இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


சிறுபாண் ஆற்றுப்படை

Sirupan Atrupadai, also known as Sirupan Aṟṟuppaṭai, is a classical Tamil literary work from the Sangam period, included in the Pattuppāṭṭu (Ten Idylls) anthology. The title translates to "Guide to a Minor Chieftain," indicating that the work serves as a guide for bards and others seeking the patronage of a lesser-known or less powerful chieftain.

சிறுபாண் ஆற்றுப்படை

இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது சிறுபாணாற்றுப்படை எனும் இந்நூல். இது 269 அடிகளாலமைந்தது. ஒய்மான் நாட்டு மன்னனான நல்லியக்கோடன் என்பவனைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட இந்நூல், அம்மன்னனிடம் பரிசு பெற்ற சிறுபாணன் ஒருவன் தான் வழியிற் கண்ட இன்னொரு பாணனை அவனிடம் வழிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

நூலாசிரியர் வரலாறு

சான்றோர் உரைத்த தண்டமிழ்த் தெரியல் ஒருபது பாட்டினுள் மூன்றாம் எண்ணுமுறைக்கண் நின்ற சிறுபாணாற்றுப் படை என்னும் சிறந்த இந்நூலை இயற்றியவர் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் என்னும் நல்லிசைப்புலவர் ஆவர். கல்வி கேள்விகளான் நிறைந்து, புதுமையான் மேம்பட்டு விளங்கிய சான்றோரின் பெயர்முன்னர் ந என்னும் சிறப்புப்பொருளைத் தரும் இடைச்சொல் அடைபெய்து வழங்குதல் பண்டைத் தமிழ்ச்சான்றோர் மரபாம். தத்தனார் என்னும் இப்பெயருடைய இப்புலவர் பெருமான் பெயரும் ந என்னும் அடையடுத்து வழங்கப்படுதலால் இவர் பண்டை நாட் சான்றோரான் நன்கு மதிக்கப்பட்டமை புலனாம். இனி, இவர் பெயர்க்கு அடையாக வரும், இடைக்கழி நாட்டு நல்லூர் என்னும் தொடர், இவர் இடைக்கழிநாட்டின் கண் உள்ள நல்லூர் என்னும் ஊரிற் றோன்றியவர் என்பதனைப் புலப்படுத்தும். இடைக்கழிநாடு என்பது, சென்னைக்குத் தென்மேற்கில் உள்ள ஒரு சிறு நாடு என்றும், இந்நாடு இன்றும் இடைக்கழிநாடென்றே வழங்கப்படுகின்றதென்றும், அந்நாட்டின்கண் நல்லூர் என்னும், பெயருடன் ஓரூரும் உளதென்றும், அவ்வூரே நத்தத்தனார் தோன்றிய ஊராதல் வேண்டும் என்றும் அறிஞர் கூறுகின்றனர். ஓதுதற்கும், உணர்தற்கும் இனிய முறையில் இவர் செய்யுள் யாப்பதில் மிகவும் வல்லுநராவார்.

அலைநீர்த் தாழை அன்னம் பூப்பவும்
தலைநாட் செருந்தி தமனிய மருட்டவும்
கடுஞ்சூன் முண்டகம் கதிர்மணி கழாஅலவும்
நெடுங்காற் புன்னை நித்திலம் வைப்பவும் (சிறுபாண் : 146-9)

என்றும்,

பைந்நனை அவரை பவழங் கோப்பவும்
கருநனைக்க யாக் கணமயில் அவிழவும்
கொழுங்கொடி முசுண்டை கொட்டங் கொள்ளவும்
செழுங்குலைக் காந்தள் கைவிரல் பூப்பவும் (சிறுபாண் : 164-7)

என்றும் வரும் இன்னோரன்ன அடிகளில் இப்புலவர் பெருமான் சொற்றொடர்களைக் கேட்போர்க்குப் பெரிதும் இன்பம் நல்கும் முறையில் யாத்தமைத்திருத்தல் உணர்க.

இயற்பொருள்களைக் கூர்ந்து நோக்கி, அவற்றிற்குத் தக்க உவமைகளைத் தேர்ந்துரைப்பதில் இவர் பெரிதும் சிறப்புடையராகத் திகழ்கின்றார். யாற்றின் அறலில் உதிர்ந்து கிடக்கும் வாடற்பூவினை நிலமகளின் கூந்தலிற் சூட்டிய மலர் என்றும், மலையினின்றும் வீழும் அருவியினை நிலமடந்தையின் அணிமுலைத் துயல்வரும் நித்திலக்கோவை என்றும், மகளிர் முலையிற் பிதிர்ந்த சுணங்கினை வேங்கை நாண்மலர் என்றுங் கூறியிருப்பது வியக்கற்பாலதே. ஒருகாலிறுகவும் ஒருகால் நெகிழவும் சுற்றப்பட்ட யாழினது வார்க்கட்டிற்குக் கரிய குரங்கு பாம்பினைப் பிடித்தகாலை அதன் கையில் அப்பாம்பு சுற்றுதலையும், யாழின் இசைக்கு அமிழ்தத் துளியினையும், கடலலையால் ஒதுக்கப்பட்டு உலர்ந்துகிடக்கும் அகின்மர விறகிற்கு ஒட்டகம் உறங்கிக் கிடத்தலையும், சான்றோரும் வயவரும் அரிவையரும் பரிசிலரும் சூழ வீற்றிருக்கும் நல்லியக் கோடற்குப் பன்மீன் நடுவண் திகழும் பான்மதியினையும், பிணத்தை உகைத்துச் சிவந்துள்ள யானையின் கால்நகங்கட்கு நிணத்தை உண்டு சிரித்த பேய்மகளின் பற்களையும் உவமையாகக் கூறியிருத்தலும் இன்னோரன்ன பிறவும் காண்க. இனி, ஒருசில சொற்களை இணைக்கும் வாயிலாய், ஓதுவோர் உளத்தே கண்கூடாகப் பொருள் புலப்படுத்தும் ஆற்றலும் இவர் பெரிதும் உடையர் ஆவர். திறவாக் கண்ண காய்செவிக் குருளை என்னுந் தொடரான், கண்விழியாத சிறிய நாய்க் குட்டியின் தோற்றத்தையும், வலம்பட நடக்கும் வலிபுணர் எருத்தின் உரன்கெழு நோன்பகடு என்னும் தொடரால் வலிமைமிக்க எருதுகளையும், பொன்வாய் மணிச்சிரல் என்னுந் தொடரான் மீன்கொத்திப் பறவையினையும், எரிமறிந் தன்ன நாவின் இலங்கெயிற்றுக் கருமறிக் காதிற் கவையடிப் பேய்மகள் என்னுந் தொடரான் அச்சந்தரும் பெண் பேயையும் கற்போருளத்தே தோற்றுவித்தல், ஓதியுணர்க.

