தன்னையும் ஒரு பொருட்டாக மதித்து ஆட்கொண்ட இறைவன் என்று குறிப்பிட்டு இறைவனை புகழ்கின்றார். இவ்வாறு இறைவன் நாயேனாகிய தன்னை ஆட்கொண்டதை குறிப்பிட்டு, இறைவனின் எளிவந்த தன்மையை அடிகளார் குறிப்பிடுகின்றார். இறைவனின் திருப்பாதத்தை மலர் என்று குறிப்பிடுவதால், திருவடி மலர்களால் பெறுகின்ற இன்பத்தை தேன் என்று நயமாக குறிப்பிடுகின்றார். இரவும் பகலும் எப்போதும் இறைவனின் திருவடிகளின் தன்மையை ஆராய்ந்து, குற்றமற்ற மாணிக்கமாகிய இறைவனுடன் சென்று சேர்வது எந்நாளோ என்று தனது ஏக்கத்தினை தெரிவிக்கும் பாடல் இந்த பாடல்.

தாதாய் மூவேழ் உலகுக்கும் தாயே நாயேன் தனையாண்ட

பேதாய் பிறவிப் பிணிக்கோர் மருந்தே பெருந்தேன் பில்க எப்போதும்

ஏதா மணியே என்றென்று ஏத்தி இரவும் பகலும் எழிலார் பாதப்

போது ஆய்ந்து அணைவது என்று கொல்லொ என் பொல்லா மணியைப் புணர்ந்தே

திருவாசகம் கண்டப்பத்து பதிகத்தின் பாடலில் (8.31.2) மணிவாசக அடிகளார் பெருமானை, பிறப்பறுத்த இணையிலி என்று அழைக்கின்றார். பெருமானைத் தவிர்த்து வேறு எவரும் பிறப்பிறப்புச் சங்கிலியை அறுக்க முடியாது என்பதால், அவரை இணையிலி என்று குறிப்பிடுவது மிகவும் பொருத்தமாகவே உள்ளது. நாம் பிறக்கும் போதே, இந்த பிறவியில் நாம் நுகர்ந்து கழிக்க வேண்டும் என்று இறைவனால் நிர்ணயிக்கப் படும் வினைகளின் தொகுதியும் நம்முடன் சேர்ந்து கொள்கின்றன. அந்த வினைகளின் தன்மையால் தான், நமக்கு வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் ஏற்படுகின்றன. அவ்வாறு நாம் அனுபவிக்கும் இன்பங்களில் ஆழும் நாம் இறைவனை மறந்து விடுவது இயற்கை. துன்பங்களில் ஆழும் போது, ஒரு சிலர் தங்களது துன்பங்கள் தீர வேண்டும் என்று வேண்டுவதற்காக இறைவனை நினைக்கின்றார்களே தவிர வேறு எதற்காகவும் இறைவனை நினைப்பதில்லை. பலரும் தனக்கு ஏன் இந்த துன்பங்கள் ஏற்படுகின்றன என்ற கவலையில், துன்பங்கள் இழைப்பவரை கடிந்து கொள்வதும் ஏன் இறைவனையே சினந்து கொள்வதும் நாம் அடிக்கடி காண்கின்ற நிகழ்ச்சிகளாக உள்ளன. இந்த நிலையில் தான் இருப்பதாக மணிவாசகர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். இந்த இன்ப துன்பங்களின் விளைவால் மனநிலை மாறாமல், மகிழ்ச்சியோ வேதனையோ ஏதும் கொள்ளாமல், தங்களது மனதினில் ஏற்படும் சஞ்சலங்களை தவிர்த்து, இன்ப துன்பங்களை சரிசமமாக பாவித்து, எப்போதும் சிவ சிந்தையுடன் வாழும் அடியார்களை, இந்த இன்ப துன்பங்கள் ஏதும் செய்வதில்லை. அதனால் அவர்கள் மேன்மேலும் வினைகள் சேர்த்துக் கொள்வதை தவிர்க்கும் பக்குவத்தை அடைந்து விடுகின்றனர். அந்த நிலையை அடையாமல் வினைகளால் தான் தளர்ந்து கிடப்பதை குறிப்பிடும் மணிவாசகர், தன்னையும் ஒரு பொருட்டாக மதித்து ஆட்கொண்ட பெருமானை, தான் தில்லை அம்பலத்தில் கண்டதாக கூறுகின்றார். இதே பதிகத்தின் ஆறாவது பாடலில், பெருமானை, தனது பிறவியை அற மாற்றியவன் என்று குறிப்பிடுகின்றார்.

வினைப்பிறவி என்கின்ற வேதனையில் அகப்பட்டுத்

தனைச் சிறிதும் நினையாதே தளர்வு எய்திக் கிடப்பேனை

எனைப் பெரிதும் ஆட்கொண்டு என் பிறப்பறுத்த இணையிலியை

அனைத்துலகும் தொழும் தில்லை அம்பலத்தே கண்டேனே

திருவாசகம் பிடித்த பத்து பதிகத்தின் பாடலில் (8.37.6) மணிவாசக அடிகளார், பெருமான் தனது பிறவி வேரினை அறுத்ததாக குறிப்பிடுகின்றார். அறவையேன்=ஆதரவு அற்றவன்; தன்னை பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுவித்ததும் அன்றி தனது குடிக்கே அருள் புரிந்தவன் பெருமான் என்று அடிகளார் இங்கே குறிப்பிடுகின்றார். பிஞ்ஞகன்=மிகவும் அழகாக பின்னப் பட்ட கூந்தலை உடையவன்: திறவு=திறப்பு, அறியாமை நீங்கிய நிலை;இறவு=அழிவு நிலை, இங்கே இறுதியான நிலை என்ற பொருளில் கையாளப் பட்டுள்ளது.

அறவையேன் மனமே கோயிலாக் கொண்டாண்டு அளவிலா ஆனந்தம் அருளிப்

பிறவி வேர் அறுத்து என் குடி முழுதாண்ட பிஞ்ஞகா பெரிய எம் பெருமானே

திறவிலே கண்ட காட்சியே அடியேன் செல்வமே சிவபெருமானே

இறவிலே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்து அருளுவது இனியே

திருவாசகம் திருவேசறவு பதிகத்தின் பாடலில் (8.38.2) மணிவாசக அடிகளார் பெருமானை நோக்கி, மண்ணார்ந்த பிறப்பறுத்திட்டு எனை ஆள்வாய் என்று வேண்டுகின்றார். பண் போன்று இனிய மொழிகளை உடைய மங்கை என்று பார்வதி தேவியை அடிகளார் இங்கே குறிப்பிடுகின்றார். உண்ணார்ந்த=உண்ணத் தகுந்த; ஆரமுது=எவ்வளவு உட்கொண்டாலும் தெவிட்டாத அமுதம் போன்று இனிமையானவன்; ஆர்ந்த=பொருந்திய;மண்ணார்ந்த=நில உலகினில் பிறப்பெடுத்த; தனு கரண புவன போகம் என்ற தொடருக்கு ஏற்ப, அனைத்து உயிர்களும், தங்களுடன் பிணைந்துள்ள வினைகளை நுகர்ந்து கழித்துக் கொள்ளும் பொருட்டு, தகுந்த உடலுடன் இணைக்கப் பட்டு பூமியில் பிறக்கின்றன. அத்தகைய உயிர்களில் ஒன்றாகிய தான், பெருமானின் ஆற்றலை புரிந்து கொண்டு பெருமானுக்கு அடிமையாக மாறி, தன்னையே பெருமானுக்கு ஒப்படைத்த தன்மையை அடிகளார் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். பெருமானுக்கு அடிமையாகத் திகழும் அடியார்களுக்கு மட்டுமே அவன் ஆராத அமுதமாக திகழ்கின்றான் என்று அடிகளார் இந்த பாடலில் கூறுகின்றார். இதன் மூலம், நாமும் பெருமானின் அருள் பெற வேண்டும் என்று விரும்பினால், பெருமானுக்கு அடிமையாக மாறி, நம்மை முழுவதுமாக பெருமானிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை உணர்த்துகின்றார். பெருமான் தன்னை அழைத்த குரலை அடையாளம் கண்டு கொண்டு, எங்கோ தொண்டித் துறைமுகம் சென்று கொண்டிருந்த தான், திருப்பெருந்துறை வந்தடைந்து பெருமானால் ஆட்கொள்ளப்பட்டு பெருமானின் திருவடிகளைக் காணும் பேற்றினை பெற்ற தன்மையை அடிகளார் இங்கே குறிப்பிடுகின்றார். பெருமான் தனக்கு திருவடி தீட்சை தந்து அருளியது பசுமையான நினைவாக தனது மனதினில் பதிந்திருக்கும் தன்மையையும் அடிகளார் இந்த பாடலில் உணர்த்துகின்றார். ஏசறவு என்றால் நெடுநாளாக விரும்பிய ஒன்றை அடைய முயன்று வருந்தும் தன்மை என்று பொருள். திருவாரூர் தலத்தின் மீது அருளிய திருவிருத்தப் பாடலில் அப்பர் பிரான், ஈசனையே நினைந்து ஏசறுவேன் என்று தன்னை குறிப்பிடுவது நமது நினைவுக்கு வருகின்றது.

பண்ணார்ந்த மொழி மங்கை பங்கா நின் ஆளானார்க்கு

உண்ணார்ந்த ஆரமுதே உடையானே அடியேனை

மண்ணார்ந்த பிறப்பறுத்திட்டு ஆள்வாய் நீ வா என்ன

கண்ணார உய்ந்தவாறு அன்றே உன் கழல் கண்டே

இதே பதிகத்தின் ஏழாவது பாடலிலும் மணிவாசக அடிகளார் (8.38.7) தனது பிறப்பினை அறுத்தவன் பெருமான் என்று குறிப்பிட்டு மகிழ்கின்றார். பிறப்பினை பாலைப் பிறப்பு என்று அடிகளார் கூறுவது சிந்திக்கத் தக்கது; பாலைவனத்தில் எங்கும் வெப்பமே நிறைந்து காணப்படும். அது போல் நமது பிறவி, உலகியல் மாயங்களில் சிக்குண்டு மேன்மேலும் துன்பங்களை அனுபவிப்பதற்கு வழி வகுப்பதால் பாலைப் பிறவு என்று சொல்லப் பட்டுள்ளது. இடையிடையே நாம் அனுபவிக்கும் இன்பங்களும் நிலையானவை அல்ல என்பதை உணராத நாம், அத்தகைய இன்பங்களைத் தேடிக் கொண்டு அலைகின்ற தன்மை, பாலைவனத்தில் கானல் நீரினைத் தேடி அலைந்துக் களைப்பதை ஒத்துள்ளதை நாம் உணரலாம். இறைவன் தனது மனதினில் புகுந்தமையால் தான், தனது மனம் அவன் பால் வைத்துள்ள அன்பினால் உருகியது என்று அடிகளார் கூறுகின்றார். எனவே இறைவன் பால் காதல் கொண்டு கசிந்து உருகும் நிலை நமக்கு ஏற்படுவதற்கும், அவனின் அருள் தேவைப் படுகின்றது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். திருப்பெருந்துறையில் பெருமான் தன்னை ஆட்கொண்ட போதே, அவரது அருள் கருணை தன் மீது பதிந்துவிட்டதாக அடிகளார் இந்த பாடலில் கூறுகின்றார்.

என்பாலை பிறப்பறுத்து இங்கு இமையவர்க்கும் அறியவொண்ணா

தென்பாலைத் திருப்பெருந்துறை உறையும் சிவபெருமான்

அன்பால் நீ அகம் நெகவே புகுந்தருளி ஆட்கொண்டது

என்பாலே நோக்கியவாறு அன்றே எம் பெருமானே

திருவாசகம் குலாப்பத்து பதிகத்தின் பாடலில் மணிவாசக அடிகளார், பிறவிக்குழியை தூர்த்து அருள் புரிந்தவன் பெருமான் (8.40.5) என்று குறிப்பிடுகின்றார். ஒவ்வொரு பிறவியிலும் எடுக்கப்படும் வேறுவேறு உடல்கள் வேறுவேறு பெயரினையும் குணங்களையும் கொண்டதாக விளங்குகின்றன. இவ்வாறு பெயர்களாலும் குணங்களாலும் அறியப் படுகின்ற பிறவிக் குழிகள் தூர்ந்து போகும் வண்ணம், தொண்டர்களின் வினைமாசுகளைப் போக்கும் இறைவன், அந்த உயிர்களை தன்னிடத்தே அழைத்துக் கொண்டு சிவானந்தத் தேன் பருகும் வண்ணம் செய்கின்றான் என்று இந்த பாடலில் அடிகளார் கூறுகின்றார்.

