Books / மஹா புராணங்கள்


சிவமகா புராணம்

ஞான சம்ஹிதை (பகுதி-2)


41. அந்தகாசுரன் போராட்டமும் அந்தகேஸ்வர மகிமையும்

நைமிசாரண்ய முனிவர்கள் சூத புராணிகரை வணங்கி சிவஞான சீலரே! அந்தகேஸ்வர லிங்க மகிமையைத் தாங்கள் எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று கேட்டார்கள், சூதமுனிவர் கூறலானார். இரண்யாட்சனின் மகனான அந்தகாசுரன் என்பவன் உலகம் புகழ் பெற்றவனாகத் திகழ்ந்து வந்தான். அவன் நான்முகப் பிரமனைக் குறித்துக் கடுந்தவஞ் செய்து பிரமாண்டம் முழுவதும் தன் ஆயுட்காலம் வரையில் ஆட்சி செய்யும் வரத்தைப் பெற்று மூவுலகங்களையும் வென்று ஒருவனுமே தனக்கு நிகர் இல்லையென்று செருக்குற்று மந்திரமலையில் மமதையோடு வாழ்ந்து வந்தான். அப்போது தேவர்களுக்கும் அந்தக்காசுரனுக்கும் இடையே பெரும் போராட்டம் நிகழ்ந்தது. அந்த யுத்தத்தில் அந்தகாசுரன் ஏராளமான அசுரசேனைகளோடு, தேவர்களை எதிர்த்துப் பயங்கரமாக போரிட்டான். ஆயினும் தேவர்கள் சிறப்பாகப் போர் புரிந்ததால் அசுரசேனைகள் தேவர்களுடன் போர் புரிய முடியாமல் புறமுதுகிட்டு ஓடின. அதைக் கண்டதும் அந்தகாசுரன் இனி நாம் இந்த மந்திரமலையில் வாழ்வது நமக்கு நல்லதல்ல என்று எண்ணிக் கடற்கரையில் நிருதி மூலையில் மூன்று யோசனை விஸ்தீரணமுடைய ஒரு பிலத்துவாரம் உருவாக்கி அதில் மறைந்து வாழ்ந்து வந்தான். அவன் நினைத்தபோதெல்லாம் அந்தப்பிலத்திலிருந்து வெளியே வந்து தேவர்களைத் துன்புறுத்துவான்! அவர்கள் அவனை எதிர்க்க வந்தால் அந்தப் பிலத்திற்குள் சென்று மறைந்து கொள்வான். அவன் வசித்த அந்தப் பிலமானது இரண்டாவது சுவர்க்கத்தைப் போல் அதி விசித்திரமாக அமைக்கப்பட்டு விளங்கியது. அந்தகன் அவ்வாறு அடிக்கடி அமரருக்குத் துன்பம் செய்துவிட்டு பிலத்துக்குள் செல்வதும் வெளியே வந்து மீண்டும் மீண்டும் தேவர்களைத் துன்புறுத்துவதாகவும் இருந்ததால் தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் சென்று வணங்கி அவன் செய்துவரும் கொடுமைகளைப்பற்றி முறையிட்டார்கள்.

சிவபெருமான், தேவர்களை நோக்கி வானவரே! நீங்கள் உங்கள் பரிவாரங்களுடன் வந்தால் நானும் உங்களுடன் வருகிறேன் என்றார். உடனே தேவர்கள் தம் தேவப்படைகளோடு வந்தார்கள். சிவபெருமான் அவர்களுடன் சென்றார். தேவர்கள் அந்தகாசுர பிலத்தை அடைந்து அவனை போருக்கு அறை கூவி அழைத்தார்கள். அந்தகன் மிகவும் கோபத்தோடு அந்தப் பிலத்திலிருந்து வெளியே வந்து சண்டையிட்டான். அப்போது சிவபெருமான் அவன் வசித்து வந்த பலபுரத்தினுள்ளே சென்று எழுந்தருளியிருந்தார். அந்தகாசுரன் அமரர்களை அலைக்கழித்து துரத்தி மீண்டும் தன் பிலத்தினுள்ளே செல்லும் பொழுது சிவபெருமான் எதிரே வந்து தம் கைச்சூலத்தால் அவனை குத்தினார். அதனால் அந்தகன் வருந்தாமல் சிவபெருமானைப் பலவிதமாகத் துதித்தான். அதனால் மகிழ்ந்த சிவபெருமான் அந்தகா உனக்கு வேண்டும் வரத்தை கேள், நான் தருகிறேன் என்றார். அதற்கு அவன் சுவாமி! என் மீது தயை வைத்து தங்களிடம் எனக்கு பக்தியுண்டாகும்படி வரந்தரவேண்டும். இந்த வரம் என் அடுத்த பிறவிகளிலும் மாறாது இருக்க வேண்டும் என்று கேட்டான். கணத்தலைமை கொடுத்து அங்கிருந்த அசுரர்களை அழித்து உலகங்களுக்கு நன்மை செய்தார். தேவர்கள் மகிழ்ந்து தங்கள் உலகத்தை அடைந்தார்கள். அந்த இடத்தில் சிவபெருமான் அந்தகேஸ்வரர் என்ற பெயருடன் அனைவருக்கும் முக்தியருள எழுந்தருளியிருக்கிறார். நாள்தோறும் அந்தப் பெருமானை தரிசித்து வந்தால் ஒரு துக்கமுமில்லாமல் சகல சுகமும் உண்டாகும் அது முதலான ஜோதிலிங்கங்களை ஆதிசைவர்கள், ஆகமரீதியாக ஆறுமாதம் பூஜை செய்வித்துச் சேவித்தவர்கள் தமது இஷ்ட சித்தியை அடைவார்கள்.

42. ஆதிசைவர்கள் பெருமை

சூத புராணிகரே, அந்தகேஸ்வர லிங்கம் முதலிய ஜோதி லிங்கங்களை ஆதிசைவர்கள் ஆகமரீதியாக பூஜை செய்விக்க வேண்டும் என்று நீங்கள் சொன்னீர்களே. அந்த ஆதிசைவர் என்பவர் யார்? அவர்களுக்கு அத்தகைய சிறப்பு எப்படி வந்தது? அவர்களது சரித்திரத்தை எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று நைமிசாரண்யவாசிகள் கேட்டார்கள் அதற்கு சூதமுனிவர் கூறலானார்.

மாதவர்களே! சைவர்கள்-அநாதி சைவர், ஆதிசைவர் மஹாசைவர் அநுசைவர், அவாந்தர சைவர், பிரவரசைவர் அந்ய சைவர், என்ற ( காமிகாகமம்: ஸ்ருஷ்ட்ய நந்தரகாலேயே தீக்ஷிதா கவுஸிகாதயா ஸிவேந தத்குலோத்தாஸ்யு ஸைவாஸ் ஸாந்தா நிகாத்விஜா)ஏழுவகையினராவர். அவர்களில் ஆதி சைவர் சிவபெருமானது (ஸ்வாயம்பு வசனம் ஊர்த்துவ க்த்ரோத்பவ விப்ரா ஆதிஸைவ ப்ரகீர்திதா; விப்தாஸ்து பக்தாயே தேஷாம் பூஜா கார்யாந்யதாநஹி என்றபடி சிவபெருமானுடைய ஊர்த்துவ முகத்தியிலிருந்து தோன்றியவர்கள் அவர்களுக்கு பக்தர்களாக இருக்கும் விப்பிரர் பூஜிக்கப்படுவர் அல்லாதவர் அபூஜ்யராவர்) ஊர்த்துவ முகத்திலிருந்து தோன்றியவர்கள் அவர்கள் (வீராகமம்: சைவர் எழுவருள் முதலாவது அநாதிசைவர்-சிவபெருமானும், இரண்டவாது ஆதி சைவர் சிவத்விஜரும், மூன்றாவது மஹாசைவர் சிவதீட்சை பெற்ற வைதீகப் பிராமணரும், நான்காவது அநுசைவர் க்ஷத்திரிய வைசியரும், ஐந்தாவது அவாந்தர சைவர் சூத்திரரும், ஆறாவது பிரவர சைவர் சுவர்ணாம் பஷ்ட மத்யஸ்த குலாலர்களும், ஏழாவது அந்ய சைவர் அன்னிய ஜாதியாருமாவர்.

சந்தான ஸம்ஹிதை

ஆதௌ ஸதாசிவே சைவ தீக்ஷிதாஸ்த் வாதி சைவகா
ஆதி ஸை வாஸ்துதே ஜ்ஞேயா ஸர்வாநுக்ரஹகா ஸ்ம்ருதா

என்றபடியே சதாசிவ மூர்த்தியால் தீட்சை செய்யப் பெற்றவர்கள்.

காமியாகமம்

ஆதி சைவ குலே ஜாதா
ஸ்ரேஷ்டாஸ்யு ஸ்தாபநாதிஷு
தீக்ஷõயாம் ஸர்வ மந்த்யாநாம் பிரதிஷ்டாய மதோத்ஸவே
ஸ்தப நேப்ரோக்ஷணே சைவ ப்ராயஸ்சித்தாபிஷேகநே
வ்யாக்யா நாதௌச ஸஸ்தாஸ்யு ஸ்வார்தேவாத

என்றபடி ஆதி சைவ குலத்தில் உதித்த பிராமணர்கள் ஸ்தாபநாதி காரியங்களில் சிரேஷ்டிராகின்றனர். எல்லா வருணத் தாருக்கும் சிவதீட்சையால் அநுக்ரஹிப்பதிலும் பிரதிஷ்டை, உத்ஸவம், ஸ்தபநம், ஸம்புரோக்ஷணம் பிராயசித்தம் அபிஷேகம் முதலியவற்றை நடத்தவதிலும் சிவதருமங்களை வியாக்கியான ரூபமாக வெளிப்படுத்துவதிலும் ஸ்வார்த்த பரார்த்தங்களிலும் அதிகாரிகளாவார்.

அந்தச் சதாசிவமூர்த்தியாலேயே தீட்சை செய்யப் பெற்றவர்கள் அவர்கள் சிவபெருமானை ஸ்தாபனாதி காரியங்களால் அப்பெருமானது முகத்திலிருந்து தோன்றிய காமாகாதி சிவாகமங்களில் சொல்லிய முறைப்படி சிவபெருமானை அர்ச்சனை செய்வதற்குரியவராவர்; மேலும் சிவத்துவிஜர் என்ற பெயரையும் பெற்று; சிவபெருமானாலேயே புத்திரராகமதிக்கப் பெற்று சிவபூஜா உச்சிஷ்ட பொருள்களை அனுபவிப்பதற்கும் தம் அறியாமையால் செய்த குற்றங்கள் மன்னிக்க படுவதற்கும் சுதந்திரமுற்றவர்கள் இவர்கள் சிவபெருமானுக்குப் புத்திரர் உரிமை பெற்றவர்கள் என்பதற்கு ஒரு சரித்திரத்தைச் சொல்லுகிறேன் கேளுங்கள்!

பூர்வத்தில் ததீசி என்ற ஆதி சைவர் ஒருவர் சிவபக்தியும் சிவார்ச்சனையும் நியமப்படி நீங்காத சிந்தையுடையவராய்ச் சிவாகமங்களை ஐயந்திரியறக் கற்று உணர்ந்து நித்திய நைமித்திகப் பிராயச்சித்தங்களைச் செய்து கொண்டிருந்தார். அவருக்கு ஒரு புத்திரன் உண்டு அந்தப் புத்திரன் தன் மரபிற்கு ஏற்பத்தன் தந்தையால் தீட்சை செய்யப் பெற்று சிவாகமங்களை உணர்ந்து காலந்தவறாமல் சிவபூஜை செய்து வந்தான். தக்க திருமணப் பருவத்தில் திருமணம் செய்து கொண்டு மனைவியின் துர்செயல்களால் மதிமயங்கி நான்கு புதல்வர்களுக்குத் தந்தையும் ஆனான். மனைவியிடம் அடிமைப்பட்ட மனமுடையவனாக இருந்தும் சிறிதும் குறையாத ஆர்வத்தோடு சிவபக்தியோடும் தன் தந்தையைப் போலச் சிவார்ச்சனை செய்து பிறருக்கும் சிவதீட்சை செய்து கொண்டு இருந்தான். ஒருநாள் ததீசி அயலூருக்குச் செல்ல வேண்டி வந்ததால், அவர் தன் மகனைப் பார்த்து புத்திரா! நான் ஊருக்குப்போக வேண்டியிருப்பதால் அர்ச்சனை செய்து வா என்று கூறிச் சென்றார். அங்கு சென்ற இடத்தில் உறவினரின் விருப்பத்தின்படிச் சிறிது காலம் அங்கேயே தங்கியிருந்தார். புத்திரனும் காலம் தவறாமல் சிவபூஜை செய்து வந்தான். அச்சமயத்தில் சிவராத்திரி தினம் வந்தது; ஊரிலுள்ளோர் யாவரும் விரதம் இருந்து சிவபூஜை செய்யவேண்டிய நாளாகையாலே புத்திரனும் உபவாசமிருந்து அன்றிரவில் காலம் தோறும் பூஜித்து வந்தான். மூன்றாங்கால பூஜை முடித்த பிறகு தேவகதியாலும் தன் மனைவியின் துஷ்கிருத்தியத்தாலும் மனந்தவறிய நிலையில் நான்காவது கால பூஜையை நடத்த நேரிட்டது. அதனால் சிவபெருமான் சினங்கொண்டு அவனை உன்மத்தனாகும்படிச் செய்தார். அன்று முதல் அந்த உன்மத்தனின் புதல்வர் நால்வரில் மூத்த புதல்வனே சிவலிங்கார்ச்சனையைச் செய்து வர வேண்டியதாயிற்று.

சிலநாட்கள் சென்ற பிறகு ததீசி முனிவர் தம் ஊருக்குத் திரும்பிவந்தார். தம் புத்திரன் உன்மத்தனாக இருப்பதைக் கண்டு துயரமடைந்தார். ஆயினும் நியமனப்படி சிவபூஜை செய்ய சிவபெருமான் பிரத்தியட்சமாகித் ததீசியை நோக்கி இத்தகைய புத்திரனைக் கொண்டு என்னைப் பூஜிக்கச் செய்தாயல்லவா? என்று கண்டிக்க ததீசி மிகவும் பயந்து அந்தோ!  அவன் அப்படியுஞ் செய்தானா அவனால் என் வம்சமே பெருமையிழந்ததே இனி என்ன செய்வேன் இதற்குப் பிராயச்சித்தமும் இல்லையே! என்று தனக்குத்தானே நொந்து கொண்டார். இவ்வாறு இருக்கும்போது அவரது புத்திரனை பதிதனாகும்படிச் செய்த துஷ்டை இறந்து விட்டாள். அவள் சிவபூஜைக்கு விக்கினம் செய்தவளாக இருந்துங்கூட மருமகள் மாண்டதற்காக ததீசி முனிவர் வருந்தினார். தன் புத்திரன் செய்த பாவத்திற்காகப் பரிகாரம் தேட எண்ணி பிராயச்சித்த விதிப்படி சிவபூஜையையும் செய்து வந்தார். அதனால் பார்வதி தேவி ஆதிசைவர்கள் என் புத்திரர்களாகையால் நீ அஞ்ச வேண்டாம் என்று அவரைத்தேற்றி சிவபெருமானிடம் ததீசி புத்திரன் செய்த பாபத்தை மன்னிக்கவேண்டி நெய்யால் ஸ்நானம் செய்வித்து சிவபெருமானால் யக்ஞோப வீதம் தரிப்பிக்கச் செய்து ÷ஷாட சாட்சர சொரூபமாகிய சிவகாயத்திரியையும் ஸ்ரீபஞ்சாட்சரியையும் அபதேசம் செய்வித்து பதினாறுமுறை ஜெபிக்க செய்தார். அதனால் ததீசி புத்திரனை நோக்கி இனி இந்த மந்திரங்களைக் கொண்டே(ஜலாதி நமஸ்காரந்தம்) பாத்யம் முதல் நமஸ்காரம் வரையில் அடங்கிய பூஜையைச் செய்ய வேண்டும். என்று சொல்லி மேலும் சிலமந்திரங்களை உபதேசித்தார். தானியம், பழம், வஸ்திரம், நெய், எண்ணெய் முதலிய சிவபூஜை, செய்த மீதியை யெல்லாம் நீங்கள் என் முகத்தில் தோன்றியவர்களாகையால் எனக்கு நிவேதித்தவைகளை நீங்கள் அனுபவித்தற்கு உரியவரேயன்றிப் பிறர் அதைப் பெறுவதற்கும் பாத்திரராகார். நீங்களே எம்மையும் பார்வதியையும் பூஜிக்கலாமே தவிர பரார்த்த லிங்கங்களை ஆதிசைவர்களைக் கொண்டே பூஜிக்க வேண்டும். ஒவ்வொருவரும் இவ்வாறே செய்து நாம் விரும்பிய இகபரபோகங்களை அனுபவிப்பார்களாக என்று ஆசாரிய அபிஷேகம் செய்து சிவபூஜாவுரிமையை வழங்கி நீங்கள் வேதமந்திரங்களைவிடச் சிறந்த ஆகமமுறையாகவே பூஜை செய்யவேண்டும். நீங்கள் எவன் பட்சமாக இருக்கிறீர்களோ அவனுக்குச் சுகம் உண்டாகக் கடவது உங்களைப் பூஜித்தவர்கள் எம்மையும் பூஜித்த பயனைப் பெறுவார்கள். சைவ ஆசாரங்களையும் சிவபக்தியையும் விருத்தி செய்ய வேண்டிய ஆதிசைவர்களாகிய நீங்கள் உலகத்தாரால் எம்மைப் போலவே மதிக்கப்பெற்று குடும்பவிருத்தியடைந்து வாழ்வீர்களாக! என்று வரமளித்து ஆசீர்வதித்தார். ஆகையால் ஆதிசைவர்கள் ஆசாரமுடையவராயினும் ஒருவேளை தெய்வகதியால் ஆசாரம் தவறியவராயினும் அவர்களை உலகத்தோர் கைவிடலாகாது.

சிவபெருமானையும் பார்வதி தேவியையும் கையால் ஸ்பரித்து பூஜிக்கும் பாக்கியத்தையுடைய ஓர் ஆதிசைவனுக்கு அன்னம் அளித்தவன் அனேகம் கோதான பயனைப் பெறுவான் இதற்கு ஓர் உதாரணம் சொல்லுகிறேன்.

அந்தகேஸ்வர நகரத்தில் நீதி தவறாத அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அவன் பெயர் பத்திரன். அவன் நாள்தோறும் வேதியருக்கு அன்னமளிக்க வேண்டும் என்று நியமனஞ் செய்துகொண்டு நாள் ஒன்றுக்கு அநேகம் ஆயிரம் அந்தணருக்கு அறுசுவையுடன் கூடிய உணவை விருப்பத்துடன் தானமளித்துக் கொண்டிருந்தான். அவன் சிவபக்தனாகையால் சிவபெருமான் அவன் கையில் ஒரு கொடியைக் கொடுத்து, அரசனே! இதை உன் அன்ன சத்திரத்தில் விடியற்காலையில் கட்டி வைத்து, உன் நியமனப்படி அன்னம் அளித்து வருவாயாக. அவ்வாறு அளித்து வரும்போது, எவனேனும் ஒரு சற்புருஷன் அந்த அன்னத்தை உண்பானானால், அன்று நீ நாட்டிய அன்னத்துவஜம் விழுந்துவிடும். அவ்வாறு விழாவிட்டால் அன்றைய தினம் உன் அன்னத்தை சற்புருஷர் உண்ணவில்லை என்று உணர்ந்து கொள் என்று கூறி மறைந்தான். அரசன் அரனாரின் கட்டளைப்படி அந்தக் கொடியைத் தன் மாளிகையில் நாட்டி வழக்கப்படி பிராமண போஜனம் செய்வித்து வந்தான், அப்போது ஓர் ஆதி சைவ பிராமணனுக்கு அன்னமளிக்க உடனே, அந்தத் துவஜம்(கொடி) விழுந்தது. மன்னன் பத்திரன் அந்தத் துவஜத்தின் வரலாற்றை அங்கிருந்த அந்தணர்களுக்குக் கூறி இது என்ன? என்று கேட்டான். அதற்கு அவர்கள் நாங்கள் யாவரும் உண்ணும் முன்பே பதிதனாகிய இந்த அந்தணனுக்கு அன்னம் அளித்ததால் இந்தத் துவஜம் விழுந்ததேயன்றி சிவபெருமான் கூறியபடி, சற்புருஷன் உண்டதால் விழுந்ததல்ல என்றார்கள். அதற்கு அரசன் அந்தணர்களே நீங்கள் சொல்வது உண்மையானால், அதனையும் சோதித்து விடுவோமே! என்று மீண்டும் அந்தத் துவஜத்தை நாட்டி வந்த வேதியருக்கெல்லாம் சில நாட்கள் வரை அன்னம் அளித்து வந்தான் அப்படியும் அது விழாததால், அரசனும் அந்தணர்களும் முன்பு துவஜம் விழுந்தது. ஆதி சைவ வேதியர் உண்டதனாலேயே என்று தேர்ந்தார்கள். முனிவர்களே! ஆதி சைவர்கள் சிவகடாட்சம் பெற்றவர்கள். ஆகையால் அவர்கள் தங்களுக்காகவும் பிறருக்காகவும் சிவபூஜை செய்வதற்கு உரியவர்கள் புண்ணிய சரிதங்களைக் கேட்பதில் அக்கறையுடைய முனிவர்களே! நீங்கள் கேட்ட ஆதி சைவர்களின் மகிமையைச் சொன்னேன் அவர்களைக் கொண்டு ஜோதி லிங்கங்களை அருச்சித்தவர்கள் பெறுகிற பேறுகளை என்னால் சொல்ல இயலாது.

43. சந்திரன் காதலித்த கதையும் சோமேஸ்வர மல்லிகார்ச்சுன மகிமையும்

வியாசரின் சீடரே! ஜோதிர் லிங்கங்களின் உற்பத்தியையும் மனத்துயரத்தையும் எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று நைமிசாரண்ய முனிவர்கள் கேட்டார்கள். சூத புராணிகர் தொடர்ந்து சொல்லலானார். ஆதிகாலத்தில் தட்சனுக்கு அஸ்வினி முதலிய இருபத்தேழு பெண்கள் பிறந்தார்கள். தட்சன் அப்பெண்களையெல்லாம் சந்திரனுக்குத் திருமணஞ் செய்து கொடுத்தான். அவர்கள் சந்திரனுடன் கூடிப் பொன்னும் மணியும் போலப் பெருமையுடன் வாழ்ந்து வந்தார்கள். சந்திரன், சிறிது காலத்திற்குப் பிறகு தன் மனைவிகளில் உரோகிணி என்பவளை மட்டும் மிகவும் அதிகமாகக் காதலித்து வந்தான். மற்றவர்களை மனைவியராகக் கருதாமல் அலட்சியப் படுத்தினான். அதனால் இருபத்தாறு பத்தினியர்களும் தங்கள் தந்தையான தட்சனிடம் சென்று தங்களைக் காக்க வேண்டும் என்று கெஞ்சினார்கள். தட்சன் மிகவும் வருத்தமடைந்து தன் மருமகனான சந்திரனிடம் சென்று நீ நிற்குலத்தில் பிறந்து கலாநிதி என்ற பெயரைப் பெற்றிருந்தும் உன்னை மணந்த மனைவியரையெல்லாம் ஒரே மாதிரியாக நடத்தாமலிருப்பது சரியல்ல, மனைவியர் அனைவருக்கும் ஒரே மாதிரி சுகங்கொடுக்க வேண்டும் என்று விநயமாகச் சொல்லி விட்டுத் தன் இருப்பிடம் சேர்ந்தான்.

சந்திரன், தட்சனின் சொற்களைச் சிறிதேனும் ஏற்காமலும் இசையாமலும் தன் விருப்பத்தின்படியே உரோகிணியிடம் மட்டுமே அதிகக் காதலுடன் நடந்து வந்தான். சந்திரனுக்குத் தீமை விளைய வேண்டிய காலம் நெருங்கிய காரணத்தால் அவன் தக்ஷண் சொன்ன புத்தியைக் கேளாமல் உரோகிணி ஒருத்தியையே விரும்பினான். சிறிது காலம் கழிந்ததும், தட்சன் என் மருமகன் என் புத்திரிகள் விஷயத்தில் எவ்வாறு நடந்து கொள்ளுகிறான்? அதைப் பார்ப்போம் என்று எண்ணமிட்டான். அவனது புதல்விகள் சந்திரன் முன்போலவே இருந்து வருவதாகத் தட்சனிடம் புகார் செய்தார்கள். தட்சன் சந்திரனைச் சந்தித்து சந்திரா! நான் சொன்ன நற்புத்தியை ஏற்று நடக்காததால். உன் கலைகள் நாளா வண்ணமாகக் குன்றிக் குறைந்து க்ஷயம் அடைக! என்று சபித்தான். உடனே சந்திரன் தன் ஒளி மங்கி கலைகள் குறைவதைக் கண்டு எங்கே போவேன் யாரிடம் என்குறையைச் சொல்வேன்? என்று துயரத்தால் புலம்பினான். சந்திரனின் நிலையைக் கண்டு தேவர்களும் முனிவர்களும் துக்கப்பட்டார்கள். சந்திரன் அவர்களை நோக்கி நீங்கள் எவ்வாறாவது எனக்கு நேர்ந்த சாபத்தை நீக்க வேண்டும் என்று மிகவும் வேண்டிக் கொண்டான். அவனது வேண்டுகோளுக்கு இரங்கிய தேவர் முனிவர் முதலானவர்கள் பிரமதேவனிடம் சென்று, சந்திரன் தன் தவறான நடத்தையால் சாபம் பெற்ற விஷயத்தைச் சொன்னார்கள். பிரமதேவன் ஐயோ! சந்திரன் தன் மனைவியரில் ஒருத்தியை மட்டுமே அதிகமாக மோகித்து மற்றவர்களைப் புறக்கணிப்பது தருமம் அல்லவே! அவன் இத்தகைய துன்மார்க்கனே! இது அவன் இயற்கையே! ஆயினும் தன் மருமகனாயிற்றே என்று உணர்ந்ததும் தட்சன் அவனை இப்படியும் சபிக்கலாகுமா? இதுவும் அன்றி அந்தச் சந்திரன் முற்காலத்தில் செய்த ஒரு கெட்ட செயலும் உண்டு அதைச் சொல்லுகிறேன் கேளுங்கள்.

அவன் பிரகஸ்பதி முனிவர் வீட்டில் குருகுலவாசஞ் செய்து வந்தபோது அவர் மனைவி தாரையை மோகித்து அவளை தன்னுடன் அழைத்துக் கொண்டுபோய், அவரோடு போர்புரிய தைத்தியர்களையும் உதவியாகக் கொண்டு சென்றான். அப்போது தேவர்கள் அவள் தந்தை அத்திரி முனிவருடன் சென்று சந்திரா! தாரை உன் குருவின் மனைவி ஆகையால் நீ அவளைப் பிரகஸ்பதி முனிவரிடமே கொண்டுபோய் விட்டுவிடு! என்றார்கள் அவனும் அவளைப் பிரகஸ்பதி முனிவரின் ஆசிரமத்தில் கொண்டுபோய் சேர்த்தான். அப்போது  பிரகஸ்பதி முனிவர் அவள் கர்ப்பமாக இருக்கிறாள் என்பதை அறிந்து, இவள் எனக்கு வேண்டாம் என்று மறுத்து விட்டார். அப்போது நாங்கள் தான் வாதாடி அப்படியல்ல நீங்கள் அவளை ஏற்றுக் கொள்ளலாம், இதில் குற்றமில்லை என்றோம். அதற்கு தேவ குரு பிரகஸ்பதி அப்படியானால் இவளது கர்ப்பம் நீங்கிய பிறகு இவளை ஏற்றுக் கொள்வேன்? என்று சொல்லிவிட்டு அவர் தன் மனைவி தாரையை நோக்கி தாரா! நீ யாருக்குக் கர்ப்பம் தரித்தாய்? என்று கேட்டார். அதற்கு தாரை தலை குனிந்தபடி சந்திரனுக்கே கருவுற்றேன் என்றாள். எனவே அவள் பிரசவித்த பிறகு அந்தக் குழந்தையைச் சந்திரனிடம் ஒப்படைத்து விட்டு, பற்பலவிதமாக வேண்டிக் கொண்டு பிரகஸ்பதி முனிவரிடத்தில் தாரையைச் சேர்த்தோம். அத்தகையச் சந்திரன் இப்பொழுதும் அத்தகைய கொடுந் தொழிலைத்தான் செய்தனனோ அவனுக்காக வேண்டியது நடந்தே தீரவேண்டும். ஆயினும் புண்ணிய ÷க்ஷத்திரமான பிரபாஸத்திற்குப் போய் மிருத்யுஞ்ஜய மந்திரத்தால் சிவபெருமானை ஆராதித்தால் தேஜோரூபியான சிவபெருமான், அவனது தேக நலிவை நீக்குவார் என்றார். இவ்வாறு கூறிய பிரம்ம தேவரின் வார்த்தைகளைக் கேட்ட தேவர்கள், தட்சனைக்கண்டு வருந்தி, சந்திரனைத் தங்களுடன் அழைத்துக் கொண்டு பிரபாஸ ÷க்ஷத்திரத்துக்குப்போய் ஒரு தீர்த்தத்தை உருவாக்கி அதில் மற்ற தீர்த்தங்களையெல்லாம் ஆவாஹனம் செய்து பார்த்திவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து, சிவபூஜை முறைகளைச் சந்திரனுக்குச் சொல்லிவிட்டுத் தங்கள் இருக்கைகளுக்குச் சென்றார்கள். சந்திரன் ஆறுமாதகாலம் இடைவிடாமல் மிருத்யுஞ்சய மந்திரத்தால் சிவபூஜை செய்து அந்த மந்திரத்தைப் பத்துக்கோடி முறைகள் உருச் செபித்தான். அதனால் சிவபெருமான் அவன் முன்பு தோன்றி சந்திரா! உன் தவம் கண்டு மெச்சினேன். உனக்கு வேண்டும் வரத்தைக் கேள்! என்றார் சந்திரன் சாம்பவமூர்த்தியைப் பார்த்து தேவதேவா! தாங்களே என் முன்பு தோன்றி விட்டீர்களாகையால் எனக்கு அசாத்தியமானது ஒன்றுமில்லை என் உடல் நலிவதை விலக்கி என் குற்றங்களை மன்னிக்க வேண்டும் என்று வேண்டினான்.

சிவபெருமான் அவனை நோக்கி, சந்திரா! நீ பெற்ற பிராமண சாபத்திலிருந்து தப்புவதற்கு வழியில்லை ஆயினும் அதற்கு ஓர் உபாயம் சொல்கிறேன். ஒரு பக்ஷத்தில் (பாதிமாதத்தில்) உன் கலைகள் முறையே குறையவும் ஒரு பட்சத்தில் (மற்றொரு பாதி மாதத்தில்) உன் கலைகள் முறையே வளரவும் நான் அருள் புரிகிறேன் என்றார். இந்தச் செய்தியைக் கேள்வியுற்ற தேவர்கள் மிகவும் மகிழ்ந்து அங்கு வந்து சந்திரனைச் சந்தித்துப் பலவிதமாகவும் ஆசிர்வதித்து சிவபெருமானை நோக்கி, தேவரீர்! இவ்விடத்தில் பார்வதி பிரமதகண சமேதராய் சந்திரன் பெயரால் எழுந்தருள வேண்டும் என்று வேண்டி நின்றார்கள். சிவபெருமானும் அவ்வாறே சோமேஸ்வரர் என்ற பெயரோடு சந்திரன் விருத்தியடையக் காரணமாகப் பிரசித்தமாக இருக்கிறார் தேவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். சந்திரன் மிகவும் தன்யனானான் என்ற தாங்கள் அங்கே தோண்டிய தீர்த்தத்துக்குச் சந்திரகுண்டம் என்று பெயரிட்டார்கள். பிறகு சந்திரன் மற்ற தேவர்களுடன் தன் நகரத்தையடைந்து முறைப்படித் தன் காரியங்களைச் செய்து கொண்டிருந்தான். அந்தச் சந்திரகுண்டம் ஸ்நானம் செய்வோரின் சகல பாபங்களையும் ரோகங்களையும் போக்கக்கூடியதாகவும் அசாத்தியமான காரியங்களையும் கைகூடச் செய்வதாகவும் அமைந்திருக்கிறது. பிரபாஸ ÷க்ஷத்திரத்தைப் பிரதட்சிணம் செய்தால் உலகை வலம் வந்த பயன் கிடைக்கும். பிராயச்சித்தங்களால் ஒழியாத குஷ்டம் முதலிய ரோகங்கள் எல்லாம் அங்கு ஸ்நானம் செய்து ஆறுமாதம் சிவதரிசனம் செய்தால் ஒழிந்துவிடும். விரும்பிய காரியங்கள் யாவும் விரும்பிய வண்ணம் கைகூடும். இது சோமேஸ்வர ஜோதிலிங்கப் பிரபவமானதாகும். இந்தச் சரிதத்தைப் படிப்பவர்கள் சகல பாபங்களிலிருந்தும் நீங்குவார் இனி முன்பு சொன்ன மல்லிகார்ச்சுனலிங்க மகான் மியத்தைச் சொல்கிறேன். முன்பு, சுப்பிரமணியக்கடவுள் உலகை வலம் வருவதற்கு முன்பே கணபதி திருமணஞ் செய்து கொண்டிருப்பதைக்கண்டு ஒன்றுஞ் சொல்லாமல் கிரவுஞ்சகிரியை அடைந்து, சுப்பிரமணியர் பிரம்மச்சரியாக எழுந்தருளியிருந்தார். பார்வதி மனந்தாளாமல் வருந்தினாள். சிவபெருமான் தேவர்கள் சிலரை அனுப்பி முருகப்பெருமானை அழைத்துவரும்படி அனுப்ப அவர்கள் அழைத்தும் முருகன் வராமல் மறுத்து விட்டதை அவர்கள் சிவபெருமானிடம் அறிவித்தனர். உடனே சிவபெருமானும் பார்வதியும் முருகன் இருக்குமடத்திலேயே நாமும் வசிப்போம் என்று அங்கு சென்று சமீபிக்க முருகக்கடவுளும் அவர்களுக்கு மூன்று யோசனை தூரத்திலேயே நின்றார். அங்கு சிவபெருமானுக்கு மல்லிகார்ச்சுனேசர் என்ற பெயர் வழங்கலாயிற்று. அந்தத் தலமானது தரிசித்தவர்களுடைய பாபங்களையெல்லாம் ஒழித்து, பிறவித் துயரையும் ஒழித்து, தனதான்யாதி ஸகல சம்பத்துக்களையும் கொடுக்கத்தக்கது!

44. வேதியரை வருத்தியவன் கதையும் விந்தியன் கதையும் மஹாகாள ஓங்கார லிங்கங்களின் மகிமையும்

சுவாமி! வேதவியாஸ மகரிஷியால் யாவற்றையும் உணர்ந்த தாங்கள் சொல்லிய விஷயங்களால் நாங்கள் திருப்தியடையவில்லை. ஜோதிலிங்கங்களின் சரிதங்களை நாங்கள் மேலும் கேட்க விரும்புகிறோம்! என்றார்கள் நைமிசாரண்ய முனிவர்கள்.
சூதமுனிவர் கூறலானார்,

உயிரினங்கள் யாவற்றுக்கும் முக்தியளிக்கத்தக்க ஷிப்பிராநதி தீரத்தில் அவந்திகாபுரி என்ற ஊர் ஒன்று உண்டு. அங்கு வேத அத்தியயனமும் வைதீக கர்மங்களும் சிவபூஜையும் செய்யும் வேதப்பிரியன் என்ற வேதியன் ஒருவன் நற்கரும் வசத்தால் உயர் பதவியை அடைந்தான். அவனுக்கு, வேதப்பரியன், வேதன், சுவிரதன், தர்மவாதி என்ற பிள்ளைகள் இருந்தார்கள். அவர்கள் காலந்தவறாமல் சிவபூஜை செய்வதிலும் தம்மை அடுத்தவருக்குத் தர்ம மார்க்கத்தைப் போதிப்பதிலும் தந்தையைப் போலவும் அவரைவிடச் சிறந்தும் வளர்பிறைச் சந்திரனைப் போல விளங்கினார்கள். இவர்கள் பழக்கி வந்தால் அந்த ஊர் முழுவதும் பிரம்மதேஜஸுடன் திகழ்ந்தது. அப்போது இரத்தினமாலா என்ற பர்வதத்தில் தூஷணன் என்ற தைத்திய அரசன் ஒருவன் இருந்தான். அவன் மகாபராக்கிரமசாலியாகத் திகழ்ந்தான். பிரமதேவனிடம் வரம் பெற்ற அவன் தர்ம துவேஷியாகி அதர்ம வெறிக்கொண்டு ஜகத்தையே அலட்சியப்படுத்தி வந்தான். உலகத்தில் வேத ஆகமாதிமார்க்கங்களில் நடப்பவரை, முயலைக் கொல்லும் சிங்கத்தைப்போல அழித்து புண்ணிய திருத்தலங்களில் புகுந்து அங்குள்ள நல்லவர்களையும் பெரியோர்களையும் துன்புறுத்தி வந்தான், அவன் ஒரு நாள் தன் சேனைகளுடன் அவந்தி நகரத்தை அடைந்து அங்கிருந்த வேதியர்களை நோக்கி, நீங்கள் ஏன் என் கட்டளைப்படி நடப்பதில்லை? தேவர்கள். அரசர்கள் முதலானோரை சுவாதீனபடுத்திய எனக்கு நீங்கள் எம்மாத்திரம்? வேதியர்களே! நீங்கள் பிழைக்க வேண்டுமானால் சிவபூஜை வேதமந்திர உச்சாடணம் முதலானவற்றைக் கைவிட்டுவிட்டு என்சொற்படியே நடக்கவேண்டும் என்று கூறித் தன் சேனைகளைக் கொண்டும் அமைச்சர்களைக் கொண்டும் அந்தநகரம் முழுவதும் தன் ஆக்ஞையை அறிவிக்கச் செய்தான். அங்கிருந்த வேதியர்கள் அவ்வரசனது கட்டளையை மதிக்காமல் திடபக்தியோடு சிவபூஜை செய்து சிவத்தியானத்தில் அமர்ந்திருந்தார்கள். இவ்வாறு இருக்கும் போது, அவ்வசுர மன்னனின் இருப்பிடமான இரத்தினமாலா மலைச்சாரலிலுள்ள வேதியர்கள் அவ்வசுர மந்திரிகளால் பீடிக்கப்பட்டுத் துன்புற்றார்கள். அவர்கள் அவந்தியை அடைந்து அங்குள்ள வேதியர்களிடம் தங்கள் நிலைமையைச் சொல்லி முறையிட்டார்கள். அதற்கு அவந்தி பிராமணர்கள் எங்களிடம் சத்துருவை ஜயிக்கும் வன்மையில்லை, போர் செய்ய ஆயுதங்களும் இல்லை. நாங்களும் உங்களைப் போன்ற சாமானிய சரீரம் உடையவர்கள்! எங்களைச் சிவபெருமான் தான் காத்தருள வேண்டும். வேறொருவர் காப்பதற்கில்லையென்று தைரியமாக பார்த்திப லிங்கார்ச்சனை செய்து கொண்டும் இரேசக பூரக கும்பங்களாலும் பிராணாயாமாதிகளாலும் அவரையே தியானித்துக் கொண்டிருக்கிறோம். நீங்களும் இவ்வாறே செய்யுங்கள் என்று சொல்ல அவர்கள் யாவரும் சிவலிங்கார்ச்சனை செய்து கொண்டிருந்தார்கள்.
அப்போது, தூஷணன் மந்திரிகள் நால்வருடன் அவர்களிடம் வந்து, இவர்களைப் பிடியுங்கள், அடியுங்கள் கட்டி வையுங்கள் என்று பயமுறுத்தினான். அவர்கள் தியான நிஷ்டையில் இருந்ததால், அவன் கூறுவதைக் கேட்காமல் இருந்தார்கள்.

அப்போது சிவலிங்கார்ச்சனை செய்வதற்காக வேதியர்கள் பார்த்திவம் எடுத்த இடம் பெருங்குளமாக இருந்தது. அதிலிருந்து உக்கிர சொரூபமான மகாகாளேஸ்வரர் தோன்றி அந்தணருக்கு வந்த அவஸ்தையைக் கண்டு ஹுங்காரஞ் செய்யவே அசுரர்கள் சாம்பலானார்கள், ஓடிப்போனவர்கள் ஒழிய மற்றவர்கள் மாண்டார்கள். சூரிய உதயத்தால் இருள் ஒழிவது போல சிவ தரிசனத்தால் தீயோர் யாவரும் ஒழிந்தார்கள். தேவர்கள் மலர் மாரி பொழிந்தனர். தேவதுந்துபிகள் முழங்கின. சிவபெருமான் தியானத்திலிருந்த அந்தணர்களைப் பார்த்து, பிராமணர்களே! நீங்கள் எதற்கும் அஞ்ச வேண்டாம் தவத்தைக் கைவிடாமல் இருங்கள் உங்களுக்கு வேண்டிய வரங்களைக் கேளுங்கள் என்றார். வேதியர்கள் அவரை வணங்கி அடியேங்களுக்கு முக்தியருளி லோகரட்சணார்த்தமாக இங்கு எழுந்தருளியிருக்க வேண்டும் என்று வேண்டினார்கள். அதற்கிணங்கச் சிவபெருமான், பக்திப்ரியராகி, அந்தக் குளத்திலேயே பிரசன்னமூர்த்தமாக எழுந்தருளியிருந்து வேதியருக்கு முக்தியும் அளித்தார். அந்த குளம் நான்கு பக்கமும் ஒவ்வொரு குரோச அகலமுடையது அப்பெருமான் மகாகாளேஸ்வரர் எனப் புகழ் பெற்று விளங்கி வருகிறார். இவரைத் தரிசித்தால் கனவிலும் கூட துக்கம் வராது இஷ்டசித்திகள் கைகூடும். முனிவர்களே! நீங்கள் விரும்பியவாறு மகாகாளேஸ்வர ஜோதிலிங்க மகிமையைச் சொன்னேன் இனி ஓங்காரரேஸ்வர ஜோதிர்லிங்க மகிமையைச் சொல்லுகிறேன் கேளுங்கள்.

ஒரு சமயத்தில் நாரதர்முனிவர் சகல உலகங்களிலும் சஞ்சாரஞ் செய்து கொண்டு கோகர்ண ÷க்ஷத்திரத்திற்கு வந்தார். அங்கு சிவதரிசனம் செய்து கொண்டு விந்தியகிரியை அடைந்தார், விந்த மன்னன் அவரை வரவேற்றுப் பூஜித்து உபசரித்தான், அவன் அரசவையில் நாரதர் வீற்றிருக்கும் போது விந்தன் நாரதரைப் பார்த்து மகரிஷியே! நான் எல்லா வகையான இன்பங்களையுமடைந்து இருக்கிறேன். எனக்கு ஒன்றும் குறைவில்லை! என்றான். அதனால் அவனை மானபங்கம் செய்ய நாரதர் விரும்பி உஸ் என்று நெட்டுயிர்ப்பு விட்டார். விந்தன் நாரதரை நோக்கி, முனிவரே! நீர் பெருமூச்சு விட்டதற்கு என்னகாரணம் என் பூஜையில் ஏதாவது குறைவு உண்டா? என்று கேட்டான். அதற்கு நாரதர் உன்னிடத்தில் எல்லாமே அமைந்திருக்கின்றன இருப்பினும் மேருமலை உன்னைவிடப் பெரியதாயும் தேவர்களால் மதிக்கப்பட்டு அவர்கள் வசிக்கத் தக்கதாகவும் இருக்கிறது. என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். அதனால் விந்த மன்னன் நான் பிழைத்திருப்பதால் யாது பயன்? சிவாராதனை செய்து மேருவை ஜயிப்பேன்! என்று நிச்சயித்துக் கொண்டு ஓங்கார ரூபமான யந்திரம் ஒன்றை இயற்றி பார்த்திபலிங்க பூஜையை ஆறுமாதங்கள் வரை இடைவிடமாலும் இடம் பெயராமலும் செய்தான். அதனால் யோகியருக்கும் புலப்படாத சிவபெருமான் திவ்ய மங்களகரமாய் அவன் முன்னால் தோன்றி, உன் விருப்பம் யாது? என்று கேட்டார். அதற்கு விந்த ராஜன் எல்லோரையும் விடஉயர்வாக வளர்வதற்கான சக்தியை எனக்குத் தந்தருள வேண்டும் என்று கேட்டான். பிறருக்குத் துன்பம் உண்டாகத் தக்க வரத்தைக் கொடுக்கக் கூடாதாயினும் அவன் செய்த அருந்தவத்துக்காக அவன் விரும்பிய வரத்தை சிவபெருமான் கொடுக்க முனைந்து அவ்வாறே விருத்தியடைக! ஆயினும் நீ இறுமாப்பு அடைவாயானால் அந்த பேருருவம் எமது அடியாரால் சிறிதாக அடங்கும்! என்று வரம் கொடுத்தார். அப்பொழுது தேவர்களும் முனிவர்களும் அங்கே வந்து மஹேஸ்வரரே! தாங்கள் அவனுக்கு வரங்கொடுத்த பிரசாத மூர்த்தமாக இங்கு எழுந்தருளியிருக்க வேண்டும் என்று வேண்டினார்கள். பெருமானும் அவ்வாறே அமர்ந்தருளினார், ஓங்கார யந்திரத்தில் சுயம்புலிங்க மூர்த்தம் ஒன்றும் அவன் பூஜித்த பார்த்திபலிங்க மூர்த்தம் ஒன்றும், அங்கு விளங்கும் அவற்றிற்கு ஓங்காரரேசுரம் அமரேசுவரம் என்ற பெயர்கள் வழங்குகின்றன, அம்மூர்த்தங்களைத் தேவர் முதலானோர் பூஜித்து பற்பல வரங்களை அடைந்தனர். ஆகையால் அந்த ஓங்காரேஸ்வரரைப் பூஜிப்பவர்கள், மாத்ருகர்பத்தை அடையமாட்டார்கள். மனோபீஷ்டங்கள் யாவற்றையும் அடைவார்கள். இதுவே ஓங்காரேஸ்வர ஜோதிர்லிங்க மகாத்மியமாகும். இனி கேதாரேஸ்வர ஜோதிலிங்கப் பிரபாவததைச் சொல்லுகிறேன்.

45. பரதகண்டத்தின் பெருமையும் கேதாரேஸ்வர மகிமையும்

முனிவர்களே! பிரம்மதேவரின் புதல்வரான ஸ்வாயம்பு மனுவின் புத்திரன் பிரியவிரதன் அவனுக்கு ஏழு பிள்ளைகள் இருந்தார்கள். அந்தப் பிரியவிரதன் தான் ஜீவாநதரனாக இருக்கும் போதே, தன் புத்திரர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும் என்று கருதி இரதத்தில் ஏறி மேருமலையை ஏழு முறைகள் வலம் வந்து ஏழு தீவுகளாகப் பிரித்தான். அத்தீவுகளைப் போலவே ஏழு சமுத்திரங்களும் உண்டாயின. அவன் தன் புதல்வர்கள் எழுவருக்கும் ஒவ்வொரு தீவாகப் பிரித்துக் கொடுத்து சிறிது காலத்தில் உயர்பதவியை அடைந்தான். அவன் பிள்ளைகளில் மூத்தவனான ஆக்நீத்ரனுக்கு ஜம்புதீவைக் கொடுக்க அவன் அதை அரசு செய்து கொண்டிருந்தான். அவனுக்குப் பிறகு அவன் புதல்வன் நாபி என்பவனுக்கு ருஷபன் முதலாக ஒன்பது புதல்வர்கள் பெற்றார்கள். அவர்கள் க்ஷத்திரிய தர்மப்படி நடந்து முக்திப் பிரியர்களாக இருந்தார்கள். அப்போது ருஷபன் ஒன்பது கண்டமாக இருந்த தன் ராஜ்ஜியத்தை ஒன்பது ஒன்பது கண்டமாகப் பிரித்து அவர்கள் யாவருக்கும் கொடுத்தான் அவை முழுவதற்கும் பரதனையே சக்கவர்த்தியாக நியமித்தான். நாம் இருப்பது பரத கண்டம் இது மற்றெல்லாக் கண்டங்களையும் விடச் சிறந்தது. எல்லாக் கண்டங்களிலும் விஷ்ணு மூர்த்தி பல அவதாரங்கள் செய்து உலகைக் காத்தருளி வருவார். அவர் பரதகண்டத்தில் பதரிகாஸ்ரமத்தில் நரநாராயண ரூபமாக தோன்றியிருக்கையில் அவ்விருவருக்கும் பார்த்திவலிங்க பூஜை செய்யும்போது அவர்கள் பக்திக்கும் இணங்கிய சிவபெருமான் அவர்கள் முன்தோன்றி நீங்கள் நன்றாக பூஜித்தீர்கள் எல்லா சம்பந்தமுள்ள உங்களுக்கு என்ன வேண்டும்? என்றார். அதற்கு நரநாராயணர் எங்கள் விஷயத்தில் தயை இருப்பின் யாவரும் தங்களைப் பூஜித்துக் கடைத்தேறும்படி இவ்விடத்தில் எழுந்தருளியிருக்க வேண்டும் என்று பிரார்த்தித்தார்கள். அதற்கிணங்கி சிவபெருமான் இமயமலையில் எப்போதும் பணியால் மூடப்பட்டிருக்கும் அவ்விடத்தில் கேதாரீஸ்வரர் என்ற திருநாமத்துடன் எழுந்த குளியிருந்தார். அவ்விடத்தில் தேவர்கள் முடியாது. இந்த பத்ரி காசிமரத்தில் இருப்பவர்கள் கேதாரீஸ்வரரைப் பூஜித்து சகல துக்கங்களும் அகலும் அந்த ÷க்ஷத்திரத்தில் ஒரு கங்கண ரூபம் இருக்கிறது. அதனைக் கையில் பூட்டியவனும் அதைத் தரிசித்தவனும் எல்லாப் பாவங்களையும் போக்கடிப்பான். பதிரீவனம் அடைந்து சிவதரிசனம் செய்பவன் முக்தனாவான், கேதார÷க்ஷத்திரத்தில் நரநாரயணரைச் கேதாரீஸ்வர, இஷ்ட காமியங்கள் கைகூடும். முனிவர்களே! கேதாரீஸ்வர ஜோதிலிங்க மகாத்மியத்தைச் சொன்னேன் இனி பீமசங்கர மகிமையைச் சொல்கிறேன் கேளுங்கள்.

46. பீமாசுரன் சங்கரர் கதை

காமரூப தேசத்தில் உலகிலுள்ளவர்களை ரட்சிக்க வேண்டி சகல சத்குணங்களையுமுடைய சிவபெருமானின் வருகையைக் கூறுகிறேன் கேளுங்கள்.
முன்னொரு காலத்தில் உலகத்தையெல்லாம் அழிக்கத் தக்க மகாபல பராக்கிரமசாலியான பீமன் என்ற அசுரன் ஒருவன் இருந்தான். அவன் கும்பகர்ணனுக்கும் கற்கடி என்பவளுக்கும் பிறந்து எல்லோருக்கும் துன்பமிழைத்துக் கொண்டு வளர்ந்து வந்தான். இராமர், முன்பு கும்பகர்ணனை வதைத்த பிறகு பீமன் என்பவன் அந்தக் கற்கடியை அழைத்துக் கொண்டு ஜெயகிரியை அடைந்து தாயாகிய கற்கடியைநோக்கி, அம்மா! என் தந்தை எங்கே? நீ ஒன்றியாக இருக்கக் காரணம் என்ன என்று கேட்டான்: அதற்கு அவள் மகனே! இராவணனுடைய தம்பியான கும்பகர்ணன் என்னும் உன் தந்தையை அயோத்தி மன்னனான இராமர் போர் முனையிலே கொன்றுவிட்டான்? உன் தந்தை முன்பொரு காலத்தில் தன் தமையனுடன் இந்தக் காமரூப தேசத்துக்கு வந்து என்னைக் கலந்தானேயன்றி நான் இலங்கையைக் கண்டதும் இல்லை என் தந்தையின் பெயர் கற்கடன் என் தாய் புஷ்கலி எனது முதற் கணவன் விராதன் அந்த விராதன் இராமனால் இறந்த பிறகு தாய் தந்தையரிடம் நான் இருக்கும்போது, அவர்கள் சுதீக்ஷணன் என்ற முனிவரைத் தின்னச் சொல்ல மகாபுண்ணியசாலியான அந்த முனிவர் அவ்விருவரையும் சாம்பலாக்கி விட்டார். நான் ஒன்றியாக இருந்தேன். அப்படியிருக்கும் போது உன் தந்தை என்னைக் கூடி இங்கேயே விட்டு விட்டுச் சென்று விட்டான், அதனால் நீ இங்கு தான் பிறந்தாய் உன்னைப் பார்த்துக் கொண்டு நான் வாழ்ந்து வருகிறேன்! என்றாள்.

இவ்விதமாகத் தாய் சொன்ன வார்த்தைகளைக் கேட்ட பீமாசுரன் என் தந்தையையும் விராதனையும் இராமன் கொன்றான். என் பாட்டனையும், பாட்டியையும் அந்த முனிவன் சாம்பலாக்கி விட்டான். எனக்குப் பெருத்த கஷ்டமாயிற்று. நான் கும்பகர்ணனுக்கு மகன் என்பது உண்மையாக இருந்தால் அந்த இராமனைக் கண்டுபிடித்து அவனைக் கொல்லாமல் விடமாட்டேன் என்று வீரவேசமாக முழக்கமிட்டு விட்டு பிரமதேவரைக் குறித்து கைகளை உயரத் தூக்கி ஒரு காலில் நின்று சூரியனைப் பார்த்து மனதில் தியானம் செய்து ஆயிரம் ஆண்டுகள் அருந்தவஞ் செய்தான். அப்போது அவனது சிரசிலிருந்து ஒரு பயங்கரமான தேஜஸ் கிளம்பி உலகைத் தகித்தது அதை சகிக்க முடியாத தேவர்கள் ஓடிப் பிரமதேவரிடம் சரண்புகுந்து கடவுளே! இராட்சதனுடைய தவதேஜஸ் உலகத்தையெல்லாம் துன்புறுத்துகிறது. அவன் எதைக் குறித்துத் தவஞ் செய்கிறானோ அதை நீங்கள் அவனுக்குக் கொடுக்க வேண்டும். அவ்வாறு நீங்கள் செய்யா விட்டால் நாங்கள் யாவருமே இறந்து விடுவோம்! என்றார்கள். அப்போது பிரமதேவர் அமரர்களின் சொல்லுக்கு இணங்கித் துஷ்டனான அந்தப் பீமாசுரன் முன்பு அன்னவா கனத்தோடு தோன்றி உன் தவத்துக்கு மெச்சினோம் நீ வேண்டுவது என்ன? என்று கேட்டார். அதற்கு பீமாசுரன் சிருஷ்டி கர்த்தாவே! எனக்கு அபரிமிதமான பலத்தைக் கொடுக்க வேண்டும் என்று சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்டான். பிரமதேவர் அந்த வரத்தைக் கொடுத்துவிட்டு அங்கிருந்து அந்தர்த்தானமானார். பீமாசுரன் தன் இருப்பிடம் சேர்ந்து தன் தாயைப் பார்த்து, அம்மா! என் பலத்தைப் பார்! தேவர்கள் அனைவரையும் நாசஞ் செய்கிறேன்! என்று சொல்லி, காமரூபம் தேசத்தை அடைந்து அங்கிருந்த பிரியதர்மன் என்ற அரசனைப் பிடித்து விலங்கிட்டு அவன் அரண்மனையிலிருந்த யானை, சேனை, சத்திரம் சாமரம் முதலிய தனங்களையெல்லாம் எடுத்துக் கொண்டு அந்த ராஜ்ஜியத்தைத் தனதாக்கிக் கொண்டான். உரிமை பறிபோன அரசனோ சிறைச்சாலையில் இருந்து கொண்டே பரம இரகசியமாகப் பார்த்திவ பூஜையைச்செய்து கொண்டும் கங்காதேவியைப் பலவாறு மானசீகமாகத் தியானித்துக் கொண்டும் இருந்தான். அப்படியே அவன் மனம் தியானத்தில் லயமாகிவிட்ட. அவனது பூஜையெல்லாம் சிவபெருமானுக்குப் பிரியமாயின. அவன் பஞ்சாக்ஷர மந்திரத்தைப் பிரணவத்தோடு உச்சரித்துக் கொண்டிருந்தான். அந்த வேந்தனுடைய மனைவியான தட்சிணை என்பவளும் பார்த்திவ பூஜை செய்து சிவத்தியானத்திலேயே வயித்திருந்தாள்.

அவர்கள் இருவரும் இவ்வாறு இருக்கும்போது பீமாசுரன் சகல உலகங்களையும் வென்றடக்கி புண்ணிய கர்மங்களையெல்லாம் நாசப்படுத்தி தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தி கொண்டே ஏகச்சக்ராதிபதியாகச் சர்வாதிகார வெறியோடு அரசாண்டு வந்தான், மக்கள் அனைவரும் மகாகோச நதி தீரத்தில் சிவபூஜையும் சிவத்தியானமும் செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் செய்யும் பூஜைக்கு மகிழ்ந்த சிவபெருமான் அவர்கள் முன்பு தோன்றி, உங்களுக்கு என்னவரம் வேண்டும்? என்று கேட்டார். அதற்கு அவர்கள் சர்வேஸ்வரா தங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை ஆயினும் எங்கள் கஷ்டத்தைச் சொல்லுகிறோம். பீமாசுரன் என்னும் பயங்கரமான அசுரன் ஒருவன் எங்களைத் துன்புறுத்துவதால் அவனை சம்ஹாரம் செய்து எங்களைக் காத்தருள வேண்டுகிறோம்! என்றார்கள். அதற்கு சாம்பமூர்த்தி, உங்கள் அரசன் மகாபக்தன்! அவன் சிறையில் இருக்கலாமா? நீங்கள் விரும்பியப்படி பீமனைச் சங்கரிக்கிறேன் என்றார். தேவர்கள் முனிவர்கள் அனைவரும் அவரைப் பணிந்து தமதிருப்பிடம் சென்றார்கள். அப்போது பிரிய தருமன் பார்த்திவ பூஜை செய்து வருவதை அறிந்த சில அரக்கர்கள் பீமாசுரனை அடைந்து சிறையிலிருக்கும் அரசன் உம் விஷயமாக ஏதோ ஓர் அபசாரம் செய்வதாகத் தெரிகிறது. ஆகவே செய்யவேண்டியதை விரைவில் செய்யுங்கள், என்றார்கள். பீமாசுரன் வெகுண்டான், பிரியதர்ம அரசனைக் சொல்ல வேண்டும் என்று உடைவாளை உருவிக்கொண்டு அரசனிடம் வந்து, என்ன செய்கிறாய்? உண்மையைச் சொல்லாவிட்டால் உன்னைக் கொன்று விடுவேன் என்றான். பிரியதர்ம அரசன் சத்தியவான் ஆகையால் அவன் வருவது வரட்டுமே என்று நான் சிவபூஜை செய்கிறேன். பரமதயாளனான பரமேஸ்வரன் இதில் இருக்கிறார்! என் பூஜைக்கு ஏற்ற பயனைத் தருவார், நான் சிவபெருமானை வணங்குவது வழக்கம் உனக்கு என்ன விருப்பமோ அதைச் செய்து கொள்ளலாம் என்றான். அதற்கு பீமாசுரன் நான் அந்தச் சங்கரனை அறிவேன். என் மூதாதையான இராவணன் அவனை கைலாயத்தோடு தூக்கி விட்டான். அவன் என்னை என்ன செய்து விடுவான்? அவனைத் துதித்தா நீ என்னை ஜெயிக்க முடியும்? இந்த லிங்கத்தை தொலைவில் எரிந்து விடு, அப்படிச் செய்யாவிட்டால் இதோ என் பராக்கிரமத்தைப் பார்! என்றான். அதற்கு அரசன் நான் சிவபூஜையை விட்டு விட்டாலும் தயாளரான சிவபெருமான் உன்னை விடமாட்டார் என்றான். பீமாசுரன் சிரித்தான் இந்த மண்ணல்ல தெய்வம், நானே தெய்வம் என்று கர்ஜித்தான். அதற்கு அரசன் அப்படிச் சொல்லிக் கொள்வது நீ ஒருவன் தான். நான் உன்னைத் தெய்வம் என்று சொல்லமாட்டேன் என்றான். உடனே பீமாசுரன் உன் கடவுள், உண்மையில் இருந்தால் தன் பலத்தை என்னிடம் காட்டட்டும் என்று கூறி தன் உடைவாளை எடுத்து அரசனை வெட்டுவதற்காகப் பாய்ந்தான் அதற்குள் அந்தப் பார்த்திவ லிங்கத்திலிருந்து சிவபெருமான் தோன்றி, நான் பீமேஸ்வரன் இந்த அரசனைக் காக்கவே இங்கு வந்தேன், உத்தமர்களை காப்பதே என் விரதம். ஆகவே இவனைக் காக்கிறேன்! என்று தம் பிநாகவில்லை வளைத்து அம்பு தொடுத்து பீமாசுரனின் உடைவாளை உடைத்தெறிந்தார் பீமாசுரன் திரிசூலத்தை வீசினான். அதையும் ஈஸ்வரன் நூறு துண்டாக்கினார். கத்தி, ஈட்டி, வேல், முதலியவற்றை வீச அவற்றையெல்லாம் பொடிபொடியாக்கினார் பரமன், உடனே அசுர வீரர்கள் அணி அணியாக வந்தனர். பிரதம கணங்கள் வரிசை  வரிசையாக வந்தனர். பெரும் போராட்டம் நிகழ்ந்தது உலகங்கள் நடுங்கின நட்சத்திரங்கள் உதிர்ந்தன. கடல்கள் கொந்தளித்தன. மலைகள் குலுங்கின தேவர்கள் நடுங்கினர். அப்போது நாரதர் அங்கு வந்து சிவ பெருமானை வணங்கி சம்போ மகாதேவா! தங்கள் கோபம் தணியட்டும் புல்லியின் மீது கோடாரியையா செலுத்தவேண்டும் இவனுக்காக இத்தனை பெரும்யுத்தம் எதற்கு? விரைவில் இவனையும் இவனது அசுரசேனைகளையும் அழிக்க தங்களால் இயலாதா? என்றார். உடனே சிவபெருமான் ஹுங்காரம் செய்ய அதுவே அஸ்திரமாகி பீமாசுரனையும் அவனது சேனைகளான அசுரப்படைகளையும் மயிற்பட்ட சருகுகள் போல்சாம்பலாக்கிவிட்டது சிவபெருமானது கோபாக்கினியால் வனங்கள் கருகினதேவர்கள் பெருமானிடம் சரண் புகுந்தார்கள் பிறகு சிவபெருமான் சாந்தமடைந்து, அவர்கள் வேண்டுதலுக்கு இரங்கி பீமாசங்கரர் என்ற திருப்பெயருடன் அங்கு எழுந்தருளியிருக்கிறார்.