இனி இந்நத்தத்தனார் ஏழ் பெரும் வள்ளல்களின் வரலாறு கூறுமாற்றானும், மதுரை உறந்தை வஞ்சி என்னும் மூன்று தமிழ்நாட்டின் தலைநகரைச் சிறப்பிக்குமாற்றால் ஒவ்வொரு நாட்டின் சிறப்பியல்புகளைத் தேர்ந்தெடுத்து விளக்கிப் போதலானும், யாழின் இயல்பினையும் பண்ணியல்பினையும் கிளந்தெடுத்து ஓதுதலானும், நானிலங்களின் இயல்புகளும் ஆண்டு வாழும் மாந்தர்களின் ஒழுகலாறும் அவர்தம் உணவும் தொழிலும் பிறவும் நுணுக்கமாகக் கண்டுரைத்தலானும், நல்லியக்கோட வள்ளலைப் புகழுமாற்றால், உயரிய அறங்களின் சிறப்புக்களை எடுத்துரைத்தலானும், பிறவாற்றானும் விரிகடல் போன்று விரிந்த அறிவுடையார் என்பது புலனாம். சுருங்கிய சொற்றொடரால், விரிந்த பொருளை விளக்குவதிலும் இப்புலவர் வல்லுநர் ஆவார். ஒரு சில நிகழ்ச்சிகளைத் தேர்ந்து கூறுந்துணையானே ஒரு சிறந்த நாட்டின் இயல்பனைத்தும் தோன்றவும், ஒரு சிறந்த வள்ளலின் பெருமையனைத்தும் தோன்றவும், செய்யுள் செய்யும் வன்மையை இந்நூலின்கட் பற்பல விடங்களிலே காணலாம். இதனைக் கருதியே போலும் தக்கயாகப் பரணி உரையாசிரியர் இதனைச் சிறப்புடைத்தான சிறுபாணாற்றுப்படை என விதந்து கூறுவாராயினர். பொருளை உவமமாகக்கொண்டு இவர் பல விடங்களில் செய்யுள் செய்துள்ளார். அறம் பொருள்களை அழகுற விளக்கியுள்ளார்.

நல்லூர் நத்தத்தனார் காலத்தே உயிர் வாழ்ந்திருந்த புலவர் புறத்திணை நன்னாகனார் என்பவர் ஆவர். இவர் காலத்தே வள்ளன்மையுடையோராய் விளங்கிய புரவலர்கள், இந்நூற்குத் தலைவனாகிய நல்லியக்கோடனும், ஓய்மான் நல்லியாதனும், ஓய்மான் வில்லியாதனும், கரும்பனூர் கிழானும் என்ப. திருவள்ளுவ மாலையில் உள்ள ஆயிரத்து முந்நூற்று என்று தொடங்கும் வெண்பாவை இயற்றியவர் பெயரும் நத்தத்தனார் என்றே காணப்படுகிறது. நத்தத்தம் என்னும் இலக்கண நூலை இயற்றிய புலவர் பெயரும் நத்தத்தனார் என்ப. இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்தாம் இவையிற்றைச் செய்தாரோ அன்றி அந்நத்தத்தனார் வேறோ என்பது ஆராயற்பாலது. நத்தத்தனார் மூன்று தமிழ்நாட்டிடத்தும் நன்மதிப்புடையர் என்பதனையும், தமிழ்மொழியிடத்தே பெரிதும் பற்றுடையர் என்பதனையும் மூன்று தமிழ்நாட்டினையும் சமனிலையில் வைத்துப் புகழ்தலானும், தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மதுரை என்னுந் தொடரானும் நன்கு உணரலாம். இவர் காலத்தே மதுரை, உறந்தை, வஞ்சி, எயிற்பட்டினம், வேலூர், ஆமூர், கிடங்கில், கொற்கை முதலிய ஊர்கள் சிறப்புற்றிருந்தன என்பதை இவர் நூலான் உணரலாம்.

பாட்டுடைத் தலைவன் வரலாறு

சிறுபாணாற்றுப்படை என்னும் இச் சிறந்த செந்தமிழ்ப் பனுவன் மாலையால் அணிசெய்யப்பட்ட வள்ளற் பெருமகன், ஓய்மானாட்டு நல்லியக்கோடன் என்னும் வேந்தன் என்ப. இவ்வள்ளல், திண்டிவனத்தைச் சார்ந்துள்ளதும், பண்டு ஓய்மானாடென வழங்கப்பட்டதுமாகிய நாட்டினைச் செங்கோலோச்சிய செம்மல் ஆவான். உள்ளி உள்ளவெல்லாம் உவந்தீயும் வள்ளன்மையில், பேகன் முதலிய ஏழு வள்ளல்கட்கும் இவன் ஒருவனே சமனாவான் என, நத்தத்தனார் இப்புரவலனைப் புகழ்ந்து போற்றியுள்ளார். இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழையும் பயின்ற புலவர்கட்குத் தாயாகி அவரையும் அவர்தம் கலைகளையும் நன்கு போற்றியவன். மாவிலங்கை என்னும் சிறந்த நகரத்தைத் தலைநகராகக் கொண்டு, செங்கோல் செலுத்திய ஓவியர்குடி என்னும் சிறந்த அரசர் குடியின் றோன்றி, செய்ந்நன்றி அறிதலும், சிற்றினமின்மையும், இன்முகமுடைமையும், இனியனாதலும், அஞ்சினர்க் களித்தலும், வெஞ்சின மின்மையும், ஆணணி புகுதலும், அழிபடை தாங்கலும், கருதியது முடித்தலும், காமுறப் படுதலும், ஒருவழிப்படாமையும், ஓடியதுணர்தலும், அறிவு மடம்படுதலும், அறிவு நன்குடைமையும், பிறவும் உடையனாய்த் திகழ்ந்தான் என நல்லூர் நத்தத்தனார் இவ்வள்ளலின் அருமை பெருமைகளை நன்கு பாராட்டியுள்ளார். நல்லியக்கோடன் காலத்தே, அவன் நாட்டில் கிடங்கில், எயிற்பட்டினம், வேலூர் ஆமூர் என்பன சிறந்து விளங்கிய செய்தியைச் சிறுபாணாற்றுப்படையால் உணரலாம். கிடங்கில் என்னும் ஊர் இப்பொழுதும் அப்பெயராலேயே வழங்கப்படுகின்றதென்றும், ஆங்கு இடிந்த அரண்மனைகளின் அறிகுறிகளும் அகழிகளும் காணப்படுகின்றன என்றும் அறிஞர் கூறுப.