பேரும் குணமும் பிணிப்புறும் இப்பிறவி தனைத்

தூரும் பரிசு துரிசறுத்துத் தொண்டரெல்லாம்

சேரும் வகையால் சிவன் கருணைத் தேன் பருகி

ஆரும் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே

திருவாசகம் சென்னிப்பத்து பதிகத்தின் பாடலில் (8.42.7) மணிவாசக அடிகளார் பெருமானை பிறவி என்னும் இக்கடலை நீந்தத்தன் பேரருள் தந்து அருளினான் என்று குறிப்பிடுகின்றார். அறவை=ஆதரவற்றவன்; நல்ல துணையேதும் இல்லாமல் இருந்த தன்னை, அடியார்களின் கூட்டத்தில் புகுத்தியவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். பெருக்கம்=வளர்ச்சி; உண்மைப் பொருளாக இருக்கின்ற பெருமானின் வளர்ச்சி; கல்லையே தெப்பமாக மிதக்கச் செய்து அப்பர் பெருமானை காப்பாற்றிய பெருமான், பிறவிக் கடலில் சிக்குண்ட அடியார்களை காப்பது அவனுக்கு மிகவும் விருப்பமான செயல் அல்லவா. இதனால் தானே கைதர வல்ல கடவுள் என்று மணிவாசக அடிகளார் போற்றித் திருவகவலில் குறிப்பிடுகின்றார். பிறவியாகிய கடலை நீந்திக் கடக்க தனது பேரருளாகிய தெப்பத்தைத் தந்து அருளியவனும், என்னைத் துணையற்றவன் என்று கருதி அடியார்களுடைய திருவருட் கூட்டத்தில் என்னை புகுத்தியவனும், அந்த அடியார்களுடன் நெருங்கிய உறவினை உண்டாக்கி தன்னை உய்வித்தவனும் ஆகிய பெருமானது திருப்பாதங்களில் சேரும் எனது சென்னி, அழகுடன் பொலிந்து மலரும் என்று அடிகளார் கூறுவதாக அமைந்த பாடல்.

பிறவி என்னும் இக்கடலை நீந்தத்தன் பேரருள் தந்து அருளினான்

அறவை என்று அடியார்கள் தங்கள் அருட்குழாம் புக விட்டு நல்

உறவு செய்து எனை உய்யக் கொண்ட பிரான்றன் உண்மைப் பெருக்கமாம்

திறமை காட்டிய சேவடிக் கண் நம் சென்னி மன்னி திகழுமே

திருவாசகம் எண்ணப்பதிகம் பதிகத்தின் முதல் பாடலில் (8.44.1) மணிவாசக அடிகளார் பிறப்பற வேண்டும் என்று பெருமானிடம் வேண்டுகின்றார். சீர்=சிறப்பு, புகழ்; புகழே உருவமாக உள்ளவன் சிவபெருமான்; பாருருவாய பிறப்பு=நிலவுலகத்தில் பிறந்து வினை வயத்தால் இன்ப துன்பங்களை நுகர்ந்து மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கும் நிலை; பத்திமை= அன்பு; செம்மையான திருமேனியை உடைய பெருமானை, செங்கமல மலர் போல் திருமேனி என்று கூறுகின்றார். தொகை=கூட்டம், குழு; அடியார்கள் குழுவின் இடையே பெருமானின் திருவருள் எப்போதும் பொருந்தி இருக்கும் என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது. ஒப்பற்ற திருவருள் என்பதை உணர்த்தும் பொருட்டு, ஓருருவாய திருவருள் என்று கூறுகின்றார்.

பாருருவாய பிறப்பற வேண்டும் பத்திமையும் பெற வேண்டும்

சீருருவாய சிவபெருமானே செங்கமல மலர் போல்

ஆருருவாய என்னாரமுதே உன் அடியவர் தொகை நடுவே

ஓருருவாய நின் திருவருள் காட்டி என்னையும் உய்யக்கொண்டு அருளே

திருவாசகம் திருவெண்பா பதிகத்தின் பாடலில் (8.47.4) வரும் துயரம் தீர்க்கும் மருந்து என்று பெருமானை மணிவாசகர் குறிப்பிடுகின்றார். வரும் துயரம் என்ற தொடருக்கு இனி எடுக்கவிருக்கும் பிறவிகள் என்று பொருள் கொள்வது பொருத்தம். முன்னை வினை=பழைய பல பிறவிகளில் ஈட்டிய வினைகள்; இரண்டும்=நல்வினை தீவினை ஆகிய இரண்டு; அனைத்து வினைகளும் கழிவதால், வினைகளின் சேர்க்கை காரணமாக பிறப்பு எடுக்க வேண்டிய நிலையிலிருந்து விடுபடும் உயிர், பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அடைகின்றது.

முன்னை வினையிரண்டும் வேரறுத்து முன்னின்றான்

பின்னைப் பிறப்பறுக்கும் பேராளன் — தென்னன்

பெருந்துறையில் மேய பெருங் கருணையாளன்

வரும் துயரம் தீர்க்கும் மருந்து

திருவாசகம் திருவெண்பா பதிகத்தின் பாடலில் (8.47,6) மணிவாசக அடிகளார், பெருமான் தனது பிறப்பை அறுத்ததால், தனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை வார்த்தைகளில் வடிக்க முடியாது என்பதை உணர்த்த, பேச்சரிதாம் என்று கூறுகின்றார். எட்டுவதற்கு மிகவும் அரியவனாக இருக்கும் பெருமான், தனது நிலைக்கு ஏற்றவாறு எளியவனாக இறங்கி வந்து தனது மனதினைக் கோயிலாகக் கொண்டு தங்கி தன்னை ஆட்கொண்டமையால், தான் அவன் பால் எல்லையற்ற அன்பு கொண்டு பித்தனாக மாறியதாகவும் தன்னை பீடித்திருந்த பிறப்பிறப்புச் சங்கிலி கழன்றதாகவும், குறிப்பிடும் அடிகளார், மேற்கூறிய பெருமானின் கருணைச் செயல்களால், தான் அடைந்த மகிழ்ச்சி, சொல்ல ஒண்ணாதது என்று கூறுகின்றார். தனது வினைகளுக்கு மருந்தாக செயல்பட்டு அவற்றை நீக்கிய பெருமான் தனக்கு என்றும் அழிவில்லாத பேரின்பத்தை அளித்தார் என்றும் கூறுகின்றார்.

பித்தென்னை ஏற்றும் பிறப்பறுக்கும் பேச்சரிதாம்

மத்தமே ஆக்கும் வந்து என் மனத்தை – அத்தன்

பெருந்துறையான் ஆட்கொண்டு பேரருளால் நோக்கும்

மருந்து இறவாப் பேரின்பம் வந்து

திருவாசகம் பண்டாய நான்மறை பதிகத்தின் பாடலில் (8.48.6) அடியார்களின் பிறப்பகல அருள் புரிகின்ற பெருமான் என்று சொல்லும் மணிவாசக அடிகளார், அத்தகைய அடியார்களின் தன்மையை விவரிக்கின்றார். காணும் கரணங்கள் எல்லாம் பேரின்பம் எனப் பேணும் அடியார் என்று கூறுகின்றார். கேடும் ஆக்கமும் கெட்ட திருவினராக விளங்கி, தாம் எதிர்கொள்ளும் இன்ப துன்பங்களை ஒன்றாக பாவித்து, அவற்றால் சலனம் அடையாத மனத்தவராக, எங்கும் சிவத்தையும் எதிலும் சிவத்தையும் காணும் அடியார்களை இங்கே மணிவாசக அடிகளார் குறிப்பிடுகின்றார். தில்லைக் கூத்தனை கண்ட சுந்தரர், ஐந்து பேரறிவும் கண்களே ஆக, அளப்பரும் கரணங்கள் நான்கும் சிந்தையேயாக குணமொரு மூன்றும் திருந்து சாத்துவீகமே ஆக, தனிப் பெருங்கூத்தின் வந்த பேரின்ப வெள்ளத்தில் திளைத்த, நிகழ்ச்சி நமது நினைவுக்கு வருகின்றது. மணிவாசக அடிகளாரும் குழைத்த பத்து பதிகத்தின் பாடலில், கூறும் நாவே முதலாக கூறும் கரணம் எல்லாம் நீ என்று சொல்வதும் நமது நினவுக்கு வருகின்றது. அத்தகைய நிலையினை அடையும் அடியார்களின் பிறப்பினை அறுத்து மகிழ்பவன் பெருமான் என்று கூறுகின்றார். அத்தகைய அடியார்களை விட்டு பெருமான் எப்போதும் பிரியாமல் இருக்கும் நிலையும் இங்கே உணர்த்தப் படுகின்றது. அத்தகைய பெருமானின் சிறப்புகளை நாம் வாயார பேச வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார்.

காணும் கரணங்கள் எல்லாம் பேரின்பம் எனப்

பேணும் அடியார் பிறப்பகலக் – காணும்

பெரியானை நெஞ்சே பெருந்துறையில் என்றும்

பிரியானை வாயாரப் பேசு

இதே பதிகத்தின் ஏழாவது பாடலில் (8.48.7) பெருமான் அளித்த மணியான உபதேச வார்த்தைகளைப் பேசியும் பெருந்துறைப் பெருமானை வாழ்த்தியும் தான் பிறப்பினை அறுத்துக் கொண்டதாக அடிகளார் கூறுகின்றார். இலக்கிதம்=உண்மை நிலை; பேசும் பொருள்= அனைத்து உலகியல் பொருட்கள்; உலகியல் பொருட்கள் நிலையற்றவை; அவை அனைத்தும் தருகின்ற இன்பமும் நிலையற்றவை; தான் ஒருவனே என்றும் நிலையானவன், தான் ஒருவனே என்றும் அழியாத நிலையான ஆனந்தத்ததை அருளும் ஆற்றல் வாய்ந்தவன் என்பதே பெருமான் செய்த உபதேசம் என்பதை நாம் இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். எண்ணங்களையும் சொற்களையும் கடந்தவனாக பெருமான் இருக்கும் தன்மை, பேச்சிறந்த மாசில் மணி என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது. உயிர்களின் பெரிய பிணியாகிய பிறவிப் பிணியை போக்கும் பெருமானை நல்ல மருந்து என்று குறிப்பிடுகின்றார்.

பேசும் பொருளுக்கு இலக்கிதமாம் பேச்சிறந்த

மாசில் மணியின் மணி வார்த்தை – பேசிப்

பெருந்துறையே என்று பிறப்பறுத்தேன் நல்ல

மருந்தின் அடி என் மனத்தே வைத்து

இதே பதிகத்தின் இரண்டாவது பாடலில் பெருமானை வாழ்த்தும் உயிர்களின் பிறவிக்காடு வேரோடு கெட்டு விடும் என்று மணிவாசக அடிகளார் கூறுகின்றார். எண்ணற்ற பிறவிகளால் சூழப்பட்டுள்ள உயிர்களை, பிறவிக் காட்டில் அகப்பட்ட உயிர்கள் என்று குறிப்பிடுகின்றார். உகு=சொரிகின்ற; அனைத்து உயிர்களுடன் தொன்றுதொட்டு பிணைந்து வருகின்ற மூன்று மலங்களும் மாய்ந்து ஒழியும் வண்ணம் சொரிகின்ற, பெருமை வாய்ந்த தேனாகிய வெள்ளத்தை அளிக்கும், வேதக் குதிரையின் மேல் எழுந்தருளி வந்த வள்ளலாகிய பெருமான் உறைகின்ற திருப்பெருந்துறை தலத்தை வாழ்த்தினால், உங்களது பிறவியாகிய காட்டின் கருவே அழிந்து விடும் என்ற அறிவுரையை உள்ளடக்கிய பாடல்.