47. பிரமன் நான்முகனான கதையும் காசியின் மகிமையும்

சிவ நேயர்களே! இப்போது நான் உங்களுக்குச் சகல பாபங்களையும் ஒழிக்கத் தக்க விஸ்வேஸ்வரலிங்க மகாத்மியத்தைச் சொல்லுகிறேன். பக்தியுடன் கேளுங்கள். கண்ணுக்குப் புலப்படுகிற(திரிஸ்யம்) இந்த பிரபஞ்சமானது உண்டாவதற்கு முன்னதாகவே அவிமுக்தமாகிய காசி÷க்ஷத்திரம் உண்டாகிவிட்டது. அந்தக் காசியின் பிரபாவம் காசி கண்டம் முதலிய நூல்களில் சொல்லப் பட்டிருக்கிறது இருப்பினும் நான் உங்களுக்குச் சுருக்கமாகச் சொல்லுகிறேன்.

நிர்குணமும் சத்ய ஞானரூபமும் அழிவில்லாமையும் சிதானந்தஸ்வரூபமும் நிர்விகாரமுமாக விளங்கும் தேஜஸிலிருந்து பிரகிருதியும் புருஷனும் தோன்றி, நம்மைப் படைத்தவன் யார்? நாம் செய்ய வேண்டுவது யாது? என்ற சந்தேகத்துடன் யோசித்துக் கொண்டிருக்கும் போது நிற்க்குணசொரூபியான பரமான்மாவிடமிருந்து ஓர் அசரீரி வாக்கு தவஞ் செய்து பிறகு படைப்புத் தொழிலைச் செய்ய வேண்டும் என்று கூறியது, அதைக் கேட்ட அந்தப் பிரகிருதி புருஷர்கள் எவ்விடத்திலிருந்து நாங்கள் தவஞ்செய்ய வேண்டும்? என்று கேட்க அப்போது அந்த வான்குரல் ஆகாயத்திலே பஞ்ச குரோசவிஸ்தீரணமும் தேஜோமயமான ஒளியும் மாடமாளிகைகளும் நிறைந்த அழகியதொரு நகரம் நிர்மாணிக்கப்பட்டு விளங்குகிறது. அங்கு போய்த் தவஞ் செய்யுங்கள்! என்று கூறியது. உடனே பிரகிருதி புருஷர்கள் இருவரும் அந்த ஆகாய நகரத்தை அடைந்தார்கள். புருஷனாகிய விஷ்ணு படைப்பை விரும்பிப் பலவித தவங்களை செய்து வந்தார் அநேக காலம் தவஞ் செய்ததனால் மகாத்மாவான விஷ்ணுவுக்கு தேகக்களைப்பாலும் உழைப்பாலும் உடலினின்று அதிகமாக வியர்வை உண்டாயிற்று அந்த வியர்வை நீர்பிரபஞ்ச முழுவதையும் வியாபித்தபடியால் பிரபஞ்சமெல்லாம் கண்ணுக்குப் புலப்படாததாயின. அதைக் கண்ட மகாவிஷ்ணு இதென்ன பெருவியப்பாக இருக்கிறதே! என்று சிரக்கம்பனஞ் செய்யும்போது சிவபெருமானுடைய காதிலிருந்து ஒருமணி அவர் எதிரில் விழுந்தது எந்த இடத்தில் அந்த மணி விழுந்ததோ அந்த இடத்திற்கு மணி கர்ணிகை என்று பெயர்.

விஷ்ணு வியர்வையினால் மூடப்பட்ட அந்த ஆகாய நகரம் சிவபெருமானின் திரிசூலத்தின் ஆதரவால் நிறுத்தப்பட்டிருந்தது அந்த இடத்திலேயே மகாவிஷ்ணு பிரகிருதி சகிதமாக சயனித்திருந்தார். இவ்விதம் மகாவிஷ்ணு யோக நித்திரையில் இருக்கும் போது உலகங்களுக்கு பிதாமகனான பிரம தேவர் விஷ்ணுவின் நாபிக்கமலத்திலிருந்து தோன்றினார் இவ்விதம் தோன்றிய பிரமதேவர் சிவ கட்டளையை ஏற்று உலக படைப்பைத் தொடங்கினார். சராசரரூபமாகப் படைக்கப்பட்ட அண்டம் முழுவதும் சிவபெருமானுடைய சுத்த தேஜஸே வியாபித்தது அது முதல் படைப்பானதுகிரமமாக நிகழலாயிற்று இவ்விதம் படைக்கப்பட்ட பிரமாண்டத்தின் பரிமாணம் ஐம்பது கோடி யோசனை விஸ்தீரணம் என்று முனிவர்களால் மதிப்பிடப்பட்டுள்ளது. ஜலத்திலிருந்த அந்தப் பிரமாண்டமானது ஜலத்தின் மீது கப்பல் போலவும் தயிரின் மேல் ஏடுபோலவும் அஷ்டதிக்கு கஜங்களால் தாங்கப்பட்டு நிலைத்து நின்றது அந்தப் பிரமாண்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு நடுவில் உள்ளது மத்தியலோகம் என்றும் மற்ற இரண்டு பாகங்களும் ஊர்த்துவலோகம் அதோலோகம், என்றும் சொல்லப்பட்டன மத்தியலோகம் பூலோகம் என்றும் அதோலோகம் அதலம், விதலம், சுதலம், தராதலம், ரஸாதலம், மஹாதலம், பாதலம், என்றும் சொல்லப்பட்டன. பூலோகத்தின் மேலேயுள்ள ஊர்த்துவலோகம், புவர்லோகம், ஸ்வர்லோகம், மஹாலோகம் ஜனலோகம் தபோலோகம், சத்திய லோகம் என்றும் சொல்லப்பட்டன பாதாள லோகங்கள் ஏழும் ஒன்றின் கீழ் ஒன்றாகவும் சுவர்க்கலோகங்கள் ஒன்றின் மேல் ஒன்றுமாக முறையே விளங்கும்.

முனிவர்களே, அவ்விதம் பிரிக்கப்பட்ட அவ்வுலகங்களின் பரப்பளவை விளக்கினால் இந்த நூல் பெருகி விடும் என்று சொல்லவில்லை பலநூல்களில் சொல்லப்பட்டுள்ளன புண்ணியஞ் செய்தவர்கள். தங்கள் புண்ணியங்களுக்கேற்ப ஸ்வர்க்க லோகங்களிலும் பாவஞ் செய்தவர்கள் தங்கள் பாவங்களுக்கு ஏற்ப அதோலோகங்களிலும் வசிப்பார்கள் இந்த பூலோகத்தில் ஏழு கடல்களும் ஏழு தீவுகள் மேருமுதலான குலபர்வதங்களும் கங்கை முதலான புண்ணிய நதிகளும் விசித்தரமான பல புண்ணிய வனங்களும் இருக்கின்றன. இதுவே படைப்புக் கிரமம், இனி பரப்பிரம ஸ்வரூபத்தைச் சொல்லுகிறேன்.

நிர்க்குணமான பரமான்மாவிற்கு க்ஷரம், அக்ஷரம், என்ற இரண்டு வகை உருவங்கள் இருக்கின்றன; காணக்கூடிய ஸ்தூலப் பிரபஞ்சம் க்ஷரரூபம் எனவும் காண்பதற்கு அரிய சூஷ்மப் பிரபஞ்சம் அக்ஷõரூபம் எனவும் அவ்விரண்டும் மணி ஒளி, பூமணம் கதிர்கரம் போல விளங்கும் என்றும் முனிவர்கள் கூறுவார்கள், நிர்க்குண, சகுண, லக்ஷணங்களை உண்மையை உணர்ந்த தத்துவ ஞானிகளே உணர்வார்கள் சகுண உபாசனையை முன்னே செய்து அதன் பயனாலேயே நிர்க்குண உபாசனை செய்யத் தக்கது. சகுண ஞானமான அபரஞானம் உண்டான பிறகு நிர்க்குண ஞானமான பரஞானம் தானாகவே வளர்ந்து விடும். நிர்குணப் பரஞானம் உண்டாகும் வரையில் சகுணோபாசனையைச் செய்தேயாக வேண்டும். சிவஞானம் உற்றபோதே அகங்காரங்கள் விலகும். அவை அகன்றபொழுதே தேகவாஞ்சை இல்லாது ஒழியும் அது ஒழியவே எங்கும் சிவமாகத் தோன்ற பாபக்கிருத்தியாகிதமாய் சிவோஹம்பாவனை உண்டாகும். அது கைகூடியவர்களுக்கு விதி விலக்குகள் இல்லை.

சிவபெருமான் கர்மபக்தர்களான ஜீவர்கள் எவ்வாறு கிருதார்த்தர்களாகித் தம்மைத் தரிசித்து உய்வார்கள் என்று கருதி அந்த ஆகாய நகரத்தை தம் திரிசூலத்தினின்றும் விடுத்தார். சுபத்தை கொடுப்பதும் ஸம்சார கர்மங்களை நசிக்கச் செய்வதும் அவிமுக்தமான லிங்கத்தையுடையதுமான அந்த நகரம் மானுடர்களால் எப்போதும் விடப்படக்கூடாது என்று திருவுளங் கொண்ட சிவபெருமானால் தம் திரிசூலத்திலிருந்து இந்த மத்திய லோகத்தில் நிறுத்தப்பட்டது பிரமாவின் ஒரு பகல் கழிந்த பிரம கற்ப காலத்தில் உண்டாகும் பிரளய காலத்தில் சிவபெருமான் தம் திரிசூலத்தின் மேல் வைத்து, இந்நகரத்தை காத்து மீண்டும் படைப்புக் கிரமத்தில் திரிசூலத்தினின்றும் விடுவார். கர்மங்களை நாசஞ் செய்வதால் இதற்குக் காசி என்று பெயர் (கர்மணாம் கர்க்ஷணாத் காசி) அவிமுக்த லிங்கமானது காசி ÷க்ஷத்திரத்திலிருந்து மகாபாவிகளுக்கும் மோட்சானந்தத்தை அடையச் செய்கிறது. மாதவர்களே! மற்ற புண்ணிய ÷க்ஷத்திரங்களில் எல்லாம் சாரூப்ய (இறைவனுருப் பெறும்) முக்தியும், காசியில் மட்டுமே சாயுஜ்யம்(இறைவனோடு ஒன்றிப்பு) என்னும் உத்தம முக்தியும் பெறப்படும். பஞ்சக்குரோச பரிமாணமுடையதும் கோடி பிரமஹத்திகளைப் போக்கடிப்பதுமான இந்த காசி ÷க்ஷத்திரம் கதியில்லாதவர்களுக்கெல்லாம் கதியாக அமைந்திருக்கிறது. தேவர்களும் காசிமாநகரிலே மடிய விரும்புவார்கள். பிரம விஷ்ணுக்கள் சித்த வித்யாதரர் முனிவர் மனிதர்கள் முதலான யாவரும் விரும்பி வணங்கத்தக்கதே காசித்தலமாகும் அதன் சிறப்பை நூறு ஆண்டுகள் சொன்னாலும் சொல்ல முடியாது. ஆயினும் எனக்குத் தெரிந்த வரையில் சொல்லுகிறேன்.

இச்சையால் சகுணரும் சுயமாக நிர்க்குணராயுமுள்ள சிவபெருமான் ஒருசமயம் இந்த காசிக்கு வந்து பாவங்களைப் பரிகரிக்கத்தக்க தன் ஸ்வரூபமான அவிமுக்த லிங்கத்தை யாவருக்கும் காண்பித்து அந்த அவிமுக்த மகாத்மியத்தைச் சொன்னார். அதனை விவரமாகச் சொல்ல என்னால் இயலாது. பிரமனே அநேக கோடி வருஷங்கள் சொல்வதானாலும் சொல்லி முடியாது. அவிமுக்த ÷க்ஷத்திர அதிபதி பார்வதிதேவி சமேதராக வந்த சிவபெருமானை தரிசித்து அநேகம் ஸ்தோத்திரங்களுடன் நமஸ்காரஞ் செய்து எம் பெருமானே! நான் உன் அடிமை என்னிடம் தயை வைக்கவேண்டும் உலகிற்கு நலம் செய்யும் காரணமாகத் தாங்கள் இங்கு எழுந்தருளியிருக்க வேண்டும். என்று பிரார்த்தனை செய்து சிவபெருமானின் திருவடிகளைப் பற்றி கண்களில் ஆனந்த பாஷ்பம் சொரிய தேவதேவரே! இந்த நகரத்தை ராஜதானியாக வைத்துக் கொள்ள வேண்டும். எக்காரணத்தாலும் எக்காலத்திலும் இந்த நகரத்தை நீங்காது இருந்து எங்களுக்குத் தரிசனம் அளித்து எங்களைக் கிருதார்த்தர்களாக்க வேண்டும். இத்தலத்தில் இறங்கும் எல்லாப் பிராணிகளையும் முக்தியடையச் செய்ய வேண்டும்! என்று பிரார்த்தித்தான். அதற்கிணங்கச் சாம்பமூர்த்தி தன் பரிவாரங்களுடன் லோகோபகார நிமித்தமாக அங்கேயே கோயில் கொண்டருளினார்அவர் தம் பிரமகபாலத்தை அந்தக் காசியில் பிரதிஷ்டை செய்ய வந்தவராதலின், அவ்வரசனின் வேண்டுகோளுக்கு இணங்க தாம் கருதி வந்தபடியே அவ்விடத்தில் வசித்திருக்க உடன்பட்டார்.

இவ்வாறு சூதமுனிவர் சொன்னதும், நைமிசாரண்ய முனிவர்கள், அவரை நோக்கி பூஜ்யரே, சிவபெருமானிடத்தில் பிரம்ம கபாலம் எப்படி வந்தது? அதன் வரலாற்றையுஞ் சொல்ல வேண்டும் என்று கேட்க, சூத புராணிகர் சொல்லலானார்.

மாதவர்களே! நீங்கள் மிகவும் நல்ல விஷயத்தையே கேட்டீர்கள் என் குருநாதரான வியாச மகரிஷி எனக்கு இந்த விஷயத்தைப் பற்றிக் கூறியிருக்கிறார். அவர் சொன்னதையே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். பூர்வத்தில் ஒரு காலத்தில் சிவபெருமான் உலக÷க்ஷமங்களை விசாரிக்கத் திருவுள்ளம் கொண்டார். எனவே, அவர் சகல உலகங்களிலும் சஞ்சரித்துக் கொண்டு பிரமலோகத்தையடைய, பிரமதேவர் அவரை எதிர் கொண்டு வரவேற்று அர்க்கிய பாத்திய ஆசமனாதிகளால் பூஜித்து தம்முடைய நான்கு திருமுகங்களாலும் துதித்தார். அப்போது அவரது ஐந்தாவதாகிய ஒருமுகம் சிவபெருமானை குறை கூற அதைக் கேட்ட சிவபெருமான் பிரமனுடைய நான்கு முகங்களும் துதித்ததற்காக மகிழ்ந்து ஐந்தாவது முகம் செய்த தூஷணைக்கு விசனமடைந்து, ஆஹா! இந்த துஷ்டமுகத்தை நிவர்த்திக்கவேண்டும் என்று பாம்பு கடித்த விரலை அறுத்தெறிவதால் அந்த விஷவேகம் தீர்ந்து விடுவதுபோல், முழுவதும் நற்குணமுடைய பிரமதேவனது ஐந்தாவது முகம் மட்டுமே தீச்செயல் புரிந்ததால் அம்முகத்தை நீக்குவதால் அவன் முற்றிலும் நற்குணம் உடையவனாவான் என்று கருதி பிரமதேவனின் நலனுக்காகவே அதை அகற்றத் தீர்மானித்து, தம் நெற்றி விழியில் அக்னிச் சுவாலை தோன்ற பிரமனை நெருங்கி, அவனது ஐந்தாவது சிரத்தைத் தம் திருவிரலின் நகத்தால் கொய்தார். அந்தப் பிரமசிரமானது சிவபெருமானைப் பின் தொடர்ந்தது. அவர் காசியையடைந்தபோது அது அவரை விட்டுவிலகியது இந்த இரண்டு காரணங்களினால் சிவபெருமான் காசியில் அமர்ந்தார்.

இவ்வாறு சூதமுனிவர் சொன்னதும் சவுனகாதி முனிவர்கள் அவரை நோக்கி சுவாமி! தாங்கள் சொல்லி வந்த விஷயங்களில் எங்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதாவது சர்வலோகங்களுக்கும் பிதாமகனான பிரமதேவர் உலகத் தலைவரான சிவபெருமான் தம் இருக்கைக்கு வந்ததைக் கண்டு அவரை உபசரித்தார் என்றீர்கள் பிரமனோ மகாசாந்த சீலர் அப்படியிருந்தும் அவர் தமது நான்கு வாயினாலும் துதித்து ஐந்தாவதான ஒரு வாயினால் மட்டும் சிவபெருமானைத் தூஷிக்கக் காரணம் என்ன? இந்தச் சந்தேகம் நீங்க, அருள் செய்ய வேண்டும்? என்றார்கள்.

சூதபுராணிகர் கூறலானார்

முனிவர்களே! பிருமதேவர் முன்னொரு காலத்தில் தான் சிருஷ்டி செய்த சரஸ்வதியை நோக்கி; அவளது பேரழகு காரணமாக, நீ என்னை அணையவேண்டும். நீயே என் மனைவி நானே உன் கணவன்! என்று சொன்னார். அதற்கு கலைமகளான சரஸ்வதி இது என்ன விந்தை நீயே என்னை படைத்து விட்டு நீயே என்னை மணப்பதாகக் கூறுவது தகுமா, தகுமமா? என்று நிராகரித்து, மனந்தாளாமல், புத்திரி என்றும் பாராமல் தகாத வார்த்தைகளைக் கூறிய உன் ஒரு வாயானது. இப்படியே துர்ப்பாஷைகளையே பேசிக் கொண்டிருந்து பின் ஒரு காலத்தில் சிவபெருமானால் தண்டனையடையட்டும் என்று சாபமிட்டாள். அந்தச் சாபத்தாலேயே சிவபெருமானை மற்ற முகங்கள் துதிக்க அந்தச் சிரம் மட்டுமே அவரை நிந்தித்து அவரால் அறுத்து எறியப்பட்டது!

ஸிவோ பிஸ்மரணே நைவ பஜநேந பரஸ்யச
பாபந் தூரீகரோதீ ஹ ஸ்வயந் தூரீக்ருதம் ந ஹி
தத்காரண ஞ்சஸ்ரூயதாம் ருஷய கதயாம்யஹம்
ஸ்ரேஷ்ட ஸ்சாசரிதம் யச்சததே வசநர புந:
கரோதி சரதியச்ச ப்ரமாண ரக்ஷணாயவை
ஈஸ்வரஸ் யத்தாலக்நம் பாதகம் கிம் நரேண ஹி
ஸிவஸ்ய தீர்த்த ஸம்யோகாச் சிரஸ்ச தூரத: ஸ்திதம்
தஸ்மாத் தீர்த்தவரம் ஹ்யே தந்மஹாபாதக நாஸநம்
இத்யேவம் ஜ்ஞாபிதம் லோகே மாஹாத்ம்யம் தீர்த்த ஸம்பவம்

அதவா ஈஸ்வரஸ்யேச்சாம் கஸ்சஜாநாதி சேஷ்டிதம்
க்வாநங்கத ஹனஞ்சைவ க்வாங்கேயுவதி தாரணம்
கண்டே விஷ்ந்த்ருதம்யேன ம்ருத்யுஞ்ஜய உதாஹ்ருத:
திகம்பரஸ் ஸ்வயஞ்சைவ பக்தே ப்யோஹ்ய சலாம் ஸ்ரியம்
ஸ்வலை ந்யஞ்ச பிஸாசாஸ்ச பக்தநாஞ்ச சதுர்விதம்
ஸ்வாங்கேசருண்டமாலாவை பக்தாநாம் மௌக்திகாநிச
சிதாபஸ்ம நிஜஸ்யைவ பக்தே பயஸ் சந்தனந்ததேத்
ஸ்வவாஹாநம் வ்ருஷஸ்சைவ பக்தாநாம் ஹஸ்திகாநத
ஸ்வவாத்யஞ்சைவ கல்ஹாத பக்தநாஞ்சான காநத
ஸ்வஸிரஸி ஜடாதிவ்யா பக்தாநாம் முகுடாதிகம்
ஸ்வபூஷணஞ்ச ஸர்பாதி பக்தாநாம் குண்டலாதிகம்
ஸ்வஸ்ய வஸ்த்ரஞ்ச கர்மாதி பக்தேப்யஸ்ஸுந்தராம்பரம்
வயஸ்ந்ததாதிசா ந்யச்ச பக்தநாஞ்சாந்ய தேவச
யதாபிலாஷம் பக்தேட்ய ஸ்ஸங்கரஸ் ஸம்ப்யச்சதி
தஸ்மாத்த சேஷ்டிதம் நைவஞ்ஞாதும் ஸக்யம்முநீஸ்வரா;

சிவபெருமான் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் தன்னை தோத்திரஞ் செய்தவர்களுக்கும் பாபத்தை நீக்கும் வன்மையை உடையவராக இருக்கும்போது தான் பிரமன் தலையைக் கொய்த தோஷத்தை நிவர்த்தித்துக் கொள்ளச் சக்தியின்றிப் போகுமா? இல்லை ஆயினும் அவ்வாறு நடித்துக்காட்டிய காரணத்தையும் சொல்லுகிறேன் கேளுங்கள்.

உலக சிரேஷ்டன் செய்த காரியத்தைப் பிறர் நற்கருமம் என்று அங்கீகரிப்பது பிரமாண பூர்வமாகும். ஆகவே சிவபெருமான் தான் பிரமச் சிரச்சேதம் செய்த காலத்தில் அக்கபாலம் ஒட்டிக் கொண்டதேயென்று தீர்த்த யாத்திரை செய்து பிரம கபாலத்தை விலக்கினார். இது உலகினருக்காகச் செய்த நடிப்பு! இதனால், காசி ÷க்ஷத்திரம் பாபங்கள் அனைத்தையும் போக்கடிக்கத் தக்க உத்தம ÷க்ஷத்திரமாகும். இந்தக் கபாலம் விழுந்த இடம் கபாலமோசன தீர்த்தம் எனப்படும். நிக்ரகா நிக்கிரக சமர்த்தராய்ச் சகல பிரமாண்டங்களையும் சிருஷ்டித்துக்காத்து சங்கரிக்கும் சிவபெருமானின் சங்கற்பமும் நடக்கையும் யாவன் அறியவல்லவன்? அவர் செய்த செயல்கள் அநேகம்! மன்மதனைத் தகனஞ் செய்தார். எனினும் தனது உடலிலேயே வாம பரகத்தில் பார்வதிதேவியை அமர்த்தியிருப்பது எங்கே? கண்டத்திலே விஷத்தைத் தரித்திருந்தும் மிருத்யுஞ்சயராய் இருப்பது எங்கே? தான் பிட்சை ஏற்கும் திகம்பரரேயாயினும் தன்னை அடைந்தோருக்கு சகல ஐஸ்வரியங்களையும் அநுகிரகிப்பது எங்கே? தான் பைசாசங்களை சைன்னியமாக வைத்துக் கொண்டு இருந்தும் தன்னை அண்டியவர்களுக்கு ரத, கஜ, துரகபதாதிகள், என்ற சதுரங்க சேனையை அனுக்கிரஹிப்பது எங்கே? தன் உடலில் கபாலமாலை அணிந்திருந்தும் தன் பக்தர்களுக்கு முத்து பவளம் முதலிய மாலைகளைக் கொடுக்கிறார். தான் மயான சாம்பலைப் பூசியிருந்தும் தன் பக்தர்களுக்கு சந்தனம் முதலிய பரிமள சுகந்தத்தைக் கொடுக்கிறார். தான் எருதை வாகனமாக கொண்டிருந்தும் தன்னை துதிப்பவர்க்கும் தனக்கு தொண்டு செய்வோருக்கும் யானை, குதிரை முதலிய வாகனங்களைக் கொடுக்கிறார். தான் சர்ப்பாபரணங்களை அணிந்திருந்தும் பக்தர்களுக்கு மகர குண்டலாதி ஆபரணங்களைக் கொடுக்கிறார். தான் ஜடாதரராக இருந்தும் தம் அன்பர்களுக்குக்கிரீடம் முதலான சகலபொருட்களையும் கொடுக்கிறார். தான் யானைத்தோலை அணிந்திருந்தும் பக்தர்களுக்கு சீனி சீனாம்பரங்களை உதவுகிறார். இவையே அன்றித் தன்னை ஆஸ்ரயித்தவர்களுக்கு அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப, இகபர போகங்களை கொடுக்கிறார். ஆகையால் அவர் மகிமைகளைத் தெரிந்து கொள்ள ஒருவருக்கும் சக்தி கிடையாது இந்தப் பஞ்சக்குரோச விஸ்தீரணமுடைய காசி ÷க்ஷத்திரத்தைவிட திரிலோகங்களிலும் சிறந்த ÷க்ஷத்திரம் ஒன்றும் இல்லை. அத்தகைய திருத்தலமே இல்லாவிட்டால் சிவபெருமானே அங்கு எந்த காலத்திலும் எழுந்தருளியிருந்து, அங்கே மடிபவர்களின் செவிகளில் தாரக மந்திரோ பதேசம் செய்து, அவர்களுக்கு முக்தியளிக்க முடியுமா? விஸ்வேஸ்வரலிங்க மூர்த்தமாகச் சிவபெருமான் எப்பொழுதிலிருந்து காசி÷க்ஷத்திரத்தில் கோயில் கொண்டிருக்கிறாரோ அது முதல் காசி÷க்ஷத்திரம் சிறப்புடையதாயிற்று. இந்தக் காட்சி மகத்துவத்தைக் கேட்பவர்கள், சகலவித சாம்ராஜ்யங்களையும் அடைவார்கள்!

48. பார்வதியின் கேள்வியும் காசி ÷க்ஷத்திரத்தின் ரகசியங்களும்

சிவஞானச் செம்மலே! காசி நகரமே புண்ணிய ÷க்ஷத்திரங்களில் சிறந்தது என்று சொன்னீர்கள். அதை விளக்கமாக எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று நைமிசாரண்ய ரிஷிகள் வேண்டினார்கள். சூத முனிவர் சொல்லத் துவங்கினார். முனிவர்களே! காசி மஹாத்மியத்தையும் விஸ்வேஸ்வர லிங்கம் மகாத்மியத்தையும் உங்களுக்குச் சுருக்கமாகவே சொல்லுகிறேன். ஒரு காலத்தில் பார்வதிதேவி சிவபெருமானை நோக்கி, உலகிலுள்ளவர்களுக்கு இந்தக் காசி÷க்ஷத்திர மகிமையைத் தெரிவிப்பதற்காக நாதா! இந்தக் காசி÷க்ஷத்திர பிரபாவத்தைத் தயவு செய்து விபரமாகச் சொல்ல வேண்டும் என்று கேட்க சிவபெருமான் உமாதேவியாரின் விருப்பத்திற்கிணங்க, உலகத்தாருக்கு எல்லாம் நன்றாகத் தெரிவதற்காகவும் காசி மகாத்மியத்தைத் திருவாய் மலர்ந்தருள்வரானார். பார்வதி! நீ உலகம் சுகம் பெறவேண்டி, இந்த விஷயத்தை விருப்பத்துடன் கேட்டுவிட்டாய், நீ விரும்பியவாறு நான் உனக்குக் காசியின் சிறப்பைச் சொல்லுகிறேன் கேள்.

இந்த ÷க்ஷத்திரம் மிகவும் இரகசியமானது, எனக்குப் பிரியமானது, சகல பிராணிகளுக்கும் சர்வ காலத்திலும் மோட்சத்தையளிக்க எளிதாயுமுள்ளது. இதில் இருந்து யோகசித்தி அடைந்த புண்ணியசாலிகள் என்னை தியானித்துப் பூஜை விரதம் தவம் முதலயிவற்றைச் செய்து என் சின்னங்களான பஸ்ம உருத்திராட்சங்களைத் தரித்து என் சிவலோகத்தையடைய விரும்பி உயர்ந்ததான சிவயோகத்தை அப்பியாசித்து பஞ்சேந்திரியங்களை ஜெயித்து, இங்கே வசித்திருப்பார்கள். அநேக விதமான மரங்கள் பறவைகள் முதலியவற்றாலும் தாமரை, கருநெய்தல் முதலிய மலர்கள் நிறைந்த தடாகங்களாலும் அலங்கரிக்கப் பெற்று அப்ஸரசுகள் கந்தர்வர்கள் முதலியவர்களால் எப்போதும் சேவிக்கப்படும். இந்த முக்தி ÷க்ஷத்திரம் எனக்கு எப்போதும் வாசஸ்தானமாக இருக்கும்படிச் சம்பவித்த காரணத்தைச் சொல்லுகிறேன் கேள் என்னிடம் அன்புடையவனும் மனம் உடையவனும் இராகம் குரோதம் பயம் முதலியவற்றை விட்டவனும் சுகதுக்க லாப நஷ்டம் முதலியன ஒழிந்த சம மதிப்புடையவனும் கோபமற்றவனும் சிவஞானமுடையவனும் சிவதத்துவத்தை விசாரிப்பவனுமான அத்தகையவனுக்கும் எனக்கும் பேதமில்லை! அவனே சகல தீர்த்தங்களுக்கும் ஒப்பாவான் அத்தகையவனுடைய தரிசனத்தை நானும் விஷ்ணுவும் பிரமனும் மற்ற தேவர்களும் விரும்புவோம். ஏனென்றால், அத்தன்மையான ஒருவன் உயிர்விடுவோன் சமீபத்தில் இருந்தால் அவனைக்கண்டு உயிர் விட்டவன் மோட்சம் அடைவான். அவனை முக்தன் என்று சொல்ல வேண்டும். அவனே ஜீவன் முக்தன் அவனுக்கு விதிவிலக்குகள் கிடையாது.

இங்கு ஒரு விசேஷதீர்த்தம் உள்ளது. அதையும் சொல்லுகிறேன். பார்வதி பிரம க்ஷத்திரிய வைசிய சூத்திரர்களும் பிரமசரிய கிரஹஸ்த வானப்பிரஸ்த சந்நியாசிகளும், பால, குமார யவுவனர்களும் அபரிசுத்தனும் குழந்தையும் கன்னிகையும், பதிதையும், விதவையும், மலடியும் ரஜோ(சூத) தோஷமுடையவளும், பிரசவித்து இறந்தவளும் ஜகாகன் மாது சம்ஸ்காரங்கள் இல்லாதவளும் பரிசுத்தமானவளும் பாபியும் கர்மவசத்தையுடைய அஞ்ஞானியுமாயினும் இந்தக் காசி÷க்ஷத்திரத்தில் மடிந்தால் சந்தேகமின்றி மோட்சமடைவார்கள். சுவேதசம் அண்டஜம் உத்பீஜம் சராயுசமாயினும் இங்கேயே இறந்த பட்சத்தில் அவையெல்லாம் மோட்சம் அடையும். கர்வ சத்வவனாயினும் ஞானமில்லாதவனாயினும் பாபியாயினும் சந்தேகமின்றி மோட்சம் அடைவான், ஞானம், தியானம், மோட்சம் யோகம் இல்லாதவர்களாயினும் தடையின்றி மோட்சம் அடைவார்கள். முன்பு நான் சொன்ன உயர் குணங்களையுடைய சிவஞானியர் கணக்கிலாதவர்கள் இங்கு வசிப்பதனால் இந்த ÷க்ஷத்திரம் எனக்கு எல்லா ÷க்ஷத்திரங்களையும் விடச் சிறந்ததாக இருக்கிறது. இந்த விஷயம் மிகவும் அந்தரங்கமானது, இந்த விபரத்தைச் சித்தியோகிகள் அறிவார்களேயல்லாமல் பிறர் அறியார்கள். இங்கு நகரமே யாவருக்கும் முக்தியை கொடுக்கத்தக்கது. இந்த நகரத்துக்கு அவிமுக்தம் என்னும் பெயர் உண்டு. (விமுக்தம்-விடத்தக்கது. அவிமுக்தம்-விடத்தகாதது)

காசிநகரம் ஒரு காலத்திலும் என்னால் நீங்கத்தகாதது என்றும் அந்நகரத்தையடைந்தவர்களை தன் மெய்யன்பர் போலப் பாதுகாத்து முக்தியளிக்கத்தக்கதன்றி விடத்தகாதது என்றும் பொருள்படும், நைமிசாரணியம், குரு÷க்ஷத்திரம், கங்காத்துவாரம் புஷ்கரம் முதலிய தீர்த்தங்களில் ஸ்நானம் செய்து. சேவித்து வருவதால் மோட்சம் உண்டாகலாமன்றி, இறந்தால் மோட்சம் அடைய மாட்டார்கள். இந்தக் காசிப்பதியிலோ இறப்பதனாலேயே மோட்சம் உண்டாவதால் எல்லா தலங்களையும்விட இந்தத் தலத்தில் நான் நீங்காது வசிப்பதால் இது பிரயாகையைக் காட்டிலும் சிறந்ததாகும். இந்த காசி நகரமானது ÷க்ஷத்திர சிறப்பு, தீர்த்தச் சிறப்பு, மூர்த்தி மகிமை என்ற மூவகை சிறப்புக்களையும் தன்னகத்தில் கொண்டது. இந்த நகரத்தில் வசிப்பவர்கள். அன்னம், பானம் நித்திரை ஸ்திரீபோகம் முதலிய யாவும் குறைவின்றி செய்து கொண்டிருந்து உயிரை விட்டாலும் மோட்சம் அடைவார்கள். அநேகம் பாபங்களைச் செய்து, அந்தப் பாப பலத்தால் பைசாசத்துவம் அடைந்தாலும் இந்தக் காசிப்பதியில் வசிப்பது பல கோடிப் புண்ணிய காரியங்களைச் செய்து சுவர்க்கத்தில் வசிப்பதை விட உயர்வானதாகும். இந்தத் தலத்தில் எம்மை நோக்கித் தவஞ்செய்து கொண்டிருக்கும் மகாநுபாவர்கள் அநேகர் வசிக்கின்றனர். எனவே மற்ற ஸ்தலங்களைவிட இந்த நகரத்தில் சுலபமாக உயர்ந்த பதவி கிடைத்து விடுகிறது. எந்தெந்தப் பயன்களையும் சாயுஜ்ய பதவியையும் யான் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். குபேரன் என்னிடத்தில் சகல கிரியைகளையும் சமர்ப்பித்து இந்தத் தலத்தில் என்னை சேவிப்பதால் காணாபத்தியம் அடைந்திருக்கிறான். பராசரன் என்ற யோகியும் வேதவியாசனும் வேதங்களைப் பாகுபடுத்திப் பிரித்து எனக்குப் பக்தர்களாக இங்கு இருக்கிறார்கள். திருமாலும் திருமகளும் பிரமனும் அநேக தேவரிஷிகளும் அஷ்டவசுக்களும் சூரியனும் இந்திரனும் ஏனைய தேவர்களும் யாவரும் என்னை உபாசனை செய்து கொண்டே இங்கு இருக்கிறார்கள். இன்னும் சிவயோகிகள் தமது ஸ்வரூபத்தைப் பிறருக்குக் காட்டாமல் என்னை இவ்விடத்தில் சேவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகையால் ஐம்புலன்வழி மனதைச் செலுத்துபவனாயினும், தர்மங்களைச் சிதைத்தவனாயினும் இந்தத் தலத்தில் மாண்டவன் மீண்டும் தாயின் கர்ப்பத்தை அடையமாட்டான். ஐம்புலன்களை வென்றவர்களும் ஞானிகளும் உயர்பதவியுற்றவர்களும் என்னை இவ்விடத்தில் சேவித்துக் கொண்டிருப்பதால் இவ்விடத்தில் உயிர் நீங்கியவன் யோகபுருஷனாலும் அடையமுடியாத உத்தமப்பதவியை அடைவான்.

இந்தக் காசி ÷க்ஷத்திரத்தில் பிரமதேவனால் பிரதிஷ்டை செய்யப்பெற்ற கோப்பிரேக்ஷகம் ஒன்று உள்ளது. அது நம் கைலாயத்திற்கு சமானமானது இந்தக் கோப்பிரேஷகேச் சுரத்தைத் தரிசித்தவர்கள் துர்க்கதியை அடையமாட்டார்கள். கபிலாஹ்ர தம் என்ற பெயரால் வேறொரு ÷க்ஷத்திரமும் இங்கு உள்ளது. அதைச் சேவித்தாலும் பாபம் ஒழிந்து சிவலோகத்தையடைவார்கள் இதை என் ஸ்வரூபமாகப் பிரமன் படைத்தான் நீயும் இது என் ஸ்வரூமாக விளங்குவதைப் பார். இங்கு தேவர்கள் அனைவரும் என்னைப் பலவிதமாக பிரார்த்தித்ததால் யான் லிங்க ரூபமடையக் கண்ட பிரமன் என்னைப் பிரதிஷ்டை செய்து பூஜிக்க யோசித்துக் கொண்டிருக்கும்போது மகாவிஷ்ணு அந்தப் பிரமனின் கையிலிருந்த சிவலிங்கக் குறியைத் தானே! வாங்கிப்பிரதிஷ்டை செய்து முறையாக அருச்சனை செய்து முடித்தார். அதைக் கண்டதும் பிரமன் விஷ்ணுவே! நான் பிரதிஷ்டை செய்யவைத்திருந்த சிவலிங்கத்தை நீ ஏன் பிரதிஷ்டை செய்தாய்? என்று கேட்க, அதற்குத் திருமால், பிரமனே! யான் சிவப்ரீதிமிக்கவன் நானே அதைப் பிரதிஷ்டை செய்தேனாயினும் அது உன் பெயராலேயே விளங்குக! என்று கூறினார். எனவே, அக்காரணத்தால் கபிலாஹ்ரதத்தில் இருக்கும் சிவலிங்கத்திற்கு ஹிரண்யகர்ப்பேசன் என்ற பெயர் வழங்குகிறது. இந்தக் காரணத்தாலும் யான் இங்கே இருக்கலானேன். ஆகையால் இந்த ஹிரண்யகர்ப்பேஸ்வரரைத் தரிசித்தவுடன் என்சிவலோகம் கிடைக்கும். மீண்டும் பிரமன் தன்னால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக ஒரு சிவலிங்கம் இருக்க வேண்டும் என்று வேறு ஒரு சிவலிங்க ஸ்தாபனஞ் செய்தான். அதிலும் நான் லீனமாக இருந்ததால் லீனேஸ்வரன் என்ற பெயரையடைந்தது இங்கே மாண்டவன் மீண்டும் திரும்பாத மோக்ஷத்தையடைவான்.

பார்வதி! இன்னும் சிறிது தூரத்தில் பூர்வத்தில் தேவர்கள் அனைவரையும் துன்புறுத்தி வந்த அசுரேசன் பெரும் புலியின் வடிவைக் கொண்டு அமரர்களை அழைத்தான். அவர்கள் என்னைப்பிரார்த்திக்க நான் மனமிரங்கி அவனைச் சங்கரித்து மோக்ஷமளித்து தேவர்கள் வேண்டியவாறு வியாக்கிரேசுவரன் எனவும் எழுந்தருளியிருக்கிறேன். உன் தந்தையான் பர்வதராஜன் இது எனக்கு இன்பமுள்ள ÷க்ஷத்திரம் என்பதை உணர்ந்து இங்கு வந்து ஒரு சிவலிங்கத்தைத் தன் பெயரால் பிரதிஷ்டை செய்திருக்கிறான், அதுவே சயிலேஸ்வரலிங்கம். அதையும் பார் இந்தப் புண்ணிய÷க்ஷத்திரத்தை அலங்காரம் செய்து கொண்டு கங்கைநதி விளங்குகிறது. வருணா, அசி என்ற நதிகள் இரண்டும் கலக்கின்ற காரணத்தால் இந்த ÷க்ஷத்திரத்துக்கு வாரணாசி என்றும் பெயர் வழங்கும் அவ்விரு நதிகளும் சங்கமமாகும் இடத்தில் பிரமன் ஒரு சிவலிங்கப் பிரதிஷ்டை செய்திருக்கிறான். அதற்கு சங்கமேஸ்வரன் என்று பெயர். மேலும் மத்தியமேஸ்வரர் கிருத்திவாகேஸ்வரர் சுக்கிரன் பூஜித்த சுக்கிரேஸ்வரர் இந்திராதி தேவர்களால் ஸ்தாபிக்கப்பட்டு அவரவர் பெயரால் விளங்கும் இலிங்கங்கள் பாபஹாரமான சிவலிங்கங்களையும் பார்! இந்த இலிங்கங்களேயல்லாமல் இன்னும் சில அந்தரங்கமான விஷயங்களையும் சொல்லுகிறேன் கேள்.

இந்தக் காசிப்பதி நாற்புறத்திலும் ஐந்து குரோச விஸ்தீரண முடையதாக இருக்கிறது. இந்தப் பஞ்சக் குரோசப்பதியின் எல்லைக்குள் எங்கேயாயினும் இறக்க நேரிட்டால் மோக்ஷம் உண்டாகும். பண்டிதன், வேத அத்தியயனமுடையவன், சண்டாளன், பதிதன், சன்னியாசி, முதலிய யாவராயினும் இங்கு இறந்தால் அவர்கள் மோக்ஷம் அடைவரார்கள்! என்று சிவபெருமான் கூறினார். அவ்வார்த்தைகளைக் கேட்டதும் பார்வதிதேவி, சுவாமி! நீங்கள் சொன்ன விஷயமானது எனக்கு ஆச்சரியத்தை விளைவிக்கிறது. கர்மஹீனனான சன்னியாசியும் கர்ம பந்தனாகிய பிறரும் சமானமாக நற்கதியடைந்து சமானமான போக மோட்சங்களை அடைவரார்கள் என்று சொல்லுகிறீர்களே! இது எனக்கு வியப்பூட்டுகிறது. அன்றியும் இறப்பவன் அவனது மனைவி புத்திரர், மித்திரர் தனம் முதலியவற்றில் மனத்தைச் செலுத்துவானாயின் அதற்கேற்ற பிறவியை அடைவான் என்று நீதி நூல்கள் கூறுகின்றனவே. எனவே இங்கு இறந்தாலும் தானஞ் செய்தது, தீர்த்த யாத்திரை செய்தது ஆகியவற்றால் அடையும் பயனை அடையாலாமே தவிர மோக்ஷத்தை அடையக்கூடுமா? இந்தச் சந்தேகங்களை தாங்கள் தயவு செய்து நீக்க வேண்டும்! என்று பார்வதிதேவி கேட்க பரமசிவன் பதில் சொல்லத் துவங்கினார்.

49. வினைப்பயன்களும் காசி, பிரயாகை திரிவேணி யாத்திரைப் பலன்களும்

பார்வதி! நீ கேட்டது மிக நல்ல விஷயம்! இதைக் கேட்ட யாவரும் சகல பாவங்களிலிருந்தும் நீங்குவார்கள்! பிரியையே பாபமற்றவன் இந்தக் காசித் தலத்தில் மடிந்தால் அந்தக் கணமே மோக்ஷத்தை அடைவான். பாபாத்மாவாக உள்ளவன் இங்கே மடிந்தால் சில பிறவிகளை எடுத்துத் தன் பாபங்களைக் கழித்துப் பிறகே மோக்ஷம் அடைவான். காசிப் பதியில் பாபஞ்செய்தவன் பைசாசரூபத்தை அடைவான். அத்தகைய பைசாசரூபத்தையடைந்து கால பைரவர் மூர்த்தியால் பத்தாயிரம் ஆண்டுகள் தண்டிக்கப்பட்டுக் கஷ்டம் அடைந்து அதன்பிறகே மோக்ஷம் அடைவான், காசிப்பதியில் பாபஞ் செய்தவனாயினும் இதர இடங்களிலும் உள்ள பாவிகளின் கதி இதுவேயாகும். எனவே இதையறிந்து இந்த அவிமுக்திப்பதியை அடைய வேண்டும். அவ்வாறு அடைந்து எம்மைச் சேவித்துக் கொண்டிருப்பவன் இறுதியில் மோக்ஷமடைவான் பிராய்ச்சித்தங்களால் அழியாத கர்மங்களைச் செய்தவன் கற்பகோடி காலங்கழிந்தாலும் அதை அனுபவித்தேயாக வேண்டும். அசுபமான பாபகர்மங்கள் ஒருவனை நரகத்தையடையச் செய்து விடும் புண்ணிய கருமங்கள சுவர்க்காதிலோகங்களை அடையச்செய்யும், புண்ணிய கர்மங்கள். பாப கர்மங்கள் ஆகியவை கலந்தமிஸ்ர கர்மங்கள் உலகில், மனிதர்கள், பசுக்கள் பறவைகள் முதலிய பிறவிகளை அடையச் செய்யும், தான் அடைந்த பிறவி உயர்ந்ததாயினும் தாழ்ந்ததாயினும் புண்ணிய பாபங்கள் நசித்தாலன்றி முக்தியையளிக்க மாட்டாது. அவை இரண்டும் ஒழிந்த பிறகே மோட்சம் உண்டாகும்.

நற்கருமங்கள் மூவகைப்படும், அவைகளில் பஞ்சக்குரோச ÷க்ஷத்திரம் (காசி) முதலிய புண்ணிய பூமியில் பிரதக்ஷிணை தியான பூஜைகளால் வருவன ஒன்று கர்ம நிவாரணப்படிப் பிராய்ச்சித்தங்களை செய்து கொண்டு பாபங்களை ஒழித்தல் இரண்டு சர்வ கர்மங்களும் நீங்குவதற்காக என்னிடமே தன் கிரியைகளையெல்லாம் சமர்ப்பித்து; என்னைச் சேவித்துக் கொண்டு இந்த ÷க்ஷத்திரத்திலேயே வாசஞ் செய்வது என்பது மூன்றாவதாகும். இவற்றால் பாபங்கள் நீங்கும். இனிக் கர்மங்கள் மூவகைப்படும் அவை சஞ்சிதம் பிராரத்வம் ஆகாமியம் எனப்படும் அவற்றில் பூர்வஜன்மத்தில் செய்தவை சஞ்சிதம் அந்தச் சஞ்சித வினையால் வேறு பிறவியை அடைந்து அனுபவிக்கப்புகும் சுபாசுபகர்மமே ஆகாமியம், அந்த ஆகாமியம் உடலால் அனுபவிக்கப்படும் போது பிராரத்துவம் என்பர். இந்தப் பிராரத்துவமானது அனுபவியாமல் நாசமடையாது பாபமில்லாமல் எந்தத் தேசத்திற்கும் கஷ்டம் வராது துக்கமயமாகக் காணப்படும் யாவுமே பாபமயந்தான் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் அந்தத் துக்கம் ஸ்தூல துக்கம். குக்ஷ்ம துக்கம் என்ற இருவகையாக, அந்தப் பாபத்தாலேயே உண்டாகும். பாபமே இல்லாவிட்டால் எந்தக் காலத்திலும் ஒருவன் சுகமாகவே இருப்பான் ஓரிடத்தில் சுபமே விருத்தியாகும். ஓரிடத்தில் பாபமே நசித்திருக்கும் ஓரிடத்தில் பாபங்களே விருத்தியாகிக் கொண்டிருக்கும். இக்கர்மங்கள் எல்லாம் நலிய வேண்டுமானால் காசி நகரத்தைவிட வேறு ஓர் இடமும் கிடையாது. உலகத்தில் பற்பல புண்ணிய ÷க்ஷத்திரங்கள் இருந்தாலுங்கூட காசியம்பதியிலே வாசஞ்செய்ய வேண்டும் என்று நினைப்பவருக்கு அது விசேஷப் பிரயாசையோடும் கிடைப்பதற்கு அரிது. ஒருவன் காசிக்குப் போக வேண்டும் என்று நூறு பிறவிகளில் முயன்றாலுங்கூட, அந்தப் புண்ணியத் தலத்தை தரிசிக்க அவனுக்கு பற்பல தடைகள் ஏற்படும் உலகத்திலுள்ள எல்லா ÷க்ஷத்திரங்களையும் தரிசித்தால் அன்றிப் புண்ணியத்தலங்களில் ஆறில் ஒரு தலத்தையுங்கூட தரிசிக்க இயலாது அப்புண்ணியத் தலங்களாகிய ஆறில் ஒன்றைமுற்பிறவியில் சேவிக்கும்பேறு பெற்றவனுக்கே, காசித்தலத்தின் சேவை கிடைக்கும், அத்தகையவனே காசித்தலத்தில் வசித்திருந்து இறக்கும்படிக் கைகூடும் காசித் தலத்தை அடைந்து கங்காஸ்நானம் செய்பவன் ஆகாமிய சஞ்சிதங்களை ஒழிப்பானாயினும் உடல் உள்ளவரையில் விடாமல் அவை தொடருமாதலால் பிராரத்துவத்தை அனுபவித்தே தீர வேண்டும். அங்கே மரணமடைந்துவனுக்குப் பிராரத்துவம் ஒழியும் மரணம் அடையும்போது ஒருவனுடைய மனமானது அவனது கர்மவசத்துக்கேற்பவே இயங்கும். அந்தக் கர்மத்திற்கு மூன்று பாதங்கள் உண்டு. அவை மூன்றும் காசியை அடைந்தபோதே காலொடிந்து பின்தொடரக் கூடாதவையாக ஆகின்றன. அவனது மனமும் அந்தத் தீர்த்தத்திலே ஐக்கியப்பட்டு விடும் தீர்த்த ஸ்நானப் பலனும் அந்தத் தலத்தின் சிறப்பால் சிவத்தியானஞ் செய்த பலனும் ஆகிய இரண்டு பயன்களின் வலிமையால் சோட்சம் கிட்டும் என்று சுருதிகள் சொல்லுகின்றன.

பார்வதி! முதலாவதாகக் காசியாத்திரை செய்து அதன் பிறகு பாபஞ்செய்தவன் முன்புதான் செய்த காசி யாத்திரையின் புண்ணியத்தால் அந்தப் பாபம் நீங்கும் பொருட்டு மீண்டும் அவன் அந்தக் காசித்தலயாத்திரை செய்யும்படிப் பலவந்தமாகக் கொண்டு செல்லப் பெற்று, சகல பாபங்களையும் தீப்பொறி சிதறி விழுந்த பஞ்சுப்பொதி போல நசிக்கச் செய்வான் ஆகையால் கர்ம நிர்மூலம் செய்யத் தக்கதான காசித்தலத்தை எவ்வாறாவது முயன்று சேவிக்க வேண்டும். இவ்வாறு சிவபெருமான் சொல்ல பார்வதிதேவி அவரை நோக்கி மீண்டும் வினவலானாள். நாதா! பிரயாகையில் உயிரை விட்டவன் தன் இஷ்டகாமியங்களை அடைவான் அல்லவா? திருவேணி(கங்கை, யமுனை, சரஸ்வதி, என்ற மூன்று நதிகள் கலக்கின்ற பகுதியில்) திரிவேணி பூஜையும் விஸ்வேஸ்வர பூஜையும் செய்து, காசித் தலத்தில் இறந்தவர்கள் அடையும் பயன் யாது? பிரயாகை இஷ்ட காமியங்களை கொடுப்பது காசி முக்தியைக் கொடுப்பது பிரயாகையில் மாதவன் இஷ்ட காமியங்களைக் கொடுக்க, காசியில் நீங்கள் முக்தியைக் கொடுக்கவும் இருக்கிறீர்கள். நீங்கள் சர்வமங்கள ஸ்வரூபியாகையால் இந்தச் சந்தேகத்தைப் போக்கியருள வேண்டும்!

பார்வதி! காசியில் இறந்தவனுக்கு மீண்டும் பிறப்பில்லை. பிரயாகையில் இறந்தவனுக்கு இஷ்டகாமியங்கள் கைகூடுவதும் நிச்சயம். காசிக்கு வந்து பிறகு பிரயாகைக்குப் போவதானால் காசி யாத்திரை செய்த பயன் வீணாகிவிடும், பிரயாகைக்குப் போகாவிட்டால் திரிவேணி சங்கம தரிசன பயனில்லாமற் போகும். பிரயாகையில் இறந்தாலும் மோட்சகாமியாக இருப்பானாயின் அங்கேயே முக்தியே கைகூடும். இவ்வாறேயன்றி வேறல்ல என்று சிவபெருமான் கூறினார். பார்வதிதேவி மகிழ்ச்சியடைந்தாள். அது முதல் சிவபெருமான் விஸ்வநாதர் என்ற பெயருடன் பார்வதி பிரமதகண சகிதமாகக் காசித் தலத்தில் எழுந்தருளியிருக்கிறார். இவ்வாறு சூதமுனிவர் சிவபெருமான் காசியில் இடைவிடாமல் எழுந்தருளியிருப்பதற்கான காரணத்தை முனிவர்களுக்குச் சொன்னார். உடனே நைமிசாரண்ய முனிவர்கள் குருமகானே மேலும் மேலும் சிவசரிதங்களை நீங்கள் சொல்ல நாங்கள் கேட்க மிகவும் ஆவலுடன் இருக்கிறோம்! என்றார்கள். நல்லது, சகல பாபங்களையும் போக்கடிக்கும் திரியம்பகேஸ்வரப் பிரபாவத்தைச் சொல்லுகிறேன் என்று சூதபுராணிகர் சொல்லத் தொடங்கினார்.

50. அகல்யாவும் குளத்தில் தண்ணீர் எடுக்கும் தகராறும்

முனிவர்களே! பூர்வத்தில் கவுதம முனிவர் என்ற சிறந்த தவமுனிவர் ஒருவர் தம் மனைவியான அகல்யை என்ற மகாபதி விரதையுடன், தென்னாட்டில் பிரமகிரியில் பத்தாயிரம் ஆண்டுகள் அகண்டமான அருந்தவம் ஒன்றைச் செய்து கொண்டிருந்தார், அப்போது பிராணிகள் எல்லாம் துன்புற வேண்டிய பெரும் பஞ்சம் ஒன்று நூறாண்டுகள் அளவு உண்டாயிற்று அதனால் உலகத்திலிருந்த மரங்கள் உலர்ந்து பட்டுப்போயின. உயிரினங்களில் பல உயிர் பிழைக்கத் தக்கத் தண்ணீர் இல்லாமல் வறண்டு மடிந்தன. முனிவர்கள், பொதுமக்கள், பசுக்கள், விலங்குகள், பற்பல இடங்களுக்கு ஓடிப்பரவின. பிர மகரிஷிகள் பிராணாயாமம் முதலிய யோக நிஷ்டையில் இருந்து காலங் கழித்து வந்தார்கள். அப்போது கவுதமர் பிராணாயாமத்திலிருந்து வருண பகவானைப் பிரார்த்திக்க அவரது தவத்துக்கு இரங்கிய வருணபகவான் அவர் முன்னால் தோன்றி, உமக்கு வேண்டிய வரம் என்ன என்று கேட்டார். கவுதமமுனிவர் மகிழ்ந்து. உலகம் முழுமையும் துன்புறும்படி தோன்றியுள்ள மழையின்மையை ஒழிந்து யாவரும் சுகமடையும் படி மழைபொழியச் செய்யவேண்டும்! என்று வேண்டினார். அதற்கு வருணபகவான் முனிவரே! ஈஸ்வராக்ஞையை விரோதித்து நடக்கப் பிரம இந்திராதி தேவர்களாலும் இயலாது. ஆகையால் நான் இதனைச் செய்வதற்கில்லை நீர் வேறு ஏதாயினும் வரம் கேளும். அதைக் கொடுக்கிறேன் என்றார்.

அதற்கு கவுதம முனிவர், வருணதேவனே! என் விஷயத்தில் வரங்கொடுக்கத் தயவு இருக்குமானால் நான் சொல்லுகிறேன். உலகத்தில் மகாத்மாக்களை ஆஸ்ரயித்தால் ஆஸ்ரயித்தவர்களுக்குப் பெருமை உண்டாகும், மகாத்மாக்களோ பிறருக்கு உற்ற துன்பங்களை விசாரிப்பார்களே தவிர, சாமானியர்கள் விசாரிக்கமாட்டார்கள், சூரியனைக் கண்டவுடனே இருள் ஒழிவது போல மகாத்மாக்களை தரிசித்தவுடனேயே தரித்திரம் தூரவிலகும். துக்கம், சோகம், பாபம், பயம் முதலியன யாவும் நீங்கிச் சிறப்பான நன்மைகளும் உண்டாகும். சாமானிய மனிதரைத் தரிசித்தால் அதற்கேற்ற பயன்களே கிடைக்கும். நரியை அது இருக்குமிடத்தில் சந்தித்தால் எலும்புகள் தான் கிடைக்கும். சிங்கத்தை அது இருக்குமிடத்தில் சந்தித்தால் முத்துக்கள் கிடைக்கும். உத்தமர்கள் பிறர் துன்பத்தை நீக்குவதையே இயல்பாகக் கொண்டவர்கள். தமக்கு உண்டான துன்பங்களைப் பாராட்டாது பிறருக்கு உதவி செய்பவர்கள் அவர்கள் கற்பகவிருட்சமும் சத்ஜனரும் ஒரே சுபாவமுடையவர்கள். விருட்சம், பொன் சந்தனம் போன்றவை தாம் துன்புற்றாலும் பிறருக்குப் பயன் தருவது போலத் தாம் கஷ்டப்பட்டாயினும் பிறருக்கு உதவி செய்ய வல்லவர்கள் உம்மைப் போன்ற பலர் இருக்கிறார்கள் துக்கத்தால் வருந்துவோனுடைய துக்கத்தைப் போக்கச் செய்வது அவ்வாறு போக்கடிப்பவருக்கே சுகம் தருவதாகும் பரோபகாரம் செய்பவன் சிறிதே பாபமுடையவன் என்றும் அவனைக் கண்டு விலகிச் செல்பவன் பாபமுடையவனே என்றும் சுருதிகள் சொல்கின்றன இந்த பூமியானது அண்டசம், சுவேதசம், உத்பீசம், சராயுசம் என்ற நான்கு விதமான பிராணிகளால் நிறைந்துள்ளது. இந்நான்கு வகைத் தோற்றங்களில் யாவர் தயையுடையவரோ  யாவர் மமதை அற்றவரோ யாவர் ஜிதேந்திரியராய் உபகாரஞ் செய்பவரோ யாவர் எப்போதும் மவுவனமுடையவரோ இத்தகைய புண்ணியர்களாலேயே பூமி தாங்கப் பட்டிருக்கிறதேயன்றி ஆதிசேஷன் ஒருவனாலேயே தாங்கப்பட்டிருக்கிறது என்று நினைக்க வேண்டாம் வருணதேவரே! ஜகமுழுவதிற்கும் நீரே பிரபுவாக இருப்பவர். உலகம் முழுவதும் உம் வடிவம். ஆகையால் விளைவுத்தொழில் செய்வதற்குரிய மழைநீர் போன்ற சம்பூரணமான ஜலத்தை நீரே கொடுக்க வேண்டும்! என்று கவுதமரிஷி வேண்டினார். வருண பகவான் அவரைப் பார்த்து நீர் ஒரு குளம் எடுக்க வேண்டும் என்று கூற அவ்வாறே கவுதமரும் செய்தார்.

அந்தக் குளம் நீர் நிறைந்து விளங்கியது அப்போது வருணதேவன் இது எப்பொழுது குறையாத நீர்மயமாக இருக்கவும் சகல தீர்த்தங்களிலும் உத்தமமானதாக இருக்கவும் உம் பெயரால் புகழ் பெறவும் இங்கு தினமும் ஓமம் ஜெபம் சிரார்த்தம் முதலியன செய்தால் ஒன்று பலவாறாகவும் பெருகவும் வரம் தருகிறேன்! என்று வருணதேவன் கூறிவிட்டு கவுதமர் போற்ற மறைந்தார். அங்கு கவுதம முனிவர் அந்த ஜலத்தைக்கொண்டு நித்திய நைமித்தியக் கிரியைகளை விதிப்படி செய்துகொண்டு, நெல், கோதுமை முதலிய தானியங்களை விதைத்துவிட்டு தவத்தில் ஆழ்ந்தார் அவை விளைந்து பயனளித்தன, மரங்கள் பூத்துக் காய்த்துப் பழுத்தன. அங்கு விளைந்த தானியங்கள் பெருங் குவியல்களாகச் சேர்த்து வைக்கப்பட்டன. இவ்வாறு கவுதம முனிவருடைய ஆசிரமம் ÷க்ஷமமாக இருப்பதை தம் சீடர்கள் மூலம் அறிந்த வேறு பல தவமுனிவர்கள் யாவரும் கவுதமரின் விருப்பத்திற்கிணங்க அங்கே தம் கூட்டாத்தாருடன் வந்து சேர்ந்தார்கள். பறவைகள், பசுக்கள் மான்கள் முயல்கள் முதலிய விலங்குகள் யாவும் மேய்ச்சலுக்கான புற்றரையும் நீரும் கிடைப்பது கண்டு அங்கு வந்து சேர்ந்தன. அந்தவனம் பூமண்டலத்திலேயே அதிக அழகுடையதாக விளங்கியது. முனிவர்கள் யாவரும் தம் சீடர்களை கொண்டு உழுவுத் தொழில் வைத்துத் தாமும் தவஞ்செய்து கொண்டு க்ஷõமகாலத் துக்கத்தைக் கவுதம முனிவரின் புண்ணியத்தால் மறந்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்கள்அப்போது அங்கு நிகழ்ந்த ஒரு விஷயத்தைச் சொல்லுகிறேன் கேளுங்கள்.

ஒரு காலத்தில் கவுதமர் தன் சீடர்களை பார்த்து, நான் சந்தியாவந்தனம் செய்யவேண்டும் நீங்கள் நமது குளத்திலிருந்து தண்ணீர் கொண்டு வாருங்கள் என்று கட்டளையிட்டார். அவர்கள் அவ்வாறே குளத்தையடைந்தார்கள் அங்கு க்ஷõமபாதையால் வந்திருந்த ரிஷிபத்தினிகள் அச்சீடர்களைப் பார்த்து, நாங்கள் தண்ணீர் முகந்து சென்ற பிறகே நீங்கள் நீர் எடுத்துச் செல்ல வேண்டும். மேல் இருக்கும் ஜலத்தை நாங்களே முகர்ந்து செல்வோம்! என்று பயமுறுத்த கவுதமரின் சீடர்கள் அவர்களிடம் ஒன்றும் பேசாமலும் அவர்களை மீறி எதையும் செய்ய இயலாமலும் ஆசிரமத்திற்குத் திரும்பி வந்து அகல்யையிடம் நடந்தவற்றை முறையிட்டார்கள் அகல்யை அச்சீடர்களுடன் குளத்தையடைந்து முனி பத்தினிகளிடம் நல்வார்த்தை சொல்லி விலக வைத்தாள் சீடர்கள் ஜலத்தை முகர்ந்து கொண்டு கவுதம முனிவரிடம் சென்று கொடுத்தார்கள். முனிவர், தம் சந்தியாவந்தனத்தை முடித்துக் கொண்டார்.

