இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


துன்ப மாலை

Thunba Maalai is a literary composition that focuses on themes of sorrow and suffering. This genre often presents a series of verses or poems that articulate various forms of emotional pain, distress, or hardship experienced by individuals or communities. The compositions might explore personal tragedies, social injustices, or existential anguish, reflecting the depth and complexity of human suffering. Through evocative language and imagery, Thunba Maalai provides a poignant and empathetic portrayal of the challenges and sorrows faced by individuals.


சிலப்பதிகாரம் - துன்ப மாலை

அஃதாவது - கோவலன் கொலையுண்ட செய்தியைக் கேட்ட திருமாபத்தினியாகிய கண்ணகியாரின் துன்பத்தின் இயல்பினைக் கூறும் பகுதி என்றவாறு. இதன்கண் மாலை என்பது இயல்பு என்னும் பொருட்டு ஆதலால் இது தன்மையால் வந்த பெயர் என்க.

ஆங்கு,
ஆயர் முதுமகள் ஆடிய சாயலாள்
பூவும் புகையும் புனைசாந்துங் கண்ணியும்
நீடுநீர் வையை நெடுமா லடியேத்தத்
தூவித் துறைபடியப் போயினாள் மேவிக் 5
குரவை முடிவிலோர் ஊரரவங் கேட்டு
விரைவொடு வந்தாள் உளள்;
அவள்தான்,
சொல்லாடாள் சொல்லாடாள் நின்றாள்அந் நங்கைக்குச்
சொல்லாடும் சொல்லாடுந் தான்; 10

எல்லாவோ,
காதலற் காண்கிலேன் கலங்கிநோய் கைம்மிகும்
ஊதுலை தோற்க உயிர்க்கும்என் நெஞ்சன்றே
ஊதுலை தோற்க உயிர்க்கும்என் நெஞ்சாயின்
ஏதிலார் சொன்ன தெவன்வாழி யோதோழீ; 15

நண்பகற் போதே நடுக்குநோய் கைம்மிகும்
அன்பனைக் காணாது அலவும்என் நெஞ்சன்றே
அன்பனைக் காணாது அலவும்என் நெஞ்சாயின்
மன்பதை சொன்ன தெவன்வாழி யோதோழீ;

தஞ்சமோ தோழீ தலைவன் வரக்காணேன் 20
வஞ்சமோ உண்டு மயங்கும்என் நெஞ்சன்றே
வஞ்சமோ உண்டு மயங்கும்என் நெஞ்சாயின்
எஞ்சலார் சொன்ன தெவன்வாழி யோதோழீ;

சொன்னது:-
அரைசுறை கோயில் அணியார் ஞெகிழம் 25
கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே
கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே
குரைகழல் மாக்கள் கொலைகுறித் தனரே

எனக் கேட்டு,
பொங்கி எழுந்தாள் விழுந்தாள் பொழிகதிர்த் 30
திங்கள் முகிலொடுஞ் சேண்நிலம் கொண்டெனச்
செங்கண் சிவப்ப அழுதாள்தன் கேள்வனை
எங்கணா என்னா இனைந்தேங்கி மாழ்குவாள்;

இன்புறு தங்கணவர் இடரெரி யகமூழ்கத்
துன்புறு வனநோற்றுத் துயருறு மகளிரைப்போல் 35
மன்பதை அலர்தூற்ற மன்னவன் தவறிழைப்ப
அன்பனை இழந்தேன்யான் அவலங்கொண் டழிவலோ;

நறைமலி வியன்மார்பின் நண்பனை இழந்தேங்கித்
துறைபல திறமூழ்கித் துயருறு மகளிரைப்போல்
மறனொடு திரியுங்கோல் மன்னவன் தவறிழைப்ப 40
அறனென்னும் மடவோய்யான் அவலங் கொண்டழிவலோ;

தம்முறு பெருங்கணவன் தழலெரி யகமூழ்கக்
கைம்மைகூர் துறைமூழ்குங் கவலைய மகளிரைப்போல்
செம்மையின் இகந்தகோல் தென்னவன் தவறிழைப்ப
இம்மையும் இசையொரீஇ இனைந்தேங்கி அழிவலோ; 45

காணிகா,
வாய்வதின் வந்த குரவையின் வந்தீண்டும்
ஆய மடமகளி ரெல்லீருங் கேட்டீமின்
ஆய மடமகளி ரெல்லீருங் கேட்டைக்க
பாய்திரை வேலிப் படுபொருள் நீயறிதி 50
காய்கதிர்ச் செல்வனே கள்வனோ என்கணவன்
கள்வனோ அல்லன் கருங்கயற்கண் மாதராய்
ஒள்ளெரி உண்ணுமிவ் வூரென்ற தொருகுரல்.