உள்ள மலமூன்றும் மாய உகு பெருந்தேன்

வெள்ளம் தரும் பரியின் மேல் வந்த – வள்ளல்

மருவும் பெருந்துறையை வாழ்த்துமின்கள் வாழ்த்தக்

கருவும் கெடும் பிறவிக் காடு

திருவாசகம் திருப்படையாட்சி பதிகத்தின் பாடலில் மணிவாசக அடிகளார், ஈசன் நம் முன்னே எழுந்தருளினால் நம்மிடம் ஏற்படும் பல மாற்றங்களை உணர்த்தும் அடிகளார், இந்திர ஞாலம் போன்று இன்பத்தை நம்மிடை தோற்றுவித்து உடனே அந்த இன்பங்களை அழித்து, துன்பங்களை மிகுதியாக அளிக்கும் பிறவித் துன்பம் ஒழிந்து போகும் என்று கூறுகின்றார். பொதுவாக நடைபெறாது என்று நாம் கருதும் பல செயல்கள், இறைவன் நம் முன்னே எழுந்தருளினால் நடைபெறுகின்ற அதிசயத்தை அடிகளார் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். பறிந்து மறிந்திடும்=வேர் பறிக்கப்பட்டு தலைகீழாக விழுந்து விடும்; பந்த விகார குணங்கள்= ஆணவ மலத்தின் சேர்க்கையால் உயிர்கள் இறைவனை நாடும் தன்மைக்கு இடையூறாக இருக்கும் அறியாமை; பாவனை=தியானம்; மகளிரின் சிவந்த உதடுகள், இதழ் துடிப்புகள், இளமை முதலியன நம்மில் காம உணர்ச்சியைத் தூண்டி, இறை உணர்வினை மங்கச் செய்யும் தன்மை, மடவார் இடரானவை என்ற தொடர் மூலம் குறிப்பிடப் படுகின்றது; இறைவன் நம் முன்னே எழுந்தருளினால், தொடரும் பிறவிகளுக்கு காரணமாக விளங்கும் குணங்கள், ஆணவ மலத்தின் சேர்க்கையால் நம்மிடம் ஏற்படும் மாறுதல்கள், நம்மை விட்டு விலகி விடும்; இறைவனைக் குறித்து தியானம் செய்கின்ற மனதினில் சிவானந்தம் பெருகும்; எல்லா அண்டங்களையும் எல்லையற்ற எல்லா உலகப் பொருள்களையும் காணும் ஆற்றல் நம்முள் விளையும்; அனைத்துப் பொருட்களுக்கும் ஆதியாகிய பரஞ்சுடரை நாம் நெருங்க முடியும்; அழகிய மகளிர்களால் நமது கவனம் சிதறாத வண்ணம் நம்மால் தொடர்ந்து இறை உணர்வில் திகழ முடியும்; நமது கண்கள் எப்போதும் அவனது திருமேனியை காணும் வண்ணம் எங்கும் சிவத்தையும் எதிலும் சிவத்தையும் காணும் பக்குவம் நம்மில் உண்டாகும்; இந்திர ஞாலம் போன்று தோன்றி மறையும் இன்பங்களை விளைவித்து பின்னர் துன்பங்களில் ஆழ்த்தும் பிறவிகள் நம்மை விட்டு விலகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை ஆகும்.

பந்த விகார குணங்கள் பறிந்து மறிந்திடும் ஆகாதே பாவனையாய கருத்தினில் வந்த பராவமுது ஆகாதே

அந்தமிலாத அகண்டமும் நம்முள் அகப்படுமாகாதே ஆதி முதற்பரமாய பரஞ்சுடர் அண்ணுவது ஆகாதே

செந்துவர் வாய்மடவார் இடரானவை சிந்திடுமாகாதே சேலனகண்கள் அவன்திருமேனி திளைப்பன ஆகாதே

இந்திரஞால இடர்ப் பிறவித்துயர் ஏகுவதாகாதே என்னுடை நாயகன் ஆகிய ஈசன் எதிர்ப்படும் ஆயிடிலே

ஒளிவளர் விளக்கே என்று தொடங்கும் திருவிசைப்பா பதிகத்தின் பாடலில் (9.1.4) திருமாளிகைத் தேவர், பெருமானை, தனது பிறப்பிறப்பினை அறுத்த பேரொளி என்று குறிப்பிடுகின்றார். களைகண்=பற்றுக்கோடு; மாறுபட்ட இரண்டு தன்மைகளை உடையவனாக பெருமான் இருக்கும் தன்மை இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. ஒப்பற்ற ஒருவனாக இருக்கும் பெருமான், அனைத்து உலகப் பொருட்களிலும் அனைத்து உயிர்களிலும் புகுந்து கொண்டு அவற்றை இயக்கும் தன்மை உடையவனாக இருக்கும் இறைவன் என்று குறிப்பிடும், திருமாளிகைத் தேவர், அந்த இறைவன் பெருமானின் புகழினை எடுத்து உரைக்கும் வண்ணம் தன்னை மாற்ற வேண்டும் என்று வேண்டுகின்றார்.

பெருமையில் சிறுமை பெண்ணொடு ஆணாய் என் பிறப்பிறப்பு அறுத்த பேரொளியே

கருமையின் வெளியே கயற்கணாள் இமவான் மகள் உமையவள் களைகண்ணே

அருமையின் மறை நான்கு ஓலமிட்டு அரற்றும் அப்பனே அம்பலத்து அமுதே

ஒருமையில் பல புக்கு உருவி நின்றாயைத் தொண்டனேன் உரைக்குமாறு உரையே

தில்லைச் சிதம்பரம் தலத்தின் மீது அருளிய திருவிசைப்பா பாடலில் (9.8.2) கருவூர்த் தேவர், பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடப்பதற்கு நமக்குத் துணையாக இருப்பவன் இறைவன் ஒருவன் தான் குறிப்பிடுகின்றார். நம்முடன் தோன்றிய நமது ஐந்து பொறிகளே, உயிரின் நோக்கத்திற்கு, பிறவிகளை அறுத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்கு பகையாக விளங்குவதை புரிந்து கொண்டு, பொறிகளின் வழியே செல்லாமல், பெருமானே உன்னை அல்லால் எனக்கு யார் துணை என்று கதறி அழுதால், அத்தகைய உயிர்களுக்கு அஞ்சேல் என்று சொல்லி அருள் புரிபவன் இறைவன் என்று இந்த பாடலில் கூறுகின்றார். கடைசியர்= உழவர்; நெல் வயல்களில் களையாக வளர்ந்த நீலமலர்க் கொடிகள் உழவர்களால் களையப் பட்டு, வரப்புகளில் பரந்து கிடக்கின்றன என்று நிலத்தின் வளத்தை குறிப்பிடுகின்றார். பௌவம்=கடல்; பழனம்=வயல்கள்;

இவ்வரும் பிறவிப் பௌவ நீர் நீந்தும் ஏழையேற்கு என்னுடன் பிறந்த

ஐவரும் பகையே யார் துணை என்றால் அஞ்சல் என்று அருள் செய்வான் கோயில்

கைவரும் பழனம் குழைத்த செஞ்சாலிக் கடைசியர் களைதரு நீலம்

செய் வரம்பு அரும்பு பெரும்பற்றப்புலியூர் திருவளர் திருச்சிற்றம்பலமே

களந்தை ஆதித்தேச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (9.9.7) கருவூர்த் தேவர், பல தகுதி வாய்ந்த அடியார்கள் இருக்கையில் அவர்களை விடுத்து, தன்னைத் தேர்ந்தெடுத்து ஆட்கொண்டு, தனது பிறவியை நீக்கிய பெருமானின் கருணைத் திறத்தினை நினைத்து மனம் நெகிழ்வதை நாம் உணரலாம். திக்கு அடா=பல திசைகளிலும் உள்ள பல தலங்களுக்கும் தேடிச் சென்று; இடிந்து=துயரடைந்து; அலச=வருத்தத்தினால் மெலிய; புறத்து இருந்து=ஆட் கொள்ளப் படாமல் புறத்தே இருக்கும் நிலை; மைக்கடா=கரிய நிறம் கொண்ட எருமை மாடு; அடா வண்ணம்=பொருந்தாத வண்ணம்; எல்லே வியப்பினை உணர்த்தும் சொல்; அக்கடா ஆகில்=அமைதியாக இருத்தல்;

திக்கடா நினைந்து நெஞ்சு இடிந்து உருகும் திறத்தவர் புறத்து இருந்த அலச

மைக்கடா அனைய என்னை ஆள் விரும்பி மற்றொரு பிறவியில் பிறந்து

பொய்க்கு அடா வண்ணம் காத்து எனக்கு அருளே புரியவும் வல்லரே எல்லே

அக்கடா ஆகில் அவரிடம் களந்தை அணிதிகழ் ஆதித்தேச்சரமே

திருப்பல்லாண்டு பதிகத்தின் முதல் பாடலில் (9.29.1) சேந்தனார் பின்னைப் பிறவி அறுக்க நெறி தந்த பித்தர் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். மன்னுக=என்றும் நிலையாக இருத்தல்; தில்லைச் சிதம்பரம் நிலையாக இருந்தால், பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கும் என்பது உணர்த்தப் படுகின்றது. பொன்னம்பலத்தில் பெருமான் நடனம் ஆடுவது உலகம் நிலைபெற்று வாழ்வதற்கே; தனது திருக்கூத்தினைக் காணும் வாய்ப்பினை பெறுகின்ற அடியார்கள், பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு முக்தி உலகம் செல்லும் வண்ணம் அருள் புரியும் பெருமான், பித்தன் போன்று எல்லையற்ற வகையில் அடியார்களுக்கு அருள் புரியும் பெருமான், பல்லாண்டு வாழ வேண்டும்;

மன்னுக தில்லை வளர்க நம் பத்தர்கள் வஞ்சகர் போயகல

பொன்னின் செய் மண்டபத்துள்ளெ புகுந்து புவனி எல்லாம் விளங்க

அன்ன நடை மடவாள் உமை கோன் அடியோமுக்கு அருள் புரிந்து

பின்னை பிறவி அறுக்க நெறி தந்த பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே

திருமந்திரம் பாயிரம் அதிகாரத்தின் பாடலில் திருமூலர் சிவசக்தியின் திருவடிகளை தியானித்து இருந்ததால், தான் பிறப்பிறப்பினை அறுத்துக் கொண்டதாக கூறுகின்றார். நிரதி சயானந்தம்=பெரு வியப்பாகிய வியப்பு; நேரிழை=தேர்ந்தெடுத்த ஆபரணங்களை அணிந்தவள்;

நேரிழையாவாள் நிரதி சயானந்தப்

பேருடையாள் என் பிறப்பறுத்து ஆண்டவள்

சீருடையாள் சிவன் ஆவடு தண்டுறை

சீருடையாள் பதம் சேர்ந்து இருந்தேனே

திருமந்திரம் மூன்றாம் தந்திரம் அட்டமாசித்தி அதிகாரத்தின் பாடலில், திருமூலர் இறைவனின் திருவடிகளை தியானித்து தான் அடைந்த பேற்றினை குறிப்பிடுகின்றார். அட்ட மாசித்திகள் தானும் மிகவும் எளிதாக அடைந்ததுமன்றி, அவனது பேரருளினால் பிறப்பையும் அறுத்ததாக கூறுகின்றார். பரிசு=தன்மை; தேவர்கள் உள்ளிட்ட அனைத்து உயிர்களின் தன்மையையும் அறிந்து கொள்ளும் ஆற்றல் உடையவன் இறைவன் என்று திருமூலர் இந்த பாடலில் கூறுகின்றார். துரிசு=குற்றம்; நமது மனதினில் வஞ்சனை இன்றி, அனைத்து விதமான குற்றங்களையும் களைந்து இறைவனை தியானித்து உணரும் உயிர்களுக்கு அரியன என்பதே இல்லை என்று உணர்த்தும் முகமாக, அட்ட மாசித்திகள் அவர்களுக்கு மிகவும் எளிதில் கிட்டும் என்று கூறுகின்றார்.

பரிசறி வானவர் பண்பன் அடியெனத்

துரிசற நாடியே தூவெளி கண்டேன்

அரியது எனக்கில்லை அட்டமாசித்தி

பெரிதருள் செய்து பிறப்பு அறுத்தானே

திருமந்திரம் நான்காம் தந்திரம் திருவம்பலச் சக்கரம் அதிகாரத்தில், அரன் என்ற பெருமானின் திருநாமத்தை அரகர என்று பல முறை சொல்வதன் மூலம் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அடையலாம் என்று கூறுகின்றார். ஹரஹர என்ற வடமொழித் தொடர் அரகர என்று தமிழாக்கம் செய்யப் பட்டுள்ளது. ஹர என்றால் பாசங்களை ஒழிப்பவன் என்று பொருள்.

அரகர என்ன அரியதொன்றில்லை

அரகர என்ன அறிகிலர் மாந்தர்

அரகர என்ன அமரரும் ஆவர்

அரகர என்ன அறும் பிறப்பு தானே

திருமந்திரம் ஐந்தாம் தந்திரம் நிராசாரம் அதிகாரத்தின் பாடலில் திருமூலர், இறைவனை நமக்கு மிகவும் அன்னிய பொருளாக நினைத்து இறைவனிடமிருந்து விலகி இருப்போர், பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபடாமல் தொடர்ந்து பிறப்பு எடுத்துக் கொண்டே இருப்பார்கள் என்று கூறுகின்றார். தூரறிவாளர்=தூர அறிவாளர்; இறைவன் பால் அன்பு கொண்டு, அவனை நெருங்கி நின்று அறிவதற்கு முயற்சி செய்யாமல், ஒதுங்கி இருந்து அவனை அறிய முயல்பவர்; பாரறிவாளர்=உலகப் பொருட்களின் தன்மையை அறிந்து கொள்ள முயற்சி செய்பவர்; அத்தகையோர் உலகப் பொருட்களினால் தாம் அடையும் இன்ப துன்பங்களை ஆராய்ந்து தெரிந்து கொண்டு, உலக பொருட்கள் தரும் மயக்கத்தில் ஆழ்ந்து கிடப்பார்கள். காரறிவாளர்=பாச அறிவாளர்; உலகப் பொருட்கள் பற்றிய அறிவினை வளர்த்துக் கொள்வோர்; இத்தகையோர் இந்த பிறவிக்கு ஒதுக்கப்பட்ட வினைகளை நுகர்ந்து கழித்து விட்டு, எஞ்சிய வினைகளை கழிப்பதற்காக அடுத்த பிறவிகள் எடுப்போர்; பாரறிவாளர் மற்றும் காரறிவாளர் என்ற தொடர்கள் ஒரு சாராரையே குறிக்கும். நீர்=தன்மை, இறைவனின் தன்மை என்று இங்கே பொருள் கொள்ள வேண்டும்; இறைவனின் உண்மையான தன்மையை அறியும் சான்றோர்கள், மழை தரும் மேகம் போன்று கைம்மாறு கருதாமல் அனைவர்க்கும் பயன்படுவார்கள்.