இந்நிலையில் குளக்கரையில் முன்பு நீர் முகவாமல் தடை செய்த ரிஷி பத்தினிகள் அகல்யாதேவியைக் கடிந்து பேசித் தங்கள் கணவர்களிடம் சென்று, கவுதமர் மனைவி அகல்யை எங்களைத் தினமும் தண்டிக்கிறாள் நாங்கள் அவளது தண்டனைக்கு அடங்கி வாழ்கிறோம் நமக்கு இருக்க இடமில்லாமல் இங்கு வந்திருப்பதால் தான் இவ்வாறு நடந்ததேயன்றி வேறல்ல உலகத்தில் பெண்களுக்குப் பொய் சொல்லுதல் மாயை பிடிவாதம் அதிலோபம் பரிசுத்தமின்மை தயையின்மை முதலியன இயல்பான தோஷங்கள் நமக்கு கவுரவமில்லையா? எங்களை அகல்யா கோபிப்பதும் நாங்கள் அவளுக்கு அடங்கி நடப்பதும் எதற்கு? இது என்ன பிழைப்பு? என்று பலவாறு சொன்னார்கள். அதற்கு முனிவர்கள் ஐயோ அந்த அகல்யை பரம பதிவிரதையாயிற்றே. அவள் இப்படிச் சொல்லியிருக்கக் கூடுமா? இவர்களிடத்தில் ஏதேனும் தோஷங்கண்டு ஒருவேளை இவ்வாறு சொல்லியிருக்கக்கூடுமா நாம் அவர்கள் ஆசிரமத்தில் இருந்து ஜீவக்கின்றோமே! நாம் அந்த அகல்யையின் கிருகத்திலிருந்து ஜீவித்து வருகிறபோது அப்பதிவிரதைக்குக் குற்றஞ்சொல்வது நம்மையே குற்றம் உள்ளவர்களாக்கும் என்று தமக்குள் தாமே கருதினார்கள் ஆனால் முனிபத்தினிகள் தங்கள் சொல்லைத் தங்கள் கணவர்கள் ஏற்றுக் கொள்ளாததால் ஒன்றுஞ் செய்ய முடியாதவர்களாய் பிரதி தினமும் கவுதமமுனிவரின் பூஜைக்கு சீடர்கள் ஜலம் கொண்டுபோக வரும்போதெல்லாம் தொடர்ந்து அவர்களைப் பரிகசித்து விகடஞ் செய்வதும் அச்சீடர்கள் அதை அகல்யையிடம் சொல்வதும் அகல்யை அந்தக் குளக்கரையை அடைந்து நமது ஆஸ்ரமத்தில் இருப்பவர்களை எப்படிக் கண்டிப்பது என்று நல்ல வார்த்தைகளால் விளக்கிச் சீடர்களைத் தண்ணீர் முகந்து கொண்டு போகும்படிச் செய்வதும், ரிஷிமங்கையர்கள் தங்கள் கணவன் மாரிடம் அகல்யையைப் பற்றிப் பற்பலவாறு தூஷிப்பதுமாக இருந்து வந்தது. இப்படியிருக்க ஒருநாள் அம்முனிவர்கள் அனைவரும் அவ்வனத்தையடைந்து ஒருவரையொருவர் நோக்கி நமது மனைவிமார் குளத்தில் ஜலம் முகந்து செல்லப் போகும் போதெல்லாம் அகல்யாதேவி அவர்களைக் கண்டிக்கிறாளாமே? அவளுக்கு நல்ல வார்த்தை சிறிது சொல்லவேண்டும் என்றார்கள். அதைக் கேட்ட வேறு சில முனிவர்கள் ஒரு வேளை நாம் எல்லோரும் இங்கு வந்திருப்பதால் அகல்யை அவ்வாறே செய்திருக்கலாம். என்றும் நம் மனைவியர்கள் உண்மையையே சொல்லியிருக்கிறார்கள். இவர்களுக்கு அந்த அகல்யாவால் சங்கடங்கள் சம்பவித்து இருக்கலாம். என்றும் யோசித்து இனிமேல் நடக்கவிருக்கும் தீயகர்மத்துக்குப் பாத்திரமாக வேண்டியிருந்ததால் ஒருவரோடு ஒருவர் யோசிக்கத் தொடங்கினார்கள்.

51. கவுதமரின் வெளியேற்றமும் கோரிக்கையும்

முனிவர்கள் யாவரும் ஒன்றுகூடி ஆலோசித்ததையும் கவுதம முனிவர் காரியத்தையும் சொல்கிறேன் நைமிசாரணிய வாசிகளே! அம்முனிவர்கள் ஒருவரையொருவர் பார்த்து நாமெல்லோரும் பிழைப்பதாக இருந்தால் இந்தக் கவுதமர் ஆசிரமத்தில் இருக்கும் வரையில் துக்கமில்லாமல் ஜீவிக்க முடியாது இதற்குத் தக்கயுக்தியை விரைவில் செய்து நம் மானத்தைக் காப்பாற்றிக் கொண்டு நம் தவத்திற்கு இடைஞ்சல் எதுவுமில்லாமல் இருக்க வழியொன்றைக் கண்டு பிடித்து இந்தக் கவுதம முனிவரை இங்கிருந்து எப்படியாவது அப்புறப்படுத்த வேண்டும் அப்பொழுது தான் நாம் சுகமாக வாழ்ந்திருக்கலாம். கவுதமன் எங்கேயாவது போகட்டும். நாமெல்லோருமாகச் சேர்ந்து அவனை அடித்துத் துரத்திவிடலாம் என்று தீர்மானித்தார்கள்.

அந்த யோசனை கைகூடும்படி விக்னேஸ்வரப் பெருமானை உபாசித்து அறுகு, தாமரை, அக்ஷதை, சிந்தூரம், சந்தனம், தூபம், தீபம், மோதகம் முதலியவற்றால் பூஜித்து வழிபட்டார்கள். அவர்களுடைய பூஜைக்கு மகிழ்ந்து தயை செய்ய விழைந்த விநாயகர் அவர்கள் முன் தோன்றி முனிவர்களே! உங்களுக்கு என்ன காரியம் நடக்க வேண்டும்? அதை வெளியிடுங்கள் என்று கேட்டார் அதற்கு முனிவர்கள் கணபதியைப் பார்த்து, விநாயகப் பெருமானே, எங்கள் விஷயத்தில் தாங்கள் தயையுடையவராக இருந்தால் கவுதம முனிவனை இந்த ஆசிரமத்திலிருக்கும் அவனது சீடர்களோடு துரத்திவிட வேண்டும். இதுவே நாங்கள் வேண்டும் வரம் என்று வேண்டினார்கள். அதைக் கேட்டதும் விக்னேஸ்வரர் சிரித்துவிட்டு முனிவர்களே! நீங்கள் இப்போது தீயகாரியத்தை விரும்புகிறீர்கள் குற்றம் எதுவுமில்லாத கவுதமன் விஷயத்தில் நீங்கள் கோபித்தால் உங்களுக்கு இடையூறு ஏற்படும். உபகாரஞ் செய்தவருக்கு அபகாரம் செய்வது சரியல்ல, அப்படி அபகாரம் செய்ய எண்ணங்கொண்டால் இப்போதே நீங்கள் நாசமடைவீர்கள், அருந்தவம் செய்து என்னிடம் நல்ல வரத்தைக் கேட்டீர்களே! ஆஹா! நல்ல பயனை விரும்பாமல் நினைக்கவும் கூடாத இத்தகைய வரத்தைக் கோருவது கையில் இருக்கும் இரத்தினத்தை விட்டுவிட்டுக் கருமணியை விரும்புவதுபோல இருக்கிறது. உங்களுக்கு வேறு எது விருப்பமோ, அதைக்கேளுங்கள்! என்றார். ஆனால் முனிவர்கள் அனைவரும் மீண்டும் மதி மயக்கத்தால் அதே வரத்தையே வேண்டினார்கள்.

அப்போது விநாயகர், மீண்டும் அவர்களை நோக்கி, உலகத்தில் ஒரு துஷ்டன் சாதுக்களின் சகவாசத்தால் ஒரு காலத்தில் சாதுவாகிறான். ஒரு சாதுவோ துஷ்ட சகவாசத்தால் ஒரு காலத்தில் துஷ்டனாகிறான். அந்தச் சாது புருஷனுக்கு ஒருவன் தீமை செய்தால் இதுவும் நமது வினையே என்று நினைத்து அனுபவித்து தனக்குத் தீமை செய்தவனுக்கும் நன்மையே செய்கிறான் ஆகையால் உங்களை எப்பொழுதாவது கவுதமர் துன்பப்படுத்தினால் அப்போதே அவர் உங்களுக்கு சுகத்தைச் செய்ததாகவே எண்ணுங்கள்  நீங்கள் அவருக்கு மீண்டும் அபகாரஞ்செய்ய நினைப்பது சரியல்ல நீங்கள் மங்கையர் மொழியில் மதிமயங்கி இவ்வாறு செய்ய எத்தனித்திருக்கிறீர்கள் அந்தக் கவுதமரே உங்களுக்குச் சுகத்தை விரைவில் செய்வார்! என்று பலவகையான நீதிகளை அவர்களுக்குப் போதித்தார். இவ்வாறு விநாயகர் பலவாறு சொல்லியும் முனிவர்கள் சம்மதிக்காமல் இருந்ததாலும் அவர்களுக்கு வேண்டிய வரத்தைக் கொடுப்பதாக முன்னதாக வாக்களித்து விட்டதாலும் கணேசர் அவர்களைப் பார்த்து, முனிவர்களே! நான் எத்தனையோ நீதிகளை உங்களுக்குச் சொல்லியும் கேட்காததால் உங்கள் விருப்பப்படி நடக்க வரம் கொடுத்தேன்! அதனால் விளையும் நிந்தனையை நீங்கள் அனுபவிப்பீர்கள் என்று வரந்தந்து மறைந்தார் கவுதம முனிவர் மற்ற முனிவர்களின் யோசனை யொன்றையும் அறியாமல் தம் தவநிலையிலே இருந்தார். இனி மேலே நடந்தவற்றைச் சொல்லுகிறேன்.

கவுதமரின் ஆசிரமத்திலிருந்த முனிவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க விநாயகப் பெருமான் நடக்கச் சக்தியற்றதொரு கிழட்டுப்பசுவின் வடிவம் பூண்டு கவுதமருடைய கோதுமைப் பயிர் நன்றாக விளைந்து அறுவடையாகும் தருணத்தில் அங்கு சென்று மேய்ந்து கொண்டிருந்தார், அப்போது தெய்வகதியாய்க் கவுதமமுனிவர் அங்கே வந்து பயிரில் மேயும் பசுவைக் கண்டு கையினால் ஒரு பிடி வைக்கோலை எடுத்து எறிந்தார். அது பட்டவுடனேயே கவுதமரின் கண்ணெதிரில் அந்தப் பசு கீழே விழுந்து இறந்து விட்டது. அதைக் கண்டதும் அங்கு வந்த முனிவர்களும் முனிபத்தினிகளும் பேரிரைச்சலிட்டு ஆ! கவுதமன் என்ன காரியத்தைச் செய்துவிட்டான் பசு வதைச்(கோஹத்தி) செய்து விட்டான். அவன் மஹா துன்மார்க்கன்! என்றார்கள். கவுதமரும் அவருடைய பத்தினியான அகல்யையும் மிகவும் துக்கப்பட்டு என்ன செய்வது? எங்கே போவது? நிஷ்காரணமாக கோஹத்தி சம்பவித்ததே இதை எவ்வாறு ஒழிப்பது? என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது முனிவர்கள் அனைவரும் கவுதமரிடம் வந்து உன் ஞானம் என்னவாயிற்று? உன் தவம் ஒழிந்தது உன் சர்வக்ஞத்வம் என்னவாயிற்று? உன் கல்வி எங்கே மறைந்தது? என்று இதுபோல அவரை பலவாறு தூற்றி, கோஹத்தி செய்த உன் முகத்தைப் பார்க்கவும் கூடாதே. என்றார்கள் முனிபத்தினிகளோ கவுதமரையும் அகல்யையும் பலவாறு தூற்றி, ஓ கவுதமா! இனி நீ இங்கே இராதே, எங்கள் கண்களில் புலப்படாமல் எங்கேயாவது ஓடிவிடு. நீ இங்கிருந்தால் நாங்கள் கொடுக்கும் அவிர் பாகத்தை அக்கினி தேவன் ஏற்றுக் கொள்ள மாட்டான். நாங்கள் செய்யும் சிரார்த்தத்தை பிதுர்க்கள் அடையமாட்டார்கள் என்று கணக்கின்றித் தூஷித்து யாவரும் அவர் மீது கற்களை எறிந்தார்கள் கவுதமமுனிவர் இன்னும் யாது நிகழுமோ என்று கருதி அம்மகரிஷிகளை நோக்கி, மாதவர்களே! நான் இங்கேயிருந்து உண்மையாகவே போய்விடுகிறேன்! என்று சொல்லித் தம் ஆசிரமமாகிய அந்த இடத்தை விட்டு மனைவியும் சீடர்களும் தன்னைப் பின் தொடர ஒரு குரோச தூரஞ் சென்று அங்கேயே இருந்து கொண்டு கோஹத்தி பாபந் தீரும் வரையில் பிதுர்க்காரிய சந்தியாவந்தனாதிகளைச் செய்யக் கூடாதாகையால் சூதகாசவுசம் உற்றவன் போலத் தங்கியிருந்தார்.

கவுமதரைக் கண்டாலே முனிவர்களும் முனி பத்தினியரும் தங்கள் முகத்தை ஆடையால் மூடிக் கொள்வார்கள். இவ்வாறு பதினைந்து தினங்கள் கழிந்தன.
கவுதமர் அங்கிருக்கும் முனிவர்களை வருவித்து, ஸ்வாமிகளே! நீங்கள் எவ்வாறாவது எனக்கு அநுக்கிரகம் செய்ய வேண்டும். என் பாபம் ஒழியும் வகை ஏதேனும் இருந்தால் அதைத் தெரிவிக்க வேண்டும் பெரியோர்களின் உபதேசமில்லாமல் ஒருவருக்கும் பிராயச்சித்த சித்தி முதலியன கைகூடாது! என்று விநயத்துடன் கேட்டுக் கொண்டார். அதற்கு அவர்கள் ஒருவரும் பதில் எதுவும் சொல்லவில்லை அவர்களைக் கவுதமர் அதிக வணக்கத்துடன் தயையேற்படும்படி வேண்டிக்கொண்டதன் பேரில் அம்முனிவர்கள் அனைவரும் ஒன்றுகூடி நெருங்கி வந்து கவுதம முனிவர் பாபாத்மாவாகையால் பிராமணருக்குச் சமீபத்தில் வரக்கூடாது என்று நினைத்து தூரத்தேயிருந்து அவர்களை நமஸ்கரித்துக் கையேற்று நின்று; தவஞானிகளே! என் பாபம் போவதற்குரிய வகையை எவ்விதத்திலாவது யோசித்து சொல்ல வேண்டும்! என்றார். அதற்கு முனிவர்கள் நீர் முதலில் உன் பாபத்தை ஊரெங்கும் தெரியும்படிச் சொல்லிக் கொண்டு உலக வலம் வந்து வயலிலிருந்து கோஹத்தி செய்த நான் பிøக்ஷக்கு வந்தேன்! என்று பசித்தவிடத்தில் வேதியருக்குணர்த்தி அவர்களிடம் ஏழு வீடுகளில் ஒவ்வொரு கவளம் கையில் ஏற்று உண்டு மீண்டும் இங்கு வந்து ஒரு மாதகாலம் சாந்திராயண விரதம் (இது சந்திர கலைகள் உயரும்தோறும் முறையே நாளுக்கு ஒரு கவளமாகக் குறைத்தும் புசிக்கும் விரதம்) அனுஷ்டித்து இந்தப் பிரமகிரியை நூற்றொரு பிரதக்ஷிணம் செய்து வரவேண்டும். இவ்வாறு செய்தால் நீர் பரிசுத்தராவீர், வேறொரு வகையாகவும் சொல்கிறோம் நீர் கங்கையை இங்கே வரவழைத்து அதில் ஸ்நானம் செய்து கோடி பார்த்திவ லிங்க அர்ச்சனை செய்யவேண்டும். இப்படிச் செய்தாலும் பாவ நிவர்த்தியாகிப் புனிதராவீர் முதலில் இந்தப் பிரமகிரியைப் பதினாரு பிரதக்ஷிணம் செய்யும், அதற்குப் பிறகு சதகும்பாபிஷேகம் செய்து கொண்டால் இப்பார்த்திவ சரீரம் தூய்மையடையும் என்றார்கள்.

சவுனகாதி முனிவர்களே அம்முனிவர்கள் அவ்வாறு கூறிய வார்த்தைகளைக் கேட்டதும் கவுதம மகரிஷி கோடி பார்த்திவ லிங்க பூஜையும் கிரிபிரதக்ஷிணம் செய்வேன் என்று சங்கற்பம் செய்து கொண்டு பிராமணர்களின் உத்தரவைப் பெற்று, கிரிபிரதக்ஷிணமும் செய்வேன் என்று சங்கற்பம் செய்து கொண்டு பிராமணர்களின் உத்தரவைப் பெற்று, கிரிபிரதக்ஷிணம் (மலையை வலம் வருதல்) செய்து சாஸ்திரோக்தப்படி கோடி லிங்கார்ச்சனையும் செய்து முடித்தார். பதிவிரதையான அகல்யையும் முறைப்படி சிவபூஜை செய்து  கொண்டிருந்தாள். சீடர்கள் அவர்கள் இருவருக்கும் தொண்டு செய்து கொண்டிருந்தார்கள். கவுதமர் இவ்வாறு பூஜை செய்து கொண்டிருக்கும் போது சிவபெருமான் பக்தப்பிரியராகையால் அவரது பூஜைக்கு மகிழ்ந்து பிரமத கணங்களோடும். பார்வதி தேவியோடும் ரிஷப வாகனத்தில் வந்து தரிசனமளித்து, கவுதமரை நோக்கி உன் பூஜைக்கு மகிழ்ந்தோம்! நீ வேண்டும் வரத்தைக் கேள் என்றார்.

கவுதமர் சிவஸ்வரூபத்தைத் தரிசித்துப் பெரிதும் மகிழ்ந்து கவுரீ சங்கரரைப் பணிந்து துதிக்கலானார்.

நிர்க்குணாய நமஸ்துப்யம் ஸுகராய நம புந
பஸ்சாத ப்ரக்ருதி ரூபாயா புருஷாய நம புந
பஸ்சாத விஷ்ணு ஸ்வரூபயா ததஸ்சப் பிரஹ்மணே நம
ப்ரஹ்மணா விஷ்ணு நானசவபூஜ்யாய ஸம்ஸயசசிதே
பஸ்சாத்ருத்ர ஸ்வரூபாய ததஸ்சவ்யாபகாயச
வ்யாப்யாய நமஸ்துப்யம் ப்ரஹ்மணே பரமாத்மநே
அகாராதி க்ஷகாரந்த பீஜரூபாயதே நம
நிர்குணாய குணாயைவ ஸ்வரூபாய நமோஸ்துதே

இதன் பொருள்: குணரகிதரும் பக்தர்களுக்குச் சுகஞ்செய்பவரும் படைப்பின் துவக்கத்தில் பக்தாநுக்கிரகத்திற்காக மாயையுடன் கூடிய ரூபமுடையவரும் எல்லாப் பிராணிகளின் சரீரங்களிலும் அந்தர்யாமியாக இருப்பவரும் பக்தரக்ஷணைக்காக விஷ்ணு ஸவ்ரூபமுடையவரும் ஹிரண்ய கர்ப்பரூபமுடையவரும், பிரமவிஷ்ணுக்களால் பூஜிக்கப்பட்டவரும் சர்வ வியாபகரும் வியாப்பிக்கப்படும் பொருளாக உள்ளவரும் தானே சர்வ மயமானவரும் பரமாத்ம ஸ்வரூபியானவரும் அகாரம் முதல் க்ஷகாரம் இறுதியாகிய வர்ணமாலிகா ஸ்வரூபமும் குணாஹிதரும் குணஸ்வரூபரும் ஸகல ஸ்வரூபரும் ஆகிய தேவரீருக்கு நமஸ்காரம் நமஸ்காரம்!. இவ்வாறு துதித்து என்னைப் பாவம் நீங்கியவனாகச் செய்ய வேண்டும் என்று வேண்டினார், அப்போது சிவபெருமான் கவுதம முனிவரைப் பார்த்து கவுதமா! நீ தன்யன்! கிருத கிருத்தியன்! துஷ்ட வேதியர்கள் உன்னிடம் பாபத்தைக் கபடத்தால் ஏற்றினார்களேயன்றி உனக்கு எப்போதும் பாபமே  கிடையாது உன்னைக் கண்டவுடனேயே சகலரும் பாபம் நீங்கியவர்களாவார்கள். இந்தத் துரோகச் சிந்தையுடைய முனிர்வர்கள் செய்நன்றி மறந்தவர்கள் ஆகையால் இவர்கள் செய்த பாபங்கள் பிராயச்சித்தங்களாலும் பரிகரிக்கமாட்டா. உனக்கு ஏதேனும் சிறிதேனும் பாபமிருப்பின் அதுவும் என்னைத் தரிசித்தால் ஒழிந்துவிடும்! என்று சொல்லி அத்துஷ்ட வேதியர்கள் செய்த ஸகல வஞ்சனைகளையும் கவுதம முனிவரிடம் எடுத்துரைத்தார்.

அவ்வந்தணரின் வஞ்சகத்தைக் கேட்ட கவுதமர் கண்ணுதல் பெருமானே! அம் முனிவர்கள் அனைவரும் எனக்கு எந்த விதத்தீமையும் செய்யவில்லை ஐவரே செய்தார்கள் ஆயினும் அது பெரிதல்ல அவர்கள் என் விஷயத்தில் நன்மையைத்தான் செய்தார்கள். அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால் மறைகளாலும் அறியவொண்ணாத மஹேஸ்வரரானதங்களைத் தரிசிக்க முடியுமா? ஆகையால் அவர்கள் புண்ணியவான்களே! என்று கூறினார் அவருடைய சற்குணச் சிறப்பிற்கு சிவபெருமான், நீ மஹா புண்ணியன்! உனக்கு வேண்டிய வரம் என்ன? என்று கேட்டார். கவுதமர் சிறிது யோசித்து விட்டு தம் பெயர் நிலை நிற்பதாக வேண்டும் என்று நினைத்து, சுவாமி! சகல லோகங்களுக்கும் நன்மையைத் தரத்தக்க கங்கையைக் கொடுக்கவேண்டும் என்று சாஷ்டாங்கமாகப் பணிந்து நமஸ்கரித்தார். சிவபெருமான் பூவுலகத்திலும் சுவர்க்கலோக்த்திலும் நிறைந்து பூரணமாய் இருக்கத்தக்க தம் ஜடாமகுடத்திலிருந்து கங்கையில் சிறிது கவுதமருக்குக் கொடுத்தார் அந்த கங்கை உடனே ஒரு பெண்ணுருவம் கொண்டு கவுதமரின் முன்னால் நின்றாள்.

கவுதமர்-கங்காதேவியைத் துதித்து தாயே! நீயே தன்யை எல்லா உலகங்களையும் புனிதமாக்கவல்லவளான நீயே என்னையும் பரிசுத்தனாக்கி, என் பாவங்களையும் ஒழிக்க வேண்டும். என்றார். அப்போது சிவபெருமான் கங்கையை நோக்கி, பெண்ணே! இந்தக் கவுதம முனிவனை என் கட்டளைப்படி கிருதார்த்தனாகச் செய் என்றார். கங்கை சிவாக்கினையையும் கவுதமரின் வேண்டுகோளையும் கருதி என் பரிவார சகிதமாகவுள்ள இந்த முனிவனைப் பரிசுத்தமாக்கி மீண்டும் உம்மிடமே சேருவேன் என்றாள். அதற்கு சிவபெருமான் கங்கையே! இருபத்தெட்டாவது மஹாயுகத்தில் நடக்கும் வைவஸ்வத மநுவந்தரத்தில் கலிகாலம் வரும், அப்போது மனிதர்கள் அற்பாயுளும், அற்பபுத்தியும் உடையவர்களாக இருப்பார்கள். ஆகையால் அந்தக் காலத்தவர்கள் உன்னைத் தரிசிக்கும்படி அது வரையில் நீ இங்கேயே இருக்க வேண்டும்! என்று கூறினார் அதற்கு கங்கை சுவாமி! நான் இங்கேயே இருக்க வேண்டும்! என்று கூறினார். அதற்கு கங்கை சுவாமி! நான் இங்கேயே இருக்கும்படி தங்கள் கட்டளையை ஏற்றால் காசி ÷க்ஷத்திரத்தில் என்னிடம் வருவோரைப் புனிதமாக்க முடியாது. ஆகையால் இவரைப் புனிதராக்கி நான் அங்கேயாவது போகிறேன் என்றாள். அதற்கு கவுதமர் தாயே! நீ எங்கும் போகக்கூடாது என்று விநயமாகக் கூறிவேண்டினார். அப்போது சிவபெருமான், கங்கா! நீ இங்கே கவுதமனின் விருப்பப்படி இருக்கவும், காசியிலும் விளங்கி வருவோரைப் புனிதமாக்கவும் வல்லவள், ஆகையால் நீ இங்கும் அங்குமாக இருப்பாயாக என்றார். அதற்குக் கங்கை நான் எல்லாத்தீர்த்தங்களையும் விடச்சிறப்பாக இங்கே இருந்து கொண்டிருந்தாலும் கவுதமரை வஞ்சனையால் வருத்திய அப்பாவிகளைப் புனிதமாக்க வல்லவளல்லேன். இவரைக் காரணமில்லாமல் துன்புறுத்தியவர்களின் முகத்தைப் பார்க்கக்கூட நான் விரும்பவில்லை ஆகையால் நான் அந்தர்த்தானமாகிறேன்! மேலும் பார்வதி புத்திரர்களோடும் பிரமத கணங்களோடும் சிவபெருமான் இங்கு எழுந்தருள்வதானால் நானும் இங்கே இருக்கக்கூடும் என்றாள். சிவபெருமான் கங்கையை நோக்கி கங்கையே நீ தூய்மையானவள், நீ என்னை விட்டு வேறானவல்ல ஆயினும் நீ என்னை இங்கேயே இருக்கக் கோருவதால் நானும் இங்கு இருக்கிறேன். நீயும் இங்கேயே இருக்கவேண்டும் என்றார். கங்கையும் மகிழ்ந்து சிவபெருமானைப் பூஜித்தாள்.

52. கங்காத்துவாரமும் திரியம்பக லிங்க மகிமையும்

பிருமா முதலான தேவர்களும் சப்த ரிஷிகளும் நானா தீர்த்தங்களும் வந்து கவுதமரையும் கங்கையையும் சிவபெருமானையும் கண்டு ஜய ஜய என்று பூஜித்து பலவாறாகவும் துதித்து மகிழ்ந்தார்கள். கங்கையும் சிவபெருமானும் மகிழ்ச்சியடைந்து நீங்கள் வேண்டும் வரம் என்ன? என்று கேட்டார்கள். நீங்கள் இருவரும் எப்போதும் இவ்விடத்திலேயே எழுந்தருளியிருந்து நற்கருமம் புரியும் முனிவர்களுக்கெல்லாம் அருள் பாலிக்க வேண்டும் என்று ரிஷிகள் கூறினார்கள். கங்கை அவர்களை நோக்கி நீங்கள் யாவருமே தீர்த்த ஸ்வரூபமாக நிற்பதால் நான் இங்கிருந்தால் என்ன, இல்லாவிட்டால்தான் என்ன? நீங்கள் யாவருமே கவுதமரிடத்திலேயே இருக்க வேண்டும். நான் மட்டும் தற்சமயம் போகிறேன். உங்களுக்கெல்லாம் ÷க்ஷமம் உண்டாகட்டும் நீங்கள் உலகத்தைப் புனிதமாக்கிக் கொண்டு இங்கேயே இருங்கள் என்றாள். உடனே தேவர்கள் முனிவர்கள் யாவரும் மீண்டும் கங்கையை வணங்கி தாயே! எங்களையெல்லாம் புனிதமாக்கும் நிமித்தமாக நீ இங்கேயே இருக்க வேண்டும் என்று வேண்டினார் அதற்கு அவள், உங்களைவிட என்னிடம் அப்படியென்ன சிறப்பு இருக்கிறது! என்று கேட்டாள்.

அப்போது நதி மங்கையர் அவளை நோக்கி தாயே! மானிடர்கள் செய்த பாபங்களை யெல்லாம் அவர்கள் எங்களைச் சேவிப்பதாலும் எங்களிடம் ஸ்நானதானாதிகளைச் செய்ததாலும் பதினோரு ஆண்டுகளிலும் பெற்று அவற்றைப் பன்னிரண்டாவது ஆண்டில் யாவரும் சிங்கராசியில் பிரகஸ்பதி பிரவேசிக்கும் போது உன்னிடம் வந்து ஸ்நானம் செய்து போக்கடித்துக் கொண்டிருப்போம் ஆகையால் நீ எங்களுக்காகவேனும் தயவு செய்து சிவபெருமானோ இங்கேயே எழுந்தருளியிருக்க வேண்டும் குரு சிங்கத்திற்கு எழுந்தருளியிருக்கும் ஒரு வருஷகாலம் வரையில் இங்கே வந்து உன்னிடத்தில் ஸ்நானம் செய்து எங்கள் பாபத்தை ஒழித்துச் செல்வோம் என்று விண்ணப்பித்தார்கள். அவர்களுடைய வேண்டுகோளுக்கு இணங்கியும் கவுதமருக்குக் கொடுத்த வரம் காரணமாகவும் கங்காதேவியும் சிவபெருமானும் அங்கேயே எழுந்தருளியிருக்கிறார்கள் அந்த நாள் முதல் சிம்மராசியில் குருபிரவேசிக்கும் பொழுதெல்லாம், பிரமாதி தேவர்கள் தீர்த்தங்கள், ÷க்ஷத்திரங்கள் யாவரும் வருவார்கள் ஆகையால் சிங்கராசியில் குரு பிரவேசித்திருக்கும் காலத்தில் பிற தீர்த்தங்களில் ஸ்நானம் செய்வதனால் ஒரு பயனுமில்லை அந்தச் சிங்கக்குரு கழிந்த பிறகு தான் அந்தத் தீர்த்தங்கள் தம் இடத்திலிருக்கும், ஆகையால் அவ்வவற்றிற்குரிய பயன்களை அளிக்க சக்தியுடையனவாக இருக்கும். எப்படியிருப்பினும் கங்கை, நர்மதை, கயை, கோமதி இவற்றில் எந்தக்காலத்திலும் ஸ்நானம் செய்யலாம். சிங்ககுரு வென்பது கணக்கில்லை. தீர்த்த யாத்திரை செய்பவர்கள் முதலில் கோமதி நதிக்குச் சென்று அதன் பிறகே கோதாவரி நதியை அடைந்து மீண்டும் கோமதி நதிக்குச் சென்று ஸ்நானம் செய்தால் சகல பாபங்களும் ஒழியப் பெறுவர். இந்தக் கோதாவரிக்குக் கவுதமி என்றும் பெயர் இப்பொழுது கவுதமி தீர்த்தக்கரையில் எழுந்தருளியிருக்கும் திரியம்பகேஸ்வர ஜோதிர்லிங்க மகிமைச் சொன்னேன்.

இவ்வாறு சூதபுராணிகர் கூறினார். சவுனகாதி முனிவர்கள் அவரை நோக்கி மாதவரே! கங்கை ஜலமயமாக வந்ததாக இந்தச் சரிதத்தில் சொன்னீர்களே அது எங்கிருந்து வந்தது? கவுதம முனிவருக்கு அபகாரம் செய்த துஷ்டப் பிராமணர்கள் அதற்காக என்ன கதியை அடைந்தார்கள்? அவற்றையும் எங்களுக்குச் சொல்லவேண்டும் என்று வேண்டினார்கள். சூதமுனிவர் சொல்லானார். முனிவர்களே, கேளுங்கள் கவுதமரால் பிரார்த்திக்கப் பெற்ற கங்கையானவள் பிரமகிரியிலிருக்கும் அத்திமரத்தின் வேரிலிருந்து புறப்பட்டு வந்தாள். அவ்விடத்தில் கவுதமர் ஸ்நானம் செய்து கிருதார்த்தரானார், அநேக முனிவர்களும் மானுடர்களும் அங்கே புண்ணிய நீராடி கிருதார்த்தர்களானார்கள். அது தோன்றிய இடத்திற்கு கங்காத்துவாரம் என்ற பெயர் பிரசித்தமாக உள்ளது. இனிக் கவுதமத் துவேஷிகளான முனிவர்களின் கதியை சொல்லுகிறேன். அவ்வேதியர்கள், அந்தக் கவுதமி தீர்த்தத்தில் பிரமாதி தேவர்கள் வந்து ஸ்நானம் செய்வதைப் பற்றிக் கேள்வியுற்று தாங்களும் அதிலே நீராட விரும்பி வந்தார்கள். அதைக் கண்டதும் கங்கை. அந்தப் பாவிகள் தன்னிடத்தில் ஸ்நானம் செய்வதை மனம் சகியாமல் மறைய முயன்றாள். உடனே கவுதம முனிவர் கங்கையை நோக்கி தாயே நீ இவ்வாறு மறைய வேண்டாம் இவ்வந்தணர்கள் யோக்கியரானாலும் அயோக்கியரானாலும் என்னுடைய ஆசிரமத்திற்கு வந்து காலம் கழிப்பவர்கள், இவர்கள் செய்த காரியங்களாலேயே நான் உன்னையும் சிவபெருமானையும் இங்கு இருக்கப் பெற்றேன் என்றார். அதற்குக் கங்கை இவர்கள் மிகவும் கொடியவர்கள். துரோகிகள் செய்ந்நன்றி மறந்தவர்கள் நீசர்கள் அகங்காரிகள், கபடவாதிகள், வேடதாரிகள் ஆகையால் இவர்களை விலக்க வேண்டும் என்று கூறினாள். கவுதமரோ தாயே நான் சொல்வதைக் கேட்க வேண்டும் அபகாரஞ் செய்தவர்களுக்கு யார் உபகாரஞ் செய்கிறார்களோ அத்தகைய புண்ணிய புருஷர்களால் நான் பவித்தரமடைகிறேன் என்று லோகநாதரான சிவபெருமானே சொல்லியிருக்கிறார். ஆகையால் அவரது வார்த்தையை நீயும் பரிபாலிக்க வேண்டும் என்று சொல்ல ஆகாய வாணி மீண்டும் கவுதமரே, நீர் சொல்வது உண்மை ஆயினும் அவர்கள் உம்மோடு கூடியிருக்கும் யோக்கியதையை  நீர் அடைவதற்காக வேண்டி அவர்கள் உம்மைப் பிரமகிரியை நூற்றொரு பிரதக்ஷிணம் செய்யச் சொன்னார்கள் அல்லவா! இப்போது, அவர்களும் இந்தப் பிரமகிரியை நூற்றொரு பிரதக்ஷிணங்கள் செய்ய வேண்டும். அதனால் அவர்கள் செய்த துஷ்கிருத்தியத்திற்குப் பிராயச்சித்தம் உண்டாகி யோக்கியர்கள் ஆவார்கள் என்றாள் அதைக்கேட்டுக் கொண்டிருந்த முனிவர்கள் அப்படியே பிரமகிரியை நூற்றொரு முறை வலம் வந்து நின்றார்கள்.

பிறகு கவுதமர் கங்கையை தியானித்து, கங்காதேவியே இவர்களுக்கெல்லாம் அருள்புரிய வேண்டும்! என்று இறைஞ்சினார். கங்கையும் கவுதமரின் விருப்பத்திற்கேற்ப அவர்களை அநுக்கிரகித்தாள். அதன்பிறகு அவர்கள் கங்காத்துவாரத்தின் கீழ்ப்பக்கத்தில் தர்ப்பையால் செய்த பவித்திரம் அணிந்துமுறைப்படி ஸ்நானம் செய்தார்கள். அந்த இடம் குசாவர்த்தம் என்ற பெயரைப் பெறலாயிற்று அங்கு கங்கை பிரத்யக்ஷமாக இருந்தாள் அகல்யா தேவியை அவமதித்துப் பேசிய முனிபத்தினிகளும் அங்கு ஸ்நானம் செய்து சிவதரிசனமும் செய்து மட்டற்ற  மகிழ்ச்சியுடன் இருந்தார்கள். கங்காதுவாரம் குசாவர்த்தம், திரியம்பகேஸ்வர சன்னதி, புண்ணிய தீர்த்தங்கள் கங்கையைத் தரிசித்த கோடி தீர்த்தம் இவ்விடங்களில் ஓரிடத்திலாவது ஸ்நானம் செய்வதன் மீண்டும் கர்ப்பகாசாயப் பையை அடைய மாட்டார்கள். அத்தகைய கோதாவரியின் மகிமையை நான் என்னவென்று சொல்லுவேன். பிரம விஷ்ணு ருத்திரர்களும் தினமும் அதனைச் சேவிப்பார்கள். கோதாவரியைச் சேவிக்காதவர்கள், தேவர்கள், முனிவர்கள், பெரியோர்கள், ஒருவருமிலர் சாமானிய மானுடன் இந்தத் தீர்த்தத்தில் ஸ்நானம் செய்தால் சகல சுகங்களையும் அனுபவித்து மோக்ஷமடைவான். இதன் சிறப்பை அறிந்தவன் முறைப்படி ஸ்நானம் செய்தால் அவன் வெறும் பேற்றை என்னவென்று சொல்வேன்? பூர்வத்தில் ஸ்ரீராமபிரான் இந்த கோதாவரி நதியைக் கண்டு தான் உலகத்தைப் பவித்திரஞ் செய்விக்க எண்ணிப் பஞ்சவடி தீரத்தில் இருந்தான் முதலில் கங்கையும் பின்னர் சிவபெருமானும் அதற்குப் பின்பு விஷ்ணுவுமாக இம்மூவர் பொருந்தியிருக்கும் புண்ணிய ÷க்ஷத்திரத்தில் வசிப்பவர்களுக்கு துர்லபமானது ஒன்றுமில்லை. பிறந்தது முதல் மரணம்வரையில் காசி ÷க்ஷத்திரத்தில் வாசஞ் செய்தவன் அடையும் பயனை இந்தப் பஞ்சவடி முதலில் உலகசங்கரனாகிய திரியம்பகேஸ்வரனையும் பிறகு ஸ்ரீராமனையும் பிறகு கங்காத் துவாரத்தையும் தரிசிப்பவர்கள் சகல பாபங்களிலிருந்தும் நீங்குவார்கள். இந்தத் தீர்த்தங்களில் ஸ்நானம் செய்தவர்கள் ஜீவன் முக்தர்கள் கவுதமரும் மற்ற முனிவர்களும் ஒன்று கூடி அங்கு சுகிக்திருந்தார்கள் கவுதமி நதியின் மகிமையையும் திரியம்பகேஸ்வர பிரபாவத்தையும் நான் உங்களுக்குச் சொல்லி விட்டேன் இவற்றைப் பக்தியோடு கேட்டவர்கள் இஷ்டகாசியங்களைப் பெற்று மகிழ்வார்கள் இனி வைத்திய நாதேஸ்வரப் பிரபாவத்தைச் சொல்லுகிறேன்.

53. இராவணன் வலிமைபெற்ற கதையும் வைத்திய நாதேஸ்வர மகிமையும்

சவுனகாதி முனிவர்களே! நான் சொல்வதை அன்போடு கேளுங்கள்! துரகங்காரியும் துஷ்டர்களையே விரும்புகிற அரக்கனுமான இராவணன் பூர்வத்தில் கைலாச கிரியில் சிவபெருமானை ஆராதித்துப் பெருமான் பிரத்யக்ஷமாகாமையால் ஹிமோத்கிரியின் தென் திசையிலுள்ள ஒரு வனத்தில் குண்டந்தோண்டி அதில் அக்னி வளர்த்து அதன் அருகே பார்த்திப லிங்கப் பிரதிஷ்டை செய்து அந்தக் குண்டத்தில் ஹோமஞ் செய்தான் அப்போதும் சிவபெருமான் காட்சியளிக்காததால் தன் தலைகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொன்றாக அறுத்து ஒன்பது சிரங்கள் வரையில் ஹோமாக்கினியில் இட்டான். அப்பொழுதும் சிவதரிசனம் கிடைக்காததால் இராவணன் தன் பத்தாவது தலையையும் வெட்டிக் கொள்ள உடைவாளை எடுக்கும் போது சிவபெருமான் மனந்தாளாது பிரத்யட்சமாய் இராவணனது கையைப் பிடித்துக் கொண்டு உனக்கு நான் பிரசன்னமானேன் உனக்கு விருப்பமான வரங்களைக் கேள் என்றார்.

அதற்கு இராவணன் மகேஸ்வரரே! என் மீது நீர் தயை கொண்டு பிரசன்னமாக இருந்தால் எனக்குப் பகைவருக்கு இளைக்காத வலிமையைத் தந்து நான் அறுத்தெறிந்த என் சிரங்கள் எனக்கு மீண்டும் உண்டாகவும் அருள் புரியவேண்டும்! என்று வேண்டினான். அடியாருக்கு எளியரான சிவபெருமான் அவன் இஷ்டப்படி அபரிமிதமான பலமும் முன் போலப் பத்துத் தலைகளும் பெறும்படிச்செய்து நோயற்றவாழ்வையும் தந்தருளினார். இராவணன் அவ்வரங்களைப் பெற்றுக் கொண்டு சிவபெருமானைப் பணிந்து விடை பெற்றுத் தன் நகரத்திற்குச் சென்றான். இதையறிந்த தேவர்களும், முனிவர்களும் ஆகா அந்த இராவணனால் இனிமேல் நமக்கு என்ன துன்பங்கள் விளையுமோ? என்று நினைத்துப் பயந்து என்ன செய்வோம்! எங்கே போவோம்? இராவணனிடம் துஷ்டர்களான அரக்கர்களெல்லோரும் சகாயஞ் செய்து கொண்டிருக்கிறார்களே. எவ்வகைய காரியத்தையும் சாதிக்க வல்லமையுடையவனாயிருப்பானே! என்று துக்கித்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போது நாரதமுனிவர் அங்கே வந்தார். தேவர்கள் அவரை வணங்கி திரிலோக சஞ்சாரியே! சகல காரியங்களையும் நிறைவேற்றத்தக்க ஆற்றல் கொண்டவரே, துஷ்டனான இராவணன் சிவப்பிரசாதம் அடைந்து விட்டானாகையால் எங்களுக்குக் கஷ்டமுண்டாக்கச் சித்தமாக இருக்கிறான். அவன் எங்களைத் துன்புறுத்தினால் நாங்கள் எங்கே போவோம்? என்று வருந்தினார்கள். அதற்கு நாரதமுனிவர் தேவர்களே மகரிஷிகளே நான் ஒரு உபாயம் சொல்லுகிறேன் என்று கூறி அங்கிருந்து புறப்பட்டு மகதி என்ற வீணையை மீட்டிக் கொண்டே சென்று இராவணனைச் சந்தித்தார்? நாரதமுனிவர் அவனை நோக்கி, இராவணா! சிவபூஜையை பக்தியோடு நீ செய்து வருவது பற்றி எனக்கு மெத்த மகிழ்ச்சி நீ கிருதார்த்தன் உன்மீதுள்ள பிரியத்தால் ஒன்று கேட்கிறேன் அதை நீ சொல்ல வேண்டும் இவ்வளவு மகிழ்ச்சியோடு இருப்பதற்கு காரணம் என்ன? என்று கேட்டார், அவரை இராவணன் உற்று நோக்கி நாரதரே நான் சிவார்ச்சனை செய்த பரமபதியின் அனுக்கிரஹத்தால் பெரும் வல்லமை பெற்றிருக்கிறேன் என்றான். அதற்கு நாரதர் இராவணா நீ சிவபெருமானை எப்படி அருச்சித்தாய்? நீ எனக்கு ஆப்தனாகையால் அதைச் சொல்லவேண்டும் என்றார்.

நாரதா முனிவரே! நான் பூர்வத்தில் கைலாயகிரியை அடைந்து பெருந்தவஞ் செய்தேன். யான் செய்த அருந்தவத்திற்குச் சிவபெருமான் தரிசனம் தராததால் அங்கிருந்து புறப்பட்டு ஹிமாலய மலையின் தென் திசையிலுள்ள வனம் ஒன்றில் கிரீஷ்ம காலத்தில் பஞ்சாக்கினி மத்தியிலும் மழைக்காலத்தில் வெளியிலும் குளிர் காலத்தில் ஜலத்திலும் இருந்து தவஞ் செய்தேன் அப்படித் தவம் செய்தும் சிவபெருமானுக்கு என் மீது தயவுண்டாகவில்லை. அதனால் எனக்குப் பெருவருத்தம் உண்டாயிற்று நாம் பார்த்திவ லிங்கத்தைக் கந்தப் புஷ்பங்களால் அருச்சித்து நிவேதனம் செய்து நமஸ்கரித்துக் கீதவாத்தியங்கள் வாசித்து நிருத்தஞ் செய்து சிவப்ரீதியான யாகங்கள் செய்தேன். அப்போதும் சிவபெருமான் காட்சியளிக்காததால் துக்கமிகுந்து செயலற்று என் தவத்தை நிந்தித்துக் கொண்டு அந்த யாகாக்கினியில் என் பிராணனையே விட்டுவிட வேண்டும் என்று கருதிச் சிரங்களைச் சந்தனாதிகளால் அலங்கரித்து ஒவ்வொன்றாக அறுத்து ஒன்பது சிரங்களை ஹோமஞ் செய்து, பத்தாவது தலையையும் அறுத்து எறிய உத்தேசித்தேன். அப்போது சிவபெருமான் தேஜோரூபியாய்ப் பிரசன்னமாகித் தலையை அறுக்க வேண்டாம் என்று என் கையைப் பிடித்துக் கொண்டு உனக்கு வேண்டும் வரத்தைக் கேள் என்றார். அப்போது நான் அவரைத்தரிசித்து உலகத்திலுள்ளவர்களை யெல்லாம் ஜெயிக்கத் தக்கப்பலத்தை எனக்குக் கொடுக்க வேண்டும் என்று கேட்டேன் அவர் அப்படியே ஆகுக என்று வரங்கொடுத்து, என் சிரங்களை மீண்டும் பழையபடி உண்டாகச் செய்து நோயின்றி வாழ்க என்று வாழ்த்தித் தயவுடன் பார்த்தார் அந்தச் சிவப்பிரசாதத்தால் யாவும் எனக்குக் கிடைத்தன. அந்த வரத்தைக் கேட்டதும் நான் மகாதேவா! இவ்வாறே தாங்கள் இங்கு கோயில் கொண்டிருக்கவேண்டும் என்று பிரார்த்தித்தேன். சிவபெருமான் வைத்திய நாதேஸ்வரர் என்ற பெயருடன் அங்கேயே எழுந்தருளியிருக்கிறார். பிறகு நான் சிவபெருமானை வணங்கித் திரிலோகத்தையும் வென்று கைப்பற்ற விரும்பி வந்தேன்! என்றான்.

உடனே நாரதர் புன்சிரிப்போடு அசுரேசா! உனக்கு இதமான வார்த்தைகளைச் சொல்லுகிறேன் கேள். சிவபெருமான் நீ கோரியபடியே உனக்கு வரங்கள் கொடுத்ததாகச் சொன்னாயல்லவா அவ்வாறு கொடுத்தது உண்மையென்று எண்ண வேண்டாம். அந்தச் சிவபிரான், விஷபானஞ் செய்து தன்னை மறந்தவராகையால் அவற்றை நீ நம்பலாமா? ஆயினும் அவர் கொடுத்த வரம் கைகூடுமா கைகூடாதா என்பதை நான்சொல்லும் காரியத்தைச் செய்து பரிஷித்து அதன் மூலம் தெரிந்து கொள்ளலாம் நீ எனக்கு அன்பன். அதனால் சொல்கிறேன் கேள் அதாவது உன் வல்லமையைப் பரிசோதிக்க நீ எவ்வாறாயினும் சிவபெருமான் வீற்றிருக்கும் திருக்கையிலாய மலையை உன்கைகளால் தூக்கி எடுக்க வேண்டும் நீ அதைத் தடையின்றி எடுத்தாயானால் அவர் உனக்குக் கொடுத்த வரங்கள் கை கூடியிருக்கின்றன என்று நினைத்து, அம்மலையை மீண்டும் முன்னிருந்த படியே வைத்து விடு என்றார்.

இராவணன் அவர் சொன்னதைச் சத்தியமாக நம்பி, கைலாய கிரிக்கு விரைந்து சென்றான். அங்கு சிவபெருமான் பிரமதகணங்களுடன் கொலுவீற்றிருப்பதும் பிரமாதி தேவர்கள் சிவசேவை செய்து கொண்டிருப்பதும் கற்பாந்தத்திலும் சிறிது கூட அசையாததாகவும் உள்ள அவ்விரசிதகிரியைத் தன் இருபது கரங்களாலும் அசைத்து எடுத்தான். அதனால் அந்த மலையில் இருந்த மரங்கள் எல்லாம் குலுங்கின. அருவிகள் வழிதவறின. பிரமன் தன் நிலை தவறி விழுந்தான். விஷ்ணு மூர்ச்சையடைந்தார். தேவர்கள் பிரமத கணங்கள் மாமுனிவர்கள் முதலிய யாவரும் தம்மை மறந்து இறந்தவர்களைப் போலானார்கள். அப்போது சிவபெருமான் இஃதென்ன என்று யோசித்தார். பார்வதிதேவி சிவ சன்னிதானத்திலேயே அவர் பக்கத்திலேயே இருந்ததால் நிர்பயமாக சிரித்து சிவபெருமானைப் பார்த்துக் கைகூப்பி வணங்கி ஸ்வாமி! தங்கள் சீடனான இராவணனக்கு பெருவலிமை உண்டாக வரங்கொடுத்தீர்கள் அவன் யோக்கியதை மிகுந்தவனாகையால் தக்க பயன் உண்டாயிற்று என்றாள். உடனே சிவபெருமான் இராவணன் மீதுகோபம் கொண்டு இராவணா! உன் கரங்களைச் சங்கரிப்பதற்காக ஒரு புருஷன் ஜனித்து அவற்றை விரைவில் சங்கரித்து விடுவான் என்று சாபமிட்டார். அங்கு வந்திருந்த நாரதமுனிவர் அதைக் கேட்டு மகிழ்ந்திருந்தார். இராவணனும் கைலாயமலையை பழைய படியே வைத்து விட்டு சிவபெருமான் தனக்குக் கொடுத்தவரம் கைகூடியது என்று கருதி கர்வத்துடன் தன் வழியே சென்று அன்று முதல் உலகத்தைத் துன்புறுத்தித் தன் ஆக்ஞையைச் செலுத்தி வந்தான் இதுவே வைத்திய நாதேஸ்வர மகிமை. இந்த மகாத்மியத்தைக் கேட்டவர்களுடைய பாபங்கள் நீங்கும். இனி போகேஸ்வர ஜோதிர்லிங்க மகிமையையும் அதன் உற்பத்தியையும் சொல்லுகிறேன் என்று சூத முனிவர் சொல்லத் தொடங்கினார்.

54 பறக்கும் தாருகை வனமும் போகேஸ்வரர் மகிமையும்

சவுனகாதி முனிவர்களே! ஒரு காலத்தில் தாருகை என்ற அரக்க மங்கை ஒருத்தி பார்வதிதேவியை பூஜித்து தேவியால் பெருவலிமை பெற்று கர்வத்துடன் வாழ்ந்து வந்தாள். அவள் கணவனான தாருகன் என்பவனும் பெருவலிமை பெற்று பலவானாகத் திகழ்ந்து வந்தான். அவன் பல அசுரர்களுடன் சேர்ந்து கொண்டு பல இடங்களிலும் போர் செய்து வெற்றி பெற்று, யாகங்களையும் தர்மங்களையும் அழித்துக் கொண்டிருந்தான். அவன் மனைவி தாருகைக்கு மேலைக் கடற்கரையில் பதினாறுயோசனை பரப்பளவுடைய வனமே வாசஸ்தானமாக இருந்தது. அவள்பார்வதி தேவியை நோக்கிக் கடுந்தவஞ்செய்து பெற்ற வரத்தின் காரணமாக அந்த வனம் அவள் நினைக்கும் இடத்திற்கெல்லாம் செல்லத்தக்கதாக இருந்தது. ஆகையால் அந்தத் தாருகை ஓடும் இடம் எல்லாம் அந்த வனமும் அதிலுள்ள விருட்சங்கள் தடாகங்கள் மாடமாளிகைகள் அசுரர்கள் அவர்களது குடும்பங்கள் முதலியயாவையும் உடன் கொண்டு செல்லத்தக்கதாக இருந்தது தாருகையும் தாருகனும் அந்த வனத்துடன் ஆங்காங்கே சென்று எல்லோரையும் துன்புறுத்தி வந்தார்கள். அதனால் எல்லோரும் பயந்து அவுர்வ முனிவர் என்ற தவமுனிவர் ஒருவரிடம் சென்று ஸ்வாமி! நீங்கள் தயை செய்யாவிட்டால் நாங்கள் யாவரும் அசுரர்களால் அழிந் தொழிந்து விடுவோம் நீங்களோ சர்வ காரியங்களையும் நிறைவேற்றக் கூடிய வல்லமையுடையவர் நீங்கள் விழித்துப் பார்த்தாலே எல்லோரும் ஓடிப்போய் விடுவார்கள். இல்லாவிட்டால் சாம்பலாவார்கள் தங்களிடத்தில் சிவதேஜசு பிரகாசிக்கிறது. தங்களைச் சரணடைந்தவர்களுக்குத் தங்கள் சந்திரனைப் போலச் சுகங் கொடுப்பவர் என்று பற்பலவாறாகவும் துதித்துப் போற்றினார்கள் அவுர்வமுனிவர் அடுத்தவரைக் காப்பாற்றும் பண்புடையவராக இருந்ததால் நீங்கள் எதற்கும் அஞ்சவேண்டாம் என்று சொல்லி இராட்சதர்களுக்குச் சாபமிட்டார்.

இராக்கதர்கள் இனிமேல் இவ்வாறு உலகத்திலுள்ள உயிரினங்களைத் துன்பப்படுத்தினாலும் தர்மங்களை அழித்தாலும் யாகங்களைச் சிதைத்தாலும் அவர்கள் உடனே மரணமடைவார்கள் என்பது அந்தச் சாபமாகும் இவ்விதமாக அவுர்வ முனிவர் அரக்கர்களைச் சபித்து தம்மைச் சரணடைந்தவர்களை அனுப்பிவிட்டு மீண்டும், தவஞ் செய்யத் தொடங்கினார். அவ்வசுரர்களுக்கு அவுர்வ முனிவர் சாபமிட்டதை அறிந்ததும் தேவர்கள் உற்சாகமடைந்து போருக்கு எழுந்து பயமின்றி அவ்வசுரர்களை எதிர்த்துச் சண்டையிட்டார்கள்.

அந்தப் போரில் அசுரர்கள் பலர் மாண்டு மடிந்தார்கள் பெருந்தோல்வியைக் கண்டதும் அவர்கள் யோசிக்கலானார்கள் அவுர்வ முனிவரது சாபத்தால் அசுரர்கள் அபஜயமடைவதை வனத்தோடு வந்து கொண்டிருந்த தாருகை கேள்விப்பட்டு அசுரர்களே! நான் பூர்வத்தில் தவஞ்செய்து நான் செல்லும் இடம் எல்லாம் இந்த வனத்தோடும் இதிலுள்ள எல்லாவற்றோடும் பின் தொடர்ந்து வரப் பார்வதி தேவியிடம் வரம் பெற்றிருக்கிறேன். ஆகையால் நமக்கு எந்த வகையிலும் கஷ்டமே வரமாட்டாது இந்த வனத்தைச் சலத்திலேயே நிறுத்திக் கொண்டு வசித்தால் சிறிதும் கஷ்டமின்றிச் சுகமாக வாழலாம் என்றாள். அதைக் கேட்ட அரக்கர்கள் மிகவும் மகிழ்ந்து நீ மகா புண்ணியவதி எங்களுக்கு மகாராணியான உன்னால் நாங்கள் அவுர்வ முனிவரின் சாபத்தை ஏற்றிருந்தும் இறந்து போகாமல் காப்பாற்றப்பட்டோம் என்று சொன்னார்கள். அரக்கர்கள் அனைவரும் தாருகையே தங்களை இரட்சிப்பாள் என்று தீர்மானித்து. இந்த வனத்தோடும் இவளோடும் நாம் அப்படியே விரைவாகச் சென்று, எங்கேயாவது சென்று சுகித்திருப்போம் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது தேவர்கள் அனைவரும் மீண்டும் போர்செய்ய வந்தார்கள். அமரர்களால் அலைப்புண்டு அசுரர்கள் வருந்தினார்கள். அதைக் கண்ட தாருகை அந்த வனத்தை சுகமான இடத்திற்கு கொண்டு செல்ல நினைத்து பார்வதி தேவியை ஜய ஜய என்று துதித்தாள். உடனே சிறகுடைய பர்வதம் எவ்வாறு விரைந்து பறக்குமோ அதுபோல, அந்த வனமானது அங்கிருந்து மேலே கிளம்பி சமுத்திர மத்தியில் போய்ச் சேர்ந்தது. அதனால் உபவனம், நீர்நிலை, கோட்டை, மாட மாளிகைகள் சுவர்க்கத்தை விடச்  சுகங்கொடுக்கும் உத்தியானவனம் முதலியவற்றுடன் அந்த வனம் வந்து சேர்ந்ததால் அவர்கள் அனைவரும்பயமில்லாமல் இருந்தார்கள் அதுமுதல் அவுர்வ முனிவரின் சாபத்துக்கு அஞ்சி பூமிக்கு வராமல் சமுத்திரத்திலேயே வாழ்ந்தனர் யாராவது மரக்கலங்களில் ஏறிவரக்கண்டால் அவர்களைக் கொலை செய்வதும் விலங்கிடுவதும் சிறையில் தள்ளுவதுமாகத் துன்புறுத்தி வந்தார்கள். முன்பு பூமியில் இருக்கும்போது செய்த துன்பங்களைப் போலவே சமுத்திரத்தில் அகப்பட்டவர்களையும் துன்புறுத்தி வந்தார்கள்.

இந்நிலையில் வியாபார விஷயமாகவாவது, விநோதார்த்தமாகவாவது ஓடம் ஏறிக் கடலில் எவராவது வரக்கண்டால். அசுரர்கள் தங்கள் மாயையால் கண்ணிற்குப் புலப்படாமல் மறைந்து நின்று சமீபித்ததும் அவர்களையெல்லாம் அந்த ஜலமார்க்கமாகவே இழுத்துச் சென்று தங்கள் வனத்தில் பலவாறு துன்புறுத்திவந்தார்கள். இவ்விதம் அசுரர் செய்யும் கொடுமைகளால் மனிதர்களும் தேவர்களும் வருந்தினார்கள். அசுரர்களால் சிறையிலடைக்கப் பட்டவர்களில் சுப்பிரியன் என்ற வணிகர்குல உத்தமன் ஒருவன் சிறந்த சிவபக்தனாக இருந்தான் அவன் தன்னுடன் சிறையில் அடைப்பட்டிருந்தவர்களை நோக்கி, அன்பர்களே! நாம் சிவ பூஜை செய்யும்வரையில் இத்தகைய துன்பங்களை அனுபவிக்க வேண்டியதுதான் நாம் விரைவில் சிவலிங்க அர்ச்சனையைச் செய்யத் துவங்க வேண்டும் என்றான். பிறகு அவன் அவர்களுக்குச் சிவ மந்திரங்களை உபதேசித்து பார்த்திப லிங்க பூஜை செய்யப் பழக்கி, தானும் அவர்களுடன் சிவலிங்க அர்ச்சனை செய்துவந்தான். அவர்களில் சிலர் சிவத்தியானத்தில் இருந்தார்கள்.

சிலர் மானஸ பூஜையால் சகல துன்பங்களும் நீங்கியிருந்தார்கள். வைசியன் சுப்பிரியனோ பார்த்திவலிங்கத்திற்கு விசேஷபூஜையை இடைவிடாமல் விதிப்படி செய்து வந்தான். சிவபூஜை செய்யத் தெரியாதவருக்கு அந்தப் பூஜையை முறைப்படி செய்யக் கற்றுக் கொடுத்தான். அதனால் சிறையிலிருந்தவர்கள் எல்லோரும் ஸ்ரீபஞ்சாக்ஷர மந்திரத்தால் சிவத்தியானத்தில் இருந்தார்கள் சுப்பிரியன் என்பவன் சிவப்பிரியனானான். அவன் சிவயோகத்தில் இருக்கும்போது சிவபெருமான் மகிழ்ந்து. தன்னை மறந்த நிலையில் இருந்த சுப்பிரியனை விழிக்க வைத்தார். அவர்கள் யாவரும் சிவபூஜை செய்து கொண்டிருந்த காலம். ஆறு மாதங்களாகியதால் அசுரர் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அறிந்து வரும்படிச் சேவர்களை அனுப்பி வைத்தார்கள். அங்கு சிவபெருமான் பிரத்தியட்சமாகியிருப்பதைக் கண்ட சேவகர்கள் விரைந்து சென்று தாருகனிடம் இந்தச்செய்தியை அறிவித்தார்கள். தாருகன் உடனே சிறைச்சாலைக்கு வந்து சிவப்பிரியனைப் பார்த்து நீ எப்படித் தியானஞ் செய்கிறாய்? அதைச் சத்தியமாகச் சொல் என்றான். அதற்குச் சிவபிரியனும் அவனுடன் இருந்தவர்களும் ஒன்றும் சொல்லாமல் நீயே தெரிந்து கொள்வாய் என்று சொன்னார்கள் தாருகன் கோபங்கொண்டு அசுரர்களை அழைத்து இவர்கள் எல்லோரையும் கொல்லவேண்டும்? என்று கட்டளையிட்டான் அவன் கட்டளையை ஏற்று அசுரர்கள் பற்பல ஆயுதங்களைத் தூக்கி வந்தார்கள் வைசியச் சிரேஷ்டனாகிய சிவப்பிரியன் பயங்கொண்டு கண்ணுதல் பெருமானை நினைத்து சிவபெருமானே! அபயம்! சங்கரா! அபயம்! ஸர்வமும் தானேயானவரே! அபயம் என்று தியானித்தான். உடனே பூமியிலிருந்து ஓர் ஆலயம் நான்கு வாயில்களோடும் தோன்றியது அதன் மத்தியில் திவ்விய தேஜோமயமான சிவபெருமானின் திருவுருவமும் தோன்றி நான் உங்களைக் காக்கிறேன் என்று அபய வார்த்தகளைச் சொல்லி பாசுபதாஸ்திரத்தைக் கொடுக்கவே சுப்பிரியன் அந்த பாசுபதாஸ்திரத்தால்; சகல அசுரர்களையும் சங்கரித்துவிட்டான். இவ்வாறு அசுரர்கள் யாவரும் அழிந்த பிறகு, இவ்வனத்தில் இனி வர்ணாசிரம தர்மங்கள் செவ்வனே நடைபெறும், ஆசிரமவாசிகள், தத்தமது ஆஸ்ரம ஒழுக்கங்களை நீங்க மாட்டார்கள். துஷ்டர்கள் இங்கிருக்க இடமில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது அரக்கி தாருகை உமாதேவியைக் குறித்துத் தோத்திரஞ் செய்தாள், உடனே பார்வதிதேவி அவள் முன்பு தோன்றி, உனக்கு என்ன வரம் வேண்டும்? என்று கேட்டாள். அதற்கு தாருகை என் வமிசம் அழியாதிருக்க வேண்டும் என்றாள். அதற்குத் தேவி உன் வமிசத்தைக் காக்கிறேன் என்று வரங்கொடுத்து சிவபெருமானிடம் சென்றாள். அங்கு பார்வதிதேவி சிவபெருமானை நோக்கி ஸ்வாமீ! நான் அசுர வமிசத்தை இரட்சிப்பதாக வரங்கொடுத்து வந்திருக்கிறேன் தாங்களும் அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்றாள்.