உரை

1-7 : ஆங்கு ............. வந்தான் உளன்

(இதன்பொருள்.) ஆங்கு - அக் குரவைக்கூத்து முடிவுற்றபொழுது; ஆயர் முதுமகள் - இடைக்குல மூதாட்டியாகிய மாதரி; ஆடிய சாயலாள் - இறையன்பினால் அசைந்த மென்மைத் தன்மைமிக்கவளாய், பூவும் புகையும் புனை சாந்தும் கண்ணியும் - மலரும் நறுமணப்புகையும் பூசும் சாந்தும் தலையில் சாத்துதற்குரிய கண்ணியும் ஆகிய இவற்றோடு; நீடுநீர் வையை நெடுமால் அடிதூவி ஏத்த - இடையறாத ஒழுக்கினையுடைய நீரையுடைய வையைப் பேரியாற்றின் கரையின்மேல் திருக்கோயில் கொண்டருளிய நெடிய திருமாலை வணங்கி அவன் திருவடியிலே மலர் தூவி வழிபாடு செய்தற்பொருட்டு; துறையடியப் போயினாள் - வையைத் துறையின்கண் நீராடச் சென்றாளாக; குரவைமுடிவில் மேவி - குரவைக்கூத்து முடிந்தபொழுது நகரத்திற்சென்று; ஊர் அரவங்கேட்டு - அவ்வகநகரினுள் பிறந்ததொரு செய்தியைக் கேள்வியுற்று; விரைவொடு வந்தாள் - மிகவும் விரைவாக வந்த ஆயமகளுள் ஒருத்தி; உளள் - அக் குரவைக் கூத்தாடிய விடத்தே உளள் ஆயினள்; என்க.

(விளக்கம்) ஆடிய சாயல் - அசைந்த மென்மை, அஃதாவது இறையன்பு காரணமாக நெகிழ்ந்த நெஞ்சத்தின் மென்மை, என்க. அம்மென்மை மெய்ப்பாடாகத் தோன்றப் பெற்ற மாதரி என்பது கருத்து. ஆடிய சாயலாள் - ஐயை என்பாருமுளர். பூ, புகை, சாந்து, கண்ணி முதலியன. நீராடுவாள் வையையை வழிபடுதற்குக் கொடுபோன பொருள் எனலுமாம். என்னை?

மாலையுஞ் சாந்தும் மதமும் இழைகளும்
கோலங் கொளநீர்க்குக் கூட்டுவார் அப்புனல்
உண்ணா நறவினை ஊட்டுவார் ஒண்டொடியார்

எனவரும் பரிபாடலும் (10) காண்க.

வையை நெடுமால் என்றது இருந்த வளமுடையார் என்னும் திருப்பெயருடைய திருமாலை என்பர். குரவை ஆடிய மகளிருள் ஒருத்தி தன் காரியத்தை மேலிட்டு நகருள் மேவி ஆங்கு ஊரரவங்கேட்டு விரைவொடு வந்தாள்; வந்தவள் அச் செய்தியைச் சொல்லுந் துணிவின்றி வாளாது நின்றமை தோன்ற வந்தாள் உளள் என்றார். அரவம் என்றது கோவலன் கொலையுண்ட செய்தியை. நகரத்துள் பலரும் அதனைப் பேசுவதனால் உண்டாகும் அரவம் என்றார் என்க. அச் செய்தியைக் கண்ணகிக்குச் சொல்லக் கருதி விரைவொடு வந்தவள், சொல்லாது நிற்பாளாயினள் என்பது கருத்து.