தூரறிவாளர் துணைவர் நினைப்பிலர்

பாரறிவாளர் படு பயன் தானுண்பர்

காரறிவாளர் கலந்து பிறப்பார்கள்

நீரறிவார் நெடு மாமுகிலாமே

திருமந்திரம் ஆறாம் தந்திரத்தின் தவம் அதிகாரத்தின் பாடலில் திருமூலர் பெருமானை குறித்து தவம் செய்வோர் இம்மையில் புகழும் மறுமையில் வீடுபேறும் பெறுவார்கள் என்று கூறுகின்றார். பிச்சை எடுப்போர்கள் தங்களுக்கு பிச்சை அளிக்கும் மனிதர்களின் மனம் மகிழும் வண்ணம் எந்த செயலையும் செய்யத் தயாராக இருப்பதால், அவர்கள் எடுக்கும் பிச்சையை பல பிச்சை என்று கூறுகின்றார். இறைவன் நமக்கு இந்த உடலைக் கொடுத்ததன் காரணம், நாம் இறைவனைப் புரிந்து கொண்டு அவன் மனம் மகிழும் வண்ணம்,, அவனைப் போற்றிப் புகழ்ந்து முக்தி நிலை அடைவதற்காக என்பதை புரிந்து கொள்ளாமல், தங்களது உடலினை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டு பல வகையான மனிதர்களைப் புகழ்ந்து வாழ்வார்கள்; சுருக்கமாக, உயிரின் தேவையை நிறைவேற்ற முயற்சி செய்யாமல், உடலின் தேவையை நிறைவேற்ற முயற்சி செய்வார்கள்; இறைவன் நமக்கு இந்த உடலை அளித்ததன் நோக்கத்தை புரிந்து கொண்டு மறவாமல் இறைவனை வழிபட்டு தவம் செய்யும் உயிர்கள், வீடுபேற்றினை அடையும் என்று கூறுகின்றார்.

பிறப்பறியார் பல பிச்சை செய் மாந்தர்

சிறப்பொடு வேண்டிய செல்வம் பெறுவார்

மறப்பிலராகிய மாதவம் செய்வார்

பிறப்பினை நீக்கும் பெருமை பெற்றாரே

திருமந்திரம் ஏழாம் தந்திரத்தின் சம்பிரதாயம் அதிகாரத்தின் பாடலில், தீட்சை முறையினை விளக்கும் திருமூலர், கூறுவதை நாம் சுருக்கமாக காணலாம்; உதகம்=நீர்; சீடன் தனது உடல் பொருள் ஆவி மூன்றினையும் குருவிடம் தாரை வார்த்து ஏற்றுக் கொள்ளுமாறு வேண்ட, அவற்றை ஏற்றுக் கொள்ளும் குரு,படர்ந்த வினைகளால் சீடனை பற்றிக் கொள்ளும் பற்றினை தனது கண்ணோக்கத்தால் நோக்கி நீக்குகின்றார்; மேலும் சீடனது தலையில் தனது கையினை வைத்து, திருவடி ஞானத்தை விளக்கியும் நுட்பமான சிவ ஞானத்தையும் உணர்த்துகின்றார்; அதன் பயனாக பிறப்பும் அற்று விடுகின்றது. இதனையே மணிவாசக அடிகளாரும் அன்றே என்றன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும் குன்றே அனையாய் என்னை ஆட்கொண்டிலையொ என்று குழைத்த பத்து பதிகத்தின் பாடலில் கூறுகின்றார். நொடித்தல்=உபதேசம் செய்தல்;

உடல் பொருள் ஆவி உதகத்தால் கொண்டு

படர்வினைப் பற்றறப் பார்த்துக் கை வைத்து

நொடியின் அடி வைத்து நுண்ணுணர்வாக்கி

கடிய பிறப்பறக் காட்டினன் நந்தியே

திருமந்திரம் ஏழாவது தந்திரம் சற்குரு நெறி அதிகாரத்தின் பாடலில் திருமூலர், புருவ நடுவில் இறைவனை வைத்து தியானிக்கும் போது, உச்சி முதல் உள்ளங்கால் வரை பாயும் இன்ப உணர்ச்சியை, சிவானந்த அமுதம் என்று குறிப்பிடும் திருமூலர், அத்தகைய அமுதத்தைப் பேணி பாதுகாத்து அனுபவித்து உட்கொள்ளும் அடியார்களுக்கு மறுபிறப்பு இருக்காது என்று கூறுகின்றார். ஆணிப்பொன் என்று மாற்றுயர்ந்த சிவத்தை திருமூலர் இங்கே குறிப்பிடுகின்றார். மாணிக்க மணிகளைக் கோத்த ஒரு மாலையை தொங்க விட்டது போன்று நமது உடலில் ஒன்றன் மேல் ஒன்றாய் ஆறு ஆதாரங்கள் அமைந்துள்ளன. இந்த ஆதாரங்களுக்கு மேலே உள்ள தகராகாசத்திலிருந்து சிவானந்தம் ஊற்றெடுத்து பாய்கின்றது. இத்தகைய ஆனந்த ஊற்றினை உணராதார், சோற்றுக்கும் கேடாக உலகினில் வாழ்வதாக குறிப்பிட்டு பாடலை முடிக்கின்றார்.

மாணிக்க மலை மலர்ந்தெழு மண்டலம்

ஆணிப்பொன் நின்றங்கு அமுதம் விளைந்தது

பேணிக் கொண்டு உண்டார் பிறப்பற்று இருந்தார்கள்

ஊணுக்கு இருந்தார் உணராத மாக்களே

திருமந்திரம் எட்டாம் தந்திரம் கேவல சகல சுத்தம் அதிகாரத்தின் பாடலில், இறைவன் எவ்வாறு உயிர்களை பக்குவப் படுத்தி பிறப்பினை அறுக்கின்றான் என்று திருமூலர் கூறுகின்றார். உயிர் இருக்கும் மூன்று நிலைகள் இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றன. பதி பசு பாசம் ஆகிய மூன்றும் அனாதி என்பதை நாம் அறிவோம். தொன்று தொட்டே அனைத்து உயிர்களையும் ஆணவ மலம் பிணைந்து நிற்கின்றது. உயிர் இருக்கும் நிலைகளை அவத்தை என்று கூறுகின்றனர். அவஸ்தை என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம் அவத்தை. கேவலம் என்றால் தனிமை என்று பொருள். எந்த உடலுடன் இணைக்கப் படாமல் உயிர் ஆணவத்துடன் மட்டும் ஒன்றி இருக்கும் நிலை கேவலாவத்தை என்று அழைக்கப்படும். அத்தகைய உயிரினை கேவலன் என்று திருமூலர் அழைக்கின்றார். இந்த நிலையில் உயிருக்கு உடல் இல்லை; இச்சை இல்லை; அறிவும் இல்லை; உடலும் கருவி கரணங்களும் பொருத்தப் படாத இந்த நிலையில், உயிர் வினைகளை அனுபவிப்பதும் இல்லை, ஈட்டுவதும் இல்லை. அறியாமையே வடிவமாக இருக்கும் உயிரின் இந்த நிலையை இருள் நிலை என்றும் கூறுவார்கள். உயிரின் இந்த நிலை கண்டு இரக்கம் கொள்ளும் இறைவன், தகுந்த உடலுடன் பொருத்தி, கருவி கரணங்களை இணைத்து, உலகினில் பிறக்கச் செய்கின்றான். சகல நிலை என்றால் கலைகளுடன் கூடிய நிலை என்று பொருள். கலை என்றால் மாயா காரியம் என்று பொருள். இவ்வாறு இறைவன் உயிர்களை மாயா காரியத்துடன் இணைப்பதே, உயிர் தன்னுடன் இணைந்துள்ள ஆணவ மலத்தினை, நுகர்ந்து சிறிது சிறிதாக கழித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான். இதற்காகத் தான் மாயை கன்மம் என்னும் இரண்டினையும் இறைவன் உயிருடன் கூட்டுவிக்கின்றான். இந்த நிலையை மருள் நிலை என்று கூறுவார்கள். இந்த நிலையில் உயிருக்கு அறிவு உண்டு; வினைகளை நுகர்ந்து கழித்தலும் வினைகளை ஈட்டுதலும் இந்த நிலையில் நடைபெறுகின்றன. அறிவு இருப்பினும், பெரிய பொருளாகிய சிவத்தினை உணராது, சிறிய பொருள்கள் குறித்த அறிவினை வளர்த்துக் கொண்டு, அந்த சிறிய பொருள்களையே பெரிய பொருளாக நினைத்து மயங்கி, அந்த சிறிய பொருள்கள் தரும் சிற்றின்பத்தில் மயங்கி, மீண்டும் மீண்டும் அந்த சிற்றின்பத்தை உயிர் அடைய விழைகின்றது. நாளாவட்டத்தில் இந்த சிற்றின்பங்களைத் தாண்டிய அழியாத பேரின்பம் உள்ளது என்பதை அறியும் உயிர், அந்த பேரின்பத்தை அடையத் துடிக்கின்றது. அப்பொழுது இறைவன் குருவாக வந்து, பதி பசு பாசம் ஆகிய முப்பொருள்களின் உண்மை நிலையை உணர்த்த, உயிர் ஆணவம் கன்மம் மாயை ஆகிய மலங்களிலிருந்து விடுபட்டு நின்மலனாகிய இறைவனை அடைந்து அழியாத பேரின்பத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றது. இந்த விருப்பமும் இறைவனின் அருளால் விளைகின்றது. மலங்களிலிருந்து முற்றிலும் நீங்கி, உயிர் தூய்மை பெற்று இருக்கும் நிலை சுத்தாவத்தை என்று அழைக்கப் படுகின்றது. இதனை அருள்நிலை என்று கூறுவார்கள். இந்த நிலையில் உயிர், மலங்களின் சேர்க்கை அற்று, இறைவனது அருளையே பற்றுக்கோடாக பற்றி நிற்றலால், இறைவன், இத்தகைய உயிர்களை தன்னிடம் அழைத்துக் கொள்கின்றான். இந்த நிலையில் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து உயிர் விடுதலை பெறுகின்றது. இந்த நிலைகளை விளக்கும் திருமந்திரப் பாடலை நாம் இங்கே காண்போம். வியாபி= மற்றவைகளை தன்னுள் அடக்கியது; வியாப்தி=மற்றொன்றில் அடங்கி இருப்பது. உயிர் ஆணவ மலத்துடன் பிணைந்து, கேவல நிலையில் இருக்கும் தன்மை இவ்வாறு சொல்லப் படுகின்றது. அந்த உயிரினை கேவல நிலையில் இருந்து விடுவித்து, தகுந்த உடலுடன் கூட்டி, கன்மம் மற்றும் மாயா மலங்களுடன் இணைக்கும் போது, பிறப்பெடுக்கும் உயிர் ஐந்து மலங்களின் சேர்க்கையால், இன்ப துன்பங்களை நுகர்கின்றது. இந்த தன்மையைத் தான் கேவலனை சகலத்திட்டு என்ற தொடர் மூலம் திருமூலர் உணர்த்துகின்றார். படிப்படியாக பக்குவம் அடையும் உயிரினுக்கு இறைவன் அருள் புரிந்து சுத்தாவத்தை நிலைக்கு எடுத்துச் செல்லுதலை பாடலின் கடை அடியில் குறிப்பிடுகின்றார். பொதுவாக ஆணவம் கன்மம் மாயை என்று மூன்று மலங்களாக சொன்னாலும், மாயா மலத்தினை மாயாமலம், மாயேயம், திரோதானம் என்று மூன்றாக பிரித்து, ஆணவம் மற்றும் கன்ம மலங்களுடன் கூட்டி ஐந்து மலங்களும் என்று சொல்வதும் வழக்கத்தில் உள்ளது.