சிவபெருமான் கோபித்தார் அதற்குப் பார்வதிதேவி தாங்கள் சொன்ன வார்த்தை யுகாந்தரத்தில் அவசியம் நிகழுமாக அதுவரையில் அரக்கர்களும் இருக்கவே வேண்டும் இந்தத் தாமத சிருஷ்டியில்லாவிட்டால் பிரளயம் உண்டாகாது அரக்கி தாரகை பலமுள்ளவள் அவளது ஆட்சியில் அசுரவிருத்தி உண்டாகட்டும். அவர்கள் இந்த வனத்தில் வசித்திருக்கட்டும் என்றாள் சிவபெருமான் தேவியின் விருப்பம் கைகூடவும் சிறையிலிந்தவர்களுக்குத் தாம் கொடுத்த வரம் சரிவர நடக்கவும் கருதி நான் இங்கேயே இருந்து அசுரர்களால் தீமைகள் நிகழாதவாறு செய்வேன். மஹாசேன ராஜன் மகன் வீரசேனன் என்பவன் கலியுகம் முடிந்து கிருதயுக ஆரம்பமாகுங்காலத்தில் என்னைத் தரிசித்து என்னை பூஜித்து, அதன் பயனாகச் சக்கரவர்த்தியாவான். அவனுக்கு பலவித தர்மங்களை உபதேசித்து விருத்தி செய்ய வேண்டும் என்றார். இவ்வாறு சிவபெருமானும் பார்வதிதேவியும் உரையாடி விட்டுப் போகேஸ்வரர் என்ற பெயரில் அங்கு சிவபெருமான் எழுந்தருளியிருக்கிறார்.

இவ்வாறு சூத முனிவர் சொன்னார். அவரை நைமிசாரணிய வாசிகள் நோக்கி, சூதமுனிவரே! வீரசேனன் என்ன காரணமாக அங்கு போனான்? என்று கேட்டார்கள் சூத புராணிகர் அதைக் கூறலானார்.

நைஷதம் என்ற பட்டணத்தில் வேந்தர் குலத்தில் மஹாசேனராஜனுக்குப் புத்திரனாக வீரசேனன் தோன்றி அகண்டமான பார்த்திவலிங்க பூஜையைப் பன்னிரண்டு ஆண்டுகள் செய்து சிவபெருமானைத் தரிசித்து, மரத்தால் ஒரு மீனைச்செய்து அதை ஈயத்தால் அலங்கரித்து அதற்கு மாயாசக்தி உண்டாக்கிக் கொடுக்கப் பெற்றான். அவனிடம் சிவபெருமான் நீ ஏராளனமான மரக்கலங்களுடன் மிலேச்ச சேனையோடு தாருகையின் வனத்திற்குச் செல் அந்த வனத்தில் நீ தனியாக சென்று என்னால் படைக்கப்பட்டுள்ள திருக்கோயிலில் போகேஸ்வர லிங்கத்திற்கு பூஜை செய்து, பாசுபதாஸ்திரத்தைப் பெற்று பார்வதிதேவியின் பரிபூரண கடாட்சத்தையும் பெற்று தாருகை முதலிய அரக்க மங்கையரையும் தாருகன் முதலிய அரக்கர்களையும் சங்கரிப் பாயாக உன்னைக் கண்டதுமே அந்தத் தாருகையின் வலிமை சிறிதுமில்லாமல் விலகிவிடும் என்றார்.

அவ்வாறு விரசேனன் வரம்பெற்றுச் சர்வசக்தனாகி தாருகையின் வனத்தை அடைந்து அரக்கர்களையெல்லாம் சங்கரித்து அங்கேயே அரசாண்டான், இதுவே போகேஸ்வர ஜோதிர்லிங்க மகாத்மியமாகும். இனி இராமேஸ்வர ஜோதிர்லிங்கத்தின் மகிமையைச் சொல்லுகிறேன்.

55. ஸ்ரீராமர் பெற்ற வரமும் இராமேஸ்வர மகிமையும்

சவுனகாதி முனிவர்களே! சிவசரிதங்களைக்கேட்க விரும்பிய நீங்கள் இராமேஸ்வர ஜோதிர்லிங்க மகிமையைப் பக்தியுடன் கேளுங்கள். அது சகல பாவங்களையும் அகற்ற வல்லது.

ஒருகாலத்தில் அயோத்தி தேசத்து தசரத சக்கரவர்த்தியின் திருக்குமாரரான ஸ்ரீராமர் தன் தம்பி லக்ஷ்மணரோடும், சுக்ரீவன் முதலிய பதினெட்டுப் பதுமத் தொகையுடைய மஹாபலசாலிகளாகிய வானர வீரர்களோடும் கூடித்தெற்குக் கடற்கரையை அடைந்தார். அங்கே அவர் தங்கி தம்பியாலும் சகல வானர வீரர்களாலும் சேவிக்கப்பட்டு ஜனகராஜ குமாரியான சீதாதேவி என்னுடன் எப்பொழுது கூடி வாழ்வாள் என்று கவலைப் பட்டார். இந்தச் சமுத்திரமானது மிகவும் பெரிதாக இருக்கிறதே. தாண்டிச் செல்ல வேண்டிய என் சைன்னியங்களோ, வானரச் சேனைகளாக இருக்கின்றன. எனக்குப் பகைவனான இராவணன் திருக்கைலாய மலையையே தன் கைகளால் தூக்கிய மகாபல பராக்கிரமசாலி! இது எவ்வாறு நடக்குமோ? என்று ஸ்ரீராமர் துக்கப்பட்டுத் தம் தம்பியைப் பார்த்து,

தம்பீ! லக்ஷ்மணா! எனக்குத் தாகமாக இருப்பதால் ஜலம் வேண்டும் என்று கூறினார். அவர் விருப்பத்தை அவர் அருகில் இருந்த வானர வீரர்கள் உணர்ந்து கொண்டு அதிவிரைவில் புனிதமான தீர்த்தத்தைச் சேகரித்துக் கொண்டு வந்து வைத்து, சுவாமி! தூய நன்னீர் கொண்டு வந்திருக்கிறோம். இதைப் பருகலாம் என்றார்கள். ஸ்ரீராமர் அந்த ஜலகும்பத்தைக் கையில் எடுத்துச் சிவபூஜை செய்யாததை நினைத்துக் கொண்டு, வானர வீரர்களே, நான் சிவபூஜை செய்யும் வழக்கம் உடையவன் என்பதை நீங்களும் அறிவீர்களே! நான் இன்னும் சிவபூஜை செய்யாததால் நீர் அருந்துவது யுக்தமல்ல என்று கூறித் தண்ணீர் பருகுவதை நிறுத்திவிட்டுப் பார்த்திவலிங்கம் ஒன்றை உருவாக்கினார். அந்த லிங்கத்திற்கு ஆவாஹனம் முதல் நமஸ்காரம் இறுதியாகவுள்ள பூஜை முழுவதையும் கிரமப்படிச் செய்து சிவபெருமானைப் பலவிதத் தோத்திரங்களால் துதித்து. சங்கரா! இந்தக் கடல் நீர் விசேஷமானது, என் பகைவனான இராவணன் மிகவும் பலவான் என்வசமோ மனோவிகாரமுடைய வானரங்களே சேனைகளாக இருக்கின்றன. இந்தச் சமயத்தில் உம் திருவருள் கடாட்சம் மிகுதியாக வேண்டும். இராவணன் உமக்கு அன்பனாகையால் மானிடரால் ஜெயிப்பதற்கு அசாத்தியமாக இருக்கிறான், உலக உபகாரமான இந்த இராவண சங்கார விஷயத்தில் கருணைவைத்தருள வேண்டும் என்று பிரார்த்தித்துப் பிரதக்ஷிணம் செய்து சிவமந்திரத்தியானத்துடன் புனர்பூஜை செய்து, கல்லல வாத்தியத்தை முழக்கினார். அப்போது சிவபெருமான் அவரது பூஜைக்கு மகிழ்ந்து சகல பரிவாரங்களோடும் உண்மை வடிவமாகக் காட்சியளித்து ஸ்ரீராமா உனக்குச் சுபம் உண்டாகுக என்று கூறினார் அவருடைய திவ்வியமங்கள தேஜோரூபத்தை ஸ்ரீராமர் தரிசித்து மீண்டும் முறைப்படி அர்ச்சனை செய்து பலவிதத்தோத்திரங்களால் துதித்து; வணங்கி இராவணனை ஜெயிக்கத்தக்க வரங்களை எனக்குத் தந்தருள வேண்டும் என்று பிரார்த்தித்தார் சிவபெருமான் நீ விரும்பியவாறே உனக்கு ஜெயம் உண்டாகும் என்று கூறினார் ஸ்ரீராமர் தான் பருகும்படிச் சேகரித்து வைத்த ஜலத்தை சிவபெருமானுக்கு சமர்ப்பித்து அதைப் பருகி மீண்டும் சிவபெருமானை நோக்கி சுவாமி! இந்தத் திருவுருவத்தோடு இங்கேயே கோயில் கொண்டருளி எல்லோரையும் புனிதராக்க வேண்டும்! என்று பிரார்த்தித்தார் அவ்வாறே சிவபெருமானும் ஸ்ரீராமரது வேண்டுகோளுக்கு இணங்கி, இராமேஸ்வர என்ற பெயருடன் திரிலோகத்தாராலும் புகழும்படி அங்கு கோயில் கொண்டிருக்கிறார். இந்த இராமேஸ்வர ஜோதிர்லிங்கப் பிரபாவத்தைக் கேட்டவர்களுக்குச் சகல பாபங்களும் விலகும்.

56. குசுமையின் புத்திர பாக்கியமும் குசுமேஸ்வரர் மகிமையும்

தவமுனிவர்களே! தென்னாட்டில் தேவகிரி என்று ஒரு மலையுண்டு அதன் அருகில் ஒரு பிராமண அக்கிரஹாரம் உண்டு. அந்த அக்கிரஹாரத்தில் பாரத்வாஜகோத்திரத்தில் பிறந்த சுதன்மன் என்ற பெயருடைய சிவஞானியாகிய உத்தமப் பிராமணன் ஒருவன் இருந்தான். அவனுக்கு சுதேகை என்ற மனைவி ஒருத்தி இருந்தாள் அவள் அன்புள்ளவளாகவும் தர்ம மார்க்கத்தில் மனமுடையவளாகவும் பதிவிரதையாகவும் விளங்கினாள் சுதன்மன் வேதபூஜை அதிதி பூஜை முதலியவற்றைக் கிரமப்படிச் செய்துவந்தான். வேதவேதாந்தங்களைப் பாராயணஞ் செய்வான். திரிகாலத்திலும் அக்கினி காரியஞ் செய்வான். சூரியனுக்குச் சமானமான சிவதேஜஸோடு சீடர்களுக்கு. வேத அத்தியயனம் முதலியவற்றை நன்றாக உணர்த்தி யாசித்தவர்களுக்கு குறைவில்லாமல் கொடுக்கும் குறைவற்ற மனமுடையவனாக விளங்கினான் தனவானாகவும் நற்குணங்களுக்கும் இருப்பிடமானவனாகவும் விளங்கி வந்தான். அவனது ஆயுட்காலம் அதிகமாகச் சென்று விட்டதால் அவன் மனைவி சுதேகை என்பவளுடைய ருதுகாலம் முழுதும் வியர்த்தமாயிற்று அவன் சிவஞானியாக இருந்ததால் அவன் இந்த விஷயத்தை மனதிற் கொள்ளவில்லை. எனக்கு மோட்சம் கொடுப்பவன் சிவபெருமான். சம்சார துக்கத்திலிருந்து புனிதமாக்குபவனும் சிவபெருமானே என்று நினைத்து சுதன்மன் மனோதுக்கமற்று இருந்து வந்தான். அவனுடைய பத்தினி. சுதன்மையோ புத்திரப் பேறில்லாமல் போயிற்றே என்று துக்கப்பட்டுத் தினந்தோறும் தன் புருஷனைப் பார்த்து, பிராணநாதா! நமக்குச் சந்தானம் உண்டாகத் தக்க விஷயத்தில் பிரயத்தினம் செய்ய வேண்டும். என்று கூறினாள். அதற்கு சுதன்மன், தன் மனைவியைப் பார்த்து, பெண்ணே பிள்ளைகள் யார்? தாய் தந்தையர் யார்? பந்துக்கள் யார்? பிரியன் யார்? உயிருக்கும் உடலுக்கும் சொந்தம் என்ன? இவற்றையெல்லாம் ஆராய்ந்தால் யாவும் மாயாவிலாசமேயன்றி வேறல்ல எனவே பிள்ளை இல்லையே என்ற துக்கத்தை விட்டுவிட வேண்டும். தினந்தோறும் இந்த விஷயத்தை என்னிடம் சொல்லாதே! என்று கண்டித்துவிட்டு, சிவதருமங்களில் மிகவும் விருப்பம் உடையவனாய், பெருஞ் சந்தோஷத்துடன் சுகத்துக்கங்களை நீக்கிவந்தான்.

அவன் ஒரு நாள் தன் வீட்டிலிருந்து நீங்கித் தன் மனைவியோடு புண்ணிய சீலர்களை அடைந்து விநோதமாகப் பொழுது போக்கிக் கொண்டிருந்தான் அவன் பத்தினி சுதேகை மற்ற வேதியர் மனைவியரோடு பேசிக் கொண்டிருந்தாள். அப்போது மங்கையரில் ஒருத்தி அம்மா நீ பிள்ளை இல்லாதவள், புத்திரசந்தானம் இல்லாதிருக்கும் போதே இத்தனை கர்வத்துடன் இருக்கிறாய். இந்தக் கர்வத்தால் என்ன பயன்? நான் புத்திரபாக்கியம் பெற்றவள், என் செல்வத்தை என் புத்திரன் அனுபவிப்பான், உன் செல்வத்தை அனுபவிப்பவர் யார்? ஓ மலடி உன் பொருளை மன்னன் அனுபவிக்கவேண்டி வருமேயன்றி வேறெவர் அனுபவிப்பதற்கு உரியவர் என்று அவமதித்துப் பேசினாள் அதைக் கேட்ட சுதேகை மனவருத்தத்தோடு வீட்டுக்கு வந்தாள் அவள் கணவனும் சிறிது நேரத்தில் வீட்டுக்குத் திரும்பினான் சுதேகை தன் கணவனிடம் நடந்த விஷயத்தை வெளியிட்டாள்.

அவர்கள் என்ன சொன்னாலும் நமக்கு என்ன? சொல்வதை சொல்லட்டும் நீ ஏன் அவற்றைக் கவனிக்கிறாய்? என்று சுதன்மன் பலவாறாகவும் கண்டித்து, தான்மட்டும் வருந்தாமல் இருந்தான் இவ்வாறு தான் அவமான முற்றதைச் சகிக்காத அவன் மனைவி நாதா, எவ்வகையிலாவது நாம் ஒரு புத்திரனைத் தேடிக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில் யான் உயிர் துறப்பேன் என்று கூறினாள். அதனால் சுதன்மன் மனவருத்தம் அடைந்து, சிவாக்கினி வளர்த்து பூஜை முடித்து அதனருகே இரண்டு மலர்களை வைத்து வலது புறத்து மலர் கிடைத்தால் புத்திரபாக்கியம் உண்டாகும் என்று நியமணஞ்செய்து கொண்டு மனைவியை அழைத்து, பெண்ணே நீசிவபெருமானைத் தியானஞ் செய்து புத்திரபாக்கியம் உண்டாவதற்கு உனக்கு இஷ்டமான மலரை எடுத்துக்கொள். என்று கூறினான் உடனே சுதேகை என் கணவன் புத்திரப் பேறடைவதானாற் கிடைக்கவேண்டும் என்று நியமித்த மலரை நான் அடையவேண்டும் என்று சர்வலோக நாதனாகிய சிவபெருமானைத் தியானித்து விட்டு, அக்கினிதேவனையும் வணங்கி விட்டு தன் கணவன் வைத்த மலர்கள் இரண்டில் ஒன்றை எடுத்தாள். அது புத்திரஹீனமான மலராக இருந்ததால் சுதன்மா பெருமூச்சுவிட்டு பெண்ணே ஈஸ்வராக்ஞை இவ்வாறு இருக்கிறதே, என்று அவளைச் சமாதானப்படுத்தி, இனி நீ சிவத்தியானஞ் செய்யவேண்டும் என்று கூறித் தானும் புத்திர பேற்றில் விருப்பமில்லாமல் சிவத் தியானியாக இருந்து வந்தான்.

ஆனால் சுதேகையோ புத்திர விருப்பம் கொண்டவளாகவே இருந்தாள் அவள் தன் கணவனைப் பார்த்து நாதா! என்னிடம் புத்திர உற்பத்தி இல்லையானால் நீங்கள் வேறொரு பெண்ணை மணந்து கொண்டாலாவது நமது வமிசத்தை விருத்தி செய்யுமாறு புதல்வனைப் பெறவேண்டும். நீங்கள் மறுமணஞ்செய்து கொள்ள நான் சம்மதிக்கிறேன் நீங்கள் வேறு பெண்ணை மணந்து கொண்டால் அவளிடத்தில் புத்திர சந்தானம் உண்டாவதற்குத் தடையில்லை என்றாள் அதற்குச் சுதன்மன் , பெண்ணே நான் மறுமணஞ் செய்து கொண்டால் தற்காலம் நான் செய்து வரும் தருமங்களுக்கெல்லாம் இடையூறு உண்டாகும். உனக்கும் எனக்கும் பலவித மனஸ்தாபங்கள் வரும். ஆகையால் இனிமேல் நான் மறுமணஞ் செய்து கொள்ளச் சம்மதிக்கமாட்டேன் என்று சொன்னான். சுதேகை! தன் தமையனது மகளாகிய குசுமை என்ற கன்னிகையை மணஞ்செய்து கொள்ளவேண்டும் என்றாள் அதற்கு சுதன்மன் நான் இவளை மணம் செய்து கொள்வது இப்போது உனக்குச் சம்மதமாக இருக்கிறது நான் மணஞ்செய்து கொண்டு இவள் பிள்ளை பெற்றால் அப்போது உனக்கு மனவருத்தம் ஏற்படும் நீயே இவளோடு சண்டை செய்வாய் அதனால் இந்தத் திருமணம் வேண்டாம் என்றான் ஆனால் சுதேகை விடாமல் இவள் என்தமையன் மகள் என்மருகி ஆகையால் நீங்கள் இவளை மணஞ் செய்து கொள்வதால் நான் இவளைக் கண்ணியமாக நடத்தி வருவேன். எனக்கு புத்திர சந்தான விருப்பம் இருப்பதால் உங்கள் இருவருக்குமே நான் ஊழியஞ் செய்து வருவேன். நீங்கள் கட்டாயம் மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என்றாள்.

சுதன்மன் தன் பத்தினியின் விருப்பப்படியே மறுமணஞ் செய்து கொண்டு குசுமை என்ற தன் இளைய மனைவியைப் பார்த்து இந்தச் சுதேகையோடு நீ சண்டையிடாமலும், இவளைப் பிரியாமலும் அன்போடு பாதுகாக்க வேண்டும் என்று மூத்தாள் கையைப் பிடித்து இளையாளின் கையில் ஒப்புவித்தான். இளையாளும் கணவன் சொன்ன வார்த்தைகளைக் குருமொழியாக ஏற்றாள். மூத்த மனைவியான சுதேகையும் தன் தமையன் மகள் வயதில் சிறியவளாக இருந்ததாலும் தானே தன் கணவனுக்கு மணஞ்செய்வித்த பெண்ணனதாலும் வீட்டு வேலைகளையெல்லாம் தானே செய்து வந்தாள்.

ஒரு காலத்தில் சுதன்மன் தன் இளைய மனைவியான குசுமையைப் பார்த்து குசுமா! நீ தினந்தோறும் சிவபூஜையைத் தவறாமல் செய்துவர வேண்டும் என்று சிவபூஜைக்கிரமத்தையும் சொல்லிப்போதித்தான் குசுமையும் அவ்வாறே நாள்தோறும் நூற்றியொரு பார்த்திபலிங்கங்களைப் பூஜித்து அருகிலிருந்த ஒரு தடாகத்தில் விட்டு வருவாள். அவள் அவ்வாறு ஒவ்வொரு நாளும் தவறாமல் செய்து வரும்போது அவள் பூஜித்த லிங்கங்களின் தொகை லக்ஷமாயிற்று அப்பொழுது சிவபெருமானுக்குக் கிருபையுண்டாகி குசுமை கர்ப்பம் தரித்துச் சுப்பிரியன் என்ற புத்திரனைப் பெற்றாள் சுதன்மன் மகப்பேற்றையடைந்த மகிழ்ச்சியில் காலத்தை அனுசரித்து தன் இளைய மனைவி மீதும் புத்திரன் மீதும் அதிகப்பற்றுதல் வைத்தான். அதைக் கண்டதும் அவளது மூத்தமனைவி சுதேகை குழம்பினாள். தன் கணவன் குசுமையிடத்திலும் அவளுடைய புத்திரனிடத்திலும் அதிக அன்புடனிருப்பதால் மனவருத்தங் கொண்டு முன்பு இருந்த அன்பு சிறிது சிறிதாகக் குறைந்து பெரும்பகை கொள்ளலானாள். சவுனகாதி முனிவர்களே இனி நடந்தவற்றைக் கேளுங்கள்.

சுதன்மனுடைய மனைவியர் இருவரில் இளையவளான குசுமையையும் அவளது புத்திரனையும் எல்லோரும் கண்டு அன்போடு பேசுவதையும் பழகுவதையும் பார்த்து சுதேகையின் மனம் பொறாமையால் நெருப்பாயிற்று. அந்தக் குமாரன் சிவானுக்கிரகத்தால் பிறந்தவனாக இருந்ததால் வித்தை, புத்தி, வயது முதலியவற்றில் படிப்படியாக விருத்தியாவதைக் கண்டு உறவினராகிய வேதியர்கள் அவனுக்குப் பெண் கொடுக்க விரும்பினார்கள். எனவே அவனுக்கு ஒரு சுபதின சுபலக் கினத்தில் விவாகம் நடந்து முடிந்தது. சுதன்மன் குசுமையைத் திருமணம் செய்து கொண்டதால் தான் அடைய வேண்டிய புத்திரசந்தானத்தை அடைந்தாள் வீட்டுக்கு வருகிற உறவினர்கள் யாவரும் இளையாளிடத்தில் பேசுவதும் அன்பு செலுத்துவதுமாக இருந்தார்கள். மூத்தாளிடத்தில் யாரும் அக்கறை செலுத்தவில்லை இதனால் சுதேகை மிகவும் வருந்தினாள். சுதன்மன் தன் மகனையும் மருகியையும் குசுமையின் இருதொடைகள் மீது குதூகலிப்பதைப் பார்த்து மூத்தாள் சுதேகை மிகவும் எரிச்சலுற்றாள். பிறகு அழுது கொண்டு கீழேவிழுந்தாள்.

சுதன்மன் உண்மையில் தன் மூத்த மனைவியான அவளிடம் அதிக அன்பு வைத்திருந்து கூட, சுதேகையிடத்தில் குசுமை மரியாதையாக நடந்துங்கூட சுதேகையின் மனத்தில் ஏதோ ஒரு வருத்தம் குடி கொண்டிருந்தது. அதைக் கண்ட குசுமை ஒரு நாள் அவளைப் பார்த்து நீ ஏன் இப்படியிருக்கிறாய்? உன் மருகி உன் மகன் என்ற எண்ணமில்லையா உனக்கு? கணவரோ உன் மீது அன்பு வைத்திருக்கிறார் இப்படியிருந்தும் நீ வருந்துவதற்குக் காரணம் என்ன? என்று கேட்டாள் ஆனால் சுதேகையின் கோபந்தணியவில்லை அவள் குசுமையின் கேள்விக்குப் பதில் எதுவும் சொல்லவில்லை குசுமை கண்ணீர்விட்டு அழுதால் ஒழியத் தன் துக்கமானது சிறிதும் தணியாது என்று சுதேகை கருதினாள் அதற்கு என்ன செய்யலாம் என்பதையே அவள் அடிக்கடி யோசித்துக் கொண்டிருந்தாள். அதன் முடிவாக எப்படியாவது தன் சக்களத்தியின் மகனான சுப்பிரியனை மட்டும் கொன்றுவிட வேண்டும் அதற்கு மேல் நடப்பது நடக்கட்டும்? என்று தீர்மானித்தாள்.

ஒருநாள் குசுமையின் குமாரனும் மருமகளும் தூங்கிக்கொண்டிருக்கும் போது குமாரன் சுப்பிரியனைச் சுதேகை அரிகையால் பல துண்டுகளாக வெட்டி, அப்பொழுதே ஒருவரும் அறியாதவாறு அவற்றை எடுத்துக் கொண்டு, குசுமை சிவபூஜை செய்த

லக்ஷம் சிவலிங்கங்களையும் விடுத்த அந்தத் திருக்குளத்தில் ஒரு பக்கத்தில் கொட்டிவிட்டு வீட்டிற்கு வந்து ஒன்றும் அறியாதவளைப் போலச் சயனித்துக்கொண்டிருந்தாள். பொழுது விடிந்தது குசுமை விழித்து எழுந்து ஸ்நானம் செய்து வீட்டு வேலைகளை முடித்து சிவபூஜையில் ஈடுபட்டாள் அவள் கணவன் சுதன்மனும் எழுந்து ஸ்நானம் செய்து நித்ய கருமம் சிவபூஜை முதலானவற்றைச் செய்து கொண்டிருந்தான். மூத்த மனைவி சுதேகையும் எழுந்தாள். தினமும் வருத்தமாய் இருப்பது போல இராமல் மனத்திருப்தியாக வீட்டு வேலைகளில் முனைந்தாள். மருமகள் நித்திரை தெளிந்து எழுந்து பக்கத்தில் தன் கணவனான சுப்பிரியனை காணமலிருப்பதையும் இரத்தம் சிந்தியிருப்பதையும் அவயங்களைத் துண்டித்த துண்டுகளிற் சில கீழே விழுந்து கிடப்பதையும் கண்டு அலறித் துடித்து மிகவும் துக்கத்துடன் தன் மாமியை கூப்பிட்டு உன் மகன் எங்கே? பக்கமெல்லாம் இரத்த மயமாக இருப்பது ஏன்? அவயவத்துண்டுகள் காணப்படுவது ஏன்? என்று பதறினாள் மூத்தாள் அதைக்கேட்டு உள்ளூரச் சந்தோஷப் பட்டும் வெளியே காட்டிக் கொள்ளாமல் ஐயோ! அப்படியா! முடிந்தது என்று மேலுக்கு அழுதாள். இளையாள் குசுமை தன் மருமகளின் முறைப்பாட்டைக் கேட்டுங்கூடச் சிவபூஜையை விடாமல் செய்து தியானத்தில் இருந்தாள். எனவே தியானத்தைக் கைவிடாமலும் மனமிளையாமலும் இருந்தாள் சுதன்மனும் தன் சிவத்தியானத்துடன் சிவயோகத்தில் இருந்தான் அவர்களது சிவத்தியானம் முடிவதற்கு இரண்டு ஜாமங்கள் ஆயின. அவர்கள் இருவரும் புத்திரன் மடிந்து போனதைத் தெரிந்து கொண்டு; சிறிதும் துக்கப் படாமல்; இதுவரை நாம் யாரை உபாசனை செய்து வந்தோமோ, அவரே நம்மைத் திருப்தி செய்ய நம் புத்திரனை எழுப்பித்தரவேண்டும்! என்று கருதி மனந்தளராமல் இருந்தார்கள் அவ்விதம் அண்ணலான சிவபெருமான் நம்மை இரட்சிக்கா விட்டால் நமது கர்மானுசாரம் இவ்வளவே என்று எண்ணிக் கொள்வோம் மலர் கொய்பவன் கட்டிக் கொடுத்த மாலையானது சிறிதுநேரத்தில் வாடி விடுமானால் அதன் தன்மை அதுவே என்று எண்ணுவது போல என்று நினைத்து மவுனமாக இருந்தார்கள். குசுமை வழக்கம் போலத் தான் பூஜித்த லிங்கங்களை எடுத்துக் கொண்டு திருக்குளத்துக்குப் போய் அதில் அவற்றை விட்டுவிட்டு, வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாள். அப்போது மூத்தாளால் துண்டித்து, எறியப்பட்ட புத்திரன் அந்தக் குளத்தில் உயிர் பெற்று எழுந்து அம்மா! நானும் வருகிறேன். நான் இறந்து பிழைத்தேன் என்று கூவினான் அதைக் கேட்டதும் குசுமை முன்பு போலவே மகிழ்ந்தாள் அப்போது சிவபெருமான் அவள் முன்பு தோன்றி நான் உனக்கு வரம் தருகிறேன். உன் மகனை மூத்தாள் சுதேகையே கொன்றாள் நான் அவனை உயிர்ப்பித்துக் கொடுத்தேன் அந்தச் சுதேகையை எனது திரிசூலத்தால் சஞ்காரஞ் செய்கிறேன் என்றார். அப்போது குசுமை சர்வேஸ்வரா! அவள் என் அத்தை என் கணவரின் பத்தினி, எனக்கு மூத்தவள் அபகாரஞ் செய்தவர்களுக்கு உபகாரஞ் செய்வதே உயர்வைத் தரும், தங்களது தரிசனத்தாலேயே அவளது பாவங்கள் எல்லாம் ஒழியும். அவளுக்கு நல்ல புத்தி உண்டாக்கும். அவளுக்கு தீங்கு செய்வது யுக்தம் அல்ல! என்றாள் அவளைச் சிவபெருமான் நோக்கி குசுமையே! இனி ஏதேனும் வரம் வேண்டுமானால் கேட்டுக்கொள் என்றார். அதற்கு குசுமை எம்பெருமானே! எனக்கு வரம் கொடுப்பதானால் தாங்கள் உலகங்களைக்காத்தருள்வதற்காக இத்தகைய சுந்தரவடிவத்தோடு இவ்விடத்திலேயே கோயில் கொண்டு எழுந்தருளியிருக்க வேண்டும் என்று பிரார்த்தித்தாள் சிவபெருமானும் அவ்வாறே உன் பெயரால் குசுமேஸ்வரன் என்ற பெயரில் இங்கு எழுந்தருளுகிறேன் நீ சிவலிங்கங்களை விடுத்த இந்தத் தடாகமே ஓர் ஆலயமாகுக! உங்களுக்கு ஒருவனே புத்திரன் அவன் மூலமாக இந்த வமிசத்தில் அநேக புத்திரர்கள் உண்டாகி, அவர்கள் தீர்க்க ஆயுளை உடையவர்களும் வித்துவான்களும், புத்திமான்களும் தனவான்களும் யாகாதிகாரிகளும் மனைவி; புத்திரர்களுடன் கூடியவர்களுமாக விளங்குவார்கள் உன் வமிசம் விருத்தியடைக என்று வரம் கொடுத்து சிவலிங்கரூபமடைந்து குசுமேஸ்வரர் என்ற பெயரால் அந்தத் திருக்குளத்தையே திருக்கோயிலாகக் கொண்டு எழுந்தருளியிருக்கிறார். சுதன்மனும் குசுமையும் சுதேகையை அழைத்து சிவபெருமானையும் பார்வதிதேவியையும் நூற்றொரு பிரதக்ஷிணம் செய்யச் சொல்லி; அவள் கையால் சிவபூஜை செய்வித்து சிவாநுக்கிரகத்தால் அவள் மனதிலிருந்த பொறாமையை போக்கடித்து யாவரும் சுகித்திருந்தார்கள் இத்தகைய பிரதாபத்தையுடைய குசுமேஸ்வரரைத் தரிசித்தவுடனேயே சகல பாபங்களும் ஒழியும்; சுக்கிலபக்ஷத்துச் சந்திரன் போலச் சம்பத்துக்கள் விருத்தியடையும்

முனிவர்களே! இதுவரையில் நீங்கள் கேட்ட ஜோதிர் லிங்கங்களின் சரிதங்களைச் சொன்னேன்.

இவ்வாறு சூதபுராணிகர் சொன்னதும் சவுனகாதி முனிவர்கள் அவரை நோக்கி மகாத்மாவே! தாங்கள் கூறிய சரிதங்களைக் கேட்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். ஆயினும் மேலும் மேலும் சிவசரித்திரங்களையே நாங்கள் கேட்க விரும்புகிறோம் என்றார்கள். சூதமுனிவர் ஆனந்தமயமாய்ச் சிவத்தியர்னஞ் செய்து சொல்லத் தொடங்கினார்.

57. இரணியாக்ஷன், இரணிய கசிபு கதைகள்

முனிவர்களே! சிவபெருமானின் திவ்ய கல்யாணகுணங்களை வருணித்துச் சொல்ல யாராலும் முடியாது. ஆகாயத்திலிருக்கும் நக்ஷத்திரங்களையும் உலகத்தில் இருக்கும் மணலையும் மழைத்துளிகளையும் எண்ணி முடித்தாலும் முடித்து விடலாம். சிவபெருமானின்லீலா விநோதங்களையும் குணங்களையும் கணக்கிட யாரும் வல்லவரல்லர். ஆயினும் நீங்கள் அனைவருமே என்னை விரும்பிக் கேட்பதால் என் புத்திக்குத் தோன்றியவரையில் என் குருநாதரான வியாசபகவான் எனக்குச் சொன்னது போலச் சொல்லுகிறேன் கேளுங்கள். முன்பு ஒரு காலத்தில் நரசிங்க ரூபம் எடுத்த மகாவிஷ்ணுவானவர் இரணிய கசிபனைச் சங்கரித்தும் தமது கோபாக்கினி தணியாமல் எவ்வௌர் எத்தகைய ஸ்தோத்திரம் செய்தும் அடங்காமல் இருந்தார் அதைக் கண்ட தேவர்கள் அனைவரும் சிவபெருமானைப் பிரார்த்தித்தார்கள் சிவபெருமான் சரபரூபம் அடைந்து நரசிங்கத்தைக் கண்ட மாத்திரத்தில், நரசிங்கம் சில பெருமானிடத்தில் ஐக்கியமடைந்தது. இவ்வாறு சூதபுராணிகர் கூறியதும் நைமிசாரணிய வாசிகள் அவரை நோக்கி, ஞானமூர்த்தியே! நரசிங்க அவதாரச் சரித்திரத்தை எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று கேட்டார்கள் சூதமுனிவர் அதைச் சொல்லத் தொடங்கினார். ஒரு காலத்தில் மகாலக்ஷ்மி மகாவிஷ்ணுவைப் பார்த்து சுவாமி! தங்கள் திருவுருவம் இத்தனைச் சவுந்தர்யமாகவும் மிகவும் கோமளமாகவும் இருக்கிறதே இத்தகைய சரீரத்தோடு தங்களால் எப்படி போர் புரிவதற்கு இயலும்? என்று கேட்டாள். அதற்கு திருமால் பெண்ணே! நீ விரும்பினால் நான் போர் புரிவதை விரைவில் பார்ப்பாய்! என்று சொன்னார்.

அவருடைய துவாரபாலகர்களான ஜய விஜயர் என்னும் இருவர் முன்பொரு சமயம் சனத்குமார முனிவர் முதலானவர்களோடு போராடிய போது மகாவிஷ்ணு அங்கே சென்று, நீங்கள் இம்முனிவர்களை வழிமறித்தது தவறு என்று தடுத்து முனிவர்களை நோக்கி, நீங்கள் துவாரபாலகர்களைச் சபிக்கலாமா? அதுவும் அவர்கள் தங்கள் பதவியை இழந்து உலகில் பிறந்து துன்புறும்படிச் சபிக்கலாமா? அவர்களுக்கு நீங்கள் அனுக்கிரகம் செய்ய வேண்டும் என்றார். முனிவர்கள் திருமாலைப் பார்த்து பரமாத்மாவே! இவர்கள் உன்னை பக்தி செய்வதான ஜன்மங்கள் எடுத்தால் ஏழு பிறவிகளிலும் உன்னை பகைகொள்வதான பிறவிகளை எடுத்தால் மூன்று பிறவிகளிலும் மீண்டும் தங்கள் பதவிகளை அடைந்து உன்னிடம் வந்து சேர்வார்கள், இதில் இவர்கள் விரும்புவது எதுவோ, அதை இவர்கள் அடையட்டும் என்றார்கள். அதற்கு துவாரபாலகர்களான ஜய விஜயர்கள் இருவரும் நாங்கள் ஏழு பிறவிகள் வரையில் ஸ்ரீலக்ஷ்மிபதியைப் பிரிந்திருக்க மாட்டோம். ஆகையால் மூன்று பிறவிகள் வரை அவரைப் பகைத்தாயினும் எங்கள் பதவியை அடைகிறோம் என்றார்கள். அவர்களது விருப்பமே விஷ்ணுவின் விருப்பமாக இருந்தது. உடனே ஜய விஜயர்கள் தங்கள் பதவியிலிருந்து நீங்கி உலகத்தில் காசிபரது வம்சத்தில் ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு என்ற இராட்க்ஷதர்களாகப் பிறந்தார்கள். சனகாதி முனிவர்கள் முதலிய நால்வரும் பிரகலாதன் முதலியவர்களாகத் தோன்றினார்கள். ஸ்ரீவிஷ்ணுவே ஹிரண்ய கசிபனைச் சங்கரித்து சாப விமோசனமடையச் செய்வதற்காக நரசிங்க ரூபமெடுத்து வந்தார். வேறொரு பிறவியில் அவர்களே, இராவண கும்பகர்ணர்களாகப் பிறந்தார்கள். அப்போது நரசிங்க மூர்த்தியே தசரத குமாரன் ஸ்ரீராமனாக வந்தார். அந்த அவதாரத்தின் போது சனகாதி முனிவர்களே விபீஷணர் முதலியவர்களாகப் பிறந்தார்கள் தேவர்களே சுக்ரீவ, அங்கதாதி வானர வீரர்களாக வந்தார்கள். மூன்றாவது பிறவியில் அத்துவாரபாலர்களே சிசுபால தந்த வக்கிரர்களாகத் தமகேஷன் என்ற அரசர் குலத்தில் பிறந்தார்கள். அப்போது விஷ்ணு மூர்த்தியே கிருஷ்ண அவதாரமெடுத்தார். அப்போது சனகாதி முனிவர்கள் அக்குரூரர் முதலியவர்களாகத் தோன்றினார்கள். இனி பாபங்களை ஒழிக்கத் தக்கதான நரசிங்கமூர்த்தியின் சரித்திரத்தை உங்களுக்கு சொல்லுகிறேன் கேளுங்கள்.

முனிவர்களே! ஹிரண்யாக்ஷன் இளைஞனாக இருக்கும்போதே விளையாடலுக்காகச் சூரியனை அழைப்பான். அவன் காடுகளிலுள்ள சிங்கங்களையும் மதயானைகளையும் பிடித்து அவற்றின் மீது ஏறிச் சவாரி செய்வானே தவிரச் சாதாரணக் குதிரைகள் மீது ஏறிச் சவாரி செய்வதில்லை. சண்டை செய்ய விரும்பினால் சிங்கம் முதலிய துஷ்ட மிருகங்களுடன் சண்டை செய்வான் இத்தகைய பலபராக் கிரமசாலியாக இரண்யாக்ஷன் இருந்ததால் அவன் தேவர்களைத் துன்புறுத்த வேண்டும் என்று நினைத்தான். சாமானிய அரக்கர்களைப்போல அடிப்பதும் பீடிப்பதும் வேதியர்களையும் யாகங்களையும் அழிப்பதும் சரியல்ல என்று எண்ணி, உலகத்தையே ஒரு பாயைப் போலச் சுருட்டி, நாயானது மாவு முட்டையை வாயில் கவ்விக் கொண்டு அனாயாசமாக ஓடுவது போல இரண்யாக்ஷன் பூமியையேச் சுருட்டி வாயில் கவ்விக் கொண்டு ஜலத்தினுள் மூழ்கியிருந்தான். அதனால் பிரமதேவர் மிகவும் வருத்தம் அடைந்து, விஷ்ணுமூர்த்தியைத் துதித்தார். விஷ்ணு அவருடைய நாசியிலிருந்து வராக உருவத்தோடு அவதரித்து, விரைவில் விருத்தியடைந்து, அங்கிருந்து உலகத்தை மீட்கச் சென்றார், உலக முழுவதும் நீர் மயமாக இருப்பதைக் கண்டு அதில் பிரவேசிக்க நினைத்தார்.

ஸமுத் பந்நஸ்ததா விஷ்ணுர் நாஸார ந்த்ராச்ச ப்ரஹ்மண:
வராஹம் ரூபமாஸ் தாயக்ரமேண விருத்தி தாங்கத; வராஹ உவாச
யாவச்ச யுத்யததேந தாவஜ் ஜலவிசேஷணம்
கர்த வ்யஞ்சத் வயாசாத்ர இத்யே வங்க்த்ய தேமயா
ததஸ் சாஞ்ஜலிநாதேந ஜலந்நீத்வா முகேததா
பீதஞ்சறு ஷிணாதாவத் யாவத் யுத்தம் ஸமாப்யதே!

அப்போது நாரத முனிவர் சந்தியாவந்தனம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தார். அவர் அங்கு வந்து வராஹ மூர்த்தியை பார்த்து  நான் சந்தியாவந்தனம் செய்ய உத்தரவளிக்க வேண்டும் என்றார். வராஹமூர்த்தி அவரைப் பார்த்து நாரதரே! நான் ஹிரண்யாக்ஷனைக் கண்டு அவனுடன் சண்டை செய்து அவனைச் சங்கரிக்கும் வரையில், இந்த ஜலத்தை உலர்த்துவிக்க வேண்டும். இது உம்மாலேயே செய்யத் தக்கது? என்றார் நாரத முனிவர். அதற்கு இணங்கி, தமது இருகரங்களாலும் தண்ணீரை எடுத்து தன்வாயிற் பெய்து கொண்டு வராஹமூர்த்திக்கும் ஹிரண்யாக்ஷனுக்கும் போர் முடியும்வரை வைத்துக் கொண்டிருந்தார். பிறகு வராக மூர்த்தி ஹிரண்யாக்ஷனைக் கண்டு பிடித்து அதனுடன் ஜலத்தில் (நாரதர் சமுத்திர பானஞ்செய்து மிகுந்து சேற்றுடன் கலந்த தண்ணீரில்) ஐந்நூறு ஆண்டுகளும், உலகத்தில் ஐந்நூறு ஆண்டுகளும் பெரும் போர் செய்து அவனைச் சங்கரித்து பூமியை மீட்டுத் தம் வாயிலேயே எடுத்துக் கொண்டு வந்து பிரமனிடம் ஒப்படைத்து விட்டுத் தம் திருவுருவை மறைத்தார்.

விஷ்ணுமூர்த்தியால் ஹிரண்யாக்ஷன் இறந்தான் என்ற செய்தியை அறிந்த  ஹிரண்யகசிபன் தன் தம்பியைக் கொன்ற விஷ்ணுவைச் சங்கரித்து தன் துக்கத்தையொழிக்க கருதினான். எனவே அவன் பிரமதேவனைக் குறித்துப் பத்தாயிரம் ஆண்டுகள் கடுந்தவம் செய்தான். அதனால் அவன் மீது மரங்கள் முளைத்து நாற்புறங்களிலும் கிளைத்துப் பெருவனமாயிற்று. அம்மரங்களில் பலவகைப் பறவைகள் கூடிகட்டி வாசஞ்செய்து முட்டையிட்டுக் குஞ்சுகள் பொரித்தன. ஆயினும் ஹிரண்யகசிபோ தன் தவத்திலிருந்து நீங்கவில்லை அவனது தவாக்கினி, தேவலோகத்தையடைந்து கொளுத்தியது. தேவர்கள் அந்த அனலைத் தாங்க முடியாமல். பிரமதேவனிடம் சென்று ஹிரண்யாக்ஷன் உம்மைக் குறித்து கடுந்தவம் செய்கிறான். நீங்கள் சும்மா இருப்பது சரியல்ல அவனது தவச் சுவாலையால் நாங்கள் அழிவுற நேரிடும் என்று சொல்லி முறையிட்டார்கள். அதனால் பிரமதேவர் ஹிரணியனுக்கு வரங்கொடுக்க நினைத்து, அவன் முன்பு தோன்றி, உனக்கு வேண்டிய வரம் என்ன? என்று கேட்டார். அதற்கு ஹிரண்யகசிபன் சிருஷ்டிகர்த்தாவே! உமது படைப்பான இந்த உலகத்தில் எவன் ஒருவனும் எத்தகைய ஆயுதத்தாலோ இரவிலோ பகலிலோ என்னைக் கொல்லக்கூடாது இத்தகைய வரமே எனக்கு வேண்டும் என்றான். பிரமதேவர் அவ்வாறே வரங்கொடுத்து விட்டுத் தம் உலகையடைந்தார். ஹிரண்யகசிபன் சோணிதபுரியை அடைந்து சகல தைத்தியர்களையும் திரட்டி, அசுரர்களே! நீங்கள் அனைவரும் எம் கட்டளைக்கு அடங்கி இருக்கவேண்டும். அவ்வாறில்லையென்றால் சங்காரம் செய்துவிடுவோம். எம் கட்டளைக்கு அடங்கியவர்களைக் காப்பாற்றுவோம் சுவர்க்கலோகம் மத்தியலோகம் ஆகிய அனைத்தும் எங்களால் ஜெயிக்கப்பட்டன. திரிலோகங்களையும் தன் வசமாக்கிய ஹிரணியகசிப மஹாராஜன் ஏகச்சக்கராதிபதியாக விஷ்ணுத் துவேஷத்துடன் அரசு செய்து விருகிறான். இனி எங்கும் யாக காரியங்களை யாரும் செய்யக்கூடாது என்று யாவரும் அறிய முரசறையுங்கள் அதுபோலவே சுவர்க்கத்திலும் பாதாலத்திலும் மற்ற உலகங்களில் எல்லாம் கைப்பற்றப்பட்டன. போர்புரிய விரும்புவோர் போர் செய்ய வரலாம். சரணாகதி என்று வந்தவர்களை நாங்கள் காப்பாற்றுவோம் என்று முரசறையுங்கள் என்றான். அவர்களும் அவ்வாறே மூவுலகங்களிலும் சென்று யாவரும் அறிய முரசு அறைந்தார்கள். இவ்வாறு ஹிரண்யகசிபன் எவரும் எதிர் இன்றி ஆட்சிபுரிந்து வந்தான்.

சிறிது காலத்திற்கெல்லாம், விஷ்ணுத் துவேஷங் கொண்ட ஹிரண்யகசிபனுக்கு விஷ்ணு பக்தியுடைய பிரகலாதன் என்னும் புத்திரன் ஒருவன் பிறந்தான். அந்தச் சிறுவன் பிள்ளைமைத்தனத்தால் வாய்விட்டு அழும்போது விஷ்ணுவின் திருநாமங்களையே கூறும் இயல்பையுடையவனாக இருந்தான். அவன் ஐந்து வயதையடைந்தவுடன் ஹிரணியகசிபன் சகல வாத்தியங்களும் முழங்க அசுரர் சேனைகள் புடைசூழ அவனுக்கு வித்தியாப்பியாசம் செய்விக்க வேண்டி அசுரகுருவின் வீட்டுக்குக் கொண்டு போய்ச் சேர்த்து, அவனுக்கு வித்தியாப்பியாசம் செய்விக்கும்படிக் கட்டளையிட்டான். அசுரகுரு வழக்கம் போல; அந்தச் சிறுவனைப் பார்த்து முதலில் ஹிரண்யாய நம என்று சொல்லும்படிச் சொல்ல பிரகலாதன் ஓம நமோ நாராயணாய என்று சொன்னான். உபாத்தியாயர், அப்பா குழந்தாய்! அப்படிச் சொல்லாதே! சர்வலோகங்களுக்கும் மகாப் பிரபுவாகிய உன் தந்தையின் பெயரையே முதலில் தோத்திரஞ் செய்ய வேண்டும் என்றார். பிரகலாதன் மீண்டும் அப்படியே சொல்ல அசுரகுரு ஹிரண்யகசிபனைப் பார்த்து; அசுரேஸ்வரா! இது முதல் நாளாகையால் இதுவரையில் இருக்கட்டும். நாளையத்தினம் நான் கற்பிக்கிறேன் சிறுவனும் சரியாகச் சொல்லுவான் என்றார். ஆனால் பிரகலாதனோ இன்றல்ல நாளையல்ல என்றைக்கும் நான் விஷ்ணு நாமத்தைத் தவிர வேறு எதையும் சொல்ல மாட்டேன் என்றான் அசுரர்கள் பிரகலாதனை வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். சில தினங்கள் சென்ற பிறகு, ஒரு நாள் ஹிரண்யகசிபன் தன் மகனை அழைத்து தொடை மீது உட்காரவைத்துக் கொண்டு குழந்தாய் பிரகலாதா! இதுவரையில் என்ன வாசித்தாய்? அதைச் சொல் என்றான். அதற்குப் பிரகலாதன் நான் ஓம் நமோ நாராயணாய என்று படித்தேன்; என்றான். உடனே ஹிரணியகசிபன் அளவிலாத கோபம் கொண்டு உபாத்தியாயரை அழைத்து வரச் செய்து என் பிள்ளைக்கு என்ன கற்பித்தாய்? என்று குமுறினான்.

அசுரகுரு அதிபா! உம் புத்திரனால் என் பள்ளி மாணவர்கள் எல்லோருமே கொடியவராயினர். இது என்னால் ஆகத் தக்கது அல்ல இவன் எனக்கு அடங்கமாட்டான்! என்று உபாத்தியாயர் சொல்லிவிட்டார். அதன் பிறகு ஹிரணியன் தன் மனைவியான கயாதுவைக் கூப்பிட்டு உன் பிள்ளை படித்ததைக் கேட்டுக் கொள்! அதற்கு ஏற்பத் தண்டனை கொடு; என்றான். கயாது தன் செல்வனைக் கூப்பிட்டு குழந்தாய்! இனிமேல் ஹரிநாமத்தைச் சொல்லாதே! உன் தந்தை மூவுலகங்களுக்கும் தலைவராக இருக்கிறார் உன் சம்பத்து எப்படிப்பட்டது? அசுரர்கள் எவ்வளவு கவுரவமானவர்கள்? இதை விட்டு விட்டு ஹரி நாமத்தை ஏன் விரும்புகிறாய்? என்றாள். அதற்குப் பிரகலாதன் தாயே! நீ என்ன சொன்னாலும் பயன்படாது. ஒருபோதும் நான் விஷ்ணுவின் நாமத்தை மறக்கவேமாட்டேன். ஒரு யானை தன்னைக் கொசு கடிக்கும் என்று பயந்து அரசனின் மாளிகையை விட்டுப் போய் விடுமா? இந்த நீசன் ஹிரணியனின் வலிமை எவ்வளவு? ஸ்ரீவிஷ்ணுவின் வலிமை எவ்வளவு? இதையறியாமல் நான் ஹரி பக்தியை விட்டு விடுவேனா? நாவினால் விஷ்ணுவைத் துதிப்பதும், காதுகளால் ஹரிநாமங்களைக் கேட்பதும். தலையால் விஷ்ணுவை வணங்குவதும். கையால் பூஜிப்பதும். பாதங்களால் வலம் வருவதுமாக என்னுடைய அவயவங்களையெல்லாம் விஷ்ணுமூர்த்திக்கே சமர்ப்பித்து, அவருடைய கிருபையை அடையவே நான் விரும்புகிறேன். எது நடந்தாலும் நடக்கட்டும் நான் ஹரிநாமத்தை விடமாட்டேன் என்று தீர்மானமாகச் சொன்னான். அவன் தாய் பெருந்துயரத்துடன் அவனைத் தன் கணவனிடம் அழைத்துச் சென்று இவன் எனக்கு அசாத்தியனாகயிருக்கிறான்! என்றாள். ஹிரணியன் கோபங்கொண்டு அமைச்சர்களை அழைத்து மந்திரிகளே! நமது அசுர குலத்துக்கே ஒரு நெருப்பு புத்திரனாகப் பிறந்தது குலத்துக்கே விரோதியான இந்தச் சிறுவனை எந்த வகையிலாவது நெருப்பிலிட்டோ, ஆயுதங்களால் துண்டித்தோ, விஷமூட்டியோ, ஜலத்தில் மூழ்கடித்தோ கொன்று விடுங்கள். இவனே விஷ்ணுவை விட்டு விடுகிறானா அல்லது உயிரை விட்டு விடுகிறானா என்று பார்ப்போம் என்று கட்டளையிட்டு அவர்கள் வசம் பிரகலாதனை ஒப்புவித்தான், அவர்கள் அரசன் இட்ட கட்டளைப்படியே பிரகலாதனைப் பலவிதமாகவும் தண்டிக்கலானார்கள்.

அமைச்சர்கள் பிரகலாதனை அழைத்துச் சென்று தண்டலாளர்களால் நெருப்பில் இடுவித்தனர். ஆனால் அந்த நெருப்போ பிரகலாதனுக்குக் குளிர்ந்திருந்தது. பிறகு அவனை ஜலத்தில் வீசி யெறிந்தார்கள் உடனே ஜலம் இருந்த இடம் மேடாயிற்று. மலைகளின் உச்சியிலிருந்து பிரகலாதனை உருட்டி விட்டார்கள். அது பிரகலாதனுக்குப் பஞ்சு மெத்தை போலிருந்தது அவனுக்கு விஷ மூட்டினார்கள் அது அமிர்தமயமாக இருந்தது. ஆயுதங்களால் அவனை அடித்தார்கள் அவை ஹரிநாமத் தியான பலத்தால் புஷ்பங்கள் போலிருந்தன. அவர்கள் அவனுக்கு அளித்த தண்டனைகள் எல்லாமே பயன்படாமற் போயின. பிரகலாதன் மேலும் மேலும் ஹரிநாமப் பஜனையோடு மகிழ்ச்சியாக இருந்தான். அமைச்சர்கள் அனைவரும் பிரகலாதனுக்கு தாம் செய்த தண்டனைகள் பயன்படவில்லையே என்பதால் துக்கமும் அவனுக்குத் துன்பமுண்டாக வில்லையே என்பதால் வியப்பும் அடைந்தார்கள். அசுர ராஜனிடம் இந்த நிலையை எப்படிச் சொல்வது என்று யோசித்து கொண்டிருந்தார்கள் அப்போது பிரகலாதன் அவர்களைப் பார்த்து நீங்கள் எப்படிக் கஷ்டப்படுத்தினாலும் எனக்கு ஒரு வருத்தமும் உண்டாகாது ஏனென்றால் விஷ்ணுவிற்கு ஜலமே சயனஸ்தானம் அது என்னை என்ன செய்யும்? அக்கினியே விஷ்ணுவின் திருவாய். விஷமும் லக்ஷ்மியும் திருப்பாற்கடலில் பிறந்தவை, விஷமோ என் மாமன் ஹிரணியாக்ஷனால் துன்புற்ற பூமியானது விஷ்ணுமூர்த்தியால் சுகம் பெற்றது அதுவும் என்னை ஒன்றுஞ் செய்யாது. உலகம் முழுவதும் நானும் நீங்களும் பராதீனமுடையவர்கள் என்னை உங்களால் யாது செய்ய முடியும்? என்றான். அதைக் கேட்டதும் அமைச்சர்கள் முகம் சோர்ந்து வருந்தியவர்களாய் ஹிரணியகசிபனிடம் வந்து பிரபுவே! நாங்கள் இப்படிப்பட்டவனைப் பார்த்ததில்லை. கேள்விப்பட்டதும் இல்லை இவனை இனித் துன்புறுத்துவதால் ஒரு பயனும் இல்லை; நல்ல வார்த்தைகளால் இவனைச் சுவாதீனம் செய்து கொள்ளுங்கள் என்று ஹிரணியனுக்குச் சொன்னார்கள். தாங்கள் அவனுக்கு அளித்த தண்டனைகளையெல்லாம் எடுத்துரைத்தார்கள்.

அதனால் ஹிரணியன் தன் புத்திரனைத் தன் வசப்படுத்த எண்ணி யானை, குதிரை, தேர், பல்லக்கு முதலிய வாகனங்களைக் கொடுத்தும் தன் அரியணையில் அமர்த்தியும் மகிழ்ச்சியூட்டினான் அப்போதும் பிரகலாதன் ஹிரிநாமத்தை உச்சரிப்பதை விடவில்லை ஏனெனில் சம்சார சுகத்தை வெறுத்த சுத்த ஞானிகள் உலக சுகங்கள் எல்லாவற்றையும் துரும்பாக நினைத்து. பகவத் பக்தி செய்வதையே பெறும்பேறு எனக் கொள்வார்களாகையால் பிரகலாதன் ஹரி நாமஸ்மரணையையேப் பெரிதாகக் கருதி வந்தான். ஹிரண்யனின் உபசாரங்கள் பிரகலாதனை எவ்வகையிலும் திருப்திப் படுத்தவில்லை; அதனால் ஹிரணியன் மீண்டும் அசுர குருவை அழைத்து இனி இவனைத் தண்டித்து வித்தியாசப்பியாசம் செய்து கொண்டு வருக! என்று விடுத்தான் அசுர குரு பிரகலாதனைப் பார்த்து அப்பா குழந்தாய்! நீ இங்குள்ள பிள்ளைகளோடு கூடி விளையாடிக் கொண்டே வாசிக்கலாம். உன் தந்தை அகண்ட ஐஸ்வரியத்தையும் மூன்று உலகங்களையும் அரசு செய்கிறார் அவருக்குப் பிறகு இவற்றிற்கெல்லாம் நீயே அதிகாரி எங்களுக்கெல்லாம் நீயே அரசன். இந்தப் பிள்ளைகளுக்கெல்லாம் நீயே ஆசிரியனாக இருப்பாயாக! என்றார்.

அப்படியானால் நான் இந்தச் சிறுவர்களுக்குப் பாடஞ் சொல்லிக் கொடுக்கிறேன் என்று பிரகலாதன் கூறிவிட்டு நாராயணாய நம என்று மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தான். பிரகலாதன் அச்சிறுவர்களை யெல்லாம் அந்தரங்கமானவொரு இடத்திற்கு அழைத்துச் சென்று தாய் இல்லை! தந்தையில்லை உறவினர் இல்லை சகோதரர்கள் இல்லை நண்பர்களில்லை மனைவியும் இல்லை. இவர்கள் எல்லாம் சம்சார சுகத்தையன்றிப் பிரமானந்த சுகத்தைக் கொடுக்கவல்லவர்கள் அல்ல சாஸ்வத சுகம் வேண்டுமானால் விஷ்ணுமூர்த்தியைச் சேவித்தே அடைய வேண்டும் என்று தத்துவ உபதேசம் செய்தான் அதைக்கேட்டதும் மாணவர்கள் மிகவும் உற்சாகத்துடன் நாராயண ஸ்மரணையே செய்து கொண்டிருந்தார்கள் அதைக் கண்டதும் அசுரகுரு,. அப்பிள்ளைகளைப் பார்த்து பிள்ளைகளே! நீங்கள் என் பிழைப்பை கெடுப்பதற்காக ஹரிநாம ஸ்மரணை செய்கிறீர்கள்? என்று தண்டித்தான் அந்த தண்டனையைப் பொறுக்க முடியாத பிள்ளைகள் ஆசிரியருக்குப் பயந்து நாராயண நாம பாராயணத்தை விட்டுவிட்டார்கள் பிரகலாதன் மட்டுமே ஆசிரியரின் தண்டனைக்குக் கொஞ்சுமும் பயப்படாமல் பக்தியோடு ஹரிநாம ஸ்மரணை செய்து கொண்டிருந்தான் ஆசிரியர் பிரகலாதனைப் பார்த்து ஏது நீ உன் தந்தையின் கட்டளையைக் கடந்து நடக்கிறாயே உன்னைப் பலவிதங்களிலும் தண்டிப்பேன் இனி ஹரி நாமத்தைச் சொல்லாதே! என்றார்.

அதற்குப் பிரகலாதன், ஐயா! நீங்கள் சொல்வது சரியே தந்தை சொல்லைத் தட்டி நடக்கக் கூடாது பரமாத்தமான பிதா வெளிப்படும் வரையில் சரீர சம்மந்தியான பிதாவின் சொல்லை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் இந்தப் பிதாவினால் உலகத்திற்கு என்ன நன்மை? சகல உலகங்களுக்கும் சுகத்தைக் கொடுத்து சகலபாபங்களையும் போக்கடிக்கும் ஹரியே பரமபிதா விளக்கொளியைக் கண்டு மகிழ்வதெல்லாம் சூரியோதயம் ஆகும் வரையில் தான்! சூரிய உதயத்திற்குப் பிறகு அந்த விளக்கினால் ஏதேனும் உபயோகமுண்டோ? அஞ்ஞானியாக இருக்கும் வரையில், சுக்கில இரத்த சம்பந்தமான சரீரத்துக்குப் பிதாவினால் பிரயோஜனமுண்டு ஞானம் முதிர்ந்த பிறகு அஞ்ஞானியாக இருக்கும் பிதாவினால் என்ன பயன்? இது என் பிதாவுக்கும் எனக்கும் உள்ள சம்பந்தம்! இந்த விஷயத்தைப் பற்றி நான் மிகவும் ஆலோசித்து ஆராய்ந்தேன் சரீர பிதாவாகிய ஹரணியன் என்னை அடித்தால் ஆத்ம பிதாவாகிய ஸ்ரீஹரி என்னைக் காப்பாற்றுவார். இவன் என் உயிரையே வாங்கி விட்டாலும் வாங்கிவிடட்டும். நான் ஹரிநாம ஸ்மரணையை விடமாட்டேன்! என்றான்.

அசுரகுரு, மிகவும் கோபங்கொண்டு அவனைப் பலவிதங்களிலும் தண்டித்தான் அவை சிறிதேனும் பிரகலாதனைத் துன்புறுத்தவில்லை சாதாரண மனிதனை ஒருவன் தண்டிப்பதால் கஷ்டம் வராதிருப்பது பிரத்யக்ஷமாதலின் விசேஷபக்தியை விஷ்ணுவிடம் கொண்டிருந்த பிரகலாதனுக்குச் சிறிதேனும் ஆபத்து வருமா? ஆசிரியர் தன் முயற்சிகள் எதுவும் பயன் படாததைக் கண்டு பிரகலாதனை அவன் தந்தையிடம் அழைத்துச் சென்று உம் மகனை நீரே ஒப்புக்கொள்ளும் என்னால் இயன்றவரை சர்வ விதத்திலும் பார்த்து விட்டு விட்டேன் இவனால் மற்ற மாணவர்களும் ஹரி நாமத்தைச் சொல்லக் கற்றுக்கொண்டு விட்டார்கள் என்று சொல்லி, தன் வீட்டிற்குப் போய்விட்டார் ஹிரணியன் தன் புத்திரனது விஷயத்தில் தீராத கவலை கொண்டான். இனி அவன் நடத்திய இதர காரியங்களையும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

58. பிதாவுக்கு பிரகலாதன் உபதேசம்

பிராகலாதனின் தந்தை ஹிரண்யன், தன் மகன் என்ன செய்தும் ஹரிநாமத்தையே நினைத்தும் புகழ்ந்தும் வருவதைக் கண்டு மனம் பொறாமல் மற்ற மந்திரிகளின் புதல்வர்களை அழைத்து வந்து அவர்களை நோக்கி, நீங்கள் அனைவரும் யோக்கியர்கள் உங்கள் தந்தை சொல்லை ஏற்று நடப்பவர்கள். ஆகையால் நீங்கள் என் மகன் பிரகலாதனுடன் சிநேகம் செய்து கொண்டு, அவனுக்கு நற்புத்தி கற்பிக்க வேண்டும் என்றான் அதற்கு அவர்கள் ஆஹா! அப்படியே செய்கிறோம் என்று பிரகலாதனை அங்கிருந்து ஒரு மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று நண்பனே! நாங்கள் சொல்வதைக் கேட்டு நடந்துக்கொள்! மகாநுபாவரான உன் தந்தைக்குக் கோபம் வரும்படிச் செய்தால், நீ என்ன சுகத்தை அடைய முடியும்? தந்தை சொல்லும் வார்த்தையைக் கேட்டு நன்மை அடை இதுவே எங்கள் விருப்பம் இதை உனக்கு நண்பர்கள் என்ற முறையில் சொல்லுகிறோம். உன் விருப்பம் எப்படியோ அப்படியே நீ நடந்து கொள்ளலாம்! என்று போதித்தார்கள்.