8-10: அவள்தான் ............... சொல்லாடுந்தான்

(இதன்பொருள்.) அவள்தான் - அவ்வாறு ஊரரவங் கேட்டுக் கண்ணகிக்குச் சொல்லக் கருதி விரைவொடு வந்த அந்த ஆயமகள் தானும்; சொல்லாடாள் அவளுக்குச் சொல்லுந் துணிவின்றி யாதொன்றும் சொல்லாளாய் வாய்வாளாது நின்றாள்; அந்நங்கைக்கு - அக்கண்ணகிக்கு; சொல்லாடா நின்றாள் - யாதொன்றும் சொல்லாடாமல் நின்ற அவள்தான்; சொல்லாடும் - பின்னர்க் கண்ணகி கேளா வண்ணம் தன்தோழிமார்க்கு மெல்லச் சொல்வாளாயினள்; தான் சொல்லாடும் - அதுகண்ட அக் கண்ணகியே அவளை நோக்கிங் சொல்வாளாயினள்; என்க.

(விளக்கம்) அவள்தான் என்றது சொல்லவந்த அவள்தானும் என்பதுபட நின்றது. சொல்லாடா நின்றாள் - சொல் ஆடாமல் நின்றாள் என்க. ஈறு தொக்கது. அந்நங்கைக்குச் சொல்லாடாள் சொல்லாடும் எனவே தன் தோழிமார்க்குச் சொல்லாடும் என்பது பெற்றாம். சொல்லாடாள் சொல்லாடாள் என்பன சொல்லாள் என்னும் ஒருசொல் நீர்மையன. சொல்லாடும் சொல்லாடும் என்பன சொல்லும் என்னும் ஒருசொல் நீர்மையன. தான் சொல்லாடும் என மாறுக. தான் என்றது கண்ணகியை. பின்வருவன கண்ணகியின் கூற்று.

11-15: எல்லாவோ ............ வாழியோதோழி

(இதன்பொருள்.) எல்லா ஓ - தோழீ! அந்தோ; காதலன் காண்கிலேன் - யான் என் ஆருயிர்க்காதலன் இன்னும் வரக் கண்டிலேன் ஆதலின்; கலங்கி நோய் கைம்மிகும் - என்நெஞ்சம் பெரிதும் கலங்கி, துன்பமும் என்னால் பொறுக்கல்லாது மிகுகின்றது காண்! என் நெஞ்சு ஊதுஉலை தோற்க உயிர்க்கும் அன்றே - அங்ஙனம் ஆதலின் அன்றே என்நெஞ்சுதானும் என் வரைத்தன்றி ஊதப்படுகின்ற கொல்லன் உலைத்தீயும் தோற்கும்படி வெய்தாய் உயிர்க்கின்றது; என்நெஞ்சு ஊதுஉலை தோற்க உயிர்க்கும் ஆயின் - எனது நெஞ்சம் இங்ஙனம் தீயினும் வெய்யதாய் உயிர்க்குமானால் இனி யான் சிறிதும் பொறுக்ககில்லேன் கண்டாய்; வாழி ஓ தோழி ஏதிலார் சொன்னது எவன் - நீ வாழ்வாயாக அந்தோ தோழி உனக்கு அயலார் சொன்ன செய்தி தான் யாது? அதனை இப்பொழுதே கூறிவிடுதி என்றாள்; என்க.

(விளக்கம்) காதலன் வரவு காணாது நெஞ்சு கலங்கி அவன் வரும் வழிமேல் விழிவைத்து எதிர்பார்த்திருந்தவன் அங்கிருந்து விரைவாக வந்தவன் தனக்கு ஏதோ சொல்லக் கருதிப் பின் யாதொன்றும் சொல்லாளாய்க் கவலைதோய்ந்த முகத்தினளாய்த் தன் தோழியர் குழுவினுட் புகுந்து இச் செய்தியை மெல்ல அவர்க்குக் கூற, அது கேட்ட அம் மகளிரெல்லாம் திகைத்துத் தன்னைத் துன்பத்தோடு நோக்குதல் கண்டு கண்ணகி கூறிய சொற்கள் இவை. ஈண்டுக் கூறிய நிகழ்ச்சியை எல்லாம் அடிகளார் இப் பாட்டினூடே நம்மனோர் குறிப்பாக உணர்ந்து கொள்ளும்படி செய்யுள் செய்திருக்கின்ற வித்தகத்தை உணர்வுடையோர் உணர்வாராக.