அனாதி பசு வியாத்தியாகும் இவனை

அனாதியில் வந்த மலம் ஐந்தால் ஆட்டி

அனாதியில் கேவலன் அச்சகலத்திட்டு

அனாதி பிறப்பறச் சுத்தத்துள் ஆக்குமே

திருமந்திரம் ஒன்பதாம் தந்திரம் சூக்கும பஞ்சாக்கரம் அதிகாரத்தின் பாடலில் திருமூலர், சிவாயநம என்ற பஞ்சாக்கர மந்திரத்தை முறையாக தியானித்தால் நாம் நமது பிறப்பினை அறுத்துக் கொள்ளலாம் என்று கூறுகின்றார். பவம்=பாவம்; அவமதி=அறியாமை; நமது தலைக்கு ஒரு சாண் மேலே உள்ள தகராகாசத்தில் சிவ எனப்படும் நாமத்தினை ஏற்றி வைத்து தியானம் செய்ய வேண்டும் என்று கூறுகின்றார். தகராகாசம் தான், ய என்ற எழுத்தால் உணர்த்தப்படும் ஆன்மாவின் சிந்தையாகும் சிவ என்ற மந்திரத்தை சிந்தையில் நிறுத்தி, நம என்று நாவினில் சொல்லி போற்றுதல், நாம் நமது பிறப்பினை அறுத்துக் கொள்வதற்கு வழிவகுக்கும் என்று கூறுகின்றார். .

நமவென்னும் நாமத்தை நாவில் ஒடுக்கிச்

சிவவென்னும் நாமத்தை சிந்தையுள் ஏற்ற

பவமது தீரும் பரிசுமது அற்றால்

அவமதி தீரும் அறும் பிறப்பு அன்றே

திருமந்திரம் ஒன்பதாம் தந்திரம் அணைந்தோர் தன்மை என்ற அதிகாரத்தின் பாடலில் திருமூலர், சிவபெருமானின் திருவடியை வணங்கி வழிபட்டால் பிணக்கு நீங்கிப் பிறப்பறும் என்று கூருகின்றார். முன்னம் செய்தல்=நினைத்தல்; ஏத்தல்=புகழ்ந்து கூறுதல்; ஏத்துதல் என்பது வாயின் செயலாக இருந்தாலும், மனதின் கட்டளையையே வாய் அப்போது நிறைவேற்றுதலால், அந்த செயலை மனதின் செயலாக கூறுகின்றார். இன்பம் நேரும் போது மகிழ்ச்சி அடைவதும் துன்பம் நேரும் போது வருத்தம் கொள்வதும் உயிரின் இயல்பு; இவ்வாறு பழைய வினைகளின் பயனாக உயிர் இன்ப துன்பங்களை அனுபவிக்கும் போது மாறுபட்ட நிலையினை அடைவதை பிணக்கு என்று இங்கே குறிப்பிடும் திருமூலர், இந்த பிணக்கு இன்றி நாம் இன்ப துன்பங்களை சரிசமமாக பாவித்தல் இறைவனின் அருளால் தான் கூடும் என்று குறிப்பிட்டு, அத்தகைய தன்மை தனக்கு இறையருளால் வந்தது என்று கூறுகின்றார். தலைவிதி=படைக்கப் பட்ட போது பிரமனால் தலையில் எழுதப்பட்ட தலையெழுத்து. தலைவிதி பின்னம் செய்து என்ற தொடர் மூலம், பிறவி எடுத்ததால் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் உடலை பாதித்தாலும், உள்ளத்தை பாதிக்காது, உள்ளத்தில் சலனம் ஏற்படுத்தாத தன்மையை இறைவன் அளித்தான் என்று குறிப்பிடும் திருமூலர், இந்த தன்மை, தான் எப்போதும் இறைவனின் இணையடிகளை நினைத்ததால் வந்தது என்று கூறுகின்றார். இவ்வாறு தியானம் செய்ததன் பயனாக தான் பிறப்பினை அறுத்துக் கொண்டதாக கூறுகின்றார்.

என்னெஞ்சம் ஈசன் இணையடி தாம் சேர்ந்து

முன்னம் செய்து ஏத்த முழுதும் பிறப்பறும்

தன்னெஞ்சம் இல்லாத் தலைவன் தலைவிதி

பின்னம் செய்து என்னைப் பிணக்கறுத்தானே

திருமந்திரம் ஒன்பதாம் தந்திரம் மோன சமாதி அதிகாரத்தின் கீழுள்ள பாடலில் திருமூலர், மோன சமாதியில் ஆழ்ந்து இருப்போர், அதன் பயனாக பிறப்பறுத்து நிட்டை கைகூடுவர் என்று கூறுகின்றார். இந்த பாடல் பல பதிப்புகளில் காணப்படுவதில்லை. மோன சமாதி அடைந்தவர்களின் செயல்கள் ஒன்றுக்கொன்று மாறுபட்டவையாக காணப்பட்டாலும், அவர்களது உள்ளத்தில் திருவருள் உணர்வு சற்றும் சலியாது நிற்பதால், அவர்கள் அனுபவிக்கும் சிவானந்தத்தின் நிலை சிறிதும் குறையாது நிலையாக நிற்கும் என்றும் அந்த ஆனந்தத்தின் விளைவாக பிறப்பினை அறுத்துக் கொள்வார்கள் என்றும் கூறுகின்றார்.

நிற்றல் இருத்தல் கிடத்தல் நடை ஓடல்

பெற்று அக்காலும் திருவருள் பேராமல்

சற்றியல் ஞானம் தந்து ஆனந்தம் தங்கவே

உற்ற பிறப்பற்று ஒளிர் ஞான நிட்டையே

அற்புதத் திருவந்தாதி பதிகத்தின் பாடலில் (11.4.16) காரைக்கால் அம்மையார், இறைவனின் அருளால், பிறவிக் கடலை நீந்திக் கடந்ததாக கூறுகின்றார்.

இனியோ நாம் உய்ந்தோம் இறைவன் அருள் சேர்ந்தோம்

இனியோர் இடரில்லோம் நெஞ்சே இனியோர்

வினைக்கடலை ஆக்குவிக்கும் மீளாப் பிறவிக்

கனைக் கடலை நீந்தினோம் காண்

சிவபெருமானின் திருவடிகளைச் சென்று சார்ந்ததால், தான் பிறவியை ஒழித்ததாக சேரமான் பெருமாள் நாயனார், பொன் வண்ணத் திருவந்தாதி பதிகத்தின் பாடலில் கூறுகின்றார். பெருமானின் திருவடிகளை பற்றிக் கொண்டதால், தான் பிறவியை ஒழித்தேன் என்றும், உயிர்களின் ஆறு பகையாகிய காமம் குரோதம் மோகம் உலோபம் மதம் மாற்சரியம் ஆகியவற்றை மிதித்து நடந்தேன் என்றும், தனது உள்ளம் குற்றங்கள் நீங்கி உயர்ந்து நின்றது என்றும், உடம்பின் இழிவான நிலையை உணர்ந்து கொண்டேன் என்றும், உடம்பின் இழிவான நிலையை உணர்ந்து கொண்டதால் உடலை பேணிக் காக்கும் பொருட்டு எவரிடமும் சென்று எதனையும் இனியும் இரக்க மாட்டேன் என்றும், எனது உயிர் உறைகின்ற இல்லமாகிய உடலை பழித்தேன் என்றும், இந்த உடலில் பொருந்தியுள்ளதும் யானைகள் போன்று வலிமை உள்ளதும் எப்போதும் குற்றங்களே புரியும் ஐந்து பொறிகளையும் அடக்கினேன் என்றும், இந்நாள் வரையில் ஆழ்ந்திருந்த மயக்கத்திலிருந்து நீங்கி தெளிவடைந்தேன் என்றும் நாயனார் இந்த பாடலில் கூறுகின்றார்.

ஒழித்தேன் பிறவியை ஊர்ந்தேன் அறுபகை ஓங்கிற்று உள்ளம்

இழித்தேன் உடம்பினை ஏலேன் பிறரிடை இம்மனையும்

பழித்தேன் பழியே விளைக்கும் பஞ்சேந்தியக் குஞ்சரமும்

தெழித்தேன் சிவனடி சேர்ந்தேன் இனி மிகத் தெள்ளியனே

பொழிப்புரை:

கடலின் அலைகள் போன்று பல பிறவிகளை தொடர்ந்து அளித்து உயிரினுக்கு துன்பங்களை விளைவிக்கும் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு நிலையான இன்பம் அடைவது மிகவும் எளிதான செயலாகும். அது யாதெனின் சொல்லுகின்றேன் கேட்பீர்களாக. பெரிய அலைகள் நிறைந்த கடலினை அணிகலனாகக் கொண்டுள்ள சீர்காழி நகரத்தினில் மிகுந்த விருப்பத்துடன் அமர்ந்துள்ளவனும், கொழுந்து விட்டெரியும் நெருப்பு போன்ற நிறத்தினை உடைய திருமேனியை உடையவனும், விரிந்த சடையின் இடையே நாளும் வளர்ந்து கொண்டிருப்பதும் குளிர்ந்த கதிர்களை உடையதும் ஆகிய பிறைச் சந்திரனை அணிந்தவனும், கழுத்தினில் நீலமணி அணிந்தது போன்று தோன்றும் வண்ணம் விடத்தை அடக்கியதால் ஏற்பட்ட கறையினை உடையவனும் ஆகிய பெருமானின், நலன்கள் விளைவிக்கும் இணையான இரண்டு திருப்பாதங்களையும் சார்ந்து தொழுது, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு வீடுபேறு அடைவதை மிகவும் எளிதான செயலாக மாற்றிக் கொள்வீர்களாக.

பாடல் 3:

பிறையணி படர்சடை (1.019) பாடல்கள் 2 தொடர்ச்சி, 3, 4, 5, 6, 7 (திதே 0338)

வரியுறு புலி அதள் உடையினன் வளர்பிறை ஒளி கிளர் கதிர் பொதி

விரியுறு சடை விரை புரை பொழில் விழவொலி மலி கழுமலம் அமர்

எரியுறு நிற இறைவனது அடி இரவொடு பகல் பரவுவர் தம

தெரியுறு வினை செறி கதிர் முனை இருள் கெட நனி நினைவு எய்து மதே

விளக்கம்:

முதல் பாடலில், நன்மை விளைவிக்கும் கழல்கள் என்றும் இரண்டாவது பாடலில் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து உயிரினை விடுவிக்கும் கழல்கள் என்றும்பெருமானின் திருப்பாதங்களை குறிப்பிட்ட திருஞானசம்பந்தர் இந்த பாடலில் நமது நினைவுகள் எப்போதும் இறைவனைச் சுற்றியே இருக்க வேண்டும் என்று விரும்பினால், நாள்தோறும் இரவும் பகலும் அவனைப் புகழ்ந்து பாட வேண்டுமென்று கூறுகின்றார். எரியுறு நிற=அழல் வண்ணன்; ஒளி கிளர்=ஒளி திகழும்; நனி=மிகவும் அதிகமாக, எப்போதும்

பொழிப்புரை:

வரிவரியாக கோடுகள் உடைய புலித்தோலினை ஆடையாகக் கொண்டவனும், ஒளியுடன் திகழ்வதும் வளரும் நிலையினை அடைந்ததும் ஆகிய பிறைச் சந்திரனின் கதிர்கள் பொதிந்த சடையினை உடையவனும், நறுமணம் நிறைந்த சோலைகள் உள்ளதும் திருவிழாக்களின் ஆரவாரங்கள் நிறைந்ததும் ஆகிய கழுமலம் என்று அழைக்கப்படும் தலத்தில் விரும்பி எழுந்து அருள் புரிபவனும் ஆகிய இறைவனின், அழல் வண்ணனாக திகழும் இறைவனின், திருவடிகளை இரவும் பகலும் புகழ்ந்து வணங்கும் அடியார்களை வருத்தும் வினைகள் சூரியனின் ஒளி பொருந்திய கதிர்கள் முன்னே இருள் அழிந்து விடுவதைப் போன்று அழிந்துவிடும்; மேலும் அத்தகைய அடியார்கள் எப்போதும் இறை நினைவுடன் இருப்பார்கள்.