ஆனால் பிரகலாதனோ, நண்பர்களே! தந்தை என்பது யார்? பந்து யார்? தாய் யாவள்? சகோதரர் யாவர்? சிநேகிதர் யாவர்? மனைவி எவள்? இது முழுவதும் தேக சுகத்துக்கே அன்றி மோக்ஷ சுகத்துக்கு அல்ல, மாலைப்பொழுதில் பற்பல இடங்களிலிருந்து வருகின்ற பறவைகள் எல்லாம் ஒரு மரத்தைச் சேர்ந்து பொழுது விடிந்தவுடனேயே தத்தமது காரியங்களுக்குப் பறந்து போகின்றன. தாய் தந்தையரின் சங்கதியும் இப்படிப்பட்டது தான் இதுதேக சம்பந்தமான கர்மபோகத்தை அனுபவித்து மீண்டும் வேறு சுகம் இல்லை இது கனவுபோன்றது உண்மையானதல்ல பகலில் பார்த்த விஷயங்கள் இரவில் கனவாகின்றன ஆகையால் நீங்கள் அனைவரும் விஷ்ணு பக்தி செய்து கிருதார்த்தர்களாகி நித்திய சுகத்தையடைய வேண்டும்! அப்படிச் செய்யாமல் சம்சார சுகத்திலேயே மூழ்கியிருந்து விட்டால் யம பாசத்தில் கட்டுப்பட்டுக் கஷ்டப்படுவீர்கள் நாம் இதுவரையில் பிள்ளைகளாகவும் பிதாக்களாகவும் சகோதரர்களாகவும் எத்தனையோ பிறவிகளில் தோன்றினோம் இவை கர்ம சம்பந்தத்தால் கருப்பாசமுற்றவையேயன்றிவேறல்ல முழுப்பாபியானால் ஒருவன் நகரத்தை அடைவான். முற்றும் புண்ணியத்தையே செய்தவன் சுவர்க்கத்தையே அடைவான் புண்ணிய பாவங்கள் இருண்டுமே கலந்திருப்பதால் மனிதப்பிறவி உண்டாகிறது. புண்ணிய பாவங்கள் நசித்தவிடத்தில் நிசதமான முக்தி கிடைக்கும் கர்ம சம்பந்தமான தேக அபிமானம் இருக்கும் வரை முக்தி கிடைக்க மாட்டாது. கர்ம நாசம் உண்டாகும். நிமித்தம் விஷ்ணுவைத் தியானிக்க வேண்டும். ஹரி நாமத்தால் கர்மங்கள் ஒழியும் ஹரிசேவை இன்றிக் கர்மம் ஒழிய வேண்டுமானால் கர்மங்களை அனுபவித்தாவது பிராயசித்தங்களைச் செய்தாவது ஒழிக்க வேண்டும், அப்படி ஒழிக்காவிடில் பிறவியை அடைந்து அனுபவித்தேயாக வேண்டும் அழுக்குத் துணியில் சாயம் ஏறாது அழுக்கில்லாத ஆடையிலேயே சாயம் பிடிக்கும் அதுபோலவே, தேகாபிமானத் தான் உண்டான மனத்திலுள்ள அழுக்கு. ஹரி பஜனையால் ஒழியுமேயல்லாமல், வேறு எதனாலும் ஒழியமாட்டாது நீங்கள் அனைவரம் மூர்க்கர்கள்! நீங்கள் என்ன சொன்னபோதிலும் என் தந்தையின் கட்டளைப்படி, நடப்பவர்களாக இருக்கிறீர்கள். சத்தியத்தை நீங்கள் அறியீர்கள் இனி உங்கள் விருப்பப்படியே செய்யுங்கள் நான் மட்டும் ஸ்ரீவிஷ்ணுவையே பக்திசெய்வேனே அன்றி, என் தந்தையின் கட்டளையை சிறிதும் கேட்கமாட்டேன் என் விருப்பப்படியே நடப்பேன், நீங்கள் போகலாம் என்றான்.

மந்திரி குமாரர்கள் மன வருத்தத்துடன் ஹிரணியகசிபனிடம் சென்று, அரசே! நாங்கள் எவ்வகையாகச் சொல்லிய போதிலும் உங்கள் புதல்வன் எங்கள் பேச்சைக் கேட்பவனல்லன் என்றார்கள். ஹிரணியகசிபன் எல்லையில்லாத கோபங்கொண்டு புத்திரனை அழைத்து வரச்சொல்லிவிட்டு தன் கோபத்தை வெளியேகாட்டி கொள்ளாமல், அவனைத் தன் அருகில் உட்கார வைத்துக் கொண்டு மகனே! நான் சொல்வதை கேள்! உன் பிடிவாதத்தை விட்டுவிடு உலகத்திலுள்ள மக்கள் ஹரியை ஏன் சேவிக்கிறார்களோ! அத்தகைய ஐஸ்வரியத்தை நீ என்னாலேயே அடைந்திருக்கிறாய் உனக்கு நான் ஹரியேயன்றி, ஹரி என்று வேறு ஒருவன் இல்லை, தேவர்கள், நாகர்கள், கந்தர்வர்கள், தானவர்கள், முனிவர்கள் முதலானவர்களும் எனக்கு வசப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். சகல லோகங்களும் என் ஆதீனத்தில் இருக்கின்றன நிக்கிரக அனுக்கிரக சாமர்த்தியமுடைய என்னை காட்டிலும் சிறந்த ஹரியாவன். என்னை விட்டுவிட்டு நீ சொல்லுகிற ஹரி எங்கே இருக்கிறானோ? நீ அவனைக் காட்டுவாயா? நீ இதை அறியாததால் என்னைச் சேவிக்காது இருக்கிறாய்! என்றான்.

அதைக்கேட்டதும் பிரகலாதன் ஓ! தைத்தியா! ஹிரணியகசிபா! நானே விஷ்ணு, என்னைவிட விஷ்ணு வேறில்லை. என்று சொல்கிறாயே! விஷ்ணு மூர்த்திக்கும் உனக்கும் அதிக ஏற்றுத் தாழ்வுகள் இருக்கின்றன. இரத்தினத்திற்கும் பருக்கைக் கல்லுக்கும், குயிலுக்கும் காகத்திற்கும், சந்தனத்திற்கும் சேற்றுக்கும், சாந்தமுடையவனுக்கும் கோபமுடையவனுக்கும், சூரியனுக்கும் மின்மினிப் பூச்சிக்கும் வேதத்திற்கும், சாதாரணப் பேச்சுக்கும் பொன்னுக்கும், இரும்புக்கும், பசுவுக்கும், பன்றிக்கும் உள்ள வித்தியாசத்தை போல விஷ்ணுமூர்த்திக்கும் உனக்கும் அவ்வளவு உயர்வு தாழ்வுகள் இருக்கின்றன. அவரோ சாந்தசீலர் நீயோ அகங்காரி, பாபி, காமுகன், தேக அபிமானி, நீசன், இறப்பவன், பிறரைத் தூஷிப்பவன், நீ வீணாகச் சந்தோஷமடைவதால் மோட்சம் அடையமாட்டாய் விஷ்ணுவைச் சந்தோஷப்படுத்தினால் மோக்ஷமடைவாய், நீயே விஷ்ணு என்று சொல்ல உனக்கு நாணமில்லையோ? அதை நீ எவ்வளவு தைரியமாகச் சொல்லுகிறாய் விஷ்ணுவுக்கும் உனக்கும் உள்ள தாரதம்மியங்களை நான் உனக்கு எடுத்துச் சொல்லிவிட்டேன் அதை அறிந்து கொள் யானைமேல் ஏறுவதை விட்டு நரி மேல் ஏறுவார் உண்டோ? இல்லை! ஆகவே நான் விஷ்ணுவையே சேவிப்பேன் உனக்கு ஏதாவது செய்யச் சக்தியிருந்தால் அதை விரைவில் செய்யலாம் என்று தன் தந்தைக்கு கொஞ்சமும் அஞ்சாமல் கூறினான். ஹிரணியகசிபன் பிரகலாதனைப் பார்த்து மகனே நான் எவனைச் சேவிக்க வேண்டும் என்று நீ சொல்லுகிறாயோ அந்த அவன் எங்கிருக்கிறான் அந்த விஷ்ணு எங்கே இருக்கிறான்? அவனை எனக்கு உன்னால் காட்ட முடியுமா? என்றான் அதற்கு பிரகலாதன் சொல்லியவற்றையும் அதற்கு மேல் நடந்தவற்றையும் சொல்லுகிறேன் கேளுங்கள்.

59. நரசிங்க சரப அவதாரங்கள்

ஹிரணியகசிபன் கேட்ட கேள்விகளுக்குப் பிரகலாதன் பின்வருமாறு பதில் சொன்னான். உலகத்தில் காணப்படும் பெருங்கடல்கள் உயர்ந்த மலைகள் மிகப் பெரிய மரங்கள் மேகங்கள் நதிகள், சேதன அசேதனப் பொருட்கள், கிராமங்கள், பட்டணங்கள், பெருநகரங்கள் சூரியன் சந்திரன் சைத்தியரதம் முதலிய வனங்கள், ஸ்மசானம், நீ நான் முதலிய ஸ்தூல சூஷ்மப் பிரபஞ்சங்கள் முழுவதிலும் நிறைந்திருப்பவனே ஸ்ரீமந் நாராயணன் அவன் முன் பின் நடுவு முடிவு முதலிய எவ்விடத்திலும் எந்தக்காலத்திலும் விளங்குபவன்; அவனுடைய உருவத்தை வருணிக்க எனக்குச் சக்தியில்லை ஹரி இல்லாத இடமே இல்லை என்று கூறினான். அதைக் கேட்டதும் ஹிரணியன் ஆத்திரம் அதிகரிக்கப் பெற்று அடா பிரகலாதா! அந்த ஹரி என்பவன் எவ்விடத்திலும் இருப்பதாக நீ கூறுவதால் அவன் இந்தத் தூணில் இருக்கிறானா? சொல் என்றான் பிரகலாதன். சர்வ வியாபியாகிய ஸ்ரீவிஷ்ணு இந்தத் தூணிலும் இருக்கிறான், தடையில்லை என்றான்.

தன்னிலும் மிக்கக் கடவுளே இல்லையென்று இனிமேல் வருவதையறியாமல் மிகவும் செருக்குற்ற ஹிரணியன் அப்படி இந்தத் தூணில் ஹரி என்பவன் இருப்பானேயாகில் நான் அவனை பூஜிக்கிறேன் பார் என்று கூறிக் கோபத்தால் கண்கள் சிவக்க, பற்களைக் கடித்து மீசை துடிக்கக் கத்தியைக் கையிலே ஏந்தித் தான் உட்கார்ந்திருந்த பீடத்திலிருந்து கொதித்தெழுந்து, தன் கையிலிருக்கும் கத்தியை ஓங்கி அந்தத் தூணை வெட்டினான். அவ்வாறு அவன் தூணை வெட்டியபோது மலையின் மீது பேரிடி யொன்று விழுந்தது போன்ற சப்தம் உண்டாயிற்று. உடனே அந்தத் தூணிலிருந்து விஷ்ணுமூர்த்தி சந்தியா காலத்தில் உக்கிரமான கோபத்துடன் தைத்தியர்கள் அனைவருமே அஞ்சத்தக்க உருவத்துடன் அவதரித்தார். அந்த விஷ்ணுமூர்த்தியின் பாதிசரீரம் சிங்க வடிவமாகவும் பாதி சரீரம் மானுட வடிவமாகவும் நரசிங்க வடிவத்துடன் பிரளயகால மேக கோஷம் போலக் கர்ஜித்துக் கொண்டு பிடரிமயிர்கள் ஆகாயத்து மேகங்களை உடைக்கவும் சிங்க கர்ஜனைகள் திசைகளைச் செவிடுபடுத்தவும், முகத்தில் உற்பவிக்கும் அக்கினி ஜ்வாலையினால் அசுரர்கள் எரிந்து போகவும், ஹுங்காரங்களால் அசுரமாதரின் கர்ப்பத்திலுள்ள பிண்டங்கள் விழுந்து விடவும், பெரிய கூரிய வளைவு நகங்களுடன் விளங்கினார். அத்தகைய நரசிங்காவதாரத்தைக் கண்ட அசுரர்கள் யாவரும் பயந்து, ஹிரணியகசிபனின் உத்திரவுபடி யுத்த சன்னத்தராய், பயங்கரப்போர் புரிந்து நரசிங்கத்தின் மூக்கிலிருந்து வந்த மூச்சுக் காற்றின் வேகத்தாலேயே அழிந்தொழிந்தார்கள்.

அசுரர்கள் யாவரும் க்ஷண நேரத்தில் அழிந்ததைக் கண்ட ஹிரணியகசிபன் தானே அவருடன் போர்புரிய நினைத்து, சர்வாயுதங்களையும் தாங்கி நரசிங்க மூர்த்தியோடு போர் புரியலானான் அப்போது பூமிதேவி தன்னுடைய நிலையில் இருக்க முடியுமோ என்று ஏக்கமடைந்தாள். கடல்கள் கலங்கின ஆகாயம் அசைந்து நட்சத்திரங்கள் உதிர்ந்தன இவ்வாறு நரசிங்க மூர்த்திக்கும் ஹிரணியனுக்கும் ஒரு முகூர்த்த காலம் பெரும் போர் நிகழ்ந்தது. உலகங்களுக்கெல்லாம் கொடுமை செய்யும் ஹிரணியனைவரத்தின் படி சம்ஹாரம் செய்வதற்கு அதுவே தக்க சமயம் என்று நரசிங்கமூர்த்தி திருவுளங் கொண்டு அந்தத் தூணின் துவாரபீடத்தில் தன் தொடை மீது ஹிரணியனை இருத்தி இரவும் பகலும் இல்லாத சாயங்கால வேளையில் ஆயுதம் என்று சொல்ல முடியாத தமது திருவிரல்களிலுள்ள நகங்களால் அவனது மார்பைப் பிளந்து பெருங்கர்ஜனையுடன் அவன் குடலைப் பிறித்துத் தமது கழுத்தில் மாலையாகச் சூடிக்கொண்டு நின்றார். இவ்விதமாக நரசிங்கப் பெருமானால் சகல தேவர்களும் பார்த்துக் கொண்டிருக்க ஹிரணியன் மரணமடைந்தான். தேவர்கள் யாவரும், இன்றல்லவோ நாம் மகிழும் நல்ல நாள்! அசுர உபாதை நீங்கிய நாள் என்று மகிழ்ந்து மலர்மாரி பொழிந்து ஜயஜயவென்று நரசிங்கமூர்த்தியைத் துதித்து நிருத்தியமாடிப் புகழ்ந்தார்கள்.

இந்தப் பெரும் போரில் அநேகர் இறந்தார்கள். பலர் இந்த யுத்தத்தைப் பார்க்கப் பயந்து, உலகத்தை விட்டே மறைந்து ஓடிப்போனார்கள் பூமியில் இராக்ஷசப் பூண்டில்லாமல் ஒழிந்தது. துக்கம் நீங்கியது யாவரும் மகிழ்ச்சியுடன் இருந்தார்கள். முன்பு வைகுண்ட பதவியில் விஷ்ணுமூர்த்தியை நோக்கி,  சுவாமி, கோமள தேகமுடைய தேவரீர் எவ்வாறு போர்புரிகிறீர்? என்று கேட்ட திருமகள் இந்த நரசிங்க அவதாரத்தில் உடன் இருந்து, அதைக் கண்டு, சுவாமி, எத்தகைய கொடிய உருவத்தை வகித்து விட்டீர்? என்று வியந்து சந்தேகம் நீங்கினாள். தேவ துந்துபிகள் முழங்கின ஹிரணியன் மடிந்ததற்காக மனம் வருந்திய அவன் மனைவி கயாது தன் துக்கத்தை வெளியே காட்டாமல் தன் மகன் பிரகலாதனைச் சாந்தப்படுத்த வேண்டியத் துக்கிப்பதைப் போலத் துக்கித்தாள் பிரகலாதனும், நான் தன்யனானேன் விஷ்ணுமூர்த்தியின் தரிசனம் கிடைக்கப் பெற்றேன். துஷ்டனான ஹிரணியன் இறந்து ஒழிந்தான் என்று மகிழ்ந்திருந்தான்.

நரசிங்கமூர்த்தியின் கோபாக்கினி தணியவில்லை. தேவர்கள் முதலிய யாவரும் அவரது கோபாக்கினிக்கு ஆற்றாது, இவரது கோபத்தால் என்ன துன்பம் அடைய நேரிடுமோ, என்று துக்கித்தார்கள் என்றாலும் நரசிங்க வடிவிலிருந்த விஷ்ணுமூர்த்தியின் அருகே சென்று அவரைத் தோத்திரம் செய்து கோபத்தைத் தணித்தவர் ஒருவருமில்லை. தேவர்கள் ஒவ்வொருவரும் நீர்போம்; நீர்போம் என்று நரசிங்கத்திடத்தே பிறரை அனுப்ப முயன்றார்களேயன்றி, தாமே போனால் தமக்கு என்ன விபரீதம் விளையுமோ என்று அச்சத்தோடு இருந்தார்கள். அவர்கள் இந்திரனை வணங்கி நரசிங்கமூர்த்தியை சாந்தப்படுத்துங்கள் என்றார்கள். இந்திரனோ ஆஹா! இந்தக் கோர ரூபத்தினிடம் நான் சொல்லவல்லவனல்லேன் என்றான். பிருமாவைத் தேவர்கள் வேண்ட அவர் என் உடல் பொரிந்து விடும். நான் போகமாட்டேன் என்றார் பிறகு திருமகளைத் தேவர்கள் வேண்ட அவளோ நான் இந்தப் பயங்கர ரூபத்தை இதற்கு முன்பு எப்பொழுதும் கண்டதில்லை ஆகையால் நான் போகமாட்டேன் என்றாள். முனிவர்கள், தேவர்கள் அனைவரும் அவரை அணுகப் பயந்து கொண்டிருந்தார்கள். யாராவது ஒருவர் சென்று பிரார்த்தித்தாலொழிய நரசிங்கமூர்த்திக்குக் கோப சாந்தி உண்டாகாது என்ற நிலையில் அவர்கள் பிரகலாதனைப் பார்த்து. நீ தான் அவரை சாந்தப்படுத்த வேண்டும்! என்றார்கள். பிரகலாதன் அவர்களது வேண்டுகோளுக்கு இணங்கி அவரிடத்தே நீங்காத பக்தியுடையவனாக நரசிங்க மூர்த்தியை அடைந்து சுவாமி சாந்தமடைய வேண்டும்! என்று பிரார்த்திக்க நரசிங்க மூர்த்தி, அவனைத் தூக்கி நாவினால் அவன் உடலை நீக்கி, யாவரும் கேட்கும்படி பிரகலாதா! நீ இதுவரை பலவகையிலும்கஷ்டங்களை அனுபவித்தாய் இனி உனக்கு கஷ்டமேயில்லை! என்று கூறி, அவனைக் கட்டியணைத்துக் கொண்டு, என் மனம் இப்போது தான் குளிர்ந்தது துஷ்டனான ஹிரணியனால் என் மனம்கொதித்தது. அவன் புத்திரனான உன்னை ஆலிங்கனம் செய்ததால் அது தணிந்தது. நான் எப்படி உன்னை மார்போடு அணைத்துச் சுகமடைந்தேனோ, அவ்வாறே நீயும் உன் புத்திராதிகளைத் தழுவிச் சுகமடைவாயாக, நீ புத்திர பவுத்திரர்களுடன் கூடி நெடுங்காலம் ஆட்சி புரிவாய். உன் வமிசம் விருத்தியடையும் நீ பக்தனாகையால் உன்னை ஜெயிப்பது எனக்கும் அசாத்தியமே என்று வரங்கொடுத்து பூத்காரம்(புஸ் என்னும் ஓசை) செய்து கொண்டிருந்தார்.

அப்போது தேவர்கள் யாவரும் நரசிங்கமூர்த்தி சாந்தமடையாமல் இருப்பதைக் கண்டு பயந்து, விநாயகக்கடவுளை தியானித்து விகடராஜரே! விகடகாரியங்களைச்செய்து அவரைச் சந்தோஷப்படுத்த வேண்டும் என்று பிரார்த்தித்தார்கள். கணபதி தம் யானை முகமும் பெருவயிறும் தோன்றச் சிறிய தொரு பெருச்சாளி வாகனத்தில் அமர்ந்து சென்றார் அப்போது பெருச்சாளி விரைவாக நடவாததால், கணபதிதமது வாகனத்தை அடிக்க அதுகாலொடிந்து இடறியது விநோதஞ் செய்ய அந்த விநாயகர் விளையாட்டுக்காக நிலமிசை விழுந்தார். அதைக்கண்டு அங்கிருந்த அனைவரும் சிரித்தார்கள். நரசிங்க மூர்த்தியும் நகைத்தார். அவர் சிரித்ததைக் கண்டு அவரது கோபம் தணிந்தது என்று தேவர்கள் மகிழ்ந்தார்கள், ஆயினும் நரசிங்கமூர்த்தியின் முகத்தில் உண்டாயிருந்த அக்கினி ஜ்வாலை மட்டும் தணியாமலிருப்பதைக் கண்ட தேவர்கள் திருக்கைலாய மலையை அடைந்து நந்திதேவரிடம் அனுமதி பெற்று சிவபெருமானின் சன்னதியை அடைந்து சேவித்து, மகேஸ்வரா எங்களுக்கு அடிக்கடி வருகிற துன்பங்களை நீக்கி இரட்சிப்பவர் நீரன்றோ? சமுத்திரத்தைக் கடைந்த காலத்தில் சுபகரமான பொருள்களையெல்லாம் எங்களுக்குக் கொடுத்து ஆலால விஷத்தை தேவரீர் புசித்து, நீலகண்டர் என்ற பெயரைப் பெற்றீர் எங்களுக்கு விபத்து வரும் போதெல்லாம் உம்மிடம் நாங்கள் விண்ணப்பம் செய்து அவ்விபத்துக்களைப் போக்கிக்கொண்டு வருகிறோம் நரசிங்கமூர்த்தியின் உக்கிரமான ஜ்வாலை எங்களைத் துன்பப்படுத்துகிறது. அதைத் தணித்துவிட தேவரீரே சமர்த்தர். ஆகையால் அதைச் சாந்தி செய்து எங்களைக் காக்க வேண்டும் என்று வேண்டினார்கள், சிவபெருமான் அவர்களது வேண்டுகோளை ஏற்றுக் தேவர்களே! நான் என்னைச் சரணடைந்தவர்களுடைய துன்பத்தை ஒழிப்பதையே விரதமாகக் கொண்டவன் ஆகையால் அதைக் காப்பேன் உங்கள் துக்கங்கள் ஒழிந்தன வென்றே நினையுங்கள்! என்றார். அதற்குத் தேவர்கள் கருணா மூர்த்தியாகிய நீர் எங்களிடம் கருணை வையாது இருந்தால் எங்களுக்கு நேரும் ஆபத்துக்கள் நீக்குப வரும் வேறு உண்டோ? என்று துதித்து அவரிடம் விடைபெற்றுத் தங்கள் இருப்பிடம் சேர்ந்தார்கள்.

சிவபெருமான் தேவர்களுக்குக் கொடுத்த வரத்தை நிறைவேற்றத் திருவுளம் கொண்டு சரபத் திருவுருவம் வகித்து நரசிங்க மூர்த்தி இருக்குமிடத்திற்கு புறப்பட்டார். நரசிங்க மூர்த்தியோ அதிதூரத்தில் வருகின்ற கடும் பயங்கரமான சரப வடிவத்தைத் தம் கண்களால் கண்டவுடனே யோசித்தார். சரபவடிவில் எழுந்தருளிய சிவபெருமான் நரசிங்கமே! நீ ஹிரண்யகசிபனையும் அசுரர்களையும் சங்கரித்து உலகத்திற்கு நன்மை செய்தாய் அல்லவா? என்று கேட்டார் உடனே நரசிங்கம் ஜயஜய சங்கரா என்று சொல்லிக் கொண்டு சரபமூர்த்தியான சிவபெருமானைப் பிரதக்ஷிணம் செய்து (இந்தச்சரிதம் வேறுவகையாகவும் வழங்குகிறது. அதாவது: நரசிங்கமூர்த்தி ஹிரணியகசிபனுடைய இரத்தத்தில், ஒரு துளிக்கூடக் கீழே சிந்தித் சிதறாதபடி கையில் பிடித்து வாய் வைத்துப்பருகினார். அவ்வாறு உதிரம் அருந்தியதால் உன்மத்தங் கொண்டவர் போலத்தன்னை சமீபத்தவர்களை வாரி வாயிற்பெய்து செருக்குற்று நின்றார். அதைக் கண்ட அமரர்கள் அவருகில் செல்லப் பயந்து இனி ஒரு நொடியில் உலகமே அழிந்து விடும் என்று கருதி ஓடித் திருக்கையிலைமலையை அடைந்து சிவபெருமானின் சன்னதியில் விண்ணப்பிக்க சிவபெருமான் அமரர்களே! அஞ்சாதீர்கள்! என்று கூறி அவர்களை அனுப்பி விட்டு இரு சிரமும் இணையில்லாத சிறகுகளும் கூரிய நகமுடைய எட்டுக்கால்களும் கடுங்கோபமும் நெடியவாளும் பேரிரைச்சலும் கொண்ட சரபத் திருவுருவத்துடன் நரசிங்கத்தையடைந்து, இடி முழக்கம் போலக் கர்ஜித்து உதிர வெள்ளம் ஊற்றெடுத்தோட சிங்கச்சிரத்தையும் கைகளையும் அறுத்துத் தள்ளி மேலே உட்கார்ந்து சிங்கத்தின் சர்மத்தை உரித்து போர்வையாக்கி கொண்டு, வெள்ளி மலையை அடைந்து எழுந்தருளியிருந்தார். விஷ்ணு பழைய உணர்வைப் பெற்று சிவபெருமானைப் பூஜித்து தேவர்களும் முனிவர்களும் கேட்கும்படி நரசீங்கபுராணத்தை ஓதி, வைகுந்தம் அடைந்து எழுந்தருளியிருந்தார் என்பதாகும்)

இதனைப் பின்வரும் பிரமாணங்களால் அறியலாம்.

ருக்வேதம்: அஹம்ம்ருணா ஸரபாய ருக்ஷிபந்தவே

தைத்ரீயோபநிஷதம்: ஹரீம் ஹரந்த மதுயந்திதேவா
விஸ்வஸ்யே ஸாநம் வ்ருஷபம் மதீநாம்

ஸ்ரீஸ்காந்தம்: ஹரிம் ஹரந்தம் ஸரபம்விஸ்வஸ்யேஸாந மீஸ்வரம்
அநுயாந்தி ஸுராஸ் ஸர்வே நமோ வாக்யைஸ் ஸஹத்ருதம்

காசி கண்டம்: புராஹிரண்ய கசிபும் தைத்ய ராஜம் மஹாபலம்
ஹத்வாதத் ருதிராபாந பரமத்தம் யாசித ஸுணா
ருத்ர: ஸரப ரூபணே நரஸிஹ மபீடயத்

அவரிடத்திலேயே லயமானார். அதைக் கண்ட தேவர்கள் மகிழ்ந்து மலர்மாரி பொழிந்து, சிவபெருமானையும் நரசிங்கமூர்த்தியையும், பிரகலாதனையும் புகழ்ந்தார்கள்.

 சிவபெருமான் தேவர்களை நோக்கி, இப்போது இரணிய கசிபனைச் சங்கரித்த நரசிங்கனும் வேண்டியவர்களுக்கு வேண்டிய வரங்களைக் கொடுப்பான் என்று சொல்லி வெள்ளிமலையை அடைந்தார். பிறகு இரண்யாக்ஷ ஹிரண்யகசிபர்களே இராவண கும்பகர்ணர்களாகப் பிறந்து ஸ்ரீராமபிரானால் சங்கரிக்கப்பட்டார்கள். அவர்கள் மீண்டும் தமகோஷனுக்குப் புதல்வராய் சிசுபால தந்தவக்கிரராக ஜனித்து ஸ்ரீகிருஷ்ணனால் சங்கரிக்கப்பட்டார்கள். இவ்வாறு ஜய விஜயர்கள் மூன்று பிறவிகள் எடுத்து விஷ்ணுவைப் பகைத்து அவரால் சங்கரிக்கப் பட்டு, வைகுந்தத்தையடைந்து தமது பதவியில் நிலைத்து விஷ்ணுவுக்குச் சேவை புரிந்து சுகமாக வாழ்ந்திருந்தார்கள். முனிவர்களே! நரசிங்க அவதாரச் சரிதத்தையும் சிவபெருõனின் சாரூபக் கதையையும் உங்களுக்குச் சொல்லிவிட்டேன். இந்தச் சரிதங்களைக் கேட்பவர்கள் துக்கங்களை ஒழித்து சகல சுகங்களையும் அனுபவிப்பார்கள்.

இவ்வாறு சூதமுனிவர் நைமிசாரணிய வாசிகளுக்குச் சொன்னார்.

60. நளராஜனின் பூர்வக கதை

சூதமுனிவரே! நீர் மாபெரும் ஞானசீலர், புண்ணிய சரித்திரங்களை இன்னுஞ் சொல்லவேண்டும் பூர்வத்தில் தேவர்களும் அரசர்களும் யாரைப் பூஜித்து, கிருத கிருத்தியர்களானார்கள் என்று நைமிசாரணிய முனிவர்கள் கேட்டார்கள். சூதபுராணிகர் கூறலானார்.

முனிவர்களே! நீங்கள் கேட்டது மிகவும் நல்ல விஷயம், உலகங்களுக்குப் பிதாமகனான பிரமதேவரும் அவரது புத்திரர்களாகிய மரீசி முதலிய பிரம்ம ரிஷிகளும் சிவபூஜையைச் செய்தே கிருதார்த்தரானார்கள். அவர்கள் பார்த்திவ லிங்கத்தையும் சுவர்ணம், வெள்ளி முதலிய உலோகங்களாலும் இரத்தினங்களாலும் செய்யப்பட்ட லிங்கங்களையும் அர்ச்சித்தும் மானசீகபூஜை செய்தும் கீர்த்தி பெற்றார்கள். இப்பொழுதும் பலர்பூஜித்து வருகிறார்கள். நாரத முனிவர், சிறப்பான சிவபூஜை செய்திருக்கிறார். முனிவர்களில் உயர்ந்த வசிஷ்டரும், பதிவிரதைகளில் உயர்ந்த அருந்ததியுஞ் சிவபூஜை செய்தவர்கள், காசிபரும் அதிதியும் பார்த்திவலிங்க பூஜை செய்து, தம் இஷ்ட பலன்களை அடைந்தார்கள். சுவாயம்புவமநு முதலிய யாவரும் சிவபூஜை செய்து இராஜ்யபோகம் அடைந்தார்கள் சுவாயம்புவமநுவின் புதல்வன் பிரியவிரதனும் சிவ பூஜையாலேயே தன்யனானான், இஷ்வாகு மாந்தாதா, சகரன், நகுஷன், திலீபன், தசரதன் முதலியவர்கள் அனைவரும் தமது ஆயுட்காலம் முழுமையும் சிவபூஜை செய்து வந்தார்கள். அவர்களில் தசரதன் எவ்வளவு காலம் சிவபூஜை செய்தும் புத்திர பாக்கியம் இல்லாமல், அதனை அடையும் பொருட்டு கோடி லிங்கார்ச்சனை செய்து, பிறகு புத்திர காமேஷ்டியாகத்தைச் செய்தான் அப்போது சிவஸ்வரூபமான அக்கினி தேவன் விஷ்ணு ரூபமாகப் பிரசன்னமாகி நான்கு புத்திரர்களாகப் பிறந்தனன். கவுசலையும் வசிஷ்டரது கட்டளையை ஏற்று பார்த்திவலிங்க பூஜையை செய்து வந்தாள். ஸ்ரீராமரும் தினந்தோறும் பார்த்திவலிங்கபூஜை செய்துவந்தார். அந்தச் சூரிய வமிசத்தில் பிறந்தவர்கள் யாவருமே கிரமப்படி சிவபூஜை செய்து சகல ஐஸ்வர்யங்களையும் அடைந்தார்கள். பார்வதிதேவியின் சாபத்தால் பெண் தன்மையடைந்த புரூரவன் சிவலிங்க அர்ச்சனையைச் செய்து சிவகடாட்சத்தால் ஒருமாதம் ஆணுருவமாகவும் ஒருமாதம் பெண்ணுருவமாகவும் இருந்து வந்தான். பரதன் சிவார்ச்சனை செய்திருக்கிறான் பஞ்சபாண்டவர்களும் சிவபூஜை செய்து வந்தார்கள். அவர்களில் அர்ச்சுனன் வேதலியாசரின் உபதேசத்தை பெற்று விசேஷமாக சிவபூஜை செய்திருக்கிறான் கண்ணன் ஒரு காலத்தில் வடுககிரியில் ஏழுமாதங்கள் வரையில் சிவபூஜையை இடைவிடாமற் செய்து, சிவபெருமானிடம் பல வரங்களைப் பெற்று உலகத்தைச் சுவாதீனம் செய்து கொண்டான். அந்தச் சிவலிங்கத்திற்கு அவன் பூஜித்த வில்லதளங்கள் பர்வதாகாரமாயிருக்கின்றன நளராஜன் பூர்வஜனனத்தில் தான் வேடுவனாக இருக்கையில் தினந்தோறும் சிவபெருமானைப் பூஜித்ததால் இராஜ சம்பத்தையடைந்தான். இவ்வாறு சூத முனிவர் சொல்லிக் கொண்டிருக்கும் போது சவுனகாதி மனிவர்கள் அவரை நோக்கி, சிவஞானச் செம்மலே! அந்த வேடன் தினந்தோறும் பூஜித்த வகையையும் அந்தப் பூஜைக்குச் சிவபெருமான் மகிழ்ந்து அவனுக்கு இராஜ்யசம்பத்தைக் கொடுத்து அருளிய தன்மையையும், சிவபெருமானை அர்ச்சனை செய்த முறைமையையும் எங்களுக்கு விவரமாகக் கூற வேண்டும் என்று வேண்டினார்கள் சூதமுனிவர் சொல்லத் தொடங்கினார்.

முனிவர்களே அற்புதம் என்ற பர்வதத்தில் வசிக்கும் வேடர் குலத்தில் பிறந்த ஆகுகன் என்பவன் தன் மனைவியான ஆகுகி என்பவளுடன் வாழ்ந்து வந்தான். அவர்கள் இருவரும் அந்த மலைக்கு அருகிலுள்ள ஒரு சிவாலயத்தை அடைந்து வேடன் சிவாலயத்தினுள்ளும் அவன் பத்தினி சிவாலயத்தின் வெளியேயும் நாள்தோறும் சிவலிங்கார்ச்சனை செய்து சிவதரிசனம் செய்து வருவதை நியமமாகக்கொண்டு வாழ்ந்து வந்தார்கள். இவ்விதம் இருக்கும்போது, ஒரு சமயம் ஜடாதரராகிய ஒரு யோகி மாலைப் பொழுதில் அவ்வழியே வந்து, அங்கு சிவாலயம் இருப்பதை அறிந்து சிறிது நேரம் நின்றார். அவர்வரவைக் கண்ட வேடன் பத்தினி ஆகுகி அவரிடம் சென்று அவரை வணங்கி, சுவாமி! தாங்கள் எங்கே போகவேண்டியவர்கள்? நீங்கள் இங்கேயே இருக்கலாம். நேரம் இருட்டி விட்டது என்று மரியாதையுடன் உபசரித்தாள். அந்த யோகியோ தன்னுடன் பேசியது பெண்பாலாக இருந்ததால், அவளுடன் எதையும் பேசாமல் மவுனமாக இருந்தார். அப்போது சிவதரிசனத்துக்கு வந்த வேடன் ஆகுகன் அந்த சிவயோகியைப்பார்த்ததும் அவரது திருவடிகளில் வீழ்ந்து வணங்கி, சுவாமி எங்களுக்குத் தெய்வம் போல இங்கே நீங்கள் வந்திருக்கிறீர்கள். அதற்காகப் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். தாங்கள் எங்கே போக வேண்டும்? இப்போது தங்களுக்கு வேண்டுவது என்ன? என்று கேட்டான். அதற்கு யோகி அப்பா! நான் ஒரு யாத்ரீகன் எனக்கு ஒன்றும் வேண்டாம். இராப்பொழுதைக் கழிக்கும்படிச் சயனிக்க இடம் வேண்டும்! என்றார் அவ்வேடன் அப்படியே ஆகுக! என்று தன் குடிசையில் அவரை இருக்கச் செய்து நாமிருவரும் புறம்போயிருக்கலாம் என்று தன் மனைவியிடம் கூறினான். அப்போது, சிவயோகியார் ஐயோ, பெண் பிள்ளையை இரவு காலத்தில் வெளியே இருத்தப்படாது என்றார். உடனே ஆகுகன் சுவாமி! அப்படியானால் தாங்களும் இவளும் இவ்வீட்டில் இருங்கள். நான் ஆயுதபாணியாக வெளியே இருக்கிறேன். என்று சொல்லி அவரை உள்ளே அனுப்பி தன் மனைவியையும் அந்தக் குடிசையினுள்ளேயே இருக்கும்படியே வைத்துவிட்டு தான் மட்டும் வில் அம்பு முதலிய ஆயுதங்களுடன் வெளியே விழித்துக் கொண்டு காவலிருந்தான். சிவயோகியார் தம் வழக்கப்படி அந்தக் குடிசையில் சிவயோகத்தில் இருந்தார். வேடன் மனைவி ஆகுகி படுத்துக் கொண்டிருந்தாள். நள்ளிரவில் பெரும்புலி ஒன்று வந்து ஆகுகனைத் தின்று விட்டது.

பொழுது விடிந்ததும் வேடன் மடிந்ததைக்கண்டு சிவயோகியார் மனம் வருந்தினார். அப்போது வேடன் மனைவி ஆகுகி சுவாமி தாங்கள் வருந்த வேண்டாம் என் கணவர் பிராமணருக்கு உதவி செய்து தம் உயிரை விட்டதால் நற்கதியடைவார் என்று நான் சந்தோஷப் படுகிறேன். இனி அடியாளும் அவருடன் பிராணனைவிடத் தாங்கள் உத்தரவு கொடுக்க வேண்டும்! என்று கூறிவிட்டு காஷ்டமூட்டி புலிக்கோட்பட்டு இறந்த தன் கணவனது தேகத்தின் மிகுதியை அதிற்பெய்து, தானும் விழ எத்தினித்தாள் அப்போது சிவபெருமான் பிரத்தியட்சமாகி அவள் கையை பிடித்துத் தடுத்து நீ விதர்ப்ப தேசத்தில் வீமராஜன் மகளாய்த் தமயந்தி என்ற பெயருடன் பிறப்பாய் உன் கணவனும் நிஷதத் தேசத்தில் வீரசேன மகாராஜனின் மகனாய் நளமகாராஜன் எனப் பிறப்பான். இந்த யோக புருஷன் உங்கள் நட்பைப் பிரித்தவன். ஆகையால் இவன் அன்னப் பறவையாகத்தோன்றி உங்களுக்குத் தூது நடந்து உங்களிருவருக்கும் திருமணஞ் செய்விப்பான். உங்களுக்கு இனி வேறு ஜனனமில்லை. முக்தி கைகூடும்! என்று வரங்கொடுத்தார்; வேடுவச்சி ஆகுகி மனமகிழ்ச்சியுடன் அந்தத் தீயில் பாய்ந்து உயிர் நீத்தாள்; பிறகு சிவபெருமான் அவ்விடத்தில் கோயில் கொண்டு அசலேசுவரர் என்ற பெயர் பெற்று விளங்குகிறார், இனி நீங்கள் கேட்ட அர்ச்சுனனுடைய சிவபூஜையைப் பற்றிச் சொல்லுகிறேன்.

61. கண்ணனும் வியாசரும் பாண்டவரிடம் வருதல்

முனிவர்களே! முன் ஒருகாலத்தில் துரியோதனனால் துரத்தப்பட்டு, வனத்தையடைந்த பாண்டு புத்திரர்களாகிய தருமன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் என்ற ஐவரும், தம் பத்தினியான திரவுபதியுடன் துவைத வனத்தில் இருந்தார்கள். சூரிய பகவான் கொடுத்த அன்ன பாத்திர மகிமையினால் அவர்கள் கானகத்தில் காலங்கழித்து வந்தார்கள். அப்போது துரியோதனின் தூண்டுதலின் பேரில் துர்வாச முனிவர் பதினாயிரம் சிஷ்யர்களுடன் அங்கு சென்று தரும ராஜனே! எங்களுக்கு ஆறுசுவையுடன் கூடிய விசேஷ அன்னம் அளிக்கவேண்டும் என்று கேட்டார். அதற்குத் தர்மராஜர், மகானே! அவ்வாறே அன்னமளிக்கிறேன் ஸ்நானம் செய்து வாருங்கள் என்று அவரை அனுப்பிவிட்டு நம்மால் எவ்வாறு இவர்களுக்கெல்லாம் அன்னமிட முடியும்? அன்னமிட முடியாத நிலையில் அவர்கள் திரும்பி வந்தால், அவமானப்படுவதைவிட உயிரை விடுவதே நலம் என்று எண்ணித் தீர்மானித்தார். அப்போது திரவுபதி தங்களுக்கு ஆபத்துக்கு உதவும் கிருஷ்ணனைத் தியானித்தாள். கிருஷ்ணன் அவ்விடம் வந்து, நடந்ததை அறிந்து அன்ன பாத்திரத்திலிருந்த இலைக்கறியைக் கையிலெடுத்து அதன் மீது ஜலத்தை விடச்சொல்லி, பதினாயிரம் பேருக்கும் போதுமான அன்னபானாதிகளை உண்டுபண்ணினார். துர்வாச முனிவர் தம் சீடர்களுடன் ஸ்நானம் செய்து முடித்து, அங்கு வந்து சந்தோஷமாகப் புசித்துச் சென்றார்.

பாண்டவர்களே! கடவுளின் கிருபை எவன் சார்பில் உண்டோ அவனுக்கு குறையெதுவும் இராது. நீங்கள் கடவுள் பக்தியுள்ளவர்கள் என்று ஸ்ரீகிருஷ்ணர் புன்முறுவலோடு கூறினார். அப்போது பாண்டவர் ஐவரும் ஸ்ரீகிருஷ்ணரைப்பார்த்து இன்று உமது தயவால் எங்களுக்கு வந்த கஷ்டம் விலகியது. பலவானாகிய துரியோதனன் எங்களுக்குப் பகைவனாக இருக்கிறான். இனி என்ன நடக்குமோ? இனி நாங்கள் என்ன செய்வோம்? என்று வருத்தப்பட்டார்கள். அதற்கு கிருஷ்ணர்; பாண்டவர்களே! நான் சொல்கிறபடிச் செய்யுங்கள். நான் துவாரைகையிலிருந்து பகைவர்களை வெற்றிக் கொள்வதற்காக வேண்டி உபமன்யு முனிவரிடம் சிவ பூஜாக்கிரமத்தை உபதேசம் பெற்று வடுககிரியில் ஏழு மாதம் தீøக்ஷவகித்து; சிவபூஜை செய்தேன். சிவபெருமான் பிரத்தியட்சமாகி இஷ்டமான வரங்களை எனக்கு வழங்கி. வில்வேஸ்வரர் என்ற பெயரோடு அங்கு எழுந்தருளியிருக்கிறார். நான் சிவாநுக்கிரகத்தால் பகைவர்களை வென்றேன். இப்போதும் புத்தி முக்திகளைக் கொடுக்கும் சிவபூஜையை செய்து வருகிறேன். ஆகையால் நீங்களும் சகல சுகங்களையும் தரும் சிவபெருமானைப் பூஜிக்க வேண்டும் என்று சொல்லிப் பாண்டவர்களைத் தேற்றி; அங்கிருந்து மறைந்தார்.

அதன் பிறகு பஞ்சபாண்டவர்கள்; புத்திமானான ஒரு வேடனைத் துரியோதனனிடம் போய் அவன் குணங்களைப் பரீட்சித்துப் பார்த்து வரும்படி அனுப்பி வைத்தார்கள். அவன் அவ்வாறே சென்று அங்கு ராஜ்ய காரியங்களை துரியோதனன் சரிவர நடத்துவதைக் கண்டு வந்து தருமராஜரிடம் சொன்னார்கள். அதனால் பாண்டவர்கள்; இனி என்ன செய்வோம்? என்று கவலைப்பட்டார்கள் அப்போது ஜடா மகுடதாரியாய் விபூதி உத்தாளனஞ் செய்து கொண்டு வேத வியாஸர் தர்மதேவதையைப் போல அங்கு வந்தார் பாண்டவர்கள். அவரைக்கும்பிட்டு முறைப்படிப் பூஜித்து உயர்ந்ததொரு ஆசனத்தில் அமர்த்தி அவரை மகிழ்வித்து நாங்கள் இன்றுதான் தன்னியர்களானோம். இன்று தான் எங்கள் ஜன்மம் சாபல்யமாயிற்று. எங்களது சற்கருமங்கள் இப்போது தான் பயனளித்தன; தேவ; பிராமணர்களை நாங்கள் பூஜித்ததும்; எங்கள் தவமும் தானமும் தங்களது தரிசனத்தால் பயனடைந்தன. எங்கள் கஷ்டங்கள் விலகின மகாத்மாக்களின் அநுக்கிரகம் கிடைத்தபோது துக்கமும் வருமா? எளியோரைக் காப்பதே பெரியோர் கடன் அடியார்கள் செய்த தீக்கர்மங்களை ஒழித்து அவர்களுக்குச் சற்குணம் வரும்படி ஆசீர்வதிப்பதே பெரியோர் கடமை. ஒருவன் செய்யவேண்டியது பெரியோர் சேவையே! தங்கள் தரிசனத்தால் எங்கள் உள்ளங்கள் வாடிய பயிர் மழை பெய்யப் பெற்றது போலக் களிப்புற்றது! என்று பலவாறு துதித்தனர் வியாஸ மகரிஷி அவர்களிடம் தயையுடையவராய்ச் சொல்லத் தொடங்கினார்.

62. வியாசர் உபதேசமும் அர்ச்சுனன் தவமும்

பாண்டவர்களே! நீங்கள் ஐவரும் புண்ணியர்கள் சத்தியவான்கள். நீங்கள் தருமத்தைக் கைவிடாமல் இருப்பதால் உங்களுக்கும் ஒப்பாரும் இல்லை. நற்குணசீலர்கள் தங்கள் ஆயுளுக்கு இறுதி வந்தாலும் பொய் சொல்லமாட்டார்கள் அத்தகைய சத்தியத்தால் வரும் தர்மமே சுவாக்காதி நற்பயன்களுக்கும் காரணமாகும் எனக்கு நீங்களும் துரியோதனாதிகளும் சமமானவர்கள். ஆயினும் தர்மவான்களிடத்திலேயே பெரியோருக்குக் கிருபை இருக்கவேண்டும். ஆகையால் உங்களையே நான் அதிகமாக விசுவாசிக்கிறேன். முன்பு துஷ்டனான திருதராஷ்டிரன் உங்களுடைய இராஜ்யத்தைப் பேராசையால் பறித்துக் கொண்டான் அவனுக்கு நீங்களும் துரியோதனாதியரும் புத்திரர்களே! உங்கள் தந்தை பாண்டு இறந்து நீங்கள் சிறியவர்களாக இருந்ததற்காக உங்கள் விஷயத்தில் தயை வைக்க வேண்டிய அவன் சிறிதும் இரக்கம் இல்லாமல் இருந்து விட்டான் தப்பிதம் செய்த தன் புத்திரனை அவன் தண்டிக்கவும் இல்லை. அவனைத் தடுத்தல் விபரீதம் விளையுமோ என்று வாளாவிருந்தான். நடப்பவை நடந்தே தீரும் அந்தத் திருதராஷ்டிரன் துஷ்டன் சத்தியவான்களாகிய நீங்கள் தர்மவான்கள் விதைத்த விதைகள் முளையாமல் இருக்குமா? அவன் சுகத்திற்குப் பிறகு சங்கடத்தையும் நீங்கள் துன்பத்திற்குப் பின் சுகத்தையும் அனுபவிப்பீர்கள் ஆகையால் நீங்கள் வருந்த வேண்டாம் என்றார். தருமராஜன் முதலானவர்கள் அவரை நோக்கி மகாத்மாவே! தாங்கள் உண்மையையே சொன்னீர்கள் நாங்கள் நகரத்தை விட்டுக் காட்டுக்கு வந்தும் துஷ்டர்களான துரியோதனாதிகள் பெருந்துன்பங்களைச் செய்கிறார்கள் அக்கஷ்டங்கள் ஒழியுங்காரணமாகவே தாங்கள் எங்களுக்கு நற்கருமங்களை உபதேசிக்க வேண்டும் கிருஷ்ணர் எங்களைச் சிவாராதனை செய்யும் படிக் கட்டளையிட்டிருக்கிறார். தாங்களும் அவ்வாறே கட்டளையிட்டுச் சிவபூஜா விதியை உபதேசித்தால் தங்கள் உத்தரவின் படிச் செய்வோம் என்றார்கள். அதன்பிறகு வியாஸ முனிவர் பெரிதும் மகிழ்ந்து நானும் சிவபூஜை செய்து கொண்டு வருகிறேன் நீங்களும் அப்படிச் செய்தால் நிலையான சுகத்தை அடைவீர்கள். என்று பாண்டவர்கள் ஐவரின் அர்ச்சுனன் ஒருவனே சிவபூஜை செய்வதற்குக் தக்கவன் என்று நினைத்துத் தவஞ் செய்யத்தக்க இடத்தையும் யோசித்துச் சொல்ல தொடங்கினார்.

பாண்டவர்களே! கேளுங்கள் ஹிரண்யகர்ப்ப பிபீலிகாபரியந்தமான பிரபஞ்ச முழுவதும் சிவரூபமே தவிர வேறில்லை. கண்ணுக்குப் புலப்படும் யாவும் சிவரூபம் என்றே தியானிக்க வேண்டும் தன்னை உபாசித்த யாவரையும் சிவபெருமான் சுகமடையச் செய்வார். சிவரூபமே விஷ்ணுமூர்த்தியாக இருக்கிறார். அவரை ஆராதித்தால் நெடுங்காலத்தில் தான் தரிசிக்கலாம் சிவபெருமானோ விரைவில் பிரசன்னராய் புத்தி முக்திகளை அளிப்பார். ஆகையால் எளிதாகப் புத்தி முக்திகளைப் பெற விரும்புவோர் சிவார்ச்சனையையே செய்யவேண்டும். க்ஷத்திரியனுக்கு இந்திரனே இஷ்டமுடையவன் ஆகையால் அவன் விரைவில் தோன்றி வேண்டிய அருள் செய்வான் முதலில் இந்திர மந்திரத்தை உபதேசிக்கிறேன் என்று கூறினார் அர்ச்சுனன் ஸ்நானம் செய்து கிழக்கு நோக்கி வீற்றிருந்து வியாச மகரிஷியால் இந்திர மந்திர உபதேசம் செய்யப் பெற்று, பின்னர் பிறகு பார்த்திவலிங்க பூஜை செய்யும் முறையையும் உபதேசமாகக் கேட்டான். வியாஸர் அவனைப் பார்த்து அர்ச்சுனா! முதலில் நீ இந்திரனை ஆராதித்து அவன் கட்டளையைப் பெற்று, பிறகே சிவாராதனை செய்யக் கடவாய்! இப்போதே நீ இங்கிருந்து புறப்பட்டு கிருஷ்ணா நதிக்கரை ஓரத்தில் இருக்கும் இந்திரகீல பருவதத்திலிருந்து தவஞ் செய்வாயாக! தவஞ்செய்யும்போது அநேகர் உன் தவத்திற்கு இடையூறு செய்வார்கள், ஆகையால் சகல ஆயுதங்களையும் தரித்துக் கொண்டு நீ இருக்கும் இடம் ஒருவருக்கும் புலப்படாது இருந்து தவஞ் செய். தினந்தோறும் சிவ ஸ்தோத்திரங்களையே ஜபித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறி, ஒருவர் கண்ணுக்கும் புலப்படாதிருக்கத்தக்க, அதிசய வித்தையை உபதேசித்து, ஆசிர்வதித்தார், தர்மராஜன் முதலிய நால்வர்களையும் பார்த்து, நீங்கள் தர்மத்தை பாதுகாப்பீர்களாக, சீக்கிரத்தில் காரியசித்தி உண்டாகும் என்று ஆசீர்வதித்துச் சென்றார்.

அப்பொழுதே, மந்திர உபதேசம் பெற்ற மகிமையால் சிவதேஜஸோடு அர்ச்சுனன் விளங்கவே தருமன் முதலியோர் இவனே காரியசித்தியுண்டாக்கும் காரியத்தை சாதிக்கவல்லவன் மற்றவர் சாதிக்கமாட்டார்கள் வியாஸர் மொழிந்தது உண்மையே என்று கருதி, அர்ச்சுனனைப் பார்த்து நமது பிழைப்பைப் பயன்படுமாறு செய்வாயாக! என்று கூறி அவனைத் தவத்திற்கு அனுப்பத் தீர்மானித்தார்கள். ஆயினும் அவனைப் பிரிந்திருக்கப் பயந்து கடைசியாக அப்பா! எந்த வகையிலாவது தவஞ் செய்து எங்கள் கஷ்டத்தை நீயே ஒழிப்பாய் என்று கூறி, அவன் தவஞ் செய்யச் சொல்ல விடை கொடுத்து அனுப்பினார்கள். திரவுபதி தன் துக்கத்தை மனதில் அடக்கிக் கொண்டு அர்ச்சுனனைப் பார்த்து எப்படியாவது காரிய அனுகூலஞ் செய்து கொண்டு வர வேண்டும் என்று விடை கொடுத்து அனுப்பினாள், தருமன், பீமன், நகுலன், சகாதேவன், திரவுபதி ஆகிய ஐவரும் ஒன்று கூடித் துக்கித்துக் கொண்டு, நாம் அர்ச்சுனனைப் பிரிந்து தைரியத்துடன் இருப்பது என்ன மகிமை என்று யோசித்தார்கள் அப்பொழுது வேதவியாசர் மீண்டும் அங்கு வரவே அவருக்கு ஆசனமளித்துப் பூஜித்து, சுவாமி கஷ்டத்தில் இருக்கும் எங்களுக்குத் தங்கள் தரிசனத்தால் மகிழ்ச்சி உண்டாகிறது. தாங்கள் சிறிது காலம் இங்கேயே இருந்து எங்கள் துயரத்தை அகற்றி ரட்சிக்கவேண்டும் என்றார்கள் வியாசர் அவ்வாறே அவர்களது விருப்பத்திற்கு இணங்கி நானாவிதமான புண்ணிய சரித்திங்களைச் சொல்லிக் கொண்டு அங்கு வசித்திருந்தார் அவ்வாறு இருக்கும் போது ஒரு நாள் வியாஸர் சொல்லிக் கொண்டிருந்த ஒரு சரிதத்தில் தருமராஜன் ஒன்று கேட்டன்; வியாஸ முனிவரே நான் துக்கச் சாந்தியடைய வேண்டி ஒன்று வினவுகிறேன். இப்போது நாங்கள் அனுபவிக்கும் கஷ்டங்களைப்போலப் பூர்வத்தில் எவரேனும் அனுபவித்திருக்கிறார்களா? அல்லது நாங்கள் தான் அனுபவிக்கிறோமா? என்று கேட்டான். வியாசபகவான் சொல்லலானார்.

கேளும், தருமராஜனே நீங்கள் அனுபவிப்பது ஒரு கஷ்டமா மனைவியோடும் சகோதரரோடும் முனிவர்களோடும் வசித்துக்கொண்டு, சூரியன் கொடுத்த அன்னபாத்திர மகிமையால் சுகித்திருக்கிறீர்கள். மகாத்மாவான நளன் என்ற மன்னன் அடைந்த துக்கங்கள் அனந்தம். அரிச்சந்திர மன்னன் அதைக் காட்டிலும் பெருந்துயரமடைந்தான். எல்லோரைக் காட்டிலும் ஸ்ரீராமன் மிகவும் கஷ்டப்பட்டான். அவர்களுக்கு உண்டான சங்கடத்தை நான் எவ்வளவு காலஞ் சொன்ன போதிலும் சொல்லி முடியாது. இத்துக்கங்களைக் காட்டிலும் பிறப்பிலும் இறப்பிலும் உண்டாகும் துன்பங்கள் கணக்கிட்டுச் சொல்ல முடியாது. முதலில் தாயின் வயிற்றில் கருவாக உண்டான பொழுதுந்துக்கமே! பிறக்கும் போதே அழுகை யவுவனத்தில் சுகபோகங்களை அனுபவிக்கும் போதும் பல குறைபாடுகளாலும் துக்கமே சம்சார தசையிலும் இல்லறகாரியங்களிலும் துக்கமே! இறக்கும் பொழுதும் துக்கம். ஆகையால் எப்பொழுதும் துக்கமே என்பதே உணர்ந்து தேக சுகம் அநித்தியம் என்று விடுத்து திடமான சத்தியத்தையே ஆஸ்ரயித்து பகவானான சிவபெருமான் மகிழும்படி நடந்துகொள்ள வேண்டும்! அவனைச் சேவித்தால் சகல துக்கங்களும் விலகும்! என்றார்.

அதைக் கேட்டதும் பாண்டவர்கள் எங்கள் கஷ்டங்கள் எப்போதாவது விலகாமல் இருக்குமா? என்று எண்ணி வியாஸரையே நம்பியிருந்தார்கள். தவஞ் செய்யச் சென்ற அர்ச்சுனனோ வழியில் அநேக சுப சகுனங்களைக் கண்டு சத்துரு க்ஷயமானதாகவே நினைத்து தன் தவத்திற்கு யோக்கியமான இடங்களைப் பார்த்துக் கொண்டு சந்தோஷத்தோடு இந்திர கீலமலையில் கிருஷ்ணா நதி தீரத்தில் அசோகவனத்தில் சுவர்க்கத்துக்கு ஈடான இடத்தில் தங்கி வியாஸர் உபதேசித்த மந்திரங்களை மனதில் தியானித்து, குருவான வியாஸரை நினைத்து வணங்கினான். அவர் சொல்லியபடி விபூதி ருத்திராக்ஷங்களை அணிந்து முதலாவதாக இந்திர ஜபம் செய்து பிறகு பார்த்திவலிங்க பூஜை செய்வதற்காக கவுதம தந்திர விதிப்படி (பஞ்ச சூத்திரம்) பார்த்திவலிங்கம் ஒன்றைச் செய்து அதன் முன்னால் இருந்து அதை பூஜித்து ஜபம் செய்து கொண்டிருந்தான். முக்காலங்களிலும் மூழ்கி குளித்து சிவபூஜை செய்து வந்தான். இப்படியே கடுமையான தவஞ் செய்து கொண்டிருக்கும் போது அந்த லிங்கமூர்த்தத்திலிருந்து தேஜஸ் ஒன்று கிளம்பிற்று. அதைக்கண்ட தேவர்கள் இந்த அக்கினியில் இவன் எவ்வாறு பூஜிக்கிறான் என்று யோசித்து இந்திரனிடம் அப்போதே சென்று யாவற்றையும் சொல்லி, தேவனோ, சூரியனோ, அக்கினியோ, மகாமுனியோ, எவனோ ஒருவன் உன் வனத்தில் தவஞ்செய்து வருகிறான். அவனது தேஜஸால் உஷ்ணம் தாளாது உன் சமூகத்துக்கு வந்தோம் என்றார்கள். இந்திரன் தன் மைந்தனே அவ்வாறு தவஞ் செய்கிறான் என்பதை உணர்ந்து ஒரு விருத்தவேதிய வடிவில் ஜடாதாரியாய், தண்டதரனாய் காற்றடித்தாலே கீழே விழுவான் போல மான் தோலைப் போர்த்திக் கொண்டு அடிக்கொரு முறை கால் இடறிக் கீழே விழுவான் போல  அர்ச்சுனன் எதிரே வந்தான். அவனைக் கண்ட அர்ச்சுனன் விரைந்து சென்று பூஜித்து துதித்து ஸ்வாமி! எங்கிருந்து வருகிறீர்? என்று கேட்டான். இந்திரன் அர்ச்சுனனுக்குத் தைரியம் உண்டாகும்படி நீ இந்தச் சிறு வயதில் முக்தியைக் குறித்துத் தவஞ் செய்கிறாயா ஜெயத்தைக் குறித்துத் தவஞ்செய்கிறாயா? என்று கேட்டான். அதற்கு அர்ச்சுனன் தன் சரித்திரம் முழுவதையும் சொன்னான். அதன்பிறகு இந்திரன் நீ நன்றாகத் தவஞ் செய்கிறாய் ஆயினும் யுக்தமான காரியத்தைச் செய்யவில்லை, சுகம் கனவுக்குச் சமானமானது, அதற்காக இத்தகைய கடுந்தவத்தைச் செய்வதைக் காட்டிலும் இப்போதே முக்தியை நாடித் தவஞ்செய்! இந்திரன் சுகத்தைக் கொடுப்பானேயன்றி மோக்ஷத்தைக் கொடுக்க மாட்டான். ஆகையால் நான் சொல்லும் வகையில் முக்தியைக் குறித்துத் தவம் செய்! என்றான். அதைக்கேட்டதும் அர்ச்சுனன் கோபம் கொண்டு கிழவா! நீ ஏன் என்னிடத்தில் இவ்வாறு சொல்ல வேண்டும்? நான் வேத வியாஸரின் உத்தரவுப்படி இந்தத் தவத்தைச் செய்கிறேன். என் தவத்தைக் கெடுக்கவா இப்படிச் சொல்கிறாய்? உடனே இங்கிருந்து போய்விடு, என்று சீறினான். அதனால் இந்திரன் மகிழ்ந்து அழகான தன் திவ்விய வடிவத்துடன் அவனுக்குத் தரிசனம் தந்தான். அர்ச்சுனன் நாணமுற்றான். இந்திரன் அவனைத் தேற்றி, நீ தன்யன் கிருதகிருத்தியன் திட புத்தியுடையவன் துரியோதனாதிகளான உன் சத்துருக்கள் பலவான்கள், பீஷ்மன், துரோணன் கர்ணன் முதலியவர்கள் ஜயிப்பதற்கு அசாத்தியமானவர்கள். அவர்களை நானும் ஜெயிக்கவில்லவன் அல்லேன் அவர்களை ஜெயிக்கத் தக்கவன் ஒருவனுமிலன் அவர்களை ஜெயிக்க வேண்டுமானால் சிவபெருமானே அத்தகைய வல்லமை அளிக்க முடியும். ஆகையால் சிவபூஜையைச் செய்; சிவபெருமானே போக, மோக்ஷங்களைக் கொடுப்பார். நானும் பிரமாதி தேவர்களும் விஷ்ணுவும் யாவரும் சிவபூஜை செய்பவர்களே; இன்று முதற்கொண்டு என்னைத் தியானித்த இந்திர மந்திரத்தை விடுத்து, சிவ மந்திரத்தை ஜெபித்துப் பார்த்திவ லிங்க விதானமகாச் சிவபூஜையைச் செய்வாயாகில் உனக்குச் சந்தேகமின்றிக் காரிய சித்தி உண்டாகும் என்று வரங்கொடுத்து மீண்டும் அர்ச்சுனனை நோக்கி, அர்ச்சுனா! நீ செய்யும் சிவபூஜை மனதிடத்துடன் செய்யதக்கது, புத்தி பிரமையடையாமல் தைரியத்துடன் செய்ய வேண்டும், சத்கருமங்களுக்கு இடையூறுகள் நேரும் நெஞ்சத் துணிவுடன் நேர்மையாகப் பூஜித்தால் சிவபெருமான் நீ விரும்பிய பயன்களை விரைவில் கொடுப்பார் என்று கூறி விட்டு அந்தர்த்தானமானான். அர்ச்சுனன் சிவபெருமானைக் குறித்து அகண்டமான தவம் செய்து கொண்டிருந்தான்.