நல்லியக்கோடன், தன் பகைவர்களின் மிகுதி கண்டு அஞ்சிச் செந்தமிழ்க்கடவுளாகிய முருகனை வழிபட்டான் என்றும், அக்கடவுள் அவன் கனவிற்றோன்றி, இவ்வூர்க்கண் உள்ள ஒரு கேணியிற் பூத்த பூவைப் பறித்து நின் பகைவர் மேல் விடுதி எனத் திருவாய்மலர்ந்தருளினர் என்றும், அவ்வாறே இவனும் அப்பூவைப் பறித்துப் பகைவர்மேல் எறிய, அதுவே வேலாகிச் சென்று பகைவரை அழித்ததென்றும், இக்காரணத்தால் அவ்வூர் வேலூர் என வழங்கப்பட்ட தென்றும் ஆசிரியர் நச்சினார்க்கினியர் உரையால் அறியலாம். இவ்வள்ளலின் மரபில், ஓய்மான் வில்லியாதன், ஓய்மான் நல்லியாதன் என்னும் வள்ளல்கள் உளராகப் புறநானூற்றால் அறியலாம்; நல்லூர் நத்தத்தனாரே அன்றிப் புறத்திணை நன்னாகனாரென்னும் நல்லிசைப் புலவரும் இவ்வள்ளலைப் புகழ்ந்து பாடியுள்ளார். அது வருமாறு :

ஓரை யாகத் தொண்டொடி மகளிர்
கேழ லுழுத இருஞ்சேறு கிளைப்பின்
யாமை யீன்ற புலவுநாறு முட்டையைத்
தேனா றாம்பற் கிழங்கொடு பெறூஉம்
இழுமென வொலிக்கும் புனலம் புதவில்
பெருமா விலங்கைத் தலைவன் சீறியாழ்
இல்லோர் சொன்மலை நல்லியக் கோடனை
உடையை வாழியெற் புணர்ந்த பாலே
பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்
ஒரூ ருண்மையி னிகந்தோர் போலக்
காணாது கழிந்த வைகல் காணா
வழிநாட் கிரங்குமென் னெஞ்சமவன்
கழிமென் சாயல் காண்டொறும் நினைந்தே (புறம்: 176)

என்பதாம். ஒருநாட் கண்டோர், காணாது கழிந்த வழிநாட்கிரங்குதற்குக் காரணமான இவ்வள்ளலின் கழிமென் சாயல் முதலிய பெருமைகள் அனைத்தும், சிறுபாணாற்றுப்படையினை ஓதி உணரற்பாலன.

அறிமுகம்

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது (குறள் : 45)

என்பது பொய்யில் புலவன் பொருளுரை, மக்களுள் முன்னேற்றம் பட வாழ்வோரை அறிதற்கும், அல்லாதாரை அறிதற்கும் அவர் தம் உடையும், ஊணும், உறையுளும், இவையிற்றை இயற்றிக் கோடற்கு அவர் கையாளும் கருவிகள், இன்னோரன்ன பிறவுமே அளவைகளாகக் கொண்டு மதிப்பார் அறிவில்லாதோர். இவையிற்றின் பெருமை சிறுமைகளுக்கேற்ப, நாகரிக வாழ்க்கையுடையோர், நாகரிகமற்றோர் எனவும் நவில்வர். நம் பண்டைநாட் சான்றோர், மக்கள் வாழ்க்கையின் பெருமை சிறுமைகளை அவர்தம் அகத்துறையும் அன்பினது பெருமை சிறுமைகளை அளவையாகக் கொண்டே மதிப்பாராயினர். அன்புமிக்க வாழ்க்கையுடையோரை வாழ்க்கை முன்னேற்றம் வாய்ந்தவர் என்றும், அல்லாதாரை முன்னேற்றம் பெறாதார் என்றும் கருதினர். நிரலே முன்னவர் நாகரிக மிக்கவர், பின்னவர் நாகரிகம் பெறாதார் என்பது அவர் கொள்கையாம்.

நாகரிக வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக அமைபவர் வள்ளல் எனப்படுவோரே ஆவர். அன்பினது தூண்டுதலால், அயலோர் இடுக்கணுறக் கண்டபொழுது உடுக்கையிழந்தவன் கைபோல விரைந்து அவ்வயலார் இடுக்கண் களைந்து அவரை மகிழ்வித்து, அவர் மகிழ்ச்சிகண்டு தாம் மகிழ்வதே இவ்வள்ளல்களின் இயல்பாம். நம்மால் உதவப்படுபவர் இனையர், உதவப்படாதார் இனையர் என்று இவர் வரைந்து கொள்ளவும் அறியார். வழங்கும் பொருளையும் இவர் வரைந்து கொள்ளார். இத்தகையோரையே அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு என வள்ளுவப் பெருந்தகை ஓதியதூஉம் என்க. இத்தகைய வள்ளற் பெருமக்கள் இவ்வுலகில் யாண்டும் எப்பொழுதும் காணப்படுபவர் அல்லர்; எனினும் சிற்சில காலங்களில் இவ்வுலகத்தே தோன்றித் தம் அன்பு கெழுமிய வாழ்க்கையானே வாழ்க்கையின் இயல்பினை எல்லோருமறியக் காட்டி மறைவர்; இவர் பருவுடல் மட்டுமே மறைவதல்லால், புகழுடல் என்றும் இந்நிலவுலகில் நின்று நிலவி மக்கட்கு வாழ்க்கையியல்பை அறிவித்துத் திகழா நிற்கும். நல்லதன் நலனும், தீய தன் தீமையும் தம் பாடல்சான்ற புலனெறி வழக்கில் உலகிற்குக் காட்டும் மேற்கோளுடைய நல்லிசைப் புலவர்க்கு நல்லதன் நலனைப் போற்றுமுகத்தானே, உள்ளி உள்ளதெல்லாம் உவந்தீயும் இத்தகைய வள்ளலைப் போற்றிப்புகழ்வதில், அளவில்லாத உவகையும், ஆர்வமும் உண்டு. ஆதலால் இத்தகைய வள்ளலைப் புகழ்தற்கென்றே நல்லிசைப் புலவர்கள், தம் பாடல்சான்ற புலனெறிவழக்கில், ஆற்றுப்படை என்னும் ஒரு துறையினை வகுத்துக் கொள்வாராயினர் என்க. இதனைத் தொல்காப்பியத்துள் புறத்திணைப் பாடாண் திணைப்பகுதியில் தாவினல்லிசை என்று தொடங்கும் நூற்பாவின்கண்,

கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீ இச்
சென்றுபயன் எதிரச் சொன்ன பக்கமும் (தொல்.புறத்.36)

என்னும் பகுதியான் அறிக. ஆடன் மாந்தரும், பாடற்பாணரும், கருவிப் பொருநரும், விறலியும் என்னும் நாற்பாலாரும், தாம் பெற்ற பெருஞ் செல்வத்தை எதிர்வந்த வறியோர்க்கு அறிவுறுத்தி அவரும் ஆண்டுச்சென்று தாம் பெற்றவையெல்லாம் பெறுமாறு கூறிய கூறுபாடும் என்பது இந் நூற்பாவின் பொருளாம். எனவே, வரையாது நல்கும் வள்ளலைப் பாடும் புலவர்கள், கூத்தர் முதலிய இந்நால்வருள் ஒருவரை உறுப்பினராகக் கொண்டு, அவர் தம் மெதிர்ப்படும் இரவலர்க்குக் கூறும் கூற்றாகத் தம் பாடலை யாக்கக் கடவர் எனத் தொல்காப்பியனார் விதித்தார் ஆயிற்று. இவ்வாற்றான், ஆற்றுப்படை என்னும் அத்துறையே ஆற்றுப்படுப்போர் பெயரை அடையடுத்து நிரலே கூத்தராற்றுப்படை, பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, விறலியாற்றுப்படை என நான்காயிற்று. மேலும் பிற்றைநாள், இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ் வித்தகருள் முன்னின்ற இயற்றமிழ் வித்தகரையும் இனம்பற்றி ஆற்றுப்படுப்போராகக் கொண்டமையான் புலவராற்றுப்படை என்னும் ஒன்றும் தோன்றி ஆற்றுப்படை ஐந்தாயிற்று என்க. இதனை,