பாடல் 4:

பிறையணி படர்சடை (1.019) பாடல்கள் 2 தொடர்ச்சி, 3, 4, 5, 6, 7 (திதே 0338)

வினை கெட மன நினைவது முடிகெனில் நனி தொழுதெழு குல மதி

புனை கொடி இடை பொருள் தரு படு களிறினது உரி புதை உடலினன்

மனை குடவயிறு உடையன சில வரு குறள் படை உடையவன் மலி

கனை கடல் அடை கழுமலம் அமர் கதிர் மதியினனது அதிர் கழல்களே

விளக்கம்:

முடிகெனில்=முடிக+எனின்; முடிய வேண்டும் என்று விரும்பினால்; தொழுதெழு என்ற தொடர் மூலம், தரையில் விழுந்து இறைவனை வணங்கி பின்னர் எழும் நிலையினை குறிப்பிடுகின்றார். புனை கொடியிடை என்ற தொடரினை, பிறைச் சந்திரனுடன் இணைத்து கொடியிடையாளாகிய கங்கை நதி என்றும் பொருள் கொள்ளலாம். அதே தொடரினை உடலுடன் தொடர்பு கொண்டு, பெருமானின் உடலில் பாதியில் விளங்கும் உமையன்னை என்றும் பொருள் கொள்ளலாம். தாருகவனத்து முனிவர்கள் அபிச்சார ஹோமம் என்று அழைக்கப்படும் ஒரு வகை யாகத்தினை செய்து, பல பொருட்களை தீயினில் இட்டு அந்த தீயிலிருந்து ஓர் காட்டு யானையினை எழுப்பி, பெருமான் மீது ஏவியதை குறிப்பிடும் வண்ணம், பொருள் படுதரு களிறு என்று கூறுகின்றார் என்று சிலர் விளக்கம் கூறுகின்றனர். பொருள் தரு என்ற தொடரினை கொடியிடை என்ற சொல்லுடன் இணைத்து, அன்னையைத் தனது உடலின் ஓர் அங்கமாக, பொருளாக ஏற்றுக்கொண்ட இறைவன் என்ற விளக்கமும் பொருத்தமே. கதிர்=சூரியன்

பொழிப்புரை:

உலகத்தவரே, உங்களைப் பிணைந்துள்ள வினைகள் முற்றிலும் கெட்டு அழிந்துவிட வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் நீங்கள் செய்ய வேண்டியது யாது என்பதை நான் கூறுகின்றேன்; கேட்பீர்களாக. தனது களங்கங்கள் நீங்கப் பெற்று உயர்ந்த நிலையினை அடைந்த பிறைச் சந்திரனைத் தனது சடையில் சூடியவனும், கொடி போன்ற இடையினை உடைய உமை அன்னையைத் தனது உடலில் ஏற்றுக் கொண்டவனும், தாருகவனத்து முனிவர்களால் அபிசார ஹோமத்திலிருந்து எழுப்பப்பட்டு தன் மீது ஏவப்பட்ட மதம் கொண்ட ஆண் யானையின் தோலை உரித்துத் தனது உடல் மீது போர்த்துக் கொண்டவனும், நமது இல்லங்களில் பயன்படுத்தப்படும் குடம் போன்று பருத்த வயிற்றினை உடையதும் குள்ளமான உருவத்தினை உடையதும் ஆகிய பூத கணங்களை படையாக உடையவனும், இடைவிடாது ஒலிக்கின்ற அலைகள் உடைய கடலால் சூழப்பட்ட கழுமலம் நகரினில் மிகுந்த விருப்பமுடன் வீற்றிருப்பவனும், சூரியனையும் சந்திரனையும் தனது இரு கண்களாக உடையவனும் ஆகிய பெருமானின் திருவடிகளை, ஒலிக்கும் கழல்கள் அணிந்த திருவடிகளை நன்றாக தொழுது எழுவீர்களாக. அவ்வாறு செய்தால் உங்களது வினைகள் முற்றிலும் அழிந்துவிடும்.

பாடல் 5:

பிறையணி படர்சடை (1.019) பாடல்கள் 2 தொடர்ச்சி, 3, 4, 5, 6, 7 (திதே 0338)

தலை மதி புனல் விட அரவு இவை தலைமையது ஒரு சடை இடை உடன்
நிலை மருவ ஒரிடம் அருளினன் நிழல் மழுவினொடு அழல் கணையினன்
மலை மருவிய சிலை தனில் மதில் எரியுண மனம் மருவினன் நல
கலை மருவிய புறவு அணி தரு கழுமலம் இனிதமர் தலைவனே

விளக்கம்:

தலைமதி=பிள்ளை மதி, முதற்பிறைச் சந்திரன்; ஒற்றைப் பிறைச் சந்திரன் என்பதை தலைமதி என்று கூறுகின்றார். தலை என்ற சொல்லினை புனல் அரவு ஆகிய சொற்களுடன் இணைத்து, நீரினில் தலையாய கங்கை என்றும் பாம்பினில் தலையாய நல்லபாம்பு என்றும் பொருள் கொள்ளலாம். தலைமையது சடை=பெருமை மிக்க சடை; நிழல் மழு=ஒளிவீசும் மழுப்படை; மனம் மருவுதல்=மனமதில் எண்ணுதல்; புறவு=காடு; மூன்று புரங்களை எரித்த நிகழ்ச்சியின் தத்துவம், பெருமான் உயிர்களைப் பிணைத்துள்ள மூன்று மலங்களையும் எரித்து அழிக்கும் வல்லமை வாய்ந்தவன் பெருமான் என்று உணர்த்துகின்றது என விளக்கம் அளிக்கும் திருமூலர் பாடலை நாம் இங்கே காணலாம். பெருமான் மூன்று கோட்டைகளையும் அழித்த நிகழ்ச்சியினை புராணங்கள் வாயிலாக அறிந்து கொள்ளும் மனிதர்கள், பெருமானின் வீரச் செயலை புகழ்கின்றனர். ஆனால் அவர்கள் அந்த நிகழ்ச்சி உணர்த்தும் முக்கியமான கருத்தினை புரிந்து கொள்வதில்லை. உயிர்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆணவம் கன்மம் மாயம் ஆகிய மூன்று மலங்களின் வலிமையை அடக்கி, உயிர்களை அந்த மூன்று மலங்களின் பிடியிலிருந்து விடுவிக்கும் ஆற்றல் படைத்தவன் பெருமான் என்பதை நாம் உணர்ந்து, அவனை வேண்டி, அவனது அருளின் உதவியால், அந்த மூன்று மலங்களின் வலிமையையும் அடக்கி, வினைகளை முற்றிலும் கழித்துக் கொண்டு முக்தி நிலையினை அடைய வேண்டும் என்பதே இந்த நிகழ்ச்சி நமக்கு உணர்த்தும் செய்தி என்பதே இந்த திருமந்திரப் பாடலின் பொழிப்புரை ஆகும். பதிகத்தின் நான்காவது பாடலில் பெருமானின் திருவடிகளை மீண்டும்மீண்டும் தொழும் வண்ணம் நம்மை பணிக்கும் திருஞானசம்பந்தர், பெருமானின் வல்லமையை இங்கே குறிப்பிட்டு, பெருமானின் திருவடிகள் நமது மலங்களை அடக்கி. முக்திநிலைக்கு வழிவகுக்கும் என்று கூறுகின்றார்.

அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரஞ் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புரம் ஆவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யாரறிவாரே

பொழிப்புரை:

ஒற்றைப் பிறைச் சந்திரனையும், நதிகளில் தலையாய கங்கை நதியையும், பாம்புகளில் முதன்மையான விடம் உடைய நல்ல பாம்பினையும் ஒருங்கே, பெருமை வாய்ந்த தனது சடையினில் நிலையாக இருக்கும் வண்ணம் ஏற்றுக்கொண்ட பெருமான், ஒளி வீசும் மழுப்படையை உடையவன்; அவன் தீக்கடவுள் இடம் பெற்ற வெம்மை மிகுந்த அம்பினைக் கொண்டு, மேரு மலையினை வில்லாக வளைத்து அதனில் பொருத்தி, திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளும் நெருப்பினில் வெந்தழிய வேண்டும் என்று முடிவு செய்தவனாக தனது முடிவினை செயல்படுத்தினான்; இத்தகைய வல்லமை உடைய பெருமான், நமது மலங்களின் கட்டினை அழித்து முக்தி நிலைக்கு வழிவகுக்கும் பெருமான், அழகிய கலைமான்கள் அழகு சேர்க்கும் காடுகளை உடைய கழுமலம் என்ற நகரினில் மிகுந்த விருப்பத்துடன் அமர்ந்து உள்ளான்.

பாடல் 6:

பிறையணி படர்சடை (1.019) பாடல்கள் 2 தொடர்ச்சி, 3, 4, 5, 6, 7 (திதே 0338)

வரை பொருது இழி அருவிகள் பல பருகொரு கடல் வரி மணலிடை
கரை பொரு திரை ஒலி கெழுமிய கழுமலம் அமர் கனல் உருவினன்
அரை பொரு புலியதள் உடையினன் அடியிணை தொழ வருவினை எனும்
உரை பொடிபட உறுதுயர் கெட உயருலகு எய்தலொரு தலைமையே

விளக்கம்:

வருவினை என்ற சொல் பொடியாக மாறிவிடும் என்று கூறுவதன் மூலம், வினைகளும் பொடி பொடியாக மாறி வலிமை இழந்து விடும் என்று திருஞானசம்பந்தர் குறிப்பாக உணர்த்துகின்றார். மலையில் தோன்றும் அருவிகள் பல கற்களுடன் மோதி அவற்றை உடைத்து மணல் பொடிகளாக கடலின் அருகே கொண்டு வந்து சேர்க்கும் தன்மை, திருஞானசம்பந்தர்க்கு பெருமானின் திருவடிகள் வினைகளை பொடியாக்கும் தன்மையை நினைவூட்டியது போலும். சென்ற பாடலில் பெருமானின் வல்லமையை குறிப்பிட்ட திருஞான சம்பந்தர் இந்த பாடலில் அந்த வல்லமை நம்மை முக்தி உலகுக்கு அழைத்துச் செல்லும் என்று கூறுகின்றார். பருகொரு கடல் என்று அனைத்து நதிகளின் நீரும் இறுதியில் கடலினைச் சென்று அடையும் நிலையை குறிப்பிடுகின்றார்.

பொழிப்புரை:

மலைகளில் உள்ள கற்களில் மோதி கீழே இறங்கும் பல அருவிகள் நதிகளாக மாறி கடலினைச் சென்று அடைவதன் முன்னம், அந்த கடலின் கரையினில் வரிவரியாக மணலினை கொணர்ந்து சேர்க்கின்றன. இந்த மணற்கரையினில் பல முறையும் மோதும் அலைகளைக் கொண்ட கடலின் கரையில் அமைந்துள்ள கழுமலம் என்ற தலத்தினில் மிகுந்த விருப்பமுடன் பெருமான் உறைகின்றான். அவன் கொழுந்து விட்டெரியும் தீயின் நிறத்தில் திருமேனியை உடையவனாகவும், தனது இடுப்பினில் புலித்தோலை உடையாக அணிந்தவனாகவும் காட்சி தரும் பெருமானின் திருவடிகளை தொழுவதால், நம்மை பிணித்துள்ள வினைகள் பொடியாக அழிந்து, அந்த வினைகளால் நமக்கு ஏற்படும் துன்பங்கள் தடுக்கப்பட்டு, உயர்ந்த உலகமாகிய சிவலோகத்தில் இடம் பெறுகின்ற வாய்ப்பு நமக்கு ஏற்படும்.

பாடல் 7:

பிறையணி படர்சடை (1.019) பாடல் 2 தொடர்ச்சி, 3, 4, 5, 6, 7 (திதே 0338)

முதிருறு கதிர் வளர் இளமதி சடையனை நறநிறை தலை தனில்
உதிருறு மயிர்பிணை தவிர் தசையுடை புலியதள் இடை இருள் கடி
கதிருறு சுடரொளி கெழுமிய கழுமலம் அமர் மழு மலி படை
அதிருறு கழலடிகளதடி தொழும் அறிவு அலது அறிவு அறியமே

விளக்கம்:

இந்த பாடலில் திருஞானசம்பந்தர் பெருமானது திருப்பாதங்களைத் தவிர்த்து வேறு எதனையும் தொழாத அறிவு உடையவனாக தான் இருப்பதாக கூறுகின்றார். இவ்வாறு அவர் கூறுவது அவர் அருளிய மற்றொரு பதிகத்தின் முதல் பாடலை (3.40.1) நினைவூட்டுகின்றது. கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு, தென்முகக் கடவுள் வடிவத்தில் அறம் உரைத்த பெருமானை அன்றி வேறு எந்த தேவரையும் நல்லார் பேணார் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். நல்லார் என்பதற்கு உண்மையான மெய்ப்பொருளை உணர்ந்த ஞானியர் என்று விளக்கம் அளிக்கப் படுகின்றது.

கல்லால் நீழல்

அல்லாத் தேவை

நல்லார் பேணார்

அல்லோம் நாமே

நமக்கு வழிகாட்டும் நல்லோராகிய நால்வரும் சிவபெருமானைத் தவிர வேறு எவரையும் போற்றாது இருந்த தன்மையை அவர்களது வாழ்விலிருந்து நாம் அறிகின்றோம். அவர்களது இந்த கொள்கை அவர்களின் பல பாடல்களில் வெளிப்படுகின்றது. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். வாழாப்பத்து பதிகத்தின் கடைப் பாடலில் மணிவாசகர், பெருமானை அன்றி வேறு எவரையும் தனக்குத் துணையாக கருத மாட்டேன் என்றும் அவரைத் தவிர்த்து வேறு எவரையும் தொழமாட்டேன் என்றும் கூறுகின்றார். இந்த பாடலின் முதல் அடியில் கருணையே உருவமாக உள்ள பிராட்டியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ள பெருமான் என்று அடிகளார் கூறுகின்றார். பண்டைய நாளிலிருந்து இடைவிடாது தொடர்ச்சியாக அடியார்களுக்கு அருள் புரிந்து வரும் அன்னையை, குற்றம் ஏதும் இல்லாதவள் என்று அடியார்கள் புகழ்வதாக அடிகளார் கூறுகின்றார், இனியும் தொடர்ந்து வாழ்வதில் தனக்கு விருப்பம் ஏதும் இல்லாமையால், பெருமானே நீ என்னை விரைவில் அழைத்துக் கொள்வாயாக என்று விண்ணப்பம் வைக்கும் பாடல்.