63. மூகாசுர சங்காரம்

அர்ச்சுனன் ஸ்நானஞ் செய்து நித்யகர்மானுஷ்டானங்களை முடித்து மந்திராதி ஷடங்க நியாசங்களைச் செய்து வியாசர் கூறியவண்ணம் ஒரு காலின் மீது நின்று சூரியனிடத்தில் நாட்டத்தைச் செலுத்திக் கொண்டு, தியான யோகத்தில் இருந்தான். அவனது தவத்தைக் கண்டு தேவர்கள் மகிழ்ந்தார்கள். அவர்கள் சிவலோகம் சென்று சிவபெருமானைத் தரிசித்து சம்போ மகாதேவா! உலகத்தில் அர்ச்சுனன் தங்களைக் குறித்துத்தவஞ் செய்கிறான். அவனுக்குத் தாங்கள் ஏன் வரமளிக்கக் கூடாது? என்று கேட்டுத் துதித்தார்கள். தேவர்களே! நீங்கள் போகலாம் அர்ச்சுனனுக்குச் சந்தேகமின்றி வரமளிப்பேன் என்றார் சிவபெருமான், தேவர்கள் தமதிருப்பிடஞ் சேர்ந்தார்கள் அதற்குள்ளாக மூகன் என்ற அசுரன் ஒருவன் துரியோதனனின் விருப்பத்திற்கு இணங்க பன்றியுருவேற்று அர்ச்சுனன் தவஞ்செய்யும் இடத்தை அடைந்து அங்குள்ளபாறைகளைத் தன் கோரைப் பற்களால் பொடிசெய்து மரங்களைப்பறித்தும் எறிந்தும் பலவித சப்தங்களைச் செய்து கொண்டிருந்தான். அர்ச்சுனன் அந்தப் பன்றியைப் பார்த்து யோசிக்கலானான்.

இத்தகைய குரூரமான செயலைச் செய்பவன் யார் இங்கு வந்து என் காரியங்களை இவன் ஏன் கெடுக்க வேண்டும்? இவனும் நமக்குப் பகைவனாகவே இருக்க வேண்டும்! என்று நிச்சயித்து நான் பூர்வத்தில் அநேகம் அரக்கர்களை கொன்றவன். ஆகையால் அவர்களைச் சேர்ந்த எவனோ ஒருவன்தான் அந்தப் பகைமையுணர்வுடன் பன்றியாக உருவெடுத்து வந்திருக்க வேண்டும் அல்லது துரியோதனனுக்கு நண்பனான அரக்கனாகவும் இருக்கக்கூடும் இவன் பகைவனல்லவென்றால் என் மனம் இவனை ஏன் சந்தேகிக்க வேண்டும். இவனைப் பார்க்கும்பொழுதே நமது மனம் வேறுபடுவதால் இவன் பகைவன் என்பதில் ஐயமில்லை உலகத்தில் ஒருவனுடைய ஆசாரம் அவனது குலத்தை உணர்த்தும், சரீரம் அவனுடைய போஜனத்தை அறிவிக்கும் வாய்மொழிகள் அவனுடைய கல்வியை உணர்த்தும், கண்பார்வை, அவனுடைய மனக்குறிப்பை உணர்த்தும் நடந்தை, செய்கை, பேச்சு இவற்றைக் கொண்டு ஒருவனுடைய எண்ணத்தை அறிந்து கொள்ளலாம். கண்பார்வை நான்குவகை உஜ்வலம், சரசம், வக்கிரம் ஆரக்தம் ஆகும் இவை வெவ்வேறு வகை உஜ்வலம், சிநேகிதனைக் குறிக்கும் சரசம், புத்திரனைக் குறிக்கும் வக்கிரம், ஸ்திரீயை உணர்த்தும் ஆரக்தம், சத்துருவை குறிக்கும் ஆகையால் இவனைப்பார்க்கும் பொழுது சர்வ இந்திரியங்களும் தகதக வென்று எரிவதால் இவன் பகைவனேயாவான். இந்தப் பகைவனைச்சங்கரித்தேயாக வேண்டும் நமது குருவாகிய வேத வியாசரும் உன்தவத்திற்கு விக்கினம் நமது குருவாகிய வேத வியாசரும் உன்தவத்திற்கு விக்கினம் செய்பவர்களைச் சங்கரித்துவிடு என்று உத்தரவளித்திருக்கிறார். இதற்காகவே என்னுடன் ஆயுதங்களை இருக்கவேண்டும் என்றும் கட்டளையிட்டிருக்கிறார் என்று யோசித்து பாணத்தைத் தன் காண்டீபத்தில் ஏற்றிக் கொண்டிருக்கும் போது சிவபெருமானும் தமது பிரமத கணங்களோடு வேடரூபம் தரித்து அர்ச்சுனனைக் காக்கவும் பரீட்சிக்கவுமாக அவனருகே வருவரானார்.

அரையில் கச்சை கட்டி, தலை முடியைக் கொடிகளால் இறுக்கிக் கட்டி உடலில் வெண்கீற்றுகளும் வில்லும் அம்பறாத்தூணியுமாக வந்த சிவபெருமான் தம் போலவே வேடம் தரித்த பிரமதகணங்களுடன் வேடுவர்க்குரிய பலவகைக் கூச்சலிட்டுக்கொண்டு அங்கு வந்து சேர்ந்தார். அவரது பிரமதகணங்கள் எழுப்பிய கூச்சல்கள் அந்தக் காட்டில் எதிரொலி செய்தன. அர்ச்சுனன் சந்தேக மடைந்தான், அந்த மலையிலிருந்த மலைவாசிகள் சங்கடப்பட்டார்கள். அர்ச்சுனன் அப்போதும் மனந்தயங்காமல் என்ன நடந்தாலும் நடக்கட்டும். சிவபெருமான் சுகம் செய்யாமல் விடமாட்டார்கள். பூர்வத்தில் ஸ்ரீகிருஷ்ணமூர்த்தியும் சிவபெருமானே சுகங்கள் சுகபோகங்கள் மோட்சம் முதலியவற்றைக் கொடுப்பவர் என்று கூறியிருக்கிறார். சிவநாமங்களை ஸ்மரிப்பவருக்கு சத்தியமாகச் சுகமே உண்டாகும். பாபத்தால் உண்டாகும் துக்கங்கள் முதலியன நசிக்கும்; அப்படியில்லாமல் சிவசேவை செய்யும் போதே கஷ்டம் வருமானால் அவை கர்மத்தால் வந்ததே என்று கொள்ள வேண்டும். பெருந்துன்பங்களை அனுபவிக்க வேண்டியவன் சிவபக்தனாக இருந்து அப்பெருமானுக்கும் அன்பிருந்தால் அவனுக்கு அவை சிறியனவாகும். அல்லது அவற்றை அனுபவித்தே தீரவேண்டுமானால் வருவது வரட்டும். அவனிஷ்டத்துக்கு மாறு கொள்பவர் யார்? சிவபெருமானுக்கே பரிபூரண தயை இருக்குமானால் எத்தகைய கஷ்டம் வருவதானாலும் அவையாவும் சூரியனைக் கண்ட மின்மினிப் பூச்சிகளைப் போலவே போய்விடும். எம்பெருமான் திருவருள் கொண்டால் விஷத்தையே அமிர்தமாகவும், அமிர்தத்தையே விஷமாகவும் செய்து விடலாம், நாம் சுகமே உண்டாக வேண்டும் என்று இந்தத் தவத்தைச் செய்து வருகிறேன். இறைவனோ பக்தர்களைக் காப்பதையே விரதமாக அனுஷ்டித்து வருபவர். ஆகையால் நன்மையே நடக்கும் மரணம் சமீபத்திலிருக்கும் போது பிறர் நிந்தித்தாலென்ன? துதித்தால் என்ன? ஐஸ்வரியம் வந்தால், வரட்டும் வராவிட்டால் ஒழியட்டும் வருவது வந்தே தீரும்! சிவபெருமான் சுகத்தையே கொடுப்பார். ஒருவேளை என்னைப் பரீட்சிக்க வேண்டித் துக்கத்தைக் கொடுத்தாலும் தயாளனாகையால் இறுதியில் சுகத்தைக் கொடுக்காமல் என்னைக் கை விட்டுவிடமாட்டார். சோதித்த பிறகுதான் பொன்னும் புனிதமடைகிறது. இப்படித்தானே வேதவியாசரும் நம்மிடம் சொல்லியிருக்கிறார். ஆகையால் சிவபூஜை செய்வதால் எனக்குச் சுகம் உண்டாவதில் தடை எதுவும் இல்லையென்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே பன்றி வடிவத்திலிருந்த மூகன் சமீபித்தான். அதன் பின்புறத்தில் சிவபெருமான் வேடரூபத்தில் கணசகிதமாய் வந்து கொண்டிருந்தார். சிவ அர்ச்சுணருக்கு மத்தியில் பர்வதாகாரமான பன்றி நிற்கையில் சிவபெருமானோ இது நமது பக்தனை கொல்லவிடக் கூடாது என்று கருதியிருந்தார். அந்தச் சமயத்தில் அர்ச்சுனனும் சிவபெருமானும் தங்கள் கையிலிருந்த வில்லை வளைத்து அம்புகளை எய்தார்கள். சிவபெருமான் பிரயோகித்த பாணம் பன்றியின் வாலில் பட்டது. அர்ச்சுனன் பிரயோகித்தபாணம் அந்தப் பன்றியின் முகத்தில் தைத்தது அதில் சிவபெருமானின் அம்போ வாலினின்று வாய்வழி ஊடுருவி நிலமிசைகுத்திக் கொண்டு பாய்ந்தது. அர்ச்சுனன் பிரயோகித்த பாணமோ பன்றியின் தலையிலிருந்து வால்வழி ஊடுருவி மீண்டும் அர்ச்சுனனின் அம்பறாத்தூணியை அடைந்து அப்போதே மூகசூகரம் மரணமடைந்து விழுந்தது. அதைக் கண்ட தேவர்கள் மலர்மாரி பொழிந்தார்கள். சிவபெருமானும் மகிழ்ந்தார். அர்ச்சுனன் சுகமடைந்தான் தைத்தியனான மூகனது நிஜ வடிவத்தைக் கண்ட சிவ அர்ச்சுனர் இருவரும் ஆச்சரியமடைந்தார்கள். அவர்களில் அர்ச்சுனன் அவனது மாயா ரூபத்தைக் கண்டு சிவபெருமானே இவனைச் சங்கரிப்பதற்கான நற்புத்தியைத் தனக்குக் கொடுத்ததாகக் கருதி, சிவநாமஸ்மரணை செய்து கொண்டு மகிழ்ந்தார்கள்.

64. பாணத்தால் மூண்ட தர்க்கம்

முனிவர்களே! அதற்குமேல் நடந்தவற்றைக் கேளுங்கள் வேட வடிவத்தில் வந்த சிவபெருமான் தன்னுடன் வந்த பிரமதகணங்களில் ஒருவனை அனுப்பித் தாம் எய்த அம்பை எடுத்துக் கொண்டு வரும்படிஅனுப்பினார். அவன், அந்தப் பாணத்தைக் கொண்டு போக வந்தான் அர்ச்சுனன் தன் எதிரில் விழுந்த அம்பைக் கண்டதும் க்ஷத்திரியனாக இருந்ததால் அதை விடக் கூடாது என்ற நியாயத்தால் எடுக்க வந்தான். இவ்வாறு இருவரும் அங்கு சென்றதும் அர்ச்சுனன் வேடுவனையடித்து அந்த அம்பைக் கைப்பற்ற அவன் எங்கள் பாணத்தை எங்கள் எஜமானனின் உத்தரவுபடி கொண்டு போக வந்தால் அதை நீ பறித்துக் கொள்ளலாமா? நியாயப்படி என் கையில் கொடுத்து விடு என்றான். அதற்கு அர்ச்சுனன் நீ வனசஞ்சாரம் செய்யும் மூர்க்கன், என் முன்னால் விழுந்த பாணம் என்னுடையதே! அது உன்னுடையதல்ல இது இருக்கும் ரேகை, ரூபம், மயிற்குஞ்சும் பெயர் இவற்றைப்பார்; இவையெல்லாம் என்னுடையதேஉன்னுடையதாகுமா? உன்னுடைய துஷ்ட சுபாவத்தால் உன்னுடையது என்று சொல்கிறாய் என்றான். அதற்கு கணன் சிரித்து அடா நீ எதற்காகத் தவஞ்செய்கிறாய்? நீ வேஷத்திற்காகத்தவஞ் செய்கிறாயேயன்றி உண்மையாகத்தவஞ் செய்யவில்லை உலகத்தில் தவமுனிவன் பொய் பேசுவானா? நீ என்னை ஒன்றியாக வந்தவன் என்று நினைக்காதே. நான் சேனாநாயகன் என்று நினை; என் தலைவர் வனசஞ்சாரம் செய்யும் வேடர் பலருடன் அதோ இருக்கிறார். நிக்கிரதா நிக்ரக சமர்த்தனவர்! நீ எடுத்துக் கொண்ட பாணம் அவருடையது உன் பாணம் என்று ஒரு போதும் சொல்லாதே! களவு, பொய், அகங்காரம் புத்திப்பிரமை மோசம் ஆகியவற்றால் தவப்பயன் அழியும் என்று நான் கேட்டிருக்கிறேன் என் பாணத்தைக் கொடுத்துவிடு! இல்லாவிட்டால் பாபியாவாய் உனக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமே என்பதற்காகத் தான் என் எஜமானன் பாணத்தைப் பிரயோகித்தார். அவர் மீண்டும் அந்தப் பாணத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்; நீ சத்தியவான் என்றால் விரைவில் அந்த அம்பைக்கொடு. சத்தியத்தை விட்டால் உன் இஷ்டகாமியம் கைகூடாது. உனக்குப் பாணம் வேண்டுமானானல் எங்கள் தலைவனைக் கேள்; இதுபோன்ற பல பாணங்களை அவர் கொடுப்பார். அம்பு மட்டுமல்ல அநேகம் பொருள்களையும் அவர் கொடுப்பார், நற்கருமத்தை யொழித்துப் பாப பாத்திரமாகாதே என்றான்.

வேடன் கூறியதைக்கேட்ட அர்ச்சுனன் வேடா நீ என்னை பொய்யனாகக் கூறி நீயே பொய் பேசுகிறாயே, அது உன்ஜாதிக்கு அடுத்தது நான் பிரபு நீ திருடன் உன்னுடன் போர் செய்வது எனக்குத் தகுதியல்ல! உன் எஜமானனும் உன்னைப்போலத் தானே இருப்பான்? உன் தலைவன் கொடுப்பான் என்று சொல்கிறாயே; கொடுக்கத் தக்கப் பிரபுக்கள் க்ஷத்திரியர்களாகிய நாங்களேயன்றி நீங்கள் அல்ல! ராஜ குலத்தினனான நான் வேடனான உன் தலைவனை எவ்வாறு யாசிக்கலாம்? பாணத்திற்காக அவனை யாசிக்கும்படி என்னிடமே சொல்கிறாயே! என்னிடம் அநேகம் பாணங்கள் இருக்கின்றன. இந்தப்பாணம் உங்களுக்கு வேண்டுமானால் ஏன் உங்கள் தலைவனே, என்னிடம் வந்து கேட்கக் கூடாது? அவன் வந்து என்னுடன் சண்டை செய்து என்னை ஜெயித்து இதைப் பெற்றுக் கொண்டு செல்லட்டுமே! என்றான். அதைக் கேட்டதும் வேடன், நீ ஒன்றும் தெரியாதவனாக இருக்கிறாய்! நீ தவமுனிவன் அல்ல; உனக்கு நீயே மரணத்தைத் தேடி கொள்ளுகிறாய் பாணத்தைக் கொடுத்தால் சுகமடைவாய் இல்லாவிட்டால் உனக்கே துக்கம் உண்டாகும் என்று கூறினான் அதனால் அர்ச்சுனன் சினந்து அடே வேடா! உன் தலைவன் வந்தால் அவனுக்குத் தக்க பலனை உண்டு செய்வேன்! உன் தலைவனுக்கும் எனக்கும் சிறு நரிக்கும் சிங்கத்துக்கும் உள்ள உயர்வு தாழ்வுகள் இருக்கின்றன. நான் சொன்னவற்றை அவனிடம் போய்ச் சொல் அவன் இஷ்டப்படி செய்யட்டும் என்றான். வேடுவன் இனி இவனுடன் பேசுவதில் பயன் இல்லையென்று சிவபெருமானான வேடர் தலைவனிடமே திரும்பிச்சென்று நடந்தவற்றை யெல்லாம் அவரிடம் சொன்னான்.

சிவபெருமான் மகிழ்ந்து புன்னகை செய்து, தன் வேடுவப் பரிவாரங்களுடன் யுத்தத்துக்குப் புறப்பட்டார். அர்ச்சுனன் அந்த சைந்தியத்தைக் கண்டு எதிர் வந்து நின்றான். அந்தச் சமயத்தில் சிவபெருமான் மீண்டும் அந்தக் கணனை நோக்கி நீ அந்தத் தவசியிடம் சென்று எங்கள் வேடுவப்படையைப் பார், தவத்தாற் கஷ்டப்படும் நீ மோசஞ் செய்யாமல் பாணத்தைக் கொடுத்து விடு. அற்பத்துக்காக மரணமடையாதே! உன் சகோதரர்களும் உன் மனைவியும் துக்கித்துக் கொண்டு இருக்கிறார்கள். நீ மடிந்தால் இவ்வுலக சாம்ராஜ்ஜியத்தை இழந்து விடுவாய் என்று சொல்! என்று கூறியனுப்பினார். அவனும் அவ்வாறே சென்று, அர்ச்சுனனிடம் சிவபெருமான் சொன்னவாறு கேட்டான். அதற்கு அர்ச்சுனன் நான்க்ஷத்திரியனாக இருந்து என் முன்பு விழுந்து கிடந்த அம்பை எடுத்து மீண்டும் அதை உன்னிடம் கொடுத்தால் க்ஷத்திரிய தர்மத்திற்கே குறைவு வரும். என் சகோதரர்கள் இந்த விஷயத்தைக் கேட்டால் துக்கமடைவார்கள். சிங்கம் நரிக்குப் பயப்படாது! நான் உனக்குப் பயப்படமாட்டேன் என்றான். அதை அவ்வாறே வேடுவன் சென்று சிவபெருமானிடம் சொல்ல, சிவபெருமான் பக்தப் பிரியராகையால் அர்ச்சுனனின் வார்த்தைகளுக்கு அகமிகமகிழ்ந்து வேடர் தலைவன் வேடத்திலேயே போர் செய்யக் கருதி அர்ச்சுனனை அணுகினார்.

65. அர்ச்சுனன் பாசுபதாஸ்திரம் பெற்ற கதை

தன்னெதிரில் வேடுவரூபத்துடன் போர்புரிய வந்த சிவபெருமானை அர்ச்சுனன் பார்த்தான். சர்வாந்த்யாமியான சிவபெருமானைத் தன் மனத்திலே தியானித்துத் தானும் போருக்கு வந்து பயங்கரமாகப் போர் செய்தான். சிவகணங்களாகிய வேடர்களும் பலவகையான ஆயுதங்களை அர்ச்சுனன் மீது பிரயோகித்துத் துன்புறுத்தினார்கள். சிவபெருமானும் அர்ச்சுனனோடு பயங்கரமாகப் போரிட்டார். கணங்கள் விட்ட பாணங்களையெல்லாம் அர்ச்சுனன் மத்தியிலேயே துண்டித்து எறிந்தான் சிவகணங்கள் தாம் எத்தனை ஆயுதங்களை விடுத்தும் பயனற்றுப் போனதால் நாற்புறமும் கலைந்தோடினார்கள். ஓடுகிறவர்களைப் பார்த்து. நீங்கள் பயப்படாமல் போர் செய்யுங்கள்! என்று சிவபெருமானான வேடர் தலைவர் சொல்லியும் அவர்கள் அர்ச்சுனனை எதிர்த்து நிற்பதற்கும் பயந்தார்கள். மேலும் வேடர் தலைவரும் அர்ச்சுனனும் தொடர்ந்து போர் செய்தார்கள். சிவபெருமான் மனத்திலே தயையுடையவராக இருந்தும், அர்ச்சுனன் தைரியத்தைச் சோதிக்க வேண்டிப் போர் செய்யவந்தராகையால் சிறிதும் தாக்ஷண்யம் பாராமல் சிறந்த அஸ்திரங்களை எய்தார். அர்ச்சுனன் அவற்றையெல்லாம் கண்டந்துண்டமாகச் செய்து ஓர் அஸ்திரத்தால் சிவபெருமானைக் காயப்படுத்தினான். சிவபெருமான் அர்ச்சுனனுடைய அம்புகளையெல்லாம் துண்டித்து விட்டு, அவன் அணிந்திருந்த கவசத்தையும் உடைத்து வெற்றுடலாக்கினார். அதன்பிறகு சிவபெருமானும் அர்ச்சுனனும் மல்யுத்தம் செய்யத் துவங்கினார்கள். அப்பொழுது பூமி நடுங்கியது. தேவர்கள் யாவரும் என்ன விபத்து நேரிடுமோ என்று பயந்தனர்! ககன மார்க்கத்தில் கிளம்பி, ஒருவருடன் மற்றொருவர் மற்போர் செய்தார்கள். அர்ச்சுனன் சமயமறிந்து வேடர் தலைவரின் சிரத்தின்மேல் கதையாலடித்தான். அர்ச்சுனின் அந்த அடியானது எம்பெருமானுக்கேயன்றி திருமால் பிரமன் முதலிய தேவர்களுக்கும் கருட காந்தர்வ, சித்தவித்தியாதராதி கணங்களுக்கும் நாகர், மானவர் முதலியவர்களுக்கும் சராசரப் பொருள்கள் முதலியயாவற்றுக்கும் பட்டன. சிவபெருமான் யாவுஞ் செய்யவல்லவராயினும் பக்தவாத்ஸல்யராய் அந்த அடியைப் பெற்றுக் கொண்டு அர்ச்சுனனுக்கு அபகாரம் ஒன்றும் செய்யாமல் புன்னகையுடன் அவனிடமிருந்து தப்பித்து தன்னுடைய சுந்தரமான ரூபத்தைக் காட்டியருளினார். அர்ச்சுனன் சிவபெருமானைத் தரிசித்து மனத்தில் நாணத்துடன் ஐயோ! நான் யாரைக் குறித்துத் தவஞ்செய்து கொண்டிருந்தேனோ அந்தச் சர்வேஸ்வரரோடு போர் புரிய நேரிட்டதே, எத்தகைய கொடிய காரியத்தை நான் செய்து விட்டேன்? சர்வலோகாதிகாரியாகிய சிவபெருமானின் மாயை உலகத்தையெல்லாம் மயங்கச் செய்யும், சர்வேஸ்வரன் இத்தகையவேடர் வடிவமெடுத்து வந்ததால் அல்லவோ நான் மதிமோசம் போனேன்! என்று துக்கித்து எம்பெருமானே! என்னை மன்னிக்கவேண்டும் என்று அவரது திருவடிவகளில் சாஷ்டாங்கமாக விழுந்துவணங்கினான். சிவபெருமான் அர்ச்சுனனை எழுப்பித் தேற்றி நீ என் பக்தன்! புத்திரசிரேஷ்டன். உன் வலிமையைப் பரிக்ஷிக்கக்கருதிய இத்தகைய வேடுவ உருவை எடுத்து வந்தேன்.  நீ என்னுடன் போர் புரிந்ததற்காக விசனப்பட வேண்டாம் என்று கூறி அவனைத் தழுவிக்கொண்டு தம் பிரதம கணங்களிடம் அர்ச்சுனனது பக்திச் சிறப்பைக் கூறி விட்டு அர்ச்சுனா! நான் பிரத்யக்ஷமானேன் வேண்டிய வரத்தைக் கேள். நீ என்னைப் பாணத்தால் அடித்த அடிகளைப் புஷ்பார்ச்சனையாகவே ஏற்றுக் கொண்டேன். அது என் விருப்பத்தால் நடந்தது உன் குற்றமல்ல. உனக்குக் கொடுக்கத் தக்கது ஒன்று மல்ல. நீ எவனிடத்தில் போர் செய்தாலும் சிவபெருமானைப் போரில் ஜெயித்தவன் என்ற புகழை நீ அடையச் செய்தேன். உன் மனதில் பயமும் துக்கமும் வேண்டாம் என்றார் அர்ச்சுனன் சிவபெருமானை நோக்கி, சுவாமி, தாங்கள் பக்தப்பிரியர் ஆகையால் தங்கள் திருவுளச் சம்மதப்படிச் செய்யலாம் என்று வேத சம்மதமான தோத்திரங்களால் துதிசெய்தான்.

கைலாயகிரியில் வசிப்பவனே! பிரமாதி தேவர்களில் பிரகாசமுடையவனே! ஐந்து முகமும் ஜடையும் உடையவனே! ஐந்து திருமுகங்களையுடையவனே! எப்போதும் மங்களகரமானவனே திரிநேத்திரமுடையவனே! சர்ப்பருத்திராஷ மயமான கர்ண குண்டலங்களை அணிந்தவனே! பிரசன்னமான முகத்தையுடையவனே! புன்னகையுடன் கூடிய முகமும் பிரசன்னத் திருவுருவம் கொண்டவனே! நீலகண்டனே! சத்யோஜாதஸ்வரூபியே, இடபக்கொடியை பிடித்தவனே வாமபாகத்தில் பார்வதியே அமர்த்தியவனே! பத்துத் திருக்கரங்களையுடையவனே பரமாத்மஸ்வரூபியே! டமருக கபாலங்களைத் திருகரத்தில் ஏந்தியவனே! சிரோமாலை யைத்தரித்தவனே! பரிசுத்தமான ஸ்படிக்ககல்லைப் போன்ற தேக காந்தியையுடையவனே! கற்பூரம் போலச் சிறந்தவனே! பிநாக வில்லையும் சிறந்த திரிசூலத்தையும் உடையவனே புலித்தோலையும் கரித்தோலையும் அணிந்த மெல்லிய திருவடியையுடையவனே முக்தியைக் கொடுப்பவனே நிர்க்குண சகுண சொரூபமுடையவனே காணும் பிரபஞ்ச முழுவதும் தேவரீருடைய ஸ்வரூபமேயன்றி வேறல்ல. உன் குணங்களை வர்ணிக்க சதுர்வேதங்களும் சக்தியுடையனவல்ல ஆயினும் மந்த புத்தியையுடைய நான் யாதென்று வர்ணிப்பேன்! யாவராலும் கண்டறியக் கூடாத மகானுபாவனாகிய உனக்கு நமஸ்காரம்! நமஸ்காரம்! நமஸ்காரம் என்னிடம் தயவு வைத்து என்னை இரட்சிக்க வேண்டும் என்று பலவாறு துதித்து வணங்கி நின்றான்.

சிவபெருமான் மகிழ்ந்து, அர்ச்சுனா! உன் மனத்தல் விரும்பியதை விரைவில் கேள். கொடுப்பேன்! என்றார் அர்ச்சுனன் அவரது திருவடிகளில் விழுந்து வணங்கி கண்ணுதல் பெருமானே! என் பகைவர்களால் நான் அடைந்த துன்பங்கள் தங்களது திவ்ய தரிசனத்தால் ஒழிந்தன. இகலோக சுகத்தை நான் நன்றாக அனுபவிக்கச் செய்ய வேண்டும் என்று கூறிக் கைகட்டி நின்றான். சிவபெருமான் அவனுடைய எண்ணத்தையுணர்ந்து இந்தப் பிரமாண்டத்தில் ஒருவராலும் ஜெயிக்க முடியாத பாசுபதாஸ்திரத்தை அர்ச்சுனனுக்குக் கொடுத்து, இந்த அஸ்திரத்தால் நீ ஜெயமடைவாய்! சத்துருக்களால் வெல்வதற்கு அசக்தனாக இருப்பாய். உனக்கு எல்லாவகையான சுகங்களும் உண்டாகும். நான் கிருஷ்ணனிடம் சொல்கிறேன். அந்தக் கிருஷ்ணன் எல்லாச் சமயங்களிலும் உனக்கு உதவி செய்வான். மேலும் அவன் எனது அமிசமாகப் பிறந்தவன் நீ அவனது சகாயத்தால் சகல சத்ருக்களையும் ஜெயித்து இராஜ்யத்தை அடைவாய் என்று வரங் கொடுத்தார். தமது திருக்கரத்தை அவனது சிரசின் மீது வைத்து ; அர்ச்சுனனைப் புகழ்ந்து ஆலிங்கனம் செய்து கொண்டு அர்ச்சுனனால் பூஜிக்க பெற்று பிரமத கணங்களுடன் மறைந்தார். அர்ச்சுனன் மகிழ்ச்சியோடு தன் ஆசிரமத்தையடைந்து  தர்மராஜனைப் பணிந்து நின்றான். தேவ துந்துபிகள் முழங்கின மலர்மாரி பொழிந்தது, சிவபெருமானிடம் வரம் பெற்று வந்த அர்ச்சுனனைக் கண்டு துரோபதையும் பாண்டவர் ஐவரும் தம் உயிரே மீண்டும் வந்தது போலச் சுகம் பெற்றார்கள். அவர்களுக்குச் சுபமுண்டாவதற்கு அறிகுறியாக சுகந்த சந்தனங்கலந்த மலர்மாரி பெய்தது  சிவபெருமான் அர்ஜுனனுக்கு வரங்கொடுத்தது பற்றிப்புகழ்ந்து முடித்து விட்டதால் இனி நமக்கு ஜயம் உண்டாகும் என்று கருதியிருந்தார்கள். அப்பொழுது அர்ச்சுனன் வந்ததையறிந்த கிருஷ்ணன் அவனைப் பார்க்க அங்கு வந்து அர்ச்சுனா! சிவபெருமானே சகல துக்கங்களையும் நீக்கிச் சுகம் அளிப்பவர். ஆகையால் நானும் அவரைப் பூஜிப்பது போல நீங்களும் சிவபூஜை செய்யுங்கள் என்றார். பிறகு அவர் துவாரகையை அடைந்தார். இவ்வாறு சூதமா முனிவர் கூறினார்.

66. சிவபூஜை செய்யும் விதிமுறைகள்!

சவுனகாதி முனிவர்கள், சூதமா முனிவரை நோக்கி வியாஸரின் மாணவரே! எல்லாம் உணர்ந்தவரே! அர்ச்சுனனுக்குச் சுகம் உண்டாகும்படி வேதவியாசர் பார்த்திவ லிங்கத்தைப் பூஜிக்கும்படி உபதேசித்த விதத்தையும் எங்களுக்கு சொல்ல வேண்டும் என்று வேண்ட சூத முனிவர் சிவத்தியானஞ் செய்து சொல்லத் தொடங்கினார். முனிவர்களே! நீங்கள் நல்ல விஷயத்தையே கேட்டீர்கள். மனிதனுக்கு எப்போது அசாத்தியமான துக்கம் உண்டாகுமோ அப்போது அந்தத் துக்கம் ஒழியவும் சுகம் உண்டாகவும் முக்தியடையவும் சற்குருவைப் பணிந்து அந்தக்குருவின் மூலம் மந்திர உபதேசம் பெறவேண்டும். பிறகு நாள்தோறும் ஸ்நானம் செய்து குருவின் உபதேசக் கிரமப்படி ஆராதனை செய்ய வேண்டும். உஷத்காலத்தில் எழுந்து மலவிசர்ஜனம் (மலம் ஜலம் கழித்தல்) தந்ததாவணம் (பல் விலக்கல்) முதலிய கர்மங்களை முடித்து சிவபக்தியோடு குரு நமஸ்காரம் செய்து சிவ நாமங்களையும் தீர்த்த நாமங்களையும் ஸ்மரித்துக் கொண்டு நீராடி சிவநாமங்களைச் சொல்லி, ஆசமனம் செய்து தேகத்தின் பன்னிரண்டு இடங்களில் திருவெண்ணீறு அணிந்து சாஸ்திரோக்தமாக பூசித்து, பூதசுத்தி, பிராணப் பிரதிஷ்டைகளை மூலமந்திரத்தால் செய்து கொண்டு தேஜோ ரூபியான சிவ பெருமான் இதயத்தில் இருக்கிறார். இதயவாசியான சிவபெருமான் என் தேகத்தை ஜெபசித்தியாகும் பொருட்டு பரிசுத்தப்படுத்துவாராக என்று நினைத்து சிவ மந்திரத்தை ஜபித்து பிதுர்த்தர்ப்பணம் செய்துமுடித்து சூரியனுக்கு அர்க்கிய தானம் கொடுத்தும் பிறகு பூஜாக்கிருஹத்தை அடையவேண்டும்.

முதலில் கணபதியையும் பரிவாரத தேவர்களையும் பார்வதி தேவி யாவரையும் முறைப்படிப் பூஜித்து அதன்பிறகு பார்த்திவலிங்க பூஜையை விதிப்படி செய்யவேண்டும். அதைசெய்யும் முறையாவது பரிசுத்தமான இடத்திலுள்ள மிருத்திகையைத் தினந்தோறும் ஓம் ஸ்ரீம் அஷ்டமூர்த்தயே நம என்று மந்திரத்தை ஜெபித்து கொண்டு அதில் பிராணிகள் ஒன்றுமில்லாமல் சோதித்து வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு முடியாமற்போனால் கிருஷ்ண பக்ஷ சதுர்த்தசியில் ஒரு மாதத்திற்கு வரும்படியாகப் போதுமான அளவு மேல் மந்திரத்தை ஜெபித்து எடுத்து வந்து வைத்துக் கொள்ளலாம். மிருத்திகையைக் கொண்டு வந்த பிறகு அத்யாதிப் பிரயோக புரஸ்ஸரமாக அங்கநியாஸ கர நியாஸங்களை செய்ய வேண்டும். அது எப்படியென்றால்.

மமோபாத்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர முத்திஸ்ய ஸ்ரீ பரமேஸ்வரப் ப்ரீத்யர்த்தம் ஸபேஸோபனே முஹுர்த்தே ஸ்ரீஸம்போ ராஜ்ஞ்யா ப்ரவர்தமாநஸ்ய அத்யப்ரஹ்மணா, த்விதீய பரார்த்தே ஸ்வேத வராஹகல்பே, வைவஸ்வத மநவந்த்ரேகலியுகே ப்ரதம பாதே ஜம்பூத்வீபே பரதவர்ஷே பரதகண்டே மேரோந் தக்ஷிணதிக்பாகே ஸ்ரீஸைலஸ்ய, ஆக்நேய திக்பாஹே தேவ ப்ராமண ஸந்நிதௌ, கிருஷ்ணா, காவேரி மத்ய தேசே, அஸ்மந் வர்தமாநே வ்யாவஹாரிக சாந்த்ர ஸௌúமானேக ப்ரபவாதி ஷஷ்டி ஸ்ம்வதஸராணாம் மத்யே-ஸம்வத்ஸரே -அயனே -திதௌ மாஸே -ப÷க்ஷ-சுபதிதௌ-வாஸரயுக்தாயாம்; சுப நக்ஷத்திர சுபயோக சுபகரண ஏவங்குண விஸேஷண விஸிஷடாயாம சுபதிதௌ ஸ்கந்த கணபத்யாதி பரிவார ஸமேத ஸ்ரீபவாநீம் சங்கரமுத்திஸ்ய ஸ்ரீ பவானி சங்கர ப்ரீத்யர்த்தம் பார்த்திவ விதாநேந ஸ்ரீ பவானி சங்கர பூஜாங் கரிஷ்யே

என்று சங்கற்பம் செய்யவும்.

ஸிவாய அங்குஷ்டாப்யாந் நம பவாய தர்ஜநீப்யாந் நம ஸர்வாய மத்ய மாப்யாம் நம பசுபதயே அநாமிகாப்யாந் நம மஹா தேவாய கரிஷ்டிகாப்யாந் நம ஈசாநாய கரதல கரப்ருஷ்டாப்யாந் நம ஏவம் ஹ்ருதயாதிந்யாஸ சிவாய ஹிருதயாய நம பவாய சிரஸேஸ்வாஹா சர்வாய சிகாயைவெளஷட் பசுபதயே கவசாய ஹும் மஹாதேவாய நேத்ர த்ரயாயவஷட், ஈஸாதாய அஸ்த்ராயபட் பூர்புவஸ்ஸுவ ரோமதி திக் பந்தத்யாநம் த்யாயேந் நித்யம் மஹேஸம் ரஜித கிரிநிபஞ் சாரு சந்த்ராவதம் ஸம்ரத் நாகல்போஜ் வலாங்கம் பரசு ம்ருகவரா பீதி ஹஸ்தம் ப்ரஸந்நம பத்மாஸீகம் ஸமந்தாத் ஸ்துதமமர கணைர் வியாக்ரக்ருத்திம் வஸா நம் விஸ்வாத்யம், விஸ்வவந்த்யம் ஸகலபயாஹரம் பஞ்சவக்த்ரம் திரிநேத்ரம் கர்ப்பூர நௌரங் கருணவதாரம் ஸம்ஸாரஸாரம் பஜநேத்ரஹாரம் ஸதாவஸந்தம் ஹ்ருதயார விந்தே பவம் பவாநி ஸஹிதாந் நமாமி கைலாஸ பீடாஸ நமத்ய ஸம்ஸ்தம் பக்தைஸ் சநந்த்யாதி பிஸ்ஸேவ்ய மாநம் பக்தார்த்தி தாவாநல மப் ரமேயந் தியாயே துமாலிங்கித விஸ்வரூபம்.

என்று தியானஞ் செய்து, பிறகு சிவபூஜை செய்ய ஆரம்பிக்க வேண்டும்.
அப்படியில்லை யென்றால் சிவபெருமானுடைய திவ்விய மங்கள ஸ்வரூபத்தைத் தியானிக்கிறேன் என்று நினைத்தாவது சிவபூஜை செய்யலாம்.

ஹரோ மஹேஸ்வரோ தேவ சூலபாணி பிநாகத்ருக்
பசுபதிச் சிவச் சைவ யஜமான இதிக்ராமாத்

இந்த அஷ்டநாமங்களில் மிருதா ஹரணம்(மண் எடுத்துக் கொள்வதும்) நீர் விட்டுப் பிசைந்து லிங்கம் செய்வதும் பிராணப் பிரதிஷ்டை செய்வதும் அழைத்தலும் ஸ்நானம் செய்வதும் பூஜை செய்வதும் க்ஷமாபணமும் விஸர்ஜனமும் செய்ய வேண்டுவது எப்படியேன்றால்

ஹராய நம என்று மண்ணை எடுத்துக் கொண்டு. மகேஸ்வராய நம என்று பிருதிவியில் நீர் சேர்த்துச் சிவலிங்கம் செய்து சூல பாணயே நம என்று பிராணப் பிரதிஷ்டை செய்து இருத்தி பிநாக பாணயே என்றும்.

கைலாஸ சிகராத் ரம்யாத் சமாகச்சமமப்ரபோ
பூஜாம் மோம்க் ருஹாத் வாசய தோக்த புலதோபவ
யதோக்த ரூபிணம் சம்பு மஹா மாவா ஹயாம்யஹ

என்று ஆவாஹனம் செய்ய வேண்டும். இனி சொல்லவிருக்கும் மந்திர ஜபத்திற்குப் பத்தில் ஒரு பாகம் ஹோமமும், ஹோமத்திற்கு பத்தில் ஒரு பாகம் பிராமண போஜனமும் செய்ய வேண்டும், மஹாப் பிரதாபமுடைய நந்திதேவரையும் பிரமத கணங்களையும் பூஜித்த பிறகே சிவபெருமானைப் பூஜிக்க வேண்டும்.

நாமபிரவிவிதை: ஸ்தோத்னரர் ம்ருத்யுஞ்ஜய
ஸ்நாபயேச்ச சிவம் ஸம்யக்தே வஹ்யர் கோதகேநச

என்றும் ஸ்நானம் செய்விக்கவேண்டும். ஸ்ரீசிவாய நம என்ற மந்திரத்தாலேயே வஸ்திரதாரணம் யக்ஞோபவீதம்(பூணூல்) விபூதி தாரணம், கந்தம், அக்ஷதை, அலங்காரம், புஷ்பம் இவற்றையும் சிவாய நம என்றே சமர்ப்பிக்கவேண்டும். மேலும் தூபம், தீபம், நைவேத்யம், தாம்பூலம், கர்ப்பூர நீராஞ்சனம் ஆகியவற்றையும் சிவாய நம என்றே சமர்ப்பிக்க வேண்டும். யஜமாநாய நம என்று க்ஷமாபணம் செய்து முன்பு கூறிய பூதியாயே நித்யம் என்ற தியானத்தைக் கூறி மந்திரஜபம் செய்ய வேண்டும். அதன் செய் முறையாவது

அஸ்ய ஸ்ரீ ஸதாசிவ மந்த்ரைஸ்ய
வாமதேவருஷி தேவீ பங்க்தி ஸ்சந்த
ஸ்ரீ ஸிவோ தேவதா
மமபுக்தி முக்தி ப்ராட்தயே மந்த்ரஜபே விநியோக

என்று குரு உபதேசம் செய்த மந்திரத்தைச் சேர்த்து சிவசன்னிதியிலே அநந்த பலன்களைப் பெறவேண்டி ஜெபிக்க வேண்டும். மந்திர ஜெபம் செய்யும்போது தன் மனதைப் பரிபூரணமாகச் சிவபெருமானிடம் வைத்தே ஜெபிக்க வேண்டும். சக்திக்கு ஏற்ப நூற்றெட்டுக்குக் குறையாமல் ஜெபித்து, ஜபத்தில் பத்தில் ஒரு பங்குக்குத் தர்ப்பணமும் செய்து, தர்பணத்தில் பத்தில் ஒரு பங்கு மார்ஜனமும் (தன் சிரசன் மேல் கும்பஜலத்தைப் புரோக்ஷித்தல்) செய்து சிவத் தியானம் செய்து, தன் பூஜை சத்பலன் கொடுக்கும்படி சிவபெருமானது அஷ்டமூர்த்தங்களையும்

சர்வாய க்ஷிதிமூர்த்தயே நம
பவாய ஜலமூர்த்தயே நம
ருத்ராய தே÷ஐõ மூர்த்தியே நம
உக்ராய வாயு மூர்த்தயே நம
பீமாய ஆகாயமூர்த்தயே நம
பசுபதயே ய ஜமானமூர்த்தயே நம
மஹா தேவாய ஸோமமூர்த்தயே நம
ஈசாநாய சூர்யமூர்த்தயே நம

என்று அக்ஷதை, சந்தனம், புஷ்பம் முதலியவற்றால் பூஜித்து கிருத்திய கீத கல்ல வாத்தியம் முதலியவற்றால் சிறப்புச் செய்து, அக்ஷதை புஷ்பம் இவற்றை இரு கைகளிலும் தாங்கி

தாவகஸ்த் த்கதப்ராண ஸத்வச்சித்தோஹம் ஸதாம்ருட
கிருபாநிதே இதிஜ்ஞாத்வா பூதநாதப் ரஸிதயே
அஜ்ஞாநத்ய திவாஜ் ஞாநாஜ்ஜய பூஜாதிகம்மயா
க்ருதந்த தஸ்து ஸபலங் க்ரு பயாதவ சங்கர
அஹம்பாபீ மஹாநத்ய பாவநஸ்சம ஹாந் பவாந்
இதிவிஜ்ஞாயதேவே ஸயதிச்சஸிததாகுரு
வேதை புராணை ஸித்தாந்தை நுஷி பிர்விவினதரபி
நஜஞாதோஸி மஹாதேவ குதோ ஹம்த்வாம் ஸதாஸிவ
சதாததாத்வ தீயோஸ்மி ஸர்வபானவர் மஹேஸ்வர

யான் உன்னுடையவன் உன்னிடத்தே என் சித்தத்தையும் பிராணனையும் வைத்தவன். சகல சுகங்களையும் கொடுப்பவனே! தயா சமுத்திரனே! சகலருக்கும் பிரபுவே! என் முன் தோன்றுவாயாக, நான் தெரிந்தும் தெரியாதுஞ் செய்த ஜபமும் பூஜையும் உன் தயவால் சபலமாக வேண்டும். நான் பெரும்பாவங்களைச் செய்தவன் நீயோ பவித்திரஞ் செய்வதில் சிறந்தவன். யோசித்து உனது விருப்பப்படிச் செய்யலாம். வேத புராண ஸித்தாந்தங்களைக் கற்றும் அறியவொண்ணாத நின்னை நான் எவ்வாறுஉணரவல்லேன் சர்வ பாவங்களாலும் உன்னையே நம்பி, நின்றவனாக இருப்பதால் என்னை நீயே காப்பாற்ற வேண்டும் என்று சொல்லி சிவபெருமானின் சிரத்தின் மீது சமர்ப்பித்து அநேகவித பிரார்த்தனைகளைச் செய்து, தேவாய நம என்றும்

யதேதா நீஞ்க் தேவேஸக்ரு பார்தம் ஸமு பாகத
ததாத்வ யாபுநர் தேவ ஸமாகந்தவ்ய மேவச

சுவாமி யான் பூஜை செய்வதற்குத் தயை செய்தது. போலவே இப்பொழுது யதாஸ்தானம் சென்று நான் நாளையத்தினம் செய்யும் பூஜைக்கு எழுந்தருள வேண்டும்! என்று விசர்ஜனம் செய்ய வேண்டும். மீண்டும் அத்யாதிப் பிரயோகத்தைக் கூறி; மந்த்ரஹீனம் கிரியாஹீனம் பக்திஹீனம் மகேச்சுவர

யத் பூஜிதம் மயாதேவ பரிபூரணந்ததஸ்துதே
அநேகஸ் கந்தாதிபரிவார சமேத
ஸ்ரீ பவானி சங்கர பார்திவ பூஜா விதாநோ ஸகலதேவாத்மக
ஸ்ரீ பவானி சங்கர ஸுப்ரீத ஸ்ஸுப்ர ஸன்னோ
வரதோபவது ஏதத்பலம் ஸ்ரீசிவார்ப்பணமஸ்து

என்று பூஜையை முடிக்க வேண்டும். பிறகு சம்சார சம்பந்தமான காரியங்களில் பிரவேசிக்கலாம் இவ்வாறு சிவபூஜை செய்து வந்தால் இஷ்ட சித்திகள் எல்லாம் கைகூடும். இந்தப் பூஜையை ஆதிசைவ வேதியர்களை வைத்துக் கொண்டு அவர்கள் சொல்லத்தான் செய்ய வேண்டும். அவ்வாறு அந்தணர் கிடைக்காவிட்டால் தானே செய்து கொள்ளலாம் சிவபெருமானை அர்ச்சித்த புஷ்பம் அக்ஷதை ஆகியவற்றை சிவாக்கினையாக எடுத்து தன் சிரசுமேல் தரித்துக் கொள்ளலாம். இவ்விதம் பூஜிப்பவர்களுக்கு ஒருகுறையும் இராது. ஆறுமாத காலம் இவ்வாறு பூஜித்தவன் ஜீவன் முக்தனாவான். சாபாநுக்ரஹசமர்த்தனாவான் அவனைத் தரிசித்தாலே சிவ சேவை செய்த பயனும் கிடைக்கும். இதில் சந்தேகம் இல்லை இவ்விதமே முனிவர்களாகிய வேத வியாசர் முதலியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். இதுபோலவே ஸ்ரீ கிருஷ்ணன், இந்திரன், முதலியோர் பார்த்திவ லிங்கபூஜை செய்தார்கள். இதைக் கேட்டவர்களுக்கு நீங்காத போக பாக்கியங்கள் கைகூடும் என்று சூத முனிவர் நைமிசாரணிய வாசிகளுக்குக் கூறினார்.

67. கண்ணன் செய்த சிவபூஜை

சூதமுனிவரே! கண்ணன், தினந்தோறும் சிவபூஜை செய்ததாகச் சொன்னீர்களே அவர் எந்தச் சமயத்தில் பூஜித்தார் என்பதை எங்களுக்குச் சொல்ல வேண்டும்! என்று நைமிசாரணிய வாசிகள் கேட்டார்கள் சூதபுராணிகர் கூறலானார்.

ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி பிருந்தாவனத்திலிருந்து வடமதுரையை அடைந்து கம்ஸன் முதலியவர்களைச் சங்கரித்து, வசுதேவர் தேவகி முதலானவர்களை சிறைமீட்டு; சகல யாதவர்களையும் அழைத்து உக்கிரசேன ராஜனுக்குப் பட்டங்கொடுத்துப் பரிபாலித்து வந்தார். பிறகு ஸ்ரீ கிருஷ்ணன் தந்தையால் உபநயனம் செய்விக்கப் பெற்று அவந்தி பட்டணத்திலுள்ள சாந்தீபன் என்ற குருவையடைந்து சேவித்து, அவரால் சிவபஞ்சாக்ஷர மந்திர உபதேசம் பெற்று அந்தச் சிவமந்திரப் பிரபாவத்தால் குறுகிய காலத்திலேயே சகல வித்தைகளையும் கற்றுணர்ந்து முதலையால் விழுங்கப்பட்டு மறைந்த அந்தக் குரு புத்திரனைக் கொண்டு வந்து, குரு காணிக்கையாகக் கொடுத்து; மதுராபுரியை அடைந்து; அநேக தைத்தியர்களுடன் போர் செய்தார். தைத்தியவீரர்கள் மேன்மேலும் யாதவ வீரர்களைத் துன்புறுத்துவதைக் கண்டு சமுத்திரத்தில் துவாரகாபுரியில் யாவரையும் இருக்கச் செய்து அப்பட்டணத்தில் சகல சம்பத்துக்களையும் உண்டாக்கி முசுகுந்தனை அனுக்கிரகித்து காலயவனன் முதலிய ராக்ஷஸர் மேன்மேலும் போருக்கு வந்ததால்  ரைவதகிரியை அடைந்து சிவபூஜா துரந்தரரான உபமன்யு முனிவரை தரிசித்து சத்துருஹீனம் எவ்வாறு உண்டாகும் என்று கேட்டார். அதற்கு அந்த உபமன்யு முனிவர் நீ விஷ்ணு ஸ்வரூபியாகையால் சிவபெருமானை நீ ஏன் ஆராதிக்கக்கூடாது? தன்னைச் சேவித்தவர்களுக்குச் சகாயனாக இருக்கச்சிவபெருமான் காத்திருக்கின்றவர் ஆகையால் நீ சிவபூஜை செய்யும் பக்ஷத்தில் சகல சத்துருக்களையும் ஜயிப்பாய்! என்று கூறி சிவமந்திரத்தை உபதேசித்தார். அது போல ஸ்ரீகண்ணனும் ஸப்தமாஸ தீøக்ஷயை வகித்து கமலம் வில்வம் சதபத்திரம் குசை காவீரம், அறுகு, வெள்ளெருக்கு முதலிய அநேகவிதமான மலர்களைக்கொண்டும் தியானயோகத்தாலும் பூஜைசெய்தார் அதனால் சிவபெருமான் கண்ணனின் பக்திக்கு மகிழ்ந்து காட்சியளித்து, கிருஷ்ணா! நீ விரும்பிய வரத்தைக் கேள்! என்றார்.

சிவபெருமானே! உம் பரிபூரண கடாட்சத்தால் யாவும் எனக்கு இருந்தும் தைத்தியர்களுடைய தொந்தரவிலிருந்து நீங்குவதற்காகவே உம்மைச் சரணம் அடைந்தேன் பூர்வத்தில் என் பெரியோர் யாவரும் உம்மை ஆராதித்திருக்கிறார்கள். பிரமனும் உம்மை உபாசித்திருக்கிறான். ஆகையால் நீர் எனக்கும் அருள்புரிய வேண்டும் என்றார் கண்ணன் அதற்கு சிவபெருமான் ஓ கிருஷ்ணா! உனக்குத் தனதான்ய சம்பத்துக்களும் புத்திரர்களும் அநேகம் ஸ்திரீகளும் விசேஷமான சத்துரு சங்கார சமர்த்தும் உண்டாகும்! என்று வரம் கொடுத்தார், அப்போது அங்கிருந்த பார்வதிதேவியும் மகிழ்ந்து பல வரங்களையும் கொடுத்தாள் சிவசக்தியர் கொடுத்த வரங்களால் கண்ணபிரான் மகிழ்ந்து மகாதேவா பூர்வத்தில் சுதர்சனம் என்னும் சக்கரத்தை எனக்கு கொடுத்துக் காத்தீர் அந்தச் சக்கரத்தால் ராட்சஸர்களை ஜெயித்துக் கொண்டிருந்தேன். இப்பொழுதும் வரங்கள் பலவற்றைத் தந்தீர் என்று விசேஷமாகப் போற்றிப் பூஜித்தார். கருணாநிதியான சாம்பவமூர்த்தி நீ போவாயாக உனக்கு விசேஷமான சுபங்கள் உண்டாகத் தயை செய்வோம் என்று கூறியனுப்பி வைத்தார், கிருஷ்ணன், துவாரகையை அடைந்து. மகிழ்ச்சியாக வாழ்ந்திருந்தார். இவ்வாறு ஸ்ரீ கிருஷ்ணனுக்கு வரம் கொடுத்து வில்வேஸ்வரர் என்ற பெயருடன் அந்த ரைவதகிரியில் கோயில் கொண்டருளி தன்னைச் சேவிப்பவர்களுக்கு நன்மைகளை அனுக்கிரகித்துக் கொண்டிருக்கிறார். கிருஷ்ணன் ஏழுமாத காலமும் வில்வதளங்களாலேயே சிறப்பாக அருச்சனை செய்த காரணத்தால் அந்தச் சிவலிங்க மூர்த்தத்துக்கு வில்வேஸ்வரர் என்ற பெயர் உண்டாயிற்று. அன்று முதல் ஸ்ரீகிருஷ்ணன் சகல சாம்ராஜ்யங்களையும் கொடுக்கும் சிவபெருமானைச் சேவித்து வந்தார் முனிவர்களே! இந்தச் சரிதத்தைக் கேட்டவர்கள் சகலபாவங்களிலிருந்தும் நீங்குவர்! இவ்வாறு சூதமுனிவர் கூறினார்.

68. திருமால் சக்கிராயுதம் பெற்ற சரிதை

சூத முனிவரே! விஷ்ணுமூர்த்திக்குச் சிவபெருமான் சக்கிராயுதம் கொடுத்தார் என்று கிருஷ்ணமூர்த்தி, தோத்திரஞ் செய்ததாகச் சொன்னீர்களே! தாங்கள் யாவும் அறிந்தவராகையால் அந்தச் சரிதத்தையும் எங்களுக்குச் சொல்ல வேண்டுகிறோம்! என்றார்கள் சவுனகாதி முனிவர்கள். சூதமுனிவர் கூறலானார். முனிவர்களே! ஒரு காலத்தில் பலசாலிகளான அரக்கர்கள் அதிகமாகி உலகங்களைப் பீடித்துத் தர்ம நாசம் செய்து வந்தார்கள். அதனால் தேவர்கள் அனைவரும் சங்கடப்பட்டு விஷ்ணுமூர்த்தியை அடைந்து பரமாத்மாவே! எங்கள் விஷயத்தில் தயை வைக்க வேண்டும். தைத்தியர்களால் நாங்கள் மிகவும் துன்பப்படுகிறோம். நாங்கள் எங்கே போவோம்? காத்தல் கடவுளான தங்களையடைந்தோம்! என்று பிரார்த்தித்தார்கள். திருமால் அவர்களை நோக்கி, அமரர்களே! அஞ்சாதீர்கள் நான் சிவபெருமானை ஆராதித்து அவரருளால் உங்களைக் காப்பேன் பகைவர்கள் பலவான்களாயிருப்பதால் பிரயத்தனம் செய்து வெல்ல வேண்டியிருக்கிறது. அதற்காகவே சிவாராதனை செய்கிறேன் என்றார். தேவர்கள் அதைக்கேட்டு மகிழ்ந்து தங்கள் இருப்பிடங்களை அடைந்தார்கள்.

அதன்பிறகு விஷ்ணு கைலாயமலைக்குச் சென்று சிவபெருமானைக்குறித்துத் தவஞ்செய்யக் கருதி ஹோமகுண்டம் அமைத்து யாகம் வளர்த்தி. பார்த்திவ பூஜாவிதானமான பலவித ஸ்தோத்திரங்களாலும் மந்திரங்களாலும் சேவித்து மானஸ ஸரஸிலிருக்கும் தாமரை மலர்களால் பூஜித்து பத்மாசனத்தில் வீற்றிருந்து யோக நிலையில் இருந்தார். அவர் அநேக காலம் பூஜை இயற்றியும் சிவபெருமான் காட்சியளிக்காததால் திருமால் கடின தவத்தையும் சிவபூஜையையும் மேற்கொண்டு பலகாலம் செய்து வந்தார். அப்போதும் சிவபெருமான் தோன்றாமல் இருக்கவே அவரது ஆயிரம் திருநாமங்களையும் தியானித்து ஆயிரங்கமலங்களால் அர்ச்சனை செய்யச் சங்கற்பம் செய்து ஆயிரம் தாமரைகளைச் சேகரித்து வந்து ஒவ்வொரு திருநாமத்துக்கு ஒவ்வொரு மலராக அர்ச்சித்து வந்தார். அவரது பக்தியைச் சிவபெருமான் பரீட்சிக்க விரும்பிக் கடைசியில் ஒரு திருநாமத்துக்கு ஒரு மலர் குறையும்படிச் செய்தார். அதனால் திருமால் தம் சிவ பூஜா நியமத்துக்கு குறைபாடு ஏற்படுவதைச் சகிக்காமல் எனது கண் தாமரை மலரேயாகும் இதனாலேயே என் பூஜையை முடிப்பேன் என்று அதனைப் பறிக்கத் தொடங்கினார். அப்போ சிவபெருமான் அவர் முன்பு காட்சியளித்து விஷ்ணுவே! உன் கண்ணைப் பறிக்கவேண்டாம். உன் பக்திக்கு மகிழ்ந்தேன் வேண்டியவரம் கேட்டால் தருகிறேன். உனக்குக் கொடுக்கக் கூடாதது எதுவுமில்லை என்றார். அதற்கு மகா விஷ்ணு சங்கரா! நீர் அறியாதது யாதுமில்லை. உலகங்கள் தைத்தயர்களால் துன்புறுகின்றன. யாவரும் சுகமடைவதற்கும் தைத்ய சங்காரம் செய்வதற்கும் தக்க ஆயுதம் எதுவும் என் கையில் இல்லை. எனவே உம்மைச் சரணடைந்தேன்! என்று கூறித்துதித்தார் சிவபெருமான் விஷ்ணுவுக்கு இரங்கி சுதர்சனம் என்ற சக்கரா யுதத்தைக் கொடுத்தருளினார், அதைப் பெற்றுக் கொண்ட விஷ்ணு

கமலாநாம் ஸஹஸ்ரந்து ஹ்ருதமே கங்கரேணச
நஞ்ஞானு விஷ்ணு நாதச்ச மாயாரணமத்புதம்
ந்யுநந்தச் சாபிதத்ஜ் ஞாத்வா நேத்ரமேக முதாஹ்ருதம்
தந்தீருஷ்ட் வாசப்ரஸ ந்நோ பூச்சரங்கரஸ் ஸர்வது க்கஹா
தைத் யாந்ஹந்துங்கதந்தேவ ஹ்யாயு தந்தப் ப்ரவர்ததே
கிங்க ரோமிக் வகச்சாமி ஸரணந்த்வா முபாகத
இத்யுக்த்வாச நமஸ்க்ருத்ய ஸிவாய பரமாத்மநே
ஸ்திதஸ்சை வாக்ர தோ தேவ ஸ்வயஞ்சஸுõரபீடித
ததா தஸ்மைஸ்வயம் ஸ்ம்யு சக்ரஞ் சதத்தவாந்ப்ரபு
தேஸ நவ பீடிதே விஷ்ணு தைத்யாம்ஸ்ச பலவத் தராந்

சிவபெருமானிடம் உத்திரவு பெற்றுச் சகல தைத்தியர்களையும் சங்காரம் செய்தார்.
இவ்வாறு சூதமுனிவர் சொன்னதும் அவரைச் சவுனகாதி முனிவர்கள் வணங்கி வியாசரின் சீடரே! விஷ்ணு மூர்த்தி சிவபெருமானைப் பூஜித்த சஹஸ்ரநாமங்கள் யாவை? எந்த சஹஸ்ர நாம பூஜையால் சிவபெருமான் மனம் மகிழ்ந்து விஷ்ணுவுக்குச் சக்கராயுகத்தை அனுக்கிரகித்தாரோ, அந்தச் சஹஸ்ரநாமத்தை எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்றார்கள் சூத முனிவர் அதைக் கூறலானார்.

69. சிவ சஹஸ்ர நாமம் (சிவ நாம ஆயிரம்)

முனி சிரேஷ்டர்களாகிய நைமிசாரணிய வாசிகளே நான் வியாச மகரிஷியிடம் எவ்வாறு கேட்டிருக்கிறேனோ அவ்வாறே சொல்லுகிறேன். கேளுங்கள் விஷ்ணுவினால் சிவபெருமான் மகிழ்ச்சியடையும் படி ஸ்தோத்தரிக்கப்பட்டதும் புண்ணிய கரமுமான சிவஸஹஸ்ர நாமங்களை இப்போது சொல்லுகிறேன் விஷ்ணு வாக்கியம்.