16-19: நண்பகல் ............ தோழீ

(இதன்பொருள்.) தோழீ ஓ - தோழியே! அந்தோ! நண்பகல் போதே அன்பனைக் காணாது என் நெஞ்சு அலவும் அன்றே - நடுப்பகலிலேயே என் காதலன் மீண்டுவரக் காணாமையாலே என் நெஞ்சம் சுழலா நின்றது கண்டாய் அன்றே! நடுக்கும் என் மெய்யும் நடுங்கா நின்றது; நோய் கைம்மிகும் - துன்பந்தானும் என் வரைத்தன்றி மிகுகின்றது; என்நெஞ்சு அன்பனைக் காணாது அலவும் ஆயின் - இங்ஙனம் என்நெஞ்சு சுழலுதலாலே; மன்பதை சொன்னது எவன் - நீ நகரத்துப் புக்கபொழுது ஆண்டுள்ள மக்கள் நினக்குக் கூறிய செய்திதான் என்னையோ கூறுதி என்றாள்; என்க.

(விளக்கம்) அந்தப் பொழுது, கதிரவன் உச்சியினின்றும் மேற்றிசையில் சாயும் பொழுதாயிருந்தமையின், உச்சிப்பொழுதிலிருந்தே என் நெஞ்சம் சுழலுகின்றது! உடலும் நடுங்குகின்றது! நோயும் மிகுகின்றது! இவையெல்லாம் என்பால் தாமே தோன்றுகின்ற தீநிமித்தம் போலே யிருந்தன. நீதானும் யாதோ சொல்ல வந்து சொல்லாதொழிந்தனை! நீ நகரம்புக்கு மீண்டனை ஆதலின் நகரத்துள் மன்பதை என் காதலனைப்பற்றிச் சொன்ன செய்தி ஒன்றுண்டு என்று நின் முகமே எனக்குக் கூறுகின்றது! இனி யான் துயர் பொறுக்ககில்லேன் காண். அதனை இப்பொழுதே சொல்லிவிடு! எனக் கண்ணகி விதுப்புற்றுக் கூறியவாறு.

மெய்நடுக்கும் என்க. அலவுதல் - சுழலுதல் மன்பதை - பொதுமக்கள் எவன் என்னும் வினா, அதை இப்பொழுதே சொல்லிவிடு! என்பதுபட நின்றது.

20-23: தஞ்சமோ ............. தோழீ

(இதன்பொருள்.) தோழீ ஓ - தோழீ; அந்தோ ! தலைவன் வரக்காணேன் - யான் என் ஆருயிர்த் தலைவன் வரக்கண்டிலேன்; ஓ வஞ்சம் உண்டு - நீவிரெல்லாம் எனக்கு மறைத்து நும்முள் சொல்லாடுகின்றீர் ஆதலால். அந்தோ நுமக்குள் ஏதோ ஒரு வஞ்சச் செய்தி உளதென்று கருதி; என்நெஞ்சு மயங்கும் அன்றே - என்நெஞ்சம் பெரிதும் மயங்குதல் கண்டீர் அன்றே; வஞ்சமோ உண்டு மயங்கும் என்நெஞ்சாயின் - இங்ஙனம் கருதி என்நெஞ்சம் மயங்குமாயின் அதன் விளைவு; தஞ்சமோ - எளியதொன்றா யிருக்குமோ? இராதன்றே; எஞ்சலார் - உனக்கு அவ்வயலார்; சொன்னது எவன் - சொன்ன செய்திதான் என்னையோ சொல்லிவிடு! சொல்லிவிடு! என்றாள்; என்க.

(விளக்கம்) தஞ்சம் - எளிமை. என்நெஞ்சு இங்ஙனம் மயங்குமாயின் அதன் விளைவு எளிதாயிருக்குமோ என்றது யான் இறந்துபடுவேன் என்பதுபட நின்றது. எஞ்சலார் - அயலார்.

24: சொன்னது.............

(இதன்பொருள்.) சொன்னது - நங்காய் அவர்கள் சொன்னதாவது ...........