புரவலன் பரிசில் கொண்டு மீண்ட
இரவலன் வெயில்தெறும் இருங்கா னகத்திடை
வறுமை யுடன்வரூஉம் புலவர் பாணர்
பொருநர் விறலியர் கூத்தர்க் கண்டப்
புரவலன் நாடுஊர் பெயர்கொடை பராஅய்
ஆங்குநீ செல்கென விடுப்பதாற் றுப்படை

எனவரும் பன்னிரு பாட்டியல் நூற்பாவான் உணர்க. இந்நூற்பாவானே, அத்துறைக்கு ஆற்றுப்படை என்னும் குறியீடும் தொல்காப்பியனாராற் கூறப்படாத புலவர் பெயரும், நாடும் ஊரும், பெயரும் கொடையும் பராவுதலும் கூறப்பட்டமையறிக.

இனி வள்ளலாவார், இன்னர் உதவப்படுவோர், இன்னர் உதவப்படாதார் என்று வரையாது வழங்கும் இயல்பினராகவும், கூத்தர் முதலிய ஐவகையினர்க்குமே வரைசெய்து வழங்குவோரைப் போன்று, இவர் கூற்றாகவே கூறுக என வரையறுத்தோதுதல் எற்றுக்கு? வழங்கப்பட்டோர் எத்திறத்தாரேனும் கூறுக எனில், அற்றன்று; அங்ஙனம் வரையறுத்தோதியதற்குக் காரணங் கூறுதும். எத்திறத்து மக்களும் வறுமையுறுதல் இயல்பே எனினும், கூத்தர் முதலிய கலைவாணர் நல்கூர்தல் இயற்கைக்கு மிகவும் பொருந்தியதொரு நிகழ்ச்சியாம்; என்னை? இயல் இசை நாடகமென்னும் இம் முத்திறத்துக்கலைகளினும் ஈடுபட்டு இன்புறும் திருவுடையார், தாமின்புறும் இக்கலைச் செல்வங்களையே மேலும்மேலும் ஈட்டிக்கொள்ள முயல்வாரன்றி, ஏனை மாந்தர்போன்று உடல் ஓம்புதற்கு இன்றியமையாத உண்டியே, உடையே, உறையுளே இன்னோரன்ன பொருளை இறப்ப ஈட்டிக்கொள்ள முயல்வாரல்லர். பொருளாட்சி போற்றாதார்க் கில்லை என்பது இயற்கையாகலின், இவர் உண்டி முதலிய பொருட்பேறிலராய், நல்கூர்தல் இயற்கையொடு பொருந்தியதாயிற்று. இவர் உளத்தே நாவின் கிழத்தி உறைதலால், பூவின் கிழத்தி புலந்து புறக்கணித் தொழிவாள். நல்குரவு இவர்கட்கு என்றென்றும் ஒருவாத் தோழனே ஆம். ஆயினும், காய்பசி அஞ்சும் கடையாய மாந்தர்போன்று இவர் பசியஞ்சு வாருமல்லர்.

செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கு மீயப் படும் (குறள்:412)

என்னும் சீரிய திருக்குறட்குச் சான்றாவார் இக்கலைவாணரே காவியங்களிலே கவிந்த உள்ளமுடையான் ஒருவனுக்கு அவை தரும் இன்பமே உயிர்வாழப் போதியதாம்; அவன் உடலோம்புதற்கோ குளத்து நீரும், புளித்த சோறுமே சாலும்; உடல் உழைப்பை ஒரீஇ மனனுணர்ச்சியாலே வாழப்புகுந்த இக் கலைவாணன் உழைப்பான் மட்டுமே உளவாகும் உண்டி உடைகளில் நல்கூர்ந்தானாதல் இயற்கையே, என மேலைநாட்டு வித்தகன் எமர்சன் உரைத்த மொழிகள் இவர்கள் இயல்பை நன்கு விளக்கும்.

வயிறுகாய் பெரும்பசி வருத்துமாயினும், தம்மையும் தம் கலையின் அருமையினையும் அறியாதார் தலைவாயிலை இவர் மிதிக்கவும் ஒருப்பட்டார்.

வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைத்த
குப்பை வேளை உப்பிலி வெந்ததை
மடவோர் காட்சி நாணிக் கடையடைத்து
இரும்பே ரொக்கலொ டொருங்குடன் மிசையும்
அழிபசி வருத்தம் (136-40)

இவர்பால் நிலைத்தகாலையும், கலையினை மதியாரை இவர் கண்ணெடுத்தும் பாரார்; மண்ணளவும் மதியார். இக் கலைவாணர்தம் வாழ்க்கைச் சிறப்பினை,

வள்ளியோர்ப் படர்ந்து புள்ளின் போகி
நெடிய என்னாது சுரம்பல கடந்து
வடியா நாவின் வல்லாங்குப் பாடிப்
பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்தி
ஓம்பாது உண்டு கூம்பாது வீசி
வரிசைக்கு வருந்துமிப் பரிசில் வாழ்க்கை
பிறர்க்குத் தீதறிந்தன்றோ இன்றே திறப்பட
நண்ணார் நாண அண்ணாந் தேகி
ஆங்கினி தொழுகின் அல்லது ஓங்குபுகழ்
மண்ணாள் செல்வம் எய்திய
நும்மோ ரன்ன செம்மலும் உடைத்தே (புறம்:47)

என்னும் இப்புறப்பாட்டானே நன்குணரலாம். இவ்வாற்றாற் கலைவாணர்களே ஏற்றற்கும் நல்கூர்தற்குற்சாலத் தகுதியுடையராயினர். இவரல்லார் கரவாதுவந்து ஈயும் கண்ணன்னார்கட் சென்றிரப்பினும் இழிபே ஆகலான், ஏற்றம் கேற்ற கூத்தர் முதலியோரே உறுப்பினர் ஆதற்குத் தக்கார் எனத் தொல்காப்பியனார் ஓதினர் என்க.