ஸ்ரீ விஷ்ணு நுவாச:

ஓம் ஸிவோ ஹரோம்ரு டோருத்ர நம:
ஓம் புஷ்கர நம:
ஓம் புஷ்பலோசன நம:
ஓம் அந்திகம்ய நம:
ஓம் ஸதாசார நம:
ஓம் ஸர்வ ஸம்புர் நம:
ஓம் மஹேஸ்வர நம:
ஓம் சந்த்ராபீடஸ் சந்த்ர மௌலீர் விஸ்வம் விஸ்வா மரேஸ்வர வேதாந்தஸார ஸந்தோஹ நம:
ஓம் கபாலீ நீலலோஹித நம:
ஓம் தியாநா தாரோ பரிச்சேத்யோ கௌரீ பர்த்தா கணேஸ்வர நம: 10

ஓம் அஷ்டமூர்த்திஸ்த்ரிவர்கஸாதன நம:
ஓம் ஞானகம்யோ த்ருடப்ரஜ்ஞோ தேவதேவ ஸ்த்ரிலோசன நம:
ஓம் வாமதேவோ மஹாதேவ நம:
ஓம் படுபரிப்ரு டோத்ருட நம:
ஓம் விஸ்வரூபோ விரூபா÷க்ஷõ வாகீஸ நம:
ஓம் சுசி ஸத்தம் நம:
ஓம் ஸர்வப்ரமாண ஸம்வாதீ வ்ருஷாங்கோ விருஷவாஹந நம:
ஓம் ஈஸ நம:
ஓம் பிநாகீ கட்வாங்கீ சித்ரவேஷஸ் சிரந்தந நம:
ஓம் தமோ ஹரோ மஹா யோகீ கோப்தாப்ரஹ்மாசதூர்ஜடி நம: 20

ஓம் காலகால நம:
ஓம் க்ருத்திவாஸா நம:
ஓம் ஸுபக நம:
ஓம் ப்ரணவாத்மக நம:
ஓம் கூக்நத்ர நம:
ஓம் புரு÷ஷாஜுஷ்யோ துர்வாஸா புரஸாஸந நம:
ஓம் திவ்யாயுத ஸ்கந்த குரு நம:
ஓம் பரமேஸ்டீ பராத்பர நம:
ஓம் அநாதிமத்ய நிதநோ கிரீஸோ கிரிஜா தவ நம:
ஓம் குபேர பந்து நம: 30

ஓம் ஸ்ரீகண்டோ லோக, வர்ணோத்த மோம்ருது நம:
ஓம் ஸமாதி வேத்ய நம:
ஓம் கோதண்டீ நீலகண்ட நம:
ஓம் பரஸ்வதீ நம:
ஓம் விஸாலா, ÷க்ஷõம் ருநவ்யாத நம:
ஓம் ஸுரேஸ நம:
ஓம் ஸுர்யதாபந தர்மதாம க்ஷமா நம:
ஓம் ÷க்ஷத்ரம் பகவாந் பகநேத்ரபித் உக்ர நம:
ஓம் பசுபதி ஸ்தார்க்ஷய நம:
ஓம் ப்ரியபக்த நம 40

ஓம் பரந்தப நம:
ஓம் தாதாதயாச ரோதக்ஷ நம:
ஓம் கர்மந்தீ காமஸாஸந நம:
ஓம் ஸ்மஸாநநிலய நம:
ஓம் ஸுக்ஷ்ம நம:
ஓம் ஸ்மஸானஸ்தோ மஹேஸ்வர நம:
ஓம் லோக கர்த்தா ம்ருகபதிர் மஹாகர்த்தா மஹாஷதி நம:
ஓம் உத்தரோ கோபதிர் கோப்தா ஜ்ஞானகம்ய நம:
ஓம் புராதந, நீதி நம:
ஓம் ஸுநீதி நம:  50

ஓம் ஸுத்தாத் மாஸோம் நம:
ஓம் ஸோமாத நம:
ஓம் ஸுகி ஸோக போம்ருதப நம:
ஓம் ஸெளம்யோ மஹாதேஜோ மஹாத்யுதி நம:
ஓம் தேஜோம்யோம் ருதமயோந்நமயச்ச ஸுதாபதி நம:
ஓம் அஜாத ஸத்ருரா லோக நம:
ஓம் ஸம்பாவ்யோ ஹவ்ய வாஹந நம:
ஓம் லோக கரோ வேதகர நம:
ஓம் ஸுத்ரகார நம:
ஓம் ஸநாதந மஹர்ஷி கபிலாசார்யோ விசுவதீப்திர் விலோசந நம: 60

ஓம் பிநாக பாணிர் பூதேவ நம:
ஓம் ஸ்வஸ்தித் ஸ்வஸ்திக் ருத்ஸுதீ தாத்ருதாமாதாமகர நம:
ஓம் ஸர்வச ஸர்வகோசர நம:
ஓம் ப்ரஹ்மஸ்ருக் விசுவஸ்ருக் ஸர்க நம:
ஓம் கர்ணி கார நம:
ஓம் ப்ரிய, கவி நம:
ஓம் ஸாகோவி ஸாகோகோ ஸாக நம:
ஓம் ஸிவோபீஷக நுத்தம நம:
ஓம் கங்காப் லவோதகோபவ்ய? புஷ்கல நம:
ஓம் ஸ்தபதி நம: 70

ஓம் ஸ்திர நம:
ஓம் விஜிதாத்மா விஷயாத்மா பூதவாஹநா ஸாரதி ஸகணோ கணகாயச்சஸுகீர் திக்சிந்ந ஸம்ஸய நம:
ஓம் காமதேவ நம:
ஓம் காமபாலோ பஸ்மோத் தூலித விக்ரஹ, பஸ்மப்ரியோ பஸ்மஸாயீ காமிகாந்த நம:
ஓம் க்ருதாகம ஸமாவர்தோ நிவ்ருத் தாத்மா தர்மபுஞ்ஜ நம:
ஓம் ஸ்தாஸிவ நம:
ஓம் அகல்மஷச்சதுர் பாஹுர் துராவாஸோ துராஸத நம:
ஓம் துர்லமோதுர்க மோதுர்க நம:
ஓம் ஸர்வாயுத விஸாரத நம:ஓம் அத்யாத்ம யோகநிலய நம:
 80

ஓம் ஸுதந்து ஸிதந்து வர்தந நம:
ஓம் ஸுபாங்கோ லோக ஸாரங்கோ ஜகதீஸோ நம:
ஓம் ஜநார்தந நம:
ஓம் பஸ்மசுத்திகரோ மேருரோஜஸ்வீ சுத்த விக்ரஹ அஸாத்ய நம:
ஓம் ஸாதுஸாத் யச்ச ப்ருத்ய மர்கடரு பத்ருக் ஹிரண்யரேதா நம:
ஓம் பௌராணோரிபு ஜீவ ஹரோ பல நம:

ஓம் மஹாஹ்ரதோ மஹாகர்த்த நம:
ஓம் ஸித்த நம:
ஓம் ப்ருந்தார வந்தித நம:
ஓம் வ்யாக்ர சர்மாம் பரோவ்யாலீ மஹா பூதோ மஹாநிதி நம: 90

ஓம் அம்ருதா ஸோம்ருதவபு நம:
ஓம் பாஞ்சஜந்ய ப்ரபஞ்ஜந நம:
ஓம் பஞ்சவிம்ஸதி தத்வஸ்த, பாரிஜாத நம:
ஓம் பராவர ஸுலப நம:
ஓம் ஸுவ்ரத குரோப்ரம் ஹவேத நிதிர் நிதி நம:
ஓம் வர்ணாஸரம குருவர்ணி ஸத்ரு ஜித்சத்ருதாபந நம:
ஓம் ஆஸ்ரம நம:
ஓம் க்ஷபண நம:
ஓம் க்ஷõமோஜ்ஞானவாநச லேசுவர நம:
ஓம் ப்ரமாண பூ தோதுர்ஜ்ஞேய நம100

ஓம் ஸுபர்ணோ வாயு வாஹந நம:
ஓம் தநுர்தரோ தநுர்வேதோ குணராசிர் குணாகர நம:
ஓம் ஸத்ய நம:
ஓம் ஸத்ய பரோதீனோ தர்மாங்கோதர்ம ஸாதந நம:
ஓம் அநந்தத்ருஷ்டிரா தந்நோ தண்டோத்மயிதாதம நம:
ஓம் அபிவாத்யோ மஹாமாயோ விசுவகர்மா விஸாரத வீதராகோ விநீதாத்மா தபஸ்வீ பூத பாவந நம:
ஓம் உந்மத்தவேஷ நம:
ஓம் ப்ரசந்நோ ஜுதகாமோ ஜிதப்ரிய நம:
ஓம் கல்யாண ப்ரக்ருதி நம:
ஓம் கல்ப ஸர்வலோக ப்ரஜாபதீ நம: 110

ஓம் தரஸ்வீதார கோதீமாந் ப்ரதாநப்ரபு ரவ்ய லோக பரலோந்தர் ஹி தாத்மா கல்பாதி நம:
ஓம் கமலேக்ஷண நம:
ஓம் வேத சாஸ்த்ராந்த தத்வஜ்ஞோ நியமோ நியதாஸ்ர சந்திரஸுர்ய நம:
ஓம் சநி கேதுர்வராங்கோவித் ருமச்சவி, பக்திவசிய நம:
ஓம் பரப்ரஹ்மம்ருக பாணார் பணோநக, அத்ரி ரத்ரியாலய நம:
ஓம் காந்த நம:
ஓம் பரமாத்மர்ஜக த்குரு நம:
ஓம் ஸர்வகர்மா லயஸ் துஷ்டோ மங்கல்யோ மங்கலாவ்ருத நம:
ஓம் மஹாதபா தீர்கதபா நம:
ஓம் ஸ்தவிஷ்ட நம: 120

ஓம் ஸ்தவிரோத்ருய நம:
ஓம் அஹஸம்வத்ஸ் ரோவ்யாப்தி, ப்ரமாணம் பரமந்தப நம:
ஓம் ஸம்வத்ஸரக ரோமந்த்ர ப்ரத்யய நம:
ஓம் ஸர்வ தர்ஸந நம:
ஓம் அஜ நம:
ஓம் ஸர்வேசுவர நம:
ஓம் ஸித்தோ மஹாரேதா மஹா பவ நம:
ஓம் யோகி யோக்யோ மஹா தேஜோ! ஸித்தி நம:
ஓம் ஸர்வாதி நக்ரஹ வஸுர்வஸுமநா நம:
ஓம் ஸத்ய நம: 130

ஓம் ஸர்வ பாப ஹரோஹரா நம:
ஓம் ஸுகீர்தி நம:
ஓம் சோபந நம:
ஓம் ஸ்ரீமா நவாவ்ம ஸகோசர நம:
ஓம் அம்ருத நம:
ஓம் சாசுவத நம:
ஓம் சாந்தோ பாண ஹஸ்த நம:
ஓம் ப்ரதாபவாந் கமண்டலு தரோதந்வீ வேதாங்கோ வேதவிந்முநி நம:
ஓம் ப்ராஜ்ஷ்ணுந் போஜனம் போக்தா லோகநாதோதுராதர நம:
ஓம் அதீந்திரியோ மஹாமாய நம: 140

ஓம் ஸர்வவாஸஸ் சதுஷ்பத நம:
ஓம் காலயோகீ மஹா நாதோ மஹோத்ஸாஹோ மஹா பல மஹாபுத்திர் மஹா வீர்யோ பூதசாரீ புரந்தர நம:
ஓம் நிஸாசர நம:
ஓம் ப்ரேதசாரீ மஹாசக்திர் மஹாத்யுதி நம:
ஓம் அநிர்தேஸ்யவபு ஸ்ரீமாந்த் ஸர்வாசார்ய மநோகதி நம:
ஓம் பஹு ஸ்ருதோ நம:
ஓம் மஹா மாயோ நியதாத்மா த்குவோ த்ருவ நம:
ஓம் ஓஜஸ்தேஜோ த்யுதிதரோ நர்தக நம:
ஓம் ஸர்வ ஸாஸக ந்ருத்ய ப்ரியோ ந்ருத்யநித்ய நம:
ஓம் ப்ரகாஸாத்மா ப்ரகாஸக நம: 150

ஓம் ஸ்பஷ்டாக்ஷரோ புதோ மந்த்ர் நம:
ஓம் ஸமாந ஸாரஸம்ப் லவ நம:
ஓம் யுகாதி க்ருத் யுகாவர்தோ கம்பீரோவ்ருஷ வாஹந நம:
ஓம் இஷ்டோ விசிஷ்ட நம:
ஓம் சிஷ்டேஷ்ட நம:
ஓம் ஸாபபஸாரபோதநு நம:
ஓம் தீர்த ரூபஸ்தீர்த நாமாதீர்தாத்ருஸ்ய நம:
ஓம் ஸ்துதோர்தத, அபாந் நிதிர திஷ்டாநம் விஜயோஜயகாலவித் நம:
ஓம் ப்ரதிஷ்டித ப்ரமாணஞ்ஞோ ஹிரிண்யகவசோ ஹரி நம:
ஓம் விலோசந நம: 160

ஓம் ஸுரகணோ வித்யே ஸோபிந்து ஸம்ஸ்ரய பாலரூபோ பலோந் மத்தோ விகர்தாகஹ நோகுஹ நம:
ஓம் கரணங் காரணங் கர்த்தா ஸர்வ பந்த விமோசனா நம:
ஓம் வ்யவஸாயோ மஹா சாப ஸ்திக்மாம் சுர்பதிர நம:
ஓம் கக நம:
ஓம் அபிராம நம:
ஓம் ஸூஸரண ஸுப்ரஹ்மண்ய ஸூதாபதி மகவாந்கௌஸிகோ மாந்விராம  நம:
ஓம் ஸர்வஸாதந நம:
ஓம் லலாடா÷க்ஷõ விஸ்வதேஹ நம:
ஓம் ஸார ஸம்ஸார சக்ரப்ருத் அமோக தண்டோ மத்யஸ்தோ ஹிரண்யோ ப்ரஹ்ம வாசஸி நம:
ஓம் பரமந்த பரோமாயீ ஸ்ம்மரோவ்யாக்ரலோசந ருசிர் விரஞ்சி நம: 170

ஓம் ஸ்வர்பந்துர் வாசஸ்பதிரஹர்பதி நம:
ஓம் ரவிர்விரோசந ஸ்கந்த நம:
ஓம் ஸாஸ்தா வைவஸ்வதோயம நம:
ஓம் யுக்திருந் நதகீர்திஸ்ச ஸாதுராக பரஞ்ஜாய நம:
ஓம் கைலாஸாதிபதி நம:
ஓம் காந்த நம:
ஓம் ஸவிதார விலோசந நம:
ஓம் வித்வத்த மோவீதபயோ விஸ்வ பர்தா நிவாரித நம:
ஓம் நித்யோ நித்ய கல்யாண நம:
ஓம் புண்ய ஸ்ரவணகீர்தா நம: 180

ஓம் தூரஸ்ரவா விஸ்வஸஹோத்யே யோது நம:
ஓம் க்கப்ரநாஸக நம:
ஓம் உத்தாரணோ துஷ்க்ருதி ஹாவிஞ்ஞேயோ துஸ்ஸ ஹோபவ நம:
ஓம் அநாதிர்பூர் புவோலக்ஷ்மி நம:
ஓம் கிரீடித்ரிதஸாதிப நம:
ஓம் விஸ்வ கோப்தா விஸ்வகர்தா ஸுவீரோரு சிராங்கத நம:
ஓம் ஜநநோ ஜகஜந்மாதி ப்ரீதிமாந் நீதி மாந்தவ நம:
ஓம் வசிஷ்ட நம:
ஓம் கஸ்ய போபாதுர் பீமோ பீம பராக்ரம நம:
ஓம் ப்ரணவ நம: 190

ஓம் ஸப்ததா சாரோ மஹாகாளோ மஹாதந நம:
ஓம் ஜந்மாதி போமஹதேவ நம:
ஓம் ஸகலாகமபாரக நம:
ஓம் தத்வந்தத்தவ விதேகாத்மா விபுந்விஸ்வ விபூஷண நம:
ஓம் நுஷிர்ப்ராஹ்மண ஐஸ்வர்ய ஜந்மம் ருத்யுஜராதிக நம:
ஓம் பஞ்ச யஜ்ஜஸமுத்பத்திர் விஸ்வேஸோ விமலோ தய நம:
ஓம் ஆத்மயோநி ரநாதயந்தோ வத்ஸலோ பக்த லோகத்ருக் காயத்ரீ வல்லப நம:
ஓம் ப்ராம்ஸுர் விஸ்வாவாஸ நம:
ஓம் ப்ரபாகர நம:
ஓம் ஸீஸுர் கிரிரத ஸம்ராட் ஸுஷேண நம: 200

ஓம் ஸுரஸத்ஹா அமோகோ ரிஷ்ட நேமிஸ்ச குமுதோ விக்தஜ்வர ஸவயஞ்ஜ் யோதிஸ்தநுஜ்யோதி ராத்மஞ்யோதிர சஞ்சல நம:
ஓம் பிங்கல கபில ஸ்ம ஸ்ருர் பால நேதர ஸ்த்ரயீதநு நம:
ஓம் ஜ்ஞாநஸ்கந்தோ மஹாநீதிர் விஸ்வோத் பத்திரு பப்லவ நம:
ஓம் பகோ விவஸ்வாநாதித்யோ யோக பாரோதிவஸ்பதி நம:
ஓம் கல்யாண குணநாமாச பாபஹா புண்யதர்ஸந நம:
ஓம் உதாரகீர்தி ருத்யோகீ ஸத்யோகீ ஸதஸந்மய நம:
ஓம் நக்ஷத்ரமாலீ நாகேஸ நம:
ஓம் ஸ்வாதிஷ்டாந பதாஸ்ரய நம:
ஓம் பவித்ர நம:
ஓம் பாபஹாரீச மணி பூரோந போகதி நம: 210

ஓம் ஹ்ருத் புண்டரீக மாஸீத நம:
ஓம் ஸுக்ர நம:
ஓம் ஸாந்தோவ்ருஷாகபி நம:
ஓம் உஷ்ணோக்ருஹபதி நம:
ஓம் க்ருஷ்ண நம:
ஓம் ஸமர்தோநர்த நாஸக நம:
ஓம் அதர்மஸத்ருரஜ்ஞேய நம:ஓம் புருஹுத நம:
ஓம் புருஸ்ருத நம:
ஓம் ப்ரஹ்மகர்போ ப்ருஹத் கர்போ தர்மதேநுர் தநாகம் நம: 220

ஓம் ஜகத்திதை ஷீஸுகத நம:
ஓம் குமார குஸலாகம் நம:
ஓம் ஹிரண்ய வர்ணோ ஜ்யோதிஷ்மான் நாதா பூதரதோ த்வநி நம:
ஓம் அராகோ நயனாதய÷க்ஷõ விஸ்வாமித்ரோ தநேஸ்வர நம:
ஓம் ப்ரஹ்ம ஜ்யோதிர் வஸுதாமா மஹாஜ்யோகிர நுத்தம நம:
ஓம் மாதா மஹோ மாதரிஸ்வா நபஸ்வாக் நாகஹாரத்ருக் புலஸ்த்ய நம:
ஓம் புலஹோ கஸ்த்யோ ஜாது கர்ண்ய நம:
ஓம் பராஸர நம:
ஓம் நிரா வரண நிர்வாரோ வைரஞ்ச் யோவிஷ்ட ரஸ்ரவா நம:
ஓம் ஆத்மபூர நிருத்தோத்ரிர்ஜ்ஞானமூர்திர் மஹாயஸா நம: 230

ஓம் லோக வீராக்ரணீர் வீர ஸ்சண்ட நம:
ஓம் ஸத்யபராக்ரம நம:
ஓம் வ்யாலாகல்போ மஹாகல்ப நம:
ஓம் கல்பவ்ருக்ஷ நம:
ஓம் கலாதர நம:
ஓம் அலங்கரிஷ்ணு சலோ ரோசிஷ்னுர் விக்ர மோக்கத நம:
ஓம் ஆயு நம:
ஓம் ஸப்த பதிர்வேகீ ப்லவந நம:
ஓம் ஸிகிஸாரதி அஸம் ஸ்ருஷ்டோதுதிதி ஸக்ர ப்ரமாதீபாதபாஸந நம:
ஓம் வஸுஸரவா ஹவ்யவாஹ நம: 240

ஓம் ப்ரதப்தா விஸ்வபோஜந ஜப்யோஜ ராதிஸமநோ லோஹிதாத் மாதநூநபாதப்ருஹதஸ்வோநபோ
 யோரி ஸுட்ரதீ கஸ்தமிஸ்ரஹா நிதாகஸ்தப நோமேக ஸ்வக்ஷ நம:
ஓம் பரபுரஞ்ஜய ஸுகாநில நம:
ஓம் ஸுநிஷ்பக்ந நம:
ஓம் ஸுரபிஸிஸிராத்மக நம:
ஓம் வஸந்தோ மாதவோக்ரீஷ்மோ நபஸ்யோ பீஜவாஹந நம:
ஓம் அங்கிராகுரு ராத்ரேயோ விமலோ விஸ்வ வாஹந நம:
ஓம் பாவந நம:
ஓம் ஸுமதிர்வித் வாம்ஸ்த்ரைவித்யே நரவாஹந நம:
ஓம் மகோபுத்திரஹங்கார நம:
ஓம் ÷க்ஷத்ரக்ர நம: 250

ஓம் ÷க்ஷத்ரபாலக நம:
ஓம் ஜமதக்னிக் பலநிதிர்  நம:
ஓம் விகாலோ விஸ்வ காலவ நம:
ஓம் அகோரோதுத்தராயேஞ்ஞ ஸ்ரேயோநி நம:
ஓம் ஸ்ரேய ஸாம்பத நம:
ஓம் ஸைலோகக நருந்தாபோ தானவாரிரநித்தம நம:
ஓம் ரஜநீஜக கஸ்சாரு விஸால்யோ லோக கல்பந்ருக் சதுர்வேத ஸ்சர்பாவஸ் சதுரஸ் சதுரப்ப்ரிய நம:
ஓம் ஆம்நாயோத ஸமாம்நாய ஸ்தீர்ததேவ ஸிவாலய நம:
ஓம் பஹுரூபோ மஹாரூப நம:
ஓம் ஸர்வரூப ஸ்சராசர நம: 260

ஓம் ந்யாய நிர்மாய கோந்யாயீ ந்யாயகம்யோ நிரந்தர நம:
ஓம் ஸஹஸ்த்ர பாஹு ஸர்வேஸ நம:
ஓம் ஸரண்ய நம:
ஓம் ஸர்வ லோகத்ருக் பத்மாஸந  நம:
ஓம் பரஞ்ஜ்யோதி நம:
ஓம் பரம்பார நம:
ஓம் பரம்பலம் நம:
ஓம் பத்மகர்போ மஹா கர்போர் விஸ்வகர்போ விசக்ஷண நம:
ஓம் சராசரஜ்ஞோ வரதோவரே ஸஸ்து மஹா பல நம:
ஓம் தேவாஸுர குருர் தேவோ தேவா ஸுரமஹாஸ்ரய நம: 270

ஓம் தேவாதிரேவோ தேவாந்நிர் தேவாக்நிஸுகத நம:
ஓம் ப்ரபு நம:
ஓம் தேவாஸுரேஸ்வரோ திவ்யோ தேவா ஸுர மஹேஸ்வர நம:
ஓம் தேவதேவ மயோசிந்த்யோ தேவதேவாத்ம ஸம்பவ  நம:
ஓம் ஸத்யோ நிரஸுரவ்யாக்ரோ தேவ ஸிம்ஹோ திவாகர நம:
ஓம் விபுதாக்ரவஸ்ரேஷ்ட நம:
ஓம் ஸர்வதேவோத்தமோத்தம ஸிவக்ஞானரத நம:
ஓம் ஸ்ரீமாந்ஸிகி ஸ்ரீபர்வதப்ரிய நம:
ஓம் வஜ்ரஹஸ்த  நம:
ஓம் ஸித்தகட்கீ நரஸிம்ஹநிபாதந ப்ரஹ்மசாரீ லோகசாரீ தர்ம சாரீ தநாதிப நம: 280

ஓம் நந்தீநந் தீஸ்வரோ நந்தோ நகநவ்ரததர நம:
ஓம் ஸ்வர்க ஸுசி நம:
ஓம் லிங்கத் யக்ஷஸுராத் ய÷க்ஷõ யோகாத் ய÷க்ஷõயுகாலஹ நம:
ஓம் ஸ்வதர்மா ஸ்வர்கத ஸ்வர்க கர நம:
ஓம் ஸ்வரமயஸ்வந பாணாத்ய÷க்ஷõபீ ஜகர்தா தர்ம கருத்தர்ம ஸம்பவ நம:
ஓம் தம்போலோ போர்த்தவிச் சம்பு ஸர்வ பூத மஹேஸ்வர ஸமஸாந நம:
ஓம் நிலயஸ்த்ர்யக்ஷ நம:
ஓம் ஸேதுரப்ரதிமாக்ருதி லோகோத் தரஸ்புடோலோக ஸ்த்ரியம் பகோ நாக பூஷண நம:
ஓம் அந்தகாரிர் மகத்வே விஷ்ணுகந்தர பாதந நம:
ஓம் ஹுநதோ÷ஷா க்ஷயகுணோ தக்ஷõரி நம: 290

ஓம் பூஷதந்தபித் தூர்ஜடி நம:
ஓம் கண்ட பாஸுகஸகலோ நிஷ்கலோநக நம:
ஓம் அகால நம:
ஓம் ஸகலாதா நம:
ஓம் பாண்டு ராபோம் ருடோ நட , பூர்ண நம:
ஓம் பூரயிதாபுண்ய நம:
ஓம் ஸுகுமார நம:
ஓம் ஸுலோசந நம:
ஓம் ஸாமகேய ப்ரியோக்ரூர புண்யகீர்திர நாமய மநோஜ வஸ்தீர்த்தகரோ ஜடிலோ ஜீவிதேஸ்வர நம:
ஓம் ஜீவிதாந்தகரோ நித்யோ வஸுரேதா வஸுப்ரத நம: 300

ஓம் ஸத்கதி நம:
ஓம் ஸத்க்ருதி ஸித்தி நம:
ஓம் ஸஜ்ஜாதி நம:
ஓம் காலகண்டக கலாதரே மஹாகாலோ பூதஸத்ய பராயண நம:
ஓம் லோகலாவண்ய கந்தாச லோகோத்த ரஸீகாலய சந்த்ரஸஞ்ஜீவந நம:
ஓம் ஸாஸ்தா லோக கூடோமஹாதீப நம:
ஓம் லோக பந்தூர்லோகநாத நம:
ஓம் க்ருதஞ்ஞ கீர்திதக்ஷண நம:
ஓம் அநபாயோக்ஷர நம:
ஓம் காந்த நம: 310

ஓம் ஸர்வ ஸஸ்த்ர ப்ருதாம் வர நம:
ஓம் தேஜோமயோ த்யுதிதரோ லோகாதாம க்ரணீரணு நம:
ஓம் ஸுசிஸ்மித நம:
ஓம் ப்ரஸந ..... துர்ஜேயோதுரநிக்ரம நம:
ஓம் ஜ்யோதிர்மயோ ஜகந்நாதோ நிராகாரோஜலேஸ்வர ..... வீணோ மஹாகோபோ விஸோக நம:
ஓம் ஸோக நாஸந நம:
ஓம் த்ரிலோக பஸ்த்ரிலோகேஸ ஸர்வ ஸூத்திர தோஷஜ நம:
ஓம் அவ்யக்த லஷ்ணேதேவோ வ்யக்தாவ் யக்தோ விஸாம்பதி நம:
ஓம் வரஸீலோ வரகுண நம:
ஓம் ஸாரோமாந தநோமய நம: 320

ஓம் ப்ரஹ்மா விஷ்ணு நம:
ஓம் ப்ரஜாபாலோ ஹம்ஸோ ஹம்ஸகதிக்வய நம:
ஓம் வேதா விதாதா தாதாச ஸ்க்ரஷ்டா ஹர்த்தா ரசதுமுக நம:
ஓம் கைலாஸ ஸிகராவாஸி ஸர்வா வாஸீஸதா கதி நம:
ஓம் ஹிரண்ய கர்போத்ருஹிணோ பூதபாலோதபூபதி நம:
ஓம் ஸத்யோகீ யோக வித்யோகீ வரதோ ப்ராஹ்மண நம:
ஓம் ப்ரிய நம:
ஓம் தேவப்ரியோ தேவகாதோ தேவஜ்ஞோ தேவசிந்தக நம:
ஓம் விஷமா÷க்ஷõ விஸாலா÷க்ஷõ வ்ருஷதோ வ்ருஷவர்தந நம:
ஓம் நிர்மமோ நிர ஹங்காரோ நிர்மோஹா நிருயத்ரவ நம: 330

ஓம் தர்பஹாதர்ப தோத்ருப்த நம:
ஓம் ஸர்வர்து பரிவர்த்தக ஸஹஸ்ர ஜீஸஹஸ் த்ரார்கி நம:
ஓம் ஸ்நிக்தப்ருக்ருதி தக்ஷிண நம:
ஓம் பூதபவ்யபயந்நாத நம:
ஓம் ப்ரபவோ பூதி நாஸந அர்த்தோ நர்த்தோ மஹாகோஸ நம:
ஓம் பரகார்யைந பண்டித நம:
ஓம் நிஷ்கண்டக நம:
ஓம் க்ருதாநந்தோ நிர்வ்யா ஜோவ்யாஜ மர்தந நம:
ஓம் ஸத்வவாந் ஸாத்விக ஸத்யகீர்தி நம:
ஓம் ஸ்நேஹக்ருதாகம நம: 340

ஓம் அகம்பிதா இணக்ராஹி நைகாத் மானநககர் மக்ருத், ஸுப்ரீத நம:
ஓம் ஸுமுக நம:
ஓம் ஸுக்ஷ்ம நம:
ஓம் ஸுகரோத க்ஷிணாநில நந்திஸ் கந்ததரோ துர்ய நம:
ஓம் ப்ரகட ப்ரீதீவர்த்தன நம:
ஓம் அபராஜித நம:
ஓம் ஸர்வ ஸத்வோ கோவிந்த் நம:
ஓம் ஸத்வவாஹந நம:
ஓம் அத்ருத ஸ்வத்ருத நம:
ஓம் ஸித்த  நம: 350

ஓம் பூதமூர்திர் யஸோதந வாராஹா ஸ்ருங்கத்ருக் ஸ்ருங்கி பலவாநேக நாயக நம:
ஓம் ஸ்ருதப்ரகாஸ ஸ்ருதிமா ரேகபந்துர நேகக்ருத் ஸ்ரீ வத்ஸலஸி வாரம்ப நம:
ஓம் ஸாந்த பத்ர ஸமோயஸ நம:
ஓம் பூஸயோ பூஷணோ பூதிர் பூதக்ருத் பூதபாவந நம:
ஓம் அகம்போ பக்திகா யஸ்து காலஹா நீல லோஹித நம:
ஓம் ஸத்ய வ்ரதமஹாத்யாகீ நித்ய ஸாந்தி பராயண பரார்த்த வ்ருத்திர்வாதோ விவிக்ஷúஸ்துவிஸாரத ஸுபத நம:
ஓம் ஸபகர்தாச ஸுபநாமா ஸுப நம:
ஓம் ஸ்வயம் அநர்த்திதோ குண ஸாக்ஷீ த்யகர்தாகநகப்ரப  நம:
ஓம் ஸ்வபாவ பத்ரோ மத்யஸ்த யீக்ரக நம:
ஓம் ஸ்ரீக்ரநாஸந நம: 360

ஓம் ஸிகண்டிகவசீ ஸூலிஜடீமுண்டி சகுண்டலீ அம்ருத்யு நம:
ஓம் ஸர்வத்ழிக்ஸிம் ஹஸ்தே ஜோராஸிர்ம ஹாமணி நம:
ஓம் அஸங்க்யேயோ ப்ரமோ யாத்மா வீர்ய வாக் வீரியகோவித நம:
ஓம் வேத்யஸ்சைவ வியோகாத்மா பராமா முநீஸ்வர நம:
ஓம் அதுத்தமோ துராதர்÷ஷா மதுரப்ரிய தர்ஸன நம:
ஓம் ஸுரேஸி நம:
ஓம் ஸரணம் சர்வ நம:
ஓம் ஸப்தப்ரஹ்ம ஸதாங்கதி நம:
ஓம் காலபக்ஷ நம:
ஓம் கால காரீகங்கணீ க்ருத வாஸுகி நம: 370

ஓம் மஹேஸ் வாஸோமஹீபக்தா நிஷ்களங்கோ விஸ்ருங்க் கல நம:
ஓம் த்யுமணி ஸ்தரணிர் தந்ய நம:
ஓம் ஸித்தித நம:
ஓம் ஸித்தஸாதந நம:
ஓம் விஸ்வத நம:
ஓம் ஸம்வ்ருத ஸ்துல்யோ வ்யூடோரஸ்கோமஹாபுஜ நம:
ஓம் ஸர்வயோநிர் நிராதங்கோ நரநாராயணப்ரிய நம:
ஓம் ஸ்தோதாவ்யாஸ முர்திர் நம:
ஓம் நிரஸ்குஸ நம:
ஓம் நிரவத்ய மயோ பாயோ வித்யாராஸீ ரஸப்ரியா ப்ரஸாந்த புத்திரக்ஷúண்ண ஸங்க்ரஹீ நித்யஸுந்தர நம: 380

ஓம் வைய்யாக்ரதுர்யோ தாத்ரீஸ ஸாகல்ய ஸர்வரீபதி நம:
ஓம் பரமார்த்த ருருர் த்ருஷ்டி நம:
ஓம் ஸரீராஸ்ரிதவத்ஸல நம:
ஓம் ஸோமோரஸ ஜ்ஞோரஸத நம:
ஓம் ஸர்வ ஸத்வாவலம்பந நம:
ஓம் ஏவம் நாம்நாம் ஸஹஸ்ரேண துஷ்டாவ வ்ருஷபத்வஜம் நம:
ஓம் பரார்த்தயாமாஸ ஸம்புஞ்ச பூஜயாமாஸ பங்கஜை நம: 387

இத்தகைய ஆயிரம் திருநாமங்களால் ரிஷபத்துவஜ காளகண்ட திரிநேத்திரதாரரான சிவபெருமானை, விஷ்ணுமூர்த்தி பிரார்த்தனை செய்ததும் தாமரை மலர்களால் அர்ச்சனையும் செய்து கொண்டும் இருக்கும் போது சிவபெருமான் மஹா விஷ்ணுவின் பக்தியைச் சோதிக்க வேண்டி, அந்தத் தாமரை மலர்களில் ஒன்றை அர்ச்சனைக் காலத்தில் மறையச் செய்தார். விஷ்ணு, ஒரு திருநாமத்திற்கு மலர்காணாது குறைந்ததை உணர்ந்து, தாமரையிழந்த பிறகு இனி எனது கண்கள் இருந்தும் என்ன பயன்? எல்லாப் பிராணிகளுக்கும் ஊன்று கோலாகவுள்ள சர்வேஸ்வரன் சிவபெருமானே! என்று உணர்ந்து தனது கண்களில் ஒன்றைத் தோண்டியெடுத்து, மனப் பூர்த்தியாக இத்தோத்திரத்தைச் சொல்லிப் பூஜித்தார். சிவபெருமான் பிரத்தியட்சமானார். மஹாவிஷ்ணு அவரை நமஸ்கரித்து எதிர் நின்றார் பார்வதி சமேதராகத் தரிசனம் தந்த சிவபெருமான் விஷ்ணுவை நோக்கி, விஷ்ணுவே! எல்லா தேவ காரியங்களையும் தெரிந்து கொண்டேன் ஆகையால் சுதர்சனம் என்ற பெயரையுடைய சக்ராயுதத்தை உனக்குத் தருகிறேன் அது மிகவும் மங்களகரமானது. அதன் வடிவத்தை நீ பார்த்து மிருக்கிறாய், அது எல்லா உலகங்களுக்கும் சுகத்தையளிக்க வல்லது, உன்னுடைய இதத்திற்காக அது செய்யப்பட்டிருக்கிறது. நல்ல விரதமுடைய நீ இந்த விஷயத்தை ஆலோசித்து அறியவும். இது யுத்தக்களத்திலே, ஸ்மரித்தவுடனே தேவர்களுடைய துக்கத்தை ஒழிக்க வல்லது. இதோ சக்ரம்! இதோ எனது வடிவம். இதோ நீ செய்த ஸஹஸ்ர நாமம்! இவை மூன்றையும் கொடுத்தோம். இந்தச் சரிதத்தைப் பக்தியோடு கேட்பவர்கள் இடையிலே நீங்காத சித்திகளையடைவார்கள்.

ஸங்கார உவாச ஜ்ஞாதம் மயேதம்
ஸகலந்தேவ கார்யஞ்ஜ நார்த்தந ஸுதர்
ஸநாக்யஞ் சக்ரஞ்ச ததாமிதவ ஸோப நம யத்ரூபம்.
பவதாத்ருஷ்டம் ஸர்வலோக ஸுகாவஹம் ஹிதாய தவ தேவேஸ்
ஸ்ருதம்பாவய ஸுவ்ரத ரணாஜிரேபிஸம் ஸம்ருத்ய தேவா
நாந்துக்கநாஸதம் இதஞ் சக்ரம் இதம் ரூபம் இது நாம ஸஹஸ்ரகம் ஏஸ்ருண் வந்திததா பக்த்யா ஸித்திஸ்யஸரத நபாயி நீ
ஏவமுக்த்யாத தவுசக்ரம் ஸுர்யாயுத ஸம்பரபம்

என்று திருவாய் மலர்ந்தருளி அநேக சூரிய காந்திக்கு சமமான காந்தியையுடைய சக்ராயுதத்தைக் கொடுத்து அருளினார். விஷ்ணுவும் மிக்க மகிழ்ச்சியுடன் அதைப் பெற்றுக் கொண்டு மஹாதேவனைப் பணிந்து பரமேஸ்வரா! என் வேண்டுதலைக் கேட்க வேண்டும் நான் துக்க நாசத்திற்காகத் தியானிப்பதற்கும் துதிப்பதற்கும் தரிப்பதற்கும் தகுதியாக இருப்பது எது? என்று கேட்டார்.

சிவபெருமான் மகிழ்ந்து விஷ்ணுவே! என்னுடைய ரூபமே சகல துக்கங்களும் விலகித் தியானிக்கத் தக்கது என் சகஸ்ர நாமங்களே துதிக்கத் தக்கது, எத்தகைய துன்பங்களும் ஒழியும்படி என் பிரசாதமாகிய சுதாசனமே தரிக்கத் தக்கது. திருமாலே இந்த சரிதத்தை யாவர் வாசிக்கிறார்களோ, அவர்களுக்கு கனவிலும் துக்கம் என்பது சம்பவியாது அரசர்கள் சங்கடப்படும் சமயத்தில் எனது சகஸ்ரநாமங்களை நூறுமுறை தியானித்தால் அவர்களது சங்கடங்கள் விலகிவிடும் அதை விதிமுறையாக ஜெயிப்பவன் சகல சுகங்களையும் அடைவான். எல்லாவித நோய்களையும் ஒழிப்பான். கல்வியை விரும்பியவன் கல்வியைப் பெறுவான் அரும்பெருங்காரியங்களை விரும்புபவன் அவற்றை அடைவான், இதில் ஐயமில்லை நாள்தோறும் விடியற்காலையில் எழுந்து என்னை முறைப்படி பூஜை செய்து என் சஹஸ்ர நாமத்தால் துதிப்பவன் எப்பொழுதும் என்னிடத்திலேயே வாழும் சித்தியை அடைவான். இகபர சிக்திகளை அடைவான். எட்டு மாத காலம் நாள்தோறும் முறைப்படித் தியானித்துத் துதித்தால் என்னுடைய சாயுஜ்ஜிய பதவியை அடைவான். இதில் சிறிதும் பிசகில்லை என்று கூறி ஆனந்தமயமாய் விஷ்ணுவைத் தம் திருக்கரத்தால் தடவி நான் வரதனாகையால் உனக்கு வேண்டிய வரங்களைக் கேள்! உன் தோத்திரத்தால் நான் உனக்கு வசமானேன்! என்றார்.

விஷ்ணு சிவபெருமானை மீண்டும் பணிந்து, மகேஸ்வரா! உமக்கு என்மீது இப்போது தயை வந்திருப்பதை விட விரும்பத்தக்கது ஏதேனும் இருக்கும் பட்சத்தில் நீர் தயாள ஸ்வரூபியாக இருப்பதால் ஆலோசித்துத் திருவாய் மலர்ந்தருள வேண்டும். ஆயினும் உம்மிடம் எப்போதுமே நீங்காத திடபக்தி உண்டாயிருக்க மட்டுமே வரங்கொடுக்க வேண்டும். பகவானே! உம்திருவருளால் நான் சர்வ சம்பூரணனாக இருப்பதால் வேறு ஒரு வரம் எனக்கு வேண்டுவதில்லை! என்றார். விஷ்ணுவே! உனக்கு என்னிடம் திடபக்தி உண்டாகுக நீ தேவர்கள் அனைவருக்கும் பூஜ்யனாகுக உலக சம்ரக்ஷணம் செய்யும் சக்தியைக் கொடுத்தேன். உன் பெயரைத் தியானிப்போரின் பாவங்கள் சந்தேகமின்றி ஒழியும் என்று சிவபெருமான் வரந்தந்து அந்தர்தானமானார். அதன் பிறகு திருமால் மங்களகரமான சக்ராயுதத்துடன் எப்போதும் சிவஸ்தோத்திரங்களை தியானித்துக் கொண்டு தன்னை நாடிவரும் அன்பர்களுக்கும் இந்த ஸ்தோத்திரத்தை அத்தியயனம் செய்வித்து வந்தார். இந்தச் சகஸ்ரத் திருநாமங்களால் துதிப்பவர்கள் மிகச் சிறந்த பயன்களை அடைவார்கள். இதைக் கேட்பவர்களுடைய பாபங்கள்யாவும் நசிக்கும் நைமிசாரணிய வாசிகளே திருமால் ஸ்தோத்திரம் செய்து சிவபெருமானிடத்திருந்துச் சுதர்சனம் என்ற சக்கரத்தையடைந்த சிவ சகஸ்ரநாமங்களை வியாஸ முனிவர் கூற, நான் கேட்டவிதமே உங்களுக்குச் சொன்னேன் இனி நீங்கள் கேட்க வேண்டியவிஷயத்தைக் கேட்கலாம்! இவ்வாறு சூதமா முனிவர் சொன்னார்.

70. சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கும் முறை

சூதமுனிவரே! நீங்கள் சொல்லிவரும் விஷயங்களாலேயே எங்கள் சந்தேகங்கள் ஒழிகின்றன சிவார்ச்சனை செய்வதில் சிறந்தபக்திமானாகிய தங்களையே கேட்கிறோம் உலகத்தில் எந்த விரதத்தை மேற் கொண்டால் சிவபெருமான் மகிழ்ச்சியடைந்து சகல சுகங்களையும் புத்தி முக்திகலையும் கொடுப்பாரோ அந்த விரதத்தை எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று கேட்டார்கள் நைமிசாரணியவாசிகள். சூதமுனிவர் கூறலானார். முனிவர்களே! நீங்கள் என்னைக் கேட்ட இந்த விஷயத்தையே ஒவ்வொரு காலங்களிலும் பிரமனும் விஷ்ணுவும் பார்வதியும் சிவபெருமானைக் கேட்டிருக்கிறார்கள் அதற்குச் சிவபெருமான் கூறிய, பாபங்களை ஒழிக்கவல்ல, அந்த உரையாடலை நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். சிவபெருமான் விஷ்ணுவை நோக்கி, விஷ்ணுவே! உத்தமமானதொரு விரதத்தை உனக்குச் சொல்கிறேன். வேதங்கள் ஸ்மிருதிகள் புராணங்கள், தர்ம சாஸ்திரங்கள் இவைகளில் எல்லாம் சொல்லப்பட்டுள்ள இரகசியங்களில் எல்லாம் அதிரகசியமான விஷயத்தை உனக்குச் சொல்கிறேன். உலகத்தில் முக்தியளிக்கத் தக்கவை நான்கு. அவை சிவார்ச்சனை, உருத்திர பாராயணம், அஷ்டமி சோமவாரம் கிருஷ்ணபக்ஷத்து சதுர்த்தசி (பிரதோஷம்) இந்த மூன்று நாள் உபவாசம் காசி÷க்ஷத்திரத்தில் மரணம் என்பவையாம். இந்த நான்குமே முக்தியளிக்கத் தக்கவை. இந்த நான்கிலும் சிவராத்திரி விரதமே மிகவும் யுக்தமானது ஆகையால் புத்தி முக்திகளை விரும்புவோர். இந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டியதாகும். இதைவிடச் சிறந்த விரதம் ஒன்றும் இல்லை என்றார்.

பிறைசூடிய பெம்மானே! அந்தச் சிவராத்திரி விரதத்தைப் பற்றி எளியேனுக்குச் சொல்லவேண்டும். எந்த மாதத்தில் எந்த விதிப்படி எப்படிப் பூஜிக்க வேண்டும்? இதை உலக உபகாரத்திற்காகக் கேட்கிறேன். எவ்வளவு காலம் இந்த விரதத்தை ஆஸ்ரயிக்க வேண்டும் மற்ற திதிகளை விடச் சதுர்த்தி திதி எப்படித் தங்களுக்குப் பிரியமானதாயிற்று? அதைச் சொல்ல வேண்டும்! என்று திருமால் கேட்டார். சிவபெருமான் கூறலானார், இந்த விரதம் யாவருக்குமே தர்ம சாதனமானது. நான்கு வருணத்தினரும் பிரம்மச்சாரி முதலிய ஆசிரமத்தினரும் மங்கையரும் குழந்தைகளும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம். மாசி மாதத்தில் வருகின்ற கிருஷ்ணபக்ஷ சதுர்த்தியின் நள்ளிரவு பதினான்கு நாழிகையானது கோடிபிரமஹத்திகளை நசிக்கச் செய்யும், ஆகையால் அந்தத் தினத்தில் செய்யத்தக்க செயல்களைச் சொல்லுகிறேன்.

அன்று விடியற்காலையில் எழுந்து மகிழ்ச்சியுடன் மானுடப்பிறவி எடுத்தல் அரிது அது துக்கமுடையதும் சாரமற்றதுமாக இருத்தலால் அந்த மானுடப் பிறவியை இந்த விரதத்தால் பயன்படுத்தும் படிச்செய்வேன், என்று நிச்சயித்துக் கொண்டு, அருகிலிருப்பவரையும் இந்த விரதத்தை அனுஷ்டிக்க செய்ய வேண்டும், பிறகு பல் துலக்கி, புண்ணிய தீர்த்தத்தில் தேசகால விரோதமின்றி ஸ்நானம் செய்து நித்ய கர்மானுஷ்டானங்களை முடித்து நைமித்தியானுஷ்டானம் செய்யத் துவங்க வேண்டும்.

சிவலாயத்திலிருந்து எந்தக் காரியத்தைச் செய்வதானாலும் ஒன்று அனந்தமாகும், ஆகையால் சிவ சன்னிதானத்திலிருந்து வழக்கப்படிச் சிவபூஜை முடித்து வணங்கி, வாம தேவா! மஹா தேவா! சதாசிவா, நீலகண்டா உமது கருணையால் சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்று இச்சை கொண்டேன். ஆயினும் அது விக்கினமின்றி முடியும்படி இந்த விரதம் முடியும் வரை காமம் முதலியவைகள் என்னைத் துன்புறுத்தாமலும் துஷ்டர்களுடன் வார்த்தையாடல், அசுத்தர்களை ஸ்பரிசித்தல் ஐம்புலன்வழி மனத்தைச் செலுத்தல், ஜலபானம் செய்தல் முதலியன விலகவும் அனுக்கிரகம் செய்யவேண்டும் என்று வேண்டிக்கொண்டு பிறகு பூஜா திரவியங்களைச் சேகரித்துக் கொள்ள வேண்டும் தன் வாசஸ்தானத்துக்கு அருகே எந்தச் சிவலிங்க மூர்த்தம் பிரசித்தமாகவும் புண்ணியகரமாகவும் பூஜிக்கத்தக்கதாகவும் இருக்கிறதோ, அந்தச் சிவலிங்கத்திற்கு அருகே சென்று அந்தப் பார்த்திவ லிங்கத்தின் தென் திசையிலாவது மேலைத்திசையிலாவது பூஜிப்பதற்குத்தக்க இடத்தை நிச்சயித்துக் கொண்டு, தான் சேகரித்த பூஜைப் பொருள்களை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். மீண்டும் அந்தத் திருக்கோயிலிலேயே விதிப்படி ஸ்நானம் செய்து தூய்மையாகத் துவைத்து உலர்த்திய ஆடைகளைத் தரித்து மும்முறை ஆசமனஞ்செய்து பூஜையை ஆரம்பிக்க வேண்டும். முதலில் அசரலிங்கமான அந்தப் பார்த்திவலிங்கத்திற்கு மந்திரபூர்வமான உபசாரத்துடன் பூஜை செய்வித்தல் வேண்டும் மந்திரமில்லாமல் பூஜிக்கக்கூடாது. எந்தெந்தத் திரவியங்களுக்கு எந்தெந்த மந்திரங்கள் சொல்லப் பட்டிருக்கின்றவோ அந்தந்தத் திரவியங்களை அந்தந்த மந்திரங்களைச் சொல்லியே பூஜை செய்ய வேண்டும். பிறகு கீதம் நிருத்தம் வாத்தியம் இவற்றைப் பக்தியுடன் சமர்ப்பிக்க வேண்டும் இவ்வாறு முதற் ஜாமத்தில் பூஜை செய்து சிவமந்திரம் ஜெபித்து தான் தினந்தோறும் பார்த்திவலிங்க பூஜை செய்யும் வழக்கமுடையவனாக இருந்தால், தன் வழக்கப்படியே பார்த்திவலிங்க பூஜை செய்ய வேண்டும் அல்லது முன்னதாகப் பார்த்திவலிங்கப் பூஜை செய்துவிட வேண்டும்.

பிறகு, சிவபெருமான் தன்னிடம் தயை வைக்கும்படி பலவித சிவஸ்தோத்திரங்களால் தியானிக்க வேண்டும் சிவ மகிமையைப் பிறருக்குச் சொல்லவேண்டும் அல்லது பிறர் சொல்லச் சிரவணஞ் செய்ய வேண்டும் இவ்வாறு நான்கு ஜாமங்களிலும் நான்கு பார்த்திவலிங்கங்களைச் செய்து ஆவாஹானாதி விசர்ஜனாதி பூஜைகளைச் செய்து முடித்து ஸ்தாபித லிங்கத்தையும் பூஜை செய்வித்து நித்திரையில்லாமல் உத்ஸவம் முதலிய சிவபணிவிடைகளைச் செய்து கொண்டே விழித்திருந்து இரவைக் கழித்து விடியும் முன்பு மீண்டும் ஸ்தாபிதலிங்கத்திற்குப் பூஜை செய்வித்து ஸ்நானம் செய்து சந்தியா வந்தனம் முதலியவற்றை  முடித்து  எம் பெருமானே! உம் கிருபையால் நான் ஆஸ்ரயித்த சிவராத்திரி விரதத்தை முடித்தேன். என் சக்திக்கு தரவேண்டும் என்று புஷ்பாஞ்சலி செய்த பார்வதிதேவியையும் நமஸ்கரித்துத் தான் செய்த பூஜா பயனைச் சிவப்ரீதி செய்து, ஜலபானஞ் செய்து அவ்விரத நியமத்தை விட வேண்டும். விஷ்ணுவே, அது எப்படி என்பதைக் கூறுகிறேன் யாமங்கள் நான்கினும் தன் மனதிலுள்ள கோரிக்கையைச் சேர்த்து அத்தியாதிப் பிரயோகமாகிய சங்கற்பம் செய்து ஸ்தாபிதலிங்கத்தையும் பார்த்திவலிங்கத்தையும் பக்தியோடு பூஜிக்க வேண்டும். பால், தயிர், நெய், தேன் சர்க்கரை முதலியவற்றால் அவ்வற்றிற்குரிய மந்திரங்களைக்கூறி அபிஷேகம் செய்யவேண்டும் பிறகு உலர்ந்த வஸ்திரத்தால் சிவலிங்கமூர்த்தியை உபசாரமாக ஒற்றி சுகந்தபரிமள சந்தனஞ்சாத்தி முதல் ஜாமத்தில் அரிசி அக்ஷதையும் இரண்டாவது ஜாமத்தில் யவை அட்க்ஷதையும் மூன்றாவது ஜாமத்தில் கோதுமை அக்ஷதையும் நான்காம் ஜாமத்தில் அரிசி, உளுந்து, பயிறு, தினை அல்லது ஏழு விதமான தான்யாக்ஷதையும் சமர்ப்பிக்கவும் புஷ்பங்கள் முதல் ஜாமத்தில் சதபத்ரம் கமலம் கரவீரம் முதலியனவும் இரண்டாம் யாமத்தில் கமலமும், வில்வமும் மூன்றாம் யாமத்தில் அறுகும் ஆத்தியும் நான்காம் ஜாமத்தில் நறுமணங்கமழும் பல மலர்களோடும் சிவநாமங்களாலாவது குரு உபதேசித்த மந்திரங்களாலாவது, அர்ச்சனை செய்யவேண்டும். நிவேதனம் முதல் யாமத்தில் சுத்தான்னமும் கறிவகைகளும் பலகாரங்களும் இரண்டாம் யாமத்தில் பரமான்னமும் லட்டு முதலிய பலகாரமும் மூன்றாம் யாமத்தில் மாவாற் செய்த நெய் சேர்த்த பலகாரவகையும் பாயசமும் நான்காம் யாமத்தில் கோதுமை சர்க்கரை நெய் சேர்த்துச் செய்த மதுரமான பலகாரங்களும் நானாவிதமான பழவகைகளையும் நிவேதிக்கவும், முதல் யாமத்தில் வில்வம் பழத்தையும் இரண்டாம் யாமத்தில் பலாபழத்தையும் மூன்றாம் யாமத்தில் மாதுளம் பழத்தையும் நான்காம் யாமத்தில் பலவித பழங்களையும் சமர்ப்பிக்கலாம் தாம்பூலத் தக்ஷிணைகளோடு யாமங்கள் நான்கிலும் பிராமண போஜனம் முதலியன செய்யவேண்டும்.

அந்தந்த ஜாமத்தின் முதலிற் சங்கற்பம் செய்ததற்கு ஏற்ப அந்தந்த யாம பூஜையை முடித்து. அந்தந்த பார்த்திவலிங்கங்களை விசர்ஜனம் செய்து விடவேண்டும். பூஜையின் முடிவில் ஸ்ரீம்பவாய, ஸர்வாய, ருத்ராய, பசுபதயே, உக்ராய, மஹாதேவாய, பீமாய, ஈசிநாய என்ற அஷ்ட நாமங்களால் பூஜித்து புஷ்பாஞ்சலி செய்து தன் கோரிக்கைகளைச் சொல்லிக் கொள்ள வேண்டும் ஒவ்வொரு யாமத்திலும் ஓர் அந்தணனுக்குக் குறையாமல் அன்னமிட வேண்டும். மறுநாள் போஜனத்திற்கும் அந்தந்த ஜாமத்திலே பிராமணர்களுக்குத் தக்ஷிணை கொடுத்து நியமித்துக் கொள்ள வேண்டும். அவரவர் சக்திக்கு ஏற்ப தானம் செய்து பிராமணர் அதிதிகள் முதலானவர்களுக்கு இரவு நான்கு ஜாமங்களிலும் சங்கற்பித்துக் கொண்டபடி அன்னமளித்து சிவபெருமானை நமஸ்கரித்துப் புஷ்பாஞ்சலி செய்து சுவாமி! நான் உம்முடையவன் என் உயிர் உன்னிடத்துள்ளது என் சித்தம் உனதே! தயாசமுத்திரனான நீ உன் இஷ்டப்படியே செய். தெரிந்தோ, தெரியாமலோ நான் செய்யும் ஜெபபூஜைகளைப் பயன் பெறச் செய்வாயாக, சகல பிராணிகளுக்கும் பிரபுவான நீ எனக்குப் பிரசன்னமாக வேண்டும். நான் செய்த பூஜாக்காரியங்களால் நீ மகிழ்ந்து. குறைவை நிறைவாக்கி விரதத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று புஷ்பாஞ்சலி செய்து சிவ நிர்மாலியத்தை ஆசிர்வசன பூர்வமாகப் பெற்று சிவபெருமானையும் பிராமணரையும் நமஸ்கரித்து திரும்பவும் நான் பூஜை செய்யும் சமயத்தில் எழுந்தருள வேண்டும்! என்று பிரார்த்தித்து என் வம்சத்தில் உன் பூஜை எப்பொழுதும் இருக்கவேண்டும் என் மனதிற்கு அருகில் நீ சமீபத்திருக்க வேண்டும். இரவும் பகலும் உனது நாமஸ்மரணையில் நான் இருக்கவேண்டும்! என்று பிரார்த்தித்து விசர்ஜனம் செய்து பிராமண போஜனம் செய்வித்தால் சகல பாபங்களும் நீங்கும். இப்படி விரதம் செய்தவர்களுக்கு அருகில் சிவபெருமான் எழுந்தருளியிருப்பார் இதன் பயனைப் பதினாயிரம் ஆண்டுகள் சொன்னாலும் முடியாது இந்த விரதத்தைப் பக்தியின்றிச் செய்தவனுக்கும் முக்தியுண்டாகும், இதுபோலவே பிரதி சிவராத்திரியிலும் செய்யவேண்டும். பிறகு விரதசாந்திக்காக உத்தியாபனம் விதிப்படிச் செய்ய வேண்டும் என்று திருவாய் மலர்ந்தருளினார், இவ்வாறு சிவபெருமான் சொல்லிக் கேட்ட விஷ்ணு முதலிய தேவர்கள் அனைவரும் மகிழ்ந்து தங்கள் இருக்கைகளை அடைந்தார்கள்.

71. சிவராத்திரி உத்தியாபனம்

நைமிசாரணிய வாசிகள் சூதமுனிவரை நோக்கி, சுவாமி! சிவராத்திரி விரதசாந்திக்காக உத்தியாபனம் செய்தால், சிவபெருமான் பிரசன்னமாவார் என்று தாங்கள் சொல்வீர்களே! அதை முறைப்படி எங்களுக்குச் சொல்லவேண்டும் என்று கேட்கச் சூதமுனிவர் சொல்லத் தொடங்கினார். முனிவர்களே! நான் இதுவரை வேதவியாஸர் திருவாக்கால் கேள்விப்பட்ட சிவராத்திரி உத்தியாபன விதியைச் செல்லுகிறேன், கேளுங்கள்.

சிவராத்திரி தினத்தில் நித்திய நியமவிதானத்தை முடித்துக் கொண்டு, சிவாலயம் சென்று அங்கு சாஸ்திர விதிப்படிச் சிவபூஜை செய்து குரு நியமப்படி சிவராத்திரி விரதம் செய்வதற்காகச் சங்கற்பம் செய்து கொண்டு இரவு முழுவதும் நித்திரையில்லாமல் நான்கு ஜாமத்திலும் ஸ்தாபிதலிங்கத்திலாவது பார்த்திவலிங்கத்திலாவது முடியுமானால் இரண்டிற்கும் சிவ பூஜைசெய்து மறுநாள் விடியற்காலத்தில் ஸ்நானம் முதலான நித்தியக் கிரியைகளை முடித்துக் கொள்ள வேண்டும். பிறகு சிவசன்னதியில் சங்கற்பம் செய்து கொண்டு, சிவபிரசாதத்தால் இந்த விரதத்தைச் செய்கிறேன் என்று பிரதி மாதமும் தேவரீரது கட்டளையால் இந்த விரதம் செய்யத் தக்கது இது விக்கினமில்லாமல் முடியும்படி அநுக்ஞை செய்ய வேண்டும் என்று சிவாலயத்தில் நியமித்துக் கொண்டு பிராமணர்களுடன் தானும் புசித்து பிராமண ஆசியைப் பெற்று நியமத்தை முடித்துக்கொள்ள வேண்டும். பின்வரும் கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசியில் விடியற்காலத்தில் எழுந்து தீர்த்தத்திலாவது வீட்டிலாவது ஸ்நானம் முதலிய நித்தியக் கருமங்களை முடித்துக்கொண்டு சிவ சன்னிதிக்குச் சென்று சிவபூஜை செய்து எம்பெருமானே! இன்று உம் கட்டளையால் நிராகார விரதத்தை நிர்ச்சலமாகச் செய்ய நிச்சயித்திருக்கிறேன் இந்த விரதத்தை அனுஷ்டிக்க உத்தரவு கொடுக்கவேண்டும் என்று கும்பிட்டு காமக்குரோதாதிகளை விட்டு பகலைக்கழித்து, இரவு நான்கு ஜாமங்களிலும் பூஜித்து மந்திர ஜெபம் செய்து பக்தி செய்து விடியும் வரை விழித்திருந்து பிறகு ஸ்நானம் செய்து சிவபூஜை முடித்து பிராமணர் அதிதிகளுக்குப் போஜனம் செய்விக்க வேண்டும் இவ்வாறு செய்வதற்குச் சக்தியற்றவன் ஓர் அந்தணனுக்காவது அன்னமிட வேண்டும். பிராமண ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டு தான் கிரக்கிருத்தியங்களைச் செய்ய வேண்டும். இவ்விதமாக மாதந்தோறும் உத்தமமான சிவராத்திரி விரதத்தைச் செய்து கொண்டு மஹா சிவராத்திரி வரும்வரையில் எல்லாச் சிவராத்திரிகளையும் அனுஷ்டித்து, மஹாசிவராத்திரி நாளன்று விதிப்படி உத்தியாபனம் செய்யவேண்டும் அவ்வாறு செய்யும்போது சிவராத்திரி விரத உத்தியாபனஞ் செய்த பிராமணர்களை வருவித்து அவர்களைக் கேட்டும் சாஸ்திரங்களை ஆராய்ந்தும் உத்தியாபனம் செய்ய வேண்டும் அது எப்படி யென்றால். அதையும் சொல்கிறேன் கேளுங்கள்.