(விளக்கம்) இது கண்ணகியாரின் பெருந்துன்பங் கண்ட அவ்வாயமகள், இனி இச் செய்தியை இவட்குக் கூறாதொழியின் இவள் இறந்து படுதலுங்கூடும் என்று சொல்லத் துணிந்து சொல்வதற்குத் தோற்றுவாய் செய்பவள் நங்காய்! அவர்கள் சொன்னதாவது: ............ என்று தொடங்கி மேலே சொல்ல நாவெழாமல் திகைத்து நின்றதனை நம்மனோர்க்கு அறிவுறுத்துதல் உணர்க. இதனை அடிகளார் தனிச் சொல்லாக நிறுத்தினமையே அங்ஙனம் உணர்த்துதற்குக் காரணமாதல் நுண்ணிதின் உணர்க. இனி, அவ் வாயமகள் குரவை முடிவில் ஊரரவங்கேட்டு வந்தவளே என்பதும் உணர்க. மேலே அவள் சொல்லுந் துணிவின்றித் தயங்கித் தயங்கிக் கூறுவதுபோல அவள் கூற்று அமைந்திருத்தலும் குறிக்கொண்டுணரற்பாலதாம்.

25-28: அரைசுறை .............. குறித்தனரே

(இதன்பொருள்.) அரைசு உறை கோயில் அணி ஆர் ஞெகிழம் கரையாமல் வாங்கிய கள்வன் ஆம் என்று - மன்னவன் விரும்பி உறைதற்குக் காரணமான உவளக மாளிகையின்கண் இருந்த அழகு பொருந்திய சிலம்பினை ஓசைபடா வண்ணம் கவர்ந்த கள்வள் இவனாம் என்று நினைத்து; கரையாமல் வாங்கிய கள்வன் ஆம் என்று ஒலிபடாமல் கவர்ந்த கள்வன் இவனே என்று துணிந்து; குரைகழல் மாக்கள் கொலை குறித்தனர் - ஒலிக்கும் வீரக்கழலையுடைய காவல் மறவர் கொலை செய்யத் துணிந்தனர்; என்றாள் என்க.

(விளக்கம்) அரசன் கோயில் என்னாது உறைகோயில் என்றது விரும்பித் தங்குகின்ற உவளகம் (கோப்பெருந் தேவியார் மாளிகை) என்பது தோன்ற நின்றது. விரைந்து சொல்லத் துணியாமையால், அணியார் ஞெகிழம் என்றும், கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றும், குரைகழல் மாக்கள் என்றும், வேண்டாதன இடைப்பிற வரலாகச் சொற்கள் பல வளர்த்தனள். கொன்றனர் என்பதற்குத் துணிவு பிறவாமையால் கொல்ல நினைத்தனர் என்பாள்போலக் கொலை குறித்தனர் என ஒருவாறு கூறாமல் கூறிய நுணுக்கம் உணர்க. ஞெகிழம் - சிலம்பு.

கோவலன் கொலையுண்டமை கேட்டபொழுது கண்ணகியார் எய்திய நிலைமை

29: எனக்கேட்டு...........

(இதன்பொருள்.) எனக்கேட்டு - ஊரரவங்கேட்டு விரைவொடு வந்து சொல்லாடாளாய்ப் பொழுது கழிப்பிநின்ற அவ்வாய்ச்சி இங்ஙனம் கூற அக்கூற்றைக் கேட்டலும் என்க.

30-33: பொங்கி .......... மாழ்குவாள்

(இதன்பொருள்.) பொங்கி எழுந்தாள் - துன்ப உணர்ச்சி கரை கடந்து பொங்குதலாலே கண்ணகி அவ்வுணர்ச்சி வயப்பட்டு எழுந்தாள், எழுந்தவள் ஆற்றாமையால்; கதிர்த்திங்கள் பொழிமுகிலோடும் சேண் நிலம் கொண்டு என விழுந்தாள் -ஒளியுடைய திங்கள் மண்டிலமானது மழை பொழிகின்ற முகிலோடும் வானத்தினின்றும் நிலத்தின்மேல் வீழ்ந்தாற்போல நிலத்தில் விழுந்தாள், மீண்டும் எழுந்தாள்; செங்கண் சிவப்ப அழுதாள் - இயல்பாகவே சிவந்த கண்கள் பெரிதும் சிவக்கும் படி அழுதாள் பின்னர்; தன் கேள்வனை எங்கணா என்னா இனைந்து ஏங்கி மாழ்குவாள் - தன் காதலனை நினைத்தவளாய் எம்பெருமானே! நீ இப்பொழுது என்னைத் துறந்துபோய் எவ்விடத்தே இருக்கின்றனை காண்? என்று புலம்பி வருந்தி ஏங்கிச் செயலறவு கொண்டு மயங்கினாள்; என்க.