பசியோடே பறந்துழலும் ஒரு வண்டினைப் படைத்தபோதே, அதன் பசிதீர்த்து மகிழ்விக்கும்பொருட்டுத் தேன் நிறைந்த மலர் ஒன்றனையும் இறைவன் படைக்கின்றான், என யாரோ ஒரு புலவன் உரைத்த மொழி இப்போது என் நினைவில் எழுகின்றது. இத்தகைய மானம்போற்றும் இயல்போடும், நல்குரவோடும் இக்கலைவாணரைப் படைத்தபோதே, இவரையும் இவர் கலையையும் ஓம்பற்பொருட்டேபோலும் தமக்கென வாழாப் பிறர்க்குரியாளராய்த் திகழும் வள்ளற் பெருமக்களையும் இறைவன் படைத்தளிக்கின்றான்; இப்புலவரும், புரவலரும் இவ்வுலகில் தோன்றாரெனின் இம் மண்ணுலகில் மக்கள் உயர்திணை என்னும் சிறப்பிற்கு உரியராதல் எங்ஙனம்? எனவே, உலகியலில் எந்நிலத்தினும் நிகழும் புணர்ச்சி முதலிய ஐவகை அகத்திணைகளையும் கலையுணர்ச்சியால் நிலத்தின்றன்மையை உணர்ந்து இவ்வொழுக்கம் இந்நிலத்தே நிகழ்ந்ததெனப் பாடல் புனைவதே சிறப்பென வரையறைசெய்து கொண்டாற்போன்றே இவ்வாற்றுப்படை செய்வோர் செயப்படுவோர் கூத்தர் முதலியோர் ஆயகாலை பாடல்சான்ற புலனெறி வழக்கம் சிறப்புற்றுத் திகழும் என நுண்ணிதின் உணர்ந்தே இவ்வாறு வரையறுத் தோதியதென்க.

நூல்களானே போற்றி உரைக்கப்படும் அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றனுள், அகத்திற்கே சிறந்த இன்பம் ஒழிய, அறம்பொருள்களின் இயல்களை எடுத்தோதி மக்களை அறிஞராக்கி, அவ்வறம் பொருள்களின்பால் ஆற்றுப்படை செய்தற்கும் இத்துறைபற்றிய பனுவல் சாலச் சிறப்புடையன ஆதலானும், ஆற்றுப்படை என்னும் பெயர் பின்னும் பொருந்துவதாம். எனவே இத்துறை பற்றிச் சிறந்த பாடல்களை நல்லிசைப் புலவர் பலர் யாப்பாராயினர். சான்றோர் உரைத்த தண்டமிழ்த் தெரியல் ஒருபது பாட்டினுள்ளும், ஐந்து பாட்டுக்கள் ஆற்றுப் படைகளாம். அவ்வைந்தனுள்ளும் பாணாற்றுப்படை இரண்டுள்ளன. இவ்விரண்டற்கும் இடைதெரிதற் பொருட்டுச் சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை, (சிறுமை-பெருமை) என்னும் பண்படைமொழி அடுத்து அவை வழங்கப்படுகின்றன. இச் சிறுமை பெருமைகள் அந்நூலிற் பேசப்படும் பாணர்கள், சீறியாழ் உடையரும் பேரியாழ் உடையரும் ஆய்க் கூறப்படுதலானும் அடியளவின் பெருமை சிறுமைகளானும் பெய்து வழங்கப்பட்டன என்ப. இச் சிறுபாணாற்றுப்படையாற் பாடப்பெற்றோன் ஓய்மானாட்டு நல்லியக்கோடன் என்னும் வள்ளலாவான். இந்நூலினைப் பாடிய நல்லிசைப்புலவர், இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் என்ப.

வேனிற்காலம்

மணி மலைப் பணைத் தோள் மா நில மடந்தை
அணி முலைத் துயல்வரூஉம் ஆரம் போல,
செல்புனல் உழந்த சேய் வரல் கான்யாற்று,
கொல்கரை நறும் பொழில் குயில் குடைந்து உதிர்த்த
புதுப் பூஞ் செம்மல் சூடி, புடை நெறித்து, 5

கதுப்பு விரித்தன்ன காழ் அக நுணங்கு அறல்
அயில் உருப்பனைய ஆகி, ஐது நடந்து,
வெயில் உருப்புற்ற வெம் பரல் கிழிப்ப,
வேனில் நின்ற வெம் பத வழி நாள்
காலை ஞாயிற்றுக் கதிர் கடாவுறுப்ப, 10

பாலை நின்ற பாலை நெடு வழிச்
சுரன் முதல் மராஅத்த வரி நிழல் அசைஇ


அழகு மிக்க விறலியருடன் இளைப்பாறும் இரவலன்

ஐது வீழ் இகு பெயல் அழுகு கொண்டு, அருளி,
நெய் கனிந்து இருளிய கதுப்பின்; கதுப்பு என,
மணிவயின் கலாபம், பரப்பி, பல உடன் 15

மயில், மயிற் குளிக்கும் சாயல்; சாஅய்
உயங்கு நாய் நாவின் நல் எழில் அசைஇ,
வயங்கு இழை உலறிய அடியின்; அடி தொடர்ந்து,
ஈர்ந்து நிலம் தோயும் இரும் பிடித் தடக் கையின்,
சேர்ந்து உடன் செறிந்த குறங்கின், குறங்கு என. 20

மால் வரை ஒழுகிய வாழை; வாழைப்
பூ எனப் பொலிந்த ஓதி; ஓதி,
நளிச் சினை வேங்கை நாள்மலர் நச்சி,
களிச் சுரும்பு அரற்றும் சுணங்கின் சுணங்கு பிதிர்ந்து,
யாணர்க் கோங்கின் அவிர் முகை எள்ளி, 25

பூண் அகத்து ஒடுங்கிய வெம் முலை; முலை என,
வண் கோள் பெண்ணை வளர்த்த நுங்கின்
இன் சேறு இகுதரும் எயிற்றின்; எயிறு என,
குல்லை அம் புறவில் குவி முகை அவிழ்ந்த
முல்லை சான்ற கற்பின்; மெல் இயல்; 30

மட மான் நோக்கின் வாள் நுதல் விறலியர்
நடை மெலிந்து அசைஇய நல் மென் சீறடி
கல்லா இளையர் மெல்லத் தைவர,
பொன் வார்ந்தன்ன புரி அடங்கு நரம்பின்
இன் குரல் சீறியாழ் இடவயின் தழீஇ, 35

நைவளம் பழுநிய நயம் தெரி பாலை
கை வல் பாண்மகன் கடன் அறிந்து இயக்க,
இயங்கா வையத்து வள்ளியோர் நசைஇ,
துனி கூர் எவ்வமொடு துயர் ஆற்றுப்படுப்ப,
முனிவு இகந்திருந்த முது வாய் இரவல! 40

வஞ்சி மாநகரின் சிறப்பு
கொழு மீன் குறைய ஒதுங்கி, வள் இதழ்க்
கழுநீர் மேய்ந்த கய வாய் எருமை
பைங் கறி நிவந்த பலவின் நீழல்,
மஞ்சள் மெல் இலை மயிர்ப் புறம் தைவர,
விளையா இளங்கள் நாற, மெல்குபு பெயரா, 45