பழுது இல் தொல் புகழாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய்

செழு மதி அணிந்தாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே

தொழுவனோ பிறரைத் துதிப்பனோ எனக்கு ஓர் துணை என நினைவனோ சொல்லாய்

மழ விடையானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள் புரியாயே

மேற்கண்ட பாடலில் பெருமானே உன்னைத் தவிர பற்றுக்கோடு வேறேதும் எனக்கு இல்லை என்று அறிவிக்கும் அடிகளார், தனது நிலையை பெருமானே நீ இன்னும் காணவில்லையா என்று கேட்கும் வகையில், கண்டாய் என்ற சொல்லை கையாண்டுள்ளார். இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் பற்று நான் மற்றிலேன் கண்டாய் என்ற தொடர் வருகின்றது. இந்த பதிகத்தின் முதல் பாடல், இந்த தொடர் உணர்த்தும் செய்தியை மிகவும் அழகாக எடுத்துரைக்கின்றது. பெருமானே உன்னைத் தவிர வேறு பற்றுக்கோடு ஏதும் கொள்ளாமல் வாழும் எனக்கு அருள் புரியாமல் இருக்கின்றாயே இது நியாயமா என்று கேட்பது போன்று அமைந்துள்ள பாடல். பெருமான் ஒருவனே தனக்கு பற்றுக்கோடு என்பதால், அவனைத் தவிர வேறு எவரிடமும் சென்று முறையிடேன் என்று புலம்பும் அடிகளார், அவன் அருள் புரியாமல் இருப்பதால் அவன் மீது தான் கோபம் கொண்டாலும் அவனது அருளினை தொடர்ந்து வேண்டுவதையும் நாம் உணரலாம்.

பாரொடு விண்ணாய் பரந்த எம் பரனே பற்று நான் மற்றிலேன் கண்டாய்

சீரொடு பொலிவாய் சிவபுரத்து அரசே திருபெருந்துறை உறை சிவனே

ஆரொடு நோகேன் ஆர்க்கு எடுத்து உரைக்கேன் ஆண்ட நீ அருளிலை ஆனால்

வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள் புரியாயே

தனது இடது கண்ணில் பார்வை வரப்பெற்று, வலது கண்ணில் பார்வை வேண்டி திருவாரூரில் வீற்றிருக்கும் இறைவனை வணங்கி பதிகம் பாடிய சுந்தரர், வேறு எவரையும் வேண்டாது தான் இருந்த நிலையினை மீளா அடிமை என்று தொடங்கும் பதிகத்தின் முதல் பாடலில் (7.95.1) உணர்த்துகின்றார். இறைவனிடம் நாம் கொண்டுள்ள அடிமைத் திறம் நமது வாழ்நாள் முழுவதும் நம்மிடம் இருக்க வேண்டும். அந்த அடிமைத் தன்மையிலிருந்து நாம் வெளியே வாராமல் பெருமானுக்கு எப்போதும் திருத்தொண்டு செய்பவர்களாய். அடிமைத் திறத்திலிருந்து மீளாமல் இருக்க வேண்டும். மேலும் நமது தேவைகளையும் அவரிடமே முறையிட்டு பெறுதல் வேண்டும் அவ்வாறு இருந்ததால் தான் சுந்தரர் தன்னை மீளா அடிமை என்று திருவாரூர் பதிகத்தில் (7.95) சொல்லிக் கொள்கின்றார்.

மீளா அடிமை உமக்கே ஆளாய் பிறரை வேண்டாதே

மூளாத் தீ போல் உள்ளே கனன்று முகத்தால் மிக வாடி

ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்

வாளாங்கு இருப்பீர் திருவாரூரீர் வாழ்ந்து போதீரே

மாசில் வீணையும் என்று தொடங்கும் பதிகத்தின் ஒரு பாடலில், அப்பர் பிரான், சிவபெருமானுக்கு மீளாத அடிமையாக இருந்து, மெய்ப்பொருளாகிய சிவபெருமானை அடையாத மனிதர்களை, வீணான வாழ்க்கை வாழ்பவர்கள் என்று கூறுகின்றார். அறிவு வளர்ச்சி பெற்று, ஒரு வேலையில் அமர்ந்து பொருள் ஈட்டும் திறம் பெற்று, தனது காலில் நிற்கும் தன்மையை அடைந்த மனிதனை நாம் ஆளாகி விட்டான் என்று கூறுகின்றோம். ஆனால் அப்பர் பிரான் ஆளாக கருதுவது, பெருமானது அடியார்களைத் தான். ஏனென்றால் அவர்கள் தானே, நிலையான இன்பம் அளிக்கக் கூடிய முக்தி நிலைக்கு செல்வதற்கான வழியில் அடியெடுத்து வைத்தவர்கள். அவ்வாறு ஆளாகாத ஒருவன், சிவபெருமானின் அடியார் ஒருவரை அணுகி, ஆளாகும் நிலையினை அடைந்து உய்வினை அடைய வேண்டும் என்றும் இந்த பாடலில் கூறுகின்றார்.

ஆளாகார் ஆளானாரை அடைந்து உய்யார்

மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்

தோளாத சுரையோ தொழும்பர் செவி

வாளா மாய்ந்து மண்ணாகிக் கழிவரே

இவ்வாறு திருஞானசம்பந்தர் கூறுவதை கருத்தினில் கொண்டு தான், பெருமானின் திருவடிகளைத் தவிர்த்து வேறு எதையும் பேணாத சம்பந்தர் என்று சுந்தரர் கூறுகின்றாரோ? சுந்தரர் தனது திருத்தொண்டத் தொகை பதிகத்தில் திருஞான சம்பந்தரைக் குறிப்பிடும் வரிகளை நினைவூட்டுகின்றது. வம்பறா வரிவண்டு மணம் நாற மலரும் மதுமலர் நல் கொன்றையான் அடி அலால் பேணா எம்பிரான் சம்பந்தன் என்று கூறுகின்றார். கொன்றைசூடியின் திருவடிகளைத் தவிர்த்து வேறு எதையும் போற்றி வழிபடாத சம்பந்தர் என்று சுந்தரர் கூறுகின்றார். அச்சிறுபாக்கம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில், கையில் மான்கன்றினை ஏந்திய பெருமானின் திருவடிகளைத் தவிர்த்து வேறு எதையும் பேணாத கருத்தினை உடையவன் என்று தன்னை திருஞான சம்பந்தர் குறிப்பிடுவதை நாம் கீழ்க்கண்ட பாடலில் (1.77.11) உணரலாம். கருங்குவளை மலர்கள் பொழியும் தேனினை உட்கொள்ளும் தவளைகளின் வாய் நிறைந்துள்ள நிலையும், வாளை மீன்கள் துள்ளி விளையாடுவதால் புதியதாக மலர்ந்த மலர்களின் இதழ்கள் கிழியும் நிலையும் குறிப்பிடப்பட்டு சீர்காழி நகரின் நீர்வளமும் நிலவளமும் திருஞானசம்பந்தரால் நமக்கு உணர்த்தப் படுகின்றது.

மைச்செறி குவளை தவளை வாய் நிறைய மதுமலர்ப் பொய்கையில் புதுமலர் கிழிய

பச்சிற வெறி வயல் வெறி கமழ் காழிப் பதி அவர் அதிபதி கவுணியர் பெருமான்

கைச் சிறு மறியவன் கழல் அலால் பேணாக் கருத்துடை ஞான சம்பந்தன தமிழ் கொண்டு

அச்சிறுபாக்கத்து அடிகளை ஏத்தும் அன்புடை அடியவர் அருவினை இலரே

இவ்வாறு திருஞானசம்பந்தர் கூறுவது நமக்கு சுந்தரர் வன்பார்த்தான் பனங்காட்டூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் ஒரு பாடலை நினைவூட்டுகின்றது. இந்த பாடலில் (7.86.7) பெருமானை அறியாதவர்களின் அறிவு அறிவாக கருதப்படாது என்று சுந்தரர கூறுகின்றார் மெய்ப்பொருளாய் இருப்பவனும் வெண்மையாக உள்ள திருநீற்றினை தனது உடல் முழுவதும் பூசுபவனும், வேதங்களின் தலைவனும், தனது கையினில் மான் மற்றும் மழு ஏந்தியவனும், அனைவரது வாழ்நாளினை முடிக்கும் காலனின் வாழ்நாளை முடித்தவனும், படத்தினை உடைய பாம்பினைத் தனது இடுப்பினில் இறுகக் கச்சையாக கட்டி ஆட்டுபவனும், தனது அடியார்கள் அன்றி ஏனையோர் அறிய முடியாத வண்ணம் மறைத்துக் கொள்பவனும், எங்களது தலைவனும் ஆகிய இறைவனை அறியாதவர்களின் அறிவு அறிவாக கருதப் படாது என்று சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார்.

மெய்யன் வெண்பொடி பூசும் விகிர்தன் வேத முதல்வன்

கையில் மான் மழு ஏந்திக் காலன் காலம் அறுத்தான்

பை கொள் பாம்பு அரை ஆர்த்த படிறன் தன் பனங்காட்டூர்

ஐயன் எங்கள் பிரானை அறியாதார் அறிவென்னே

நறநிறை=நறவு என்ற சொல் குறைந்து நற என வந்துள்ளது; நறவு=தேன்; மேலே குறிப்பிட்ட பாடல்களில் பெருமானை வழிபடாத அறிவு, அறிவு என்று கருதப்படாததை நாம் உணர்ந்தோம். மணிவாசகர் ஒரு படி மேலே சென்று, அத்தகைய அறிவு இல்லாத மூடர்களிடம் அச்சம் கொண்டு அவர்களுடன் பழகுவதை தவிர்ப்போம் என்று அச்சப்பத்து பதிகத்தினில் கூறுகின்றார். தறி=காட்டுத்தறி, தறியிலிருந்து விடுபடும் யானை மிகுந்த கோபத்துடன் வரும்; உழுவை=புலி; பெருமானின் சடை நறுமணத்துடன் கூடியது என்று அடிகளார் இங்கே கூறுகின்றார்,

தறி செறு களிறும் அஞ்சேன் தழல் விழி உழுவை அஞ்சேன்

வெறி கமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண மாட்டா

செறி தரு கழல்கள் ஏந்தி சிறந்து இனிது இருக்க மாட்டா

அறிவு இலாதவரைக் கண்டால் அம்ம நான் அஞ்சுமாறே

பொழிப்புரை:

தனது ஒளிக்கதிர்கள் மூலம் பயிர்களை வளர்க்கும் தன்மை உடைய பிறைச் சந்திரனைத் தனது சடையில் ஏற்றவனும், தேன் நிறைந்த மலர்கள் இருக்கும் திருமுடியை உடையவனும் ஆகிய பெருமான், உதிரும் தன்மை உடைய மயிர்கள் நிறைந்ததும் தசைகள் நீங்கப் பெற்றதுமான புலித் தோலினை உடையாக இடுப்பினில் அணிந்தவனும், இருளினை நீக்கும் கதிரவனின் கதிர்கள் போன்று ஒளிவீசும் மழுப் படையை ஏந்தியவனும் ஆகிய பெருமான், மிகுந்த விருப்பத்துடன் கழுமலம் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரில் எழுந்தருளியுள்ளான். அத்தகைய பெருமானின், ஒலிக்கும் வீரக்கழல்கள் அணிந்த திருவடிகளை தொழுது போற்றி வணங்கும் அறிவன்றி வேறு அறிவு ஏதும் இல்லாதவனாக அடியேன் இருக்கின்றேன்,

பாடல் 8:

பிறையணி படர்சடை (1.019) பாடல்கள் 6 தொடர்ச்சி, 7, மற்றும் 8 (திதே 0338)

பிறையணி படர்சடை (1.019) பாடல்கள் 8, 9, 10, 11 (திதே 0339)

கடலென நிற நெடு முடியவன் அடு திறல் தெற அடி சரணென
அடல் நிறை படை அருளிய புகழ் அரவு அரையினன் அணி கிளர் பிறை
விடநிறை மிடறு உடையவன் விரி சடையவன் விடை உடையவன் உமை
உடனுறை பதி கடல் மறுகுடை உயர் கழுமல வியன் நகரதே

விளக்கம்:

அடுதல்=அழித்தல், வருத்துதல்; அடுதிறல்=பிறரை வருத்தும் வலிமை; தெற=தொலையும் வண்ணம்; அடல்=வலிமை;

பொழிப்புரை:

கடலின் கருமை நிறம் கொண்டவனும் நீண்ட முடிகளை உடையவனும் ஆகிய அரக்கன் இராவணனின், பிறரை வருத்தும் வலிமை தொலையும் வண்ணம் அவனை கயிலை மலையின் கீழே அழுத்தி நெருக்கியவன் சிவபெருமான். அவ்வாறு அழுத்தப் பட்டதால் தனது உடல் வலிமை குன்றிய நிலையில் அரக்கன் இராவணன் பெருமானின் திருவடிகளை சரணடைய, அவனுக்கு பரிசாக வல்லமை வாய்ந்த படைக்கலங்களை அருளியவன் சிவபெருமான்; அனைவரும் புகழத் தக்க வகையில் விடமுடைய பாம்பினைத் தனது இடுப்பினில் கச்சையாக கட்டி ஆட்டுபவனும், ஒளி வீசும் கதிர்களை உடைய பிறைச் சந்திரனைத் தனது சடையில் அணிந்தவனும், விடத்தினை தேக்கியதால் கருமை நிறம் அடைந்த கழுத்தினை உடையவனும், விரிந்த சடையை உடையவனும், இடபத்தை வாகனமாக உடையவனும் ஆகிய பெருமான், உமையம்மையுடன் உறைவது கழுமலம் நகரமாகும். அத்தகைய பெருமை வாய்ந்த கழுமலம் நகரம், பிரளய காலத்தில் கடல் பொங்கி எழுந்து அனைத்து உலகங்களையும் மூழ்கடித்த போதிலும். தான் மூழ்காத வண்ணம் உயர்ந்து நின்ற தலமாகும்.