(விளக்கம்) துன்ப உணர்ச்சி பொங்கி என்க. எழுந்தாள் என்றது அவ்வுணர்ச்சி வயப்பட்டெழுந்தாள் என்பதுபட நின்றது. பொழி முகிலோடும் கதிர்த்திங்கள் சேணினின்றும் நிலங்கொண்டென விழுந்தாள் என மாறுக. திங்கள் முகத்திற்குவமை. அவிழ்ந்து சரிகின்ற கூந்தல் முகில் கால்கொண்டு பெய்தல் போலுதலின், பொழிமுகிலோடும் என்று உவமைக்கு அடைபுணர்த்தவாறு. செங்கண் - இயல்பாகவே சிவந்த கண். எங்கணா: ஈறுகெட்டது. மாழ்குதல் - மயங்குதல்.

34-37: இன்புறு ........... கொண்டழிவலோ

(இதன்பொருள்.) இன்புறு தம் கணவர் இடர் எரி அகம் மூழ்க - இங்ஙனம் துன்பத்தால் அழுது மயங்கிய கண்ணகி தமக்குற்ற பொய்ப்பழியைப் பொறாது எழுந்த வெகுளியாகிய உணர்ச்சியால் தூண்டப்பெற்றுக் கூறுபவள் தாங்கள் இன்பம் எய்துதற்குக் காரணமான தம்முடைய கணவர் துன்புறுத்தும் நெருப்பின்கண் மூழ்கா நிற்பக் கண்டுவைத்தும்; துன்புறுவன தோற்றுத் துயர் உறும் மகளிரைப்போல் - தாமும் நெருப்பின் கண் மூழ்கி உயிர் நீக்கும் துணிவின்றி உயிர் தாங்கியிருந்து துன்புறுவதற்குக் காரணமான கைம்மை நோன்பு பல மேற்கொண்டு சாந்துணையும் வருந்துகின்ற உயவற் பெண்டிரைப் போல; மன்பதை அலர் தூற்ற மன்னவன் தவறு இழைப்ப - உலகத்துள் வாழ்கின்ற மக்கட் கூட்டம் தன்னைப் பழி தூற்றும்படி இந்நாட்டு மன்னவன் தனது செங்கோன்மையின் தவறு செய்தமையாலே; அன்பனை இழந்தேன் யான் - காதலனை இழந்தேனாகிய யானும்; அவலங் கொண்டு அழிவலோ - அழுது கொண்டு உயிரோடு இருந்து அழிவாள் ஒருத்தியோ என்றாள்; என்க.

(விளக்கம்) இது, முன்னர்க் கொலையுண்டமை கேட்டு மயங்கி யழுதவள் மீண்டும் கள்வனாம் என்று கொலை குறித்தனர் என்றமை நினைந்து சீற்றங்கொண்டு கூறியவாறு. பின் வருவனவற்றிற்கும் இஃதொக்கும். இன்புறுதல் - இம்மையினும் மறுமையினும் இன்புறுதல் என்க. எரி - நெருப்பு. துன்புறுவனவாகிய கைம்மை நோன்புகளை நோற்று என்க. மன்னவன் தவறிழைப்ப அஃதுணராது மன்பதை எம்மை அலர் தூற்ற அவலங்கொண்டழிவலோ எனக் கூட்டினுமாம். ஓகாரம் எதிர்மறை. யானும் எனல்வேண்டிய எச்சவும்மை தொக்கது.

38-41: நறைமலி ................. அழிவலோ

(இதன்பொருள்.) அறன் எனும் மடவோய் - அறக் கடவுள் என்று கூறப்படுகின்ற அறிவிலியே கேள்; நறைமலி வியன்மார்பின் நண்பனை இழந்து - மணமிக்க அகன்ற மார்பினை யுடைய தம் காதலனை இழந்தபின்னரும் அவனோடு தம் உயிரை இழக்கத் துணிவின்றிப் பின்னர்ச் சாந்துணையும் ஏக்கமுற்று; பலதிறம் துறை மூழ்கித் துயர் உறும் மகளிரைப்போல் - பல திறப்பட்ட நீர்த்துறைகள் தோறும் சென்று சென்று தம்முடல் குளிரும்படி மூழ்கி மேலும் மேலும் துன்பம் மிகுவிததுக் கொள்கின்ற பேதை மகளிரைப் போல; மறனொடும் திரியும் கோல் மன்னவன் தவறு இழைப்ப - தீவினையோடு கூடித் தன் தன்மை திரிந்த கொடுங்கோலையுடைய இப் பாண்டிய மன்னன் தவறு செய்தமையாலே; யான் -தவறு சிறிதுமில்லாத யானும்; அவலங்கொண்டு அழிவலோ -துன்பத்தை மேற்கொண்டு நெஞ்சழிபவள் ஒருத்தியோ என்றாள் என்க.