குளவிப் பள்ளிப் பாயல் கொள்ளும்
குட புலம் காவலர் மருமான் ஒன்னார்
வட புல இமயத்து, வாங்கு வில் பொறித்த
எழு உறழ் திணி தோள், இயல் தேர்க் குட்டுவன்
வரு புனல் வாயில் வஞ்சியும் வறிதே அதாஅன்று. 50

தமிழ் நிலை பெற்ற மதுரையின் மாண்பு
நறவு வாய் உறைக்கும் நாக முதிர் நுணவத்து
அறை வாய்க் குறுந் துணி அயில் உளி பொருத
கை புனை செப்பம் கடைந்த மார்பில்,
செய் பூங் கண்ணி செவிமுதல் திருத்தி,
நோன் பகட்டு உமணர் ஒழுகையொடு வந்த 55

மகாஅர் அன்ன மந்தி, மடவோர்
நகாஅர் அன்ன, நளி நீர் முத்தம்
வாள் வாய் எருந்தின் வயிற்றகத்து அடக்கி,
தோள் புறம் மறைக்கும், நல் கூர் நுசும்பின்,
உளர் இயல் ஜம்பால் உமட்டியர் ஈன்ற 60

கிளர் பூண் புதல்வரொடு கிலுகிலி ஆடும்
தத்து நீர் வரைப்பின் கொற்கைக் கோமான்;
தென் புலம் காவலர் மருமான்; ஒன்னார்
மண் மாறு கொண்ட, மாலை வெண் குடை,
கண் ஆர் கண்ணி, கடுந் தேர்ச் செழியன்; 65

தமிழ் நிலைபெற்ற, தாங்கு அரு மரபின்
மகிழ் நனை, மறுகின் மதுரையும் வறிதே; அதாஅன்று,

உறந்தையின் சிறப்பு
நறு நீர்ப் பொய்கை அடைகரை நிவந்த
துறு நீர்க் கடம்பின் துணை ஆர் கோதை,
ஓவத்து அன்ன உண்துறை மருங்கில் 70

கோவத்து அன்ன கொங்கு சேர்பு உறைத்தலின்,
வரு முலை அன்ன வண் முகை உடைந்து,
திரு முகம் அவிழ்ந்த தெய்வத் தாமரை,
ஆசு இல் அங்கை அரக்குத் தோய்ந்தன்ன
சேயிதழ் பொதிந்த செம் பொன் கொட்டை, 75

ஏம இன் துணை தழீஇ, இறகு உளர்ந்து,
காமரு தும்பி காமரம் செப்பும்
தண் பணை தழீஇய தளரா இருக்கைக்
குண புலம் காவலர் மருமான் ஒன்னார்
ஓங்கு எயில் கதவம் உருமுச் சுவல் சொறியும் 80

தூங்கு எயில் எறிந்த தொடி விளங்கு தடக்கை,
நாடா நல் இசை, நல் தேர்ச் செம்பியன்
ஓடாப் பூட்கை உறந்தையும் வறிதே அதாஅன்று,


ஏழு வள்ளல்களின் சிறப்பு
பேகன்
வானம் வாய்த்த வள மலைக் கவா அன்
கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய 85

அருந் திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்,
பெருங்கல் நாடன், பேகனும்; சுரும்பு உண

பாரி
நறு வீ உறைக்கும் நாக நெடு வழிச்
சிறு வீ முல்லைக்குப் பெருந் தேர் நல்கிய,
பிறங்கு வெள் அருவி வீழும் சாரல் 90

பறம்பின் கோமான், பாரியும்; கறங்கு மணி

காரி
வால் உளைப் புரவியொடு வையகம், மருள,
வீர நல் மொழி, இரவலர்க்கு ஈந்த,
அழல் திகழ்ந்து இமைக்கும் அஞ்சு வரு நெடு வேல்,
கழல் தொடித் தடக் கை, காரியும்; நிழல் திகழ் 95

ஆய்
நீலம், நாகம் நல்கிய, கலிங்கம்
ஆல் அமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த,
சாவம் தாங்கிய சாந்து புலர் திணி தோள்,
ஆர்வ நன் மொழி, ஆயும்; மால் வரைக்

அதிகன்
கமழ் பூஞ் சாரல் கவினிய நெல்லி 100

அமிழ்து விளை தீம் கனி ஒளவைக்கு ஈந்த,
உரவுச் சினம் கனலும் ஒளி திகழ் நெடுவேல்,
அரவக் கடல் தானை, அதிகனும்; கரவாது,

நள்ளி
நட்டோ ர் உவப்ப, நடைப் பரிகாரம்
முட்டாது கொடுத்த, முனை விளங்கு தடக் கை, 105

துளி மழை பொழியும் வளி துஞ்சு நெடுங் கோட்டு
நளி மலை நாடன், நள்ளியும்; நளி சினை

ஓரி
நறும் போது கஞலிய நாகு முதிர் நாகத்துக்
குறும் பொறை, நல் நாடு கோடியர்க்கு ஈந்த,
காரிக் குதிரைக் காரியொடு மலைந்த 110

ஓரிக் குதிரை, ஓரியும்; என ஆங்கு,

நல்லியக்கோடனின் தலைமைச் சிறப்பு
எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள்
எழுவர் பூண்ட ஈகைச் செந் நுகம்,
விரி கடல் வேலி வியலகம் விளங்க,
ஒரு தான் தாங்கிய உரனுடை நோன் தாள் 115

நறு வீ நாகமும் அகிலும் ஆரமும்
துறை ஆடு மகளிர்க்குத் தோள் புணை ஆகிய
பொரு புனல் தரூஉம், போக்கு அரு மரபின்,
தொல் மா இலங்கைக் கருவொடு பெயரிய
நல் மா இலங்கை மன்னர் உள்ளும், 120

மறு இன்றி விளங்கிய வடு இல் வாய் வாள்,
உறு புலித் துப்பின், ஓவியர் பெருமகன்
களிற்றுத் தழும்பு இருந்த கழல் தயங்கு திருந்து அடி,
பிடிக் கணம் சிதறும் பெயல் மழைத் தடக் கை,
பல் இயக் கோடியர் புரவலன் பேர் இசை 125

நல்லியக் கோடனை நயந்த கொள்கையொடு,

புரவலனிடம் பரிசுபெறச் சென்ற விதம்
தாங்கு அரு மரபின் தன்னும், தந்தை
வான் பொரு நெடு வரை வளனும், பாடி,
முன் நாள் சென்றனம் ஆக

வருத்தம் போக்கிய வண்மைச் சிறப்பு
இந் நாள்,
திறவாக் கண்ண சாய் செவிக் குருளை 130

கறவாப் பான் முலை கவர்தல் நோனாது,
புனிற்று நாய் குரைக்கும் புல்லென் அட்டில்
காழ் சோர், முது சுவர்க் கணச் சிதல் அரித்த,
பூழி பூத்த புழல் காளாம்பி:
ஒல்கு பசி உழந்த ஒடுங்கு நுண் மருங்குல், 135