பாடல் 9:

பிறையணி படர்சடை (1.019) பாடல்கள் 8, 9, 10, 11 (திதே 0339)

கொழு மலர் உறை பதி உடையவன் நெடியவன் என இவர்களும் அவன்
விழுமையை அளவு அறிகிலர் இறை விரை புணர் பொழிலணி விழவமர்
கழுமலம் அமர் கனல் உருவினன் அடியிணை தொழும் அவர் அருவினை
எழுமையும் இல நிலவகை தனில் எளிது இமையவர் வியனுலகமே

விளக்கம்:

கொழு=அழகு; அவன்=சிவபெருமான்; விழுமை=பெருமை. சிறப்பு; இறை என்ற சொல்லினை அளவு அறிகிலர் என்ற சொற்களுடன் முன்னர் வைத்து பொருள் காண வேண்டும். இறை அளவு அறிகிலர்=சிறிதும் அறியாமல்; விரை=நறுமணம்; புணர்=கலந்த;

பொழிப்புரை:

சிறந்த தாமரை மலரினைத் தனது இருப்பிடமாக உடைய பிரமனும், நெடியவனாக வளர்ந்து மூவுலகங்களையும் அளந்த திருமாலும் ஆகிய இருவரும், பெருமானின் சிறப்பினையும் பெருமையினையும் சிறிதளவும் அறியாததால், அவனது திருமுடியையும் திருவடிகளையும் காண்பதற்கு முயற்சி செய்து, அவற்றை காண முடியாமல் திகைத்தனர்; நறுமணம் கலந்த அழகிய சோலைகள் சூழ்ந்ததும், திருவிழாக்கள் இடைவிடாது நடைபெறுவதும் ஆகிய கழுமலம் நகரினில் உறைபவனாகிய பெருமானின் இணையான இரண்டு திருவடிகளை வணங்கும் அடியார்கள், வல்லமை வாய்ந்த வினைகளால் ஏற்படும் ஏழு வகையான பிறப்புகளில் ஏதும் அவர்களை அணுகாத வண்ணம் திகழ்வார்கள். எனவே அவர்கள் மீண்டும் நிலவுலகில் பிறவாமல் இமையவர் உலகினை அடையும் தன்மையை மிகவும் எளிதில் பெறுவார்கள்.

பாடல் 10:

பிறையணி படர்சடை (1.019) பாடல்கள் 8, 9, 10, 11 (திதே 0339)

அமைவன துவர் இழுகிய துகில் அணியுடையினர் அமண் உருவர்கள்
சமையமும் ஒரு பொருளெனும் அவை சல நெறியன அறவுரைகளும்
இமையவர் தொழு கழுமலம் அமர் இறைவனது அடி பரவுவர் தமை
நமையல வினை நலன் அடைதலில் உயர்நெறி நனி நணுகுவர்களே

விளக்கம்:

அமைவன=பொருந்துவன; இழுகிய=தோய்ந்த; நமையல=வருத்தம் உண்டாக்காது; சல நெறி= வஞ்சக நெறி; உண்மையான மெய்ப்பொருளாகிய இறைவனை உணர்ந்து அவனை நாடிச் சென்று வணங்கி அவனது அருளினால் முக்தி நிலை பெறுவதற்கு வழிவகுப்பது, வேதங்களும் ஆகமங்களும் உணர்த்தும் சைவநெறியாகும். அந்த வழியினில் நாம் செல்வதைத் தடுப்பதால் சமணர்கள் மற்றும் புத்தர்களின் கொள்கைகள் வஞ்சக நெறிகள் என்று கூறப்படுகின்றன.

பொழிப்புரை:

தமக்கு பொருந்தும் வண்ணம் துவர் நிறம் தோய்க்கப்பட்ட ஆடையினை அணியும் புத்தர்களும், உடையேதும் இல்லாமல் அம்மணமாக திரியும் சமணர்களும் பின்பற்றும் மதங்கள், பொருள் என உணர்த்தும் கொள்கைகள் வஞ்சக நெறிக்கு உயிரினை அழைத்துச் செல்லும் வழிகளாகும். அவர்களது அறிவுரைகளும் வஞ்சகம் நிறைந்த மொழிகள். ஆனால், விண்ணவரும் தொழும் வண்ணம் கழுமலம் நகரில் வீற்றிருக்கும் பெருமானது திருவடிகளைத் தொழும் அடியார்களின் வினைகள் அவர்கள் வருத்தாத வண்ணம் பெருமான் அருள் செய்வதால், அத்தகைய அடியார்கள் வினைகளின் தன்மைகள் நீங்கப்பெற்று உயர்ந்த முக்திநெறியினை சென்று அடைவார்கள்.

பாடல் 11:

பிறையணி படர்சடை (1.019) பாடல்கள் 8, 9, 10, 11 (திதே 0339)

பெருகிய தமிழ் விரகினன் மலி பெயரவன் உறை பிணர் திரையொடு
கருகிய நிற விரி கடலடை கழுமலம் உறைவிடம் எனநனி
பெருகிய சிவனடி பரவிய பிணைமொழியன ஒரு பதுமுடன்
மருவிய மனமுடையவர் மதியுடையவர் விதியுடையவர்களே

விளக்கம்:

மலி=நிறைந்த; பெயர்=புகழ்; பெருகிய தமிழ்=பல வகையான எண்ணற்ற நூல்களைக் கொண்டு வளர்ந்த தமிழ் மொழி; விரகினன்=மிகவும் ஆழமாகக் கற்று உணர்ந்தவன்; உரை=நீர்த்துளி

பொழிப்புரை:

எண்ணற்ற நூல்களைக் கொண்டு பரந்து விரிந்த தமிழ் மொழியினை ஆழமாகக் கற்று உணர்ந்து நிறைந்த புகழுடன் விளங்கும் ஞானசம்பந்தன், நீர்த்துளிகள் கலந்த அலைகள் உடைய கடல், நீல நிறத்துடன் விரிந்து பரந்து விளங்கும் கடலினை அடுத்துள்ள கழுமலம் நகரினில் உறையும் சிவபெருமானது திருவடிகளை பெருமையுடன் பாடிய இந்த பதிகத்தின் பத்து பாடல்களை, ஒன்றிய மனத்துடன் பாடும் அடியவர்கள் இம்மையில் கல்விச் செல்வமும் பொருட்செல்வமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்த பின்னர், பெருமானின் திருவடிகளை அடைந்து நிலையான இன்பத்துடன் வாழ்வார்கள்.

முடிவுரை:

பதிகத்தின் முதல் பாடலில் நன்மை விளைவிக்கும் திருவடிகள் என்று உணர்த்தி, அந்த திருவடிகளைச் சார்ந்து நலம் பெறுமாறு திருஞானசம்பந்தர் நம்மைத் தூண்டுகின்றார். கடினமான செயலாக தோன்றும், பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுவதை, மிகவும் எளிய செயலாக மாற்றி நன்மை புரிவன பெருமானின் கழல்கள் என்று இரண்டாவது பாடலில் கூறுகின்றார். பெருமானின் திருவடிகளை நாள்தோறும் புகழ்ந்து வணங்கும் அடியார்கள், இறைவனைப் பற்றிய சிந்தனையில் எப்போதும் ஆழ்ந்து இருப்பார்கள் என்று மூன்றாவது பாடலில் கூறுகின்றார். நமது வினைகளை முற்றிலும் கழித்துக் கொள்ள விரும்பினால் நாம் செய்ய வேண்டியது யாது என்பதை நான்காவது பாடலில் உணர்த்துகின்றார். ஐந்தாவது பாடலில் பெருமானின் வல்லமையை நமக்கு உணர்த்தும் திருஞான சம்பந்தர் ஆறாவது பாடலில் அந்த வல்லமை நமது வினைகளை பொடிபொடியாக மாற்றி நாம் முக்தி உலகுக்கு செல்ல வழி வகுக்கும் என்று கூறுகின்றார். ஏழாவது பாடலில் பெருமானின் திருவடிகளைத் தவிர்த்து வேறு எதையும் பேணாதவன் என்று தன்னைக் குறிப்பிட்டு, நாமும் அவரை பின்பற்றும் வண்ணம் நம்மை தூண்டுகின்றார். எட்டாவது பாடலில் கழுமலம் நகரம் முற்றூழிக் காலத்திலும் அழியாது உயர்ந்து நின்றது என்று தலத்தின் சிறப்பினை குறிப்பிடுகின்றார். ஒன்பதாவது பாடலில் அவனது திருவடிகளைத் தொழும் அடியார்கள், ஏழு வகையான பிறப்புகளிலிருந்து விடுதலை பெற்று மேலான உலகத்தை அடைவார்கள் என்று கூறுகின்றார். பத்தாவது பாடலில், பெருமானைத் தொழும் அடியார்கள் முக்தி நிலையினை அடைவார்கள் என்று கூறும் சம்பந்தர் பதிகத்தின் கடைப் பாடலில் பதிகத்தை ஓதும் அடியார்கள் அறிவுச்செல்வமும் பொருட்செல்வமும் பெற்று விளங்குவார்கள் என்று கூறுகின்றார். இந்த பதிகத்தினை ஒன்றிய மனத்துடன் ஓதி, இம்மையில் கல்வியும் செல்வமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்து மறுமையில் பெருமானின் திருவடிகளைச் சென்றடைந்து நிலையான இன்பத்துடன் வாழ்வோமாக

பிறையணி படர்சடை (Piraiyaṇi Padarsadai) is a poetic and devotional phrase describing Lord Shiva, focusing on his matted hair (jada) and the crescent moon he wears. Let’s break it down:

Breakdown of the Phrase:

பிறை (Pirai): Refers to the crescent moon. Lord Shiva is often depicted with a crescent moon on his head, symbolizing time, change, and immortality. The crescent moon represents the waxing and waning cycles of the moon and time itself.

அணி (Aṇi): Means adornment or decoration. In this context, it suggests that the crescent moon is adorning Lord Shiva’s head, adding to his divine beauty.

படர்சடை (Padarsadai): Refers to matted locks of hair or spreading hair. Lord Shiva’s matted hair (jata) is an iconic feature, often described as flowing or spreading, representing his control over natural forces, including rivers like the Ganges.

Full Meaning:

"பிறையணி படர்சடை" translates to "the one with spreading matted hair adorned with the crescent moon." This phrase vividly describes Lord Shiva as he is traditionally depicted—his wild, unkempt, and divine matted hair (representing natural elements and power) is decorated with the crescent moon.

Context:

Crescent Moon (Pirai): The crescent moon on Shiva’s head is symbolic of time, as it represents the lunar cycle, which controls time and seasons. Shiva is often called Chandrasekara (the one who wears the moon), indicating his dominance over time and his eternal, unchanging nature.

Matted Hair (Padarsadai): Shiva’s matted hair symbolizes his ascetic nature, his connection to the natural world, and his role as the lord of cosmic forces. His hair is often described as wild and spreading, containing within it the flow of the Ganges River, which descended from the heavens to earth through his locks. This control over the Ganges reflects Shiva's ability to tame powerful natural forces.

Symbolism:

Crescent Moon: Signifies the cyclical nature of time, renewal, and Shiva’s role as the eternal, unchanging force in the universe.
Matted Hair: Represents his ascetic life, control over cosmic forces, and connection to nature and the elements.

Conclusion:

"பிறையணி படர்சடை" is a beautiful and descriptive phrase that highlights two of the most iconic elements of Lord Shiva: his crescent moon and his flowing matted hair. It encapsulates Shiva's dual nature—wild and ascetic, yet serene and eternal—emphasizing his control over both time and the cosmic forces of the universe. This phrase is a common motif in Tamil devotional literature, especially in works like Thevaram and Thiruvachakam, where Shiva is praised for his divine attributes.



Share



Was this helpful?