(விளக்கம்) நறை - நறுமணம். நண்பன் - கணவன். பலதிறத்துறை என்க. மறன் - தீவினை; தீவினையோடு கூடித் தன் தன்மை திரிந்த கோல் என்க. அஃதாவது கொடுங்கோல். ஒருவன் தீவினை செய்ய, அதன் பயனை ஏதிலான்ஒருவன் நுகரும்படி செய்தனை என அறத்தைச் சீறுவாள் அறனெனும் மடவோய் என்று விளித்தாள். அறக்கடவுள் உளனாயின் இத்தகைய கொடுமையும் உலகில் நிகழுங்கொல் என ஐயுற்றுவாறு.

42-45: தம்முறு ......... அழிவலோ

(இதன்பொருள்.) தம்முறு பெருங்கணவன் - தம்மோடு பொருந்திய தமக்கு இறைவனினுங் காட்டில் பெரியவனாகிய கணவன்; தழல் எரி அகம் மூழ்க - அழலுகின்ற நெருப்பின்கண் மூழ்கக் கண்டு வைத்தும் அவனோடு ஒருசேர நெருப்பில் மூழ்குந் துணிவின்றி; கைம்மை கூர்துறை மூழ்கும் கவலைய மகளிரைப் போல் - கைம்மை நோன்பின்கண் மிக்குத் துறைகள் பலவற்றினும் சென்று சென்று தம்மெய் குளிர நீராடுகின்ற இடையறாத கவலையை யுடைய உயவற் பெண்டிரைப் போல யானும்; செம்மையின் இகந்த கோல் தென்னவன் தவறு இழைப்ப - நடுவு நிலைமையினின்றும் நீங்கிய கொடுங்கோலையுடைய இப் பாண்டிய மன்னன் தவறு செய்யா நிற்ப அதுகாரணமாக; இனைந்து ஏங்கி - பெரிதும் வருந்தி ஏக்கமுற்றிருந்து; இம்மையும் இசை ஒரீஇ - மறுமை கிடக்க இப்பிறப்பின் பயனாகிய புகழையும் விடுத்து; அழிவலோ - நெஞ்சழிவாள் ஒருத்தியோ என்றாள் என்க.

(விளக்கம்) பெருங் கணவன்: மகளிர்க்குக் கணவன் கடவுளினும் பெரியன் என்றவாறு. தழலெரி: வினைத்தொகை. துறை - புண்ணியத் துறை. செம்மை -நடுவுநிலைமை; இம்மையும் என்றது மறுமையினும் நரகம் புகுதல் என்பதுபட நிற்றலின். உம்மை - எச்சவும்மை. ஓகாரம்: எதிர்மறை.