வளைக் கை, கிணை மகள் வள் உகிர்க் குறைத்த
குப்பை வேளை உப்பு இலி வெந்ததை,
மடவோர் காட்சி நாணி, கடை அடைத்து,
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் மிசையும்
அழி பசி வருத்தம் வீட; பொழி கவுள், 140

தறுகண் பூட்கை, தயங்கு மணி மருங்கில்,
சிறு கண் யானையொடு பெருந் தேர் எய்தி;
யாம் அவண் நின்றும் வருதும்

எயிற்பட்டினத்தில் கிடைக்கும் பொருள்கள்
நீயிரும்,
இவண் நயந்து இருந்த இரும்பேர் ஒக்கல்
செம்மல் உள்ளமொடு. செல்குவிர்ஆயின், 145

அலை நீர்த் தாழை அன்னம் பூப்பவும்,
தலை நாள் செருந்தி தமனியம் மருட்டவும்,
கடுஞ்சூல் முண்டகம் கதிர் மணி கழாஅலவும்,
நெடுங் கால் புன்னை நித்திலம் வைப்பவும்,
கானல் வெண் மணல் கடல் உலாய் நிமிர்தர, 150

பாடல் சான்ற நெய்தல் நெடு வழி,
மணி நீர் வைப்பு, மதிலொடு பெயரிய,
பனி நீர்ப் படுவின், பட்டினம் படரின்
ஓங்கு நிலை ஒட்டகம் துயில் மடிந்தன்ன
வீங்குதிரை கொணர்ந்த விரை மர விறகின் 155

கரும் புகைச் செந் தீ மாட்டி, பெருந் தோள்,
மதி ஏக்கறூஉம் மாசு அறு திரு முகத்து,
நுதி வேல் நோக்கின், நுளைமகள் அரித்த
பழம் படு தேறல் பரதவர் மடுப்ப,
கிளை மலர்ப் படப்பைக் கிடங்கில் கோமான், 160

தளை அவிழ் தெரியல் தகையோற் பாடி,
அறல் குழல் பாணி தூங்கியவரொடு,
வறல் குழல் சூட்டின், வயின் வயின் பெறுகுவிர்:

வேலூர் வளமும் எயினர் விருந்தும்
பைந் நனை அவரை பவழம் கோப்பவும்,
கரு நனைக் காயாக் கண மயில் அவிழவும், 165

கொழுங் கொடி முசுண்டை கொட்டம் கொள்ளவும்,
செழுங் குலைக் காந்தள் கை விரல் பூப்பவும்,
கொல்லை நெடு வழிக் கோபம் ஊரவும்,
முல்லை சான்ற முல்லை அம் புறவின்,
விடர் கால் அருவி வியன் மலை மூழ்கிச் 170

சுடர் கான் மாறிய செவ்வி நோக்கி,
திறல் வேல் நுதியின் பூத்த கேணி,
விறல் வேல் வென்றி, வேலூர் எய்தின்
உறு வெயிற்கு உலைஇய உருப்பு அவிர் குரம்பை
எயிற்றியர் அட்ட இன் புளி வெஞ் சோறு, 175

தேமா மேனிச் சில் வளை ஆயமொடு
ஆமான் சூட்டின் அமைவரப் பெறுகவிர்,

ஆமூர் வளமும் உழவர் விருந்தும்
நறும் பூங் கோதை தொடுத்த நாள் சினைக்
குறுங் கால் காஞ்சிக் கொம்பர் ஏறி,
நிலை அருங் குட்டம் நோக்கி, நெடிது இருந்து, 180

புலவுக் கயல் எடுத்த பொன் வாய் மணிச் சிரல்
வள் உகிர் கிழித்த வடு ஆழ் பாசடை,
முள் அரைத் தாமரை முகிழ் விரி நாள்போது
கொங்கு கவர் நீலச் செங் கண் சேவல்
மதி சேர் அரவின் மானத் தோன்றும் 185

மருதம் சான்ற மருதத் தண் பணை,
அந்தணர், அருகா, அருங் கடி வியல் நகர்,
அம் தண் கிடங்கின், அவன் ஆமூர் எய்தின்
வலம் பட நடக்கும் வலி புணர் எருத்தின்
உரன் கெழு நோன் பகட்டு உழவர் தங்கை, 190

பிடிக்கை அன்ன பின்னு வீழ் சிறுபுறத்துத்
தொடிக்கை மகடூஉ, மகமுறை தடுப்ப,
இருங்காழ் உலக்கை இரும்பு முகம் தேய்த்த
அவைப்பு மாண் அரிசி அமலை வெண் சோறு,
கவைத் தாள் அலவன் கலவையொடு பெறுகுவிர். 195

நல்லியக் கோடனின் மூதூர் அண்மையது என்று அறிவித்தல்
எரி மறிந்தன்ன நாவின், இலங்கு எயிற்று,
கரு மறிக் காதின், கவை அடிப் பேய்மகள்
நிணன் உண்டு சிரித்த தோற்றம் போல,
பிணன் உகைத்துச் சிவந்த பேர் உகிர், பணைத் தாள்,
அண்ணல் யானை அருவி துகள் அவிப்ப, 200

நீறு அடங்கு தெருவின் அவன் சாறு அயர் மூதூர்
சேய்த்தும் அன்று; சிறிது நணியதுவே.

வாயிலின் சிறப்பு
பொருநர்க்கு ஆயினும், புலவர்க்கு ஆயினும்,
அருமறை நாவின் அந்தணர்க்கு ஆயினும்,
கடவுள் மால் வரை கண் விடுத்தன்ன, 205

அடையா வாயில் அவன் அருங் கடை குறுகி

நல்லியக்கோடன் அவையில் வீற்றிருக்கும் காட்சி அவன் குணங்களும் அவற்றை ஏத்துவோரும்
செய்ந்நன்றி அறிதலும், சிற்றினம் இன்மையும்,
இன் முகம் உடைமையும், இனியன் ஆதலும்,
செறிந்து விளங்கு சிறப்பின் அறிந்தோர் ஏத்த;
அஞ்சினர்க்கு அளித்தலும், வெஞ் சினம் இன்மையும், 210

ஆண் அணி புகுதலும், அழிபடை தாங்கலும்,
வாள் மீக் கூற்றத்து வயவர் ஏத்த;
கருதியது முடித்தலும், காமுறப் படுதலும்,
ஒரு வழிப் படாமையும், ஓடியது உணர்தலும்,
அரி ஏர் உண்கண் அரிவையர் ஏத்த; 215

அறிவு மடம் படுதலும், அறிவு நன்கு உடைமையும்,
வரிசை அறிதலும், வரையாது கொடுத்தலும்,
பரிசில் வாழ்க்கைப் பரிசிலர் ஏத்த;
பல் மீன் நடுவண் பால் மதி போல,
இன் நகை ஆயமொடு இருந்தோற் குறுகி 220