பிராதக்காலத்தில் ஸ்நானம் செய்து நித்தியகர் மானுஷ்டானங்களை முடித்து, சிவாலயத்திலாவது வீட்டிலாவது புனிதமான இடத்தில் கவுரீ திலகம் என்ற பிரசித்தமான பெயருடைய அலங்கார மண்டபம் அமைத்து, அதில் மண்டிலஞ் செய்து; ஒன்பது கலசங்கள் வஸ்திர பலதக்ஷிணை சகிதமாக அந்தக் கவுரீ திலக மண்டபத்தில் வைத்து அதில் பார்வதி சமேதராகச் சிவபெருமானைப் பிரதிஷ்டை செய்து, சிவபெருமானுக்கு வலப்புறத்தில் தீபாராதனைகளை வைத்து இரவில் பூஜை செய்ய வேண்டும். இரவு முழுவதும் விழித்திருந்து பிரதியாமத்திலுஞ் சிவபூஜை செய்து கொண்டு நிருத்தகீதம் முதலியவற்றுடன் வேதயுக்தமான விதிப்படி பூஜித்து விடியற்காலத்தில் ஸ்நானம் முதலியவற்றில் முடித்துப் புனர்பூஜை முடித்து, ரிஷிகளுக்குச் சமானமான வேதபாரகரான பிராமணர்களுக்கு யக்ஞோப வீதம் (பூணூல்) வஸ்திரம், மிதியடி, பொன் மோதிரம், காது கடுக்கன் முதலியவற்றைத் தானஞ்செய்து, நெய், பாயாசம் முதலியவற்றால் ருத்திர மந்திர ஜபத்துடன் ஹோமஞ் செய்ய வேண்டும் முதலில் நவக்கிரகசாந்தி, நவக்கிரக ஹோமம் செய்ய வேண்டும், சிவமந்திரம் ஜெபித்துக் கொண்டே, யவையோடு எள்ளையும் சேர்த்து ஹோமம் செய்து பிறகு தேவி மந்திரத்தால் ஹோமஞ் செய்து பொன்னால் சிவபெருமானும் வெள்ளியால் பார்வதியுஞ் செய்து கட்டில் மெத்தை வைத்து ஏழுவகை தானியங்களை அதன் மேல் பரப்பி பசுவுடன் வேதியனுக்கு தானஞ் செய்ய வேண்டும், இவ்வாறு ஹோமத்தை முடித்து பிறகு ஆசாரியனை ஆடையாபரணம் மலர்கள் முதலியவற்றில் அலங்கரித்து விசேஷமாக பூஜிக்க வேண்டும். கொம்பிற் பொன்னும் குளம்புகளில் வெள்ளியும் வெண்கலப் பாத்திரமும் இரத்தினங்களால் வாலும் உடலில் வஸ்திரமும் முதுகில் தாமிரமும் மற்றுள்ள அல்ஙகாரங்களையும் செய்து, நன்றாகப் பால் கொடுக்கும் சாதுவான இளம் பசுவைக் கன்றுடன் ஆசாரியனுக்குக் கொடுக்க வேண்டும், பிராமணர்களுக்கு, நெய், பாயசம், பலகாரம் முதலியவற்றுடன் சிறப்பான அன்னமளிக்கவேண்டும். அநேகம் தானங்களைச் செய்யவேண்டும் பன்னிரண்டு வேதியருக்குக் குறையாமல் பிராமண போஜனம் செய்ய வேண்டும் அந்தப் பயனைச் சிவப்ரீதி செய்து ஸ்வாமி சங்கரா! நான் செய்த இந்த விரதத்தால் என்னிடத்தில் கிருபை கொண்டு என்னை உமக்கு உரியவனாக்கிக் கொள்ள வேண்டும் என் சக்திக்கு ஏற்ப இவ்விரதத்தைச் செய்தேன். அஞ்ஞானத்தாலாவது, ஞானத்தாலாவது நான் செய்தது பயன் அளிப்பதாகுக! என்று புஷ்பாஞ்சலி செய்து நமஸ்கரித்து மீண்டும் நான் பூஜிக்கையில் எழுந்தருள வேண்டும். உம்முடைய திருவடிகள் என் இதயத்திலிருந்து நீங்காமல் இருக்கவேண்டும்! என்று கூறவேண்டும்

இவ்வகையாகச் சிவராத்திரி விரத உத்தியாபனஞ் செய்தவன் இஷ்ட காமியங்களையெல்லாம் அடைவான். இந்த விரதத்தைத் தெரிந்து செய்தாலும் தெரியாமற் செய்தாலும் சிவபெருமான் மகிழ்ச்சியடைவார் இவ்விதமாக விரதஞ்செய்பவன் சிவலோகத்தில் சுகித்திருப்பான் மனோவாக்குக்காயங்களால் வந்த துன்பங்கள் இந்த விரதத்தால் அழியும் இவ்வாறு விரதத்தை முடித்துக் கொண்டு மறுநாள் அமாவாசையில் பிதுர்களுக்குப் பிண்டப் பிரதான தர்ப்பண முதலியன செய்து பிராமண போஜனம் செய்விக்கவேண்டும். அமாவாசையில் அன்னமளித்தால் அந்த பக்ஷம் பதினைந்து தினங்களிலும் அன்னமளித்த பயன் உண்டாகும் பக்தியுடையவனாய் வேதபாரகனாய், நற்குலத்தில் உதித்தவனாகவுள்ள பிராமணனுக்கும் யதிதிக்குமே அப்போது அன்னம் அளிக்கத்தகும் பிறகு பந்துக்களுடன் தானும் உணவு அருந்த வேண்டும் இதுவே சிவராத்திரி விரதஉத்தியாபன விதியாகும் நற்பயன் விரும்புவோர் இந்த விரதத்தைச் சகல முயற்சியுடனும் ஆஸ்ரயிக்க வேண்டும்; இதைக் கேட்டவர்களும் படித்தவர்களும் சொன்னவர்களும் சிவ அருள் பெறுவார்கள்.

72. வேடன் சிவராத்திரி பலன் பெற்ற கதை

நைமிசாரணிய வாசிகள் சூதமுனிவரை நோக்கி சிவஞானச் செல்வரே! தாங்கள் கூறிய சிவராத்திரி மகிமையைக் கேட்டுப் பரமானந்தம் அடைந்தோம். மேலும் இந்த விரதத்தின் பயனை விரிவாகச் சொல்லியருள வேண்டும் அஞ்ஞானத்தோடு இந்த விரதத்தை கடைப்பிடித்தால் ஏதாவது பயனுண்டாகுமா? என்று கேட்டார்கள். சூதமுனிவர் சொல்லத் தொடங்கினார். முனிவர்களே! சிவராத்திரி மகிமையில் ஒரு வேடனின் பாபங்களையெல்லாம் ஒழித்துள்ளதான பூர்விகமான கதை ஒன்று சொல்லப்பட்டிருக்கிறது அதைச் சொல்கிறேன் கேளுங்கள்.

ஒரு வனத்தில் மகாப்பலசாலியும் பெருங்குடும்பஸ்தனுமான வேடன் ஒருவன் இருந்தான் அவன் மிருகங்களை வேட்டையாடுவதோடு வழிப்பறி செய்தும் பிழைத்து வந்தான். அவன் இளம் பருவ முதல் ஒரு போதும் நற்கருமம் எதையுஞ் செய்யாதவனாக இருந்தான் அவன் பெயர் குருத்ருஹன். அவன் இவ்வாறிருக்க ஒரு சமயம் சுபகரமான சிவராத்திரி சம்பவித்தது. அது அந்தத் துராத்மாவுக்குத் தெரியாது அந்த மஹாசிவராத்திரி தினத்தன்று அந்த வேடனின் தந்தை தாய் மனைவி முதலியோர் அவனை நோக்கி, எந்த வகையிலாவது ஜீவஹிம்சை செய்து தங்களுக்கு உணவு  வகைகளை கொண்டு வந்து கொடுக்கும்படிக் கேட்டார்கள். உடனே வேடன் தன் வில்லை எடுத்துக்கொண்ட காட்டுக்குச் சென்று மிருகங்களைத் தேடியலைந்தான். ஒரு மிருகமும் அவன் பார்வையில் படவில்லை பறவைகளுங்கூடக் கிடைக்கவில்லை, தெய்வயோகம் அவனுக்கு அப்படியிருந்தது. மாலைப்பொழுதும் நெருங்கியது சூரியனும் அஸ்தமித்தது வேடன், தன் வீட்டில் தன் குழந்தைகளும் தாய் தந்தையரும் மனைவியும் ஆகாரமின்றி வருந்துவார்களே என்று எண்ணி வருந்தினான். எனவே எந்த வகையிலாவது சிறிதேனும் ஆகாரந்தேடிக்கொண்டு தான் வீட்டிக்குச் செல்ல வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு அருகிலிருந்த தடாகத்தில் சிறிது தண்ணீர் பருகி ஒரு பாத்திரத்தில் சிறிது ஜலங்கொண்டு தடாக கரையில் தழைத்திருந்த வில்வமரம் ஒன்றில் ஏறி மறைந்து கொண்டான். தாகத்தை தணித்துக் கொள்ள தடாகத்திற்கு ஏதேனும் மிருகங்கள் வரக்கூடும் அப்படி வந்தால் அவற்றைக் கொன்று விடலாம்! என்று எண்ணினான் மிருகங்கள் எப்போது வரும்? நான் எப்போது அவற்றை எய்வேன்? என்று வேடன் நினைத்து பசியுடன் வருந்தி இன்று நமக்கு இரையில்லையே உபவாசமிருக்க நேர்ந்ததே என்று சிந்தை நொந்து வருந்திக் கண் விழித்துக் கொண்டிருந்தான், முதல் ஜாமத்தில் பெருந்தாகத்தோடும் பயத்தோடும் பெண்மான் ஒன்று அங்கே வந்தது அதைக் கண்டதும் வேடன் மனம் மகிழ்ந்து அம்மை வில்லில் பூட்டினான். அவனது உடலசைவால் அவன் கையிலிருந்த பாத்திரத்திலிருந்து சிறிது ஜலமும் வில்வ மரத்திலிருந்து சிறு வில்வதளங்களும் அந்த மரத்தடியிலிருந்த ஒரு சிவலிங்கத்தின் மீது விழுந்தன. இதனாலேயே அந்த வேடன் அந்தச் சிவராத்திரியின் முதற்கால பூஜையைச் செய்தவனானான் அத்தகைய பூஜையின் பயனாக அவனது மாபாதகங்கள் நசித்தன.

இந்நிலையில் வேடன் அம்பை வில்லிற் பூட்டிய சத்தத்தைக் கேட்ட பெண்மான் ஐயோ! எங்கே போவேன்? என்ன செய்வேன்? இந்த வேடன் என்னை எப்படியும் பாணத்தால் கொன்று விடுவானே ஆயினும் ஓர் உபாயம் செய்ய வேண்டும் என்று யோசித்து வேடனை நோக்கி, வேடா நீ என்ன செய்ய நினைத்திருக்கிறாய்? என்று கேட்டது. அதற்கு அந்த வேடன், மானே! நான் ஒரு பெரிய குடும்பஸ்தன் என் குடும்பம் முழுவதும் ஆகார மில்லாமல் பெரிதுங் கஷ்டப்படுகிறது. ஆகையால் உன்னைக் கொன்று அவர்களுக்கும் எனக்கும் ஆகாரமாக்கப் போகிறேன் என்று கூறினான். அதற்கு பெண்மான், பாபாத்மாவாகிய அந்த வேடனை நோக்கி அப்படியானால் நான் தன்யையானேன் பயனற்ற இந்த உடலின் இறைச்சியால் உனக்கு உன் குடும்பத்திற்கும் சுகம் உண்டாகுமேயானால் பரோபகாரத்தால் உனக்கும் உண்டாகும் புண்ணியத்தை நானும் அடைவேன். இந்தப் புண்ணியப் பயனை பல வருஷங்கள் சொன்னாலும் சொல்லி முடியாது. பயனற்ற என் தேகத்திற்கும் சாபல்லியங் கிடைக்கும். ஆனால் எனக்குச் சில குட்டிகள் இருக்கின்றன. அவற்றைப் பாதுகாக்கும் படி என்னுடன் பிறந்த ஒரு பெண்மானை நியமித்து விட்டு, என் கணவனுக்கு அந்த மானையே மனைவியாக இருக்கவும் ஏற்பாடு செய்துவிட்டு மீண்டும் இங்கே வருகிறேன். என் இறைச்சியாலேயே நீங்கள் திருப்தியடைவதாயின் எனக்கு மிகவும் சுபமே என்று கூறியதும் அதைக்கேட்ட வேடன் அதைச்சிறிதும் நம்பாமல் ஆபத்துக் காலத்தில் யாவரும் சமயோசிதமாகப் பொய் பேசுதல் வழக்கம் என்றான். ஆனால் பெண்மானோ வனசார சத்தியத்தாலேயே சூரியன் முதலிய தேவர்கள் யாவரும் பிரகாசிக்கின்றார்களென்றும் சத்தியத்தாலேயே சமுத்திரம் அணையின்றிருக்கின்றனதென்றும் சத்தியத்தாலேயே இந்திரன், மழை பெய்விக்கிறான் என்றும் சத்தியத்தாலேயே யாவும் நிலைத்திருக்கின்றன என்றும் அறிவாயாக ஜீவஹிம்சை செய்கின்ற நீ என் சொல்லை பெய்யெனக் கொள்ள வேண்டாம் என்றது வேடன் அதையும் நம்பாமலிருக்க பெண்மான் மேலும் சொல்லியது.

வேடனே, நான் சொல்வதைக் கேள் நான் சொல்லியபடி மீண்டும் உன்னிடம் வந்து உனக்கு இரையாகத் தவறுவேனாகில் நான் பெரும் பாபத்தை அடைவேன். எப்படி என்றால் வேதவிக்கிரயம் செய்த பிராமணன் பெறும் பாபத்திலும் திரிகால சந்தியா வந்தனங்களைச் செய்யாதவன் போகும் பாபத்திலும் கணவன் கட்டளையை நிராகரித்த மனைவி அழுந்தும் பாபத்திலும் செய் நன்றி மறந்து தனக்கு நன்மை செய்தவனுக்குத் தீமை செய்தவன் அடையும் பாபத்திலும் சிவத்துரோகியும் விஷ்ணுத் துரோகியுமடையும் பாபத்திலும் குருத்துரோகி பெறும் பாபத்திலும் வேத விருத்தமான ஆசாரத்தில் நடப்பவன் அடையும் பாவத்திலும் போவேன் என்று பலவாறாகவும் கூறியது வேடன் அதன் வார்த்தைகளைகேட்டு நம்பிக்கையுடையவனாய்! மானே! நீ இனி உன்னிடத்திற்கு விரைவிற் சென்று திரும்பி வருக என்று விடை கொடுத்தான் பெண்மான் பெருங்களிப்படைந்து தாகந்தணிந்துக் கொண்டு தன்னிடத்தையடைந்தது அதுவரையில் முதல் ஜாம முற்றும் வேடனுக்கு நித்திரையின்றிச் சென்றது.

அவ்வாறிருக்கையில் முன் வந்து போன பெண்மான் தன் மூத்தாள் தாகவிடாயுடன் நீர் பருகச் சென்று நெடு நேர மட்டும் வராமையின் அதைத் தேடிக்கொண்டும் இரைச்சலிட்டுக் கொண்டும் அந்தக் குளக்கரையை அடைந்தது. வேடன் அதைக் கண்டு குணத்தொனி செய்தான். அப்பொழுதும் முன்போலவே சிறிது ஜலமும் சில வில்வபத்திரங்களும் அம்மரத்தடியிலிருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தன. அதனால் சர்வேஸ்வரனாகிய  சிவபெருமானுக்குச் சிவராத்திரி காலத்தில் வேடன் இரண்டாம் ஜாமபூஜை செய்தவனானான். அவ்வேடுவனை அவனது பாணகர் ஷணஞ் செய்யும் ஒலியால் உணர்ந்த இளையமான் ஓ வேடா! என்ன செய்யக்கருதினை? என்று வினவியது வேடன் முன் அதன் தமக்கைக்கு கூறியவாறே கூறினான். அது அவன் வார்த்தையைக் கேட்டுமகா சந்தோனுமடைந்து நான் மகாதன்யை! ஓ வனசர சிரேஷ்டா! அநித்தியமான இத்தேகம் பிறனுக்கு உபகாரமாகுமேயானால் என் தேகம் பலனடையும் ஆயினும் என் வீட்டில் இளம்பிராயமுடைய சில குட்டிகளிருக்கின்றன. அவற்றை என் கணவனுக்கு ஒப்புவித்து விட்டு நான் மீண்டும் சத்தியமாக வருவேன்! என்று கூறியது அதற்கு வேடன், நான் உன் வார்த்தையை நம்பமாட்டேன் தடையின்றி உன்னைக் கொல்லுவேன்! என்றான் ஆனால் பெண்மானே, வியாதனே, நான் திரும்பவும் உன்னிடம் வராவிட்டால் அசத்திய வார்த்தைகள் கூறினோர் தாம் அது காறும் செய்த புண்ணியங்களை இழந்து எவ்வகைய பாபத்திற்போவாரோ அவ்வகைய பாபத்திலும் அடிக்கடி பூமியைக் காலால் உதைப்பவர் உறும்பாபத்திலும் கற்புடைய மனைவியை விலகிப் பிரஷ்டையான ஓர் சோர ஸ்திரீயைப் புணர்ந்தவன் போகும் பாபத்திலும் வேதோக்தமான மார்க்கத்தை விடுத்துக் கல்பிதமான மார்க்கமாக நடப்பவர் அடையும் பாபத்திலும் விஷ்ணுபக்தி செய்து கொண்டு சிவ தூஷணஞ் செய்வோரும் சிவபக்தி செய்து கொண்டு விஷ்ணு தூஷணஞ் செய்வோரும் பெறும் பாபத்திலும் தாய் தந்தையர்களது வருஷாப்திகத்தை விடுத்தவன் செல்லும், பாபத்திலும் முதலில் இதவார்த்தைகள் கூறிப் பரிதாபமுண்டாக்கிப் பின்னர் வஞ்சிப்பவர் அடையும் பாபத்திலும் போகக்கடவேன் என்று கூறியது.

வேடுவன் அதன் வார்த்தைகளைக் கேட்டு அதனிடத்தும் நம்பிக்கை வைத்து ஓ மானே! நீ அப்படியே உன்னிடத்திற்குச் சென்று அதிசீக்கிரத்தில் வருக! என்று விடுவித்தான். அந்த மான் மகிழ்ச்சியுற்றுத் தண்ணீர் பருகித் தன்னிடத்தையடைந்தது அதுவரையில் அவ்வேடுவனுக்கு இரண்டாம் ஜாமமுற்றும் நித்திரையன்றி நீங்கியது. இதற்குள் அவ்விரு பெண்மான்களுக்கும் கணவனாயுள்ள ஆண்மான் அவ்விரண்டு மான்களையும் தேடிக் கொண்டு அந்த நீர்த்துறையை யடைந்தது. பருத்துயர்ந்திருக்கும் அவ்வான் மானை வேடுவன் கண்டு பெருங்களிப்படைந்து ஆ! ஆ! மிக்க மாமிசமுடைய தாயிருத்தலின் நமக்குத் திருப்தியான ஆகாரமாகுமென்று கருதிவில்லை டங்காரம் செய்து அதை எய்ய யத்தனித்தான். அப்போது முன்போலவே அவன் வசமிருந்த ஜல பாத்திரத்திலிருந்து சிறிது ஜலமும் மரத்திலிருந்து சில வில்வதளங்களும் அம்மரத்தடியிலிருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தன. அதனால் அவன் சிவராத்திரி காலத்தில் மூன்றாம் ஜாம பூஜைசெய்தவனானான் சவுனகாதி முனிவர்களே! பக்தியின்றி சம்பவித்த செயல்களுக்கும் களிகூர்ந்து பூஜை செய்ததாகக் கருதிய சிவபெருமானுடைய கருணையை என்னவென்று சொல்லக் கூடும் மேலே கதையைக் கேளுங்கள்.

வேடுவனது நாணெறிந்த ஒலியைக் கேட்ட ஆண்மான் அவ்வேடுவனை நோக்கி நீ என்ன செய்யக் கருதினாய்? என்று வினவியது வேடன் முன்போலவே கூறினான். அதைக் கேட்ட ஆண்மான் சந்தோஷித்து நான் இப்பொழுது தான் தன்யனானேன் பூரித்திருக்கும் என் தேக மாமிசத்தினால் உன்னைப் போன்றவர்கள் திருப்தியடைவது பற்றிப் பெரும் பிரயோசனமடைவேன். ஒருவன் தன் தேகத்தைப் பரமார்த்தமாகப் பிறர்க்கு உபகாரஞ் செய்யாவிட்டால் அவன் பெற்றுள்ளயாவும் வீணாகி விடும், சமர்த்தனாயிருந்தும் பிறர்க்கு உதவாதவனின் சவுகரியம் பயன்பெறாது. ஆதலின், என் உடலால் உனக்கும் உன் குடும்பத்திற்குந் தடையின்றி திருப்தியுண்டாகும். ஆயினும் எனக்குச் சில குட்டிகள் இருப்பதால் அவற்றை என் பேடுகளிடம் ஒப்பித்து விட்டு, அவைகட்கு நல்ல வார்த்தைகளால் புத்திகூறி நிச்சயமாக வந்து உனக்கு இரையாகிறேன் என்று கூறியது. ஆனால் வேடுவன் அதன் வார்த்தையைக் கேட்டு ஓ மிருகமே! இதுகாறும் இங்கு வந்த மிருகங்கள் யாவும் உன்னைப்போலவே இதவார்த்தைகள் சொல்லி என்னை வஞ்சித்து விட்டுப் போயின ஒன்றேனும் இதுகாறும் வரவில்லை நீயும் அப்படியே ஆபத்து வேளையில் அபத்தமுரைத்துப் போய் விட்டால் எனக்கும் என் குடும்பத்திற்கும் எவ்வாறு ஜீவனம் நடக்கும்? என்றான்

ஆண்மான் அவன் வார்த்தைகளைக் கேட்டு ஓ வனசரா என்னிடத்தில் பொய் என்பதே கிடையாது சத்தியத்தினாலேயே சராசரப் பிரமாண்ட முழுவதும் விளங்குகின்றது. பொய் பேசுகிறவன் பூர்வத்திற் செய்த புண்ணியம் முழுவதையும் க்ஷணகாலத்திலே நாசப்படுத்துகிறான் இப்பொழுது நீ நம்பாத பக்ஷத்தில் நான் ஒரு பிரதிக்கினைச் செய்கிறேன். அதாவது சந்தியாவந்தன காலத்திலும் இரதிகேளிக்கையிலும் சிவராத்திரி காலத்திலும் போஜனஞ் செய்தவன் பெறும் பாபத்திலும், பொய்சாட்சி சொல்லுவோர் அடையும் பாபத்திலும், வைத்து வைத்திருக்கும் பொருளை அபகரித்தவன் அடையும் பாபத்திலும் சந்தியாவந்தனத்தை விடுத்த பிராமணன் பெறும் பாபத்திலும் லலாடசூனியமாயுள்ளவன் அடையும் பாபத்திலும் பிறர்க்கு உதவி செய்யாத மகா சமர்த்தனாயுள்ளவன் பெறும் பாபத்திலும் பகற்புணர்ச்சி செய்தவன் பெறும் பாபத்திலும் பர்வகாலத்திலும் விரதகாலத்திலும் புசிக்கத்தகாத பதார்த்தங்களைப் புசித்தவன் பெறும் பாபத்திலும் நான் வாராத பக்ஷத்திற் போகக் கடவேன்! என்று கூறியது. அதனால் வேடன் வியாதன் அதன் வார்த்தையின் நம்பிக்கையுடையவனாகி போய் வருக! என்று விடுப்பித்தான். ஆண்மான் அகமகிழ்ச்சியோடு நீர் பருகித் தன் இடத்தை அடைந்தது. அப்பொழுது அம்மூன்றும் சந்தித்து நடந்த விருத்தாந்தங்களைச் சொல்லிக் கொண்டவைகளாய் சத்தியபாசத்தாற் கட்டப்பட்டவைகளாய், அவசியம் அவ்வேடுவனிடம் போக வேண்டுமென நிச்சயித்துக் கொண்டு, குட்டிகளை நல்ல வார்த்தைகளால் இதமாக அவ்விடத்திலேயே விட்டுவிட்டுப் புறப்பட்டன.

அப்பொழுது அவற்றுள் மூத்தப் பெண்மான் தன் கணவனை நோக்கி இக்குட்டிகள் அநாதரவாக இருப்பதால் இவை எவ்வாறு ஜீவிக்கும்? நான் முதலில் வருகிறேன் எனப் பிரதிக்கினை செய்து வந்தமையால் நான் மட்டுமே போக வேண்டும். நீங்கள் இங்கே இருக்க வேண்டும் என்று கூறியது அதைக் கேட்ட இளைய பெண்மான் நான் உங்களிருவருக்கும் பணிவிடை செய்ய வேண்டியவளாயிருக்கிறேன் ஆதலின் நான் இவனுக்கிரையாகப் போகிறேன். நீங்கள் இங்கேயே இருக்கலாம்! என்றது அப்போது ஆண்மான் அவ்விரண்டின் வார்த்தைகளையுங் கேட்டு நான் ஒருவனே அவனிடம் போகிறேன் நீங்கள் இங்கேயே இருக்கலாம்! என்றது. ஆனால் பெண்மான்கள் ஐயோ! நீ இறந்தால் நாங்கள் விதவைத் தன்மையடைந்து ஜீவிப்பதைக் காட்டிலும் கஷ்டம் வேறுண்டா? என்று கூறி, தங்கள் குட்டிகளைத் தக்கபடியே சில மான்களிடம் ஒப்படைத்து விட்டு மூன்றும் ஒன்றுகூடி அவ்வேடுவன் இருக்குமிடத்திற்கு வந்தன. வேடுவனும் அம்மான்கள் மூன்றும் எப்பொழுது வருமோவென்னும் எண்ணத்துடன் வழி பார்த்துக் கொண்டிருந்தான். சத்தியப் பாசத்தாற் கட்டப்பட்டு வருகின்ற அந்த மூன்று மான்களையுங் கண்ட வேடன் சந்தோஷப்பட்டு ஆ, இம் மிருகங்கள் நம்மிடத்தே சொல்லிப் போனதுபோல மீண்டும் வந்தன என்று நினைத்துத் தன் வில்லை டங்காரம் செய்தான். அவ்வாறு டங்காரஞ் செய்கையில் அவன் கையிலிருந்த ஜலபாத்திரங்களும் அம்மரத்தடியிலிருந்த சிவலிங்கத்தின் மேல் விழுந்தன. அதனால் அவன் சிவராத்திரிகாலத்தில் நான்காம் ஜாம பூஜை செய்தவனானான். அவ்வேடுவனுடைய பாபங்கள் அப்பொழுதே அவனை விட்டொழிந்தன. இதற்குள் அம்மிருகங்கள் மூன்றும் ஓ வனசரா எங்கள் மாமிசங்களை விரைவில் உனக்கு உணவாக்கிக் கொண்டு எங்களைக் கிருதார்த்தர்களாக்க வேண்டும்! என்று கூறின.

வேடன் அவற்றின் வார்த்தைகளால் மிக்க வியப்படைந்து தான் அன்றைய தினம் அறியாமற் செய்த சிவபூஜாபலத்தினால் திவ்விய ஞானமடைந்து ஆஹா! அறிவுக்குறையுள்ள இம்மிருகங்கள் தங்கள் தேகத்தால் அன்னியருக்கு உதவி செய்து எவ்வளவு தன்யமாகின்றன? நான் மனுஷ ஜன்மம் எடுத்து என்ன புண்ணியம் சம்பாதித்தேன்? பிறரைத் துன்புறுத்தி என் உடலையும் என் குடும்பத்தையும் போஷித்தேன் பிறரை வருத்தியே உயிர் வாழ்ந்த எனக்கு என்ன கதி கிடைக்குமோ? நான் எவ்வெவ் கஷ்டங்களை அனுபவிபபேனோ? இந்த உடலால் பலவிதமான பாபங்களைச் சம்பாதித்தேனல்லவா? இதுகாறுந் தீவினைகளையே செய்து இப்பொழுது துக்கிக்கிறேன். என் வாழ்க்கை நிந்திக்கத்தக்கது என்று தனக்குள் தானே சொல்லிக் கொண்டு அவற்றை எப்படியும் தன் வில்லிலுள்ள அம்பால் இனி கொல்லப்படாதென்னங் கருத்துடன் உடனே வில்லினின்று எடுத்து விட்டு ஓ உத்தமமான மிருகங்களே! நீங்கள் பரோபகாரம் செய்து வந்தமையால் தன்யர்களாக இருக்கிறீர்கள்! உங்களைக் கொல்லமாட்டேன் இனி உங்கள் வாசஸ்தானத்திற்குத் திரும்பிப் போங்கள்! என்று கூறுகையில், கடூரமான முடையவனாயிருந்து திவ்ய ஞானத்தையடைந்த அவ்வேடனாற் பூஜிக்கப்பட்ட சிவபெருமான் அவனது பூஜைக்கும் மனம் பட்ட ஐந்து திருமுகங்களோடும் தமது திவ்ய திருவுருவ தரிசனங் கொடுத்து, தயாசமுத்திரமான சிவபெருமான் என்ன வரம் வேண்டுமோ அதைக் கேட்டுக் கொள் உன் விஷயத்தில் தயையுடையவனாக இருக்கிறேன் என்றார். உடனே வியாதன் திவ்விய ஞானமுடைய ஜீவன் முக்தனாய் சர்வேசுவரனுடைய திருவடிகளில் சாஷ்டாங்காமாகப் பணிந்து எல்லாப் பாபங்களும் என்னாற் செய்யப்பட்டுள்ளன. அவற்றை மன்னித்து எளியேனை அனுக்கிரகிக்க வேண்டும் என்று பிரார்த்தித்தான். மகாதேவனாகிய சிவபெருமான் அவனுக்கு குகன் என்னும் பெயரளித்து உன் மனத்திற் கருதிய சுகபோகங்களை அடைவாய் நீயொரு இராஜ தானியையுங் காக்க வல்லவனாவாய், உன் வமிசம் விருத்தியாகும் தேவர்களாலேயும் துதி செய்யத்தக்க திவ்யமான கீர்த்தியை அடைவாய். அயோத்தி மன்னனாகிய தசரதன் குமாரனாக விஷ்ணுவே இராம அவதாரஞ் செய்யும் போது உன்னிடத்தில் வந்து உன்னாற் பூஜிக்கப்பட்டுச் செல்லுவான். தேவர்கட்கும் முனிவர்கட்குங் கிடைத்தற்குத் துர்லபமான செய்யும் விரதத்தை விகித்து மகாபலவான்களாக விளங்குவார்கள் என்று வரங்கொடுத்தருளினார்.

இவ்வாறிருக்கையில் மான்களின் குட்டிகளும் தங்கள் தாய் தந்தை பலருக்கு உண்டாகுங் கதியே தங்களுக்குஞ் சம்பவிக்கட்டுமென்று நினைத்து உடனே அவ்விடம் வந்து சேர்ந்தன. அதனால் அந்த மான்களுக்குங் குட்டிகளுக்குஞ் சிவதரிசனங் கிடைத்தது. சிவதரிசனத்தால் அம்மிருகங்கள் சமுசார விருப்பத்தையும் மிருக தேகத்தையும் ஒழித்துத் திவ்விய தேகம் பெற்று அங்கு வந்திறங்கிய விமானத்தில் ஏறிச்சுவர்க்க லோகத்தை அடைந்தன. சர்வேசுவரனாகிய சிவபெருமான் அவ்விடத்தில் அற்புதாசலத்தில் வியாதனாகிய வேடுவனால் பூஜிக்கப் பட்டமையால் வியாதேசுவரர் என்னும் பெயரையடைந்து எழுந்தருளியிருக்கிறார் அக்குகவேடனும் அதுமுதல் அகண்ட ஐசுவரியமடைந்து இராமமூர்த்தியைத் தரிசித்துப் பல காலங் கழித்து ஆயுள் முடிவிற் சிவசாயுச்சியத்தையடைந்தான். ஆகையால் அறியாமையாலேயே, சிவராத்திரி விரதத்தை அனுசரிப்பவர்கள்  சிவசாயுச்சியத்தை அடைவதானால் ஞானவான்களாய் பக்தியோடு அவ்விரதத்தை அனுசரித்தவர்கள் சிவரூபத்தை அடைவார்கள் என்பதைச் சொல்ல வேண்டிய அவசியமேயில்லை எல்லாச்சாஸ்திரங்களும் தருமங்களும் விரதங்களும், தீர்த்த யாத்திரைகளும், தானங்களும் பலன்களும் சிவராத்திரி விரதத்துடன் விசாரிக்கையிற் சமானமாகமாட்டா, ஆகவே மிக்க சுபகரமான இச்சிவராத்திரி விரதத்தை இதத்தை விரும்புவோராகிய நீங்கள் ஆசரிக்க வேண்டும் இந்த விஷயத்தைப்பற்றி இதுகாறுஞ் சொல்லிய தோஷ பாபத்தை ஒழிக்கத் தக்க வேறொரு சரிதமும் உங்கட்குச் சொல்லுகிறேன்.

73. வேதநிதியின் கதை

சவுனகாதி முனிவர்களே அவந்தி நகரில் ஒரு தீக்ஷிதர் இருந்தார். அவர் உயர் குலப்பிறப்பும் வைதிக ஆசாரமும் மங்களகரமான செயல்களும் வேதசாஸ்திரங்களில் பூரண ஞானமும் கல்வி கேள்வியிலும் போதிப்பதிலும் வல்லமையுடையவர். அவருக்கு நற்குல நற்குணப்பண்பும் கற்பும் கொண்ட மனைவி ஒருத்தியிருந்தாள் அவர்களுக்கு ஸுநிதி வேதநிதி என்ற இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். ஸுநிதி தாய் தந்தையருக்குப் பணிவிடை செய்வதில் மிகவும் விருப்பமுடையவனாக இருந்தான். வேதநிதி வேதங்களில் வல்லவனாக இருந்தும் ஒரு வேசியின் வீட்டில் வாழ்ந்து அங்கேயே ஸ்நான போஜனாதிகளைச் செய்து கொண்டிருந்தான் இதையறிந்த அவனது தாய் தந்தையர்கள் அவனைக் கண்டித்தார்கள். அவன் துராத்மாவாக இருந்ததால் தன் இயற்கையை விடவில்லை.

இவ்வாறு இருக்கும்போது அந்த நகரத்து மன்னனுக்குத் தீக்ஷிதர் தம் மீது தயை உண்டாகி விலையுயர்ந்த இரத்தினமயமான மோதிரம் ஒன்றை அவருக்குப் பரிசாக அளித்தான். தீக்ஷிதர் அந்த மோதிரத்தைத் தன் வீட்டுக்குக் கொண்டுபோய் தன் தீய மகனுக்குத் தெரியாமல் மறைத்து வைக்க வேண்டுமென்று தன் மனைவியிடம் கொடுத்தார். அவ்வம்மையும் அவ்வாறே மறைத்து வைத்தாள். அதையறிந்த குமாரன் வேதநிதி அதைத் திருடிச் சென்று, அன்றிரவே தன் ஆசைக்குகந்த தாசியிடம் கொடுத்து விட்டான். அந்த வேசையோ, அதையணிந்து கொண்டு அரசனது அவையில் நடனமாடச் சென்றாள். தீக்ஷிதருக்கு அளித்த மோதிரம், வேசையின் கரத்தில் ஜொலிப்பதை அரசன் கண்டதும் இது நாம் தீக்ஷிதருக்குக் கொடுத்தது ஆயிற்றே! என்று உணர்ந்து அந்த நாட்டியக்காரியை நோக்கி, பெண்ணே! விலை மதிப்பு மிகவுமுடைய இந்த மோதிரம் உனக்கு யாரால் கிடைத்தது? என்று கேட்டான். அவள் உண்மையைச் சொல்லவில்லை அரசன் அவளைப் பயமுறுத்திக் கேட்ட பிறகு அவள் கடைசியாக அந்த மோதிரத்தை வேதநிதியே தனக்குக் கொடுத்தான் என்ற உண்மையைச் சொன்னாள். அரசன் பலாத்காரமாக அந்த மோதிரத்தை வாங்கித் தன்னிடம் வைத்துக் கொண்டு மறுநாள் பொழுது விடிந்ததும் தீக்ஷிதரை வரவழைத்து நான் உமக்குக் கொடுத்த ஆபரணத்தை என்னிடம் சிறிது நேரம் கொடுங்கள் மீண்டும் அதைப் பெற்றுக்கொள்ளலாம் என்று கேட்டான். தீக்ஷிதர் தன் வீட்டுக்குச் சென்றார் மனைவியை அழைத்து நான் உன்னிடம் கொடுத்து பத்திரப்படுத்தி வைக்கச் சொன்ன மோதிரத்தை எடுத்துத் தா! என்று கேட்டார். அவள் அதை வைத்த இடத்தில் தேடிக் காணாததால் திரும்பி வந்து தன் கணவனிடம் அது காணவில்லையே என்றாள். தீக்ஷிதர் துக்கத்துடன் அரசனிடம் சென்று அரசே! அந்த மோதிரம் அகப்படவில்லை அது எவ்வாறாயிற்றோ அறியேன் என்றார்.

வேந்தன் நடந்தவற்றைத் தான் யூகித்தபடி வெளியிட தீக்ஷிதர் தம் வீட்டிற்கு வந்து மனைவியைக் கண்டித்து உனக்கு இவ்வளவு அஜாக்கிரதையா? என்று கோபித்தார். பிறகு தீக்ஷிதரும் அவர் மனைவியும் வேதநிதியை அழைத்து, இனி நீ இந்த வீட்டில் இருக்கக் கூடாது. உன்னால் பிரயோசனமுமில்லை. நீ குலதூஷகன்! என்று அவனைத் தூஷித்துத் துரத்திவிட்டார்கள். வேதநிதி பல நாட்கள் வெளியில் அன்ன ஆகாரம் ஒழுங்காகக் கிடைக்காமல் வருந்தித் தன் காதற்கிழத்தியிடம் சென்றான். அவளும் அவனால் தனக்குப் பொருள் எதுவும் கிடைக்காது என்று உணர்ந்து துரத்தி விட்டாள் அவன் ஆதரவற்றவனாகி விட்டான். அன்றையத் தினம் உலகம் முழுவதும் கொண்டாடத்தக்கச் சிறந்த சிவராத்திரி விரதத் தினமாக இருந்தது. அன்று அந்நகர மக்கள் சிலர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து விசேஷபூஜையைச் செய்யவிரும்பிப் பலவகையான நிவேதனப் பொருட்களுடன் ஒருசிவலாயத்திற்குச் சென்று கொண்டிருந்தார்கள். அவர்களைக்கண்டான் வேதநிதி நாம் இவர்களுடன் சென்று எவ்வாறாவது இவர்களை வசப்படுத்தி ஆகாரம் வாங்கிப் புசிக்கலாம், என்ற நினைத்து அவர்களைப் பின் தொடர்ந்து சென்றான். சிவாலயத்தில் பெரும் பசியுடனிருந்து அவர்கள் செய்யும் பூஜையைப் பார்த்துக் கொண்டு உணவருந்த வேண்டும் என்ற அவாவுடையவனாக இருந்தான். அவர்கள் எப்போது போவார்கள்? எப்போது அன்னம் புசிப்பது? எவ்வாறு அந்த அன்னத்தைப் பெறுவோம்? என்று எண்ணியபடி தன் விருப்பம் கைகூட வேண்டுமென்று கண்விழித்துக் கொண்டிருந்தான். சிவபூஜை செய்தவர்கள் யாவரும் முதல் ஜாம பூஜை முடித்து நிருத்தம் கீதம் முதலியவற்றை இயற்றி விட்டுத் தங்கள் இருப்பிடங்களை அடைந்தார்கள் சிலர் அங்கேயே தூங்கினார்கள். அங்கிருப்பவர்கள் தூங்குவதைக் கண்ட வேதநிதி சிவபெருமானுக்கு நிவேதித்து அங்கு வைத்திருந்த பக்குவான்னத்தை, இச்சமயத்திலே தான் கொண்டு போகவேண்டும் என்று நினைத்து சிவலிங்கத்தை நோக்கி மெதுவாக நடந்தான். அங்கிருந்த தீபங்கள் பிரகாசங்குறைவாக இருந்தன. எனவே நிவேதனப் பொருள்கள் அவன் பார்வைக்குப் புலனாகவில்லை. அவன் அவற்றைக் களவு செய்வதற்காக தன் உத்தரீயத்தில் சிறிது கிழித்துத்திரித்துப் போட்டுத் தீபத்தைத் தூண்டினான். அவன் தீபம் ஏற்றியதால் சிவ சன்னிதியில் இருந்த இருள் முழுவதும் விலகியது. அவன் தனக்கு வேண்டிய ஆகாரங்களை எடுத்துக் கொண்டு வெளியேபுறப்பட்டான், அப்படிப் போகும் போது அங்குத் தூக்கி கொண்டிருந்த கோயில் சேவகர் காலை மிதித்து விட்டான். அதனால் தூங்கிக்கொண்டிருந்த சிலர் கண் விழித்து திருடன் திருடன்! என்று கூச்சலிட்டார்கள். வேதநிதி பயந்து ஓடினான் சிலர் அவனைப் பின் தொடர்ந்து கூச்சலிட்டு செல்லவே இராஜ சேவர்கள் அக்கூக்குரலைக் கேட்டு திருடனைப் பின் தொடர்ந்து பிடிக்கச் சென்றார்கள். வேதநிதி அவர்களிடம் அகப்படாததால் அவர்கள் அவன் மீது பாணப் பிரயோகம் செய்தார்கள். அந்தப் பாணங்களில் ஒன்று வேதநிதியின் உடலிற்பட்டு உருவிச் சென்றதால், அவன் பூமியில் விழுந்து மடிந்தான்.

அந்த வேதியன் அஞ்ஞானத்தாலேயே சிவராத்திரி விரதமும் ஜாகரணமும் இருந்தவனானான், சர்வதயாளரான சிவபெருமான் வேதநிதியை விரதப் பூர்த்தி செய்தவனாகவே அங்கீகரித்தார். அப்போது சிலதூதர்களும் யமதூதர்களும் வந்தார்கள். அவர்கள் இரு தரத்தாரும் இவனைக் கொண்டு போகவேண்டியவர்கள் நாங்கள் தான் என்று வாக்குவாதம் செய்தார்கள். எமதூதர்கள் சிவகணத்தினரை நோக்கி இவன் தான் கொடிய பாபியாயிற்றே! அணுவளவும் புண்ணியமே செய்யாதவனாயிற்றே? இவனுக்காக நீங்கள் ஏன் வந்தீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு சிவகணங்கள் இவன் பாபியேயானாலும் சிவராத்திரி விரதம் இருந்து ஜாகரணம் செய்ததால் புனிதமாயினன் என்றார்கள். எமதூதர்கள் யமதர்மராஜனிடம் சென்று அவர்கள் கூறியதைச் சொல்ல யமன் உண்மை! அவன் பாபங்கள் சிவராத்திரி விரதமிருந்ததால் ஒழிந்தன! என்று சொல்லி வேத நிதியைப் பார்த்து, நீ பாக்கியவனானாகுக என்று வாழ்த்தினார். அதனால் வேதநிதி தன் மறுபிறவியில் கலிங்கதேசத்து மன்னனாகப் பிறந்து சிவபூஜை செய்வதையே பக்தியாகக் கொண்டு சிவராத்திரி விரதத்தை எக்காலமும் ஆதரித்துதன் ராஜ்ஜியம் முழுமையும் சிவாலயப் பிரதிஷ்டைகளும் சிவாலய நித்திய நைமித்திகப் பிராயச்சித்தாதிகளும் செய்வித்து மோஷம் அடைந்தான்.

சிறிதும் பக்தியில்லாமலேயே சிவராத்திரி விரதத்தால் இத்தகைய இஷ்ட போகங்களையும் மோக்ஷத்தையும் அஞ்ஞானிகளே பெறமுடிந்தது என்றால், இந்த விரதத்தைப் பக்தியோடு அனுசரித்தவர்கள் சிறந்த முக்தியை அடைவார்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? திருடுவதற்காகவே சிவாலயத்துத் தீபத்தை வேதநிதி தூண்டியதால் இத்தகைய பயன் கிடைக்குமானால் ஞானத்தோடு சிவாலயத்தில் தீபம் வைத்தவர்கள் சுபமான மோக்ஷத்தை அடையமாட்டார்களா? சிவபெருமானை விட ஒருவன் தயாளனாகவும் தூய்மையாக்குவோனாகவும் இல்லை முனிவர்களே மோக்ஷத்தைக் கொடுக்கத்தக்கது இந்தச் சிவராத்திரி விரதமே! சிவபெருமான் ஒருவனே பரத்துவப் பொருள் அந்தச் சர்வேஸ்வரனே முக்தி ஸ்தானமாக விளங்குபவன் இந்தச் சிவராத்திரிக்குச் சமமானதும் இதைவிடச் சிறந்ததும் ஒரு விரதமும் இல்லை.

74. முக்தி இலக்கணமும் சிவரூபமும்

நைமிசாரணிய முனிவர்கள் சூத புராணிகரை நோக்கி, ஞான வித்தகரே! முக்தி என்று நீங்கள் சொன்னீர்களே? அது எத்தகையது என்பதை எங்களுக்கு விவரமாகச் சொல்ல வேண்டும் என்று கேட்க சூதமுனிவர் சொல்லத் தொடங்கினார். முனிவர்களே! நீங்கள் கேட்ட முக்தி என்பது சாரூப்பம் (இறைவன் உருப்பெறும் பேறு) சாலோக்கியம்(இறைவன் உலகம் அடையும் பேறு) சாந்நித்யம் (இறைவன்  அருகில் இருக்கும் பேறு) சாயுஜ்ஜியம் (இறைவனோடு இரண்டறக் கலத்தல்) என்று நான்கு வகைப்படும். அந்த முக்தி இந்த விரதத்தினாலேயே கிடைக்கும் அம்முக்தியை யாராலடைய வேண்டுமெனின் உலகங்களையெல்லாம் படைத்து இரட்சித்துச் சங்கரிக்கச் செய்யுஞ் சிவபெருமானாலேயே ஆகும் என்று புத்திமான்களால் சாகா சந்திர நியாயமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அத்தகைய சிவ பரம்பொருளை விஷ்ணு பிருமா, சனத்குமாரர், நாரதர், மார்க்கண்டேயர், சுகர், பிரமபுத்திரர் முதலிய யாவரும் அறியார் ஆனால் வேதங்கள் மட்டும் அபரோக்ஷமாகச் சச்சிதானந்த ஸ்வரூபம் சிவபெருமான் என்று சொல்லுகின்றன. நிர்க்குணமும் மாயாரஹிதமும், நிரஞ்சனமும் நித்தியமும் செம்மை, பசுமை, வெண்மை, கருமை, முதலிய நிறமற்றதும் மனோவாக்குக் காயங்களுக்கு அதீதப்பட்டதுமாக உள்ளது சிவபரம் பொருள் அந்தப் பொருள் ஆகாயத்தைப் போலச் சர்வ மூர்த்தத்திலும் வியாபித்துள்ளது அது ஸ்தூல சூக்ஷ்மங்களாலாகாது; சுகதுக்கங்களுக்கு அப்பாற்பட்டது. மாற்சரியமற்றது நிர்விகாரமானது இகலோகத்திலும் பரலோகத்திலும் அந்தப் பரம்பொருளை அர்ச்சனை செய்வதாலேயே அதன் பிராப்தியாகிய முக்தி கைகூடும். ஆகையால் சர்வேஸ்வரனுடைய சேவை முக்திப் பிராப்தத்திற்காகவே செய்யத் தக்கது நீங்கள் கேட்ட விஷயத்தைச் சொன்னேன். இதைக் கேட்டவர்கள் சகல பாபங்களிலிருந்தும் நீங்குவர் என்பதில் ஐயமில்லை. அதை விஸ்தீரணமாகச் சொல்லப் புகுந்தால் ஆதிசேஷனாலும் சொல்லி முடியாது. இவ்வாறு சூதபுராணிகர் கூறினார்.

75. சிவபெருமானின் நித்யத்துவம்

சவுனகாதி முனிவர்கள், சூத புராணிகரை நோக்கி மகாத்மாவே! சிவபெருமான் என்பது யார்? உருத்திரன் என்பவர் யாவர்? இவர்களில் இவ்வுலகங்களுக்கெல்லாம் கர்த்தாவாக இருப்பவர் யார்? நிர்க்குண ஸ்வரூபியானவர் யார்? நிர்க்குண ஸ்வரூபியாக இருந்தும் பஞ்சக்கிருத்தியம் (ஐந்தொழில்) காரணமாக குணசொரூபியாக உலகச் செயல்களைச் செய்பவர் யார்? இந்த விஷயத்தில் எங்களுக்குள்ள சந்தேகத்தை நீங்கள் விளக்கியருள வேண்டும் என்று கேட்டார்கள் சூத புராணிகர் சொல்லத் தொடங்கினார்.

ஞான சீலர்களே நிர்க்குணமாயுள்ள எந்தப் பரமாத்மாவினால் இந்த உலகங்கள் தோன்றினவோ அந்தப் பரமாத்மாவே சிவபெருமான் என்று உபநிஷதங்கள் கூறுகின்றன. அத்தகைய பரமாத்மாவின் மகிழ்ச்சியினால் உண்டாகிய ஜலமானது சராசரப் பிரபஞ்சம் முழுவதும் வியாப்தமாகையில் விஷ்ணு தவஞ்செய்து இளைத்து, அந்த ஜலத்திலேயே நித்திரை செய்தார். அந்த ஜலசயன முதல் புருஷனுக்கு நாராயணன் என்றப் பெயர் உண்டாயிற்று பிரகிருதிக்கும் நாராயணி எனப் பெயர் வந்தது. அந்த விஷ்ணுயோக நித்திரையில் இருக்கும் போது அவருடைய உந்தி கமலத்திலிருந்து பிரமன் தோன்றினான். அவன் பலகாலம் தவம் செய்து தனக்குக் காரண பூதனான விஷ்ணுவைக் கண்டான். அந்த விஷ்ணு வைகுண்டப் பதவியிலிருந்து மஹாபிரளயத்தில் சிவபெருமானிடத்தில் முக்தி நிலையடைவர். இத்தகைய விஷ்ணுவும் பிரமனும் ஜகத் கர்த்தாக்களாக விவாதம் செய்த போது பரமேஸ்வரன் அவர்களுக்குக் காட்டிய உருவமே மகா தேவவுரு. இந்த மஹாதேவனுடைய கபோலத்தால் தோன்றிய வடிவமே உருத்திரன் அந்த மூர்த்தமே தியான யோக்கியமான சிவ சொரூபம் மற்ற விஷ்ணு வாதி தேவர்கள். பிரகிருதி சம்பந்தமானவர்கள். ஆகையால் காலாநுக்கிரகமாக நாசவருமாவர் உருத்திரன் அப்படி நாசமடையாமல் சிவபெருமானிடத்தில் ஐக்கியமாவான்! பிரமாதி தேவர்கள் மகரிஷிகள் அனைவரும் உருத்திரனைத் தோத்திரஞ் செய்ய வேண்டியவர்களே யாவார்கள்.

பிருமா விஷ்ணு முதலானவர்களை பக்தி செய்பவர்கள் அவர்களிடத்தில் ஐக்கியமடைய அத்தேவர்கள் காலக்கிரமத்தில் முக்திபெறும்போது அவர்களோடு முக்தியடைவார்கள் உருத்திரபக்தி செய்பவர்கள்: இதரர் அபேøக்ஷயில்லாமலேயே தக்ஷணம் சிவசாயுஜயம் பெறுவார்கள் என்று க்ஷரம்-பிரதானம் முதலிய வேதங்கள் கூறுகின்றன. ஹிரண்ய கர்ப்ப பிபீலிகாதி வரையில் காணப்படும் உலகத்தில் உள்ளவர்களுக்கு அஞ்ஞானம் பலவகைப்படும். விஞ்ஞானமோ நித்ய சுத்த புத்தி முக்தி ஜீவசுவபாவத்தால் பல திறப்பட்டதல்ல ஆனால் அகண்ட ஏகரஸமாக ஒன்றியாக இருக்கும் இவை யாவும் சிவஸ்வரூபமே! இதை விசாரிக்க வேண்டியதில்லை, சர்வேஸ்வரனுக்குச் சதாசிவன் என்னும் பெயர் எவ்வாறு உண்டாயிற்று என்று தெரிந்து கொள்ளுங்கள். சிவபெருமானே சிருஷ்டிக்கு முற்பட்டவர். வயத்துக்குப் பிற்காலத்திலும் இருப்பவர் சிருஷ்டிக்குப் பிற்காலத்திலும் இருப்பவர் ஆகையால் சதாசிவம் என்னும் பெயர் நிர்க்குணராகிய சிவபெருமானுக்கு உண்டாயிற்று முதலில் தன் நிசுவாசத்திலுண்டான வேதம் என்ற பெயரை யுடையவாக்கையும் பலவகைப்பட்ட மந்திரங்களையும் தியானத்தையும் பூஜைகளையும்  ஈஸாநஸ் ஸர்வ வித்யாநாம் முதலிய ஸ்ருதிகளால், ஸர்வ வித்தைகளுக்கும் பிரபுவான சிவபெருமான் தன்னாற்படைக்கப்பட்ட பிரபஞ்சம் முழுவதும் நல்ல நிலைக்குவர வேண்டும் என்ற கிருபா நோக்கமுடையவராய் விஷ்ணு மூர்த்திக்குக் கொடுத்தார் ஆகையால் ஜகத்துக்குச் சிருஷ்டித்துவமும் (படைத்தலும்) இக்ஷணத்துவமும் (காத்தலும்) சாட்சியும்(சான்றும்) சம்ஹாரத்துவமும் (அழித்தலும்) ஜகதீஸ்வரரான சிவபெருமானிடத்தில் உள்ளனவே அன்றிப் பிறரிடத்தில் இல்லை விஷ்ணுவாதி இதர தேவர்களுக்கு காலவரையுள்ளதேயன்றி சர்வேஸ்வரனான சிவபெருமானுக்குக் காலக் கணிதம் கிடையாது சிவபெருமானுக்கு மஹாகாலன் என்று பெயர் இவரது கட்டளைப்படி காலம் இயங்குவதேயன்றி அது இவரை ஒன்றுஞ் செய்யாது. அனைத்திற்கும் இவரே காரணபூதர் விஷ்ணுவாதியர் காரியபூதர் சிவபெருமானது இச்சையால் படைத்தல் காத்தல் அழித்தல் முதலிய கிருத்தியங்கள் நடக்கின்றன சிவத்துவேஷியாக இருப்பவரும் சிவபெருமானைச் சங்கரிப்பவரும் ஒருவரும் இல்லை. ஒரு விதையானது இலைகளை, பூ காய் முதலிய பலரூபங்களாகக் காணப்பட்டுக் கடைசியில் யாவும் அழிய அந்தவிதையே மீதமாக இருப்பது போல இவர் தமக்குத்தாமே காரணவடிவமாகவும் ஒன்றியாகவும் இருந்தும் சிருஷ்டியாதி காரணமாக அநேகராய் பிரளய காலத்தில் ஒன்றியாகிறார் இதை ஞானியர் அறிவார்கள் இவர் மனோவாக்குக் காயங்களுக்கு எட்டாதவர். இவ்வாறு சூதமுனிவர் கூறியதும் சவுனகாதி முனிவர்கள் அவரை நோக்கி, சிவபெருமானே பிரபஞ்சம் என்றும் பிரபஞ்சமே சிவபெருமான் என்றும் சொன்னீர்களே, அதன் விளக்கத்தை எங்களுக்குச் சொல்லவேண்டும் என்று கேட்டார்கள்.

76. ஞானப் பிரகரணம்

சூதபுராணகர் சவுனகாதி முனிவர்களை நோக்கிக் கூறலானார், நீங்கள் மஹா புண்ணியசாலிகள், நான் பூர்வத்தில் கேட்டதை உங்களுக்குச் சொல்கிறேன் கேளுங்கள். ஒரு காலத்தில் பிரமதேவர், நாரதர், ஸநத்குமாரர், வியாஸர் கபிலர் முதலியவர்கள் ஒருங்குகூடி நிச்சயித்துக் கொண்ட விஷயமாவது ஞாதுரு ஞானம், ஞேயம் ஆகிய இம்மூன்றும் பிரமாதி குணப் பரியந்தமாகக் காணப்படும். உலக முழுவதும் சிவஸ்வரூபமே பிறிதில்லை. இச்சையுண்டானபோது உலகம் சிருஷ்டிக்கப்படுகிறது. தன்னால் படைக்கப்பட்ட சகல பிரபஞ்சத்தையும் தானே சாட்சிபூதமாகச் சிவபெருமான் பார்த்துக்கொண்டிருக்கிறார் பிரபஞ்சவாசிகள் யாவரும் மாயா வயப்பட்டவர்களாதலின் சிவபெருமானை ஒருவரும் அறிகிலர் சூரியன் ஆகாயத்திலிருந்து ஜல நதிகளில் பிரதிபிம்பித்தவாறு யாவற்றிலும் பிரவேசித்திருக்கிறார் நிச்சயமாக விசாரிக்கும் போது பிரவேசமே கிடையாது. மீண்டும் தாம் தாமாகவே விளங்குகிறார் அஞ்ஞானத்தால் துவிதம் என்பது மனப்பிராந்தியாகும் வைஸேஷிக சாஸ்திரங்களிலே துவிதம் கூறப்படுகிறது! சிவபெருமானுடைய அம்சமே ஆன்மாக்கள். அவை மலசம்பந்தத்தால் ஜீவன் எனப்படும் ஜீவஸ்வரூபமான யான் என்னும் பொருளைப் பரமாத்ம ஸ்வரூபம் எதை தெரிந்து கொண்டவன் மலரகிதனாய் சிரவணாதி சாதன சம்பத்துக்களை அடைந்து சிவரூபம் அடைகிறான் எங்கும் வியாபகமாகியுள்ள சிவபெருமான் எல்லாப் பிராணிகளிலும் வியாபித்து சேதனா சேதனங்கள் யாவும் தாமேயாகி விளங்குகிறார். விறகுகளில் எல்லாம் நெருப்பிலிருந்தும் மதிக்கப்பட்ட விறகிலேதான் அக்கினி தோன்றுவது போல ஆன்மாக்கள் தோறும் சிவபெருமான் வியாபித்தும் சிரவணாதி உபாயங்களைச் செய்பவனுக்குச் சர்வேஸ்வரராகிய சிவபெருமானுடைய தரிசனம் சந்தேகம் இல்லாமல் கிடைக்கும். சிவபெருமானே பரத்துவம் சிவபெருமானே அநேக ஸ்வரூபமாக எப்போதும் பிரகாசிக்கிறார். சமுத்திரத்தில் உப்பும் மலரில் மணமும் மணியில் ஒலியும் போலச் சிவபெருமான் பிரிவற்றவர். காரியபூதமானது நானாபேதமாகக் காணப்படினும் இறுதியில் விதை ஒன்றே எஞ்சி நிற்பதால் காரணத்தில் காரியம் உண்டானதாக அறிதல் வேண்டும். மாயையே விதை என்றும் ஜகத்து மாயாஸ்வ ரூபம் என்றும் உணரவேண்டும். இத்தகைய நியாயத்தால் மாயை நீங்கிய பிரபஞ்சம் முழுவதும் சிவபெருமானே வியாபித்திருக்கிறார். ஜலாதிகளில் பிரதிபிம்பத்திற்கு சூரியாதி பிம்பங்கள் வாயுவாதி சலனத்தால் தோஷம் சம்பவித்ததாகக் காணப்படினும் ஜலத்தின் சம்பந்தப்படாத சூரியாதி பிம்பங்களுக்கு உபாதி இல்லாததுபோல சிவபெருமானது வியாபகத்தால் அநேகத்துவம் அடைந்தபோதும் அவருக்கு அவித்யை சம்பந்தமான தோஷங்கள் சம்பவியா சுத்தமான பொன் தாமிரத்துடன் கலந்திருப்பதால் மதிப்புக் குறைவு ஏற்பட்டும் புடமிட்ட பிறகு மீண்டும் உயர்வடைவது போலவே, ஆன்மா அந்தக்கரண பந்தத்தால் அடைந்த பசு என்னும் பெயரை  பத்தியாதிகளால் சர்வேஸ்வரனை ஆராதித்து நீங்கி இறுதியில் சிவசாயுஜ்ய பதத்தை அடையும் இதில் ஐயமில்லை.

முனிவர்களே! சிவபெருமானே கடவுள் அவரை அடைந்தவர்கள் பிறவியடைய மாட்டார்கள் இத்தகைய இறைவனிடத்தில் பக்தியுண்டாவதற்கு ஆயிரம் பிறவிகளில் சிறப்பான தவம், தானம் விரதம் முதலியவற்றைச் செய்து சிவபக்தனாக வேண்டும் பிறகு அந்த ஜீவன் முக்தனாவான் இச்சரிதமே அந்தச் சபையில் நிச்சயித்துக் கூறப்பட்டது. இதைச் சிவபெருமான் லிங்கஸ்வரூபத்துடன் விஷ்ணுவுக்கும், பிரமனுக்கும் அவர் ஸநத் குமாரருக்கும் அவர் நாரத முனிவருக்கும் அவர் வியாச முனிவருக்கும் அவர் எனக்கும் கூறினாள், அதையே நான் உங்களுக்குச் சொன்னேன் நீங்களும் இதைப் பக்தர்களுக்கு விளக்கமாகச் சொல்லுங்கள் இவ்வாறு சூதமுனிவர் கூறினார். அதைக் கேட்ட முனிவர்கள் ஆனந்தமாகி, எங்கள் மனத்திலிருந்த சந்தேகங்கள் நீங்கின, என்றார்கள், சூதமுனிவர் மீண்டும் சொல்லத் துவங்கினார்.

சவுனகாதி முனிவர்களே! இந்தச் சரிதங்களை வியாசபகவானின் மாணவன் சொன்னது என்று உறுதியாகக் கொண்டு, நாஸ்திகளுக்கும் சிரத்தையில்லாதவருக்கும் பக்தியில்லாதவருக்கும் பணிவிடை செய்யாதவருக்கும் சொல்ல வேண்டாம். பதினெண் புராணங்களையும் இதிகாசங்களையும் வேதார்த்தங்களையும் பலமுறை ஆராய்ந்து உணர்ந்து இதுவே விஷயங்களைக் கேட்பதால் பக்தியற்றவர்களுக்கும் பக்தியுண்டாகும் பக்தியுடைவர்களின் பக்திமேலும் அதிகரிக்கும். இதை ஒரு முறை கேட்டதனால் ஒருவனுடையபாபங்கள் எல்லாம் நசிக்கும், இரண்டு முறைகள் கேட்பதனால் சிவபக்தி உண்டாகும். மும்முறை கேட்பதனால் அந்தச் சிவபக்தி விருத்தியடையும் நான்காம் முறை கேட்பதனால் சிவதரிசனம் கிடைக்கும். ஐந்தாம் முறை கேட்பதனால் விரும்பிய பயனையெல்லாம் நிர்விக்கினமாகப் பெற்று வாழ்வார்கள். அத்தகையோருக்கு உலகத்தில் கிடைக்காதது ஒன்றுமிராது பூர்வத்தில் சில மன்னர்கள் இந்த ஞான சம்ஹிதையை ஐந்து முறைகள் கேட்டு சிவதரிசனம் பெற்று சிறப்பான மனோபீஷ்டங்களைப் பெற்று வாழ்ந்திருந்தார்கள். ஆகையால் இதை இப்போது கேட்பவர்களும் கிடைத்ததற்கு அரிய உயர் பதவிகளை அடைவார்கள். இவ்வாறு சூதபுராணிகர் கூறியதும் சவுனகர் முதலான முனிவர்கள் வியந்து விலையுயர்ந்த பீதாம்பரம் முதலிய ஆடைகளையும் சந்தன புஷ்பங்களையும் ஆபரணங்களையும் சூதமுனிவருக்குப் பாதகாணிக்கையாக வைத்து அவரைப் பூஜித்துப் புகழ்ந்து சாஷ்டாங்கமாக நமஸ்கரித்துப் பரமானந்தம் அடைந்தார்கள் சூதமுனிவரும் சந்தோஷத்துடன் இருந்தார்.

இந்த நூல் மிகவும் சிறந்தது என்று மனத்திடமுறக்கருதி சிவபெருமானை வழிபட்டு பக்தியுடன் சிவபூஜை செய்து இந்தச் சிவமஹாபுõரண ஞான சம்ஹிதையைக் கேட்டவர்கள் இஷ்டகாமிங்களை அடைந்து ஆயுள் முடிவில் சிவசாயுஜ்யத்தை அடைவார்கள். இதை எழுதிப் பொன் முதலிய தக்ஷிணையோடு சிவபக்தியுடைய வேதியருக்குத் தானமளித்தவன் எப்போதும் சிவலோகத்தில் வசித்து சிவரூபத்தை அடைவான். ஆகையால் எவ்வகையாலாவது இச் சிவமஹா புõரணத்தைச் சதுர்வர்ணத்தவர்களும் பலருக்கும் தானமாகக் கொடுக்க வேண்டும்; அவ்வாறு கொடுப்பவர்கள் எப்போதும் சிவலோகத்திலேயே வாழ்வார்கள் இதைச்சொன்ன புராணிகளை அன்னவஸ்திரத்தால் திருப்தி செய்தவன் சிவபக்தி அடைவான்.

ஞான சம்ஹிதை முடிந்தது.


© Om Namasivaya. All Rights Reserved.