கண்ணகியின் மறவுரை

46-53: காணிகா ........... ஒருகுரல்

(இதன்பொருள்.) காய்கதிர்ச் செல்வனே -சுடுகின்ற கதிரையுடைய செல்வனாகிய ஞாயிற்றுக் கடவுளே! பாய்திரை வேலிப் படுபொருள் நீ அறிதி - பாய்கின்ற அலைகளையுடைய கடல் சூழ்ந்த இந்நிலவுலகத்தின்கண் தோன்றுகின்ற பொருள்கள் அனைத்தையும் நீ கண்கூடாகக் கண்டறிவாய் அல்லையோ; காணிகா -நீயே இதனையும் காண்பாயாக; வாய்வதின் வந்த குரவையின் வந்து ஈண்டும் ஆய மடமகளிர் எல்லீரும் கேட்டீமின் - தானே வாய்த்த தீநிமித்தங் காரணமாக வந்த குரவைக் கூத்தின்கண் வந்து குழுமிய இடைக்குலத்து இளமகளிரே நீவிர் எல்லீரும் கேளுங்கோள்; ஆய மடமகளிர் எல்லீருங் கேட்டைக்க - அங்ஙனம் வந்து குழுமிய ஆய மகளிர் எல்லீரும் கேட்பீராக; என் கணவன் கள்வனோ - என்னுடைய கணவன் இப் பாண்டிய மன்னன் அரண்மனைச் சிலம்பைக் கவர்ந்த கள்வனோ? என வானத்தை நோக்கிக் கண்ணகி வினவினளாக, அப்பொழுது; கருங்கயல் கண் மாதராய் -கரிய கயல் போலும் கண்ணையுடைய நங்காய்! கள்வன் அல்லன் - நின் கணவன் கள்வன் அல்லன் காண்; இவ்வூர் ஒள்எரி உண்ணும் - நின் கணவனைக் கள்வன் என்று கூறிய இந்த மதுரையை ஒளியுடைய நெருப்பு உண்ணாநிற்கும்; என்றது ஒரு குரல் - என்று வானத்தினின்றும் ஒரு தெய்வக்குரல் எழா நின்றது; என்க.

(விளக்கம்) காணிகா: இகவென்னும் முன்னிலையசை இகாவென ஈறு திரிந்து காண்பாயாக என்பதாயிற்று. இச்சொல் கண்ணகி கதிரவனை நோக்கிக் கூறியது என்று கொள்க. வாய்வது என்றது, தானே வாய்த்த தீநிமித்தத்தை. அது காரணமாக வந்த குரவை என்றவாறு. கேட்டீமின் என்றது கேளுங்கள்! என ஏவியபடியாம். மீண்டும் கேட்டைக்க என்றது ஒருதலையாகக் கேட்கக் கடவீர் என வேண்டுகோள் பொருண்மைத்தாய் வந்த வினைத்திரிசொல். இவ்வூர் என்றது நின் கணவனுக்குப் பழிகூறிய இவ்வூர் என்றவாறு. ஒருகுரல் என்றது வானத்திற் பிறந்த ஒரு தெய்வக்குரல் என்பதுபட நின்றது. அஃதாவது காய்கதிர்ச் செல்வன் குரல் என்பது அடுத்த காதைத் தொடக்கத்தே விளங்கும்.

பா- மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா

துன்பமாலை முற்றிற்று.


"துன்ப மாலை" ("Tunpa Mālai") translates to "The Garland of Sorrows" or "The Mala of Suffering." This term refers to a specific genre or type of Tamil literary work that deals with themes of sorrow, suffering, and emotional distress.

Overview of "துன்ப மாலை" (Tunpa Mālai)

1. Context in Tamil Literature:

- Meaning of the Term:
- "Tunpa" translates to "sorrow" or "suffering."
- "Mālai" means "garland," often used metaphorically to indicate a collection or series of items.
- The term implies a collection of verses or poems centered around the theme of suffering or sorrow, presented in a garland-like format.

2. Themes and Content:

- Sorrow and Suffering: The primary focus of "Tunpa Mālai" is to explore themes related to personal or collective suffering, emotional pain, and distress. These works often convey deep emotional experiences and reflections on hardship.

- Emotional Expression: The literary work typically includes vivid and poignant descriptions of suffering, aiming to evoke empathy and understanding from the reader.

3. Examples in Tamil Literature:

- Classical Works: While specific references to "Tunpa Mālai" may not be prevalent in well-known classical texts, similar themes of sorrow and suffering can be found in Tamil literary works, including Sangam poetry and classical epics.

- Sangam Poetry: Poems dealing with themes of separation, unrequited love, and personal sorrow are common in Sangam literature, reflecting the emotional depth and complexity of the period.

4. Literary and Cultural Impact:

- Emotional Resonance: "Tunpa Mālai" provides a platform for exploring deep emotional themes, contributing to the literary tradition’s richness and emotional resonance.

- Cultural Reflection: These works reflect the cultural attitudes towards suffering and sorrow, offering insights into how these experiences were perceived and expressed in ancient Tamil society.

"Tunpa Mālai" is a significant aspect of Tamil literary tradition, focusing on the themes of sorrow and emotional suffering. It enriches the literary landscape by providing a poignant exploration of these themes, reflecting the depth and complexity of human emotions in Tamil literature.



Share



Was this helpful?