யாழ் வாசித்து, அரசனைப் புகழ்ந்து பாடுதல்
பைங் கண் ஊகம் பாம்பு பிடித்தன்ன,
அம் கோட்டுச் செறிந்த அவிழ்ந்து வீங்கு திலவின்;
மணி நிரைத்தன்ன வனப்பின்; வாய் அமைத்து,
வயிறு சேர்பு ஒழுகிய வகை அமை அகளத்து,
கானக் குமிழின் கனி நிறம் கடுப்ப, 225

புகழ் வினைப் பொலிந்த பச்சையொடு; தேம் பெய்து,
அமிழ்து பொதிந்து இலிற்றும், அடங்கு புரி நரம்பின்;
பாடு துறை முற்றிய பயன் தெரி கேள்விக்
கூடு கொள் இன் இயம் குரல் குரல் ஆக,
நூல் நெறி மரபின். பண்ணி, ஆனாது, 230

முதுவோர்க்கு முகிழ்த்த கையினை எனவும்,
இளையோர்க்கு மலர்ந்த மார்பினை எனவும்
ஏரோர்க்கு நிழன்ற கோலினை எனவும்
தேரோர்க்கு அழன்ற வேலினை எனவும்
நீ சில மொழியா அளவை

பாணர் முதலியோர்க்கு அவன் உண்டி முதலியன கொடுத்தல்
மாசு இல், 235

காம்பு சொலித்தன்ன அறுவை உடீஇ,
பாம்பு வெகுண்டன்ன தேறல் நல்கி,
கா எரியூட்டிய கவர் கணைத் தூணிப்
பூ விரி கச்சைப் புகழோன் தன்முன்,
பனிவரை மார்பன், பயந்த நுண் பொருள் 240

பனுவலின் வழாஅப் பல் வேறு அடிசில்,
வாள் நிற விசும்பின் கோள்மீன் சூழ்ந்த
இளங் கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து
விளங்கு பொற்கலத்தில் விரும்புவன பேணி,
ஆனா விருப்பின், தான் நின்று ஊட்டி, 245

நல்லியக்கோடன் அளிக்கும் பரிசில்
திறல் சால் வென்றியொடு தெவ்வுப் புலம் அகற்றி,
விறல் வேல் மன்னர் மன் எயில் முருக்கி,
நயவர், பாணர், புன்கண் தீர்த்தபின்,
வயவர் தந்த வான் கேழ் நிதியமொடு;
பருவ வானத்துப் பாற்கதிர் பரப்பி 250

உருவ வான் மதி ஊர்கொண்டாங்கு,
கூர் உளி பொருத வடு ஆழ் நோன் குறட்டு
ஆரம் சூழ்ந்த அயில் வாய் நேமியொடு,
சிதர் நனை முருக்கின் சேண் ஓங்கு நெடுஞ் சினைத்
ததர் பிணி அவிழ்ந்த தோற்றம் போல, 255

உள் அரக்கு எறிந்த உருக்குறு போர்வை,
கருந் தொழில் வினைஞர் கைவினை முற்றி,
ஊர்ந்து பெயர் பெற்ற எழில் நடைப் பாகரொடு;
மா செலவு ஒழிக்கும் மதனுடை நோன் தாள்
வாள் முகப் பாண்டில் வலவனொடு; தரீஇ, 260

அன்றே விடுக்கும், அவன் பரிசில்

நல்லியக்கோடனது புகழும் பண்பும்
மென் தோள்,
துகில் அணி அல்குல், துளங்கு இயல் மகளிர்
அகில் உண விரித்த அம் மென் கூந்தலின்,
மணி மயில் கலாபம் மஞ்சு இடைப் பரப்பி,
துணி மழை தவழும் துயல் கழை நெடுங் கோட்டு, 265

எறிந்து உரும் இறந்த ஏற்று அருஞ் சென்னி,
குறிஞ்சிக் கோமான், கொய் தளிர்க் கண்ணி,
செல் இசை நிலைஇய பண்பின்,
நல்லியக்கோடனை நயந்தனிர் செலினே.

தனிப் பாடல்கள்
அணி இழையார்க்கு ஆர் அணங்கு ஆகி, மற்று அந் நோய்
தணி மருந்தும் தாமே ஆம் என்ப-மணி மிடை பூண்
இம்மென் முழவின் எயிற்பட்டின நாடன்
செம்மல் சிலை பொருத தோள். 1

நெடு வரைச் சந்தனம் நெஞ்சம் குளிர்ப்பப்
படும், அடும் பாம்பு ஏர் மருங்குல்-இடு கொடி
ஓடிய மார்பன் உயர் நல்லியக்கோடன்
சூடிய கண்ணி சுடும். 2



Overview of Sirupan Atrupadai

1. Title Meaning:

- The name "Sirupan Atrupadai" is composed of "Sirupan," meaning "small" or "minor," and "Atrupadai," which translates to "guide" or "path." Thus, the title suggests that the poem is a guide to a minor or less influential chieftain.

2. Content:

- Structure: The poem follows the traditional **Atrupadai** format, a genre where a poet, typically a bard, guides another poet or seeker to the patronage of a ruler or chieftain.
- Theme: The poem is a detailed encomium, praising the virtues, generosity, and hospitality of the minor chieftain, and serves as a guide for other poets or bards seeking rewards or shelter.

3. Poetic Themes:

- Praise of the Patron: The central theme is the praise of the chieftain, highlighting their qualities, such as bravery, kindness, and support for the arts and culture. The patron is depicted as a paragon of generosity and a protector of poets.
- Encouragement for Seekers: The poem encourages other poets and seekers to approach the patron, assuring them of a warm welcome and generous rewards.

4. Cultural and Historical Context:

- Social and Political Setting: The work reflects the socio-political environment of the Sangam period, where local chieftains played a significant role in providing patronage to poets, artists, and scholars. It also highlights the hierarchical structure of society, where even minor chieftains were significant figures in their localities.
- Role of Patronage: The text underscores the importance of patronage in the cultural life of the time, with poets relying on the generosity of patrons for their livelihood and artistic pursuits.

5. Poetic Style:

- Atrupadai Form: The poem uses the Atrupadai form, characterized by its narrative style, which serves both to praise the benefactor and to instruct others on how to approach them.
- Language and Imagery: The poem employs rich imagery and a lyrical style, typical of Sangam poetry, using metaphors and descriptive language to extol the virtues of the chieftain.

6. Literary Significance:

- Contribution to Sangam Literature: "Sirupan Atrupadai" is an essential part of the Tamil literary canon, showcasing the tradition of bardic poetry and the cultural practice of seeking patronage from chieftains and kings.
- Historical and Cultural Insights: The poem offers valuable insights into the social customs, values, and the relationship between poets and patrons in ancient Tamil society.

Sirupan Atrupadai is celebrated for its artistic quality and its portrayal of the reciprocal relationship between poets and patrons in the Sangam era. It provides a fascinating glimpse into the cultural practices of the time, particularly the role of patronage in fostering the arts and literature.



Share



Was this helpful?